கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சி.மோகனின் 'கமலி'

Sunday, June 27, 2021

வ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் இணையவெளியில் சந்திக்கொள்ளும் நிகழ்வில் புதிதாய் ஒரு நண்பரை இணைத்திருந்தோம். அவர் ஆபிரிக்காவில் இருந்த நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழ்ந்தவர். எனவே அவர் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர எங்களுக்கு அது மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அவர் இருந்த நிலப்பரப்பில் ஒரு இனக்குழுமத்தில் பெண்கள் முதலில் வெவ்வேறு ஆண்களுடன் இரு குழந்தைகளைப் பெற்றபின்னரே 'திருமணம்' என்ற பந்தத்தில் இணைந்துகொள்வது ஒரு பண்பாடாக இருந்தது எனச் சொன்னார். ஆகவே இவர் தனது ஒரேயொரு காதலியை மணந்து அவரோடு மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனச் சொன்னபோது எங்கள் கலாசாரம் குறித்து அங்கிருந்த பெண்களுக்கு இப்படியுமா எனப் பெரும் வியப்பாக இருந்தது என்றார்.


மனிதர்கள் உண்மையிலே polygamy இயல்புத்தன்மை உடையவர்கள், ஆனால் ஒழுக்கம்/அறம் போன்றவற்றால் monogamyஇற்குள் தங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள் என்ற உரையாடல் நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கின்றது. தமிழில் தி.ஜானகிராமனின் பெரும்பாலான நாவல்கள் மனிதர்களுக்கு இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை விசாரணை செய்கின்றதாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு கமலி என்கின்ற திருமணமான பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பால் வரும் இன்னொரு உறவைப் பின் தொடர்ந்து செல்லும் ஒரு குறுநாவலாக சி.மோகனின் 'கமலி' இருக்கின்றது.

கமலி என்கின்ற கமலாம்பிக்கை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முதுகலை படித்தவர். அதுவரை அவ்வளவு பிரபல்யம் இல்லாதிருக்கும் ஜோசியக்காரரான கமலியின் தந்தை கமலியின் வருகையோடு புதிய உயரங்களை அடைகின்றார். தனது மகள் பிறந்த அதிஷ்டமே தனது வாழ்வு செழித்தது என்று நினைக்கின்ற தந்தை, கமலிக்கு சல்லடை போட்டு ஒரு பொருத்தமான கணவனையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார். இவர்களுக்கு நந்திதா என்கின்ற குழந்தையும் இருக்கும்போது, கமலிக்கு அவரின் கணவர் ரகுவரால் அறிமுகப்படுத்தப்படும் அவரை விட 16 வயதான கண்ணனோடு ஒரு இயல்பான போக்கிலே ஓர் உறவு முகிழ்ந்துவிடுகின்றது.

திருமணம் என்ற இறுக்கமான அமைப்பில் மட்டுமில்லை, காதல் என்கின்ற 'எல்லாச் சுதந்திரமும்' இருக்கின்ற நிலையில்கூட, ஒரு கட்டத்திற்குப் பிறகு பலருக்கு அவர்களுக்கிடையில் இருக்கும் உறவென்பது அலுத்துப்போவதை நாம் பார்த்திருக்கின்றோம். இங்கே திருமணம் என்கின்ற அலுப்பான வாழ்க்கையிற்குள் சில வருடங்களுக்குள் நுழைகின்ற கமலிக்கு ரகு ஒரு திறப்பை உண்டாக்கின்றார். இந்த ஜென்மம் உன்னோடு தொலைபேசியில் பேசியபடி மட்டும், அடுத்த ஜென்மம் நாம் விரும்பியமாதிரி இணைந்து வாழலாம்' என்று சொல்கின்ற கமலிக்குப் பிறகு உடல் சார்ந்த பகிர்தல்களும் கண்ணனுடன் நிகழ்கின்றன.

ந்த நாவலை நேரடித்தன்மையில் சி.மோகன் இந்த மனிதர்களின் அன்றாடங்களுக்குள் நுழைந்து எழுதிச் செல்கின்றார். தொடக்கத்தில் சற்று கட்டுரைத்தன்மை போலத் தொய்வு ஏற்பட்டாலும், பின்னர் நாவல் சுவாரசியமான நடைக்குள் புகுந்துகொள்கின்றது. அதேபோன்று தமிழில் இதேபோன்ற வகைப்பாட்டில் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை சி.மோகன், கமலியினதும், கண்ணனினதும் ஊடாக தி.ஜானகிராமனின் நாவல்களைப் பேசவைக்கின்றார். 'அம்மா வந்தாள்', 'அடி' மட்டுமல்ல, தி.ஜாவின் முழுநாவல்களையும் வாங்கி வாசித்துப் பார்க்கின்றவராக கமலியின் பாத்திரம் இங்கே சித்தரிக்கப்படுகின்றது.

தி.ஜானகிராமனின் 'அடி' என்கின்ற அவரின் இறுதிநாவலை வாசித்த நமக்கு தி.ஜா அதுவரை எழுதிய நாவல்களிலிருந்து இதில் வேறொரு முடிவை எடுத்திருப்பது நன்கு தெரியும். 'அடி'யில் வரும் திருமணமான செல்லப்பாவிற்கு, பட்டு என்கின்ற அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு வருகின்றது. பின்னர் அதை செல்லப்பாவின் மனைவி மங்களம் கண்டுபிடிக்கின்றபோது, தனது 'குற்றத்தை' ஒப்புக்கொண்டு எல்லோரு முன்னும் பாவமன்னிப்புக் கேட்கும் ஒரு பாவியைப் போல இறுதியில் செல்லப்பா ஆகிவிடுகின்றார்.

ஆனால் சி.மோகனின் 'கமலி'யில் எந்தப் பொழுதிலும் கமலி தன் திருமணத்துக்கு அப்பாலான உறவு குறித்து மனச் சஞ்சலமோ, குற்ற உணர்வோ அடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த இன்னொரு உறவுக்காய், தனது கணவனான ரகுவையையோ, அங்கே தானொரு இராணி போல இருக்கும் சிம்மாசனத்தையோ விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லாத ஒரு பெண்மணியாகவே இருக்கின்றார். முக்கியமாய் அவரின் கணவர் ரகுவுக்கு, இப்படி ஒரு மேலதிக உறவு கமலிக்கு இருக்கிறது என்று சந்தேகம் வரும்போதெல்லாம் சாமர்த்தியமாய் அவற்றையெல்லாம் இல்லாமற் செய்து, என்றுமே தான் ரகுவின் நம்பிக்கைக்குரிய மனைவிதான் என்பதை கமலி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

இறுதியில் ஏற்படும் முடிவு கூட கமலி தன்னியல்பிலேயே ஏற்றுக்கொண்டதுதான். அது குறித்துக் கூட அவருக்கு எந்தக் குற்றவுணர்ச்சியோ தயக்கங்களோ இல்லை. ஆகவே அது அவருக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. 'அடி'யில் வரும் செல்லப்பா போல அவர் எவர் முன்னும் மண்டியிடாமலே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார். மிக ஆச்சாரமான, அம்பாள் பக்தையான கமலாம்பிகைகளுக்குக் கூட மனம் என்னும் விசித்திரம் எதையெதையோ எல்லாம் செய்ய வைக்கின்றது என்கின்ற வியப்பு எழாமல் நாம் இந்த நாவலைக் கடந்துசெல்ல முடியாது.

'கமலி'யை வாசித்துக்கொண்டிருந்தபோது தி.ஜானகிராமனின் நாவல்கள் மட்டுமில்லை, சமகாலத்தவர்களான தமிழ்நதி எழுதிய 'கானல்வரி'யும், உமா வரதராஜனின் 'மூன்றாம் சிலுவை'யும் நினைவுக்கு வந்தபடியஏ இருந்தன. அவையும் இவ்வாறான உறவுச்சிக்கல்களையும் பேசுகின்றன, ஆனால் வெவ்வேறான தளங்களில் நின்றபடி!

கமலியை சி.மோகன் எழுதிச் செல்கின்ற நடையும், விபரிப்புக்களும் அலுப்படையச் செயயாதவை. ஆனால் இதை சி.மோகனின் உன்னத நாவலாகக் கொள்ளமாட்டேன். ஒருவகையில் இது கமலி என்கின்ற பெண்ணின் வாக்குமூலமாகக் கூட வாசித்துப் பார்க்கலாம். ஆனால் கமலி போன்ற பெண்களை நம்மைப் போன்ற ஆண்களால் முற்றுமுழுதாக உணர்ந்து எழுதிடமுடியுமா என்று கேள்வியும் இதை வாசித்து முடிக்கும்போது எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
..................................

(Mar 01, 2021)

தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)

Friday, June 25, 2021

1.


ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா.  அவர்  பல நூற்றுக்கணக்கனோர்  பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் பிரதியான  'தனுஜா'வை ( ஈழத் திருநங்கையின் பயணமும், போராட்டமும்) வாசிக்கத் தொடங்கியபோது, அது இற்றைவரை தமிழ்ச்சூழலில் வெளிவராத  ஒரு நூலென்ற எண்ணம் தொடக்கத்திலே வந்துவிட்டது. 


எல்லா privilagesம் இருக்கும் ஆண்களாகிய நாங்களே எமது வாழ்வில் நடந்தவற்றை எமக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் கூடப் பகிரத் தயங்குகின்றபோது, நமது சமூகத்தில் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையான ஒருவர்  இவ்வளவு நேர்மையாக தன்னை முன்வைக்க முடியாமென  ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர இதை வாசித்தபோது வந்தது. 


தனுஜாவின் சிறுவயது, ஆணுடலுக்குள் சிக்குப்பட்ட பெண்ணின் கையறுநிலை என்றால், பின்னர் ஒரு பெண்ணாக 'நிர்வாணம்' செய்தபின், தனது இந்த நிலைக்காக அவமதித்த ஆண்களை அவர் 'பழிவாங்கும்' சந்தர்ப்பங்களைக் கூட நம்மால் அவ்வளவு எளிதால் செரித்துக்கொள்ளமுடியாது. ஆனால் இதுதான் நான், என்னை உங்களைப் போன்ற ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமது புரிதல்களைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்திக்கொண்டே தனுஜா இருக்கின்றார்.


2.


ஒவ்வொரு வாரவிறுதியிலும் நண்பர்கள் சிலர் மெய்நிகர் உலகில்  இலக்கியம் சார்ந்து கூடிப் பேசுவதுண்டு. அவ்வாறு ஒருமுறை சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் பற்றிய பேச்சுவந்தது. அதன் தொடர்ச்சியில் சாருவின் எழுதிய 'உன்னத சங்கீதம்' போன்ற கதைகளுக்காய் சாருவை நிராகரிக்கின்றேன் என்று ஒரு நண்பர் சொல்ல அதுகுறித்து பேச்சு இழுபட்டது. விளாடிமோர் நபகோவின் 'லொலிடா'வின் மிக மலினமான கதை 'உன்னத சங்கீதம்' என்பதும், அந்தக் கதை குறித்தே அன்றே புலம்பெயர் பெண்கள் பெரும் எதிர்ப்பை அறிக்கையாக/தொகுப்பாக முன்வைத்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. 


நான் சாருவின் அனைத்துப் புனைவுகளையும் தேடித்தேடி வாசிக்கின்ற ஒருவன். அவரின் மொழியின் எளிமைக்கும், அங்கததற்குமாய் அவரை இன்னும் விடாது பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றவன்.  ஒரு வளர்ந்த ஆணுக்கு, ஒரு சிறுமியோடு சலனம் வருவது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அந்தச் சிறுமியின் பார்வையை முற்றாக மறுத்து ஒரு வளர்ந்த ஆணின் பார்வையிலும், வரலாற்றுப் பிழைகளோடும் (இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்றும்) genuine இல்லாது எழுதப்பட்டதால் உன்னத சங்கீதத்தை எனக்கும் நிராகரிக்கக் காரணம் இருந்தது. அதை அந்த நண்பர்களின் கூடலில் சொல்லியுருமிருந்தேன்.


எனினும் அடுத்த நாள் ஒரே இருக்கையில் தனுஜாவின் இந்த நூலை வாசித்தபோது நான் சரியாகத்தான் பேசுகின்றேனோ என்பதில் சந்தேகங்கள் எழுந்தன. தனுஜா ஒரு ஆணாகப் பால்நிலை சார்ந்து பிறந்ததால், அவரைப் பெண்ணாக  இருக்க மறுக்கும் சமூகத்தில், தன்னைப் பெண்ணாக உணரவைக்கும் ஆண்களை எல்லாம் ஒருவித கருணையுடன் அவர் எதிர்கொள்கின்றார். தனுஜா தனது 12 வயதோடு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும், அவரின் இந்த ஆணின் உடலுக்குள் அடைபட்ட பெண் தன்மையால், அவர் அதற்கு முன் வாழ்ந்த இந்தியாவிலும், இலங்கையிலும் உடல் சார்ந்த வாதைகளுக்கு உட்படுகின்றார். இந்த நூலில் தனுஜா வயது வந்த ஆண்களோடு தனது சில அனுபவங்களை பாலியல் வன்புணர்ச்சிகளாகவும், சிலவற்றை அவ்வாறில்லாதும் குறிப்பிடும்போது குழந்தைப் பிராயத்திலே ஏற்படக்கூடிய பாலியல்  விழிப்புக்களைப் பற்றி நான் அறிந்துகொண்டவை சரியா என்ற கேள்விகளும் எழுந்துகொண்டிருந்தன.  


3.


தனுஜாவின் இந்த நூலின் ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் இந்தளவுக்கு ஒருவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அதைவிட முக்கியமாக பிறர் எவ்வளவு வன்முறையை/இழிவுகளைத் தனக்குச் செய்திருந்தாலும் எவரையும் தேவையில்லாது கீழிறக்காது எழுத முடிகிறதென்ற வியப்பே வந்துகொண்டிருந்தது. தனுஜா தனது உடல் சார்ந்த போராட்டங்களை மட்டுமில்லாது, திருநங்கை சமூகங்களுக்கிடையில் இருக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பிணக்குப்பாடுகளையும் மறைக்காது முன்வைக்கின்றார். ஒருவகையில் நாமும் பலவீனமுள்ள மனிதர்கள்தான் என்பதை,  தான் சார்ந்த சமூகத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிலவற்றைப் பேசும்போதும், நமக்குத் தனுஜா புரியவைக்க முயல்கின்றார். இதுவே இந்தப் பிரதிக்கும் இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றது.


ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு வசதியின் நிமித்தமும், இளமையின் நிமித்தமும் பொறாமை கொண்டு ஏதாவது தவறைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் வரும்போது, அந்தச் சர்ச்சைகளை மறந்து நம்மைப் போன்றவர்களுக்கு நம்மைவிட வேறு யார் உதவப்போகின்றார்கள் என்று ஆதரவு அளிக்கின்ற சந்தர்ப்பங்கள்  அற்புதமானவை. 


ஜேர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் தனுஜாவின் புலம்பெயர் வாழ்வைச் சொல்கின்ற அனுபவங்கள் பெரும்பாலும் சுவிஸிலும், கனடாவிலும் நடக்கின்றவையாக இருக்கின்றன. முக்கியமாக கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்கின்றவராக அதுவும் நான் வசிக்கும் அதே நகரில் இருந்திருக்கின்றார் என்பது இன்னும் சுவாரசியம் தரக்கூடியது. அதிலொருவர் குறும்படங்களில் நடிப்பவர். அவரைத் தனுஜா வன்கூவரில் சந்தித்து பிறகு அவரோடும் அவர் குடும்பத்தோடும் ரொறொண்டோவில் வசிக்கத் தொடங்குகின்றார் (குறும்பட உலகு சிறியது என்பதால் அவர் யாரென்பது அடையாளங்காண்பதும் அவ்வளவு கடினமில்லை). 


கிட்டத்தட்ட ஒரு சிறைபோல அவர் வீட்டுக்குள் இங்கு வைக்கப்பட்டிருந்தாலும், பிற எதைப்பற்றியும் கவலைப்படாது அப்படி ஒரு 'குடும்பப் பெண்'ணாக மட்டுமே இருப்பதே அவருக்கு போதுமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த ஆண் அவரை ஒரு முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தனுஜாவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. இன்னொரு கனேடிய தமிழ் ஆண், அவரை மலேசியாவுக்குப் போவதற்கான பயணத்தின் செலவை ஏற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லி தனுஜாவைக் கூட்டிக்கொண்டு இலங்கையின் தென்பகுதி முழுவதும் திரிகிறார். அவர் திருமணஞ் செய்த ஆண். தனது மனைவியின் உறவினர்களைக் காணச் செல்கின்றபோது மட்டும் இவரைக் கைவிட்டுவிடுகின்றார். இவ்வாறு தனக்கான துணையைக் கண்டடைந்துவிடுவேன், ஒரு அற்புதமான வாழ்வை வாழப்போகின்றேன் என்று தனுஜா நம்புகின்ற ஒவ்வொரு பொழுதும் காதலின் நிமித்தம் கைவிடப்படுகின்றார்.


பிறகு அவருக்கு ஆண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடிகிறது. நீயும், நான் கண்ட இன்னொரு அந்த ஆண்தானே என ஒருவித பரிகாசப் புன்னகையுடன்  எல்லா ஆண்களையும் எதிர்கொள்கின்றார். தன்னைப் பெண்ணாகப் பெருமையாக முன்வைத்து வாழ்வின் சவால்களை சந்திக்கின்றார். ஒருகாலத்தில் பெற்றோரினாலும், உறவுகளாலும் ஒடுக்கப்பட்ட தனுஜாவைப் பிறகு அவரின் குடும்பம் ஏற்றுக்கொள்கின்றது. இடையில் இவரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்ளபோது இவரின் குடும்பம் ஒடுக்கியபோதும், தனுஜாவின் குடும்பம் அவரைத் தம்மோடு வைத்துக்கொள்வது கூட கவனிக்கத் தக்கது. கெளரவமும்,  சாதித்திமிரும், அடியுதைகளும், வார்த்தைகளால் அதைவிட வன்முறைகளும் செய்துகொண்டிருக்கும் தனுஜாவின் தந்தைகூட அவரைத் தமது குடும்பக் 'கெளரவத்தின்' காரணமாக வெளியே போகச் சொல்லாதுதான் விட்டுவைத்திருக்கின்றார்.


திருநங்கைகளுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனுஜா தனது அடையாளஞ்சார்ந்து செய்கின்ற தேடல்களும், தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதுவரை -நாமாக திருநங்களைகளைப் பற்றிப் பேசுகின்றபோது- வைத்திருந்த நிறையக் கற்பிதங்களை உடைத்துச் செல்கின்ற பிரதியாக இந்த சுயவரலாற்று நூல் இருக்கின்றது. தனுஜா தன் அடையாளம் சார்ந்து சுவிஸ், மலேசியா, இந்தியா என்று எங்கெங்கோ  எல்லாம் அலைந்து தன்னைத் தேடி அலைகிறார். தனக்குப் பிடித்தமான விடயங்களைச் செய்கின்றார். 


நான் பெண்ணாக உணர்கின்றேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது கேட்காதவர்களை, பிறகு அவ்வளவு அழகாக எதிர்கொள்கின்றார். அத்துடன் திருநங்கைகளைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அதே திருநங்கைகளைக் காமத்தின் பொருட்டு தேடிப்போகின்ற எண்ணற்ற தமிழ் ஆண்களை இந்த நூலில் காண்கின்றோம். உள்ளூர ஒன்றை விரும்பியபடி, ஆனால் அதை 'நாகரிகமாய்' மறைத்தபடி, நமது ஆண் உள்ளங்களை நாமே மீண்டும் கண்ணாடியில் பார்ப்பதுபோல இந்த ஆண்கள் நம்மைக் கடந்துபோகின்றார்கள். 


4.


இன்னமும் முப்பதையே தொட்டுவிடாத தனுஜா கடந்து வந்திருக்கின்ற பாதை மிக நீண்டது. நாம் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் இவ்வாறு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாதவளவுக்கு அவ்வளவு கடுமையான பாதையது. அவர் தன்னை 'நிர்வாணம்' செய்துகொள்கின்ற அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிய விபரிப்புக்கள் அவ்வளவு வலிமிகுந்தது. ஆனால் அந்த கடின வழியைக் கடந்துவந்து, எதன் பொருட்டும்/எவர் பொருட்டும் தன்னைச் சமரசம் செய்யாது தனுஜா தனது கதையை வெளிப்படையாக முன்வைக்கின்றார் என்பதற்காய் நாம் அவரின் கரங்களை நன்றியுடன் பற்றி  அரவணைத்துக்கொள்ளவேண்டும். எத்தனையோ சீழ்களையும், கீழ்மையும் கொண்ட ஒரு சமூகத்தில், தன்னை அதிலிருந்து வெளியேற்றாது, தானும் அதில் ஒருவரே என தன்னையும் முன்வைத்து அதே சமயம் தான் சந்தித்தவர்களைக் கூட அதிகமாய் தாழ்த்தாது, இவ்வளவு அனுபவங்களுக்கிடையிலும் மிகுந்த கம்பீரமாக முன்வைக்கின்றார் என்பதே இந்த நூலில் இன்னொரு சிறப்பம்சம்.


கொழும்பில் தன்னை அடித்த ஒரு மாமாவை தனுஜா நீண்ட வருடங்களின் பின் இலங்கையில் சந்திக்கின்றார். மாமா ஏன் என்னை எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எனக் கேட்கிறார் (தனுஜாவின் பெண்மைத்தன்மையின் நிமித்தம் சிறுவயதில் இந்த மாமாவின் வன்முறை மிகுந்த கொடுமையானது). அப்படி அந்தப் பெண்தன்மையை வெறுத்த மாமா தனுஜாவை முத்தமிடுகிறார். வாயில் பாம்பு கடிப்பதைப் போல அதிர்ந்துபோனேன் என்று சொல்கின்ற தனுஜா 'இவ்வளவு தானடா உங்கள் குடும்பப் பாசம்? இவ்வளவு தானடா உங்களது தமிழ்ப்பண்பாடு' என நினைத்துக்கொள்கிறார்.


பிறகு அவரோடு உடலுறவில் ஈடுபடுகிறார். நீங்கள் என்னை எவ்வளவோ அடக்கி வைத்திருந்தாலும், நான் எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பெண்ணாக மாறிவிட்டேன். என் ஆன்மா விரும்பியதை நான் சாதித்து விட்டேன்' என்பதை அந்த உடலுறவின் மூலம் அவருக்கு அறிவித்தேன்' என்கின்றார் தனுஜா.


இப்படிச் சிறுவயதில் கொடுமை செய்த மாமாவுக்கு அவர் வித்தியாசமான ஒரு 'பழிவாங்கலை'ச் செய்கின்றார். ஆனால் வாசிக்கும் நமக்கோ அதிர்ச்சி வருகின்றது. அதையும் புரிந்துகொள்கின்ற தனுஜா இறுதியில் இவ்வாறு கூறுகின்றார்:

"ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. பொது அறங்களால், பொது நீதியால், பொதுக் கலாசாரங்களால், பொது இலக்கியங்களால், பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுதும் வஞ்சிக்கப்படவர்களான எங்கள் பயணம் புதிர்வட்டப் பாதை. இந்தப் புதிரை  யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள் கூட அவிழ்த்ததில்லை."


.................................................


(நன்றி: ‘கலைமுகம்’-  ஜனவரி-மார்ச், 2021 -  இதழ் 71)

சோ.தர்மனின் 'பதிமூனாவது மையவாடி'

Monday, June 21, 2021

 

சிறுவர்கள், பதின்மர்களாகி இளைஞர்களாவது பற்றி நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன. சோ.தர்மனின் 'பதிமூனாவது மையாவாடி' கருத்தமுத்து என்கின்ற சிறுவன் இளைஞனாகும் பருவத்தைப் பின்பற்றிப் போகின்றது. ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்புப் படிப்பதற்காய் கிறிஸ்தவப் பாடசாலைக்குப் போகும் கருத்தமுத்து விடுதியில் தங்குகின்றான். அங்கிருந்து அவனது வாழ்வு படிப்பு என்பதோடு அல்லாது, மனிதர்களை, புதிய சூழலை அறிவதென வெவ்வேறு திசைகளில் நீள்கிறது. விடுதியிற்கு அண்மையில் அமையும் மையவாடி அவன் வாழ்க்கையின் பெரும்பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போதிமரத்தைப் போல அமைகின்றது. அங்கு பிணங்களை எரிக்கும் அரியான் பல்வேறு விடயங்களில் மிகச் சிறந்த ஓர்  'ஆசிரியராக' அமைகின்றார்.

 

பாடசாலைக் காலத்திலே ஒரு சில பாதிரிமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் கண்டுகொண்டாலும், இந்துப் பின்னணியில் வந்த கருத்தமுத்துக்கு பாதர்மார்களின் சுரண்டல்களும், கன்னியாஸ்திரிகளின் பாலியல் வறட்சியும் கண்களுக்கு அதிகம் உறுத்துகிறது. கர்த்தரரின் பொருட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்த அவர்களின் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்படுகின்றது. கருத்தமுத்து தனக்கான காமத்தைக் கண்டுகொள்கின்ற மூன்று பெண்களும் கிறிஸ்தவப் பின்னணியில் இருப்பதும் தற்செயலாகவே அமைந்தென்றே வாசிப்பு மனம் எண்ணட்டுமாக.

 

பாதிரிமார்கள் குடும்பப் பெண்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். சாமர்த்தியமாய் குடும்பங்களைப் பிரிக்கின்றார்கள். அதிகார வேட்கையில் மக்களுக்கான சேவையைச் செய்யாது தமக்குள் அடிபடவே பொழுதுகளைப் பார்க்கின்றார்களென கருத்தமுத்துவினூடாக சோ.தர்மன் ஒரு சித்திரத்தை வாசிக்க வைக்கின்றார். அதன் உச்சபட்சமாக 2% இருக்கும் கிறிஸ்தவர்கள், நாட்டில் 40% கல்வி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களென பிரச்சாரம் போல அடிக்கடி கதாபாத்திரங்கள் அலுக்குமளவுக்கு பேசிக்கொள்கின்றார்கள்.

 

இத்தனைக்கு அப்பாலும் ஏதோ ஒருவகையில் சாதியாலோ அல்லது வசதி வாய்ப்பில்லாமலோ ஒரு இந்துவைக் கல்வி கற்பதற்கான வசதிகளைக் கொடுத்துக்கொண்டிருப்பது ஒரு கிறிஸ்தவ பாடசாலை என்பதைப் போகின்றபோக்கில் -அழுத்தமாக அதைப் பேசாது கதைக்காது- கடந்து போகின்றபோதுதான் நாவலின் 'அரசியல்' உறுத்தச் செய்கின்றது.

 

ருத்தமுத்துவினூடாகவும், அவர் சந்திக்கும் பாத்திரங்களினூடாகவும் கிறிஸ்தவ நிறுவனங்கள் விமர்சனம் செய்யப்படுவது தவறுமல்ல. நிறுவனமாக்கப்படும் எந்த மத/கல்வி அமைப்பும் பின்னர் அதிகாரத்திற்குள்ளும், பாலியல் சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்படுவது கிறிஸ்தவ மதத்தில் மட்டுமில்லை, புத்தமடலாயங்களிலும் நடைபெறுபவைதான். இந்து மதத்தில் நடைபெறுபவற்றை எல்லாம் சொல்லவேண்டியதில்லை. இந்து மதம் ஒர் முழுமையான அதிகாரத்திற்குள் (வத்திக்கான் போன்று) இல்லாதிருப்பதால் இந்தளவுக்கு ஊழல்களும் சுரண்டல்களும் நடைபெறுவதிலிருந்து ஒரளவுக்குத் தப்பியிருந்தாலும், நமது சாமியார்களின் கதைகளையும், காமகோடிகளின் அறிவுரைகளையும்  தொடர்ந்து அறிந்தபடியேதானே இருக்கின்றோம்.

 

நிறுவனப்பட்ட மதங்களான கிறிஸ்தவம் போன்றவை விமர்சனங்களிலிருந்து தப்பவேண்டியதில்லை. ஆனால் அதை அரசியல் பிரச்சாரமாக்காமல் இயல்பிலே கதையைச் சொல்லிச் சென்றிருந்தால் இந்த நாவல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் ஏஞ்சல் தனது கன்னியாஸ்திரி ஆடையைத் துறந்து சேவைக்காகவும், கருத்தமுத்துக்காகவும் திருச்சபையிலிருந்து வெளியே வருகின்றார். இவ்வாறான ஒரு சில சம்பவங்கள்தான் இந்த நாவலை ஒரளவு சாய்வின்றி வாசிக்க முடிகின்றது. இந்த நாவலில் இடதுசாரி நம்பிக்கையுள்ளவர்களாய் வரும் இளைஞர்களை ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கும் வன்முறையாளர்களாக மட்டும் சித்தரித்து பொலிஸ் ஜீப்புக்களில் ஏற்றப்படுபவர்களாக காட்டப்படுவது சற்று அச்சமூட்டுவதுங்கூட.  பாஞ்சாலைத் தொழிலாளியாக (அறிமுகத்தில்) 20 வருடங்களாக இருந்த சோ.தர்மனா இப்படியெல்லாம் எழுதுவது என்று நமக்கு வியப்பு வருகின்றது.

 

சோ.தர்மனின் 'கூகை' வாசித்தபோது நானடைந்த வியப்பு இன்னும் மறக்காமல் இருக்கின்றது. 'சூல்' கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியவுடன் என்னை உள்ளிழுக்காதுவிட்டதனால் நிறுத்திவைத்திருக்கின்றேன். 'பதிமூனாவது மையவாடி' பிரச்சாரத்தன்மைக்கு முன்னிடம் கொடுத்ததால் கலைத்தன்மையை அதன்போக்கிலே இழந்துவிடுகின்ற அபாயத்தையும் அடைகிறது.

 

ஒருவர் தன் மதத்தை எப்படி நேசிக்கின்றார் என்பது இன்னொரு மதத்தின் மீதான சகிப்புத்தன்மையில் இருக்கிறது என்று கூட ஒருவகையில் மதிப்பிட்டுக்கொள்ளலாம். இன்னொரு மதத்தை வெறுத்துக்கொண்டு, நாம் சார்ந்திருக்கும் மதங்களை எப்படியேனும் காப்பாற்றிவிடமுடியாது. அதனால் எந்த ஆன்மீக ஈடேற்றந்தான் நடந்துவிட முடியும்? ஒரு மத நம்பிக்கையாளரை விட இலக்கியவாதிக்கு நிச்சயம் விரிந்த மனதுதான் இருக்கும். இங்கே சோ..தர்மன் ஓர் இலக்கியவாதியாக அல்ல, ஒரு மத நம்பிக்கையாளராக தன்னை நிரூபிக்க முயற்சித்து தோற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகமானது. அது அவருக்குரிய அடையாளம் இல்லை என்பதை நாம் மட்டுமில்லை அவரது இலக்கிய மனமும் நன்கறியும்.

 

..............................


(Jan 29, 2021)