கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் நடந்தது என்ன?

Saturday, December 31, 2022


லங்கையில் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருப்பவை பின்நவீனத்துவ காலகட்டத்துக்கான மிகச் சிறந்த உதாரணம். இதை எந்த மார்க்சியரும் ஒரு இடதுசாரிப் புரட்சி என்று முழுமையாக உரிமை கோரமுடியாது. மார்க்ஸியர்களின் பங்களிப்பு இருக்கின்றதென -அது எவ்வகையான போராட்டமாக இருப்பினும்- சொல்லமுடியுமே தவிர இது முற்றுமுழுதான இடதுசாரிப் போராட்டம் அல்ல என்பது எவருக்குமே எளிதாகப் புரியும்.


1968 இல் பாரிஸில் மாணவர்கள் போராடத் தொடங்கியபோது, சார்த்தர் போன்ற அறிவுஜீவிகள் அது ஒரு பெரும் புரட்சியாக மாறுமெனக் கனவு கண்டார்கள். ஆனால் அது அப்படியாக நிகழவேயில்லை. பின்னர் ஈரானில் கலாசாரப்புரட்சி நிகழ்ந்தபோது ஃபூக்கோ போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அதற்கு ஆதரவளித்தனர். அதுவும் நம்பியதற்கு மாறாக வேறொரு திசையில் சென்று முடிந்தது. அண்மையில் நடந்த அரபு வசந்தம் மிகுந்த நம்பிக்கையோடு முகிழ்ந்தபோதும் பின்னர் திசைமாறியதை அவதானித்திருப்போம்.

இலங்கையில் நடந்ததைப் போல மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமென என்னைப் போன்றவர்கள் நம்பிய occupy wall street ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம்பிக்கையுடன் நிகழ்ந்தபோதும், பணக்கார 1% வீதத்துக்கு எதிரான 99% க்கு ஆதரவாக நடத்தப்பட்டபோதும், எவ்விதப் பெரும் மாற்றங்களையும் காட்டாமலே முடிந்துபோனது. இந்தப் போராட்டங்களை ரொறொண்டோவிலும், லண்டனிலும் நேரில் பார்த்திருக்கின்றேன். முற்றுமுழுதான முதலீட்டிய நாடுகள் நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாது மிகக் கவனமாக இவ்வகைப் போராட்டங்களைப் பார்த்துக்கொள்ளும். நாசூக்காய் இவ்வகைப் போராட்டங்களை அவற்றுக்குக் கையாளவும் தெரியும். ஆனால் இந்தப் போராட்டங்கள் நடந்தபோது கைக்கொள்ளப்பட்ட பல விடயங்களையே GotaGoGama காரர்கள் உள்வாங்கியிருந்தனர் என்பது வெளிப்படையானது. ஒவ்வொரு போராட்டங்களும் அவை தோற்றவையாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்களை வைத்திருக்கவே செய்கின்றன.

ஆக இனியான மாற்றங்கள் இப்படியாக சடுதியாக நிகழுமே என்பதைத்தான் பின்நவீனத்துவமும் பின்நவீனத்துவவாதிகளும் எதிர்வு கூறியிருந்தனர்.

நமக்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டம் என்றாலும் லியோதார்த் 'பின்நவீனத்துவ நிலவரத்தை'ப் பற்றிப் பேசும்போது மார்க்ஸிசம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை நிராகரிக்கின்றார். அதற்கு முக்கிய காரணங்களாக தொழில்நுட்பத்தையும், வெகுசன ஊடகங்களின் பெருக்கத்தையும் (1970 இன் பிற்பகுதியில்) அவர் முன்வைக்கின்றார். அன்று லியோதார்த் எதிர்வுகூறியதை இன்றைய சமூகவலைக்காலத்தில் நடக்கும் போராட்டங்களினூடாகத் தெள்ளிடையாகப் பார்க்கின்றோம்.

நான் மிகவும் நெருக்கமாக உணரும் தெரிதா எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல என்று கூறிவிட்டு அருமையாக ஒரு விளக்கம் தருவார். எதிர்காலம் என்பது கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியது என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா.

தெரிதா சொல்வதற்கு நிகரான ஒன்றுதான் இப்போது இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பது. முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகையாக இந்தப் போராட்டம் நிகழ்ந்து, நவீன துட்டகைமுனுவாக சிறுபான்மையினரின் குரல்களை நசுக்கித் தங்களுக்கான மகாவம்சத்தை எழுதியவர்களை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சேர்த்து வீழ்த்தியிருக்கின்றார்கள்.

(ஒருகாலத்தில் மிக ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்த பின்அமைப்பியல்/பின்நவீனத்துவத்தைக் கற்பதிலிருந்து என்றோ விலகி வந்துவிட்டேன். ஆனால் இன்றும் எனக்கும் அவை நெருக்கமானவை. இலங்கைச் சூழலில் இப்போது நிகழும் மாற்றங்களை விளங்கிக்கொள்பவர்கள் இந்தப் பின்னணியோடும் ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட அவசரக் குறிப்பே இது)

*****************

(July 14, 2022)

அ.இரவியின் 'PKM என்கின்ற புகையிரத நிலையம்'

Thursday, December 22, 2022

 1.

அ.இரவியின் பெரும்பாலான படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அவர் என் தமிழாசிரியர் என்பதால் மட்டும் அல்ல, அவரின் சிறுகதைகளையும், பத்தியெழுத்துக்களையும் 'சரிநிகரில்' வாசிக்கத் தொடங்கிய என் பதினைந்து/பதினாறுகளிலேயே அவரென்னை வசீகரித்தவர். 'காலம் ஆகி வந்த கதை' அவரின் முக்கிய படைப்பென்பேன். 'பாலைகள் நூறு'க்கு விரிவாக என் வாசிப்பைப் பதிவு செய்திருக்கின்றேன். அவரின் '1958' முக்கியமான வரலாற்று ( 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அமுலாக்கத்தின் பின் வந்த இனக்கலவரம் ) நிகழ்வைப் பதிவு செய்கின்றதெனினும், அதில் துருத்திய சில சிக்கல்களையும் எழுதியதாகவும் நினைவு.


அண்மையில் வெளிவந்த 'PKM என்கின்ற புகையிர நிலையம்' என்கின்ற படைப்பை என்ன வகைக்குள் அடக்குவதென்று சற்றுக் குழப்பமிருந்தாலும் ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கலாமெனத் தோன்றுகின்றது. 


இது ராசா என்றழைக்கப்படுகின்ற சிறுவன் வயதுக்கு வரும் ஒரு புதினமெனச் சொல்லலாம் (coming of age). ஆனால் இதில் ராசா என்பவனின் குழந்தைப் பருவம், பதின்மம் ஆகுவதைக் கவனப்படுத்துவதை விட அவனின் மாமாவாகிய வாழ்க்கையே அதிகம் கவனப்படுத்துகின்றது. ஒருவகையில் இது அந்த மாமாவின் கதையெனத்தான் அடையாளப்படுத்த வேண்டும். பிள்ளைகளே இல்லாத அந்த மாமாவை தன் பிள்ளைகளைப் போல ராசாவின் மீதும், ராசாவின் சகோதரியின் மீதும் பாசம் காட்டுகின்றார். இந்தப் புதினம் எனக்குத் தெரிந்த கிராமங்களின் பின்னணியில்  எழுதபப்ட்டதால், என்னால் எனக்கு அறிமுகமான இடங்களின் வரைபடங்களைப் பிந்தொடருவதும் ஒருவகையில் சுவாரசியமாகவும் இருந்தது. 


ஒன்று எனது அம்மாவின் ஊருக்கு அருகிலிருந்த கீரிமலை. மற்றது நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இருந்த அளவெட்டி. எப்படி சிறுவயதில் செங்கை ஆழியானின் 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' வாசித்தபோது கதை நிகழ்வது எனக்குத் தெரிந்த வழித்தடங்களென ஒருவகை சிலிர்ப்போடு வாசித்தேனோ, அவ்வாறான ஒருவித நிறைவோடு இரவியின் இந்தப் புதினத்தையும் வாசித்தேன்.


ராசாவின் சின்னமாமா, அவர்  ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிற்பாட்டி, ரெயில் நிலையத்தில் வேலை செய்கையில் 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களத் திட்டத்தில் அரசாங்க வேலை இழப்பது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்த குடிக்கு அவர் அடிமையாதல், தன் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அதன் நிமித்தம் மனப்பிறழ்வுக்கு ஆளாதல் என அருமையான மனிதனின் வீழ்ச்சியை இந்தப் புதினத்தில் காண்கின்றோம். இந்தப் புதினம் அந்த மாமாவின் புறவயமான உலகை மட்டுமில்லை, இதில் வரும் மற்றப் பாத்திரங்களையும், கதை நிகழும் சூழல் பின்னணியையும் நுட்பமாக விபரிக்கின்றது. கீரிமலைக் கேணிக் குளியல்கள், யாழ்ப்பாணத்துக்குரிய பிரத்தியேக உணவு வகைகள் என்பவை சிலாகித்துச் சொல்லவேண்டியவை. ஆனால் இதன் சிக்கல் என்னவென்றால் எந்தவகையில் புறவயமாகக் கதை சொல்லமுயன்றதோ, அதேயளவுக்கு இது பாத்திரங்களின் அகவயத்துக்குச் செல்ல அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்பதேயாகும்.



2.


தமிழில் இப்போது விமர்சனக் கோட்பாடுகளில் ஒரு பகுதியாக இருக்கும் அழகியல் விமர்சனத்தையே ஒரு தனித்த விமர்சனமாகக் காட்டும் அபத்தம் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். அழகியலும் விமர்சனக்கோட்பாடுகளில் ஒரு பகுதியே தவிர அதுமட்டுமே படைப்புக்களைப் பார்க்க அளவீடாக இருப்பதில்லை. அதேபோன்று ஒரு சில பாத்திரங்கள் மட்டும் இருந்து ஒரு புதினத்தை எழுதிவிட்டாலே 'தட்டையானது' என்று சொல்கின்ற எரிச்சலான குரல்களையும் பார்க்கின்றோம். என் பார்வையில் 'தட்டையானது' எதுவெனில், வாசிக்கும் நம்மை நாவல்களிலிருக்கும் பாத்திரங்களுக்குள் ஒன்றிக்கவிடாது புறம்தள்ளிக் கொண்டிருப்பவற்றை என்பேன். 


ஈழத்து/புலம்பெயர் நாவல்களில் முக்கிய பலவீனமாகப் பார்ப்பது இப்படி நாம் புறவயமாகக் கதை சொல்லல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அகவயமான தேடல்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதாகும். இன்று ஒரளவு கவனம் பெற்ற புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கூட இதில் அதிக விதிவிலக்குகளல்ல. அவர்களில் சிலர் இந்தப் பலவீனத்தை தமது கச்சிதமான எழுத்து நடையில் கடந்து செல்ல முயற்சிக்கின்றனரே தவிர, இன்னும் அகவயமான கதை சொல்லல் முறைக்கு ஆழமாகச் செல்லவில்லை என்றே சொல்வேன். 


இதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கு நாம் நகுலனை, மெளனியை, லா.ச.ராவை வாசிக்கும்போது எளிதாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் நமக்குச் சொல்லும் புறவயமான கதைகள் மிகவும் சுருங்கியது. ஆனால் அகவயமான ஆழமான தேடல்களுக்கு அவர்கள் தம் பாத்திரங்களினூடாக நம்மை அழைத்துச் செல்கின்றார்கள். ஆகவேதான் அவர்கள் நமக்குப் பரிட்சயமற்ற சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு சென்றாலும், நமக்கு நெருக்கமான படைப்புக்களாக அவை இருக்கின்றன.  அதுவே, இன்றும் என்னைப் போன்ற அவர்களின் தலைமுறையைத் தாண்டிய பலரை அவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடி வாசிக்க வைக்கின்றது.  அவர்கள் காலத்தின் முன் இன்னமும் உதிராது புதிது புதிதாய் மலர்ந்தபடி இருக்கிறார்கள்.


இங்கே இரவியின் இந்தப்புதினம் சிறுவனின் அகவயமான எல்லாத் தேடல்களையும் புறவயமான நிகழ்வுகளில் மட்டும் கவனஞ்செலுத்திக் கடந்து போவதைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த மாமா என்ற பாத்திரத்திற்குள் உள்ளே இறங்காததால், அவரின் வீழ்ச்சியைக் கூட வாசிக்கும் நாம் இன்னொரு மூன்றாம் மனிதரின் சரிவாகப் பார்க்கின்றோமே தவிர, நம்மைப் போன்ற ஒருவரின் வாழ்வு இப்படி வீணாகிவிட்டதே என்ற கழிவிரக்கம் அவ்வளவு வராது தாண்டிப் போகின்றோம். இந்தப் புதினத்தில் அந்த மாமாவின் மீது அவ்வளவு காதலும், அதேசமயம் அவரின் வன்முறையைத் தாங்கியபடி இருக்கின்ற அந்த மாமி பாத்திரத்தை விரித்தெழுத எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அது தவறவிடப்பட்டிருப்பதும் கவலையானது.


இலக்கியப் படைப்புக்களால் ஆனாலென்ன, திரைப்படப் பிரதிகளாய் இருந்தாலென்ன, நம்மிடம் சொல்வதற்கு எண்ணற்ற கதைகள் -அதுவும் மூன்று தசாப்தகாலத்தை போருக்குக் காவுகொடுத்த- நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அதை எப்படிச் சொல்லப்போகின்றோம் என்பதும் எழுதுகின்ற/படைக்கின்ற நம்மெல்லோருக்கும் முன்னாலுள்ள சவால். அதையறியாதுவிடின், அதில் கவனங்கொடுக்காவிடின், நாம் அவ்வவ்ப்போது ஒன்றிரண்டு நல்ல படைப்புக்கொடுத்துவிட்டு வால் நட்சத்திரங்களாக மறைந்து விடுவோம் என்பதாகத்தான் ஆகிவிடும். சில படைப்புக்களை வாசிக்கும்போது அது எழுதியவர்களின் ஆன்மாக்களிலிருந்து விகசித்து எழுந்துவந்ததென்பதை  நாம் உணர்ந்து, சில கணங்களாவது அதை வாசித்து முடிக்கும்போது அப்படியொரு நிறைவு வந்து கண்களை மூடி யோசிப்போம் அல்லவா?  இன்று எண்ணற்ற படைப்புக்கள் வரும் சூழலில், அவை நிகழ்வது மட்டும் ஏன் அரிதாக இருக்கின்றது என்பது பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.


000000000000000


(Dec 22, 2021)

இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022


1.


கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?


எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச் சாத்தியங்களையும் கொண்டு வரும். ஆகவேதான் ஸென்னில் தொடர்ந்து தொடக்கநிலை மனதை (beginner’s mind) பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கற்றுத் தேர்ந்துவிட்ட ஒரு மனதிலிருந்து புதிதாய் எதுவும் முகிழ அவ்வளவு சாத்தியமிருப்பதில்லை. இளவேனில் காலத்துக்கான துளிர்கள் மெல்ல அரும்புவது, அந்தத் ‘தொடக்கநிலை’யை நமக்குக் காட்ட விரும்பும் இயற்கையின் குதூகலம் போலும். 


இதற்கு முன் அந்த அரும்புகள் மரத்தின் எந்தப் பாகத்தில் மறைந்து இருந்தன. இனி தளிராகி, குருத்திலையாகி, கடும்பச்சை நிறமாவதற்கான பச்சையத்தை இந்தத் துளிர்கள் எதில் ஒளித்து வைத்திருக்கின்றன.


இதைத்தான் இன்னொருவகையில் ஸென் ‘நாம் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை’ என்று சொல்கின்றது. இதை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்து வாசித்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை. நாம் பிறக்கும்போது அதுவரை எங்கோ ஒரு 'சூனியத்தில்' இருந்த ஒன்று உடல் என்கின்ற வடிவத்தைப் பெறுகின்றது. பின்னர் இறப்பின்போது மீண்டும் வெறுமைக்கு அல்லது சூனியத்துக்குத் திரும்பிப் போகின்றது. 


இல்லாமையிலிருந்து இருத்தல்களும், இருத்தல்களிலிருந்து இல்லாமைகளும் ஒரு வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதால் 'எதுவும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை' என்பதை, வார்த்தைகளின் எளிய அர்த்தத்தைத்தாண்டி, ஆழமாய் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதானதும் இல்லை.


2.


வழமையாக ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவிற்கு நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பவன், ஆனால் இப்போது பாலத்துக்குக் கீழே திருத்தும் வேலை நடப்பதால், அந்தப் பாதையை இடையில் மூடிவிட்டார்கள். வேலை ஒன்றை எப்படி இழுத்து இழுத்துச் செய்வதில் நமது நகரத்தார் புகழ்மிக்கவர்கள் என்பதால் எப்படியும் இந்த கோடையில் அதைத் திறக்க மாட்டார்கள் என்பது உறுதியென அவன் நினைத்துக்கொண்டான். மேலும் புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை சொன்னது மாதிரி, ‘எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை' என்பதால் இது குறித்து எந்தப் பொல்லாப்புமில்லை. ஆனால் நமக்களிக்கப்படும் வாய்ப்புக்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சந்தர்ப்பங்கள் மாறமுன்னர் அதையதை அனுபவித்துவிடும் விழிப்பு இருத்தல் முக்கியம். அனுபவித்தவற்றை விட, தவறவிட்டவைகளின் கழிவிரக்கத்தில் கழிந்த கடந்தகாலங்களை எண்ணி அவனுக்கு மெல்லிய சிரிப்பும் வந்தது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்குந்தான் எவ்வளவு பெரிய‌இடைவெளி!


நல்லவேளையாக கடந்த கோடையில் இன்னொரு மாற்று பாதையைக் கண்டடைந்துவிட்டதால், அடைபட்ட வழி குறித்து கவலைப்படாது புதிதாய்க் கண்டுபிடித்துவிட்ட தடங்களில் அவன் நடக்கின்றான். அங்கே பெருமரங்களும், மழைநீர் சேர்ந்து சலசலத்தோடும் சிற்றாறும் இருப்பதால் அது ஓர் அருமையான வழித்தடம். ஆகவே ஒரு பாதை அடைபட்டால் எல்லாம் முடிந்துவிட்டதெனக் கவலைப்படத் தேவையில்லை. வேறொரு வழி நாம் அதுவரை கண்டுணராத‌புதிய அனுபவங்களைத் தருவதற்காக திறபடலாம். 


இது பாதைக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும்.


நடப்பதற்கான ஒரு வட்டப்பாதையை வழமைக்கு மாறாக, நடந்து முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குகின்றான். அதே பாதை, ஆனால் வேறொரு கோணத்தில் பார்வைகள் மாறுகின்றன. முன்னர் ஏறவேண்டிய மேட்டு நிலம் இப்போது சரிவான பள்ளமாக‌-தேர்ந்தெடுத்த பாதையின் நிமித்தம்- புதிய அவதாரம் கொள்கின்றது. ஆக ஒரே பாதையில் நடந்திருக்கக் கூடியவர்கள், அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் திசையின் நிமித்தம் அதன் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும்போது, ஒருவர் தான் சொல்வது/பார்த்ததுதான் உண்மையென விவாதிப்பது எவ்வளவு தூரம் சரியான பார்வையென்பது கேள்விக்குரியதே. ஆகவேதான் ஸென், நல்லது, கெட்டது என எதையும் அடையாளப்படுத்த வேண்டாமெனச் சொல்கின்றது.  எதைக் காண்கின்றோமோ அதை அப்படியே பார்க்கச் சொல்கின்றது. எந்த லேபிள்களும் எதற்கும் ஒட்டாதிருக்கத் தெரிந்தவர்கள் மேன்மக்கள். 


ஒருவர் ஞானமடையத்தான் தியானம் செய்கின்றார் என்றால், அந்தக்கணத்திலேயே நிர்வாணம் அடைவதிலிருந்து அவர் விலகிப் போய்விடுவார் என திரும்பத் திரும்ப ஸென் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. 


மரங்கள் இன்னமும் முழுமையாகப் பசுமை போர்க்கவில்லை, ஆனால் பொன்மஞ்சள் நிறத் தளிர்கள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்களே இல்லாத பொழுது இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது. இன்னொரு வகையில் நாங்கள் எமது எல்லா 'பைத்தியக்காரத்தனத்தோடும்' தனிமையில்தான் இயல்பாக இருக்க முடிகிறது. நதி ஓடும் ஒலியை, அது உருவாக்கும் குமிழ்களை, வாத்துக்கள் பறந்து நீரில் சிறகுகள் நனைப்பதை என எல்லாவற்றையும் ஆறுதலாக அவதானிக்க அவனது மனதுக்குள் ஒரு வெம்மை பரவுகிறது 


வழமையாக நடக்கத் தொடங்கும் பாதையெனில் அங்கே ஒரு பெரும் சாம்பல்கல் இருக்கும். அதில் அமர்ந்தபடி நதியை இவன் பார்ப்பான். சிலவேளை அப்படியே விழிகளை மூடியபடி அமைதியில் அமிழ முயல்வான். ஒருநாள் இந்தச் சூழலில் அவ்வளவு காணமுடியாத ஒரு பச்சைப் பாம்பு அருகில் வந்து எட்டிப் பார்த்ததைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றான். பாவம் அந்தப் பாம்புதான் என்ன செய்யும். அதன் வசிப்பிடத்துக்கு மனிதன் ஒருவன் வந்து இடையூறு செய்தால் அது விநோதமாக வேடிக்கைதானே பார்க்கச் செய்யும்.


3.


'ஓநாய் குலச்சின்னம்' நாவலில் கால்நடைகளை மேய்த்தபடி புல்வெளிகளை அழியாமல் வைத்திருக்கும் நாடோடிகளுக்கு ஓநாய்கள் தெய்வத்துக்கு நிகர்த்தவை. ஒநாய்களைத் தேவையில்லாமல் கொன்றாலோ, பழிவாங்கினாலோ அவர்கள் டெஞ்ஞர் என்ற சொர்க்கத்துப் போகவே முடியாது. நாடோடிகளையும் அவர்களின் கால்நடைகளையும் அடிக்கடி காயப்படுத்திக் கொல்லும் ஓநாய்களுக்கே, தமது இறந்த உடல்களை இந்த நாடோடிகள் உண்ணக் கொடுக்கின்றனர். நன்றாக ஓநாய்களால் உண்ணப்படும் உடலே உடனே சொர்க்கத்துக்குப் போகும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவேதான் சீனக்காரர்களுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, என்றாலும் சிலபகுதிகளில் நாய்களைச் சாப்பிடுவார்கள் என்று இந்த மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடிகள் அறியும்போது, 'எப்படி உங்களால் நீங்கள் வெறுக்கும் ஒரு பிராணியை பிறகு உணவாகச் சாப்பிட முடிகின்றது' என்று கேட்கின்றனர். 


இப்போது எதிர்த்திசையில் நடந்துகொண்டிருப்பதால், ஆறு ஓடும் கரையில் இருந்து 'ஸென் மனம்; தொடங்குபவர்களின் மனம்' கேட்கத் தொடங்குகின்றான். எப்போது எதில் அவன் அமிழ்ந்து தன்னைத் தொலைத்தானோ சட்டென்று கட்டுக்கயிறு இல்லாது வந்த நாயொன்றால் விழித்தெழுகின்றான். நாய்களைப் பிடிக்கும், ஆனால் சிறுவயதில் பல நாய்களிடம் ஆறாத்தழும்புகளையெல்லாம் பெற்றுவிட்டாதால், எப்போதும் ஒரு பயம் அவனுக்கிருக்கும்.  அந்த நாயை வளர்ப்பவர் தூரத்தில் வர, அருகில் வரும் நாயை அரவணைப்பதா, இல்லை துரத்துவதா என்ற குழப்பமெழ, தகாதகர் கூறிய மத்தியபாதையே நல்லதென துரத்துவதைப் போல மெல்ல pet செய்து விடுகின்றான்.


'அந்த மனிதன் சும்மா தன்பாட்டில் இருக்கின்றான், அவனையேன் கஷ்டப்படுத்துகின்றாய், அன்பே' என்று நாயின் சொந்தக்காரர் சொல்லியபடி வருகின்றார். 'பரவாயில்லை' என இவன் சொல்கின்றபோது, 'இந்த நாள் அழகான நாள்' என்று சொல்லியபடி அவர் கடக்கின்றார். இவன் நினைவுகளில் மூழ்கின்றான். 'ஓநாய்குலச்சின்னத்தில்' நாடோடிகளின் வாழ்க்கையைக் கற்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் செல்லும் சீன மாணவன் ஒரு ஓநாயை,  குகையில் இருந்து குட்டியாக எடுத்து வளர்க்கின்றான். அதற்கு பால் கொடுக்க ஒரு நாயைத் தேர்ந்தெடுத்து, அதன் பிற குட்டிகளோடு இந்த ஓநாயையும் சேர்த்துவிடுகின்றான். நாய் எப்படிப் பால் கொடுத்தாலும் ஓநாய் தன்னியல்பை விடாது மூர்க்கமாகவே நடந்துகொள்ளும். 


ஆண் என்பதாலோ அல்லது தன்னியல்பாகவே வந்துவிட்ட மமதையோடு அவன் போனால் கூட, தம் நெஞ்சங்களைத் திறந்து அரவணைத்த காதலிகளை நினைத்துக் கொள்கின்றான். தானொரு ஓநாய்தான், ஒருபோதும் கருணையுள்ள நாயாக மாறமுடியாது அதில் சந்தேகமில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றான்.


4.


ஜப்பானிய தேநீர் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய Sen Rikyu, ஒவ்வொரு தேநீர் நிகழ்வின்போதும்,  தான் ஒவ்வொரு கணங்களிலும் இறந்து பிறப்பதாகச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவ்வளவு விழிப்புடன் அந்தத் தேநீர்க்கலையை நிகழ்த்தும் அற்புதம் பெற்றவர் அவர். தியானம் மூலம் வரும் விழிப்பும் இப்படி கணங்களில் இருந்து எழுவதேயாகும். இவ்வாறு கணங்களில் இருப்பையும் இறப்பையும் கண்டுணர்கின்ற Sen Rikyu, தன்னோடு சூழவிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தேநீர் விருந்தை இறுதியாகக் கொடுத்துவிட்டு தனக்கான தற்கொலையை நிதானமாகச் செய்து கொளகின்றார். ஒவ்வொரு கணங்களில் இருப்பையும், இறப்பையும் கண்டுணர்ந்தவர்க்கு, உடல் நீங்கிச் செல்லல் அவ்வளவு கடினமாக இருக்காது போலும்.


அவன் நடந்த தன் வட்டத்தைப் பூர்த்தி செய்யும் இடத்துக்கு வந்தபோது, நாயோடு எதிர்த்திசையில் போனவரை மீண்டும் சந்திக்கின்றான். எதிர்த்திசை என்றாலும் வட்டம் உங்களை மீண்டும் சந்திக்க வைக்கும். நல்ல மழை பெய்ததால் உலாப்போகும் பாதை பல இடங்களில் சகதியாக இருந்ததை அவன் ஏற்கனவே அவதானித்திருந்தான். நாயோடு வந்தவர், ‘நான் வந்தவழியில் சறுக்கிவிழுந்துவிட்டேன், நீ கவனமாக நடந்துபோ என்று தனது சேறு அப்பிய ஜீன்ஸைக் காட்டுகின்றார். ‘கவனமாக நடப்பேன், எச்சரித்தமைக்கு நன்றி’யென அவருக்கு விடைகொடுத்து நகர்கின்றான்.


வீட்டுக்கு வந்தவுடன் பின் வளவில் நேற்று சிறுதளிராக இருந்த மரத்தில் இருந்தவை அனைத்தும், பொன்மஞ்சள் சிற்றிலைகளாக‌விரிந்து காற்றில் அசைவதை ஒருநாளில் நடந்துவிட்ட அற்புதமென நினைக்கின்றான். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது பின்னிரவில் ஆஸ்மா தொந்தரவு செய்கின்றது. தலையணைகளை முதுகில் வைத்து நிமிர்ந்து இருந்தால் கொஞ்சம் சுகமாகவிருக்கும். ஆனால் இதுவும் ஓர்நாளில் சட்டென்று நடந்துவிடக் கூடியது நிகழ்வுதான். ஒவ்வொரு கணத்திலும் இறப்பும் இருப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தால் இதையும் சகித்துக் கொள்ளலாம். ஓர் அழகான நாளைப் போல இதுவும் கடந்துபோகும்.


ஒருபோதும் தம்மை வந்தடையும் பாதைகளை மூடிவிடாத காதலிகளின் கருணையின் பொருட்டும், இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!


****************


(நன்றி: "அம்ருதா" -மார்கழி, 2022)


கே.ஆர். மீராவின் 'கபர்'

Thursday, December 15, 2022

தமிழில் - மோ.செந்தில்குமார்


 'கபர்' மிகச் சிறிய நாவல். குறுநாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஏழு அத்தியாயங்களே உள்ள ஒரு புனைவு. எனினும் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதிக பாய்ச்சல்களை ஏற்படுத்தும் என்று நம்பிய மாய யதார்த்த கதைகள், பின்னர் மொழியை மட்டும் கடுமையாக்கி பாவனைகளைச் செய்யச் தொடங்கியபோது அது எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை. ஆனால் மலையாளத்தில் அந்தவகை எழுத்துக்களுக்கான இடம் இன்னுமிருக்கின்றது போலும். மிகக் குறைந்த பக்கங்களில் கூட ஒரு மாய யதார்த்தப் புனைவைச் சொல்ல முடியும் என்பதற்கு கே.ஆர்.மீராவின் இந்த நாவலை உதாரணமாகச் சொல்லமுடியும்.

பாவனா என்கின்ற நீதிபதியின் முன்,விற்கப்பட்ட ஒரு காணியில் இருக்கும் கபரை இடிப்பதற்கான தடை செய்வதற்கான வழக்கு வருகின்றது. அதிலிருந்து பாவனா என்கின்ற் நீதிபதியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகின்றது. ஒரு கபரிலிருந்து வரலாறு பின்னோக்கி நகர்கின்றது. யதார்த்தத்தில் நடக்கவே முடியாத பல விடயங்கள் நிகழத்தொடங்கின்றன.

கே.ஆர்.மீரா
இவ்வாறு வழக்கு நடக்கும்போது பாவனாவின் குடும்பக் கதைகள் சொல்லப்படுகின்றன. பாவனாவின் குடும்பத்தில் 'தாரவாடு' என்று அழைக்கப்படும் தாய்வழி கூட்டுக் குடும்பங்களில் தலைவர் ஒருவர் எப்போதும் இருப்பார். அவர்களின் வீட்டில் அப்படியான 'காரணமானவர்' யாரும் படுத்த படுகையாகக் கிடந்து சாவதில்லை என்பது ஜதீகம். வயதாகிவிட்டது என்று அவர்களுக்குத் தோன்றும்போது குடும்பப் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு காசிக்குப் புறப்பட்டுவிடுவார்கள். அவர்கள் போகும்வழியிலோ அல்லது காசிக்குப் போய் கொஞ்சக்காலம் இருந்துவிட்டோ இறந்துவிடுவார்கள். அப்படிப் போனவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பதால் யாருக்கும் இந்தக் குடும்பங்களில் நீத்தார் கடன் செய்வதில்லை.
இப்படியான காசிக்குப் போகும் மரபில் யோகீஸ்வரன் மாமா என்கின்ற ஒருவர் மட்டும் காசிக்குப் போய்விட்டு 5 வருடங்களில் திரும்பிவருகின்றார். அவர் திரும்பிவரும்போது தனியே வரவில்லை. இரண்டு பெண்பிள்ளைகளையும் கூட்டிவருகின்றார்.
அந்த யோகீஸ்வரனை அவரின் மூத்த மருமகன் நுட்பமாகக் கொலை செய்தார் என்றும், இல்லை அவர் தடுமாறிக் கீழே விழுந்து இறந்தார் என்றும் வெவ்வேறு ஜதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான யோகீஸ்வரன் மாமாவுக்கும், இப்போது சமகாலத்தில் வழக்கு வந்த இந்த இஸ்லாமியர்களின் கபருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த நாவலின் மைய முடிச்சு.

ந்த ஜதிகக் கதை/வழக்குகளுக்கிடையில் பாவனாவின் சமகால வாழ்க்கையும் சொல்லப்படுகின்றது. அவர் திருமணம் செய்த பிரமோத், இவர்களுக்கு ஒரு ADHD குழந்தை பிறந்தபின் விலத்திச் போய்விடுகின்றார். தனித்த ஒரு தாயாக இருந்த இந்த ADHD குழந்தையை வளர்க்கும், சமாளித்து தன் நாளாந்தங்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தனித்த வேலை செய்யும் தாயின் அவதிகளையும் மீரா அவ்வளவு தத்ரூபமாக எழுதிச் செல்கின்றார். சாதாரணமாக ஒரு தனித்த தாயாக இருந்து பிள்ளையை வளர்ப்பதென்பதே கடினமாக இருக்கும்போது ஒரு ADHD குழந்தையையும் வளர்ப்பதென்பது வாசிக்கும் நமக்கு ஒவ்வொரு பொழுதும் நினைவூட்டப்படுகின்றது.

இத்தகைய அவதிக்கிடையில் பாவனாவின் கணவர் பிரமோத் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கான அழைப்பிதழை பாவனாவின் பெற்றோருக்கு அனுப்புகின்றார். அது ஒருவகை உளைச்சலை பாவனாக்குக் கொடுத்தாலும், அந்தத் திருமண நிகழ்வுக்கும் - எப்படியென்றாலும் தன் மகன் நாளை தன் தகப்பனையும் அவர் திருமணம் செய்த பெண்ணையும் சந்திக்கவேண்டியிருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் - அந்த நிகழ்வுக்குப் போகின்றார்.
இன்றைக்கும் தமது முன்னாள் காதலிகள்/மனைவிகள் இன்னொரு வாழ்விற்குள் நுழையும்போது, எவ்வளவு கொடுமைகள்/துன்பங்களைக் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுக்கும் பெரும்பாலானவர்களாய் ஆண்கள் இருக்கும்போது, அவர்களைப் போன்றவர்கள் பாவனா இந்த விடயங்களை எவ்வளவு நிதானமாக -அதன் அத்தனை துயரங்களோடும்- எதிர்கொள்கின்றார் என்பதை மீராவின் எழுத்தினூடாக நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.
இறுதியில் இந்தக் கபர் வழக்கு தள்ளிவைக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த 'கபர்' அங்கே இருப்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை என்பதால் வழக்கு நிராகரிக்கப்படுகின்றது.
வழக்கைப் பதிவு செய்த வாதியான காக்கசேரி கயாலுதீன் தங்ஙள் எப்படி மாந்தீரிகம் செய்து பாவனாவின் மனதை வாசிக்கின்றார் என்பது மிகச் சுவாரசியமானது. ஒருகட்டத்தில் அவரிடமிருந்தே மெல்ல மெல்லமாக கயாலுதீன் தங்ஙளின் மனதை வாசிக்கும் நுட்பத்தை பாவனாவும் கற்றுக் கொள்கின்றார். அது ஒருவகையில் பறக்கும் கம்பளங்களில் விரிந்து செல்லும் உலகாக, கயாலுதீன் தங்ஙள் முத்தம் தருகின்ற காதலானகவும் பாவனாவுக்கு மாறுகின்றார்.
இறுதியில் வழக்கு வேறுவிதமாகப் போனாலும், பாவனா தன் 'தாரவாடு' வம்சத்தின் யோகீஸ்வரன் ஏன் காசியிலிருந்து திரும்பி வருகின்றார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார். காசிக்குப் போய் மோட்சமடையாமல் யோகீஸ்வரன் திரும்பி வருவதற்குக் காரணம், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்பதாலேயாகும். அவரோடு வரும் பெண்கள் அவருக்குத் துணை புரிய வருகின்ற இரு ஜின்கள் என்பதை நாவலில் சொல்லாமலே நாம் புரிந்துகொள்கின்றோம்.
அந்தக் கபர் என்பது உண்மையிலே யோகீஸ்வரன் மாமா புதைக்கப்பட்ட இடம். அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது விபத்தாலோ இறந்ததோரோ என்னவோ, ஆனால் அவர் இரகசியமாகப் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அந்தக் குடும்பத்து பெண் ஒருத்தி அன்றைய கேரள ராஜாவிடம் முறையிடுகின்றார். யோகீஸ்வரன் மாமா குழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு ஒரு இஸ்லாமியரைப் போல இந்த அடையாளமில்லாத 'கபரு'க்குள் புதைக்கப்பட்டிருக்கின்றார் என்பதே நிகழ்ந்திருக்கின்றது.
அப்படியெனில் எதற்காக காக்கசேரி கயாலுதீன் தங்ஙள், தங்கள் பரம்பரையின் கபர் இதென்கின்றார். அதற்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. நாவலை வாசித்துப் பாருங்கள்.
இவ்வளவு குறைந்த பக்கங்களுக்குள் (100) ஒவ்வொரு அத்தியாயங்கள் தோன்றும் வியப்புத் தோன்றும் சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை மீராவினால் இப்படி எழுத முடிகின்றதே என்பதையே இந்த நாவல் முடிந்த பின்னும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

******************

(Oct 16, 2022)

மெக்ஸிக்கோ - தேவகாந்தன்

Wednesday, November 30, 2022


2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக கதையில் அறிமுகமாகும் மனநல வைத்தியர் ஆகிய நான்குமே நாவலின் பிரதான பாத்திரங்கள். 'நா'னும் 'அவ'ளும் நிறையவே ஓவியம், கவிதை, படைப்பெனப் பலவும்பற்றி , மிகவும் அறிவுஜீவித்தனமாகப் பேசிக் கொள்கின்றார்கள், தாம் வாசகரிடத்தில் போலியாகிக் கொண்டிருப்பதான பிரக்ஞையின்றி.


இந் நாவல் இரண்டு வாசிப்பு முறைகளைச் சாத்தியமாக்குகிறது. ஒன்று, மெக்ஸிக்கோவிலும் கனடாவில் கிங்ஸ்டனிலும் களிநிலை கொண்டலையும் பாத்திரங்களில் அழுந்திவிடும் வாசிப்பு; அது ஒருவகை வாழ்க்கையை வாசகரிடத்தில் தரிசனமாக்கும். மற்றது, அந்த அறிந்தனபோல் தோன்றும் பாத்திரங்களை மறந்துவிட்டு, அவர்களது உரையாடல்கள் வழி விரியும் கட்டுப்பாடற்றதும் அறிவார்த்தமானதுமான தனிவாழ்க்கையையும் அகவுலக வெளியையும் கவனமாக்கும் வாசிப்பு. இவை வேறுவேறு வழிகளினூடான அனுபவங்களை வாசகருக்குத் தரவல்லவை.

2012 இல் வெளிவந்த குறமகளின் 'மிதுனம் ', கனடாவில் வயது முதிர்ந்தோர் வாழ்வில்லத்தில் தனியாய்த் தங்கும் இலங்கை மூதாட்டியின் தனித்துவமான கதையை ‘மெக்ஸிக்கோ' போல் எடுத்துரைக்கும் நூல்தான். ஆனால் 'மிதுனம்' கதையாய்த் தேங்கிப்போக, தனிவாழ்வின் நாவலாய் நிமிர்ந்தது 'மெக்ஸிக்கோ'.

(நன்றி:தேவகாந்தன்
நூல்: இலங்கைத் தமிழ் இலக்கியம், ப161-162)

மொழிவது சுகம் - நாகரத்தினம் கிருஷ்ணா

Monday, November 21, 2022


'முள்ளிவாய்க்கால்' சிறுகதை, 'அம்ருதா' இதழ் நவம்பர் 2021


இளங்கோ என்கிற இளம் எழுத்தாளரின் சிறுகதை, பெயர் ‘முள்ளிவாய்க்கால்’. இளம் எழுத்தாளரில்லையா ஆதலால் இதொரு காதல் கதை.

கனடாவில் இருந்துகொண்டு, இலங்கை திரும்பும் எழுத்தாளர் தன் வாசகியைச் கொழும்பில் வைத்து சந்திக்கிறார். சந்திக்கிற வாசகித் தோழி தனது பதின்வயது காதலையும் அது பரிணாமம் பெற்றதையும், அதன் முடிவையும் நம்முடைய எழுத்தாளரிடம் பகிர்ந்துகொள்கிறார். சில தமிழ்ச் சினிமா காதல் அம்சங்கள் சிறுகதையில் இருந்தாலும் நண்பர் எளிமையாக அழகாக அலங்கார வார்த்தைகளின்றி சிறுகதையைச் சொல்லி இருக்கிறார். அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த ஒரு நல்ல சிறுகதை.

ஈழப்போர் முடிவுக்குவந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. பலிகொண்ட ஒரு இலட்சம் உயிர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், முள்ளிவாய்க்காலை அத்தனைச் சுலபமாக நாம் மறந்துவிடமுடியாது. துப்பாக்கி ஏந்திய ஒரு தலைமுறை தமிழரின் குருதி நனைத்த வரலாற்றின் பக்கங்களை மறப்பது அத்தனைச் சுலபமா என்ன?

சாதியென்றும், மதமென்றும் பிரிந்து எப்போதும் ஏதேனும் ஒன்றை முன்னிருத்தி சக்களத்திச் சண்டையைத் தெருச் சண்டையாக அரங்கேற்றி விளம்பர வாய்ச்சவடாலுக்கு வார்த்தைகளைத் தேடவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது. நேரம் கிடைத்து, அறச்சீற்றத்திற்குத் தெம்புவேண்டி பாருக்குள் நுழைந்தால், இளங்கோ போன்று ஒரு சிலர் ‘முள்ளிவாய்க்கால்’ என முணுமுணுக்கின்றனர்.

கனடாவில் புலபெயர்ந்து வாழும் எழுத்தாளரிடம், தற்போது கொழும்பில் இடம்பெயர்ந்து வாழும் இளம்பெண் மேலே குறிப்பிட்டதுபோல தம்முடைய காதல், அரசுக்கு எதிரான இயக்கத்தின் எழுச்சி, அதில் அவள் காதலனின் பங்கேற்பு, எதிர்பாராத விதமாக தனது பள்ளிக்காதலியை மூன்று நான்குமுறை சந்திக்க நேர்ந்த காதலன் (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக தன் இரத்தத்தில் நனைத்து எழுதிய காதற்குறிப்புகளை கவனமுடன் காதலியிடம் கொடுத்து, தற்போதைக்குப் பிரித்துப் படிக்கவேண்டாம் என்ற வேண்டுதல் வைத்தவன்) தனது காதலை வெளிப்படுத்துவதே இல்லை.

ஆக இச்சிறுகதை, ஒர் இளம்பெண்ணின் கைகூடாத காதல், யுத்தகாலத்தில் அவளைச் சந்திக்கிற தருணங்களில் காதலன் காட்டும் அசாதாரண மௌனம், அது விஷயமாக புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரும், நிறைவேறாத காதலுக்குச் சொந்தக்காரியான இளம்பெண்ணும் எழுப்பும் அனுமானங்கள் சிறுகதைக்கு அழகூட்டுகின்றன.

ஒருவகையில் இச்சிறுகதையில் ஆடையற்ற வார்த்தைகளைக் கொண்டு முள்ளிவாய்க்கால்ப் பேரிழப்பின் இருண்ட சரித்திரத்தில் ஏதோ ஒன்றை நினைவூட்ட தீக்குச்சியை உரசுகிறார் ஆசிரியர், வாழ்த்துகள்.

*************
நன்றி: நாகரத்தினம் கிருஷ்ணா

பிரமிளா பிரதீபனின் 'விரும்பித் தொலையுமொரு காடு'

Sunday, November 20, 2022


ண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு நண்பர் அண்மையில் இங்கே (இலங்கையில்) வெளிவந்த நூல்களை நூற்றுக்கு மேலே நான் தரவுகளாக வைத்திருக்கின்றேன், ஆனால் யாரெனும் கேட்டால் அவற்றிலிருந்து ஒரு 10 நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கக் கடினமாக இருக்கின்றதென்றார். இலங்கையில் இருந்து எழுதுபவர்களின் நூல்களைப் பற்றிய என் வாசிப்பென்பது மிகவும் குறுகியது. இருந்தும் ஒரு சிலரின் நூல்களைச் சொல்லலாம் என்று உடனே எனக்கு ஞாபகம் வந்த ஒருவரின் பெயரைச் சொன்னேன். அதை மூன்றாவதான இன்னொரு நண்பர் தன்னை இந்தப் படைப்பாளி ஈர்க்கவில்லை என மறுத்துச் சொன்னார். ஆனால் அந்த உரையாடல் பிறகு வேறெங்கோ இழுபட்டு பொதுச்சூழலில் அதிகம் விவாதிக்கப்படும் எழுத்தாளர்களின் படைப்புக்களை விவாதிப்பதாக அது திசைமாறியது.  நம் ஒவ்வொருத்தரின் விருப்பப்பட்டியலில் இருக்கும் பத்து இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பேசும் அந்த அரிய சந்தர்ப்பம் பின்னர் அம்மாலையில் நழுவிப் போயிருந்தது.


அப்போது நான் சொன்ன படைப்பாளி பிரமிளா பிரதீபன். அவரது அண்மைக்காலக் கதைகளைத்தான் நான் வாசித்திருந்தேன். பின்னர் இலங்கையில் கையில் கிடைத்த அவரது தொகுப்பான 'விரும்பித் தொலையுமொரு காட்டை' இப்போது முழுதாக வாசித்தபோதும், உதிரிகளாய் அவரின் கதைகளை வாசித்து நான் கண்டடைந்த வாசிப்பு அனுபவம் சரியானது என்பது இன்னும் உறுதியாயிற்று.


இலங்கையில் இருந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய படைப்பாளியாக பிரமிளாவை நான் சிறுகூட்டமாய் இருந்த நண்பர்களுக்குச் சொன்னதை இப்போது பொதுவிலும் முன்வைப்பேன். இத்தொகுப்பில் 11 கதைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது 5 கதைகளை எடுத்து விரிவாக நாம் பேசுவதற்கான ஆழமும், வெளியும் இவற்றில் இருக்கின்றன. இலங்கையில் இருந்து எழுதும்  - முக்கியமாய் பிரமிளாவுக்கு முந்தைய தலைமுறையினர்- பலரைப் போல  நேரடி யதார்த்தப்பாணியில் எழுதுவதை முற்றிலுமாக விலத்தி, ஒரு கனவு தன்மையில் இருந்து பிரமிளா பல கதைகளைச் சொல்வது என்னை வசீகரிக்கச் செய்திருந்தது. 


சில கதைகளில் வான்கோ, ப்ரைடா, டாலி ('ஜில் ப்ராட்லி'),  க்ளாட் மொனே ('கமீலோ டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள்') போன்றவர்களை அழைத்துக் கொண்டது மட்டுமின்றி,  கதையின் பாத்திரங்களின் பின்னணியில் இவர்களைத் துருத்தலின்றி இயல்பாகவும் கொண்டுவரவும் செய்கின்றார் என்பது பிடித்திருந்தது. ஒரு கதை, அந்தக் கதைக்குள் வேறு கதைகள்/உசாத்துணைகள் என்று வாசகர்களை அலைந்து பார்க்க வைக்கும் இன்னுமின்னும் வெளிகளை பிரமிளாவின் கதைகள் பெருக்கியபடி இருக்கின்றன.


அத்துடன் அவரின் கதைகளில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் விளிம்புநிலை மனிதர்களாக இருந்தாலும் பரிதாபத்தை வேண்டாது தங்கள் கதைகளை/நிலைகளை நமக்குச் சொல்கின்றன. 'உரப்புழுக்கள்' கதையில் வரும் சுரேகா, தனது கையாலகாத கணவனின் நிலையை வெறுத்து ஒருகட்டத்தில் தோட்ட முதலாளியின் சீண்டல்களுக்கு தன்னை ஒப்புவிக்கின்றார் என்றால், அதேபோல நிலையில் 'அல்லிராணி' கதையில் வரும் அல்லிராணி தன் குடிகார/பாலியல் வன்முறை செய்யும் கணவனை நுட்பமாகக் கொல்வதுவரை செல்கின்றார். ஆக ஒரு பெண் பாத்திரம் தனக்குரிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றியும் தகவமைத்தும் அவ்வளவு வன்முறை/பாலியல் சுரண்டல்களுக்கும் இடையிலும் தொடர்ந்து வாழும் நம்பிக்கையை வெவ்வேறு தளங்களில் பெறுவதையும் நாம் காண்கின்றோம்.



பிரமிளாவின் கதைகளில் நான் முக்கியமாய் அவதானித்தது, ஏற்கனவே இவ்வாறான பின்னணியில் கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும், அவர் இந்தப் பின்னணியை வேறு விதமாக அணுகிப் பார்க்கின்றார் என்பதேயாகும். அத்துடன் அவருக்கு இந்தத் 'தெரிந்த' விடயங்களைச் சுவாரசியமாக சொல்லும் ஒரு மொழியும் இயல்பாய் அமைந்திருக்கின்றது. 


கடந்தமுறை இலங்கைக்கு வந்தபோது ஒரு எழுத்தாளரின் கதைத்தொகுப்பு ஒன்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அதை ஆவலுடன் வாங்கி வாசித்தபோது இப்படி நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகளையா இவ்வளவு விதந்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று யோசித்தேன். அவ்வளவு எளிமையான கதைகள்; வாசிப்பவரை மேலும் யோசிக்காமல் எல்லா வெளிகளையும் அடைத்து விட்ட தொகுப்பு அது.



அவ்வாறான ஒரு தொகுப்போடு பிரமிளாவின் இந்தத் தொகுப்பை ஒப்பிடும்போது நாம் இரண்டுக்குமிடையிலான வித்தியாசங்களை அறிந்துகொள்ளலாம். இந்தத் தொகுப்பில் வரும் பெண் பாத்திரங்கள் நிறையவே கனவு காண்கின்றார்கள். குடிகாரக் கணவன்களிடம் இருந்து அல்லாடுகின்றார்கள். சிலவேளைகளில் தாம் வாழும் வாழ்விலிருந்து தப்பிப் போகமுடியாது என்று உணர்ந்தாலும் அதற்குள் இருந்து தம்மை விடுதலை செய்து பார்க்கும் ஆவலில் சிறு முயற்சியையாவது செய்து பார்க்கின்றார்கள் அல்லது ஆகக்குறைந்தது தமது கனவுகளிலாவது தப்பிப் போகப் பார்க்கின்றார்கள். சர்ரியலிசம் பற்றியும், தால்ஸ்தோவ்ஸ்கி பற்றியும், டாலி குறித்தும், முக்கியமாக காமம் குறித்தும் அறிவுஜீவித்தனமின்றி உரையாடுகின்றார்கள்/ நிகழ்த்திப் பார்க்கின்றார்கள்.


இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஒரு அரசமரமும் சில வெளவால்களும்', 'இது புத்தனின் சிசுவல்ல' வேறு தளங்களில் நிற்கும் கதைகளாக தம்மை ஆக்கிக்கொள்கின்றன. அதுபோல 'நீலி'யும், 'விரும்பித் தொலையுமொரு காடும்' ஒரு கட்டுரையாகிவிடும் ஆபத்தும் இருக்கின்றன.  அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களின் உள்ளக்கிடக்கையை பதிவு செய்யும் விருப்பம் அதிகம் பிரமிளாவுக்கு இருந்தபோதும், அந்த உளப்பதிவு கட்டற்றதன்மையில் நிகழவிடாது நிறுத்திவிடும் தவிப்பும் இந்தக்கதைகளில் வெளிப்படும்போது அது தன்னியல்பிலே நிகழாது விடுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  மேலும் ஒரு தொகுப்பில் பரிசோதனைகளைச் செய்துபார்த்த கதைகள் என்று இவற்றை எடுத்துக் கொண்டு, நாம் கடந்து போய்விடலாம்; அஃதொரு பிரச்சினையுமில்லை.


அதேவேளை, சமகாலத்தில் ஒற்றைத்தன்மைக்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ளாதும், வாசகருக்கு கதைகளை வாசித்துமுடித்தபின்னரும் மேலும் சிந்திப்பதற்கான வெளிகளைக் கொடுத்தபடியும், மொழியை வசீகரமாய் வெளிப்படுத்தியபடியும் கதைகள் எழுதும் பிரமிளாவை இன்றைக்கு தமிழ்ச்சூழலில் ஒரு கவனிக்கத்தக்கதொரு படைப்பாளியாக முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை.


********


(Oct 11 ,2022)

சாந்தனின் 'சித்தன் சரிதம்'

Thursday, November 17, 2022


சாந்தன், எங்கள் வீட்டு நூலகத்திலிருந்த 'ஒரே ஒரு ஊரிலே' என்ற நூலின் மூலந்தான் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது எனக்கு 11/12 வயதாகியிருக்கக் கூடும். எனவே அந்த வயதுக்குரிய விளங்கா வாசிப்பினூடாக அவரைக் கொஞ்சம் வாசித்திருந்தேன். பொறியியலாளராக கட்டுப்பெத்தையில் கல்வி கற்று, கொழும்பில் வேலையும் செய்த சாந்தன் 1977 இனக்கலவரத்தோடு யாழுக்குத் திரும்பினார். அதன்பிறகு யாழை விட்டு  இன்றும் வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றபோதும், அன்றைய சோவியத்து ஒன்றியம், கென்யா போன்றவற்றுக்குப் போயிருக்கின்றார். அந்தப் பயண அனுபவங்களை விரிவாக எழுதி நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார். யாழில் நடைபெற்ற என் புத்தக வெளியீடொன்றுக்கும் வந்திருந்தவர்.


'சித்தன் சரிதம்' என்பது நாவலெனச் சொல்லப்பட்டாலும் அது இன்னொருவகையில் சாந்தனின் auto fiction என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். சித்தன் என்ற பாத்திரத்தினூடாக அவரின் அரிவரி வகுப்பிலிருந்து யாழ் வெளியேற்றம்/மீள் குடியேறுதல் வரை கிட்டத்தட்ட ஒரு 50 வருடங்களில் தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார்.


அதை அவர் பாலன்/விடலை, காளை, முதுமகன் என்ற மூன்று பாகங்களாகச் சொல்கின்றார். பாலன்/விடலைப் பருவம் இந்த நாவலின் அரைவாசிப்பங்கை எடுத்துக் கொள்கின்றது. அப்புவெனப்படும் பரியாரியின் மரணத்தோடு அந்தப் பகுதி முடிந்துகொள்ள காளை என்கின்ற பகுதி இரண்டாம் பகுதி தொடங்குகின்றது. காளையின் பருவம் சித்தன் தன் மனைவியோடு கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் 1977ம் இனக்கலவரம் வர, யாழுக்கு தப்பியோடுவதுடன் முடிகின்றது. மூன்றாம் பருவமாகிய முதுமகனில் இயக்கங்களின் எழுச்சி, இந்திய இராணுவத்தின் வருகை என்பவற்றை மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், யாழின் 1995 இடம்பெயர்வு பற்றி நிறைய விபரிக்கப்படுகின்றது.

இந்த 50 வருடக் காலத்தில் இலங்கையில் முக்கியமாக யாழ் மண்ணில் நடக்கும் அரசியல் மாற்றங்களை மேலோட்டமாகவும், அதைவேளை தனிமனிதர் ஒருவரை அது எப்படி பாதிக்கின்றதென்பதை ஆழமாகவும் சாந்தன், சித்தன் என்ற பாத்திரத்தினூடாக எழுதிச் சொல்கின்றார்.


இந்த நாவலில் வரும் சித்தனும், அவரது நண்பரான செகம் எனப்படும் செகராஸ்வரனும் சந்திக்கும் ஒரு நிகழ்வைக் குறிப்பிடவேண்டும். 90களில் வெளியுலகம் முற்றாகத் தடைப்பட்ட காலத்தில் இருவரும் புத்தகங்களைத் தேடித்தேடி பழைய புத்தக கடைக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இத்தனை புத்தகங்களை யாழ்ப்பாணத்தவர் வாசித்திருக்கின்றனரோ என்று சித்தன் வியந்தாலும், அவருக்கு யாரோ விட்டுப்போன புத்தகங்களை இந்தப் புத்தகசாலையில் விற்கப்பட வாங்குவதில் தயக்கமிருக்கின்றது. செகம் தான், நாங்கள் வாங்கவிட்டால் வேறு யாரோ வாங்குவார்கள் இல்லாதுபோயினும் வீணாய் அழிந்துபோகும் என்று சித்தனின் குற்றவுணர்வைப் போக்குகின்றார்.


அப்படியான பொழுதில் தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' வாங்குகின்றார். ஏற்கனவே அதைத் தொடராக கல்கியில் வந்தபோது சித்தன் வாசித்திருந்தபோதும், நூலாக இப்போது வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டுசெல்கின்றார். அதன் முதல் பக்கத்தைத் திறந்தவுடன், 'என்னில் பாதியான என் பாசமிகு மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், 82'ம் ஆண்டு என எழுதப்பட்டிருப்பதைக் கண்டவுடன் சித்தன் பதறிப்போகின்றார். எவ்வளவு அந்தரங்கமான புத்தகமிது, இதை எப்படியாயினும் அவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அனுப்பிவைத்துவிடவேண்டுமென சித்தன் அவதிப்படுகின்றார்.

 

தன் மனைவிக்கு புத்தகம் கொடுக்கும் ஒரு கணவன் எப்படியிருப்பான். அதுவும் தி.ஜாவின் 'அன்பே ஆரமுதே' கொடுத்தவன் எவ்வளவு உயர்ந்தவன். மனைவியும் அப்படிப் புத்தகம் கொடுத்திருப்பாளா? அவர்களுக்கு இப்போது பிள்ளைகள் இருப்பார்களா? அவர்களுக்கும் புத்தகங்களி இந்தத் தம்பதிகள் பரிசளிப்பார்களா? எவ்வளவு உன்னதமான குடும்பம்? இப்படி நமக்கு வெளித்தெரியாமல் எத்தனைபேர் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்கள்?' என்று சித்தனின் சிந்தனை பல்வேறு திசைகளுக்குப் போகின்றது. ஒரு பழைய புத்தகம் எத்தனை நினைவுகளை ஒருவருக்கு அருட்டிவிடுகின்றது. இந்தப் புத்தகம் இப்படி பரிசளிக்கப்பட்டிருபதன் மகிமையால் அதை பிறபுத்தகங்களோடு சேர்த்து வைக்காமல், தனக்கென்று தனது அப்பு தந்த புத்தகங்களோடு இந்தப் புத்தகத்தை வைத்து அதற்கொரு மதிப்பளிக்கின்றார்.



தை வாசிக்கும்போதுதான் நாங்கள் புலம்பெயர்ந்தபோது சங்கானை வரை கொண்டு போயிருந்த நூற்றுக்கணக்கான நூல்களை இறுதியில் அங்கே விட்டுவிட்டு வந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அங்கே எந்தக் கவனிப்பின்றி கரையான்கள் அரிக்கின்றது என்று கேள்விப்பட்டு நாங்கள் படித்த பாடசாலையினர் வந்து எடுக்கச் சொன்னபோது, அவர்கள் எடுத்தும் மிஞ்சிய புத்தகங்கள் வீணாய்ப் போயிற்றன எனப் பின்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன். அப்படியாயின் நான் சிறுவயதில் வாசித்த சாந்தனின் 'ஓரே ஒரு ஊரிலே', 'கிருஷ்ணன் தூது' போன்றவை அடையாளமின்றிப் போயிருக்குமா அல்லது யாரினதோ சேகரத்தில் இன்னுமிருக்குமா என்ற யோசனையும்  சடைத்து வளர்ந்தது. ஒரு தனிநபர் அனுபவம் பொது உணர்வாக மாறி வாசிப்பவரையும் தனக்குள் உள்ளடக்குவதல்லவா கலை?  


இந்த நாவலின் முதற்பகுதியை இன்னும் செம்மை செய்து சிலவற்றை சுருக்கியிருந்தால் இந்த நாவல் வாசிப்பின் தொடக்கத்தில் அலுப்படைய வைத்திருக்காது. ஆனால் பிற்பகுதியில் அது வாசிப்பில் சோர்வைத் தராமல் தன்னை மாற்றியமைத்து வேகமெடுத்துச் செல்வதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  இந்த நாவலை சாந்தன் 1997-1998 காலப்பகுதியில் எழுதி முடித்துவிட்டார் என்று குறிப்பிடுகின்றார். கையெழுத்துப் பிரதியில் இருந்ததை நூலாக மாற்ற இவ்வளவு காலத்தை அது எடுத்திருந்தாலும் இன்றும் காலத்தில் பிந்தங்காது வாசிக்கவேண்டிய பிரதியாகத் தன்னை முன்வைப்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டிய விடயம்.


நான் சாந்தனை அசோகமித்திரனின் வழிவந்த ஒருவராக நினைத்துக் கொள்பவன். தனது சிறுகதைகளுக்கும் அதிக பக்கங்களை விவரிக்க எடுக்காது சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லி முடிப்பவர். அத்துடன் ஒரு தேர்ந்தெடுத்த மொழியையும் தனதாகக் கொண்டிருப்பதால் வாசகராகிய நமக்கு அவரின் கதைகளை வாசிக்கும்போது அலுப்புத் தெரிவதில்லை. இன்று சட்டென்று பிரபல்யமாகிவிட்ட குறுங்கதைகளை அவர் 1970களில் எழுதி, எஸ்.பொவின் முன்னுரையுடன் 'கடுகுக்கதைகள்' என்று வெளியிட்ட ஒரு முன்னோடியுங்கூட.


00000000000000


(Dec 21, 2021)

பிரியா விஜயராகவனின் 'ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்'

Tuesday, November 15, 2022


1.

பிரியா விஜயராகவனின் முதல் நாவலான 'அற்றவைகளால் நிரம்பியவள்' தமிழில் மிக முக்கியமான நாவல். இற்றைவரை அது குறித்து பரவலாக உரையாடல் நிகழ்த்தப்படாமல் இருந்தாலும், அது ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யைப் போல இனி வருங்காலங்களில் செவ்வியல் பிரதியாக மாறிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுபோல பா.கண்மணியின் 'இடபமும்' தமிழில் தனக்குரிய இடத்தை விரைவில் எடுத்துக் கொள்ளும்.


இந்த இரண்டு புதினங்களும் தமிழில் இதுவரை சொல்லப்பட்ட கதைகளின் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துகின்றன. புதிய களங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதோடு மட்டுமின்றி, பல படைப்பாளிகளுக்கு கைவந்து விடாத மிகப்பெரும் விடுதலையுணர்வையும் இந்தப் பிரதிகள் வாசிப்பவர்க்குக் கடத்தி விடுகின்றன. இவ்வாறு விடுதலையுணர்வை வலிந்து திணித்து கவிதைக‌ள் எழுதுபவர்களும், திரைபடங்கள் எடுப்பவர்களுமெனச் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு சர்ச்சைகளின் மூலம் தம்மை முன்னிறுத்துவதே முக்கியத்துவமே அன்றி, தமது படைப்புக்களின் மூலம் எதிர்முனையில் இருப்பவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருப்பதில்லை. ஆகவே தொடக்ககால சர்ச்சை/சலசலப்ப்புகளுக்கு அப்பால் அவ்வாறான படைப்புக்கள் வேறொரு தளத்துக்கு விரிந்து செல்வதில்லை.

பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளும்', கண்மணியின் 'இடபமும்' நம்மை முடிவுறாத‌ உரையாடல்களுக்கு அழைத்துச் செல்கின்றன. இதுவரை ஆண்களால் கற்பனை செய்யப்பட்டு எழுதப்பட்ட பெண்கள் பற்றிய விம்பங்களைக் கலைக்கின்றன. எவ்வாறு நாம் மீண்டும் மீண்டும் பெண் பற்றிய கதையாடல்களைக் கட்டியமைத்தாலும், இந்தப் பிரதிகள் தொடர்ந்து குலைத்து குலைத்து அடுக்கியபடி இருப்பதால் இன்னமும் வசீகரிப்பதாகவும் இருக்கின்றன.


2.

'அற்றவைகளால் நிரம்பியவளை' தமிழில் மிக முக்கிய நாவலாக நினைக்கும் எனக்கு, தொடக்கத்தில் 'ஆட்டுக்குட்டியும், அற்புத விளக்கும்' அவ்வளவாக ஈர்க்கவில்லை. அற்புதமான‌ படைப்பை எழுதிய பலரின் அடுத்த‌ படைப்புக்கு வழமையாக நிகழக்கூடியதுதான் இது. ஏனெனில் வாசகர் ஏற்கனவே வாசித்துவிட்ட படைப்பை அடுத்துவரும் படைப்போடு அவரையறியாமல் ஒப்பிட்டுக்கொள்ளவே செய்வார். மேலும் அற்றவைகளால் நிரம்பியவள் போல பரந்த கதைப்பரப்பில் ஆட்டுக்குட்டியும் அற்புதவிளக்கும் நிகழ்வதில்லை. இதில் குறிப்பிட்ட சில பாத்திரங்களே வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால் ஒரு தாயுக்கும் மகனுக்குமான உறவைச் சொல்வதென்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் இந்தத் தாய் ஒற்றைப் பெற்றோராக (single mother) இருந்து இந்தக் கதையைச் சொல்கின்றார். முற்றிலும் புதிய நிலப்பரப்பான ஐரோப்பாவில் இருந்து வேலை செய்தபடி மகனைத் தனித்து வளர்க்கும் தத்தளிப்புக்களை எமக்குச் சொல்கின்றார்.

பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளில்' வரும் பெண் பாத்திரம் ஒரு சுதந்திரமான பெண். புதியவற்றை கண்டடைவதிலும் அனுபவிப்பதிலும் ஒருபோதும் தயங்காத ஒரு பாத்திரமே அற்றவைகளால் நிரம்பியவளான அஞ்சனா. ஆனால் இந்த நாவலில் வரும் பெண்ணோ அவள் விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட மனைவி/தாய் என்ற பாத்திரங்களுக்குள் அடங்கிவிடுபவளாகவும், அதேவேளை தனக்கான சுதந்திரத்தையும், தனிப்பட்ட வெளியையும் அடைவதில் திணறிக் கொண்டிருப்பவளாகவும் இருக்கின்றாள்.

இந்நாவலில் வரும் பெண் இரண்டு பெரும் சம்பவங்களால அலைக்கழிக்கப்படுகின்றாள். அவளுக்கு நெருக்கமான இருவரை கிட்டத்தட்ட இழக்கின்ற கையாலாகாத நிலைக்குச் செல்கின்றாள். ஒருவரை இறுதியில் என்றைக்குமாய் இழக்கின்றாள். இன்னொருவரை இறுதிக்கட்டம் வரை சென்றபோதும் காப்பாற்றிக் கொள்கின்றாள். தமிழ்ச்சூழலில் தனித்த பெற்றோராக இருந்து பிள்ளையை வளர்க்கும் -அதுவும் முக்கியமாய் புலம்பெயர்சூழலில் இருந்து- பெரும் பாரத்தையும், அவலத்தையும் எவரும் இந்தளவுக்கு விரிவாகச் சொன்னதில்லை. அது மட்டுமின்றி ஒரு பெண் கருவாவதிலிருந்து பெண்ணுறுப்பிலிருந்து பிள்ளை கிழித்து வெளியே வருவதுவரை இதில் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றது. நாமெல்லோரும் இப்படித்தான் பிறந்திருப்போம் என்றாலும் பிரியா இந்நாவலில் இதை அதன் வேதனையோடும், ஒரு புதிய உயிரைக் காணும் இனம்புரியா மகிழ்வோடும் எழுதும்போது நாம் நமது அன்னையரை ஒருகணமாவது நினைத்துப் பார்ப்போம். அவர்களை மானசீகமாகவேனும் நம்மை இந்தப் பூமியில் உலாவ விட்டிருப்பதற்காய் நன்றியுடன் அரவணைத்தும் கொள்வோம்.

இந்தப் புனைவை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தக் குறிப்பு அவ்வளவு தேவையற்றது. ஒரு நுட்பமான வாசகரால் அதை சொல்லாமலே புரிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமின்றி இந்த நூலில் இறுதி அத்தியாயத்தை புனைவுக்குள் சேர்க்காது, பிற்சேர்க்கையாக/பின்னிணைப்பாக இணைத்திருக்கலாம்

இற்றைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும், குறிப்பிட்ட ஆளுமைகளின் நிழலுக்குள் நின்றும் எழுதப்படுபவையே அநேகமாய்ச் சிலாகிக்கப்படுகின்ற அவலச்சூழலுக்குள் பிரியா போன்றவர்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் எப்போது ஒரு நாவல் நம்மை அதற்குள் அசையாய்ச் சாட்சியாய் உள்ளிழுத்து தொடக்கத்திலிருந்து முடிவுவரை கூட்டிச்செல்கின்றதோ அது நல்லதொரு புனைவாக மாறிவிடுவதை எவராலும் தடுத்து விடமுடியாது. இவ்வாறான படைப்புக்களை காலம் தன் கரங்களால் மெல்ல மெல்ல ஏந்தி காலதீதத்திற்குள் அனுப்பிவைத்து விடுகின்றது.

பிரியாவின் இந்த நாவலை நான் வாசிக்கும்போது சில இடங்களில் கண்ணீர் கசிந்திருக்கின்றேன்; சட்டென்று புத்தகத்தை மூடி வைத்து நிர்மலமான வானத்தை வெறித்தபடி இருந்திருக்கின்றேன். இந்தளவு துயரங்களை சுமந்த அந்தப் பெண் பாத்திரத்தின் கரங்களை ஆதூரமாய்ப் பற்றியிருக்கின்றேன்.

இதைவிட ஒரு புனைவு வாசகருக்கு வேறென்ன வெகுமதியைத் தந்துவிடமுடியும்?

*******************************************

(Aug 02, 2022)

பதின்மூன்று உயிர்கள் (Thirteen lives)

Thursday, November 10, 2022

 2018 உலக உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றபோது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் உலகின் இன்னொரு மூலையில் நடந்ததைப் பலர் அறிந்திருப்போம். தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் 12 சிறுவர்கள் உதைபந்தாட்டம் முடிந்தபின், தமது பயிற்றுன‌ருடன் ஒரு குகைக்குள் (Tham Luang cave) நுழைந்தபோது, சடுதியாக பெய்த மழையால் குகை நிரம்பி அவர்கள் மாட்டுப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட குகையின் நுழைவாயிலில் இருந்து 4 கிலோமீற்றர்கள் உள்ளே போயிருப்பார்கள்.


பெருவெள்ளத்தின் காரணமாக குகையின் உள்ளே எவரும் நுழைய முடியாது போகின்றது.. உலகின் சிறந்த நீரடி நீச்சல்காரர்களுடன், தாய்லாந்தின் சிறப்பு வாய்ந்த கடல்படையினரும் இணைந்து, இறுதியில் பத்து நாட்களுக்குப் பின்னரே சிறுவர்கள் இருக்கும் இடத்தைக் காண்கின்றார்கள்.

பத்து நாட்களுக்கு மேலே ஆகிவிட்டதால், உண்மையிலே இந்த நீரடி நீச்சல்காரர்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து இந்தச் சிறுவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்றே நம்பியிருந்தார்கள். பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள‌ ஒரு குழு, எந்த உணவும் இல்லாமல் 10 நாட்களாய், அதுவும் நிலத்தின் சமதரையில் அல்ல, அதைவிட கீழே 1000 அடிகளுக்குக் கீழே உணவும், சுவாசிப்பதற்கு ஒழுங்கான பிராணவாயும் இல்லாது தப்பிப் பிழைத்திருப்பது என்பது நிச்சயம் அதிசயந்தான்.

சிலியில் எண்ணெய் சுரங்கத்தில் 33 பேர் சிக்குப்பட்டு கிட்டத்தட்ட 70 நாட்களில் அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டபோதும், அவர்களுக்கான உணவு விநியோகம் விரைவில் கிடைத்துவிட்டது. இங்கே இந்தச் சிறுவர்கள் பத்து நாட்களுக்கு மேலாக குகையின் மேலாக வந்த மழைநீரை மட்டும் அருந்தியபடி தப்பியிருக்கின்றனர். அத்தோடு அவர்கள் தொடர்ந்து தியானமும் செய்து தம்மை மனதாலும் தளரவிடாது வைத்திருந்திருக்கின்றனர்.

அவர்கள் உயிரோடு இருந்தாலும் அவர்களை உயிரோடு காப்பாற்றிக் கொண்டு வரமுடியாது என்றே இந்தச் சிறந்த கடல் நீரோடிகள் நம்புகின்றனர். ஏனெனில் அவர்களாலேயே அந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் எடுத்திருக்கின்றன. எவ்வித ஆழ்கடலோடும் அனுபவமற்ற சிறுவர்களை உயிரோடு கொண்டுவரமுடியாது என்று இவர்கள் நம்பிக்கை இழக்கின்றனர். குகைக்குள் இருக்கும் பிராணவாயும் குறைந்துகொண்டே போகின்றது. பருவமழைக்கான காலம அருகில் நிற்கின்றது. அப்படித் தொடங்கினால் வெள்ளம் மேலும் உள்ளே நுழைந்தால் அவர்கள் நிற்பதற்கே இடமில்லாதும் போய்விடும்.


றுதியில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களின் உதவியோடும், கிட்டத்தட்ட 17 நாட்டுக்கு மேற்பட்ட அனுபவம் பெற்றவர்களின் அறிவோடும் இந்தச் சிறுவர்கள் 18 நாட்களின் பின் காப்பாற்றப்படுகின்றார்கள். அதுகூட ஒரு சட்டத்துக்கு உட்பட்ட முறையால் அல்ல. எல்லாச் சிறுவர்களையும் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று ஒவ்வொருவராக- நீருக்குள் மயங்கியபடியே- இவர்கள் காப்பாற்றுகின்றனர்.

உள்ளூர்மக்கள் பல்வேறு குழாய்களை வைத்து மில்லியன்கணக்கான தண்ணீரைக் குகையில் இருந்து அகற்றுகின்றார்கள். அந்த தண்ணீரால் தமது விவசாய நிலங்கள் அழியும் என்று தெரிந்தும் அதைப் பாய்ச்சுவதற்கு தமது நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுக்கின்றார்கள். இவ்வாறு எல்லா மனிதர்களும் உதவி செய்ய அந்தச் சிறுவர்கள் அவர்களின் பயிற்றுனருடன் காப்பாற்றப்படுகின்றனர். இந்த மீட்புப்பணியின் இடையில் உதவச் சென்ற ஒரு தாய்லாந்து கடற்படைக்காரர் குகைக்குள்ளே இறக்கின்றார். இன்னொருவர் இந்நிகழ்வு நடந்த அடுத்த வருடம் இதனால் ஏற்பட்ட நோய்த்தொற்றின் மூலம் காலமாகின்றார்.

உண்மையிலே இந்நிகழ்வு ஒரு கூட்டு மீட்புப் பணி. மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க எத்தனையோ அற்புத விடயங்கள் இருக்கின்றன‌ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். போரென்று வரும்போது அருகில் இருப்பவனையோ போட்டுத்தள்ளும் மனிதர்கள் இவ்வாறான மீட்ட்புப்பணிக்காய் உலகின் எங்கெங்கோ இருந்தெல்லாம் ஒன்று கூடுகின்றார்கள். சக மனிதர்களை தம் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றார்கள்.

இந்த நிகழ்வு நடந்தபோது நான் ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருந்திருக்கின்றேன். பிரேசில் பெல்ஜியத்திடம் தோற்றுவிட்டதென ஒரு கடல்நீரோடி முதன்முதலில் சிறுவர்களை உயிரோடு பார்க்கும்போது சொல்வார். அவர்களுக்கு அது பத்து நாட்களுக்குப் பின் வருகின்ற சிறு நம்பிக்கைச் சமிக்ஞை. எனக்கோ என் பிரியத்துக்குரிய உதைபந்தாட்ட அணி தோற்றுவிட்டதென்கின்ற அந்தக் கணத்தில் சற்றுக் கவலையோடு கடந்துபோகின்ற தருணம்.

இப்போது இதை மீள நினைக்கும்போதுகூட, ஏதேதோ எல்லாம் உலகின் இன்னொரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் அல்லவா?

*******************************

(Thirteen lives movie)

'அவ்வளவு வேகமாக நடக்காதே எல்லா இடத்திலும் மழைதான்'

Sunday, November 06, 2022


நான்
எனது குருவோடு
மழையில் நடக்கும்போது
அவர் சொல்வார்
'அவ்வளவு வேகமாக நடக்காதே
எல்லா இடத்திலும் மழைதான் '

- ஷுன்ரியு சுஸுகி (தமிழில்: க.மோகனரங்கன்)

பொழுது முழுதும் மழை பொழிந்து கொண்டிருக்கையில், கருமேகம் மூடிய பின்னணியில் விரியும் கோடையின் பசுமையில் இருப்பது உயிர்ப்பு.

காலையில் எழுந்தவுடன் மழையின் சாரல் கால்களில் படர, மேலே மூடிய ஊஞ்சலில் இருந்து மொட்டவிழ்த்துவிட்ட பூசணிப்பூக்களையும், அவரைப்பூக்களையும் பார்க்கையில் இந்த நாள் எமக்கே எமக்கானதென்று எளிதில் புரிந்துவிடும்.

காலம் நெகிழ்ந்து கரைந்துருக, எதுவும் செய்யாது அப்படியே அசையாது நடப்பதை அவதானிப்பதை, 'கோடை மலர மனது தளிர்க்கும் காலம்' எனவும் பெயரிட்டுக்கொள்ளலாம்.

தேய்வழக்குகளைக் கடந்துவர, தேய்வழக்குகளைப் பற்றிப் பேசிப் பேசித்தான் முதலில் கடக்கவேண்டும் என்று சொல்வதைப்போல, இதை எழுதும்போது தற்செயலாய் இளையராஜாவின் அந்திமழை பொழிகிறதின் பின்னணி இசை ஒலிப்பதையும் ஓர் உபகுறிப்பாய்ச் சேர்த்துவிடலாம்.

****

உலகின் இன்னொரு திசையில் இருப்பவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும்போது, மழை பெய்து தன்னை வாழ்த்துகிறதென மகிழக்கூடியவருக்கு, சற்று பின்னோக்கிப் பார்க்கும்போது தன் காலம் சிறிது விரயமாக்கிப் போய்விட்டதோ என்ற‌ சிறுதுயர் அவருள் எட்டிப் பார்க்கிறது. தான் இன்று வந்து சேர்ந்த காலத்துக்கு, இளமையில் விளிம்பில் நின்று வாழ்த்திக்கொண்டிருக்கின்ற நானும், எனது நண்பரும் வந்துவிடுவோமென்று மறைமுகமாக நமக்கு அவர் உணர்த்துகிறார்.

'நீங்கள் வீணாக்கிவிட்ட காலமென்று நினைக்கின்றீர்கள், ஆனால் அதில் எதையோ நீங்கள் அடைந்திருப்பதால்தான் நாங்கள் உங்களைத் தேடி வந்திருக்கின்றோம்' என்கின்றேன்.

வீணடிக்கப்பட்ட வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. இன்னமும் வாழ்ந்து தீராத வாழ்க்கையொன்று இருக்கிறதென வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இதே காலையில், புதிதாய் வந்திருக்கும் திரைப்படமொன்றை பார்த்துவிட்டு நண்பரொருவர் 'குரல் பதிவை' அனுப்புகிறார். 'இந்தப் படம் உனக்குப் பிடிக்கும், ஒருவகையில் நீ வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை, உன்னை இது நினைவுபடுத்தியது' என்றொரு செய்தி.

உண்மையில் நாங்கள் பிரமிப்புக்களைப் பார்ப்பதற்காய் நாம் வைத்திருக்கும் பிரமைகளை உடைத்துவிடவேண்டியிருக்கிறது.

நாங்கள் பிரமைகளை பிரமிப்புக்களாக நினைத்து, பிறரைப் பார்த்து ஏங்குகின்றோம். நம்மால் வாழ முடியாத ஒரு வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்காத, பிறர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் மீது தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுவதும் இயல்பானது. ஆனால் அது நமது பிரமைகளே அன்றி வேறெதுவும் இல்லை.

நாம் வாழாத வாழ்க்கையிலும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையைப் போல தத்தளிப்புக்களும், மகிழ்வுறு தருணங்களும், சறுக்கிவிழும் பொழுதுகளும் இருக்கும். எனவே நமக்குக் கைகூடாதவை எல்லாம் அற்புதமானவை என்கின்ற பிரமைகளை விலத்தினால், நம் முன்னே இருக்கும் பிரமிப்புப்பான விடயங்கள் எளிதில் புலப்படும்.

****

வசந்தத்தில் வழமையாக மஞ்சளும், வெள்ளையுமான வர்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளோடு புதிதாக செம்மஞ்சள் நிறத்தில் எனிப்படி ஒரு புதிய வண்ணத்துப் பூச்சி பறக்கிறது என யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? 'ஒநாய் குலச்சின்னத்தில்' மேய்ப்பர்கள் திறந்தவெளியில் இறந்தவர்களின் உடலை கைவிட்டுவர, மூன்றாம் நாளில் ஓநாய்கள் அவ்வுடலைத் தின்று எலும்புக்களை மிச்சம் வைத்தால் மட்டுமே நீத்தார் வானுலகு செல்கிறார்கள் என்று நம்பிக்கைக்கு நாம் குறுக்கீடு செய்யமுடியுமா? அல்லது திபெத்தியர்களின் ஒருபகுதியினர் இறந்தவர்களின் உடலை கழுகிற்கு காணிக்கை செய்வதன் மூலம், பறப்பவை எளிதாக நம் ஆன்மாவை வானுலகிறகு எடுத்துச் செல்லும் என்பதை எப்படி எப்படி தர்க்கரீதியாக நிரூபிப்பது. பறக்கும் ஓநாய்கள் இருக்கிறதென்று தீவிரமாக நம்பும் மொங்காலிய நாடோடிகளிடம் அப்படியில்லை என்று நிரூபித்து நாம் அடையப்போவது எதுவாக இருக்கும்?

வாழ்க்கை என்பதை நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளின் மூலமே கடந்துபோக விரும்புகின்றோம். அதற்கப்பால் வாழ்க்கையிற்கான அர்த்தங்களைத் தேடுவதன் மூலம் கண்டடைவது எதுவுமேயில்லை.

வேண்டுமானால் பிறரை/பிறதை அதிகம் தொந்தரவுபடுத்தாது ஒரு எளிய வாழ்வின் மூலம், வாழ்ந்துபோக முயற்சிப்பதை மட்டுமே நாம் செய்யக்கூடியது.

ஜெயமோகனின் காட்டில், நீலியின் மீது பித்து பிடித்தலைந்தது, எவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்திடாத காட்டின் ஆதிக்குடிப்பெண்ணை அரிதாக சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்ற ஒருவன், ஏன் அவ்வளவு சாதாரண வாழ்வை இறுதியில் தேர்ந்தெடுக்கின்றான். சாதாரண வாழ்வை மட்டுமில்லை, தனது மாமா வாழ்ந்து, ஒரு அவலமான இறுதிமுடிவைச் சந்தித்த (கொலை) அதே வாழ்வின் பாதையில் ஏன் அவனும் பயணிக்க்கின்றான் என்பதில்தான் வாழ்வின் அவிழ்க்க முடியாத முடிச்சுக்கள் இருக்கின்றன‌.

காட்டின் அற்புதங்களைத் தரிசித்த அந்த ஒருவனுக்கு நேரில் முதன்முறை பார்க்கும் -பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும்- குறிஞ்சியைப் பார்த்தவுடன் வரும் வெறுமையை எந்தப் பெயரிட்டு அழைப்பது? குறிஞ்சிப்பூவைப் பார்த்தவுடன் நீலி மீதிருக்கும் அளவிறந்த நேசம் அவனுக்குள் சட்டென்று வடிந்துபோவதைப் போல நாம் நம் காதல்களின்போது பெரும்பாலும் உணராது கடந்து போயிருக்கமாட்டோமில்லையா?

இவ்வளவுதானாவென எழும் வெறுமையை இந்த மழையின் முன் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கும் புற்களைப் போல நாம் நம்மை முற்றாகக் கைவிட்டு வெளிவந்தாலன்றி இன்னொரு நாள் இனிதாக அமையப் போவதில்லை.

***

ஆக, அற்புதங்களை கண்டவர்களே சாதாரணத்திலும் மிகச் சாதாரணத்திலுமான வாழ்க்கையைப் பிறகொருகாலம் வாழும்போது, எளிய‌ வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அற்புதங்கள் நிகழ்ந்துவிட கூடுமென்ற கனவுகளுடன் வாழ்வதிலென்ன குறைந்துவிடப் போகின்றது.

ஒரேநேரத்தில் மூன்று பெண்களால் தீவிரமாக நேசிக்கப்பட்ட ஒருவன்  பின்னொருபொழுது அம்மூவரையும் கடந்து வந்திருப்பதையும் நானறிவேன். அவன் இவற்றிற்குப் பிறகும் காதல், எந்த அற்புதத்தை நிகழ்த்தப்போகின்றது என்று எண்ணினானோ தெரியாது. சிலவேளைகளில் நேசத்தின் மூலம் இறுதியாய் வந்தடையும் தாங்கமுடியா வெறுமையைச் சந்திக்கத்தான் அவன் இவற்றை உதறித்தள்ளி வந்தானோ, அதையும் நாம் அறியமுடியாது.

அது அவனது வாழ்க்கை. அவனது தெரிவு(கள்)!

இப்போது நமக்கு கருமேகங்கள் இழைத்த வானம் இருக்கிறது. பசுமை போர்த்திய கோடை இருக்கிறது. சொற்கள் மெளனத்தில் அமிழ்ந்த அமைதி இருக்கிறது. நேசிக்க மனிதர்கள் சிலர் அருகிலோ/தொலைவிலோ இருக்கிறார்கள்.

மேலும் வாழ்வதற்கு இன்னமும் மிச்சமாய் - கொஞ்சம் வாழ்க்கை,- புற்களில் தேங்கிய மழைத்துளிபோல இருக்கிறது.

'அவ்வளவு வேகமாக நடக்கவுந் தேவையில்லை, எல்லா இடத்திலும் அதே  மழைதான். '

****************

(Jul 18, 2021)

Image Credit: "Walking Meditation III by Jenny Walters

புனைவுகளும், புனைவல்லாதவைகளும்..

Saturday, November 05, 2022


சில நாட்களுக்கு முன் அபுனைவுகளை எழுதுபவரை விட, புனைவுகளை எழுதுபவர்களையே சமகாலத்தில் மதிக்கின்றார்கள் என்கின்ற ஒரு பதிவை வாசிக்க நேர்ந்திருந்தது. கடந்த தலைமுறையினர் பிற படைப்பு/படைப்பாளிகள் பற்றி நிறைய விமர்சித்து உரையாடி வந்தவர்கள், இப்போதைய புதுத்தலைமுறை தன் புனைவுண்டு தானுண்டு என்கின்ற மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தது. இன்றல்ல, அது ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழில் காத்திரமான விமர்சனத் தலைமுறை இல்லாமற்போய்விட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மையே.

ஆனால், அந்தப் பதிவின் தொனியே புனைவு எழுதினால்தான் இனிக் கவனிப்பார்கள், இனி அபுனைவு எழுதி எல்லாம் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை என்கின்ற ஒரு சுயபச்சாபத்தின் சாயல் தெரிவதால், இங்கே சிலதை எழுதலாமென நினைக்கின்றேன்.

வாழ்க்கையில் நாம் சுயபச்சாபத்திற்குள் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாம் அறிந்தோ/அறியாமலோ போகும் சுயபச்சாபத்தை வாழ்வில் ஒருவகையில் தவிர்க்கவும் முடியாது. ஆனால் எழுத்தில் சுயபச்சாபம் எழுவதை இயன்றளவு என்னைப் பொறுத்தவரை தவிர்க்க விரும்புவேன். நான் கவிதைகள் நிறைய எழுதி இலக்கியத்தில் நுழைந்த தொடக்க காலத்தில் இனி கவிதைகளை வாசிக்கமாட்டார்கள் என்கின்ற தொனி ஒலித்துக்கொண்டிருந்தது.

அப்போது இப்போது போல நாவல்கள் அல்ல, சிறுகதைத் தொகுப்புக்களே முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது. ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் கவிதைகள் குறைந்துவிட்டனவா? ஒவ்வொரு ஆண்டும் வெளிவருகின்ற நூல்களில் கவிதைத் தொகுப்புக்களை மிஞ்சுகின்ற வேறேனும் வகைமை இருக்கின்றனவா என்ன?

ஏன் இப்போது நமது வாசிப்புக்களை ஆக்கிரமித்துக்கொண்ட முகநூல்/இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தளங்களில் கூட, அதிகம் மேற்கோள் காட்டப்படுகின்ற வகையாக கவிதைகள்தானே இருக்கின்றன. ஆக ஏதோ ஒருகாலத்தில் ஏதோ ஒரு வகைமை 'பேசுபொருளாக' இருக்கின்றது என்பதற்காக 'ஊரோடு ஒத்தோடவேண்டும்' என்பது இலக்கியத்துக்கு ஒருபோதும் உதவாது. அப்படி இருந்தால் அது இலக்கியமுமில்லை.

அங்கீகாரத்துக்கும், பிரபல்யத்துக்கும் மட்டுமே இலக்கியச் சூழலுக்கு வந்திருப்பதாக ஒருவர் நினைத்தால், இதைவிட உருப்படியாகச் செய்ய எத்தனையோ காரியம் இருக்கின்றன எனச் சொல்வேன். நமது நாளாந்தங்களிலிருந்து இருந்தும், வாழ்வின் அர்த்தமின்மைகளிலிருந்தும் ஏதோ ஒருவகையில் நம்மை ஆற்றிக்கொள்ள புகலிடமென வரும் இலக்கியத்திலும், எழுத்தை ஒரு 'கச்சா'ப் பொருளாகக் கொண்டு நுகர்வோரைப் பற்றி அக்கறை கொள்வதால் நமக்கென நிம்மதி வந்துவிடப்போகின்றது.

தமிழ்ச்சூழலில் எப்போதும் அபுனைவுகளை விட, புனைவுகளே பரவலாகப் பேசப்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்தே நம்மில் பலர் அபுனைவுகளை எழுத வருகின்றோம். புனைவுகளோடு அபுனைவுகளை ஒப்பிட விருப்பமில்லையெனினும், அவையவைற்றுக்கென ஒருவகையான உழைப்பு இருக்கின்றது. புனைவு எழுதுகின்ற ஒருவருக்கு அபுனைவுகளை வாசித்து வருகின்றதால் வரும் படைப்புவெளி விசாலமாக இருக்கும் என்பதை நாம் அவர்களின் புனைவுகளை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் உணர முடியும்.

எல்லோருக்கும் சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கும். ஆனால் அதை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் சொல்ல இந்த அபுனைவு எழுத்துக்கள் நிச்சயம் வளம் செய்யும். மேலும் அபுனைவுகளை எழுதும்போது நம்மால் நிறையக் கருத்துக்களைத் தொகுத்துத் திரட்டிச் சொல்லமுடியும். அது நாம் புனைவாக எதையேனும் எழுதும்போது நிச்சயம் ஒற்றைப்படையாகச் சொல்லாது வாசகருக்கு விரித்துச் சொல்லும் பல்வேறு பாதைகளைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.

மேலே சொல்லப்பட்ட கட்டுரையில் அசோகமித்திரன் அதனால்தான் அபுனைவுகளைக் கைவிட்டு, இறுதிவரை கதைகளாக எழுதிக் குவித்தவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை அ.மியிற்கு முன்னர் கணையாழி இருந்ததைப் போல அவருக்கு ஒரு பத்திரிகை, இவ்வாறு எழுத பிற்காலத்தில் இல்லாததாலேயே அப்படி எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் அ.மிக்கு பத்திகள் எழுத எவ்வளவு விருப்பமிருந்தது என்பதை நாம் அவரது பத்தி எழுத்துக்களினூடு அவதானிக்கமுடியும். அபுனைவு எழுத்துக்கள் சிலவேளைகளில் எழுதும் காலங்களில் அவ்வளவு முக்கியம் பெறாதுபோனாலும் பிற்காலத்துச் சந்ததிக்கு அது நிச்சயம் உதவும்.

நான் எஸ்.பொவின் 'தீ' பற்றி வாசித்து அந்தக் காலத்தில் என்ன வகையான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்குமென்று பார்ப்பதற்கு எனக்கு அன்றையகாலத்தில் பிரமிள்-தளையசிங்கம்-எஸ்.பொ எழுதிய விமர்சனக்கட்டுரைகளே உதவியிருக்கின்றன. இன்றைக்கும் எஸ்.பொவின் புனைவுகளுக்கு நிகராக அவரது 'இனி' என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பை என் வாசிப்பில் முதன்மையாக வைத்திருக்கின்றேன். மேலும் அசோகமித்திரன், எஸ்,பொ, அ.யேசுராசா போன்ற பலர் எழுதிய பத்தியெழுத்துக்களின் தொகுப்பிலிருந்தே நான் வாழ்ந்தே பார்க்கமுடியாத இலக்கிய உலகின் போக்குகளைக் கற்றபடி இருக்கின்றேன். கடந்தகாலத்துக்குச் சென்று பார்க்க இவையே உதவுகின்றன.

ஏன் இன்றைக்கு சாரு நிவேதிதாவிற்கு வந்துசேர்ந்த வாசகர்களில் பலர் அவரின் கோணல்பக்கங்கள் என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பினூடாக வந்து சேர்ந்தவர்கள் என்றே நம்புகின்றேன். மேலும் இவ்வாறான அபுனைவுகள் அந்த எழுத்தாளரை மட்டுமில்லை, அவர் மேற்கோள் காட்டுகின்ற எத்தனையோ வேறு படைப்பாளிகளையும் நாம் கண்டைந்துகொள்ள முடிகிறதல்லவா? நான் கூட உயிர்நிழல்(?) சஞ்சிகையில் ராஜநாயகம் சாருவின் நூல்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையினூடாகத்தான் சாருவைக் கண்டடைந்தவன். இவ்வாறு ஒரு புது வாசகருக்கு இந்த அபுனைவுகள் தருகின்ற அனுபவங்கள் என்பது எண்ணிலடங்காதவை.

சென்ற வாரம் கொழும்பு புத்தகச்சந்தை நடந்தபோது குமரன் புத்தகசாலையில் அ.மார்க்ஸின் 'பின் நவீன நிலை' என்கின்ற 500 பக்கங்களுக்கு மேலுள்ள பெருந்தொகுப்பை கண்டவுடனேயே வாங்கிவிட்டேன். பில் போட்டுக்கொண்டிருந்தவருக்கு நான் அ.மார்க்ஸின் தொகுப்பை வாங்கியது சற்று ஆச்சரியமாக இருந்தது. அ.மார்க்ஸைத் தெரியுமா எனக்கேட்டார். அப்படியே அந்த உரையாடல் கொஞ்சம் போனது. இதையேன் சொல்கின்றேன் என்றால் எனக்கு புனைவுகளைப் போல, அபுனைவுகளை வாங்கி வாசிக்கவும் அதேயளவு ஆர்வம் இருக்கின்றதெனச் சொல்லவே!

கனடாவில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றார். அங்கே அனுக்கின் A Passage North அவரின் வீட்டில் இருந்திருக்கின்றது. அனுக்கின் புத்தகத்தை வைத்திருந்தவர் இதை மிக மெது மெதுவாகவே வாசிக்க வேண்டியிருக்கின்றது. அவ்வளவு கஷ்டமாக இருக்கின்றதெனச் சொல்லியிருக்கின்றார். எனது நண்பரோ, 'இளங்கோ ஏற்கனவே இதை வாசித்துவிட்டு அது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கின்றான்' என்று சொல்லியிருக்கின்றார். உண்மையில் அனுக்கின் இந்தப் புத்தகம் நிறையவே வாசிப்பு நேரத்தைக் கோரியிருந்தது. ஆனால் எனக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தது. அதைப் பற்றி எழுதவேண்டுமென்ற உற்சாகத்தை அந்தப் புத்தகமே தந்திருந்தது.

புத்தக விமர்சனம் எழுதினால் யாரேனும் நான் எழுதியதை வாசிப்பார்களா? அல்லது இந்த நேரத்துக்கு நான் எழுதி முடிக்கவேண்டிய நாவலுக்கு நேரத்தைக் கொடுத்திருக்கலாமென்றெல்லாம் எந்த யோசனையும் எனக்கு வரவில்லை. ஏனென்றால் எனக்கு அப்படி அதைப்பற்றி எழுதுவது பிடித்திருந்தது. அவ்வளவுதான்.

இப்படி அபுனைவை விட்டு புனைவுகளை எழுதுவதே சிறந்ததென்று சொல்லும் நண்பருக்கும் நான் சொல்ல விரும்புவது, உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள். ஆனால் இதுதான் இந்தக் காலத்தைய பேசுபொருள் என்று அதன் பின்னே சென்று வீணே உங்கள் நேரத்தையும் மனதையும் கஷ்டப்படுத்தாதீர்கள். அதனால் அடையப்போவது எதுவுமில்லை.

*************************

(Oct 04, 2022)

ஆனந்தப்ரசாத்தின் 'சொல்லப்படாத கதை'

Thursday, November 03, 2022

 1.


மனிதர்கள் எல்லோரும் ஒரு இதமான‌ சூழலில் வாழ ஆசைப்படுகின்றோம். அந்தச் சூழலில் இருந்தபடியே நமக்கான அடுக்கடுக்கான கனவுகளைக் கட்டவும் தொடங்குகின்றோம். அந்தச் சுமுகமான சூழலும், கனவுகளும் சட்டென்று ஒருநாள் கலைக்கப்பட்டு விட்டால் என்னவாகும். இனவாதமும், அதன் நிமித்தம் கைதுசெய்தலும், சித்திரவதைகளும், நிலங்கள் சூறையாடப்படுவதும் நிகழ சொந்த நிலத்தில் இருந்து பல்வேறு கடன்சுமைகளுடன் தப்பியோடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவுகளே 'சொல்லப்படாத கதை'யாகும். கப்பலில் வேலை ஒன்று பெற்றுத்தருகின்றோம் என்று முகவரால் மும்பாயிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றவர் அதே முகவரால் கைவிடப்படுகின்றார்.

நாட்டு நிலவரத்தால் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாது; பெற்ற கடனை விரைவில் திரும்பிக் கொடுக்கவும் வேண்டும். கப்பலுக்கென்று வேலைக்குப் போனாலும் கப்பலில் வேலை செய்த எந்த அனுபவமும் இல்லை.எப்படியோ ஒருமாதிரி இருக்கின்ற தகுதிகளை வைத்து கிறிஸிலிருந்து வியட்னாமுக்கு கோதுமை ஏற்றிச் சொல்லும் கப்பலில் இவருக்கு வேலை கிடைத்துவிடுகின்றது. இந்தச் 'சொல்லப்படாத கதை' கப்பல் கிரேக்கத்திலிருந்து வியட்னாமுக்கு சென்று, அங்கிருந்து திரும்புகின்ற அனுபவங்களைச் சொல்வதாகும்.

இவ்வாறான கப்பல்களில் வேலை செய்து, பயணித்த அனுபவங்களைச் சொல்லும் கதைகள் ஏற்கனவே சிலரால் பதிவு செய்யப்பட்டாலும், இந்த நூல் ஒரு புதிய திசையை நமக்குத் திறக்கின்றது. இதை எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் தன்னை முழுமையாக எழுத்துக்குக் கொடுத்திருக்கின்றார் என்பதாலேயே இது எளிதாகச் சாத்தியமாகியிருக்கின்றது. புதிதாக ஒருவருக்கு ஏற்படும் கடல் அனுபவங்கள், பயிற்சியே இல்லாத ஒருவர் எப்படி கப்பலின் பணிகளைக் கற்றுக்கொள்கின்றார், 26 பேருக்கு மேலே இருக்கும் கப்பலுக்குள் மாதங்களாய்ப் பயணிக்கும் பணியாளர்களுக்கிடையில் ஏற்படும் நட்பும் முரணுமென எல்லாவற்றையும் அவ்வளவு விரிவாக எழுதிச் செல்கிறார் ஆனந்தப்ரசாத்.

இந்தக் கப்பல் பயணத்திடையே தாயகம் பற்றிய நினைவுகள் இடைவெட்டிப் போவதும் மிக அற்புதமாக விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாடகராகவும், வாத்தியக் கலைஞராகவும் இருந்து, நண்பர்களோடு புகைத்தலும், மதுவுமாக வாழ்வைக் கொண்டாடியபடி இருந்தவரை நாட்டு அரசியல் எங்கோ பெருங்கடலுக்குள் தூக்கி எறிகின்றது. ஒரு கழிந்துபோன அழகிய வாழ்வைச் சொல்கின்றபோது அதில் ஏக்கமிருந்தாலும், ஒருபோதும் அதைச் சொர்க்கமென சொல்லாது அந்த வாழ்வில் இருந்த எல்லாக் கசடுகளும் சேர்த்தே இங்கு சொல்லப்படுகின்றது. ஆனால் அதை மீறி இந்த வாழ்வு சுகிப்பதற்கேயென்று இந்த அனுபவங்களின் அடிச்சரடு நமக்கு நினைவுபடுத்தியபடியே இருக்கின்றது.

ஈழத்தவராகிய நமக்கு ஒரு துயர் இருக்கின்றதென்றால், கப்பலில் பணி செய்கின்ற சிங்களவர்க்கும், வட இந்தியர்க்கும், கிறிக்காரர்களுக்கும் வேறு வகையான துயரங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அந்நியோன்னியத்தை வளர்த்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்குள் ஏற்படும் முரண்களைக் கூட, ஏதோ ஒருகணத்தில் உடைத்து மன்னிப்புக் கேட்டு ஒருவரையொருவர் தோளணைத்துக் கொள்கின்றார்கள்.

2.

வியட்னாமில் கோதுமை மாவை இறக்கும்போது தொடர்ச்சியான போரால் அழிவுற்ற ஒரு வியட்னாம் நமக்குக் காட்டப்படுகின்றது. அமெரிக்கர்கள் ஆக்கிரமித்து தோல்வியுற்றுப் போனாலும் அவர்கள் தென்வியட்னாமில் வீசிய இரசாயனக்குண்டுகளின் நிமித்தம் மரங்களே வளராது நிலங்களைப் பார்த்து ஆனந்தப்ரசாத் கலங்குகின்றார். வறுமையும், போரின் அழிவுகளால் ஏற்பட்ட அவலங்களாலும் வியட்னாமிலிருந்து பலர் தப்பியோடுகின்றார்கள். அவ்வாறு தப்பியோடுகின்றவர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இவ்வாறான கப்பல்கள் இருக்கின்றன.

இந்தக் கப்பலில் வேலை செய்கின்ற‌ ஒருவர் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கொடூரத்தைச் சொல்கின்றார். ஆஸ்திரேலியாவிலிருந்து வியட்னாமுக்கு உதவச் சென்ற தங்கள் கப்பலில் கழிவகற்றும் குழாயில் மறைந்திருந்து தப்பிவந்த ஒரு இளம் தம்பதிகளையும், அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் பிறிஸ்பேனுக்கு அண்மையில் கப்பலின் கழிவுகளை அகற்றும்போது அங்கே உயிரிழந்து போனதைக் கண்டு நெஞ்சு வெம்மி அதற்குப் பின் ஆஸ்திரேலியக் கப்பல்களில் பணி செய்வதை நிறுத்திவிட்டார் என்கின்றார்.

வியட்னாமியர்கள் இப்படித் தப்பினார்கள் என்றால் பின்னர் ஈழத்தமிழர், ஆபிரிக்கர்கள், சிரியாக்காரர்களென‌ படகுகளிலும், டிராக்குகளிலும் நாடுகளின் எல்லைகளைத் தாண்ட முயன்று இறந்துபோனவர்கள்தான் எத்தனை பேர். இதை எழுதும் இன்றைய நாளிலும் அமெரிக்காவில் ஒரு டிரக் மூலம் தப்பிவந்த இலத்தீன் அமெரிக்க குடிவரவாளர்களில் 50 இற்கு மேற்பட்டவர்கள் இறந்த சோகமென இன்னமும் இவை முடிவுறாது நடந்தபடியிருக்கின்றன.

கடலிலேயே வாரக்கணக்காய் மிதக்கும் இந்தக் கடலோடிகளுக்கு நிலத்தின் அருமை நன்கு விளங்கும். அதைவிட கடலில் பெருமை நன்கு தெரியும். ஆகவே அவர்கள் ஒருபோதும் கடலை அவமதிப்பதில்லை. தரையில் காலவைத்தவுடன் இந்தக் கடலோடிகளுக்கு மதுக்களும், மாதுக்களும் தவிர்க்கமுடியாது பேரின்பத்தைக் கொடுப்பதாக மாறிவிடுகின்றன.. பல்வேறு முதல் முயற்சிகளுக்கு கரைதட்டும் நிலங்களே வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்கின்றன.

வியட்னாமின் வறுமையை அறிந்த ஆனந்தப்ரசாத் உள்ளிட்ட சில நண்பர்கள் இரு வியட்னாமிய பெண்களுக்கு கப்பலில் அடைக்கலம் கொடுத்து சிங்கப்பூர்வரை கள்ளமாய்க் கடத்தி வந்து இறக்க முயற்சிக்கின்றனர். அந்தப் பயணத்தின்போது நிகழ்வதெல்லாம் ஒரு புனைவுக்குரிய சிறந்த பகுதிகள். அதேவேளை அந்தப் பெண்கள் தங்கள் நன்றியை உடலின்பமாக இந்தக் கடலோடிகளுக்குக் கொடுக்கின்றனர். வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓட்டம். ஓரிடத்தில் இறங்கிவிட்டால் அனுபவங்களின் சேகரம் குறைந்துவிடும். அந்தப் பெண்கள் இறங்கும்போது நமக்குள்ளும் ஒரு துயர் எட்டிப் பார்க்கின்றது. ஆனால் எப்படியெனினும் ஏற்கனவே வாழ்ந்ததைவிட நல்லதொரு வாழ்வை வாழ்ந்துவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை வருகின்றது.

இந்த நூலில் நம் பலருக்குப் தெரிந்திருக்கக்கூடிய (புதுவை) இரத்தினத்துரையின் இளமைக்கால நினைவுகள் விபரிக்கப்படுகின்றன. இரத்தினதுரை, ஆனந்தப்ரசாத் உள்ளிட்டவர்களின் நண்பர்களாக திருமலையில் இருந்திருக்கின்றார். இடதுசாரி நிலைப்பாட்டில் ஆதரவுள்ள, குடியும் கும்மாளமாகவாழ்வைக் கொண்டாடுகின்ற ஒரு இளைஞனான இரத்தினதுரை இங்கே அறிமுகப்படுத்தப்படுகின்றார். பின்னர் சிங்கப்பூரில் வேலை செய்யப்போகின்ற இரத்தினதுரையை ஆனந்தப்ரசாத் இறுதிவரை காண்பதேயில்லையெனினும் புதுவையாரின் இன்னொரு பக்கத்தை இதுவரை எவரும் இவ்வளவு உயிரோட்டமாக எழுதியதை நான் வாசித்ததில்லை என்பேன்.

இந்த நூல் ஒரு கப்பல் பயணத்தை விபரித்தாலும், இதை மிக முக்கியமாக்குவது இதனூடாக அது அன்றையகால ஈழ அரசியலை மிக நுட்பமாகக் கவனப்படுத்துவதாகும். இது தனியே தமிழர்கள் மீது பெரும்பான்மையினரால் ஏவப்பட்ட இனவாதத்தையோ, கிழக்கின் நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றது என்பதையோ, அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த கிழக்கின் இளைஞர்கள் எவராலும் கவனிக்கப்படாது எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையோ மட்டுமில்லாது, தமிழர்கள் தங்களுக்குள் எப்படி சாதியில் பிறரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதையும் நிச்சாமச் சம்பவங்களினூடாக பதிவு செய்கின்றது.

'ஆமிக்காரர்கள் எங்கள் நூலகத்தை எரித்தார்கள், ஆனால் அதற்கு முன் எங்கள் தமிழாக்களே எங்கள் ஊரை எரித்தார்கள்' என்று கப்பலில் சந்திக்கின்ற நிச்சாமத்து குலம் அண்ணை தன் கதையைச் சொல்கின்றபோது நாம் என்றுமே கடக்கமுடியாத கறையை எதிர்கொள்கின்றோம். இங்கே இவற்றையெல்லாம் எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் எந்த உண்மையையும் மறைக்காது எழுதிச் செல்வதே இந்த நூலை மிகுந்த கவனம் பெறச் செய்கின்றது.

ஒரு நூல் தன்னியல்பில் செல்லாது, சிலதைத் தேவையில்லாது வலியுறுத்தும்போதும், வேறு சிலதை மறைக்கும்போதோ நமக்கு அந்த எழுத்து மீது கேள்விகளும், விலத்தலும் ஏற்பட்டுவிடும் ஆனால் இந்த நூல் நமக்குரிய மேன்மைகளைப் போலவே நம் கீழ்மைகளையும் விபரமாகப் பேசுகின்றது. அவ்வாறு நிச்சாமத்தில் ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடைபெற்ற ஆயுதப்போராட்டமே நம் காலத்தில் நிகழ்ந்த முதல் நியாயமான ஆயுதப்போராட்டம் என்பதையும் பதிவு செய்கின்றது. அதேவேளை ஒடுக்கப்பட்டவர்களில் இருந்த மூத்தோர்கள் சாதிக்கெதிரான இந்த ஆயுதப்போராட்டத்தை அவ்வளவு ஏற்றுக்கொள்ளவில்லையென்பதையும் நியாயமாகப் பதிவு செய்கின்றது. அவ்வாறு நிச்சாமத்திலும், கன்பொல்லையும் சாதிக்கெதிராகப் பதின்மத்தில் வெகுண்டு எழுந்தவனை பின்னொருபொழுது ஆனந்தப்ரசாத் சந்திக்கின்றார்.

அந்தப் பதின்மனை, இந்தச் சாதிக்கெதிரான போராட்டத்தைத்தாண்டி இன்னொரு பெரும் போராட்டம் இருக்கின்றதென இயக்கமொன்று போராடக் கூட்டிச் செல்கின்றது. அப்படிப் போகின்ற அந்த இளைஞன், 'அண்ணை மண்ணுக்குப் போராடப் போன என்னை, எங்கடையாக்களையே கொல்லச் சொல்கின்றாங்கள்' என்று வெறுத்து தப்பியோடி வந்து இன்னொரு கப்பலில் வேலைக்கு அவன் வந்து அமர்ந்திருக்கின்றான்..

இதைவிட நாம் கடந்தகாலத்தின் முரணை/அபத்தத்தை எளிதாகச் சொல்லிவிடமுடியுமா? இல்லை, இதை நேரடியாக ஒரு அரசியல் களத்தில் சொன்னால் தங்களின் தரப்புக்கென்று ஒரு அரசியலை மட்டும் வைத்து இன்னும் மற்றமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கேட்கவா போகின்றார்கள். ஆனால் இவ்வாறான எழுத்து அவர்களின் மனச்சாட்சிகளை, அவர்கள் வைத்திருக்கும் rigidஅரசியல் கூறுகெட்டதனங்களை சலனமடையச் செய்யக்கூடும்..

ஆகவேதான் நான் எப்போதும் கலை இலக்கியங்களினூடாக அரசியலைப் பேசுவதன் முக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றேன். எல்லாத் தரப்பையும் ஓரிடத்தில் நின்று யோசிக்க வைக்க நேரடியாக அரசியல் பேசுவதைவிட இவ்வாறான மாற்றுவடிவங்கள் அதிகம் ஈர்த்துக்கொள்ளும். அவ்வாறானவர்களில் திறந்தமனதோடு இருப்பவர்களை முரண் உரையாடலை நட்போடு செய்ய இது அழைக்கும். இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்பேன்..

ஆனந்தப்ரசாத் திருமலையில் இருக்கும்போது அவரின் சைக்கிள் அடிக்கடி பழுதாகும்போது ஒரு சைக்கிள் கடைக்காரரிடம் போவார். அவர் ஒரு சுவாரசியமான மனிதர். சிலவேளை ஆனந்தப்ரசாத்திடம் பணம் இல்லாதபோது ஒரு பாட்டைப் பாடுங்கள் எனக்கேட்டு சைக்கிளைத் திருத்திக் கொடுப்பார். அந்த சைக்கிள்காரர் பின்னர் அந்த இடத்திலிருந்து காணாமற்போய்விடுவார். அவரை ஆனந்தப்ரசாத் கிறிஸிலிருந்து மத்தியதரைக்கடலுக்கு வரும்போது எரிபொருள் நிரப்பும் படகில் காண்கின்றார். இருவரும் ஆரத்தழுவி பழங்கதைகள் பேசுகின்றனர்.

அந்த சைக்கிள்காரரை இலங்கை இராணுவம் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்கின்றது. அவரின் சைக்கிள்கடைதான் இளைஞர்கள் இயக்கங்களுக்குப்போவதற்கு மையமாக இருக்கிறதென்பது இராணுவத்தின் நம்பிக்கை. ஆனால் அவரோ அப்பாவி. இறுதியில் பூஸா வரை கொண்டுசெல்லப்பட்டு அவர் ஆண்குறியில் கம்பி செருக்கபட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உண்மையிலேயே ஒரு இறுதியில் அப்பாவியென விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதற்குள் அவரின் வாழ்க்கை போய்விட்டது. உடல்சார்ந்த இன்பங்களில் இனி ஈடுபடவே முடியாத அளவுக்கு எல்லாமே நிகழ்ந்துவிட்டது. ஒரேயொரு நிகழ்வால் ஒருவரின் வாழ்வு சூறையாடப்பட்டு விடுகின்றது.. இப்படி எத்தனையெத்தனை அப்பாவி மனிதர்களின் வாழ்வு இல்லாமற் போயிருக்கின்றது.

இந்த சைக்கிள்காரரை காலம் உதறித் தள்ளிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் ஆனந்தப்ரசாத்தின் எழுத்தின் மூலம் அவர் நினைவுபடுத்தப்படுகின்றார். அதைத்தான் எழுத்து செய்யும். அதற்குத்தான் இவ்வாறான 'சொல்லப்படாத கதை'கள் தேவைப்படுகின்றன. சிலவேளைகளில் அதற்காகத்தானே நாம் வாசிக்கவும் எழுதவும் செய்கின்றோம் அல்லவா?

**************

(Jun 28, 2022)

கடல்புறாவும் பொன்னியின் செல்வனும் இன்னபிறவும்

Wednesday, November 02, 2022

1.

முகநூலில் ஏதேனும் காணொளிகளை நண்பர்கள் பார்க்க இணைப்பு அனுப்பும்போது, அது அடுத்தடுத்த காணொளிகளுக்குத் தாவிச் செல்லத் தொடங்கி விடுவதுண்டு. அவ்வாறு தற்செயலாக வாலியின் 80 வயது நிறைவில் அவரோடு பலர் உரையாடிய காணொளிகளைத் துண்டு துண்டுகளாகக் காட்டின. வாலியை நான் அவ்வளவாகப் பின் தொடர்ந்து சென்றவனில்லை. கண்ணதாசன் காலத்திலிருந்து கடைசிக்காலம் வரை வாலி அவருக்கான ஓரிடத்தை தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தவர் என்கின்ற மாதிரியான மேலெழுந்த தகவல்களே நானறிந்தவை. அவ்வப்போது அவர் வெகுசன இதழ்களில் எழுதிய கவிதைகள், அவை போன்ற கதைசொல்லல்களை வாசித்தபோதும் அவரைத் தொடந்து செல்ல வசீகரமான காரணங்கள் இருந்ததில்லை. மேலும் எமக்கு ஒருவர் மீது அதீத பற்றிருக்கும்போது அவரோடு போட்டியிடும் ஒருவரை தூர விலக்கிவைக்கும் மனோநிலையாகவும் இது இருக்கலாம். நான் என்னை ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தவனாகச் சொல்பவன். அவரின் இசைக்கு வைரமுத்துவே அன்றைய காலங்களில் நிறைய‌ப் பாடல்களை எழுதியதால் வைரமுத்துவைப் பின்தொடர்பவனுக்கு, வாலி அவ்வளவு ஆகாது போயிருக்கலாம்.


இந்த எதிர்நிலைப்பாடு பலருக்குள் அவர்களை அறியாமலே ஊன்றிப் போயிருக்கும். பாலகுமாரனை என் 11/12 வயதுகளிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டதால், சுஜாதா எனக்கு எதிர்முனையானவர். அதுபோல அந்தக்காலத்தில் சாண்டியல்னை வாசித்து அவரின் நூல்களுக்குள் மூழ்கியதால் கல்கி எதிர்முனையில் நின்றார்.. பிற்காலத்தில் ரஹ்மானுக்காய், வைரமுத்து ஒரு பாடலாசிரியராகப் பிடித்து விட்டதென்றாலும், கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய‌ பதின்மத்தின் முற்பகுதியில் மு.மேத்தாவே எனக்குப் பிடித்தவர் என்பதால் வைரமுத்துவின் கவிதைகளின் பக்கமே போனதில்லை. ஆனால் 15/16 வயதில் ஈர்ப்புற்ற பெண்களுக்கு வாங்கிப் பரிசளித்தது மேத்தாவினதோ, அவருக்கு அடுத்ததாக பிடித்த அப்துல் ரஹ்மானினதோ புத்தகங்கள் அல்ல, வைரமுத்துவின் புத்தகங்களைத்தான். அது ஏனெனில் நமக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட பெண்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்தால்தான் காதல் முகைக்கும் என்கின்ற ஆரம்பப் பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட்டதால் போலும்.


ஆனால் பிற்காலத்தில் எனக்குப் பிடித்த பாடலாசிரியர் வைரமுத்து என்பதை சின்மயி உள்ளிட்ட பெண்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களால்  கைவிட்டிருக்கின்றேன். அது வைரமுத்துக்கு மட்டுமில்லை, பாப்லோ நெரூடா வெள்ளவத்தையில் வைத்து ஒரு தமிழ்ப்பெண்ணுக்குச் செய்தததை 15 வருடங்களுக்கு முன் அறிந்தபோதும் அதுவரை பிடித்தமான‌ நெரூடா எனக்குத் தொலைவில் போனதைக் கண்டிருக்கின்றேன். இதில் யார் சரி, அதையதை அந்தக் காலத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்கின்ற விவாதங்களுக்குப் போவது இரண்டாம்பட்சம். ஆனால் அவர்கள் என்னியல்பிலே என் விருப்பப்பட்டியலில் இருந்து உதிர்ந்து போய்விட்டார்கள். இன்றைக்கும் எனக்குப் பிடித்த வைரமுத்து எழுதிய ரஹ்மான் பாடலையோ, நெரூடாவின் கவிதையையோ பொது வெளியில் பகிரத் தயங்குபவனாகவே இருக்கின்றேன். நான் இவர்கள் மீது வைத்திருக்கும் தயக்கங்கள்/விமர்சனங்களை நன்கறிந்த நண்பர்களிடம் மட்டும்  அவற்றைப் உள்வட்டத்திற்குள் பகிர்ந்துகொள்வேன். அவ்வளவே.


இந்த விலகல் இப்படி பிரபல்யம் வாய்ந்த நபர்களிடம் மட்டுந்தான் வருகின்றது என்பதில்லை. எனக்கு நேரடியாகவோ/ சமூக வலைத்தளங்கள் மூலமோ அறிமுகமான நண்பர்களைப் பற்றியும் இவ்வாறான விடயங்கள் சார்ந்து அறியும்போது என்னியல்பிலே விலகி வந்திருக்கின்றேன். அதற்காய் இவ்வாறானவர்களைப் போன்று ஆகும் agency என்னிடம் இல்லையென்றும் அர்த்தமாகாது.


வாலியின் காணொளியை துண்டு துண்டாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாலி ஒரு குதூகலமான 'இளைஞராக‌' மட்டுமின்றி ஒரு genuine மனிதராகவும் தெரிந்தார். சிலரை நேரடியாகச் சந்திக்கும்போதோ அல்லது இப்படி காணொளியில் பார்க்கும்போதோ எந்தத் தயக்கமுமில்லாது தமது பலவீனங்கள் உட்பட எல்லாவற்றையும் தன்னியல்பிலே மனந்திறந்து பேசுவதைப் பார்க்கலாம். அவர்களே வாழத் தெரிந்த மனிதர்கள்; வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களை விளங்கிக்கொண்டவர்களென நினைப்பதுண்டு.


சர்ச்சைகள் வருவதற்கு முன்னர்கூட வைரமுத்துவை இப்படியொரு மனந்திறந்த மனிதராகப் பார்த்ததில்லை. அன்றைய காலங்களில் வைரமுத்து ஒருவிதமாக‌ இறுக்கமான உடலையும், குரலையும் வைத்திருந்தபோது, எங்களாலேயே இதைத் தாங்க முடிவதில்லை.. அவரின் மனைவி பாவம் எப்படித்தான் தாங்குவாரோயென‌  நகைச்சுவையாக எங்களுக்குள் பேசுவதுண்டு. எழுத்தில் கூட இப்படி தம் எழுத்தை தன்போக்கில் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் படைப்பாளிகள் இருக்கின்றார்கள் இல்லையா என்ன?


2.


சாண்டில்யனின் ஒரு தீவிர இரசிகர் என்பதால் கல்கி எதிர்முனையில் இருந்தார். சுஜாதாவின் சொற்ப படைப்புக்களை வாசித்ததுபோல கல்கியினதும் 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' போன்றவற்றை வாசித்தேனே தவிர பொன்னியின் செல்வன் போன்றவற்றைத் தேடி வாசித்ததில்லை. பின்னரான காலங்களில் இதை வாசிக்க விரும்பியபோதும், அந்த மொழி நடையில் இருந்து விலகி வந்ததாலும் அதன் ஐந்து பாகங்களாலும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. 


இப்போது பொன்னியின் செல்வன் படமாக்கப்படும் ஆரவாரம் இருப்பதால் அதை வாசித்த நண்பரிடம் பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு திரைப்படம் பார்ப்பது நல்லதா அல்லது இல்லையா எனக் கேட்டேன். முழுதாக வாசிக்காவிட்டாலும்  சுருக்கமான பொன்னியியின் செல்வன் இப்போது இணையத்தளங்களில் கிடைக்கிறது, வாசிக்கலாம்/கேட்கலாம் என்றார். அதனால் 1 மணித்தியாலம் எடுத்து பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டேன். அது எந்தளவுக்கு என்றால் ஆதித்த கரிகாலனை எந்த சந்தேகமும் இல்லாமல் நந்தினிதான் கொன்றிருப்பார் என்று நண்பரிடம் சொல்லி, அவரைத் திகைக்க வைக்கும் அளவுக்கு அது போய்விட்டது.


என்னதான் பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் வாசித்தாலும், அது எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், எங்கள் சாண்டியல்னை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே நண்பரிடம் என்ன பொன்னியின் செல்வனின் ஒரு நல்ல யுத்த விபரணையும் இல்லைப் போலிருக்கின்றதே, எங்கள் கடல்புறாவைப் பாருங்கள், கடல்புறா கடலில் அதன் சிறகை விரிக்கும்போது வீரர்கள் அது கடலாக இருந்தாலும் எதிரிக்கலங்கள் மீது பாய்வார்கள், நாணேற்றி அம்புகளை எய்வார்கள், எரியம்புகளை அள்ளியெள்ளி வீசுவார்கள். உங்கள் பொன்னியின் செல்வனில் எல்லாமே சூழ்ச்சியும் வாதுமாக இருக்கின்றதே தவிர‌  தமிழ் மறவர்களின் தோள் துடிக்கும் போர்க்காட்சிகளே இல்லை, அவமானம் என்றேன். 


இல்லை, இலங்கையில் அருண்மொழியும், வந்தியத்தேவரும் சண்டைபிடிக்கும் ஒரு காட்சி இருக்கின்றதென்றார். நானோ கடல்புறாவின் முதல் பாகத்தில் இளையபல்லவனும் காஞ்சனாதேவியும் கலிங்க மன்னனிடம் இருந்து தப்பும் ஒரு காட்சிக்கு இது கால் தூசிக்கும் வராதென்றேன். இளையபல்லவன் வாள் வீச, பாரசீக வீரன் அமீரும், சீன மறவன் அகூதாவும் துணையிருக்க, காஞ்சனாதேவி நாணேற்ற நடக்கும் சண்டைக்கு (அப்படி நடக்கும்போதுகூட‌ நம் சாண்டில்யன் காஞ்சனாதேவியின் மார்புக்கச்சையை விபரிக்கும் இடம், தமிழ் மரபில் வீரமும் காதலும் இரண்டறக் கலந்திருப்பதை எப்படி இலாவகமாய்க் கொண்டு வந்திருக்கின்றார், கவனிக்க) கிட்டவாகக் கூட பொன்னியின் செல்வனின் ஒரு யுத்தகளத்தை உதாரணத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பொன்னியின் செல்வனை முழுதாக வாசிக்கின்றேன் என்றேன். 


அவ்வளவுதான். அத்தோடு அந்த நண்பர் இனி பொன்னியின் செல்வன் படம் வரும்வரை என்னோடு பேசுவதில்லையெனப் போய்விட்டார். ஒரு நட்பா, கடல்புறாவா முக்கியமென்றால், எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சாண்டில்யன் எங்களுக்கு அன்றே சொல்ல்விட்டார். என்னதான் ஈர்ப்பு இருந்தாலும் மஞ்சளழகியை கைவிட்டு காஞ்சனாதேவியிடந்தானே இளைய பல்லவன் சரணடைக்கின்றார். பிறகு அநபாயச் சோழன் போன்ற நல்ல உள்ளங்கள்தான் ஒரு வீரனுக்கு இரண்டு தோளும் துடித்தால்தான் அழகு, ஒற்றைத் தோள் துடிக்க காஞ்சனாதேவியோடு மட்டும் இருப்பது நல்லதில்லை என்று மஞ்சளழகியையும் இளையபல்லவனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்கின்றனர். பொன்னியின் செல்வனில் என்ன நடக்கின்றது? ஆதித்த கரிகாலனின் காதலையும் கைவிட்டு பழுவேட்டரையும் திருமணம் செய்துவிட்டு, நந்தினி அவனின் உயிரையும் அல்லவா எடுக்கின்றார். 


இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு காஞ்னாதேவியும், மஞ்சளழகியும் சேர்ந்து வாழ்வை இரசித்த எங்கள் கருணாகரத் தொண்டமான் வேண்டுமா, இல்லை நந்தினிக்காக உயிரையை இழந்த ஆதித்த கரிகாலன் வேண்டுமா?


***********************

(Aug 04, 2022)