கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் நடந்தது என்ன?

Saturday, December 31, 2022


லங்கையில் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருப்பவை பின்நவீனத்துவ காலகட்டத்துக்கான மிகச் சிறந்த உதாரணம். இதை எந்த மார்க்சியரும் ஒரு இடதுசாரிப் புரட்சி என்று முழுமையாக உரிமை கோரமுடியாது. மார்க்ஸியர்களின் பங்களிப்பு இருக்கின்றதென -அது எவ்வகையான போராட்டமாக இருப்பினும்- சொல்லமுடியுமே தவிர இது முற்றுமுழுதான இடதுசாரிப் போராட்டம் அல்ல என்பது எவருக்குமே எளிதாகப் புரியும்.


1968 இல் பாரிஸில் மாணவர்கள் போராடத் தொடங்கியபோது, சார்த்தர் போன்ற அறிவுஜீவிகள் அது ஒரு பெரும் புரட்சியாக மாறுமெனக் கனவு கண்டார்கள். ஆனால் அது அப்படியாக நிகழவேயில்லை. பின்னர் ஈரானில் கலாசாரப்புரட்சி நிகழ்ந்தபோது ஃபூக்கோ போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அதற்கு ஆதரவளித்தனர். அதுவும் நம்பியதற்கு மாறாக வேறொரு திசையில் சென்று முடிந்தது. அண்மையில் நடந்த அரபு வசந்தம் மிகுந்த நம்பிக்கையோடு முகிழ்ந்தபோதும் பின்னர் திசைமாறியதை அவதானித்திருப்போம்.

இலங்கையில் நடந்ததைப் போல மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமென என்னைப் போன்றவர்கள் நம்பிய occupy wall street ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம்பிக்கையுடன் நிகழ்ந்தபோதும், பணக்கார 1% வீதத்துக்கு எதிரான 99% க்கு ஆதரவாக நடத்தப்பட்டபோதும், எவ்விதப் பெரும் மாற்றங்களையும் காட்டாமலே முடிந்துபோனது. இந்தப் போராட்டங்களை ரொறொண்டோவிலும், லண்டனிலும் நேரில் பார்த்திருக்கின்றேன். முற்றுமுழுதான முதலீட்டிய நாடுகள் நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாது மிகக் கவனமாக இவ்வகைப் போராட்டங்களைப் பார்த்துக்கொள்ளும். நாசூக்காய் இவ்வகைப் போராட்டங்களை அவற்றுக்குக் கையாளவும் தெரியும். ஆனால் இந்தப் போராட்டங்கள் நடந்தபோது கைக்கொள்ளப்பட்ட பல விடயங்களையே GotaGoGama காரர்கள் உள்வாங்கியிருந்தனர் என்பது வெளிப்படையானது. ஒவ்வொரு போராட்டங்களும் அவை தோற்றவையாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்களை வைத்திருக்கவே செய்கின்றன.

ஆக இனியான மாற்றங்கள் இப்படியாக சடுதியாக நிகழுமே என்பதைத்தான் பின்நவீனத்துவமும் பின்நவீனத்துவவாதிகளும் எதிர்வு கூறியிருந்தனர்.

நமக்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டம் என்றாலும் லியோதார்த் 'பின்நவீனத்துவ நிலவரத்தை'ப் பற்றிப் பேசும்போது மார்க்ஸிசம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை நிராகரிக்கின்றார். அதற்கு முக்கிய காரணங்களாக தொழில்நுட்பத்தையும், வெகுசன ஊடகங்களின் பெருக்கத்தையும் (1970 இன் பிற்பகுதியில்) அவர் முன்வைக்கின்றார். அன்று லியோதார்த் எதிர்வுகூறியதை இன்றைய சமூகவலைக்காலத்தில் நடக்கும் போராட்டங்களினூடாகத் தெள்ளிடையாகப் பார்க்கின்றோம்.

நான் மிகவும் நெருக்கமாக உணரும் தெரிதா எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல என்று கூறிவிட்டு அருமையாக ஒரு விளக்கம் தருவார். எதிர்காலம் என்பது கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியது என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா.

தெரிதா சொல்வதற்கு நிகரான ஒன்றுதான் இப்போது இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பது. முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகையாக இந்தப் போராட்டம் நிகழ்ந்து, நவீன துட்டகைமுனுவாக சிறுபான்மையினரின் குரல்களை நசுக்கித் தங்களுக்கான மகாவம்சத்தை எழுதியவர்களை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சேர்த்து வீழ்த்தியிருக்கின்றார்கள்.

(ஒருகாலத்தில் மிக ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்த பின்அமைப்பியல்/பின்நவீனத்துவத்தைக் கற்பதிலிருந்து என்றோ விலகி வந்துவிட்டேன். ஆனால் இன்றும் எனக்கும் அவை நெருக்கமானவை. இலங்கைச் சூழலில் இப்போது நிகழும் மாற்றங்களை விளங்கிக்கொள்பவர்கள் இந்தப் பின்னணியோடும் ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட அவசரக் குறிப்பே இது)

*****************

(July 14, 2022)

அ.இரவியின் 'PKM என்கின்ற புகையிரத நிலையம்'

Thursday, December 22, 2022

 1.

அ.இரவியின் பெரும்பாலான படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அவர் என் தமிழாசிரியர் என்பதால் மட்டும் அல்ல, அவரின் சிறுகதைகளையும், பத்தியெழுத்துக்களையும் 'சரிநிகரில்' வாசிக்கத் தொடங்கிய என் பதினைந்து/பதினாறுகளிலேயே அவரென்னை வசீகரித்தவர். 'காலம் ஆகி வந்த கதை' அவரின் முக்கிய படைப்பென்பேன். 'பாலைகள் நூறு'க்கு விரிவாக என் வாசிப்பைப் பதிவு செய்திருக்கின்றேன். அவரின் '1958' முக்கியமான வரலாற்று ( 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அமுலாக்கத்தின் பின் வந்த இனக்கலவரம் ) நிகழ்வைப் பதிவு செய்கின்றதெனினும், அதில் துருத்திய சில சிக்கல்களையும் எழுதியதாகவும் நினைவு.


அண்மையில் வெளிவந்த 'PKM என்கின்ற புகையிர நிலையம்' என்கின்ற படைப்பை என்ன வகைக்குள் அடக்குவதென்று சற்றுக் குழப்பமிருந்தாலும் ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கலாமெனத் தோன்றுகின்றது. 


இது ராசா என்றழைக்கப்படுகின்ற சிறுவன் வயதுக்கு வரும் ஒரு புதினமெனச் சொல்லலாம் (coming of age). ஆனால் இதில் ராசா என்பவனின் குழந்தைப் பருவம், பதின்மம் ஆகுவதைக் கவனப்படுத்துவதை விட அவனின் மாமாவாகிய வாழ்க்கையே அதிகம் கவனப்படுத்துகின்றது. ஒருவகையில் இது அந்த மாமாவின் கதையெனத்தான் அடையாளப்படுத்த வேண்டும். பிள்ளைகளே இல்லாத அந்த மாமாவை தன் பிள்ளைகளைப் போல ராசாவின் மீதும், ராசாவின் சகோதரியின் மீதும் பாசம் காட்டுகின்றார். இந்தப் புதினம் எனக்குத் தெரிந்த கிராமங்களின் பின்னணியில்  எழுதபப்ட்டதால், என்னால் எனக்கு அறிமுகமான இடங்களின் வரைபடங்களைப் பிந்தொடருவதும் ஒருவகையில் சுவாரசியமாகவும் இருந்தது. 


ஒன்று எனது அம்மாவின் ஊருக்கு அருகிலிருந்த கீரிமலை. மற்றது நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இருந்த அளவெட்டி. எப்படி சிறுவயதில் செங்கை ஆழியானின் 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' வாசித்தபோது கதை நிகழ்வது எனக்குத் தெரிந்த வழித்தடங்களென ஒருவகை சிலிர்ப்போடு வாசித்தேனோ, அவ்வாறான ஒருவித நிறைவோடு இரவியின் இந்தப் புதினத்தையும் வாசித்தேன்.


ராசாவின் சின்னமாமா, அவர்  ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிற்பாட்டி, ரெயில் நிலையத்தில் வேலை செய்கையில் 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களத் திட்டத்தில் அரசாங்க வேலை இழப்பது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்த குடிக்கு அவர் அடிமையாதல், தன் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அதன் நிமித்தம் மனப்பிறழ்வுக்கு ஆளாதல் என அருமையான மனிதனின் வீழ்ச்சியை இந்தப் புதினத்தில் காண்கின்றோம். இந்தப் புதினம் அந்த மாமாவின் புறவயமான உலகை மட்டுமில்லை, இதில் வரும் மற்றப் பாத்திரங்களையும், கதை நிகழும் சூழல் பின்னணியையும் நுட்பமாக விபரிக்கின்றது. கீரிமலைக் கேணிக் குளியல்கள், யாழ்ப்பாணத்துக்குரிய பிரத்தியேக உணவு வகைகள் என்பவை சிலாகித்துச் சொல்லவேண்டியவை. ஆனால் இதன் சிக்கல் என்னவென்றால் எந்தவகையில் புறவயமாகக் கதை சொல்லமுயன்றதோ, அதேயளவுக்கு இது பாத்திரங்களின் அகவயத்துக்குச் செல்ல அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்பதேயாகும்.



2.


தமிழில் இப்போது விமர்சனக் கோட்பாடுகளில் ஒரு பகுதியாக இருக்கும் அழகியல் விமர்சனத்தையே ஒரு தனித்த விமர்சனமாகக் காட்டும் அபத்தம் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். அழகியலும் விமர்சனக்கோட்பாடுகளில் ஒரு பகுதியே தவிர அதுமட்டுமே படைப்புக்களைப் பார்க்க அளவீடாக இருப்பதில்லை. அதேபோன்று ஒரு சில பாத்திரங்கள் மட்டும் இருந்து ஒரு புதினத்தை எழுதிவிட்டாலே 'தட்டையானது' என்று சொல்கின்ற எரிச்சலான குரல்களையும் பார்க்கின்றோம். என் பார்வையில் 'தட்டையானது' எதுவெனில், வாசிக்கும் நம்மை நாவல்களிலிருக்கும் பாத்திரங்களுக்குள் ஒன்றிக்கவிடாது புறம்தள்ளிக் கொண்டிருப்பவற்றை என்பேன். 


ஈழத்து/புலம்பெயர் நாவல்களில் முக்கிய பலவீனமாகப் பார்ப்பது இப்படி நாம் புறவயமாகக் கதை சொல்லல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அகவயமான தேடல்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதாகும். இன்று ஒரளவு கவனம் பெற்ற புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கூட இதில் அதிக விதிவிலக்குகளல்ல. அவர்களில் சிலர் இந்தப் பலவீனத்தை தமது கச்சிதமான எழுத்து நடையில் கடந்து செல்ல முயற்சிக்கின்றனரே தவிர, இன்னும் அகவயமான கதை சொல்லல் முறைக்கு ஆழமாகச் செல்லவில்லை என்றே சொல்வேன். 


இதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கு நாம் நகுலனை, மெளனியை, லா.ச.ராவை வாசிக்கும்போது எளிதாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் நமக்குச் சொல்லும் புறவயமான கதைகள் மிகவும் சுருங்கியது. ஆனால் அகவயமான ஆழமான தேடல்களுக்கு அவர்கள் தம் பாத்திரங்களினூடாக நம்மை அழைத்துச் செல்கின்றார்கள். ஆகவேதான் அவர்கள் நமக்குப் பரிட்சயமற்ற சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு சென்றாலும், நமக்கு நெருக்கமான படைப்புக்களாக அவை இருக்கின்றன.  அதுவே, இன்றும் என்னைப் போன்ற அவர்களின் தலைமுறையைத் தாண்டிய பலரை அவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடி வாசிக்க வைக்கின்றது.  அவர்கள் காலத்தின் முன் இன்னமும் உதிராது புதிது புதிதாய் மலர்ந்தபடி இருக்கிறார்கள்.


இங்கே இரவியின் இந்தப்புதினம் சிறுவனின் அகவயமான எல்லாத் தேடல்களையும் புறவயமான நிகழ்வுகளில் மட்டும் கவனஞ்செலுத்திக் கடந்து போவதைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த மாமா என்ற பாத்திரத்திற்குள் உள்ளே இறங்காததால், அவரின் வீழ்ச்சியைக் கூட வாசிக்கும் நாம் இன்னொரு மூன்றாம் மனிதரின் சரிவாகப் பார்க்கின்றோமே தவிர, நம்மைப் போன்ற ஒருவரின் வாழ்வு இப்படி வீணாகிவிட்டதே என்ற கழிவிரக்கம் அவ்வளவு வராது தாண்டிப் போகின்றோம். இந்தப் புதினத்தில் அந்த மாமாவின் மீது அவ்வளவு காதலும், அதேசமயம் அவரின் வன்முறையைத் தாங்கியபடி இருக்கின்ற அந்த மாமி பாத்திரத்தை விரித்தெழுத எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அது தவறவிடப்பட்டிருப்பதும் கவலையானது.


இலக்கியப் படைப்புக்களால் ஆனாலென்ன, திரைப்படப் பிரதிகளாய் இருந்தாலென்ன, நம்மிடம் சொல்வதற்கு எண்ணற்ற கதைகள் -அதுவும் மூன்று தசாப்தகாலத்தை போருக்குக் காவுகொடுத்த- நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அதை எப்படிச் சொல்லப்போகின்றோம் என்பதும் எழுதுகின்ற/படைக்கின்ற நம்மெல்லோருக்கும் முன்னாலுள்ள சவால். அதையறியாதுவிடின், அதில் கவனங்கொடுக்காவிடின், நாம் அவ்வவ்ப்போது ஒன்றிரண்டு நல்ல படைப்புக்கொடுத்துவிட்டு வால் நட்சத்திரங்களாக மறைந்து விடுவோம் என்பதாகத்தான் ஆகிவிடும். சில படைப்புக்களை வாசிக்கும்போது அது எழுதியவர்களின் ஆன்மாக்களிலிருந்து விகசித்து எழுந்துவந்ததென்பதை  நாம் உணர்ந்து, சில கணங்களாவது அதை வாசித்து முடிக்கும்போது அப்படியொரு நிறைவு வந்து கண்களை மூடி யோசிப்போம் அல்லவா?  இன்று எண்ணற்ற படைப்புக்கள் வரும் சூழலில், அவை நிகழ்வது மட்டும் ஏன் அரிதாக இருக்கின்றது என்பது பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.


000000000000000


(Dec 22, 2021)

இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022


1.


கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?


எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச் சாத்தியங்களையும் கொண்டு வரும். ஆகவேதான் ஸென்னில் தொடர்ந்து தொடக்கநிலை மனதை (beginner’s mind) பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கற்றுத் தேர்ந்துவிட்ட ஒரு மனதிலிருந்து புதிதாய் எதுவும் முகிழ அவ்வளவு சாத்தியமிருப்பதில்லை. இளவேனில் காலத்துக்கான துளிர்கள் மெல்ல அரும்புவது, அந்தத் ‘தொடக்கநிலை’யை நமக்குக் காட்ட விரும்பும் இயற்கையின் குதூகலம் போலும். 


இதற்கு முன் அந்த அரும்புகள் மரத்தின் எந்தப் பாகத்தில் மறைந்து இருந்தன. இனி தளிராகி, குருத்திலையாகி, கடும்பச்சை நிறமாவதற்கான பச்சையத்தை இந்தத் துளிர்கள் எதில் ஒளித்து வைத்திருக்கின்றன.


இதைத்தான் இன்னொருவகையில் ஸென் ‘நாம் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை’ என்று சொல்கின்றது. இதை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்து வாசித்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை. நாம் பிறக்கும்போது அதுவரை எங்கோ ஒரு 'சூனியத்தில்' இருந்த ஒன்று உடல் என்கின்ற வடிவத்தைப் பெறுகின்றது. பின்னர் இறப்பின்போது மீண்டும் வெறுமைக்கு அல்லது சூனியத்துக்குத் திரும்பிப் போகின்றது. 


இல்லாமையிலிருந்து இருத்தல்களும், இருத்தல்களிலிருந்து இல்லாமைகளும் ஒரு வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதால் 'எதுவும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை' என்பதை, வார்த்தைகளின் எளிய அர்த்தத்தைத்தாண்டி, ஆழமாய் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதானதும் இல்லை.


2.


வழமையாக ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவிற்கு நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பவன், ஆனால் இப்போது பாலத்துக்குக் கீழே திருத்தும் வேலை நடப்பதால், அந்தப் பாதையை இடையில் மூடிவிட்டார்கள். வேலை ஒன்றை எப்படி இழுத்து இழுத்துச் செய்வதில் நமது நகரத்தார் புகழ்மிக்கவர்கள் என்பதால் எப்படியும் இந்த கோடையில் அதைத் திறக்க மாட்டார்கள் என்பது உறுதியென அவன் நினைத்துக்கொண்டான். மேலும் புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை சொன்னது மாதிரி, ‘எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை' என்பதால் இது குறித்து எந்தப் பொல்லாப்புமில்லை. ஆனால் நமக்களிக்கப்படும் வாய்ப்புக்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சந்தர்ப்பங்கள் மாறமுன்னர் அதையதை அனுபவித்துவிடும் விழிப்பு இருத்தல் முக்கியம். அனுபவித்தவற்றை விட, தவறவிட்டவைகளின் கழிவிரக்கத்தில் கழிந்த கடந்தகாலங்களை எண்ணி அவனுக்கு மெல்லிய சிரிப்பும் வந்தது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்குந்தான் எவ்வளவு பெரிய‌இடைவெளி!


நல்லவேளையாக கடந்த கோடையில் இன்னொரு மாற்று பாதையைக் கண்டடைந்துவிட்டதால், அடைபட்ட வழி குறித்து கவலைப்படாது புதிதாய்க் கண்டுபிடித்துவிட்ட தடங்களில் அவன் நடக்கின்றான். அங்கே பெருமரங்களும், மழைநீர் சேர்ந்து சலசலத்தோடும் சிற்றாறும் இருப்பதால் அது ஓர் அருமையான வழித்தடம். ஆகவே ஒரு பாதை அடைபட்டால் எல்லாம் முடிந்துவிட்டதெனக் கவலைப்படத் தேவையில்லை. வேறொரு வழி நாம் அதுவரை கண்டுணராத‌புதிய அனுபவங்களைத் தருவதற்காக திறபடலாம். 


இது பாதைக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும்.


நடப்பதற்கான ஒரு வட்டப்பாதையை வழமைக்கு மாறாக, நடந்து முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குகின்றான். அதே பாதை, ஆனால் வேறொரு கோணத்தில் பார்வைகள் மாறுகின்றன. முன்னர் ஏறவேண்டிய மேட்டு நிலம் இப்போது சரிவான பள்ளமாக‌-தேர்ந்தெடுத்த பாதையின் நிமித்தம்- புதிய அவதாரம் கொள்கின்றது. ஆக ஒரே பாதையில் நடந்திருக்கக் கூடியவர்கள், அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் திசையின் நிமித்தம் அதன் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும்போது, ஒருவர் தான் சொல்வது/பார்த்ததுதான் உண்மையென விவாதிப்பது எவ்வளவு தூரம் சரியான பார்வையென்பது கேள்விக்குரியதே. ஆகவேதான் ஸென், நல்லது, கெட்டது என எதையும் அடையாளப்படுத்த வேண்டாமெனச் சொல்கின்றது.  எதைக் காண்கின்றோமோ அதை அப்படியே பார்க்கச் சொல்கின்றது. எந்த லேபிள்களும் எதற்கும் ஒட்டாதிருக்கத் தெரிந்தவர்கள் மேன்மக்கள். 


ஒருவர் ஞானமடையத்தான் தியானம் செய்கின்றார் என்றால், அந்தக்கணத்திலேயே நிர்வாணம் அடைவதிலிருந்து அவர் விலகிப் போய்விடுவார் என திரும்பத் திரும்ப ஸென் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. 


மரங்கள் இன்னமும் முழுமையாகப் பசுமை போர்க்கவில்லை, ஆனால் பொன்மஞ்சள் நிறத் தளிர்கள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்களே இல்லாத பொழுது இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது. இன்னொரு வகையில் நாங்கள் எமது எல்லா 'பைத்தியக்காரத்தனத்தோடும்' தனிமையில்தான் இயல்பாக இருக்க முடிகிறது. நதி ஓடும் ஒலியை, அது உருவாக்கும் குமிழ்களை, வாத்துக்கள் பறந்து நீரில் சிறகுகள் நனைப்பதை என எல்லாவற்றையும் ஆறுதலாக அவதானிக்க அவனது மனதுக்குள் ஒரு வெம்மை பரவுகிறது 


வழமையாக நடக்கத் தொடங்கும் பாதையெனில் அங்கே ஒரு பெரும் சாம்பல்கல் இருக்கும். அதில் அமர்ந்தபடி நதியை இவன் பார்ப்பான். சிலவேளை அப்படியே விழிகளை மூடியபடி அமைதியில் அமிழ முயல்வான். ஒருநாள் இந்தச் சூழலில் அவ்வளவு காணமுடியாத ஒரு பச்சைப் பாம்பு அருகில் வந்து எட்டிப் பார்த்ததைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றான். பாவம் அந்தப் பாம்புதான் என்ன செய்யும். அதன் வசிப்பிடத்துக்கு மனிதன் ஒருவன் வந்து இடையூறு செய்தால் அது விநோதமாக வேடிக்கைதானே பார்க்கச் செய்யும்.


3.


'ஓநாய் குலச்சின்னம்' நாவலில் கால்நடைகளை மேய்த்தபடி புல்வெளிகளை அழியாமல் வைத்திருக்கும் நாடோடிகளுக்கு ஓநாய்கள் தெய்வத்துக்கு நிகர்த்தவை. ஒநாய்களைத் தேவையில்லாமல் கொன்றாலோ, பழிவாங்கினாலோ அவர்கள் டெஞ்ஞர் என்ற சொர்க்கத்துப் போகவே முடியாது. நாடோடிகளையும் அவர்களின் கால்நடைகளையும் அடிக்கடி காயப்படுத்திக் கொல்லும் ஓநாய்களுக்கே, தமது இறந்த உடல்களை இந்த நாடோடிகள் உண்ணக் கொடுக்கின்றனர். நன்றாக ஓநாய்களால் உண்ணப்படும் உடலே உடனே சொர்க்கத்துக்குப் போகும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவேதான் சீனக்காரர்களுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, என்றாலும் சிலபகுதிகளில் நாய்களைச் சாப்பிடுவார்கள் என்று இந்த மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடிகள் அறியும்போது, 'எப்படி உங்களால் நீங்கள் வெறுக்கும் ஒரு பிராணியை பிறகு உணவாகச் சாப்பிட முடிகின்றது' என்று கேட்கின்றனர். 


இப்போது எதிர்த்திசையில் நடந்துகொண்டிருப்பதால், ஆறு ஓடும் கரையில் இருந்து 'ஸென் மனம்; தொடங்குபவர்களின் மனம்' கேட்கத் தொடங்குகின்றான். எப்போது எதில் அவன் அமிழ்ந்து தன்னைத் தொலைத்தானோ சட்டென்று கட்டுக்கயிறு இல்லாது வந்த நாயொன்றால் விழித்தெழுகின்றான். நாய்களைப் பிடிக்கும், ஆனால் சிறுவயதில் பல நாய்களிடம் ஆறாத்தழும்புகளையெல்லாம் பெற்றுவிட்டாதால், எப்போதும் ஒரு பயம் அவனுக்கிருக்கும்.  அந்த நாயை வளர்ப்பவர் தூரத்தில் வர, அருகில் வரும் நாயை அரவணைப்பதா, இல்லை துரத்துவதா என்ற குழப்பமெழ, தகாதகர் கூறிய மத்தியபாதையே நல்லதென துரத்துவதைப் போல மெல்ல pet செய்து விடுகின்றான்.


'அந்த மனிதன் சும்மா தன்பாட்டில் இருக்கின்றான், அவனையேன் கஷ்டப்படுத்துகின்றாய், அன்பே' என்று நாயின் சொந்தக்காரர் சொல்லியபடி வருகின்றார். 'பரவாயில்லை' என இவன் சொல்கின்றபோது, 'இந்த நாள் அழகான நாள்' என்று சொல்லியபடி அவர் கடக்கின்றார். இவன் நினைவுகளில் மூழ்கின்றான். 'ஓநாய்குலச்சின்னத்தில்' நாடோடிகளின் வாழ்க்கையைக் கற்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் செல்லும் சீன மாணவன் ஒரு ஓநாயை,  குகையில் இருந்து குட்டியாக எடுத்து வளர்க்கின்றான். அதற்கு பால் கொடுக்க ஒரு நாயைத் தேர்ந்தெடுத்து, அதன் பிற குட்டிகளோடு இந்த ஓநாயையும் சேர்த்துவிடுகின்றான். நாய் எப்படிப் பால் கொடுத்தாலும் ஓநாய் தன்னியல்பை விடாது மூர்க்கமாகவே நடந்துகொள்ளும். 


ஆண் என்பதாலோ அல்லது தன்னியல்பாகவே வந்துவிட்ட மமதையோடு அவன் போனால் கூட, தம் நெஞ்சங்களைத் திறந்து அரவணைத்த காதலிகளை நினைத்துக் கொள்கின்றான். தானொரு ஓநாய்தான், ஒருபோதும் கருணையுள்ள நாயாக மாறமுடியாது அதில் சந்தேகமில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றான்.


4.


ஜப்பானிய தேநீர் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய Sen Rikyu, ஒவ்வொரு தேநீர் நிகழ்வின்போதும்,  தான் ஒவ்வொரு கணங்களிலும் இறந்து பிறப்பதாகச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவ்வளவு விழிப்புடன் அந்தத் தேநீர்க்கலையை நிகழ்த்தும் அற்புதம் பெற்றவர் அவர். தியானம் மூலம் வரும் விழிப்பும் இப்படி கணங்களில் இருந்து எழுவதேயாகும். இவ்வாறு கணங்களில் இருப்பையும் இறப்பையும் கண்டுணர்கின்ற Sen Rikyu, தன்னோடு சூழவிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தேநீர் விருந்தை இறுதியாகக் கொடுத்துவிட்டு தனக்கான தற்கொலையை நிதானமாகச் செய்து கொளகின்றார். ஒவ்வொரு கணங்களில் இருப்பையும், இறப்பையும் கண்டுணர்ந்தவர்க்கு, உடல் நீங்கிச் செல்லல் அவ்வளவு கடினமாக இருக்காது போலும்.


அவன் நடந்த தன் வட்டத்தைப் பூர்த்தி செய்யும் இடத்துக்கு வந்தபோது, நாயோடு எதிர்த்திசையில் போனவரை மீண்டும் சந்திக்கின்றான். எதிர்த்திசை என்றாலும் வட்டம் உங்களை மீண்டும் சந்திக்க வைக்கும். நல்ல மழை பெய்ததால் உலாப்போகும் பாதை பல இடங்களில் சகதியாக இருந்ததை அவன் ஏற்கனவே அவதானித்திருந்தான். நாயோடு வந்தவர், ‘நான் வந்தவழியில் சறுக்கிவிழுந்துவிட்டேன், நீ கவனமாக நடந்துபோ என்று தனது சேறு அப்பிய ஜீன்ஸைக் காட்டுகின்றார். ‘கவனமாக நடப்பேன், எச்சரித்தமைக்கு நன்றி’யென அவருக்கு விடைகொடுத்து நகர்கின்றான்.


வீட்டுக்கு வந்தவுடன் பின் வளவில் நேற்று சிறுதளிராக இருந்த மரத்தில் இருந்தவை அனைத்தும், பொன்மஞ்சள் சிற்றிலைகளாக‌விரிந்து காற்றில் அசைவதை ஒருநாளில் நடந்துவிட்ட அற்புதமென நினைக்கின்றான். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது பின்னிரவில் ஆஸ்மா தொந்தரவு செய்கின்றது. தலையணைகளை முதுகில் வைத்து நிமிர்ந்து இருந்தால் கொஞ்சம் சுகமாகவிருக்கும். ஆனால் இதுவும் ஓர்நாளில் சட்டென்று நடந்துவிடக் கூடியது நிகழ்வுதான். ஒவ்வொரு கணத்திலும் இறப்பும் இருப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தால் இதையும் சகித்துக் கொள்ளலாம். ஓர் அழகான நாளைப் போல இதுவும் கடந்துபோகும்.


ஒருபோதும் தம்மை வந்தடையும் பாதைகளை மூடிவிடாத காதலிகளின் கருணையின் பொருட்டும், இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!


****************


(நன்றி: "அம்ருதா" -மார்கழி, 2022)


கே.ஆர். மீராவின் 'கபர்'

Thursday, December 15, 2022

தமிழில் - மோ.செந்தில்குமார்


 'கபர்' மிகச் சிறிய நாவல். குறுநாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஏழு அத்தியாயங்களே உள்ள ஒரு புனைவு. எனினும் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதிக பாய்ச்சல்களை ஏற்படுத்தும் என்று நம்பிய மாய யதார்த்த கதைகள், பின்னர் மொழியை மட்டும் கடுமையாக்கி பாவனைகளைச் செய்யச் தொடங்கியபோது அது எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை. ஆனால் மலையாளத்தில் அந்தவகை எழுத்துக்களுக்கான இடம் இன்னுமிருக்கின்றது போலும். மிகக் குறைந்த பக்கங்களில் கூட ஒரு மாய யதார்த்தப் புனைவைச் சொல்ல முடியும் என்பதற்கு கே.ஆர்.மீராவின் இந்த நாவலை உதாரணமாகச் சொல்லமுடியும்.

பாவனா என்கின்ற நீதிபதியின் முன்,விற்கப்பட்ட ஒரு காணியில் இருக்கும் கபரை இடிப்பதற்கான தடை செய்வதற்கான வழக்கு வருகின்றது. அதிலிருந்து பாவனா என்கின்ற் நீதிபதியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகின்றது. ஒரு கபரிலிருந்து வரலாறு பின்னோக்கி நகர்கின்றது. யதார்த்தத்தில் நடக்கவே முடியாத பல விடயங்கள் நிகழத்தொடங்கின்றன.

கே.ஆர்.மீரா
இவ்வாறு வழக்கு நடக்கும்போது பாவனாவின் குடும்பக் கதைகள் சொல்லப்படுகின்றன. பாவனாவின் குடும்பத்தில் 'தாரவாடு' என்று அழைக்கப்படும் தாய்வழி கூட்டுக் குடும்பங்களில் தலைவர் ஒருவர் எப்போதும் இருப்பார். அவர்களின் வீட்டில் அப்படியான 'காரணமானவர்' யாரும் படுத்த படுகையாகக் கிடந்து சாவதில்லை என்பது ஜதீகம். வயதாகிவிட்டது என்று அவர்களுக்குத் தோன்றும்போது குடும்பப் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு காசிக்குப் புறப்பட்டுவிடுவார்கள். அவர்கள் போகும்வழியிலோ அல்லது காசிக்குப் போய் கொஞ்சக்காலம் இருந்துவிட்டோ இறந்துவிடுவார்கள். அப்படிப் போனவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பதால் யாருக்கும் இந்தக் குடும்பங்களில் நீத்தார் கடன் செய்வதில்லை.
இப்படியான காசிக்குப் போகும் மரபில் யோகீஸ்வரன் மாமா என்கின்ற ஒருவர் மட்டும் காசிக்குப் போய்விட்டு 5 வருடங்களில் திரும்பிவருகின்றார். அவர் திரும்பிவரும்போது தனியே வரவில்லை. இரண்டு பெண்பிள்ளைகளையும் கூட்டிவருகின்றார்.
அந்த யோகீஸ்வரனை அவரின் மூத்த மருமகன் நுட்பமாகக் கொலை செய்தார் என்றும், இல்லை அவர் தடுமாறிக் கீழே விழுந்து இறந்தார் என்றும் வெவ்வேறு ஜதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான யோகீஸ்வரன் மாமாவுக்கும், இப்போது சமகாலத்தில் வழக்கு வந்த இந்த இஸ்லாமியர்களின் கபருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த நாவலின் மைய முடிச்சு.

ந்த ஜதிகக் கதை/வழக்குகளுக்கிடையில் பாவனாவின் சமகால வாழ்க்கையும் சொல்லப்படுகின்றது. அவர் திருமணம் செய்த பிரமோத், இவர்களுக்கு ஒரு ADHD குழந்தை பிறந்தபின் விலத்திச் போய்விடுகின்றார். தனித்த ஒரு தாயாக இருந்த இந்த ADHD குழந்தையை வளர்க்கும், சமாளித்து தன் நாளாந்தங்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தனித்த வேலை செய்யும் தாயின் அவதிகளையும் மீரா அவ்வளவு தத்ரூபமாக எழுதிச் செல்கின்றார். சாதாரணமாக ஒரு தனித்த தாயாக இருந்து பிள்ளையை வளர்ப்பதென்பதே கடினமாக இருக்கும்போது ஒரு ADHD குழந்தையையும் வளர்ப்பதென்பது வாசிக்கும் நமக்கு ஒவ்வொரு பொழுதும் நினைவூட்டப்படுகின்றது.

இத்தகைய அவதிக்கிடையில் பாவனாவின் கணவர் பிரமோத் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கான அழைப்பிதழை பாவனாவின் பெற்றோருக்கு அனுப்புகின்றார். அது ஒருவகை உளைச்சலை பாவனாக்குக் கொடுத்தாலும், அந்தத் திருமண நிகழ்வுக்கும் - எப்படியென்றாலும் தன் மகன் நாளை தன் தகப்பனையும் அவர் திருமணம் செய்த பெண்ணையும் சந்திக்கவேண்டியிருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் - அந்த நிகழ்வுக்குப் போகின்றார்.
இன்றைக்கும் தமது முன்னாள் காதலிகள்/மனைவிகள் இன்னொரு வாழ்விற்குள் நுழையும்போது, எவ்வளவு கொடுமைகள்/துன்பங்களைக் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுக்கும் பெரும்பாலானவர்களாய் ஆண்கள் இருக்கும்போது, அவர்களைப் போன்றவர்கள் பாவனா இந்த விடயங்களை எவ்வளவு நிதானமாக -அதன் அத்தனை துயரங்களோடும்- எதிர்கொள்கின்றார் என்பதை மீராவின் எழுத்தினூடாக நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.
இறுதியில் இந்தக் கபர் வழக்கு தள்ளிவைக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த 'கபர்' அங்கே இருப்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை என்பதால் வழக்கு நிராகரிக்கப்படுகின்றது.
வழக்கைப் பதிவு செய்த வாதியான காக்கசேரி கயாலுதீன் தங்ஙள் எப்படி மாந்தீரிகம் செய்து பாவனாவின் மனதை வாசிக்கின்றார் என்பது மிகச் சுவாரசியமானது. ஒருகட்டத்தில் அவரிடமிருந்தே மெல்ல மெல்லமாக கயாலுதீன் தங்ஙளின் மனதை வாசிக்கும் நுட்பத்தை பாவனாவும் கற்றுக் கொள்கின்றார். அது ஒருவகையில் பறக்கும் கம்பளங்களில் விரிந்து செல்லும் உலகாக, கயாலுதீன் தங்ஙள் முத்தம் தருகின்ற காதலானகவும் பாவனாவுக்கு மாறுகின்றார்.
இறுதியில் வழக்கு வேறுவிதமாகப் போனாலும், பாவனா தன் 'தாரவாடு' வம்சத்தின் யோகீஸ்வரன் ஏன் காசியிலிருந்து திரும்பி வருகின்றார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார். காசிக்குப் போய் மோட்சமடையாமல் யோகீஸ்வரன் திரும்பி வருவதற்குக் காரணம், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்பதாலேயாகும். அவரோடு வரும் பெண்கள் அவருக்குத் துணை புரிய வருகின்ற இரு ஜின்கள் என்பதை நாவலில் சொல்லாமலே நாம் புரிந்துகொள்கின்றோம்.
அந்தக் கபர் என்பது உண்மையிலே யோகீஸ்வரன் மாமா புதைக்கப்பட்ட இடம். அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது விபத்தாலோ இறந்ததோரோ என்னவோ, ஆனால் அவர் இரகசியமாகப் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அந்தக் குடும்பத்து பெண் ஒருத்தி அன்றைய கேரள ராஜாவிடம் முறையிடுகின்றார். யோகீஸ்வரன் மாமா குழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு ஒரு இஸ்லாமியரைப் போல இந்த அடையாளமில்லாத 'கபரு'க்குள் புதைக்கப்பட்டிருக்கின்றார் என்பதே நிகழ்ந்திருக்கின்றது.
அப்படியெனில் எதற்காக காக்கசேரி கயாலுதீன் தங்ஙள், தங்கள் பரம்பரையின் கபர் இதென்கின்றார். அதற்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. நாவலை வாசித்துப் பாருங்கள்.
இவ்வளவு குறைந்த பக்கங்களுக்குள் (100) ஒவ்வொரு அத்தியாயங்கள் தோன்றும் வியப்புத் தோன்றும் சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை மீராவினால் இப்படி எழுத முடிகின்றதே என்பதையே இந்த நாவல் முடிந்த பின்னும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

******************

(Oct 16, 2022)