கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நெப்போலியன் - இறுகப்பற்று - Pain Hustlers

Tuesday, December 26, 2023


1, நெப்போலியன்

 

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பேரரசனாக வரமுடியும் என்று வரலாற்றில் நிரூபித்தவர் நெப்போலியன். பிரான்ஸை நேசித்தவர் என்பதால் அந்தப் பேரரசுக் கனவுக்காய் 61இற்கு மேற்பட்ட போர்களை நடத்தி மில்லியன்கணக்கில் சொந்த நாட்டு மக்களையே பலிகொடுத்தவர். வெளியில் போர்களை நடத்துவதில் பெருமிதம் கொண்ட நெப்போலியன் ஒரேயொருவருக்கு மட்டும் தலைகுனிந்தவர் என்றால் அது அவரின் மனைவியான ஜோஸப்பினுக்காய். அந்தக் காதலுக்காய் ஜோஸப்பினின் எல்லாப் பலவீனங்களையும் சக்கரவர்த்தியாக இருந்தபோதும் நெப்போலியன் மன்னித்தவர். இறுதிவரை ஜோஸப்பின் காதலில் திளைத்தவராக, அவரின் முன் தன் 'ஆண்மைத்தனத்தை' இழந்த ஒரு நல்ல மனிதராகவும் இருந்திருக்கின்றார்.

இத்தனைக்கும் ஜோஸப்பின், நெப்போலியன் ஆதரவளித்த புரட்சிப்படை, மன்னராட்சியை ஒழித்தபோது கொன்ற ஒருவரின் மனைவியாவார். ஜோஸப்பினுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நெப்போலியனைத் திருமணம் செய்தபின் ஜோஸப்பினால் குழந்தையொன்றைப் பெறமுடியாததே அவர்களின் விவாகரத்துக்கும் பின்னாளில் காரணமானது. எனினும் நெப்போலியன் வாட்டலூ போரில் தோற்று தனித்தீவுக்கு எக்ஸிலாகப்பட்டு இறந்தபோது அவர் இறுதியில் உச்சரித்தவை மூன்று சொற்கள்: பிரான்ஸ், இராணுவம், ஜோஸப்பின்!

பின்னர் வந்த ஹிட்லர் எப்படி இரஷ்யாவிற்குப் படையெடுத்து தன் படைபலத்தை இழந்தாரோ, அப்படியே நெப்போலியனுக்கும் கிடைத்த பெரும் அடி அவர் இரஷ்யாவுக்குப் படையெடுத்தபோதுதான். வோட்டலூ யுத்தம் நெப்போலியன் இறுதியில், தன்மானமாக தோற்றுப்பார்த்த ஒரு போரே தவிர நெப்போலியன் எப்போதோ இரஷ்யாப் படையெடுப்போடு தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

இத்திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இப்படி ஈசல்களைப் போல போர்க்களத்தில் இறப்பதற்கு ஆண்களை எது காலங்காலமாக வரலாற்றில் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதையே அதிகம் யோசித்தேன். வரலாற்றில் இருந்து ஆண்கள் எதையும் கற்றுக்கொள்ளாத முட்டாள்கள் என்பதே கசப்பான உண்மை.

நெப்போலியன் ஜோஸப்பின் காதலைப் பெறுவதற்காகத்தான் தன்னைத் தோற்காத வீரனாகக் காட்டப் போர்களை நடத்தினார் என்று சொல்பவர்களும் உண்டு. நெப்போலியன் நல்லதொரு காதலனாக ஜோஸப்பினுக்காய் இருந்து, இந்த நாடுகளைப் பிடிக்கும் போர்வெறியை மட்டும் கைவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்; எத்தனை உயிர்கள் வரலாற்றில் காப்பாற்றப்பட்டிருக்கும்!

 


2. இறுகப்பற்று

 

'இறுகப்பற்று' நல்லதொரு படம். கதை/திரைக்கதை என்பவற்றில் சிறிதும் நம்பிக்கை வைக்காது அண்மைக்காலமாய் வந்து குவிந்து கொண்டிருக்கும் தமிழ்ப்படங்களைப் பார்த்து நொந்தவர்க்கு நான் சொல்வதன் அர்த்தம் புரியும். நேற்றுக் கூட ஒரு இயக்குநரில் நம்பிக்கை வைத்து தீபாவளிப் படத்தைத் தியேட்டரில் பார்க்கச் சென்றபோது உண்மையிலே வயிற்றைப் பிரட்டுவது போன்ற உணர்வே ஏற்பட்டது. நல்லவேளையாக அந்தப் பாவத்தை அதற்குப் பிறகு நள்ளிரவில் சைனீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள் ஆற்றுப்படுத்தின. லியோ படத்தைப் பார்த்தபின் நண்பர்களிடம் எனக்கு வயதாகிவிட்டது போலும்; இந்தத் தலைமுறையினரின் விருப்புக்கு ஏற்றவனல்ல, நான் காலவதியாகிவிட்டேன் எனச் சொன்னபோது அவர்கள் மறுத்து 'உன் வயதல்ல, படந்தான் அவ்வளவு மோசம்' என்றார்கள். நேற்று ஜப்பானைப் பார்த்து நொந்தபோது, ஒரு நண்பர் சொன்னார், எமது தலைமுறைதான் ஒரளவு நல்ல படங்களையும், பாடல்களையும் கேட்ட கடைசித் தலைமுறையாக இருக்கும் போல என்று.

இல்லை, இன்னும் முற்றாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதற்கான ஒரு மின்மினியாக இந்த 'இறுகப்பற்று'.


அதேவேளை ‘இறுகப்பற்றுன் அலைவரிசைக்குள் வரும் திரைப்படம் அல்ல என்பதையும் குறிப்பிட விழைகின்றேன். முக்கியமாக அந்த சைக்காலிஜிஸ்டை இறுதியில் ஓர் ஆணிடம் மண்டியிடும் விதமாக மாற்றிய விதம் எனக்கு உவப்பில்லாதது. மற்றவர்களின் மனங்களை ஆழப் புரிந்துகொள்ளும் ஒருவர் எத்தகைய vulnerable ஆக இருந்தாலும் அப்படி இருப்பதைப் பார்க்க சகிக்க முடியாதிருந்தது. நிச்ச்யம் அப்படி ஆளுமையுள்ள பெண் அதை வேறுவிதமாக அணுகியிருப்பார். என் பொருட்டு நீயும் சந்தோசமாக இல்லை. உன்னைப் பார்த்து என்னாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இருவரின் அமைதியின் பொருட்டு வா வேண்டுமென்றால் விவாகரத்தைச் செய்து கொள்வோம் என்று அழைத்திருப்பார். ஏனெனில் அந்தப் பாத்திரம் மற்றவர்களுக்கு அதுதான் இறுதியான முயற்சியென அறிவுரை கூறுகின்றதல்லவா.


இணையின் தொலைபேசியை கள்ளமாய்ப் பார்ப்பது, அவன் பேசும் பள்ளித்தோழியின் மீது பொறாமை கொள்வதுதான் இயல்பானது என்று அந்தப் பாத்திரத்தையே சாகடித்திருக்கின்றார்கள். மேலும் விவாகரத்து விண்ணபிக்கப் போகும் அநேகமானவர்கள் பெரும்பாலும் விவாகரத்தைப் பெறுதலே நிகழ்கின்றன. ஏனென்றால் அந்த நிலைமைக்கு ஒருவர் போகின்றார் என்றால் அந்த மனவிரிசல் எளிதில் எதனாலுமே ஒட்டவைக்க முடியாது. ஆனால் இதில் அப்படி விவாகரத்துக்குப் போகும் இரண்டு இணைகளுமே இறுதியில் சுமுகமாய்த் தீர்வைக் கண்டு மனந் திருந்திவிடுகின்றன. இவ்வாறான பல காரணங்கள் இருப்பதால் இந்தப் படம் எனக்குரியதல்ல‌ (This is not my cup of tea) என்றுதான் கூறுவேன்.

ஆனாலும் இதன் திரைக்கதை தான் சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றது. திரைக்கதைகளுக்கு நேரம் செலவிடும் பொறுமையற்றவர்கள் கத்திகளாலும் துப்பாக்கிகளாலும் வன்முறையை 'சாதாரணப்படுத்தும்' காலத்தில் இந்தப் படம் ஒரு முக்கிய வரவென்பேன். மேலும் 'OK கண்மணி' போன்று படம் முழுதும் living together இல் வாழ விரும்பும் பெண்ணை ஒவ்வொரு காட்சியிலும் 'முற்போக்குப் பாத்திரமாகக்' காட்டிவிட்டு இறுதியில் ஒரு சாதாரண பெண்ணைப் போல திருமணத்தில் சரணாகதியடைய வைக்கும் போலித்தனம் இதில் எதுவுமில்லை, எப்படி ஒரு பொதுமனம் பெரும்பாலும் விரும்புகின்றதோ அப்படியே இது காட்டியிருக்கின்றது. ஒருவகையில் இத்திரைப்படம் தான் எடுத்துக் கொண்ட கருத்துக்கு உண்மையாகவே இருந்தது போல எனக்குத் தோன்றியது. மற்றது இப்படி அங்கே சித்தரிக்கப்படும் விடயங்களை வெட்டியும் ஒட்டியும் உரையாடுகின்ற வெளியையும் இந்தப் படம் நமக்குத் தருகின்றது என்பதும் முக்கியம் என்பேன்.

 

 

3. Pain Hustlers


அனைத்து விடயங்களிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. மேலும் நிறுவனமயப்பட்ட பெருநிறுவனங்கள் இந்த நல்லது கெட்டது என்பதில் அக்கறை கொள்வதைவிட அவை இலாபம் மீட்டலையே முதன்மையாகக் கொண்டிருக்கும். அதற்காக அது எந்த எல்லைவரையும் போகும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் பலி கொடுக்கும்.


Pharmaceutical companies இன் பெரும் வெறியையும் அதன் கொடூரமான அரசியல் முகத்தையும் The Constant Gardener என்ற நூலும், அந்த நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் நமக்குக் கடந்தகாலத்தில் நினைவூட்டியது. அவ்வாறு சில வருடங்களுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோன் கபூர் இப்படியொரு pharmaceutical entrepreneur ஆகி, பில்லியனாராக மாறிய கதையை நாம் சிலவேளைகளில் அறிந்திருப்போம். அவரது மனைவி புற்றுநோயால் இறக்க, புற்றுநோயுக்கு வலிநிவாரணியாக fentanyl ஐ நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கச் செய்து, பலரின் மரணங்களுக்கும், உடல் பக்கவிளைவுகளுக்கும் காரணமானவர் என்று கபூர் பின்னர் கைதுசெய்யப்பட்டவர். அவரும், அவரைச் சுற்றியுள்ளவர்களும் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டாலும், ஐந்தரை வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்ட கபூர் இரண்டரை வருடங்களிலேயே வெளியில் வந்துவிட்டார்.

இவ்வாறுதான் தம் நுகர்வுக்கும் இடாம்பீக வாழ்வுக்குமாய் ஒரு உலகம், விளிம்புநிலை மனிதர்களை பலிவாங்கியபடி நகர்ந்தபடியே இருக்கும். அது முன்னரும் நிகழ்ந்தது. இப்போதும் நிகழ்கிறது. இனியும் நிகழும். இந்த ஜோன் கபூரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்போது 'Pain Hustlers' என்று ஒரு திரைப்படம் வந்திருக்கின்றது. அதை பணநுகர்வுக்குள் சிக்கிவிட்ட ஒரு வறிய அபலைப் பெண், பின் உண்மை நிலவரம் அறிந்து அறத்தின் பக்கம் நிற்பதினூடாக தன்னைச் சரிசெய்வதை திரைக்கதையினூடு நகர்த்திச் சென்றிருக்கின்றார்கள்.


******************


(2023)


கார்காலக் குறிப்புகள் - 28

Friday, December 08, 2023

 

சூனியம்
************


சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்புக்குப் போனதும் அங்கே நடந்தது பற்றியும் ஏற்கனவே இங்கே எழுதியிருக்கின்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவம் இது. யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு வடகோவையார் அரச போக்குவரத்து பேரூந்தில் வந்து கொண்டிருந்தார். நீண்ட பயணங்களின்போது அவ்வப்போது சில இடங்களில் பயணிகள் தேநீர் குடிக்க/கழிவறைகளை உபயோகிக்க என நிறுத்துவது வழமைதானே. பஸ்சில் வந்த மற்றப் பயணிகளை விட தான் வித்தியாசமானவர் என்று நிரூபிக்க இவர் முதலில் தேநீரை ஆறுதலாக உருசித்துக் குடித்துவிட்டு washroom இற்குப் போயிருக்கின்றார். அந்த இடைவெளிக்குள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.

இவர் ஐயோ ஐயோ என்னை விட்டிட்டுப் போட்டாங்களே' என்று கத்தியது கொழும்பில் இருந்து மட்டுநகருக்கு ரெயினில் வந்து கொண்டிருந்த எனக்கே கேட்டது. அதுவரைக்கும் அப்படி என்ன விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றனீர்கள் என்று கேட்டேன். இல்லையடா அந்த கடைக்காரப் பெண்ணோடு கதைத்துக் கொண்டு நின்றதில் நேரம் வழுக்கிக் கொண்டு போனது தெரியவில்லை என்றார் கவித்துவமாக. உங்களோடு இதுதான் தொல்லை. இந்த அவமானங்களை எல்லாம் தாங்க முடியாதென்றுதான் அன்ரி உங்களோடு வெளியிடங்களுக்கு வர விரும்புவதில்லை எனச் சொன்னேன்.

நல்லவேளையாக அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் பஸ்காரர்களின் தொலைபேசி இலக்கம் இருந்திருக்கின்றது. அவர்களை இடைநடுவில் நிற்கச் சொல்லிவிட்டு, இவரை ஓட்டோவில் ஏற்றி அனுப்ப அவர் முயற்சித்திருக்கின்றார். ஆனால் அந்த நேரத்தில் எந்த ஓட்டோவும் அகப்படவில்லை. அதிஷ்டவசமாக அந்தக் கடைக்கு ஒரு பெண் அப்போது ஸ்கூட்டரில் வந்திருக்கின்றார். கடைக்காரப் பெண் அந்த ஸ்கூட்டரில் இவரை இழுத்துக் கொண்டு வந்து பஸ்சில் ஏற்றியிருக்கின்றார். முகநூலில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெண்களை நக்கலும் நளினமும் செய்யும் உங்களுக்கு கடைசியில் ஆபத்தில் உதவுவது அவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து இனியாவது அமைதியாக இருங்களெனச் சொன்னேன்.

இந்தச் சம்பவத்தை எனக்கு வடகோவையார் சொன்னபோது, நான் இவ்வளவு சொன்னதன்பிறகும் அவர் எதையும் பேசாதிருந்தார். மட்டக்களப்பார் வைக்கும் சூனியத்தை இப்போதும் ஏதேனும் ஒழுங்கைகளில் சூனியம் வைத்த பொருட்களின் மிச்சத்தில் பார்க்கமுடியும் என்று என் மட்டுநகர் கிரஷ் சொல்வார்; ஆனால் யாழ்ப்பாணிகள் மனதுக்குள்ளேயே சூனியம் வைப்பதில் வித்தகர்கள். அதை எளிதாக அறியவும் முடியாது. இப்படி நான் கூடக் கதைத்ததால் விதானையார் என்ன சூனியம் மனதுக்குள் எனக்கு வைக்கின்றாரோ என்ற அச்சம் வந்தது.
'ஒன்றுமில்லையடா' என்று சொன்னாலும் அவர் வைத்த சூனியம் பிறகு பலித்துவிட்டது. அந்த 'ஒரு பொல்லாப்புமில்லை' என்பதுதான் யாழ்ப்பாணிகளின் சூனியத்தின் கடவுச்சொல்!

00000000

மட்டக்களப்பில் இருந்து புறப்படும்போது அவர் யாழுக்கு அரச பேரூந்தும் (இரவில் அரச பேருந்துகள் அவ்வளவு நீண்ட தூரத்துக்குப் போவதில்லையென அதுவரைக்கும் நினைத்தேன்), நான் கொழும்புக்கு தனியார் பேரூந்தும் எடுப்பதாக இருந்தது. இரண்டும் இரவில் 9 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. அது மட்டுநகரிலிருந்து புறப்பட்டாலும், நாங்கள் நிற்கும் ஊறணியைத் தாண்டித்தான் போகும். எனவே ஊறணியில் இருந்தே பஸ்களை எடுப்போம் என வடகோவையாரிடம் சொன்னேன்.

அவரோ, 'இல்லையடா இடைநடுவில் நாங்கள் நின்றால் எங்களை விட்டிட்டுப் போய்விடுங்கள் என்று நெஞ்சு பதைபதைக்கும் நேரே மட்டுநகர் பஸ் நிலையத்துக்கே போவோம்' என்றார்.
ஓட்டோவில் போகும்போது ஓட்டோக்கார இளைஞன் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊரைச் சேர்ந்தவர் என்றாலும், ஒரு யாழ்ப்பாணத்துக்காரரின் கடையில் முறுக்கு,கயூ, வாங்க நின்றபோது தன் சொந்த ஊரையே பயங்கரமாக நக்கலடித்துக் கொண்டு வந்தபடி இருந்தார். அந்தக் கடையை நடத்துபவரே, கொழும்புக்கான தனியார் பஸ்களையும் நடத்திக் கொண்டிருந்தார்.

'இவங்கள் யாழ்ப்பாணத்தில் சனத்தை ஏமாற்ற முடியாது என்று இந்த அப்பாவி மட்டக்களப்பாரை இங்கே வந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாங்கள்' என்ற அந்த இளைஞனிடம், 'நீங்களும் இந்தக் கடைக்காரின் ஊர் என்றாலும் யாழ்ப்பாணிகளின் உண்மை முகத்தைச் சொல்லும் உங்களை எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது' என்றேன். அந்த சமயத்தில் யாழ்ப்பாணிகளின் புகழ் பாடும் வடகோவையாரின் முகம் எப்படி மாறியிருக்கும் என்று நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அப்போதும் எனக்குச் சூனியம் வைக்கப்பட்டது விட்டது என்பதை நான் அறியவில்லை.

வடகோவையார் என்னை தனியார் பேரூந்து தொடங்கும் இடத்தில் விட்டுவிட்டு தனது பஸ்சில் ஏறப் புறப்பட்டார். அந்த நேரத்தில் ஒரு தனியார் பேரூந்து கொழும்புக்குப் புறப்பட்டுப் போனதை ஓட்டோவில் இருந்தபோது கண்டேன். பஸ் நிலையத்தில் இருந்தவரிடம் இது பற்றிக் கேட்டபோது, இன்னும் ஒரு பஸ் இருக்கிறது, அதுதான் உங்கள் பஸ், கவலைப்படத் தேவையில்லை என்றார். அன்று ஏதோ சிஎஸ்கே விளையாடும் ஐபில் ஆட்டமொன்று போய்க்கொண்டிருந்தது. அதைக் கொஞ்ச நேரம் என் அலைபேசியில் பார்த்துவிட்டு, நான் நிமிர்ந்தால் மேலும் 2 பஸ்கள் கொழும்பு போவதற்காக வந்து நின்றன. பரவாயில்லையே யாழ்ப்பாணத்துக்காரர் தினம் மூன்று பஸ்கள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு விடுகின்றாரே என்று நினைத்துக் கொண்டு பஸ்சினுள் ஏறப் போனேன். முதல் பஸ்சில் என் பெயரைக் காணவில்லை என்றனர். ஓ, மற்ற பஸ்தான் என்னுடையது என்று தள்ளி நிறுத்திவிட்டிருந்த மற்ற பஸ்சினுள் ஏறப்போக அதிலும் என் பெயர் இருக்கவில்லை.

என்ன கஷ்டகாலமடா என அவர்களின் சிறைக்கூட்டு அலுவலகத்தில் நின்று கேட்டபோது, அவர்களும் இருக்கும் பதிவேடுகள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு உங்களின் பஸ் ஏற்கனவே போய்விட்டது என்றார்கள். வடகோவையார் வைத்த சூனியம் பலித்துவிட்டதென்று மனதுக்குள் என்னை நானே திட்டிக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தபோது ஒரு புதிய தொலைபேசி இலக்கத்தில் அழைப்பு வந்தது.

நாங்கள் ஊறணியில் நிற்கின்றோம், எங்கே உங்களைக் காணவில்லை என்று கேட்டனர்.

நான் ஊறணியில் ஏறுவதாய்ச் சொன்னதை மறந்து டவுணுக்குப் போய் ஏறப்போனதிற்கு, யாழ்ப்பாணத்தார் வைத்த சூனியத்தை விட வேறு எது காரணமாகப் போகின்றது. எனக்கு வந்த விசருக்கு, நான் நாளைக்கு வாறன் என்று அவர்களுக்குச் சொல்லிவிட்டேன். இன்னும் 2 பஸ்கள் போவதற்கு நிற்கின்றன, ஒரு இடம் கிடைக்காதா என்ற நினைப்பில் அப்படிச் சொன்னேன். இந்த இரண்டு பஸ்சில் ஏதேனும் ஓரிடம் தாருங்களெனக் கெஞ்சியபோதும் எல்லா இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன எனக் கையை விரித்தனர்.

இறுதியில் இரக்கப்பட்டு எவருமே இருக்கமுடியாது சும்மா விடப்படும் கடைசி 'துள்ளிக் குலுங்கும்' இருக்கைகளில் ஒன்றைத் தந்தார்கள். வடகோவையாரைத் திட்டிக் கொண்டு அதில் ஏறும்போதுதான், நான் எனக்குள் வைத்த சூனியம் நன்கு வேலை செய்து கொள்ளத் தொடங்கியது. என்னைப் போலவன்றி கடைசி நேரத்தில் கொழும்புக்குப் போவதற்காக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த மூன்று பெண்கள் கடைசி இருக்கையில் (5 இருக்கைகள்?) வந்து அமர்ந்தார்கள். என் பயணம் இனிமையாக அவர்களின் கொஞ்சும் தமிழ் பேச்சைக் கேட்பதில் தொடங்கியது.

எனக்கு ரிக்கெட் தந்தவர், இந்த பஸ்சும் நீங்கள் பதிவு செய்து ஏற்கனவே புறப்பட்ட பஸ்சும் அரைவாசித் தூரத்தில் ஒரேயிடத்தில் நின்று ஓய்வெடுக்கும். அப்போது நீங்கள் அந்த பஸ்சினுள் ஏறிக் கொள்ளுங்கள், வசதியான இருக்கை கிடைக்கும் என்றார்.

அவர் சொன்னதுமாதிரி, பயணத்தின் அரைவாசித் தூரத்தில் இந்த பஸ்கள் சந்தித்துக் கொண்டன. எங்கள் பஸ்ஸடியில் வந்து நின்று என் பெயரைக் கூப்பிட்டு அங்கே வாருங்கள் வாருங்களென ஒருவர் அழைத்தார். நானோ இதுவே நன்றாக இருக்கிறது, இப்படியே கொழும்பு வந்து சேர்கின்றேன் என்று அடம்பிடித்து அவரது அழைப்பை நிராகரித்தேன்.

'என்னடா நல்ல வசதியான இருக்கை இருக்கின்றதெனக் கூப்பிட்டும், இவன் வரமாட்டான் என்று அடம்பிடிக்கின்றானே என்று அவருக்குச் சரியான குழப்பம். 'கனடாக்காரர்கள் எல்லாம் புத்தி பேதலித்தவர்கள் போல, அதுதான் இப்போது இலங்கையிலிருந்து சனம் எல்லாம் கனடாவுக்குப் போகிறது' என்று எள்ளல் செய்யும் மட்டுநகர் நண்பனைப் போல அவரும் நினைத்திருக்கலாம்.

ஆனால் அவருக்குத் தெரியாதது: நான் வடகோவையார் வைத்த யாழ்ப்பாணத்துச் சூனியத்தை எப்படிச் சூதனமாக எதிர் சூனியம் வைத்து முறியடித்தேன் என்பது.

*********************


(செப்ரெம்பர், 2023)

மெக்ஸிக்கோ வாசிப்பனுவம்

Saturday, December 02, 2023

 

-சுகிர்தா இனியா

 

நாவல் : மெக்ஸிக்கோ

நாவலாசிரியர் : இளங்கோ

 

ளங்கோவின் மெக்ஸிக்கோ தான் எனது சிறிது கால வாசிப்பு இடைவெளிக்குப் பிறகு நான் முழுவதுமாக படித்து முடித்த நாவல். இளங்கோவின் எழுத்தின் மீது எனக்கு அதீத ஒட்டுதல் உண்டு. காரணம் என்னால் பத்திக்கு பத்தி தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளக்கூடிய எழுத்தாக அவருடைய எழுத்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக முகப்புத்தகத்தில் அவருடைய பதிவு ஒன்றைப் பார்த்தும், அட நம்மைப் போல ஒருவர் என்று தோன்றியதும் அவருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன். நட்பு அழைப்பும் கொடுத்தேன். அப்போது அவரைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. பிறகு அவருடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தேன். அதற்கு பிறகு தான் அவர் நாவலாசிரியர், சிறுகதையாளர், இன்ன பிற திறமையாளர் என்று அறிந்து கொண்டேன். அப்படி அறிந்து கொண்ட பிறகு அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

 


இளங்கோவின் எழுத்தில் தொனிக்கும் ஒரு aloofness/solitary nature என்னைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று. மெக்ஸிக்கோவில் அவரது முக்கியக் கதாப்பாத்திரம் இத்தகைய குணாம்சம் வாய்ந்தவராகவும், தன்னையே introspect செய்து கொள்பவராகவும், தனது குறைபாடுகளை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படுத்துபவராகவும், அவை விமர்சிக்கப்படும்போது அதில் உண்மை புலப்பட்டால் அதை மனதார ஏற்றுக்கொள்பவராகவும் என அவர் அதை படைத்திருந்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இது எப்படியென்றால் கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்களோ அல்லது நெசவுத் துணியோ ஏதாவது ஒரு இடத்தில் பிசகி இருக்கும். அதன் தனித்தன்மை அது தான். அப்படியான ஒரு ஹாண்ட்மேட் கதாப்பாத்திரம் இது.

 

//விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்.//

 

முதல் அத்தியாயத்தில் இந்த வரிகளைப் படித்தபோதே இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஒட்டுதலும் பரிவும் வந்தது. இப்படி என்னை இறுகப்பற்றிய பத்திகள் இந்த நாவலில் ஏராளம் உள்ளன. அவற்றில் சில பத்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 

//இந்த நள்ளிரவு தாண்டிய பொழுது, ஏன் என்னை இப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறது? மழையின் சாரலிற்குள் நுழைந்து என் சோகத் துளிகளைக் கரைக்க வேண்டுமென விம்முகிறது நெஞ்சு. சனங்கள் நிரம்பித் ததும்பும் இப்பெரு நகரத்தில் யாருமேயற்ற ஒருவனாய் உணர்வது

எவ்வளவு கொடுமை. தனிமையின் கனந்தாங்காது என்னைப் போல யாரேனும் ஒருவர் தூக்கந் தொலைத்து பல்கணியில் நிற்கவும் கூடுமோ? // 

 

இந்தப் பத்தியை உறக்கம் தொலைந்து வெறுமையான இரவின் பிடியில் தன்னந்தனியாக நின்று சலித்த ஒவ்வொருவராலும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். நம்மைப் போல இந்த அகால இரவில் யாரேனும் விதானத்தை வெறித்துப் பார்த்தபடி கிடப்பார்களோ அல்லது மொட்டைமாடியில் வான்நோக்கிப் படுத்துக்கொண்டு சூனியத்துள் வெறிப்பார்களோ என்றும் நாம் தனிமையில் நெட்டித் தள்ளிய இரவுகள் நம் நினைவில் ஊசலாடும்.

 

//ஒரு உண்மையை உணர்ந்தேன்.

இந்த உலகிற்கு நான் தனித்தே வந்தேன். மரணிக்கும் போதும்  தனித்தே போகப்போகின்றேன். இடையில் மட்டும் ஏன்

மற்றொருவர் எப்போதும் தொடர்ந்து என்னோடு வரவேண்டும் என நினைக்க வேண்டும் என்றுணர்ந்த கணம்என்றாள்..//

 

இந்த தத்துவார்த்த பத்தி அவரது காதலி சொல்வது போல வரும். இந்த உண்மை நமக்கு தெரிந்தே இருந்தாலும் கூட நாம் சமயங்களில் இம்மைக்கும் எம்மைக்கும் என்று உருகிவிடுவோம். அப்படி உணர்ச்சிவயப்படும்போது இப்படியான உரையாடல்கள் நம்மை நிதானிக்கவும், சமநிலைப்படுத்தவும் செய்யும்.

 

// ஒவ்வொருமுறையும் இப்படிச் சோர்ந்துபோகும்போது, என்ன காரணம் என வினாவாமலே யாரேனும் ஒருவர் வந்து அணைத்துக் கதகதப்பாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொண்டு அவள் உடல்சூட்டில் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டுகொண்டேன். இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்.//

 

தனியாக இயங்குபவள் தனிமையை விரும்புபவள் நான் என்றாலும், சமயங்களில் உள்ளிருந்து உதறும் குளிர் போல சமநிலை குலையும்போது, சிந்தையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு மண் வீழும் மலர் போல இன்னொருவருக்குள் சரணடைய வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

 

// எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் இன்னொருவர் தரும் நேசமும் அரவணைப்பும் ஒரு பாவமன்னிப்பைப் போல நம்மை மீண்டும் மனிதர்களாக்கி விடுகின்றது.//

 

அன்புக்கு அந்த வல்லமை உண்டு இல்லையா என்று தோன்றியது.

 

// பயணங்களின்போதுதான் மனிதர்கள் எப்படி மாறிப்போய் விடுகின்றார்கள். எல்லாவற்றையும் புறப்படும் இருப்பிடங்களில் விட்டுவிட்டு, அசலான முகங்களோடு வலம் வரத் தொடங்குகின்றார்கள். தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் தம்மை இயல்பாகத் திறந்து காட்டவும் செய்கின்றார்கள். நான் நின்ற விடுதியில் நான் பல்வேறு விசித்திரமானவர்களைச் சந்திக்க முடிந்தது.//

 

இதை நானும் கவனித்திருக்கிறேன். தனித்துப் பயணிக்கும்போது எனக்கு ஒரு உதவி தேவை என்று யாரிடமும் கேட்கத் தயங்கியதில்லை. பயணிகளிடம் எல்லோருமே வாஞ்சையாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் பயணிகளுக்கு 'பயணிகள்' என்ற சலுகை கிடைக்கிறது. ஒரு பயணி ஒரு இடத்தில் வழமைக்கு மாறாக ஏதாவது செய்துவிட்டாலும், பாவம் வெளியூர்க்காரங்க அவங்களுக்கு தெரியாது என்று மன்னிக்கவும் தயாராகவே மனிதர்கள் இருக்கிறார்கள். நம் மீது பிம்பங்கள் இல்லாதபோது, நமக்கு இன்னொருவர் மீது எந்த பிம்பமும் இல்லாதபோது, இயல்பாக இருப்பது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் வாசித்து நெகிழ்ந்த இன்னொரு முக்கியமான உரையாடலும் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் இந்தப் பதிவு மிக நீளமாகப் போகும் என்பதால் வேண்டாம் என்று விடுகிறேன்.

 

மெக்ஸிக்கோ நாவலை துவங்கியவுடன் சரசரவென வாசிக்கத் துவங்கிய நான் 32 ஆம் அத்தியாயம் 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வந்தபோது சற்று விளங்க முடியாமல் அங்கேயே தேங்கி நின்றேன். வாசனையைப் பற்றி வந்து கொண்டிருந்த எறும்பொன்று திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் தடுமாறி நிலைகுலைவது போன்ற தடுமாற்றம் அது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கிருந்து எனது வாசிப்பைத் துவங்கியபோது எனக்கு அந்த சரடு பிடிபட்டது. அந்த வாசிப்பு இடைவெளி எனக்கு அவசியமானதாகவும், ஒரு புதிய கண்ணோட்டத்தில் இந்த நாவலை வாசிக்கும் அனுபவத்தையும் கொடுத்தது. உண்மையைச் சொன்னால் இந்த 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வாசிக்கும்போது நான் உணர்ச்சி வயப்பட்டேன். இந்தப் பகுதி எனக்கு மிகவும் ஆத்மார்த்தமாகப் பட்டது. இதோ இவனை எனக்குத் தெரியும் என்று திரும்ப திரும்ப என் மனம் அடித்துக் கொண்டது. இந்த உணர்வு எனக்குப் புரிகிறது. ஆமாம் புரிகிறது என்று என் மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது.

 

கதையின் முடிவு எதிர்பார்க்காத முடிவு என்றாலும்  ஒரு வாழ்வனுபவத்தைப் போல மிக இயல்பான முடிவாகவே இருந்தது.

 

தொடர்ந்த வாசிப்பாலும், நேர்மையான உரையாடல்கள் மூலமும் நம்மை நாமே உள் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது அவசியம். நேர்மையான உள் ஆய்வுதான் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள உதவும். நமக்குள் தான் எத்தனை எத்தனை நிறங்கள் இருக்கின்றன என உரையாடல்களும், வாசிப்பும் நமக்கு காட்டிக் கொடுக்கும். இப்படித்தான் என்னையே அடையாளம் காட்டக் கூடியதாக, தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக் கூடியதாக, ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்க கூடியதாக எனக்கு மெக்ஸிக்கோ வாசிப்பனுபவம் இருந்தது.


 ***************


நன்றி: சுகிர்தா இனியா

https://www.facebook.com/photo?fbid=199156269864891&set=a.104123939368125

சட்டகங்களுக்கு அப்பால் மிஞ்சுபவை

Monday, November 13, 2023

 

Dead Poets Society  திரைப்படத்தில் ஆசிரியரான ரொபின் வில்லியம்ஸ் தனது மாணவர்களுக்கு ஏற்கனவே அந்தப் பாடசாலையில் படித்தவர்களின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை ஓரிடத்தில் காட்டுவார். இவர்கள் உங்களைப் போல இதே பாடசாலையில் 30 வருடங்களுக்கு முன்னர் படித்தவர்கள். என்னதான் முயன்றாலும் இறுதியில் இறப்பென்பது இவர்களைப் போன்று உங்களுக்கும் உறுதியானது. நீங்கள் இதற்கிடையில் எப்படி உங்களுக்கு விரும்பிய மாதிரி வாழப் போகின்றீர்கள் என்பதுதான் முக்கிய கேள்வி. ஆகவே உங்களது கற்பனைகளை, விருப்பங்களை ஒருபோதும் சமரசம் செய்யாதிருங்கள் என வில்லியம்ஸ் சொல்வார். அதற்கேற்ப கவிதைகளைப் பற்றிக் கற்பிக்கும்போது பாடப்புத்தகத்தில் இருக்கும் கலாநிதி ஒருவர் எழுதிய முன்னுரையை கிழித்துவிடுங்கள் எனச் சொல்லி குப்பைக்கூடையை ஒவ்வொரு மாணவரிடம் நீட்டியபடி போவார்.


மாணவர்கள் தமது ஆசிரியரின், மாணவ காலத்தை பழைய Year Book ஊடு கண்டுபிடிக்கும்போது, அவர் இரகசியமாக Dead Poets Society என்ற பெயரில் நடத்திய இலக்கியக் குழுவைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தக் குழுவின் கூட்டங்களை எப்படி கடந்தகாலத்தில் தேரோவின் 'நான் காட்டுக்குள் போனேன், ஏனென்றால் நான் உள்ளுணர்வோடு வாழ விரும்பினேன். வாழ்க்கையை அதன் (என்பு) மச்சை வரை உறிஞ்சி ஆழமாக வாழ விரும்பினேன்' எனச் சொல்லித் தொடங்குவார்களோ அப்படி இந்த மாணவர்களும் சொல்லி உற்சாகத்துடன் கவிதைகளைக் கொண்டாடத் தொடங்குகின்றார்கள். இப்படி Dead Poets Society என்ற பெயரை வைத்து கவிதைகளை ஆராதித்ததுமாதிரி, ரொபர்தோ பொலானோவின் நாவலான Salvage Detectives பதின்மர்கள் தொடங்கும் கவிதைக்குழுவின் பெயர் Visceral Realists என்பது நமக்கு நினைவுக்கு வரலாம்.


வ்வொருவருக்கும் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், நாளாந்த வாழ்க்கை என்பது பெரும்பாடாக அலைய வைக்கின்றது. கிருஷ்ணன் நம்பி 60களில் எழுதிய கதையான 'தங்க ஒரு..' வில் வருகின்றவன் ஒரு வீட்டை வாடகைக்குத் தேடி அலைகின்றான. கிராமத்திலிருக்கும் அவனது மனைவியும், குழந்தையும் இவனோடு சேரந்து வாழ நகரத்துக்கு வர விரும்புகின்றார்கள். வாரத்துக்கு இரண்டு மூன்று கடிதங்கள் எப்போது நாங்கள் வருவதென மனைவி கேட்டபடி இருக்கின்றாள். இவனின் குமாஸ்தா வேலையில் வரும் சம்பளத்தில் ஒரு உரிய வாடகை வீட்டைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கின்றது.

அப்போதுதான் 'ஒரு காலணிக்குள் வாழும்' ஒரு மனிதனை தேனாம்பட்டையில் இவன் சந்திக்கின்றான். அந்தக் குள்ள மனிதன் ஒரு காலத்தில் பொலிஸாக இருந்தவன். அவன் நகரம் கொடுக்கும் நெருக்கடிகளால் சிறிது சிறிதாக குள்ளமாகி, அவனின் பொலிஸ் காலணிக்குள்ளேயே குடும்பத்துடன் வாழ்கின்ற ஒருவனாக மாறிவிட்டான் என்று அந்தக் கதை நீளும்.

மனிதர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளால் எவ்வாறெல்லாம் மனிதன் பரிமாணம் அடைகின்றான் என்பதுதான் கதை. அதில் ஓரிடத்தில் 'எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ளும் அக்கறை உள்ளவளாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும் மயக்கம்' என்று இந்தக் கதைசொல்லி தன் மனைவிக்கு கடிதம் எழுதுவார்.

இந்தக் 'கடைசி வரை தெரிவது தோற்ற மயக்கம்' ஆக இருப்பது போலத்தான் நமது கைகூடாத ஆசைகளும் இருக்கின்றன. அவை கைகூடும்போது நமக்கு அதை ஆறுதலாக இருந்து அனுபவிக்க முடியாதபடி இன்னொரு ஆசை சிறகு விரித்துத் தொடங்கி விடுகின்றது. ஆக கடைசி என்ற ஒன்றுமே இல்லாது. மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதற்கு எப்படி ஒரு எல்லை வகுத்துவிட முடியும்?

ஆனால் இந்த எளிய உண்மையை Promised Land  திரைப்படத்தில் லெமன் ஜூஸ் விற்கும் ஒரு சிறுமி உடைத்து விடுகின்றாள். ஒரு சிறு கிராமத்தில் இயற்கை வாயு கிடைக்கின்றது என்று அறிந்து ஒரு பெரிய நிறுவனம் தனது சார்பாக ஒருவனை அங்கே அனுப்புகின்றது. அவனது பணி, அந்த மக்களை நிலத்தினடியில் இருக்கும் இயற்கை வாயுவினால் அவர்களுக்கு பெரும் பணம் கிடைக்கப்போகிறதெனச் சொல்லி அவர்களின் விவசாய நிலங்களை அவர்களிடமிருந்து வாங்குவது/குத்தகைக்கு எடுப்பது. இறுதியில் தனது நிறுவனத்தின் தகிடுதித்தங்களை விளங்கி அந்த மக்களுக்கு உண்மையை உரைக்கப் போகும் அவன் இந்தச் சிறுமியிடம் லெமன் ஜூஸ் வாங்கிக் குடிப்பான்.

அவன் அந்த ஜூஸின் பணத்தை விட (25 சதம்), அதிக காசை அந்தச் சிறுமிக்குக் கொடுப்பான். அவள் மேலதிக பணத்தை வாங்க மறுத்து, 25 சதமே போதுமென்பாள். ஒருவகையில் மனிதர்களுக்கு இருக்கும் பணத்தாசை என்பதைவிட, நீங்கள் இந்தப் பூமியை உங்கள் வரம்பிற்கேற்பப் பாவித்துவிட்டு இந்தச் சிறுமியைப் போன்ற அடுத்த தலைமுறையும் அனுபவிக்க விட்டுச் செல்லுங்கள் என அது மறைமுகமாய்ச் சொல்வது போலத் தோன்றியது. நாம் நமது அளவற்ற ஆசைகளை நம் இருப்பிற்கான அவசியங்களாக ஆக்கி, நம்மையும் எதிர்காலச் சந்ததியையும் நட்டாற்றில் விட்டுச் செல்லும் மிகப் பெரும் நுகர்வோராக மாறிவிட்டோம். இன்னுமின்னும் வேண்டும் என்று நம் வாழ்வைக் கூட நிம்மதியாக வாழமுடியாது, அக/புற அழுத்தங்களினால் நாம் ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

வசதி வாய்ப்புக்களில் கூடிய/குறைந்த மனிதர்கள் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் படிநிலைகள் எவ்வாறிருப்பினும் தமக்குள் தீர்க்கமுடியாப் பிரச்சனைகளோடும், ஆசைகளோடும் தான் அநேகர் இருக்கின்றார்கள். இப்படியான பிரச்சினைகளோடு வாழ்வதில் மட்டும் நாம் எல்லோரும் 'சமதர்ம' உலகில் வாழ்கின்றோம் என நினைக்கிறேன்.


தார்த்தவாதக் கதைகளே இப்போது நம் தமிழ்ச்சூழலில் மிகுந்த உணர்ச்சிவசமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிழியப் பிழிய உணர்வுகளைக் கொடுத்தால் அது ஒரு சிறந்த புனைவாக வந்துவிடும் என்று எழுதப்படாத விதி போலும். பலர் கடுமையாக தீவிர விரதத்தைப் போல அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்யதார்த்தவாதக் கதை என்றாலும் தமிழ்பிரபாவின் 'கோசலை' நல்லதொரு நாவல். அங்கே  உணர்ச்சிகளுண்டு, உணர்ச்சிவசப்படுவதற்கான சம்பவங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ப்பிரபா அதை - மேலே லெமன் விற்கும் சிறுமி போல- வாசகர் புரிந்து அசைபோடுவதற்கான வெளிகளை விட்டுச் செல்வதால் அது மிகு உணர்ச்சியாகவோ/அதீத நாடகீயமாகவோ போகவில்லை. ஒருவகையில் கோசலையை கோசலையால் மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்கின்ற சிக்கலான ஒரு பாத்திரமாக அவர் படைக்கப்பட்டிருப்பார்.

இன்று எழுதப்படும் சிறுகதைகள் இப்படி உணர்ச்சிகளின் நெருக்கடியால் எழுதப்படுவதால் அவற்றை மேல் எழுந்த நுனிப்புல் வாசிப்போடு கடந்து போய்க்கொண்டிருப்பேன். புனைவில் கதையென்று தெளிவாக இல்லாமலே வாசகர் இரசிக்க , அதற்குள் ஊறி நின்று எழுதலாம் என்று ஒருமாதிரியான சட்டகங்களுக்கு எழுதுபவர்களின் தலையில் ஆணியடித்துச் சொல்லலாமோ என்று கூட நினைப்பதுண்டு. புதிதாக எழுதுபவர்களைக் கூட மன்னித்து மறந்துவிடலாம், ஆனால் எழுத்தாளர் என்ற பெயரை அடைந்துவிட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை இனிவரும் காலங்களில் அவசியம் என்று நினைக்கின்றேன்.

அந்தவகையில் யுவன் சந்திரசேகரின் அண்மைக்கால கதைகளைத் தொகுத்து வந்த 'கடலில் எறிந்தவை'  ஒரு இதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கதைகள் கிட்டத்தட்ட கட்டுரைக்கு நெருக்கமான எழுத்து வகையெனக் கூடச் சொல்லலாம். கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விடயங்கள் இருப்பதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டு பக்கங்களில் கதை மாதிரியான ஒன்றைச் சொல்லிவிட்டு யுவன் இந்தத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகளில் தன் கனவுகளையும், அலையும் மனவோட்டங்களையும்தான் பேசுகின்றார். ஆனால் அது அலுக்காதவகையில் எனக்கு சுவாரசியமாகத் தெரிந்தது.

மேலும் ஒரு சட்டகத்துக்கு வெளியே இருப்பதும், ஏதேனும் ஒரு குழுவுக்குள் ஜக்கியம் ஆகாமல் தன்னியல்பிலே இருப்பது என்பதும் சுவாரசியமானது.  ஆகவே அந்த உதிரிக் குரல்களை, விதிவிலக்குகளை நாம் தொடர்ந்து பேசுவோம்.Dead Poets Society இல் வந்த ஆசிரியரைப் போல, லெமன் விற்கும் சிறுமியைப் போல, நிறைய வசதிகள் பெருகும் என்றாலும் தனக்கு அறமென நினைப்பதை தயக்கமின்றிச் சொல்லி வேலையிலிருந்து துரத்தப்படும் அந்த Promised Land ஆணைப் போல,  நாம் புனைவுகளில் மட்டுமின்றி வாழ்விலும் நம்மைப் புதிதாய்க் கண்டுபிடிப்போம்.

**************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)

காலத்தின் முன் தொலைந்து போகாத படைப்பாளிகள்

Sunday, November 12, 2023

 

1.


நான் திரைப்படம் குறித்து எழுதிய முதல் விமர்சனம் ‘Finding Forrester’ என நினைக்கிறேன். இந்தத் திரைப்படத்தைப்  படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தேன். அதன் பாதிப்பில் ஒரு விமர்சனம் எழுதி, அது  வெளியான பத்திரிகையொன்றில் வெளிவந்தது. ஒரு கறுப்பின பதின்மனுக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இடையில் மலரும் நட்பைப் பற்றிய படமது. 


எழுத்தாளர் புலிட்ஸர் விருது பெற்ற படைப்பாளி என்றாலும் எல்லா வெளியுலகத் தொடர்புகளையும் மூடி தன் வீட்டுக்குள் வசிப்பவர். தன்னை திறந்து காட்டாத எழுத்தாளர் அந்த கறுப்பின பதின்மனுக்கு ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்திக் கொடுக்கும் நண்பராகின்றார். இதில் Sean Connery எழுத்தாளராக நடித்திருப்பார். இது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், J.D.Salinger இன் பாதிப்பு இப்படத்தில் தனக்குள் இருந்ததென்று சீன் கானரி பின்னர் சொல்லியிருக்கின்றார்.


ஆங்கிலத்தில்  சாலிஞ்ஜர் (Salinger), ஹார்ப்பர் லீ (Harper Lee) போன்றவர்கள் தமது முதலாவது நாவல்களின் பெரும் வெற்றிகளுக்குப் பின் எதையும் எழுதாமல் அல்லது எழுதினாலும் நூலாக வெளியிடாமல் இருந்தவர்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் பெரும் பாதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தி அடுத்து என்ன நாவல்கள் எழுதுவார்களெனக் காத்திருக்க வைத்தவை. சாலிஞ்ஜரின் 'The Catcher in the Rye' பதின்மன் ஒருவனின் வாழ்க்கையைச் சொன்னாலும், பல நாடுகளில் அது தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவிலும் பல பாடசாலைகளில் கத்தோலிக்க மதத்தை நிந்தனை செய்வதாக படிப்பது தடை செய்யப்பட்டது. 1951 இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் மில்லியன கணக்கில் விற்கப்பட்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின், இப்போதும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. 


நான் கனடாவில் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு இந்த நாவலும், ஹார்பர் லீயின் To Kill a Mockingbird உம் , பாடத் திட்டத்தில் இருந்தன. எங்கள் ஆசிரியர் ஹார்ப்பர் லீயைத் தெரிவு செய்ததால் நாங்கள் To Kill a Mockingbird ஐ வாசித்தோம். இப்போது ஹர்ப்பர் லீயின் நாவலும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை காக்க வந்த ஒரு மீட்பராக அதில் வெள்ளையின Atticus Finch என்ற பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது  குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. கிட்டத்தட்ட 20 இடங்களில் மேல் கறுப்பினத்தவர்களை இழிவுசெய்யும் 'N' வார்த்தை பாவிக்கப்பட்டதை, 9/10ம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு சரியா என்று சர்ச்சைகளும் போய்க் கொண்டிருக்கின்றன. 


ஹார்ப்பர் லீ என்ற வெள்ளையினப் பெண்மணி, Scouts என்கின்ற ஒரு வெள்ளைச் சிறுமி வயதுக்கு வருகின்ற பார்வையினூடு இதை எழுதினாலும், அந்தக் காலத்தில் இருந்த நிறவாதத்தை இனங்காட்டிய ஒரு முக்கியமான நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்நாவல் 1960களில் வெளிவந்தாலும், 1930காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. எனவே அந்தக் காலகட்டத்து உலகத்தைத்தான் ஹர்ப்பர் லீ பிரதிபலித்தார் என்பதும் சரியே. ஆனால் அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள், நெடுங்காலமாக அடிமையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளும், குரல்களும் முக்கியமானதே. 


ஒடுக்கப்படுவோர் குரல் என்றும் எங்கேயும் பிற எதையும் விட முதன்மை கொடுத்துச் செவிமடுக்க வேண்டியவை. இன்றைக்கு இந்த ஆங்கிலேய நாடுகளில் (அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) கறுப்பின/பூர்வீக மக்கள் ஏற்கனவே நடத்திய பெரும் போராட்டங்களால்தான், எங்களைப் போன்ற மண்ணிறமக்கள் ஒரளவுக்குச் சுதந்திரமான மனிதர்களாக இந்த மேற்கத்தைய நாடுகளில் வாழ முடிகின்றது என்பதை நாம் உணர்ந்தால் நாம் யாரின் குரல்களோடு சேர்ந்து ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பது புரியும்.


0000000



சாலிஞ்ஜரும் 'Catcher in the Rye' எழுதியபின் பெரிதாக எந்த நாவலும் எழுதவில்லை. அதற்கு முன்னர் எழுதிய சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பும், 'Franny and Zooey' ஒரு குறுநாவல் (+ சிறுகதை) தொகுப்பும் வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு சாலிஞ்ஜர் போய் விட்டிருந்தார். இப்படி தலைமறைவில் இருந்த சாலிஞ்ஜரோடு 90களின் நடுவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்புகளை வைத்து ஒரு நூல் வெளிவந்திருக்கின்றது. அது My Salinger Year. 


ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற Joanna Rakoff  ஒரு பதிப்பகத்தில் முகவராகச் சேர்கின்றார். அவர்களே சாலிஞ்ஜருக்கு முகவராக இருப்பதால், ஜோனாவுக்கு சாலிஞ்ஜரோடு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. சாலிஞ்ஜரின் 1950 நாவலுக்கு, 1990களிலும் பல வாசகர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். சாலிஞ்ஜர் தனது தலைமறைவு வாழ்க்கையால் எவரோடும் தொடர்பு கொள்வதில்லை. அவரது முகவரியோ/தொலைபேசி எண்ணோ எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று ஜோனாவின் நிறுவனம் ஜோனாவுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 


ஜோனாவின் பெரும்பாலான வேலை, Catcher in the Rye இற்கு வரும் வாசகர் கடிதங்களை வாசித்துவிட்டு குப்பைக் கூடைக்குள் எறிவதாகும். சிலருக்கு மட்டும், 'உங்கள் கடிதத்திற்கு நன்றி, ஆனால் சாலிஞ்ஜர் இந்தக் கடித்தை வாசிக்க விரும்பவில்லை' என்று பதிப்பகத்தினூடு ஒரு சிறுகடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


ஒரு காலத்தில் எதையும் வாசிக்காமல் குப்பைத்தொட்டிக்கு கடிதங்களை எறிந்த பதிப்பகம் ஒரு அசம்பாவிதத்தின் பின், கடிதங்களை திறந்து வாசித்துவிட்டு குப்பைத் தொட்டிக்குள் எறிகின்றது. அது பீடில்ஸ் இசைக்குழுவின் ஜான் லெலனின் கொலைக்குப் பிறகாகும். ஜான் லெனனை சுட்டுக்கொன்ற கொலையாளி தன் கையில் வைத்திருந்தது சாலிஞ்ஜரின் இந்த நாவலையே. இந்நாவலே தன்னை இப்படி ஜான் லெனனைக் கொலை செய்யத் தூண்டியது என்று ஒரு வாக்குமூலத்தை அந்த கொலையாளி கொடுத்திருந்தார். 


அதன்பின் இந்த பதிப்பகம் சாலஞ்ஜருக்காய் வரும் எல்லாக் கடிதங்களையும் திறந்து வாசிப்பது என்று முடிவை எடுக்கின்றது. ஒருபோதும் எந்தக் கடிதத்திற்கும் சாலிஞ்ஜர் பதில் எழுதுவதில்லை என்கின்றபோதும் தினமும் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அந்தக் கடிதங்களின் உட்பொதிந்திருக்கும் சுவாரசியமான விடயங்களால், பதிப்பகத்திற்குத் தெரியாமல் ஜோனா பதில் கடிதங்களை இரகசியமாக எழுதத் தொடங்குகின்றார். சாலிஞ்ஜரோடு தொலைபேசியில் அவ்வப்போது பேசும் ஜோனாவின் எழுத்தாளராகும் கனவைக் கண்டு சாலிஞ்ஜர் அவரைத் தினமும் முப்பது நிமிடமாவது எதையாவது எழுதும்படி அறிவுறுத்துகின்றார். 


மேலும் நீ இந்த அலுவலகத்தில் இருந்து வரும் பிரதிகளை வாசித்து திருத்தங்களைச் செய்யும் ஒருத்தியல்ல, படைப்பாளி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே என்கின்றார். தொழிலில் தேர்ந்து ஒரு சிறந்த எடிட்டராக/முகவராக ஒருகட்டத்தில் வரும் ஜோனா இந்த வேலையைத் துறந்து தனது எழுத்தாளராகும் கனவைப் பின்தொடர்ந்து போகின்றார். அந்த ஜோனா தன் சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய நூலே பின்னர் இதே பெயரில் (My Salinger Year) திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.


ஆக 1950களில் ஒரு நாவல் எழுதப்பட்டு இன்று 70 ஆண்டுகள் கழிந்தபின்னும் ஏதோ ஒருவகையில் இந்நாவல் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சாலிஞ்ஜர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியவர். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்தவர் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இறுதிக்காலத்தில் தனது மகளிடம் 'நீ எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் உன்னால் எரிகின்ற தசையின் மணத்தை உனது மூக்கிலிருந்து ஒருபோதும் அகற்றமுடியாது' என போரின் கொடும் நினைவுகளில் இருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாதிருப்பது பற்றிக் கூறியிருக்கின்றார். 


சாலிஞ்ஜர் ஆகக்குறைந்தது இன்னமும் பதிப்பிக்காத இரண்டு நாவல்களை எழுதியிருக்கின்றார் எனச் சொல்லப்படுகின்றது. 'There is a marvelous peace in not publishing ... I like to write. I love to write. But I write just for myself and my own pleasure' என பதிப்பிப்பதை விட எழுதுவதையே அதிகம் விரும்பிய சாலிஞ்ஜரின் புதிய நாவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவரலாம். அப்போது சிலவேளைகளில் இன்னொருவகையான சாலிஞ்ஜரை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் கூடும்.


மனிதர்களாகிய நாம் உதித்தும், மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலரையே இந்த உலகம் நினைவில் நீண்டகாலம் வைத்துக் கொண்டிருக்கின்றது. எழுத்தாளர்களாக இருக்கும் பலர் தனி வாழ்வில் வறுமையிலும் வேதனையிலும் உழலக்கூடும், ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலம் கடந்தும் பேசப்படும் ஆசிர்வாதத்தையும் இதே எழுத்தே அவர்களுக்கு மனமுவந்து அளிக்கவும் செய்கின்றது.


***********


(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)


கார்காலக் குறிப்புகள் - 27

Sunday, November 05, 2023


வாழ்க்கையில் கடினப்பட்டுத்தான் ஒவ்வொரு படியும் மேலே ஏற வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறியும் கொஞ்சம் நிதானமாக அதை இரசிக்கவிடாது, இன்னொரு கனவு கிளைத்தெழும் அல்லது திருப்தியின்மை படரும். இவ்வாறு எத்தனங்களால் எத்தனப்படாத‌ ஒரு நிதானமான வாழ்வு எப்போது அமையுமென்று நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. நண்பரொருவர் ஆறு வருடங்கள் இங்கிலாந்தில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முன் இந்தியாவில் சில வருடங்கள் கழித்தவர். அவருக்கு இந்நகர் பெரும் மூச்சடைப்பைத் தருவதாகச் சொன்னார்.

இங்கிலாந்தின் ஒரு புறநகர்ப்பகுதியில் நடந்தோ/சைக்கிளிலோ அவர் வைத்தியராகப் பணிபுரியும் வைத்தியசாலைக்குப் போகையில், அருகிலேயே குதிரையில் பயணித்தபடியும் அயலவர்கள் வருவார்கள் என்று அவர் சொல்லும்போதே அந்நகரின் அழகும், அதன் அமைதியான பின்னணியும் எளிதில் விளங்கியது. பெருநகர் வாழ்வென்பது பெரும்பாலும் நமது நுண்ணுணர்வுகளைக் கொன்றுவிடுகின்றது. மனதுக்குள் கனவுகளுக்குப் பதிலாக ஆயிரமாயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்க மனிதர்கள் இன்னுமின்னும் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வேலைக்குப் போகும் ரெயில் பயணங்களில் யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பவர்களையோ, புத்தகங்களை வாசித்தபடி தம்மை மறந்தவர்களையோ இப்போது காண்பது அரிதாகிவிட்டது. புத்துணர்ச்சி தரும் காலை வேளையாயினும் எல்லா முகங்களிலும் எதையோ தொலைந்துவிட்டதான கவலையின் ரேகைகள் ஓடுகின்றன. புன்னகைக்கும் விழிகள் எங்கேனும் தென்படாதா என்ற ஏக்கத்துடன் ரெயில் பயணங்கள் நிறைவடையும்.


ஸென்னை விளங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஸென் ஆசிரியர் எதையாவது சொல்லும் கணத்தில் அதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அதன் அர்த்தம் எப்போதைக்கும் நழுவிப் போய்விடும் என்பதற்கு ஸென் பல கதைகளை வைத்திருக்கிறது. மறைமுகமாக ஸென் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய மனதை இதனூடு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனச் சொல்லலாம்.

அவ்வாறு கணங்களில் நழுவிப்போகும் அர்த்தங்களைக் கொண்ட ஸென்னை அதன் சுவடுகள் எதுவுமில்லாத மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தும்போது ஸென் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். மேற்கிற்கு வந்த ஸென் ஆசிரியர்களில் முக்கியமானவரான ஸூசுகியிடம் ஒருமுறை 'ஏன் நீங்கள் ஸதோரியை (நிர்வாணம்) விளங்கப்படுத்துவதில்லை' எனக் கேட்கப்படுகிறது. அதற்கு ஸூசுகி 'என்னிடம் இருந்தால்தான் அதை விளங்கப்படுத்த முடியும், நிர்வாணம் என்னிடம் இல்லை, ஆகவே அதைப் பற்றிப் பேசுவதில்லை' என்கின்றார்.


ஞானமடைந்துவிட்டஸூசுகி ஏன் இப்படி நிர்வாணமடையவில்லை என்று சொல்கின்றார் என்பது பற்றி ஓஷோ பின்னர் விளங்கப்படுத்துகிறார். ஓஷோ தான் மாற்றமடைதல் (becoming) என்பது பற்றி பல இடங்களில் பேசினாலும் அது தவறான சொல் பிரயோகம் என்கின்றார். ஏதோ ஒன்றுக்காய் மாற்றமடையும் அல்லது உருமாறும் நாம் நம் இயல்பில் இருந்து இல்லாமல் போய்விடுகின்றோம் என்கின்றார். எதுவாகவோ இருக்கின்றோமோ அதுவே நாம். நாம் அதை விலத்தி வேறொன்றாக முயலும்போது நாம் இயல்பற்றவராகி விடுகின்றோம்.

ஒருவர் செல்வந்தராகஅதிகாரம்மிக்கவராக, கல்வி கற்றவராக மாற்றமடைய முடியும் ஆனால் ஒருபோதும் அவை எதுவும் ஒருவரின் இயல்பூக்கங்கள் அல்ல என்கின்றார். அதுபோலவே பரிநிர்வாணமடைந்த எவரும் ஞானத்தை தன்னகத்தை வைத்திருக்க அதுவொன்றும் 'பொருள்'அல்ல என்கின்றார் ஓஷோ. அதனால் ஷூகியிடம் ஏன் நீங்கள் ஞானமடைவதைப் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்பட்டபோது 'நான் ஞானமடையவில்லை, அதனால் பேச முடியவில்லை' என்கின்றார்.
ஞானத்தை ஒரு பொருளாக, தன்னிலிருந்து விலத்தி உருமாறுவதாக எண்ணிக்கொள்ளும் கொள்ளும் ஒருவரே தன்னை ஞானமடைந்தவராக முன்வைப்பார்.

ஸூசுகி கூட, 'நான் நிர்வாணமடைந்துவிட்டேன். என்னால் அனுபவங்களினூடாக அதைச் சொல்லமுடியாது. ஆனால் அது எளிதானது' என்று சொல்லியிருக்கமுடியும். அது ஞானமடைந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஸுடோ ஆசிரியர்கள் சொல்வது. ஸூசுகி ஞானமடைந்து விட்டவர், எனவே அவர் உண்மையைத்தான் சொல்வார். அதே வேளை தன்முனைப்ப்புக்களால் நிறைந்திருக்கும் மேற்குலத்தவர்க்கு, இப்படிச் சொன்னதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள கடினமாக இருந்திருக்கும் என்கின்றார் ஓஷோ. 


ஞானமடையும்போது முதலில் ஒருவரிடம் இல்லாமற் போவது 'நான்' என்பது. அந்த 'நான்' இல்லாமற் போகும் ஒருவர் பின்னர் 'நான் ஞானமடைந்துவிட்டேன்' என எப்படிச் சொல்லமுடியும். இந்த ஞானம் அடைதல் என்பது ஒரு நீர்த்துளியானது கடலில் போய்ச் சேர்வது போன்றதாகும். அப்படி கடலோடு கடந்துவிட்ட துளி, ‘என்னிடம் கடல் இருக்கின்றதுஎன்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அந்தத் துளியே கடல்தான்!

ஆகவேதான் 'நான்' என்பது இல்லாது போய் ஞானமடைந்துவிட்ட ஸூசுகியிடம் 'ஏன் ஞானமடைதல் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்படும்போது, நான் ஞானமடையவில்லை' என்று அந்தக் கேள்வியைக் கடந்து போகின்றார். மேலும் ஸென் 'ஞானத்தை அடைதல் அல்லது அதைத் தன்னகத்தே வைத்திருத்தல்' என்பதை தொடர்ந்து நிராகரித்தபடியே வருகிறது.

நான் ஆசிரியராகக் கொள்கின்ற ஸென் மரபில் வந்த திக் தியாட் ஹானும் ஞானமடைந்தவர்தான். ஆனால் அவரிடம் ஞானமடைதல் பற்றியோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கோ வேறு வகையாகத்தான் பதிலளிப்பார். 'இந்த உலகின் மிகப் பெரும் அற்புதம் என்ன‌' என்று அவரிடம் கேட்டால், 'இங்கே இரண்டு கால்களும் நிலத்தில்பட நடப்பதுதான் எனக்குப் பெரும் அற்புதமாக இருக்கிறது' என்று எளிய உதாரணங்களால் நம்மை வழிமறிப்பார். இதென்ன பெரிய அதிசயமா, தாய் நம்மை மடைமாற்றுகின்றார் என்று சலிக்காது, சிறிய விடயங்கள் என்று கடந்துபோகின்றவைகளில் இருக்கும் பேரதிசயத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொண்டால் நாம் நமக்கான அமைதியையும் மகிழ்ச்சியையும் சிலவேளைகளில் கண்டடையக்கூடும். அதைத்தான் என் ஆசிரியரான தாய் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

எத்தனங்கள் எதுவுமில்லாது நம் இயல்பிலே இருப்பது எவ்வளவு எளிதானது. ஆனால் எளிதுதான் மிகவும் கடினமாகவும் இந்த உலகில் இருக்கிறது. யேசு தண்ணீரில் நடந்தார் என்பதைவிட அவர் நிலத்தில் பாவப்பட்ட மக்களை இரட்சிப்பதற்காகப் பல்லாயிரம் மைல்களைக் கால்களால் நடந்தார் என்பதுதான் இயேசு செய்த சாதனை. புத்தர் நாற்பதில் ஞானமடைந்துவிட்டு, மேலும் 40 ஆண்டுகள் தான் அடைந்த அனுபவத்தை நமக்குப் போதிப்பதற்காய் இந்த உலகில் வாழ்ந்ததுதான் எனக்குப் பேரதிசயம்.

********

என் எண்ணங்களோடோ இதுவரை பயணித்த உங்களுக்கு மிக்க‌ நன்றி. உங்களுக்குரிய காலையோ அல்லது மாலையோ அல்லது நள்ளிரவோ எதுவாகினும் இனிதாகட்டும்.

இந்தக் குளிர்காலத்தில் எனது ரெயில் பத்திரமாக என்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது. இனி இன்னொருவனாக உருமாறும் எத்தனத்தோடு இந்தப் பெருநகரின் சுழல் வட்டத்துக்குள் செக்கு மாடு போல இழுபடுவேன்.

இதுவரை வாசித்த நீங்கள் கடைசிப் பந்தியையும் வாசித்துவிட்டு நம்மைப் போன்ற ஒருவன் எனச் சலித்துக் கொண்டால், நீங்கள் இன்னும் சின்ன விடயங்களின் பேரதியங்களைத் தவறவிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடும். கடைசிப் பந்தியை வாசித்துவிட்டும் உங்களின் உற்சாகம் குறையவில்லை என்றால் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வதற்கு நிறையவுண்டு.

*****

(Oct  16)

 

இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள்


வடகோவை வரதராஜன்:


எத்தனம்கள் எதுவுமின்றி எம் இயல்பில் இருப்பதுதான் எளிதானது மட்டுமல்ல .மகிழ்வானதும் கூட . எத்தனம்களை செய்யும் போது நாம் போலி முகமூடி அணிகிறோம் . அது எம் முகத்தை உறுத்துகிறது .இயல்பாக இருக்கிறவனுக்கு இந்த உறுத்தல் பெரும் கொடுமை

 

முருகேசு கனகலிங்கம்:


ஓஷோ வைப்பற்றிய குறிப்பிடல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.ஜென்,தாவோ,சூபி யிசம் பற்றியெல்லாம் அவர் நிறையப் பேசியிருக்கிறார்.இவையெல்லாம் நுண்ணிய மன அனுபவங்கள் தாம்.எவரோடும் விவாதிப்பதற்கு இவைகளில் எதுவுமில்லை.அவ்வாறு (கற்ற)--புரிந்துகொண்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரருகில் மௌனமாக அமர்ந்திருக்கவே என்னால் முடியும்.ஓஷோ வில் எனக்கு குறையுமுண்டு.உலகத்துத் தத்துவஞானங்களையெல்லாம் தேடித் தேடிக் கற்றிருக்கிறார்.ஆனால் தமிழின் பக்கம் அவர் தலை வைத்தும் படுக்கவில்லை.தமிழில் எண்ணற்ற ஞான நூல்கள் உள்ளன. பதினெண் சித்தர்கள், திருமூலர்,திருவள்ளுவர்,தாயுமானவர், பிற்கால ஞானிகள் பலரும் உள்ளனர்.அவை,அவருக்குக் கிட்டாத பொக்கிஷங்கள் என்றே நான் கூறுவேன்.ராமகிருஷ்ணரை,அரவிந்தரை,ரமணரை எல்லாம் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஞானச் செல்வம் அவருக்குக் கிட்டவில்லை. நல்லது, நன்றி.

 

சுகிர்தா இனியா:


சக மனிதர்களின் மீது இவ்வளவு வன்மத்தை ஏன் கக்குகிறார்கள்? ஒருவரை ஒருவர் ஏன் பிராண்டிக் கொள்கிறார்கள்? இத்தனை வெறுப்பை சுமந்து கொண்டு அலையும் மனம் எப்படி நிம்மதியாக நித்திரை கொள்கிறது என்றெல்லாம் நேற்று பொதுவாக எண்ணிக் கொண்டிருந்தேன். மனிதர்களிடமிருந்து வெளிப்படும் வன்மம் வாழ்க்கையின் மீது ஒரு அவநம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த முகப்புத்தகம் ஒரு இளைப்பாறுதல், ஒரு அடைக்கலம் என்று இங்கே வந்த எனக்கு இப்போதெல்லாம் இதுவும் சராசரி மனிதர்களின் கூடாரமே என்று தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் போலவே இங்கேயும் மனிதர்கள் அதே சராசரித்தனத்துடன் தான் இருக்கிறார்கள். மனிதநேயமே அசாத்தியம் ஆகிவிட்டதோ என்ற அச்சம் மேவுகிறது. ஒருவர் வெறுப்பைக் கக்கினால் அது சங்கலித் தொடர் போல எல்லோரையும் பற்றிக் கொள்கிறதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். 


மனிதர்கள் தங்களைக் குறித்தே இருக்கிற தங்களுடைய ஆற்றாமையையோ அல்லது தங்களுடைய இயலாமையையோ எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்றால் எதிர்ப்படுபவர்களை எல்லாம் இப்படி ஒரு நிமிண்டல் அப்படி ஒரு நோண்டல். இது அவர்களுக்கு எந்த வித திருப்தியை அளிக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து இங்கே இருந்தும் ஓடிவிடலாம் என்று எண்ணும்போது இந்தக் காலையில் இளங்கோவின் இந்தப் பதிவு ஆறுதலாக இருக்கிறது. வெளி உலகைப் போலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நமக்கானவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி இளங்கோ! தொடர்ந்து எழுதுங்கள்.

****************