கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சா.கந்தசாமி - 'புது டில்லி'

Tuesday, May 31, 2022


ன்றைய காலங்களில் அதிக பக்கங்களுள்ள பெரும் புத்தகங்கள் வாசிக்க கஷ்டமாயிருக்கின்றது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் திரட்டப்பட்ட ஆக்கங்களின் பெருந்தொகுப்புக்களைக் கூட, வாசிக்க ஆர்வம் குறைந்து வருகின்றது. அதேவேளை அவர்களின் தனித்தனித் தொகுதிகளை வாசிப்பதில் ஆவலாகவே இருக்கின்றேன். அவ்வாறு கடந்த மாதம் இங்குள்ள நூலகத்திற்குப் போனபோது கண்டெடுத்ததுதான் சா.கந்தசாமியின் 'புது டில்லி' என்கின்ற புதினம்.

இந்த நாவலில் நான்கைந்து நபர்கள் மாறி மாறிக் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கதை நிகழ்கின்ற காலம் இந்திரா காந்தியின் கொலை நடந்த சமயம். ஆகவே மரணம் பற்றியும், கொலைகள் பற்றியும் சரித்திரத்தின் பல்வேறு பகுதிகள் தொட்டுப் பேசப்படுகின்றன. ராஜன் என்று தனித்து இருக்கின்ற, பிறரால் சுகஜீவியென அழைக்கப்படும் ராஜராஜன் என்கின்றவர் முக்கிய பாத்திரம். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவர் அடிக்கடி காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கிக்கொள்வார். அங்கே தங்கும்போது அலுப்பு வரும்போது தியாகராஜா நகரில் சிவமணி என்பவர் வைத்திருக்கும் புத்தகக் கடைக்குப் போயிருவார். அவ்வாறு சிவமணியால் அறிமுகப்படுத்தபடும் ஒரு பேராசிரியரே வைத்தீஸ்வரனாவார். வைத்தீஸ்வரன் டெல்கி பல்கலைக்கழகத்தில் வேலை செய்பவர் என்றாலும் உலகமெங்கும் கருத்தரங்குகளுக்காய்ப் பயணிப்பவர். ராஜனுக்கும், வைத்தீஸ்வரனுக்கும் நல்லதொரு நெருக்கம் ஏற்பட அவர்கள் நிறைய இருப்பு சார்ந்தும், இறப்பு சார்ந்தும் பேசிக் கொள்கின்றார்கள். ராஜனுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கின்றார். அவர் ஜராவதம். ராஜனின் குழப்பங்களைத் தொடர்ந்து தெளிவுபடுத்தியபடி இருப்பவர் . படிப்பதற்கும், பேசுவதற்குமென ஜராவதம் தனது வீட்டில் பெரிய இடம் கட்டி வைத்திருக்கின்றார். ராஜனைப் பார்த்து 'உனக்கு பேசுவதில் பேராசை இருக்கிறது' என்று சொல்லி, ராஜனை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்.
இவ்வாறான சில முக்கிய பாத்திரங்களோடு இந்த நாவல் நகர்கின்றது. இந்திரா காந்தியின் மரணம் ஒரு பின்னணி என்றாலும், அப்போது ஏற்படும் பதற்றங்கள், அதைப் புரிந்துகொள்கின்ற மனோநிலை, சாவு பற்றிய கேள்விகள், தனி மனிதர்கள் வாழ்க்கையின் அர்த்தம் (அலெக்ஸாண்டர் முதல் புத்தர், ஆனந்தா இன்னும் பலரின் வாழ்க்கை பேசப்படுகின்றது) என்று பல விடயங்கள் தொடர்பும்/தொடர்ச்சியுமின்றி உரையாடப்படுகின்றது. மையமற்று பல்வேறு வெடிப்புக்கள் மட்டுமே பேசப்படுகின்றன என்பதால் இந்த நாவல் எனக்கு நெருக்கமாக இருந்தது. ஒருவகையில் இதை நகுலனின் நாவல்களின் நீட்சியெனச் சொல்லலாம். ஆனால் நகுலன் உள்வயமாக வாழ்க்கையைப் பார்க்க, இந்த நாவலின் பாத்திரங்கள் புறவயமாக, பிறரின் வாழ்வைப் பேசுவதன் மூலம் தமது இருப்பின் அர்த்தம்/அர்த்தமின்மைகளைப் புரிந்துகொள்ள முயல்கின்றன. இறுதியில் டெல்கியில் இருக்கும் வைத்தீஸ்வரன், ராஜனை டெல்கிக்கும், காசிக்கும் போய் ஆறுதலாகச் சுற்றிப் பார்த்து உரையாட அழைக்கின்றார். ராஜனும் நீண்டகாலம் அங்கே செல்லாததால் தனது நெருங்கிய நண்பரான ஜராவதத்தை அழைத்துச் செல்ல தீர்மானிக்கின்றார். ஆனால் ஜராவதத்துக்கு நடக்கும் ஓர் அசம்பாத சம்பவத்தோடு நாவல் நிறைவுபெறுகின்றது. ஒரு கொலையில் தொடங்கும் நாவல் இன்னொரு கொலையோடு முடிந்துவிடுகின்றது. சா.கந்தசாமியை ஒரேயொரு முறை நேரில் சந்தித்தேன். அவரின் மகன்களில் ஒருவர் அப்போது கனடாவின் மேற்குமுனையில் வாழ்ந்துகொண்டிருந்தார். அந்தப் பயணத்தின் நீட்சியில் கனடாவின் கிழக்குக்கரையான ரொறொண்டோவில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்த ஏதோ ஒரு விவாதம் சற்று காரசாரமாகப் போனதாக நினைவு. அவ்வளவு உவப்பில்லாத ஓர் சூழ்நிலை இறுக்கமாக உருவாக, சா.கந்தசாமியின் நிகழ்வின் இடையிலே புறப்பட்டிருந்தார் என்பதாக ஞாபகம். எனக்கும் அன்றைய காலத்தில் 'கசடதபற' ஞானக்கூத்தன் போன்றோரிடம் விலத்தல் இருந்ததால், சா.கந்தசாமியுடன் உரையாட வேண்டுமென்ற ஓர் ஆர்வம் இருக்கவில்லை. அத்துடன் அவரை அவ்வளவாக அன்று வாசித்துமிருக்கவில்லை. இப்போது 'புது டில்லி'யை வாசிக்கும்போது, அவர் இன்று உயிரோடிருப்பின் இது எனக்குப் பிடித்த ஒரு நாவல் என்றேனும் அவரை நெருங்கிச் சென்று சொல்லியிருப்பேன்.


*************
(Mar 29, 2022)

Tick, Tick... Boom!

Saturday, May 21, 2022


நேற்று காலை வேலைக்குப் போனபோது, நான் இறங்கிய ரெயின் நிலையத்தில், ஒரு பெண் பாலே நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இளவேனில்காலம் வந்துவிட்டாலும் குளிர் இன்னும் போகவில்லை. பனிக்காலத்துக்கான குளிரங்கியை அணிந்துகொண்டு இன்னமும் வெளியே நடமாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணோ எளிய ஆடைகள் அணிந்து, கால் விரல்கள் மடங்க வெறும் தரையில் நடனமாடிக் கொண்டிருந்தார்.


இவ்வாறு தெருவில் நடனமாடுபவர்களை, பாடுபவர்களை, இன்னபிற நிகழ்கலைகளை நிகழ்த்துபவர்களைக் காணும்போதெல்லாம் கலை என்பதும் என்னவென்பதையும், கலைஞர்கள் என்பவர்கள் யார் என்பதையும் மீண்டும் மீண்டும் திருத்தி வரைவிலக்கணம் எழுதவேண்டும் என நினைப்பேன்.


கிட்டத்தட்ட இப்படியான ஒருவர்தான் ஜோனதன் லார்ஸன் (Jonathan Larson). நியூ யோர்க்கில் வறுமைக்குரிய பகுதியில் ஹீட்டர் இல்லாத ஒரு அடுக்கத்தில் வாழ்ந்து, தனது கலையில் விளிம்புநிலை மனிதர்களை உள்ளடக்கி 35வயதில் இறந்துபோன ஒருவர் அவர். இசைகோர்ப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து, சடுதியாக மறைந்துபோன ஜோனதனின் வாழ்க்கை சுவாரசியமானது.

ஜோனதன் ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வாரவிறுதிகளில் வேலை செய்தபடி, நியூ யோர்க்கின் பிரபல்யமான இசை நாடகங்களில் தனது காலைப் பதிக்க முயன்றபடி இருக்கின்றார். எட்டு வருடமாக எழுதி, இசையமைத்து, மீண்டும் மீண்டும் திருத்தி அமைத்த அவரின் இசை நாடகத்தின் முதல் வரைவு மறுக்கப்படுகிறது. அவரின் அன்றையகால நண்பர்கள் பலர் 90களில் கொடூரமாக இருந்த எயிட்ஸால் ஒவ்வொருவராக இளவயதிலேயே இறந்தும் கொண்டிருக்கின்றார்கள்.

ஒழுங்கான வருமானமின்மை, இப்படியே எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருப்பது என்று நம்பிக்கையிழந்து பிரிந்து செல்கின்ற காதலி போன்ற பல துயரத் தத்தளிப்புக்களோடு ஜோனதன் இசையை எழுதியெழுதிச் செல்கிறார். அவர் இசையை எல்லாவற்றிலும் காண்கின்றார். நீந்தும்போது எழுத்தாக இசையின் வடிவங்கள் தோன்றுகின்றன. காதலியை அரவணைக்கும்போது விரல்களில் இசை அரூபமாய் உள்ளே ஊறுகின்றது.

இவ்வாறாக அதுவரை இருந்த இசை நாடகங்களில் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்ற ஜோனதனின் படைப்பு வழமைபோல நிராகரிக்கப்படுகின்றது. அவரின் ஏஜென்டாக இருப்பவர் ஜோனதன் இவ்வாறு நிராகரிப்படுவதைப் பார்த்து, ஒரு நல்ல படைப்பாளி தனது படைப்பை பிறர் நிராகரிக்க நிராகரிக்க, அடுத்தெடுத்து எழுதிக்கொண்டு செல்வார், நீயும் அவ்வாறே இசையை எழுதிக் கொண்டு போ என்கின்றார்.

எட்டு வருடங்களாக எழுதிய படைப்பு நிராகரிக்கப்பட, அவருக்கு வயதும் 30 ஆயிற்று, இப்படியே ஒரு வறுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டு, காதலையும் இழந்துகொண்டு கலையில் ஈடுபடுவது சரியா என்று குழம்புகின்ற ஜோனதனை கலையே மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது.

அவர் அடுத்த 5 வருடங்களில் எழுதிய இசை நாடகமே Rent. அது முற்றுமுழுதான வடிவம் பெற்று, அரங்கேற்றத்துக்கு தயாரான முதல்நாள் ஜோனதன் சடுதியாக இறக்கிறார். 'The show must go on/Inside my heart is breaking/ My makeup may be flaking /But my smile, still, stays on' என Queen பாடியது போல, ஜோனதனின் Rent அரங்கேறுகிறது. விமர்சகர்களால் பாராட்டபடுகிறது. அமெரிக்காவின் இசை நாடக வரலாற்றிலே நீண்ட வருடங்கள் தொடர்ச்சியாக (12 வருடங்கள்) நடந்த இசைநாடகங்களில் ஒன்று என்ற பெருமையை ' Rent' பெறுகின்றது.

ஜோனதனின்ஒரேயொரு இசை நாடகம், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் பயணித்து பெரும் வெற்றி பெறுகின்றது. அத்துடன் அதுவரை இருந்த அமெரிக்க இசை நாடக வடிவத்தை Rent மாற்றியமைக்க வைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் கதையை இசை நாடகத்திலும் உயிரோட்டமாக எல்லோரும் இரசிக்கும்படி செய்யலாமென்று ஜோனதன் காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

ஒழுங்கான கதகதப்பு அடுப்பில்லாதும், சரியாக வாடகை கொடுக்க முடியாதும் மிகவும் வறுமையில் வாழ்ந்த ஜோனதன் இறந்தபின் அவரது எஸ்டேட்டுக்குச் சொந்தமாக 40 மில்லியன் டொலர்கள் வந்து சேர்ந்திருக்கின்றது. ஜோனதனின் நண்பர்கள் அவர் வாழ்வில் கஷ்டப்படுவதைப் பார்த்து, சாதாரண வேலையொன்றுக்குப் போக அவருக்கு அறிவுரை செய்யும்போது, பணத்தை விட கலைதான் முக்கியமென்று கூறிய ஜோனதன், இந்த 40 மில்லியனைப் பார்த்தும் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டிருக்கக் கூடும். ஏனென்றால் ஜோனதனுக்கு நன்கு தெரியும், கலைக்கு முன்னால் மற்ற எல்லா விடயங்களும் அவருக்கு சிறுதூசிதானென்று.

ஜோனதனின் Rentஇற்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட அவரது இசை நாடகம் 'Tick, Tick... Boom!'. அது இப்போது அதே பெயரில் திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.

(திரைப்படம்: Tick, Tick... Boom! )

(Mar 26, 2022)

தமிழ் மொழிபெயர்ப்புக்கள் குறித்து..

Wednesday, May 11, 2022

 

மிழில் நிறைய மொழிபெயர்ப்புக்கள் அண்மைக்காலமாக வந்துகொண்டிருக்கின்றன. அவை நிச்சயம் நம் மொழிக்கு வளஞ் சேர்ப்பவையாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. சிலவேளைகளில் ஒரே புத்தகத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தமிழாக்கம் செய்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. வெவ்வேறு மேம்பட்ட மொழியாக்கங்கள் வரும்போது நாமின்னும் மூலநூலுக்கு நெருக்கமாகப் போகவும் கூடும். ஆனால் அந்த நூல் ஏற்கனவே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் அதை எங்கோ ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அறமாகும்.


முன்னைய காலத்தில் இப்போது போன்று 'உடனே தேடிப்பார்க்கும்' இணைய வசதிகள் இருக்கவில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நேரம் எடுத்துத் தேடினாலே, ஏற்கனவே ஒரு நூல் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தால் அறிந்துகொள்ளமுடியும். எனவே அதை இயன்றளவு தமிழாக்கம் செய்பவர்கள் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் சினுவா ஆச்சுபேயின் ஒரு நூலின் மொழியாக்கத்தைப் பார்த்தபோது, எல்லோரும் அது முதன்முதலாக தமிழாக்கம் செய்யப்பட்டதுபோல பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அது ஏற்கனவே மொழியாக்கம் செய்யப்பட்டதை நான் சில நண்பர்களிடம் குறிப்பிடத்தான், அவர்களுக்கே அப்படி அந்த நூலுக்கு ஒரு மொழியாக்கம் முன்னர் வந்தது தெரியவந்தது.

அவ்வாறே பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' இற்கு அண்மையில் ஒரு புதிய தமிழாக்கம் வந்தபோது, அந்த நூலை பல வருடங்களுக்கு முன்னரே தமிழில் வாசித்துவிட்டேனே என்று தோன்றியது. பிறகு அது முன்னர் எஸ்.ராமன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வந்து நான் வாசித்ததை கண்டறிந்தேன். இப்போது ஜே.எம்.கூட்ஸியின் ஒரு நூலின் தமிழாக்கம் வந்திருக்கின்றது. அதை ஏற்கனவே எஸ்.பொ தமிழாக்கம் செய்திருக்கின்றார். ஆனால் ஏற்கனவே வந்த எஸ்.பொவின் தமிழாக்கம் குறித்து எவரும் எழுதியதைப் பார்க்க முடியவில்லை.


ந்தக் குறிப்பை புதிதாக தமிழில் மொழிபெயர்ப்புக்களைச் செய்பவர்கள் மீது 'புகார்' கூறுவதற்காக எழுதவில்லை. இவ்வாறு தமிழாக்கம் செய்பவர்களின் உழைப்பை மதித்து, அதேசமயம் இதில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்பதைச் சுட்டவே இதை எழுதுகின்றேன்.

அத்துடன் இன்று வரும் பல பழைய மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் (முக்கியமாய் ரஷ்ய இலக்கியங்கள்) முன்னட்டையில் தமிழாக்கம் செய்தவர்களின் பெயர்கள் இல்லாமலே வெளியிடப்படுகின்றன. அது அன்று மொழியாக்கம் செய்தவர்களின் உழைப்பையும் நேரத்தையும் இருட்டடிப்புச் செய்வதற்கு நிகரானது. அந்தப் பெயர்களை முன்னட்டையில் வெளியிட்டு அவர்களுக்கு சிறிய கெளரவத்தையாவது கொடுக்கவேண்டும். ஒரு வேற்றுமொழி நூல் தன்னைத்தானே தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டு வருமளவுக்கு 'தொழில்நுட்பப்புரட்சி' இன்னும் நம்மை வந்து சேர்ந்து விடாததால் பெயர்களை முகப்பில் இட்டு ஒரு சிறு மதிப்பையாவது அந்த மொழிபெயர்ப்பாளர்க்குக் கொடுக்கவேண்டும். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்று உயிரோடு இல்லாதபோது, அவர்களின் பணிகளுக்காய் நாம் நினைவில் கொள்ள, இதைவிட வேறொரு சிறந்த விடயம் நமக்கு இருக்கப் போவதில்லை.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் சொல்லவேண்டும். அண்மைக்கால நூல்கள் பலதைப் பார்க்கும்போது, எனக்குள் நெடுங்காலமாக உறுத்திக்கொண்டிருக்கின்ற விடயமிது. ஒரு நூலை மறுபதிப்புச் செய்யும்போது அது முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டை கட்டாயம் அந்நூலிற்குள் குறிப்பிடவேண்டும். இன்னொரு பதிப்பகம் அதை மீள்பதிப்புச் செய்தாலும், அந்த நூல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஆண்டை குறிப்பிடாது வெளியிடுவது எவ்வகையிலும் நியாயமாகாது. ஒரு புதிய வாசகருக்கு அது இப்போதுதான் வெளிவருகின்றது என்கின்ற தவறான தோற்றத்தையே கொடுக்கும். எனவே அனைத்து பதிப்பகத்தாரும் இதையும் நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*********************

(Mar 12, 2022)

மெக்ஸிக்கோ - ஜனனி செல்வநாதன்

Monday, May 02, 2022


மெக்ஸிக்கோ - ஒற்றை வரியில் சொல்வதானால் மனம் பிறழ்ந்தவனின் உணர்வைப் பேசும் உன்னத உளவியல்.


குடும்பமாகவோ துணையுடனோ பயணம் மேற்கொள்வோர் மத்தியில் ”எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோ தான் பயணங்கள்” என தனித்து கனடாவிலிருந்து இரு வாரம் விடுமுறையில் மெக்ஸிக்கோ செல்லும் ஒருவன், (மன)வெளியில் ஒருவளைக் கண்டு அவளழகில் திகைத்து இலயித்து எளிதில் அவளைக்கடந்து போகவியலா தடுமாற்றத்துடன், எதையும் எதிர்மறை எண்ணங்களோடு எதிர்கொள்ளப் பழகியதால் அவளது வெளிப்படையான யதார்த்தமான பேச்சுக்களால் தனக்குள் சுருங்கி, தான் செய்யும் ஒவ்வொன்றுக்கும் அவள் எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதாக நினைத்து எதற்கெடுத்தாலும் சண்டைக்கோழி போல சிலிர்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரா ஒரு கணத்தில் அவளால் அவன் காப்பாற்றப்பட, அவளோ அதற்கான எவ்வித பந்தாவோ பாசாங்கோ காட்டாது தன்னியல்பில் நகரத்தொடங்கிய கணத்தில், அவன் எண்ணத்தில் இதுவரை Bad Vibration என தேக்கப்பட்டிருந்த அவள் அவனறியாமலேயே அவன் அலைவரிசையிற்குள் பொருந்திக்கொள்ளத் தொடங்குகிறாள்; அப்போது எமக்குள்ளும் ஏதோ ஒன்று குமிழியிடத் தொடங்குகின்றது.

முதலாவது அத்தியாயத்தின் மூன்றாவது பத்தியிலேயே ”விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்” என்ற ஒற்றை வரியில் மொத்தக்கதையையும் எமக்கு உணர்த்திவிட எத்தனிக்கும் எழுத்தாளர், இடையிடையேயும் சரி மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள் எனும் அத்தியாயத்தின் ஊடேயும் சரி ‘அவனை’ப் பற்றிய படிமத்தை வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் முற்கூட்டியே இயல்பாய் ஆங்காங்கே வரைந்து முடித்து விடுகின்றார். இதனாலோ என்னவோ இறுதி அத்தியாயம் முடிந்தும்-சில நாட்கள் கடந்த பின்னும் ‘அவனை’யும் அவனுக்குள் இருக்கும் குழந்தையையும் மறக்கமுடியாமல் கண்ணீர் வழிய அணைத்துக் கொண்டிருக்கின்றேன்.

மனச்சுமையால் கட்டுண்டுகிடக்கும் ஒவ்வொரு மனிதனதும் மனச்சுமையைக் குறைப்பதற்கு ஏற்ற களமாக அமைவது கலைகளின் மாற்றுவடிவமே என சிக்மன் ஃப்ராய்ட் கூறுவது அரிஸ்டோட்டிலின் உளவியலான ‘கதாசிஸ்’ போன்றதே. ’கதாசிஸ்’ எனும் உணர்வு வெளியேற்றத்தை மிகவும் திறம்பட மெக்ஸிக்கோவில் கையாண்டுள்ளார் இளங்கோ.

Adults only புத்தகமென்று ‘சில’ரால் சொல்லப்பட்ட மெக்ஸிக்கோ தனக்குள் தனித்துப் பயணிக்கும் ஒருவனின் பயணக்குறிப்பை-அவனது மனப்பிறழ்வை- அவனது நகைச்சுவையை-அவனுள் அவனே உருவாக்கிய குழந்தையை-புத்தரைக் கொண்டாடும் உன்னதத்தை-அதேநேரம் புத்தரைக் கொண்டாடும் பிரதிநிதிகளின் அத்துமீறல்களால் புத்தர் எம் வெறுப்பின் அரசியலாக இருந்ததை-அதீத அன்போ காதலோ இருந்தும் அதை சொல்லத்தயங்கும் தயக்கங்களை-யாழ்ப்பாணத்து பதுங்கு குழிகளை-அதனோடு ஒட்டிய கதைகளை-யாழ்ப்பாணத்தில் இப்போதும் இருக்கின்ற 30/40 வருடங்களுக்கும் முற்பட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலத்தை-போரின் வடுக்களை-உலகின் நாகரீகங்களை-மெக்ஸிக்கோ நகரின் வரலாறை-ஃப்ரீடாவை அவரது பிரகாசமான நீலவர்ண ஓவியங்களை-வான்கோவை-அவரது மஞ்சள் வர்ணம் மீதான காதலை- பத்திரப்படுத்தி வைத்துள்ளது.

சிலரால் புறக்கணிக்கப்படுபவர்கள் தான் சிலரால் உன்னதமாகக் கொண்டாடப்படுவர். "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்" என்ற எதிர்பார்ப்போடு-நேசிக்கப்பட்ட ஒருத்தியின் புறக்கணிப்பால் முழுவதுமாய் உடைந்து எதையும் எதிர்மறையாகவே பார்த்துப் பழகிய ‘அவனை’ அவனின் தாயாரின் சாயலோடு அவனது பலவீனங்களுக்காய் இரக்கப்படாது காதலோடு முழுவதுமாய் இட்டு நிரப்புகிறாள் ‘அவள்’...

காதல் ஒரு சாம்பல் பறவை...!

[குறும்படம் எடுக்கவேண்டும் என்ற எனது நீண்ட வருடக் கனவு இதுவரை கனவாகவே இருந்திருக்கின்றது. தன் வெறுமையையும் தனிமையையும் உதறித்தள்ள தனக்குள்ளே ஒரு குழந்தையை உருவாக்கி உரையாடும் ‘அவனை’-எந்த நேரத்தில் எந்த உணர்வுடன் இருக்கும் எனத் தெரியாத குழந்தையுடன் இருக்கும்,புரிந்து கொள்ள கஷ்டமான ‘அவனை’ அவனது இயல்புகள் சிதைந்துவிடாது செதுக்கி எடுக்க வேண்டும் எனது கனவுப் படத்தில்]

நன்றி: https://www.facebook.com/janany.selvanathan/posts/5460266957335075