கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேப்பம்பூ குறிப்புகள்

Tuesday, December 29, 2015

Road Song

சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கதையொன்றைப் பின் தொடர்ந்து செல்கின்ற குறும்படம், Road Song . திருவண்ணாமலைக் கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த ஒருவர் பழனிக்கு முருகனை வழிபடச் செல்கின்றார். அங்கே சாப்பிடும் பப்பாசியின் உருசியில் மயங்கி, அந்த பப்பாசி மரத்தின் வகையைத் தேடி பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றார். இறுதியில் கேரளாவில் கடற்கரையோரத்தில் அந்த பப்பாசி வகையைக் கண்டுகொள்ளும்போது மகிழ்ச்சியில் பாடுகின்றார். அவ்வாறு அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தவரை அந்தக் கடற்கரையோரம் வந்த போர்த்துக்கேயர் தங்கள் கப்பலில் ஏற்றிச் செல்கின்றனர். அவ்வாறு வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட இந்தத் தமிழர் ஸ்பெயினில் ஒரு கிராமத்தில் வாழ்நாள் முழுதும் பாடி இறுதியில் அங்கே இறந்தார், புதைக்கப்பட்டார் என்கின்ற ஒரு ஜதீகக் கதை இப்போதும் ஸ்பெயினில் இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதையைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தொடருவதே இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை இயக்கியது பினு பாஸ்கர். நண்பர் அய்யனாரின் பங்களிப்பும் இதில் இருக்கின்றது. அய்யனாரின் ஊடாக இத்திரைப்படத்தில் தயாரிப்பாள (கனடாவிலிருக்கும்) நண்பரினூடாக எனக்கு இந்த படம் வெளிவந்த காலத்தில் கிடைத்துமிருந்தது. நாங்கள் அப்போது 'சுடருள் இருள்' நிகழ்வை நடத்திக்கொண்டிருந்ததால், அந்த நண்பர் மிகுந்த உற்சாகத்தோடு தொலைவிலிருந்து என் வீட்டுக்குக் கொண்டு வந்து இப்படத்தைத் தந்திருந்தார். அடுத்து வரும் நிகழ்வில் இதைத் திரையிடுவதாகவும் அவருக்கு உறுதியளித்துமிருந்தேன். அவரும் தானும் நிகழ்வில் வந்து பங்குபெறுவதாய்க் கூறுயுமிருந்தார். தொடர்ச்சியாக 'சுடருள் இருளை' நிகழ்த்தமுடியாது நாளாந்த வாழ்க்கையிற்குள் சிக்கித் தவிர்த்தபோது இத்திரைப்படத்தை திரையிட முடியாதும், இடையில் நண்பரொருவரிடம் பார்க்கக் கொடுத்து அது திரும்பி வராமலும் போய்விட்டது.

இப்போது இத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது அந்த ஜதீகக்கதையினூடாக ஸ்பெயினில் கிராமங்களிலிருக்கும் மக்களின் வாழ்க்கை அவர்களின் நாட்டாரியல் இசை என பலவற்றினூடாக இத்திரைப்படம் பயணிப்பதாய்த் தோன்றுகின்றது. அன்றைய காலத்தைப் போலவல்லாது இயற்கையின் மீது அளப்பெரிய காதல் வந்துள்ள இன்றைய காலத்தில் அன்று பார்த்ததை விட இப்படம் இன்னும் என்னைக் கவர்கின்றது.

ஒரு விடயத்தைத் தேடிப்போகும்போது அது நிச்சயம் கிடைக்கவேண்டும் என்றில்லை. சிலவேளைகளில் அதன் பொருட்டு நிகழ்த்தும் தேடல்/பயணம் நமக்குள் நாமறியாத வேறு பல திறப்புக்களைச் செய்யக்கூடும். நிதானமும் அமைதியும் கைகூடும்வேளையில் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவும், இசையும், இவற்றோடு உடன்வரும் தேடலும் உங்களுக்கும் என்னைப் போல நெருக்கமாகக் கூடும்.

Chekele

இசை கொண்டாட்டமானதுதான், அதற்குள் ஒரு வரலாறு இருப்பதும், கடந்தகாலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்கள் ஒரு பாடலினூடாக நினைவுகூரப்படுவது என்பதும் இன்னும் அழகானதுதானல்லவா? Chekele என்கின்ற இப்பாடல் ஒரு பழைய வரலாற்றைச் சொல்கின்றது. வறுமையினாலும், சாதியமைப்பினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் கதை இப்பாடலினூடாக வெளிவருகின்றது. 

தோட்டங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செய்து, விளைச்சலின் பெரும்பகுதியை நிலச்சுவாந்தர்களுக்கு உரிய நேரத்துக்கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து சாத்தன் மற்றும் நீலி இருவரும் காட்டிற்குள் ஓடித் தப்புகின்றனர். அங்கே அவர்கள் தம் காதலைக் கண்டு கொண்டு வாழ்வை இனிதாக வாழ்ந்தனர் என்பது இப்பாடலின் பின்னாலிருக்கும் ஒரு கதை.

நாட்டார் பாடல் என்பதால் இதற்கு பல்வேறு வகையான இசை வகைமைகளும் இருப்பதும் தவிர்க்கமுடியாது. செவ்வியல் இசையிலிருக்கும் பாடலை Hard Rock ல் கேட்பதும் வித்தியாசமானதுதான். கொண்டாட்டமான இசையோடு,, மறைக்கப்பட்ட அல்லது எல்லோரும் கேட்க மனம் அவ்வளவு இசையாத ஒரு கதையும் கலக்கும்போது இசைக்கும் ஓர் அரசியல் வந்துவிடுகின்றது.



Joy

David Russellன், 'Silver Linings Playbook', 'American Hustle', 'Fighter' போன்ற படங்கள் எனக்குப் பிடித்தமானவை. அதிலும் 'Silver Linings Playbook', 'American Hustle' போன்றவற்றைப் பார்த்தே ஜெனிபர் லோரன்ஸின் தீவிர இரசிகனாவன். 'Joy' முற்றுமுழுதாக ஜெனிபர் லோரன்ஸின் படம். ஒரு பெண் தன் தனிப்பட்ட வாழ்க்கைத் தத்தளிப்புக்களோடு தான் விரும்பிய ஓரிடத்தை அடைகின்ற முயற்சியே இப்படம். ஏதோ ஒன்று குறைந்ததாய் அல்லது தவறவிடப்பட்டதாய் உணர்ந்த திரைப்படம் என்கின்றபோதும் நம் வாழ்வே அப்படியே கழிந்துகொண்டிருப்பதால் இதில் பெரிதாகக் குறையேதுமில்லை.

கூட வந்த நண்பர் தன் அனுபவங்களுக்கு அருகில் வரும் ஒரு திரைப்படம் என்று நினைவுகூர்ந்தார். முற்றுமுழுதான வெள்ளையின மக்களுக்கு மத்தியில் ஒரு தொழில் தொடங்கியபோது சந்தித்த நெருக்கடிகள் அவருக்கு நினைவு வந்திருக்கலாம். கிறிஸ்மஸ் இரவாயினும் படம் வெளிவருமன்றே இந்தப் படத்தைப் பார்க்கத் தேர்ந்தெடுத்ததே ஜெனிபர் லோரன்ஸிற்காக மட்டுமே.  இந்த வயதிலேயே என்னமாய் நடிக்கிறார் என்று ஒவ்வொரு படத்திலும் அவரை வியந்து பார்த்தபடியிருக்கின்றேன்.

அலையும் நினைவுகள்

Saturday, December 19, 2015

நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபெத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார். அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருட்களைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

(Oct, 2014)

வீடு by Warsan Shire

Sunday, December 13, 2015

-தமிழாக்கம்: டிசே தமிழன்

வீடு சுறாவின் வாயாக ஆகாதவரை
வீட்டைவிட்டு எவரும் வெளியேறுவதில்லை
முழுநகரும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணும்போதே
நீங்கள் நாட்டெல்லையை நோக்கி ஓடுவீர்கள்
உனது அயலவர்கள் உங்களை விட வேகமாக ஓடுகின்றனர்
அவர்களின் மூச்சில் இரத்தவெடில் அடிக்கிறது.
பழைய ரின் தொழிற்சாலையின் பின் கிறக்கமாய் முத்தமிட்ட
உங்களோடு பள்ளிக்கு வந்த பையன்
இப்போது தன்னைவிட உயரமான துவக்கை காவிக்கொண்டிருக்கின்றான்;
வீடு உங்களைத் தங்க அனுமதிக்காத போதே
நீங்கள் வீட்டைவிட்டு அகல்கின்றீர்கள்.
நெருப்பு காலின் கீழும்
சூடான இரத்தம் வயிற்றிலுமென
வீடு உங்களைத் துரத்தாதபோது
எவரும் வீட்டினிலிருந்து நீங்குவதில்லை.
கூர்மையான கத்தி உங்கள் கழுத்தை பயமுறுத்தாவரை
இப்படி நிகழுமென நீங்களொருபோதும் நினைத்ததுமில்லை.
உங்கள் கீதத்தை உங்களது மூச்சுக்கடியில் காவியபடி
விமானநிலைய கழிவறைகளில் உங்கள் பாஸ்போர்ட்டைப் பக்கம் பக்கமாய் அழுதபடி கிழித்து
நீங்கள் இனி என்றுமே திரும்பிப் போவதில்லையென உறுதிப்படுத்துகின்றீர்கள்.
நீங்கள் விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும்
எவரும் கடல், நிலத்தைவிட பாதுகாப்பென்று உணராதவரை
தங்கள் குழந்தைகளைப் படகுகளில் ஏற்றுவதில்லை
ரெயின்களுக்கு அடியினுள் பதுங்கியபடி
எந்த ஒருவரும் தங்கள் பாதங்களை எரித்துக்கொள்வதில்லை
டிரக்குகளின் வயிற்றுக்குள் இரவையும் பகலையும் கழித்தபடி
பத்திரிகைகளை சாப்பிட்டபடி
மைல்கள் கடப்பது பயணம் என்பதைவிட
வேறொரு அர்த்தம் தராதவரை
எந்த ஒருவரும் இப்படிப் பயணிப்பதில்லை;
எவரும் பாதுகாப்பு வேலிகளுக்குள் தவழ்வதுமில்லை
எவரும் அடிவாங்க விரும்புவதுமில்லை.
எவரும் அகதி முகாங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை
அல்லது உடல் நோகும்வரை உடல் பரிசோதனையை விரும்புவதில்லை
அல்லது சிறை.
எரிந்துகொண்டிருக்கும் நகரொன்றைவிட
சிறை பாதுகாப்பானது
எனெனில்
உங்கள் தந்தையைப் போலத் தோன்றும்
இரவு சிறைக்காவலர்
டிறக் வண்டி நிரம்பிய ஆண்களை விட பாதுகாப்பானவர்
யாரும் உங்களை அங்கிருந்து அகற்றிவிட முடியாது
யாரும் உதைக்க முடியாது
யாருடைய தோலும் அவ்வளவு தடிப்பாக இருக்காது.
நாடு திரும்புங்கள் கறுப்பர்களே
அகதிகளே
ஊத்தை குடிவரவாளர்களே
தஞ்சம் கோரியவர்களே
எங்கள் நாட்டை உறிஞ்சாதீர்கள்.
கைகளை வெளியே விட்ட கறுப்பர்கள்
கெட்ட வாசமுடையவர்கள்
நாகரீகந் தெரியாதவர்கள்
தங்கள் நாட்டைக் கெடுத்தது காணாதென்று
நம் நாட்டையும் சிதைக்க வந்திருக்கின்றார்கள்
என்ன மாதிரியான வார்த்தைகள்
கேவலமான பார்வைகள்
முதுகின் பின் கரைகின்றன
சிலவேளைகளில் அது
விலா எலும்புகள் முறிக்கப்பட்டதை விட
இதமாக இருக்கிறது
அல்லது இந்த வார்த்தைகள்
பதினான்கு ஆண்கள்
உங்கள் கால்களுக்கிடையில் இருந்ததை விட
மென்மையாக இருக்கிறது
அல்லது
இந்த நிந்தனை
சிதைவுகளை விட
எலும்புகளை விட
துண்டு துண்டாக்கப்பட்ட குழந்தையொன்றின் உடலைவிட
விழுங்குவதற்கு எளிதாக இருக்கிறது
நான் வீடுநோக்கி போகவிரும்புகிறேன்
ஆனால் வீடென்பது
சுறாவின் வாயைப் போன்றது
துப்பாக்கியின் உருளையைப் போன்றது.
கடற்கரையை நோக்கித் துரத்தாதவரை
வீட்டை விட்டு எவரும்வெளிக்கிடுவதுமில்லை.
மேலும் ஆடைகளை விட்டுவிட்டு
பாலைவனத்திற்குள்ளால் தவண்டபடி
சமுத்திரங்களுக்குள் தத்தளித்தபடி
விரைவாக ஓடும்படி வீடு சொன்னது;
மூழ்குதல்
காப்பாற்றுதல்
பட்டினியோடு இருத்தல்
மன்றாடுதல்
கெளரவத்தை இழத்தல்
எல்லாவற்றையும் விட நீங்கள் உயிரோடு இருத்தல் அவசியம்
பிசுபிசுப்பான ஒரு குரல் காதிற்குள்
போ!
என்னை விட்டு ஓடு!
நான் என்ன ஆகுவேன் எனத் தெரியாது
ஆனால் வேறெந்த இடமும்
என்னை விடப் பாதுகாப்பானது !
எனச் சொல்லும்வரை
எவரும் வீட்டை விட்டு நீங்குவதில்லை.