கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label க‌விதைக‌ள். Show all posts
Showing posts with label க‌விதைக‌ள். Show all posts

'அம்ருதா' இதழில் வந்தவை...

Tuesday, September 16, 2014

கனவுகளைக் கனவுகள் எனவும் சொல்லலாம்

மார்க‌ழியின் மாலையொன்றில
ச‌ந்தித்த‌போது அது எதுவாக இருந்த‌தென்ப‌து
நினைவினிலில்லை;
கெதியாய் இருள்மூடி ப‌னிபொழிந்த‌ மூன்று ம‌ணியாக‌
இருந்திருக்கூடுமென்றபோது....
நான் - நினைவூட்ட‌லின் வ‌ன்முறை குறித்தும்
நீ - நினைவில் வைத்திருக்க‌வேண்டிய‌ வ‌ர‌லாற்றின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும்
விவாதித்த‌ப‌டி ப‌னிமூடிய‌ குளிராடையைத் த‌ள‌ர்த்திய‌ப‌டியிருந்தோம்
இக்க‌ண‌த்தை நினைவில் வைத்திருப்ப‌தைப் போன்று
முன்னே பின்னே நக‌ர்ந்த‌ ந‌க‌ரும் கால‌த்தை
நினைவு நூல‌க‌த்தின் அக‌ர‌வ‌ரிசையில் தேடியெடுக்க‌
ஏன் எவ‌ரும் துல்லிய‌மாக‌ எழுத‌வைக்க‌வில்லையென்ற‌ப‌டி
தேநீருட‌ன் சான்ட்விட்சுக்கான‌ காய்க‌ளை வெட்ட‌த்தொட‌ங்கினோம்

இன்ன‌வின்ன‌ வேலைக‌ளை இவ‌ரிவ‌ர் செய்ய‌வேண்டுமென்ற‌
எந்த‌க்க‌ட்ட‌ளையையும் ம‌வுன‌ம் க‌ற்பிக்காத‌தை
ந‌ம‌க்குரிய‌ நேச‌மென‌ப் பெய‌ரிட்ட‌ழைக்க‌லாம்
அன்றைய‌ இர‌வுண‌விற்கான‌ கோழியை வெட்டி
Ovenக்குள் வேகவைத்த‌ பொழுதிற்கிடையில்
*ஒற்ற‌னில் அமெரிக்கா வ‌ந்த‌ கதைசொல்லியின் அனுப‌வ‌த்தையும்
இறுதியின் எல்லோரையும் என்றென்றைக்குமாய் பிரிந்துபோகும்
அவ‌னின் மெல்லிய‌ துய‌ரையும் ப‌கிர்ந்த‌போது
ப‌னியைப்போல‌ நான் உருக‌க்கூடிய‌வ‌னாக‌யிருந்தேன்
நீராயென் வெறுமைக‌ளை நீ நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ளாயிருந்தாய்

கால‌மெனும் நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
தெப்ப‌மாய் மித‌க்க‌த் தொட‌ங்கிய‌போது
நாம் எம‌க்கான‌ துடுப்புக்க‌ளைத் த‌வ‌ற‌விட்டு
ந‌தி வ‌ற்றுமென‌க் காத்திருந்தோம்
இப்போது குளிராடையைத் த‌ள‌ர்த்துவ‌த‌ற்கோ
கையுறையைக் க‌ழ‌ற்றி விர‌ல்க‌ளைக் கோர்ப்ப‌த‌ற்கோ நேர‌மின்றி
ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ளுக்குள் த‌னித்து நீந்துவ‌தைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை
மார்க‌ழி மாலையொன்றில் நாம் ச‌ந்திந்த‌போது
அது எதுவாக‌ இருந்த‌தோ அது இப்போதும் அவ்வாறே இருக்க‌வும்கூடும்
நாம்தான் எதுவெதுவாக‌வோ மாறிவிட்டோம் என்ப‌தைத் த‌விர‌.

* அசோக‌மித்திர‌ன் எழுதிய‌ நாவ‌ல்
--------------------------------------

பறக்கும் நூலகம்

குளிர்காலத்தில்
புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்
பக்கங்களில் தன்னைத் தொலைத்த
வெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்
அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெறும்
முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்
சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டு
வெளியில் பொழியும் கடும்பனியைத் திட்டுவதுபோல
உங்களை நீங்களே நிதானமாய் நிர்வாணமாக்கவும் முடியும்

புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆணை/பெண்ணை
மோகித்துக்கொண்டிருப்பவள்/ன்
பலநூறு புத்தகங்களை
ஒரேநேரத்தில் வாசித்துவிடுபவனாய்/ளாய் இருக்கலாம்

தொடைகளுக்குள் பறக்கத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
மறைத்து வைத்திருந்தவளின் உச்சந்தலையில்
ஆரம்பிக்கும் முத்தத்திலிருந்து
மலரத்தொடங்குகின்றது
வாசிக்கமுடியா வர்ணங்களில் கனவுகளின் நூலகம்.
-----------------------

வாதை

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
வெப்பந்தேடி அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றுத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.

(நன்றி: 'அம்ருதா' - மே மாத இதழ்)

ரெயின்

Monday, April 02, 2012


ஒளியைச் சுருட்டியபடி
விரையும் ரெயினின்
இழுபடும் பெட்டிகளில்
வாழ்வு ஓலமிடுகிறது
ஒரு ரூபாய் நாணயத்தை
தண்டவாளத்தில் வைத்துவிட்டு
புளியம்பூவை சுவைத்து நின்ற நாட்களும்
பிறகு ரெயினே வராத
நிராதரவான தண்டவாளங்களில்
சிலிப்பர் கட்டை பெயர்த்து
பங்கர்கள் சமைத்தபோதுகளில்
நம் கண்களின் முன்னே
ரெயினொரு வரலாற்றுப் பொருளாகிக் கடந்துபோனது.
நின்று நிதானித்து
ஏறிப் பயணிக்கவோ விடுப்புப் பார்க்கவோ
எந்த இரெயினும் பிறகு வாய்த்ததுமில்லை

கடந்த காலங்களின் முன் மண்டியிடும்போது
வந்துசேரும் பதற்றத்திற்குள்
எப்போதும் ஒரு ரெயின் ஓடிக்கொண்டேயிருக்கிறது
வெயிலூறும் ஒழுங்கைகளில் செருப்பில்லாது
கள்ளிவேலிகளைக் கடந்த
சிறுவர்களை மீண்டும் உயிர்ப்பிக்காதவரை
எந்த ரெயினில் ஏறினாலும்
குழந்தமையைக் கொன்றுவிடும்
கொடுங்காலத்திற்குள் சென்றுவிடுமெனும் அச்சத்தில்
சிலிப்பர்கட்டைகளை மாற்றிமாற்றி
அடுக்கியபடியிருக்கின்றேன் தண்டவாளங்களில்லாது.

Apr 02, 2012

மூன்று க‌விதைக‌ள்: சென்ற‌ வ‌ருட‌ நினைவுக‌ளிற்கு...!

Tuesday, May 18, 2010

க‌பால‌ங்க‌ளைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டி
ப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்
த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளை

சித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரை
எண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌
நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்
உறைந்துபோயிருந்த‌ போர் அரக்கன்
விழிக‌ள் விரித்து
இன்ன‌மும் உட‌ல‌ங்க‌ள் தாவென்று உக்கிர‌த்துட‌ன்
த‌ன் அக‌ண்ட‌ வாயைப் பிள‌க்கிறான்
வ‌ன்னிப் ப‌துங்குகுழிக‌ளுக்குள்.

அவ்வைக்கு க‌ள்ளோடு தமிழூட்டி
முன்னோர் காலத்தில் ச‌ந்த‌திக‌ளைப் பிர‌ச‌வித்தபடி
காடுகளில் அலைந்த ஆதித்தாயே
குழ‌ந்தைக‌ளின் குருதி குடித்தும்
எவரினதும் தாகம் தீராக்கண்டு
எல்லாப் பூர்வீகப் பிரதிகளும்
தம்மைத் தாமே எரிக்க
எமதெல்லோரினதும் அடையாளமாகிறது மகாவம்சம்

உடலங்கள் புதைந்த சதுப்புநிலத்தில்
இன்னமும் கொய்வதற்கு மிஞ்சியுள்ள
தலைகளுக்காய் காத்திருப்பவர்களின்
கைகளில் 'சமாதானம்' இருக்க
அரசர்களும் அதிகாரங்களும்
கவனிக்கவும் கதைக்கவும்படும் காலத்தில்
நாயொன்று கவ்விக்கொண்டுவந்த
எலுமிச்சை குத்தப்பட்ட வைரவரைப்போல
அநாதரவாயினர் மக்கள்

பறவைகள் காவிச் செல்லும்
சிமினி விளக்குகளுக்காய் குழந்தைகள் காத்திருந்த காலம்போய்
நேற்றுச் சரிந்து வீழ்ந்த உடலுக்கு
கொள்ளியிட எந்தப் பிசாசு நெருப்புக்கொண்டுவருமென்று
காத்திருக்கும் விழிகளின் கோரம் தாங்காது
நான் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் எண்ணெய் ஊற்றி
எரியூட்டிய எனது கபாலத்தை.

(Feb 26, 2009)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
எவருமே நெருங்கவியலா
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.

(Nov 07,2007)

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் இருப‌த்தைந்தை.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

Monday, May 10, 2010

செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்

ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.

திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம்
இணைந்தாடச்சொல்கின்றாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளம்பாதிருப்பவர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்திற்குரியவன்;
ஆடுகின்றேன்.

வாரமொன்று களிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது

இந்த நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன்கலாச்சாரத்து கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முள்சத்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.

சித்திரை 05/05

நஞ்சு

Saturday, May 08, 2010

thami

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள்
போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்துபோனவர்களின் நினைப்பொழிந்து
போர்பற்றிய பயங்களிலிருந்து விடுபடலாமென்று
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகின்றான் தோழன்

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்காலக்குறிப்புக்கள் களைந்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.




(Jan 30, 2007)
Photo: Thami (Eelam)




நீ இன்னும் அழ‌வில்லை

Friday, February 12, 2010

1.
நேச‌த்தின் க‌ச‌ப்பு
ம‌ர‌ங்க‌ளில் துளிர்த்து
நில‌வொன்று த‌ன்னை
தீமூட்டிக் கொன்ற‌ க‌ரிய‌விர‌வொன்றில்
இத்தெருக்க‌ளின் விளிம்புக‌ளில் தொலைந்திருக்கிறேன்
புராத‌ன‌த்து ம‌ண‌த்தை
*வ‌ளாக‌த்துப் புறாக்க‌ள் சிற‌க‌டித்து ப‌ர‌ப்பிய‌
தேவால‌ய‌த்தின் வாச‌லில்
நாட‌ற்ற‌வ‌னாக‌வும்
ஒருத்தியின் வெறுப்புக்குரிய‌வ‌னாக‌வும்
ஒருபொழுதில் கிட‌ந்துமிருக்கிறேன்.

த‌ன் மூதாதைய‌ர் நெய்துகொடுத்த‌
போர்வையைப் ப‌கிர்ந்த‌ பூர்வீக‌க்குடி
த‌ங்க‌ளின் க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளின்மேல்
க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இப்பெருந‌க‌ர‌த்தின
வ‌ர‌லாற்றைத் துப்புகையில்
சூரிய‌ன் யாரையோ தொலைவில்
சுட்டுவிட்டு த‌லைம‌றைவாவ‌து தெரிந்த‌து
வான‌ம் க‌ருஞ்சாம்ப‌லைப் போர்த்திய‌ப‌டி
கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌லைத்தேடி
ப‌க‌லில் இர‌க‌சிய‌மாய் அலைந்த‌து

இன்ன‌மும் உல‌ர்ந்துவிடாத‌
உயிர்த்த‌லுக்கான‌ ப‌ச்சைய‌த்தை
நேசமாயொருத்தி ப‌கிர வ‌ந்த‌போது
நாட‌ற்ற‌வ‌ர்க‌ளான நாமிருவ‌ரும்
இன்ன‌முமித்தெருக்க‌ளில்
திசைக‌ள‌ற்று அலைவ‌த‌ற்கான‌
ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் விழித்திருக்கின்ற‌தென்ற‌ப‌டி
விடைத‌ந்தார் பூர்வீக‌க்குடி

2.
இன்று
நிக‌ழ்கின்ற‌ ஊழிப்பெருங்கூத்தில்
நின்று அழுவ‌த‌ற்கான‌ கால‌ங்கூட‌ இல்லை
விழி நிர‌ப்புகின்ற‌ க‌ண்ணீர்த்துளிக‌ளை
குர‌ல்க‌ளிலும் ப‌தாதைக‌ளிலும்
ம‌றைத்து வைத்து
எவ‌ருமே செவிம‌டுக்காத‌ சூனிய‌த்தில்
எங்களைக் காப்பாற்றுங்க‌ளென‌க் கெஞ்சுகின்றோம்

ப‌‌டுகொலைக‌ளை நிறுத்த‌ச்சொல்லி
எங்க‌ளோடு கூட‌வே
உர‌த்துக் க‌த்தும் 9 வ‌ய‌து கீர்த்தி
த‌மிழ் ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌
ஏனோர் சீன‌ப்பெருஞ்சுவ‌ர் க‌ட்டியிருக்க‌க்கூடாதென்கிறான்
சிறுவ‌ர்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌மோ
யார் ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வ‌ரென்ற‌
ப‌குப்பாய்வுக‌ளுக்கோ அவசிய‌மிருப்ப‌தில்லை
இருள்கின்ற‌ இக்க‌ண‌த்து வான‌த்திலிருந்து
தெறிக்குமொரு மின்ன‌லைப்போல‌
இற‌ந்த‌வ‌ர்க‌ள் நாளை உயிர்ப்பார்க‌ளென‌
க‌ன‌வு காண்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள்

பிரிய‌ கீர்த்தி,
என்றேனும் ஒருநாள்
எல்லோரும் நிதான‌மாய்க் கேட்க‌க்கூடிய‌
உன‌க்கதிகார‌முள்ள‌ ச‌பையிலிருந்து...
நெடுஞ்சாலையில் வாத்துக்க‌ள் ந‌ட‌ந்துபோனாலே
கார்க‌ளை ம‌ணிக்க‌ண‌க்கில் நிறுத்தி
வ‌ழிவிடும் இம்ம‌க்க‌ள்
ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் அழிவின்போது
ம‌வுன‌ம் சாதித்து த‌ங்க‌ளை நிர்வாண‌மாக்கிய‌தையும்
எங்க‌ளைப் ப‌க‌டைக‌ளாக்கி
சூதாடிய‌ வ‌ல்ல‌ர‌சுக‌ள் அடையாள‌மின்றி
உடைந்து போன‌தையும்
என் க‌ல்ல‌றை முன்வ‌ந்து செப்பு

அப்போது ஓர் ஊற்றாய் அழுது தீர்க்கிறேன்
ஏன் சிச்சியா
எல்லோரும் அழும்போதும்
நீயின்னும் அழ‌வில்லையெனும் உன் கேள்விக்கு.


May 10, 2009
*Toronto Campus

(அர‌சிய‌ல் முர‌ண்க‌ளிற்கு அப்பாற்ப‌ட்டு,  தீக்குளித்த‌ முருக‌தாச‌னின் ஓராண்டு நினைவுக‌ளிற்கு Feb 12, 2009)

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

Tuesday, October 06, 2009

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்...
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்...
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் 25ஐ.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

பிற‌ழ்ந்த‌வ‌னின் வாக்குமூல‌ம்

Friday, April 03, 2009

நானொரு கொலைகார‌னென்ப‌தை
எவரும் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை.
கொலைக‌ளுக்கான‌ சில‌ வ‌ரைமுறைக‌ளை
கைவ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள்
'கொலை...' என்று ஆர‌ம்பித்த‌வுட‌னேயே
ஏற்க‌ன‌வே செய்ய‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ளின்
ப‌ட்டிய‌லுட‌ன் ஒப்பிட‌த் தொட‌ங்குகின்றார்க‌ள்
முக்கிய‌மாய் கொலையைச் செய்த‌வ‌ன்
தான் கொலை செய்த‌தை ஒப்புக்கொள்வ‌தில்லையென‌வும்
இப்ப‌டி கொலையைச் செய்துவிட்டு
வெளியே ந‌ட‌மாடித் திரிவ‌த‌ற்கு
ச‌ட்ட‌த்தில் ஓட்டைக‌ள் இல்லையென‌வும்
தெளிவான‌ வாத‌ங்க‌ளை வைத்து
நான் கொலை செய்ய‌வில்லையென‌ நிரூபிக்கவும் செய்கின்றார்க‌ள்.

ந‌ன்று.
என‌க்கு அண்மைக்கால‌மாய்
எதிர்கால‌ம் 'க‌ட‌ந்த‌கால‌மாக‌வும்'
க‌ட‌ந்த‌கால‌ம் 'எதிர்கால‌மாக‌வும்'
பிள‌வுப‌ட்ட‌ ம‌னோநிலையில்
எதிர்கால‌த்தில் நிக‌ழ்த்த‌ப்போகின்ற‌ கொலையை
ஏற்க‌ன‌வே செய்துவிட்டேன் என்கின்ற‌போது
உங்க‌ளுக்கு பிற‌ழ்ந்த‌வ‌னின் குறிப்புக‌ள் நினைவுககு வ‌ர‌லாம்.

நான் ஏழாவ‌து முறையாக‌
காத‌லித்து கைவிட்ட‌வ‌ளோடு
ஏற்க‌ன‌வே ஆறுபெண்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்
க‌ருத்த‌ரித்து வ‌ள‌ர்ந்த‌ காத‌ற் சிசுக‌ளைக் கொன்றேனென‌
அழ‌கிய‌லோடு க‌விதை சொல்ல‌ பிரிய‌முண்டெனினும்
கொலைக‌ள் எப்போதும் குரூர‌மான‌வை
இப்போது கிறுக்கிக்கொண்டிருக்கும் க‌ர‌டுமுர‌டான‌
இந்த‌ ஏதோ ஒன்றைப்போல‌.

கொலை செய்தேன் செய்தேனென‌

என‌தெல்லாப் பிர‌திக‌ளிலும்
எழுதிய‌த‌ன் அலுப்புத் தாங்காது
உண்மைக‌ளை அறிவ‌த‌ற்காய்
விம‌ர்ச‌ன‌க் க‌த்திக‌ளோடு அவச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய்
பிரேத‌ப் ப‌ரிசோத‌னைக்கு வ‌ருகின்றீர்க‌ள்
முத‌லில் இஃதொரு க‌விதை இல்லையெனும் நீங்க‌ள்
இங்கே பாவிக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள்
ஏற்க‌ன‌வே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையால்
க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ எழுத்தும் கூட‌
என்கிறீர்க‌ள்.

நான் க‌விதையை அல்ல‌,
கொலைக்கான‌
என் வாக்குமூல‌த்தைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
மேலும்
ஏற்க‌ன‌வே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளனான
ஒரு மொழியில்
வார்த்தைத் திருட்டுக்களைத்தான்
நாமெல்லோரும் செய்துகொண்டிருக்கின்றோமென‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு அண்மையாக‌ நின்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

பிர‌திக்கு அப்பால‌ல்ல‌
அத‌ற்கு உள்ளேதான் எல்லாம் உள்ள‌தென்று
பூத‌க்க‌ண்ணாடியின் துணையோடு மீண்டும் தோண்டுகின்றீர்க‌ள்
அர்த்த‌ம‌ற்ற‌ சொற்க‌ளென்று வெட்ட‌த்தொட‌ங்கினால்
எஞ்சியிருக்கும் தாளின் முற்றுப்புள்ளியிலும் புதிய‌தொரு அர்த்த‌மிருக்கும்
புன்ன‌கை பூச‌ப்ப‌ட்டவென் சொரூப‌ குண‌த்துக்குள்
நான் செய்த‌ கொலையும் ம‌றைந்திருக்கலாம்

இல்லை, இல்லை
இது உன் ம‌ன‌ப்புதிர்க‌ளால் க‌ட்டிய‌மைத்த‌
ச‌துர‌ங்க‌ப் பெட்டிக‌ளில் எம்மைய‌ழைத்து
முடிவுறாத‌ ஆட்ட‌திற்கான‌ முஸ்தீபுக‌ளென்ற‌ப‌டி
நீ கொலையே செய்ய‌வில்லையென‌ பூத‌க்க‌ண்ணாடியோடும்
க‌த்திரிக்கோலுட‌னும் வெளியேறிவிடுகின்றீர்க‌ள்.
ந‌ண்ப‌ர்க‌ளே உங்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றேன்
த‌ய‌வு செய்து நான் செய்துவிட்ட கொலையைக் க‌ண்டுபிடித்து
கொலைகார‌ன் என்றென்னை அடையாள‌ப்ப‌டுத்துங்கள்.
இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவ‌ரிட‌மும் பிடிப‌டாம‌ல் இருப்ப‌தென்ப‌து
நான் மிக‌வும் க‌டின‌ப்ப‌ட்டு செய்துவிட்ட‌
கொலையை ம‌திப்ப‌ற்ற‌தாக்கி விடுகிற‌து.


ப‌ட‌ம்: Galatea of the Spheres by Salvador Dali

புதுவிசையில் வெளிவ‌ந்த‌ இர‌ண்டு க‌விதைக‌ள்

Tuesday, January 20, 2009

-புதுவிசை (ஒக்ரோபர் - டிசம்பர் 2008)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
நான்
எவருமே நெருங்கவியலாத
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.



இறுதியில் நிகழ்ந்தது

நாமெழுப்பும் கண்காணிப்புத்தேசத்தின்
எண்ணற்ற தெருக்களில்
நேசம் பாசியைப்போல பின்னலிடுகிறது
வழுக்கி விழுந்து உதிரமுருகி சாலைதகிப்பினும்
காயங்களை மறைக்கும் புத்திசாலித்தனத்தை
தாபமொரு சுனையாய்க் கசியவிடும்
செயல்களின் தவறுகளை கர்ப்பக்கிரகத்தில் பதுக்கியொளிக்க
துர்நாற்றம் தாங்கமுடியாக்கடவுளர்கள்
நாம் விமர்சித்து
உயிர்த்தெழுவதற்கான சந்தர்ப்பங்களோடு வெளியேறிவிடுகின்றனர்


கதகதப்பான நினைவுகளை வெயிலில் காயும்
ஆடைகளோடு உலரவைத்துவிட்டு
அலுப்பூட்டும் பெருமூச்சுக்களோடு
இந்த் ஆண்கள் இப்படித்தானென நீயும்
இந்தப் பெண்களே இப்படித்தானென நானும்
எதிரெதிர்த்திசைகளிலிருந்து சபிக்கிறோம்

காலப்பெருங்காகமொன்று
தன்கூரிய அலகால் கொத்தத்தெடங்குகையில்
விரல்கள் குழைந்து புனைந்த Tottem Pole சரிந்து
நேசம் நமக்களித்த ஓவியங்கள குலைகின்றன
ஆதிக்குடியின் வெண்தாடிக்கிழவன்
சூரியன் காணாத்துயரில் தற்கெலைத்த துயரம்
நம்மிலும் கருமையாய்ப்படர
நிச்சயமின்மைகளில் நடக்கத்தொடங்குகிறோம்

இன்னெரு இழப்பு
இன்னெரு பருவமாற்றம்
இன்னெரு இடப்பெயர்வு.

சுழன்றாடும் துருவப்பனிப்புயலிற்கு
நாடோடிக்கும் நின்று தரிப்பவனுக்கும்
வித்தியாசம் தெரிவதேயில்லை
தான் நினைத்த நேரம் பெழிந்துவிட்டு
கலங்காது நகரும் பனியின் வாழ்க்கை
எவருக்கும் வாய்ப்பதுமில்லை.


ந‌ன்றி: கீற்று

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்

Thursday, January 15, 2009

Life is lived in the subtext.
-Unknown

ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வை
திணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில்
அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழை
திசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தை
சுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம்
வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌
ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ள
ஒரு வார‌மாய் இடைவிடாத‌ வாசிப்பு.
மூட‌ப்ப‌டாத‌ புத்த‌க‌ங்க‌ள், தோய்க்க‌ப்ப‌டாத‌ உடுப்புக்க‌ள்
ப‌சிக்கும்போது ரொட்டியைச்சூடாக்க‌ முட்டையைப்பொறிக்க‌வென‌
அவ்வ‌ப்போது குசினியுட‌னான‌ முத்த‌மிட‌ல்க‌ள்
இறுதியில் மிஞ்சிய‌து என்ன‌வோ
நிர்வாண‌ங‌களில் மீது ந‌ம் த‌னிய‌ன்க‌ள் நின்றாட‌
பெருந்த‌னிமையில் சுட‌ர்விட்ட‌ணைந்த‌ த‌விப்பு
ஒன்ப‌தாவ‌து நாள் அறை வ‌ந்துசேர்ந்த‌ தோழியுட‌ன்
நாமிணைந்து ச‌மைத்த‌ காளான்க‌றியைச் சுவைக்கையில்
வாழ்வென்ப‌து ஆவி ப‌ற‌ந்துகொண்டிருக்கும்
சோற்றில் மித‌ப்ப‌தாய்த் தோன்றிய‌து.

2.

ந‌ம‌தெல்லாக் க‌ன‌வுக‌ளும்
க‌ண்ணாடியில் ஆவியாகிக் க‌ரைந்துகொண்டிருக்கையில்
முல்லைத்தீவு முற்றுகையிட‌ப்ப‌டுகிற‌து
காஸா ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுகின்ற‌து
த‌ம‌து உட‌ல்க‌ளை
நில‌ம் பிள‌ந்துவ‌ந்த‌ கவ‌ச‌வாக‌ன‌ங்க‌ளுக்கு காணிக்கைசெய்த‌
ஒரு த‌லைமுறை முன்னேயிருக்கிற‌து
இனி என்றென்றைக்குமாய் அடிமை வாழ்வாவென‌
பின் வ‌ந்த‌ த‌லைமுறை க‌ல‌ங்குகிற‌து
நாமின்னும் க‌தைத்துக்கொண்டிருக்கின்றோம்
உரையாட‌லிலிருந்து செய‌லுக்குத் திரும்புவ‌து குறித்து
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
................... அலுப்பேயின்றி.

3.
மூதாதைய‌ர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ம‌ண்ணை
ப‌ல்குழ‌ல் பீர‌ங்கிக‌ளால் பிள‌ந்து
அடிமைப் பிள்ளைக‌ளைப் பிர‌ச‌விக்க‌ முடியாது
இர‌த்த‌ வெடில‌லையும் காற்றில்
துர்க்கைய‌ம்ம‌ன்க‌ள் த‌லைவிரித்து அலைவ‌தால்
அட‌க்க‌நினைக்கும் எவ‌ர்க்கும்
நிம்ம‌தியான‌ இர‌வுக‌ளினி வாய்க்க‌ப்போவ‌துமில்லை

வ‌லிய‌வ‌ன் ம‌ட்டுமே வாழ்வானெனும்
போரின் ம‌னுநீதியைக்க‌ண்டு
வெறுத்தொதுங்கிய‌ கால‌ம் நெடிய‌தெனினும்
எம்மை வ‌யிறுக‌ளில் க‌ருவாய்ச்சும‌க்கையில்
இர‌ட்டைக் குழ‌ந்தைக‌ளாய்

கூட‌வே போரையும்
பிர‌ச‌வித்த‌ பிரிய‌ அன்னைய‌ர்க‌ளே...
நீங்க‌ள் எம்மைக் க‌ருவிலே கொன்றிருக்க‌வேண்டும்.

குழ‌ந்தைக‌ள் பிற‌க்காத‌ நாட்டில்
ச‌ந்த‌திக‌ளின் நீட்சியில்லாதது போல‌
த‌ன் துப்பாக்கிக‌ளுக்கு
குறிபார்த்துச்சுட‌ உட‌ல‌ங்க‌ள் கிடைக்காத ச‌லிப்பில்
போரும்
த‌ற்கொலை செய்வ‌ற்கு வாய்ப்பிருக்கிற‌து

5.
பிற‌கொருநாள்
அம்மார்க‌ளே...
ந‌ம்ம‌ண்ணில் உள்ள‌ன‌வெல்லாம் யுத்த‌மில்லாது வாழ‌ட்டுமென‌
புதிய‌ க‌ருக்க‌ளைப் பிர‌ச‌வியுங்க‌ள்;
இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை
குழ‌ந்தைக‌ளில்லாது நிம்ம‌தியாய் நீங்க‌ள் வாழ்ந்தீர்க‌ளென்று
எம் ச‌வ‌க்குழிக‌ளின் முன்நின்று உர‌த்துச் சொல்லுங்க‌ள்.




(வ‌ளாக‌ நாட்க‌ளுக்கு...)

மூன்று கவிதைகள்

Thursday, May 22, 2008

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை)

சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு

சிக்கலான ஆட்டமொன்றின்
புதிர்களாகும் நாம்
நிசங்களை
சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை
கனவுகளெனப் பெயரிட்டோம்

சரசரவென்று வாழையைப்போல
வளர்ந்த நமது அறிதல்
எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை
வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்
பருவமழைநாளில் வடிந்துபோயிற்று

அடியோடு வாழையை இல்லாமலொழிக்க
கீழே வளரும் புகையிலைக்கன்றுகள் விடுவதில்லை
இலைகிழித்து நாருரித்து காற்றின் வசைச்சொல் கேட்டு
நிலைத்திருப்பதன் வேதனையில்
சிறுமீன்குளத்து ஆம்பல்களும் சோர்கின்றன

வோட்டர்பம்ப் இறைக்க
மண்ணெண்ணெய் வாசனை நுகர்ந்து
பாத்திகளில் சேறப்ப
நீரைப்போலச் சுழித்தோடிய சிறுவனுக்கு
குறி ஒரு அடையாளமாவதில்லை

தண்ணென்றிருக்கும்
ஈரப்பலா முலைகளில்
முகம் புதைதிருக்குமென்னிடம்
நீ பிரிந்து போவதற்கான கடைசிவார்த்தைகளை அவிழ்க்கிறாய்
வாசனையற்று உதிர்கின்றன மல்லிகைப்பூக்கள்.

(May 14, 2007)
---------------------------------------
கொழும்பு
(அல்லது A Tale of Hell City)

வந்திறங்கியபோது
எழும்பிய இரண்டு கிபீர்கள்
இது என் நாடல்லவென்ற குரலை
இரைச்சலில் நெரித்துச் செரித்தன
வாசலில்நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும் சகோதரமுகங்கள்
அந்நியனெனும் அடையாளத்தை
மரணத்தின் மொழியிலென் பயணப்பொதிகளிலெழுதிப்போந்தனர்
இங்கேதான்... இப்படித்தான்... வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
தெருக்களில் குருதிதேடியலையும் வெயில்
வீட்டிற்குள் நுழையாதிருக்கும் ப-த-ட்-ட-த்-து-ட-ன்
சாளரங்களை இறுக்கிச் சாத்துகிறாய்
தாபத்தை வியர்வை கரைத்துக்கொண்டிருந்த நிசப்தப்பெருவெளியில்
நெருங்கிய உதடுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த சுவர்ப்பல்லி
தீராப்பசியுடன் விழுங்கிற்று
'இனந்தெரியாதோரால்' கொல்லப்பட்ட மூவரின் உடலங்களை.

(Oct 03, 2007)
---------------------------------------
வதை

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயபடுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

Wednesday, July 18, 2007

அவர்கள் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்கள்
கொட்டாவிவந்து அலுப்பு நெளிந்தது.
அவர்கள் அறிவைச் சுடச்சுட அடுப்பிலிருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்
மூளை கரியாகிக்கரியாகி சாம்பலாய் உதிர்ந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் இடைக்கிடை தண்ணீரையருந்தியபடி கைகளை ஆட்டி
தாம் சொல்வதே உண்மையென நம்பவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்
மூத்திரப்பை நிரம்பி ஆசுவாசப்படமுடியாது குறுகிய அறைச்சுவர்கள் அடைத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னலுக்கப்பால் விரியும் பெஞ்சில்

காதலியொருத்தியை முத்தமிட்டு முதுகைவருடியபடியிருக்கும் கரங்கள் நடுவிரலைக்காட்டிக் கேலிசெய்கிறது
நீயில்லாத உனதின் இருப்பை.

(ஒரு மாநாட்டு அரங்கில் இருந்தபொழுதில்)



பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.

(murder-sucide இரட்டைக்கொலைகளின்பின்)

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.


(2006)
-மீள்பதிவு-

--------------
(இன்று -Mar 08- பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு...)

?

Monday, February 05, 2007

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது
பகிர முடியாத நம் வலிகள்

கொடுங்காற்று வீச
தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்
தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட
போரை
கெட்டவார்த்தையால் திட்டுகிறான்

உன்னை
காரின் பின்சீட்டில்
புணர்ந்துகொண்டிருக்கையில்
யோனியில்
கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள்
குறுக்காய் கடந்துபோகின்றாள்.

.......................

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
............................

கடிகாரத்தின்
இருமுட்களுக்குமிடையில் சிக்கிய
பல்லி நான்

முன்னே நகரும் முள் நீ
பின்தொடரும் முள் கடந்தகாலம்

கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.

(Feb 04, 2007)

நாய்

Friday, January 12, 2007

நாய் பலவீனங்களிலிருந்து
தனக்கான அபிப்பிராயங்களை உருவாக்குகின்றது
இன்னொரு வீழ்ச்சிபற்றி குரைக்கும்போது
தனக்கான வீழ்ச்சியின் கற்களையும்
முதுகில் தாங்கியபடியே
ஆட்டுகின்றது வாலை

தனக்கான கடவுளும்
தான் பேசும் அரசியலும்
நரிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றதென
நாயும்
நரிகளின் குரல்களில் ஊளையிட்டால்
பிரதிஸ்டை செய்து பீடத்தில் ஏற்றப்பட்டு
குழாத்து சொறிதல்களும் சொகுசாய்க் கிடைக்கலாமெனினும்.....
பரிகள் நரிகளாயினும்
நாய்கள் நரிகளாவதில்லை

நாயை நோக்கி ஊளையிடும் நரிகள்
நேற்று போலிப்புன்னகைகளை
வீசிய முகமூடிப்பசுக்களென
மூடித்திறக்கும் படலைகள் அடையாளம் வைத்துச் சொல்கின்றன

வன்மத்திலிருந்து வன்மத்தையும்
சூழ்ச்சியிலிருந்து சூழ்ச்சியையும்
குரல்வளைகளைக்கிழித்து திருப்பிக்கொடுக்கும்
வன்முறை நாய்களுக்கும் தெரியும்

தன்னில் பரிவுகொள்ளும் மழலைகள்
துயில் கலைந்து
சித்தம் கலங்கிடுமெனும் கவலையில்
மூர்க்கமாய் குதறிக்கடிப்பதை நெடும்நாட்களாய் மறந்திருந்தாலும்
தீட்டிக்கொள்கின்றது வேட்டைப்பற்களை
நாய்.


No apologies. /No suckers im not sorry/ you can all sue me. /Y'all could be the cause of me. /No apologies. /Y'all feeling the force of me no remorse from me../ Like there was no real cause for me /No apologies. /I'm not even acknowledgeing you at all, 'til i get a call that gods coming./ No apologies. /Laugh f***s its all funny, I could spit in your face while you standing across from me /No apologies!
(Eminem: Re-Up)

இன்மையின் இருப்பை இசைத்தல்

Tuesday, January 09, 2007

புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான்.
---------------------------

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
---------------------------

சதுரம் சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய் நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் இறுதியில் அழப்போவதை பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிர்கின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும் முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
---------------------------

உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்
தவிர்க்கப்படும் சந்திப்புக்களிலிருந்து
உலர்ந்துகொண்டிருப்பது கதகதப்பான வாசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிதைந்துகொண்டிருப்பது மனிதவுணர்வுகள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
---------------------------

(2006)
(முன்னர் பதிவிலிட்டு திருத்தங்களுக்காய் மறைத்தது)

நாககன்னி

Thursday, November 30, 2006

போர் பேரலையாகி
மூர்க்கமாய் எற்றித்தள்ள
சமுத்திரங்கள் தாண்டி
பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன்
புரட்டுகின்றான்
பூர்வீகநிலம் அபகரிக்கப்படும்
வரலாற்றின் பக்கங்களை

இவன்
இருப்பிழந்த வலியின்
கனந்தாங்காது துடித்த தேவதைகள்
மழைக்காலத்தில் அனுப்பிய
நாககன்னியுடன்
பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க
அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின
குழந்தைகள் குதூகலத்துடன்

இங்கு
வாழ்வு செழிப்பாகவும்
இயற்கை தாலாட்ட
எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும்
தற்செயலாய் வந்திறங்கிய
கடற்கொள்ளையரிடம்
செய்தி கொடுத்தனுப்பினான்;
உயிருக்காய்
அலைமேல் தத்தளிக்கும்
தன் நாட்டு மக்களுக்கு.

கூட்டமாய் வந்தவர்கள்
தம்வாழ்வு
துப்பாக்கிமுனையில் தீர்மானிக்கப்பட்ட
பொழுதுகள் மறந்து
பசும்மரங்களை தீயிட்டு கொளுத்தி
இசைமீட்டிய பறவைகளை
நாண்பூட்டி வதைக்கவும்
தொடங்கலாயினர்

விரும்பியதை புனைந்து
விரும்பியதை அருந்தி
இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை
வன்மத்துடன் புணரத்துடித்த
குறிகளின் வசீகரப்பேச்சில்
தன்சுயத்தையும் தொலைத்தான்
ஆதிமனிதன்

சூரியன் துணையிருக்கும்வரை
அவளை அடைதல் ஆகாதெனும்
உண்மை கசக்க
தங்களைப் போல பிறப்பால்
சாதிப்பச்சை குத்தப்படாதவள்
இழிபிறவியென கற்பிதங்கள் இயற்றத்தொடங்கினர்
பெயர்ந்தவர்கள்

ஓர் அமாவாசையிரவில்
நாககன்னியையும்
பச்சை குத்தப்படமுடியா குழந்தைகளையும்
சாதியுருவேறியாடி
கொன்று புதைக்க
வெகுண்டெழுந்தான் ஆதவன்
விழிகள் சிவக்க

மீண்டும்
நாடற்றவர்களான இவர்களை
இனி
தேவதைகளும்
அரவணைக்கப்போவதில்லை.

(2006)
(காலம் - இதழ் 27)


தொலைதல்

Thursday, October 05, 2006

P3240033

(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்

பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்

'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு அரசியலை
கட்டுடைக்காது அமைதியாவதேனோ?
கூடவே சேர்க்கின்றேன் என்கேள்வியையும்

எல்லாவற்றினின்றும் விடுபடும்
சித்தம் - இன்னும்
வாய்க்கவில்லை என்கின்றனர்

பிரேமும் ரமேஷும் பிரமீளும்
நிறைய நிறைய
எடையிழந்து
'சிறகென மிதக்கின்றேன்'
மீண்டும் நான்

படுக்கை முழுதும் - சிலவேளைகளில்
நெஞ்சில் தவழும் மழலைகளாகவும்
கவிதைப் புத்தகங்கள்.
..................

(2)
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா,
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
...................


(3)
ஒரு கொலையைப்பற்றி
உரையாடுகையில்
மற்றொரு கொலை எங்கேயெனக்கேட்கிறது
திணிக்கப்பட்டு...
உருமாற்றமடைந்த மூளை

கொலைகளிலும்
என் இருப்பை நிரூபித்து எழுதாவிட்டால்
கைகளின் அரிப்பை சொல்லிமாளாது

வசதியான சூழலில்
உண்டுறுறங்கி புணர்ந்து
அறிவுஜீவித்தனமாய் பேசாவிட்டால்
வந்த நாடு கற்றுத்தந்த
மனிதாபிமானத்துக்கும் மதிப்பில்லை

கடைசிக் கணத்தில்
கையைக் காலை இழந்தோ;
இல்லை
முலைகளை குதறக்கொடுத்தோ
உயிரைத் தக்கவைத்திருக்காலாமென்று
அவர்கள் நினைத்தது...

மதுக்கோப்பையில்
முண்டங்களாய் மிதப்பதையும்
பூகம்பமாய் நடுங்குவதையும்
மட்டும்
நிறுத்தவே முடிவதில்லை
வரைமுறையற்று எவ்வளவு குடித்தாலும்.
.............

(4)
விரல்களை மடக்கி விரிப்பதற்குள்
கூடிவிடும்
சப்வே சனங்களைப்போல
ஆகிவிடுகிறது காதல்
மூச்சுத்திணறலாய்

ஒரு இரெயினும்
இன்னொரு இரெயினும் சந்திப்பதற்குள்
நகரவேண்டியிருக்கிறது
முத்தமிட்டு

கசங்கிய ஆடையில்
வருவது
நம் வாசமென்ற
சிலிர்த்த காலம் போய்
மாலை வந்து
வியர்வையூறும் ஆடைகளை
தோய்க்கவேண்டுமெனும் நினைவே
எஞ்சுகிறது
இன்றைய நம்முறவில்.


Photo: @ chinese lantern festival

அகாலம்

Tuesday, September 19, 2006

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில்
புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில்மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவது
கடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' என
ஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளைசிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய
சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.


(தோழனுக்கு....16092006)