கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள்

Friday, June 20, 2014

-சிறு எதிர்வினை-

1.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன்.

நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவர்களாகவோ ஆகிவிடுவது இன்னொரு துரதிஷ்டம்.

இவ்வாறான அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களில் அநேகர் இரண்டு வகையான அரசியல் எழுத்து இருப்பதைக் கூட அவ்வளவு எளிதில் உள்வாங்குவதில்லை. ஒன்று, ஒரு பிரச்சினையிற்கான உடனடி எதிர்வினை. மற்றது நிதானமான ஆய்வு வகையிலான வரலாற்று, கலாசாரப் பின்னணியை உள்ளடக்கிய எழுத்துவகை. ஆனால் நம் தமிழ்ச்சூழலை உற்றுப்பார்க்கும் ஒருவர் அரசியல் கட்டுரைகள் என்றெழுதப்படும் அநேகம் உடனடி எதிர்வினை வகையைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறான உடனடி எதிர்வினைகளையே அரசியல் ஆய்வுக் கட்டுரைகளாகத்தான் அநேக தமிழ் ஊடகங்கள் பிரசுரித்தபடியுமிருக்கின்றன.

இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றபோது நாம் அனைவருமே உடனடி எதிர்வினைகளையே செய்யவேண்டியவராகின்றோம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அங்கே நிலைமை கட்டுக்கடங்காமலும், உயிர்ச்சேதம் இன்னும் ஏற்படப்போகின்றதோ என்ற பதற்றத்துடன் நாம் தோழமை உணர்வோடு ஒன்று சேர வேண்டியவர்களாகின்றோம்.

2.

முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களாகிய நாம் செய்த கொடுமைகள் வரலாற்றுப் பக்கங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. முஸ்லிம்களை நாம் 'அந்நியராக' அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, அவர்களைப் பார்த்து நீங்கள் தமிழர் என அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் என்ற குரலை இப்போதும் கேட்க வேண்டியது என்பது எவ்வளவு அவலம். 'தமிழர்கள்' என்ற அடையாளத்திற்குள் இருந்தவர்களை விலத்தி/விலக்கிவிட்டு இப்போது தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் வாருங்கள் என அழைப்பது, சிங்களவர்கள், நீங்கள் ஏன் தமிழர்களென பிரிந்து நிற்கின்றீர்கள், வாருங்கள் அனைவரும் இலங்கையர் என ஒற்றுமைப்படுவோம் எனச் சொல்வதற்கு நிகர்த்தது. இலங்கை முஸ்லிம்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் மீண்டும் வர அழைப்பவர்கள், சிங்களப் பேரினவாதம் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு இலங்கையர் என்ற ஒற்றையடையாளத்திற்குள் தமிழர்களாகிய நாம் நுழைய முடியுமா என யோசித்தால் இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் எழுப்பவே முடியாது.

நாம் அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழராய் நின்று அங்கு நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்த்துக் குரல்களை எழுப்பலாம் அல்லது வேண்டுமானால் மவுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட கொள்ளலாம். அதை விடுத்து முள்ளிவாய்க்கால் காலத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்புவது, உயிர்களும் உடைமைகளும் ஊசலாடிக்கொண்டிருக்கும் பதற்றமான கணத்தில் மனிதாபிமானம் அற்றது. முள்ளிவாய்க்கால் காலத்தில் போர் நடைபெற்ற வன்னி தவிர்ந்து தமிழர்கள் கணிசமாய் வாழ்ந்த யாழ் மாவட்டத்திலோ அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து கூட எதிர்ப்புக்குரல் எழுப்ப முடியாது அல்லவா இருந்தது? அவ்வாறு மெளனம் காத்ததற்கு அங்கிருந்தவர்க்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்ததுபோல, தமிழர்களுக்காய் குரல் கொடுக்க விரும்பியபோதும் இலங்கை முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம் என்பதைக்கூட ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது?

மேலும், முஸ்லிம்களுக்கு தமிழர்களாகிய நாம் பல அநீதிகளைச் செய்துவிட்டு எமக்கான அநீதியிற்கு நீங்கள் குரல்கொடுக்கவில்லை என்பது எவ்வளவு சுயநலமாக இருக்கும்? நாம் இதுவரை கடந்த காலங்களில் செய்த விடயங்களுக்காய், மீளிணக்கம் செய்ய என்ன செய்திருக்கின்றோம் என்று ஆறுதலாக யோசித்திருக்கின்றோமா? அந்நியராகவும் துரோகிகளாவும் துரத்தியடிக்கப்பட்ட அவர்களுடனான மீளிணக்கம் என்பது கூட எவ்வளவு நெடிய பாதையென்பதை அறிந்து, தொடர்ந்து நாம் நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டியவராய் அல்லவா இருக்க வேண்டும். அந்த சமிக்ஞைகளை ஏற்றுக்கொள்வதற்கும் விலத்துவதற்கும் நம்மால் ஒடுக்கப்பட்ட அவர்களுக்கே தெரிவு இருக்கிறதே தவிர நமக்கில்லை என்பதையும் அறிந்தாகவும் வேண்டும்.

உதாரணமாக, எதிர்காலத்தில் சிங்களச் சமூகம், நடந்தவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்வோமென தமிழர்களை நோக்கி நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்பினாலும், அவர்கள் மீது நம்பிக்கை வந்து எதிர் நல்லிணக்க சமிக்ஞை அனுப்பும் தெரிவு தமிழர்களுக்கு இருக்கிறதே தவிர சிங்களவர்க்கு இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை.

அவ்வாறான ஒருநிலையேதான் முஸ்லிம்கள் தொடர்பாய் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். நடந்தவற்றை மறந்துவிட்டு பழையபடியிருப்போம் என புலிகளோ,சம்பந்தரோ அறிக்கைகளால் மட்டும் சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. அதற்கப்பால் என்னவிதமான சூழ்நிலைகள் நம்மால் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று கவனித்தாகவேண்டும். இப்போது முஸ்லிம்கள் சிங்களப்பேரினவாதத்தால் ஒடுக்கப்படும்போது எவ்வித நிபந்தனையுமின்றி முஸ்லிம்களின் பக்கம் நின்று நாம் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறையிற்கு எதிராகக் குரல் கொடுப்பது, அவ்வாறான நல்லிணக்க சமிக்ஞைகளில் ஒன்றுதான்.

முஸ்லிம்களுக்கு இதில் தெரிவிருக்கிறது. தமிழர் தரப்பிலிருந்து நீட்டப்படும் கரத்தைப் பற்றிக்கொள்வதா அல்லது இன்னும் காலம் வரவில்லையென மறுப்பதா என்பது குறித்து. ஆனால் தமிழர்களாகிய நாம் தொடர்ந்து அவர்களுக்காய் தோழமைக் குரல் கொடுப்பதை மட்டுமே செய்யமுடியும். காலம் ஒருநாள் கனியும்போது நாம் எமது வித்தியாசங்களை விளங்கிக்கொண்டு, அருகருகில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடாது.

3.
இந்த விடயத்தோடு இன்னொரு தகவலையும் அடிக்கடி பார்க்கின்றேன். தமிழர்களின் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசோடு இணைந்து நிற்கும் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பது பற்றியது. தமிழர்களாகிய எமக்கு முஸ்லிம்களோடு தோழமை உணர்வை வளர்ப்பதே முக்கியமே தவிர, முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறுவது முக்கியமற்றது. இவ்வாறான அறிவுரைகளால், திருப்பவும் நாங்கள் அவர்களை ஆதிக்கம் செய்ய விரும்புகின்றோமா என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டியவர்களாகின்றோம். முஸ்லிம் மக்கள் தமக்கு எந்தத் தலைமை தேவையெனத் தேர்ந்தெடுக்கட்டும். முஸ்லிம் காங்கிரஸ் மீது நிறைய முஸ்லிம்களுக்கு விமர்சனம் இருக்கிறதென்பதை அவர்கள் பலரின் எழுத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்பது வேறுவிடயம்.

இதையேன் சொல்கிறேன் என்றால், இந்த எரியும் பிரச்சினையில் நாம் விமர்சனமும் கண்டனமும் செய்யவேண்டியது சிங்களப் பேரினவாதமே தவிர, முஸ்லிம் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டும். இந் நிகழ்விற்கு எதிர்ப்பாய் எழுதிய சிங்களவர்களின் கட்டுரைகளை வாசித்தபோது அவர்கள் எவரும் முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறவில்லை. முக்கிய எதிரியான அரசையும், பொதுபல சேனாவையும்தான் குறிவைத்து எழுதுகின்றார்களே தவிர முஸ்லிம் தலைமை குறித்து எதுவும் எழுதி வாசித்தாக நினைவினில்லை.

தொடர்ந்து சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசோடு இணைந்திருப்பதா இல்லையா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்யும் நேரம் வரும். முஸ்லிம் மக்களும் காலமும் அதைத் தீர்மானிக்கட்டும். அதைத் தமிழர்களாகிய நாம் எதைச் செய்யவேண்டுமென அவர்களுக்குச் சொல்லிக் காட்டத் தேவையில்லை. தொடர்ந்து இவ்வாறு இணக்க அரசியல் செய்யும்போது சிலவேளைகளில் பேரினவாத அரசோடு இயங்கும் தமிழ்க்கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புத்தான் தங்களுக்கும் எதிர்காலத்தில் நிகழுமென்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணராமலா இருக்கப் போகின்றது

4.
இந்த விடயம் குறித்து மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், இப்போது தமிழர்களாகிய நாம் முஸ்லிம்களுக்கு தோழமைக் குரல் கொடுப்பதும், நிகழும் கொடூரங்களுக்கு எதிராக நம் முழு ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு நிபந்தனையின்றி வழங்கவேண்டும் என்பதே. இங்கும் நான் அதைச் செய்தேன், நீங்கள் இதைச் செய்தீர்கள் என்றோ அல்லது உங்களுக்கு இது வேண்டும் என்கின்ற சிறுபிள்ளைத்தனமாய் அரசியல் செய்வதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். இது தமிழர் தரப்பு தன் நல்லிணக்க சமிக்ஞையைக் காட்டுவதற்கு மிக முக்கியமான தருணமாகும். காலம் அவ்வளவு எளிதில் எல்லாப் பொழுதுகளிலும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடுவதில்லை.

சிங்களவர் சிலருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நமக்கில்லையென்றால் எவ்வளவு வெட்கப்படவேண்டும்.


(ஜூன் 17, 2014, முகநூலில் எழுதியது)

செவ்வந்திப்பூ குறிப்புகள்

Wednesday, June 04, 2014

In Our Translated World

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒரு திட்டத்தில் எனது கவிதையொன்றையும் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அதற்கு அனுமதி தரமுடியுமா எனவும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவ்வாறான தொகுப்பாக்கும் வேறு சில முயற்சிகளுக்காய் ஆக்கங்களை அனுப்பக் கேட்ட -முக்கியமாய் தமிழ்நாட்டிலிருந்து வந்த- மின்னஞ்சல்களுக்கு, என் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் அவற்றைத் தவிர்த்திருக்கின்றேன்.

அவ்வப்போது மாற்றமும் தேவையாய்த்தானிருக்கிறது அல்லவா? இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவித்தாலும், அவர்கள் 'வதை' கவிதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றபோது, இதை நான் எப்போது எழுதியது என்ற குழப்பமும் ஏற்பட்டது. அநேகமான கவிதைகளுக்கு  நான் பெயரிடுவதேயில்லை, இல்லாவிட்டால் பிரசுரிக்கும்போது மட்டுமே தலைப்பிடுவதுண்டு. மேலும் எனது பெயர் பொதுவான் பெயராக இருப்பதாலும் நிறையப்பேர் அதேபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பதாலும், வேறு எவரினதும் கவிதையை என் பெயரில் பிரசுரிக்கக் கூடாது என்ற கவனத்துடனும் 'தயவு செய்து நீங்கள் தேர்வு செய்த கவிதையை ஒருமுறை எனக்கு அனுப்பிவிட முடியுமா?' எனக் கேட்டிருந்தேன். எழுதியவனுக்கே தான் எதை எழுதினேன் எனத் தெரியாதா என்று தேர்வுக்குழுவினர் தலையிலடித்திருக்கக்கூடுமென்றாலும், பொறுமையாய் எனக்கு என் கவிதையையே திருப்பி அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு நன்றி.

அண்மையில் இங்கு நடந்த வெளியீட்டு விழாவிற்கும் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை. ஆகவே இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பதிவு செய்யமுடியாதிருக்கின்றது. அ.முத்துலிங்கம் தான் இத்தொகுப்பு வேலையிற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றார் என நினைக்கின்றேன்.

நான் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்- என்னை யாரெனத் தெரியாதே- 'திண்ணை' போன்றவற்றில் கவிதைகள் வெளிவந்தபோது உற்சாகப்படுத்தி மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது இப்போதும் நினைவிலிருக்கிறது. அவ்வாறு உற்சாகப்படுத்தியவரை, என் நூற்களின் வெளியீட்டு விழாக்களிற்கு வந்தவரை, என் வாசிப்பு மற்றும் தெரிவுகள் காரணமாக அவரின் படைப்புக்கள் உட்பட அவர் சார்ந்து இயங்கும் 'இயல்விருது' வரை தொடர்ந்து விமர்சித்தே வந்திருக்கின்றேன் என்பது வேறுவிடயம். இரண்டு வார்த்தைகள் மறுதலிப்பாய் எழுதினாலே, முகப்புத்தகத்தில் நம்மைத் தடை செய்து, பின் படைப்புச் சுதந்திரத்திற்குக் 'குரல்'கொடுக்கச் சொல்லி முழங்கும் நிறையப் பேரைப் பார்க்கும்போது, கடுமையாய் விமர்சித்தாலும், படைப்பைப் படைப்பாய் மட்டும் பார்க்கத் தெரிந்த அ.மு என்னளவில் சற்று உயர்ந்துதான் நிற்கிறார்.

நூல் வெளியீட்டிற்குப் போய் தொகுப்பைப் பெற முடியவில்லை என்பதைவிட, அத்தொகுப்பில் கவிதைகள சேர்க்கப்பட்டவர்களுக்கு, கொடுக்கப்பட்ட ஒற்றை ரோஜாப் பூவைத் தவறவிட்டேன் என்பதை நினைக்கத்தான் சற்றுக் கவலையாக இருக்கிறது.

வதை
--------

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயப்படுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

நீல மல்லிகை (Blue Jasmine)

வூடி அலனின் அண்மைக்கால ரொமாண்டிச படங்களிலிருந்து சற்று விலகிய ஓர் படமிது. உயர்தர வாழ்க்கை வாழும் பெண் எப்படி அடித்தளம்வரை செல்கிறார் என்பதையும், அப்போதும் கூட தன் 'அந்தஸ்தை' விட்டுக்கொடுக்காது இறுதிவரை வீறாப்புடன் இருக்கிறார் என்பதையும் ஜாஸ்மின் என்கின்ற பாத்திரத்தினூடாக கொண்டுவருகிறார். வூடி அலனின் படங்கள் அநேகமாய் உரையாடல்களாலேயே செதுக்கப்பட்டாலும், கதாபாத்திரங்கள் மீது எமக்கு எப்படியோ வாஞ்சையையும் நெருக்கத்தையும் உருவாக்கியிருப்பார். இப்படத்தில் வூடி அலன், ஜாஸ்மின் பாத்திரத்திற்கு கருணையே வழங்குவதில்லைப் போன்று மிக இறுக்கமாய் வார்த்திருக்கிறார். ஒவ்வொரு வீழ்ச்சியின்போதும் ஜாஸ்மின் பாத்திரத்தின்மீது நமது நெருக்கம் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளின் மூலம் நம்மை ஜாஸ்மின் பாத்திரத்தின் மீது வாஞ்சை கொள்வதையே தடுத்தும் விடுகிறார்.

கணவரின் -திருமணத்திற்கான அப்பாலான- சில உறவுகளால் அவரோடு முரண்பட்டுப் பிரிகிறார். கணவரின் 'துரோகத்தை'யும் ஏதோ ஒருவகையில் பழிவாங்குவதற்காயத் தன் செல்வாக்கையும்/ செல்வத்தையும் இழக்கிறார். மகன் இவரின் செயற்பாடுகளால் - தாய் என்ற உறவே வேண்டாம்- என்ற நிலைப்பாடோடு ஜாஸ்மினை விட்டு முற்றுமுழுதாகப் பிரிகிறார். வீடற்ற ஜாஸ்மினுக்கு ஏழ்மையாக இருந்தாலும் தங்குமிடம் கொடுக்கும் தங்கையையும் கீழ்த்தரமாகவே நடத்துகிறார். எப்படியேனும் எல்லாவற்றையும் மறைத்து பொய் சொல்லியேனும் ஒரு பணக்காரரை காதலிக்கவும் வைக்கிறார். இறுதியில் எல்லாமே தலைகீழாக நடந்துபோகின்றபோதும், தன் போலிக் கெளரவத்தை விட்டுவிடாது அப்படியே இருக்கவும் செய்கிறார்.

கணவரை அப்படியே எளிதாக நம்புகின்ற ஜாஸ்மின், பல் வைத்தியரின் பாலியல் சுரண்டலைச் சகிக்கின்ற ஜாஸ்மின், தொலைந்துபோகின்ற மகனைத் தேடிச்செல்லும்போது மகனால் நிராகரிக்கப்படுகின்ற ஜாஸ்மின், காதலுக்காய் (மற்றும் அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற்காய்) பொய்களைச் சொன்னாலும், அங்கே உண்மையாகவே மெல்ல முகிழும் காதலில் நேசம் ததும்புகின்ற ஜாஸ்மின், இறுதியில் எல்லாவற்றாலும்/எல்லோராலும் நிராகரிக்கப்பட்டாலும் தான் இப்படித்தான் இருப்பேனென நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கின்ற ஜாஸ்மினென உணர்ச்சிகளை மாறிமாறிக் குழைந்து Cate Blanchett இயல்பாக நடித்திருக்கிறார்.

ஜாஸ்மின் இத்தகைய சரிவுகளைக் கண்டபின்னும் ஏன் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் என்று குழம்புவதை விட, ஜாஸ்மின்களால் இப்படித்தான் இருக்கமுடியும் என நாம் அவர்களைப் புரிந்துகொள்வதே சாலவும் சிறந்ததாக இருக்கும்.


பாரிஸ் கடிதங்கள் (Paris Letters)

சில வாரங்களுக்கு முன் தான், தற்செயலாய் ஜெனீசைக் கண்டடைந்ததையும், அவரின் எழுத்தும் வாழ்வும் என்னை வசீகரித்ததையும், எழுதியிருந்தேன். அவரின் 'பாரிஸ் கடிதங்கள்' (Paris Letters) சென்ற செவ்வாயனறுதான் வெளியாகியிருக்கிறது. இன்று பார்த்தால், ஜெனீஸ் எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரான எலிஸபெத்தை பாரிஸில் சந்தித்திருப்பதை வாசிக்க முடிந்திருந்தது. இன்னும் இவர்களைப் போல எத்தனை பேர்களின் வாழ்வையும் எழுத்தையும் பார்த்துப் பொறாமைப்பட காலம் 'கட்டளை'யிட்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஜெனீஸ், 2006ல் தற்செயலாய் எலிசபெத்தின் (Eat, Pray, Love) நூலை ஒரு புத்தகசாலையின் மூலையில் இருந்து எட்டு அத்தியாயங்களை வாசித்துவிட்டு வாங்கியதையும், அது தன்வாழ்வில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிடுகிறார். ஜெனிஸாவது குறிப்பிட்ட சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு அந்த நூலை வாங்கியிருக்கின்றார், நான் விலை கொடுக்காது வாங்காமலே இப்படி எத்தனை புத்தகங்களை புத்தகசாலையில் வாசித்திருக்கின்றேன் என நினைக்க சற்று கூச்சமாய்த்தானிருக்கிறது, ஆனால் அவமானப்பட எதுவுமில்லை.
எலிசபெத்தோடான பாரிஸ் சந்திப்பில், யாரோ ஒருவர் 'உங்கள் வெற்றியின் உச்சத்தை எப்போது உணர்ந்தீர்கள்?' எனக் கேட்க, அவர் -நம்மால் வெற்றியென நினைக்கப்பட்ட விடயம் எதையும் குறிப்பிடாது- 'எந்தக் கணத்தில் ரோமிற்கான விமானத்தில் ஏறினேனோ, அப்போதிருந்து எல்லாமே மிக நன்றாக மாறின' என்றிருக்கிறார்.

இதே கேள்வியைத் தன்னிடம் ஒருவர் கேட்டிருந்தால் எப்படி பதில் அளித்திருப்பார் என ஜெனிஸ் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார். அது,

If I were to answer the question, What was the peak of my success, I’d have a different answer.

It wasn’t meeting Elizabeth Gilbert, even though it was an astounding moment and am so very blessed that it happened. And it wasn’t Rome, Paris or London. It wasn’t even the lovely Christophe or Paris Letters.

The peak of my success is a quiet one.
And it happens every day.

At 8:20 each morning, as I sip my coffee and write my daily pages in my journal, I hear a door open and close. It’s my upstairs neighbor leaving for work. In my old life, I left for work at 8:20, too. Sometimes seeing 8:20 on the clock made my want to cry. Now, remembering back, I smile and take another sip of coffee. In a mug. In my apartment. In my yoga pants. Knowing I have a full day ahead of me to do what I want to do.

...இவ்வாறாக இந்த நாளும் அழகாகியது.