கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு!

Monday, October 31, 2022


ழமையாக நடக்கும்போது நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பதுண்டு. இடையில் ஓய்வெடுத்து/இரசித்து/தரிசித்து/படங்காட்டிப் போனால் கூட ஒன்று/ஒன்றரை மணித்தியாலங்கள்தான் எடுக்கும். இன்று சூரிய ஒளியோடு தொடங்கிய நடையை முடித்து வருவதற்குள் இருண்டு நேரமாகிவிட்டது. 


அப்படி ஆனதற்கு, நான் நடந்தபடி கேட்கத் தொடங்கிய அலன் வாட்ஸின் 'The way of Zen' என்னை அமைதிக்கு அழைத்துச் சென்று, அது தற்செயலாக புத்த பூர்ணிமாகவும் இருந்து எனக்கும் புண்ணியம் கிடைத்திருந்தால் கூட,  பரவாயில்லை என்றிருந்திருப்பேன்.


ஆனால் நடந்தது அதுவல்ல!


நடந்து கொண்டிருக்கும்போது 'காலம்' செல்வத்தார் அழைத்து, 'என்னடா செய்கிறாய்' என்றார். "நடந்தபடி 'மான்'களை இரசித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றேன் நான். 

இந்தப் பாதையில் அவ்வப்போது மான்கள் தென்பட்டாலும், நான் சொன்னது அந்த 'மான்'களை அல்ல. செல்வத்தாரும் பாரிஸ் தெருக்களிலே 'மான்'களைத் தேடித் திரிந்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்தவகையான code words நன்கு விளங்கும்.


'நானொருத்தன்  என்ன செய்வதென்ற பதைபதைப்பில் இங்கே இருக்கிறேன், உனக்கு இப்போது மான்கள்தான் தேவைப்படுகிறதா' என்றார் செல்வத்தார். 'அப்படி என்ன நடந்தது? அடுத்த இயல்விருதை முத்துலிங்கத்தார் ஞாபக மறதியில் தனக்குத்தானே அறிவித்து விட்டாரோ?' என்று கேட்டேன்.


ஏன் நான் அப்படிக் கேட்டேன் என்றால், ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவுக்கு இயல்விருது கொடுத்துவிட்டு, இப்போது அ.மு தமிழ் விக்கி என்று அதே பெயரில் ஏதோ தொடங்குகின்றார்கள் என்று அதற்கும் வாழ்த்துமேல் வாழ்த்து எழுதி அனுப்பிக்கொண்டிருப்பதை அவதானித்திருந்தேன்.

 

சிலவேளை இலக்கிய உலகில் முதலில் விருதைக் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் நித்திரையில் இருந்து விழித்தமாதிரி 'இப்போது தொடங்கியதற்கு' வாழ்த்து எனச் சொல்வார்களோ தெரியாது. 


'உந்த விசர்க்கதைகளை விட்டிட்டு, நான் சொல்லுறதை கேளடா?' என்று செல்வத்தார் கொஞ்சம் கோபத்தோடு சொன்னார்.


'சரி சொல்லுங்கள்' என்றேன்.


'இல்லையடா. நான் சியா-60 இற்கு ஒரு வாழ்த்து அனுப்பியதிலிருந்து எனக்கு சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் என எல்லா இடத்திலிருந்தும் நிறைய வாசகிகள் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். என் துணைவியார் இதைப் பார்த்துவிட்டால் என்னவாகும் என்று எனக்கு  ஒரே பதட்டமாயிருக்கிறது' என்றார்.



த்து வருடங்களுக்கு முன் செல்வத்தார் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அதன் நிலவறையை ஒரு பெண்மணிக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். என் வீட்டை விற்கப்போகின்றேன், நீங்களும் காலி செய்யவேண்டும் என்று செல்வத்தார் சொன்னபோது, அந்தப் பெண்மணி ஆயிரம் law கதைத்து வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெயர் சியாமளா. 


சியாமளாவை எப்படி துரத்துவது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்ததில் இறுதியாய் செல்வத்தார் கண்டடைந்த ஒரே வழி, தன்னிடம் விற்காமல் இருந்த புத்தகங்களை அவரின் கதவுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாய் அடுக்கிவிடுவதுதான். அவை அப்படியே உயர்ந்து உயர்ந்து ஒருநாள் சியாமளாவால் கதவைத் திறக்க முடியாமல் யன்னலை உடைத்து  தப்பி ஓடிவிடுவார் என்பதாக செல்வத்தாரின் திட்டமிருந்தது.


ஆனால் எத்தனையோ புத்தகங்கள் அடுக்கியும் அசையாத சியாமளா, ஒரேயொரு புத்தகத்தைக் கண்டு வெருண்டு, அடுத்தநாளே அறையைக் காலி செய்துவிட்டு போய்விட்டார். அது என்ன புத்தகம் என்றால், பின் தொடரும் நிழலின் குரல். அதை வாசித்துத்தான் சியாமளா பயந்து போனார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் அந்தப் பெயரை முன்னட்டையில் பார்த்தவுடனேயே ஏதோ மலையாள மாந்தீரிகத்தில் ஆயிரம் பக்கத்தில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்று கிலி பிடித்துத்தான் ஓடியிருக்கின்றார்.


என்றாலும் ஏன் செல்வத்தார் இப்போது பதைபதைக்கின்றார் என்பது எனக்கு இன்னும் சரியாக விளங்காததால்,


' கனடாவில் இருக்கின்ற சியாமளாக்காவுக்கு 60 என்று நீங்கள் வாழ்த்து எழுதினால் ஏன் உங்களுக்கு வாசகிகள் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் கடிதம் எழுதுகின்றார்கள்' என்று கேட்டேன்.


'நாசமாய்ப் போறவனே. நான் சியா-60 என்று ஸ்டைலாகச் சொன்னது சியாமளாவுக்கு 60 வயதாகியதை அல்ல, சியமந்தகம்-60 என்று ஜெயமோகனுக்கு வாழ்த்தெழுதியது பற்றி' என்று செல்வத்தார் மறுமுனையில் இருந்து ஆக்ரோஷமாகக் கத்தினார்.


'இப்படிக் கத்தினால் இப்போது அமெரிக்காவில் நிற்கின்ற உங்கள் நண்பர் ஜெமோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  நயாகரா நீர்வீழ்ச்சியால் எம்பிக் குதித்து உங்களுக்கு ஏதோ ஆபத்தென பறந்து வந்துவிடுவார், கவனம்' என்றேன். உடனே செல்வத்தார் 'ஓம் சாந்தி ஓம் சாந்தி' என்று தன்னை அமைதிப்படுத்தத் தொடங்கவும் அவரது துணைவியார் அருகில் வரவும் சரியாக இருந்தது.


'அங்காலை இருந்து ஒருத்தன் சியாமளா சியாமளா என்கின்றான். இங்காலை இருந்து நீங்கள் சாந்தி சாந்தி என்கிறீர்கள். எந்த வயதில்தான் திருந்தப்போகின்றீர்கள்' என்று திட்டு விழுவதும் எனக்கு நன்கு கேட்டது.


'இல்லையப்பா சியாமளாவுக்கு வாழ்த்தெழுதியது பற்றி..ச்ச்சீ..சியமந்தகத்திற்கு பதிவெழுதியது பற்றி நாங்கள் இரண்டு பேரும் கதைத்துக் கொண்டிருந்தம்' என்று செல்வத்தார் மறுமுனையில் பம்மத் தொடங்கினார்.


இதுக்குப் பிறகும் இனி வாசகிகள் கடிதங்களை எழுத, செல்வத்தார் வாசிப்பார் என்று நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது. 


என்றபோதும் நான் நம்பிக்கை இழக்காமல், 'இஞ்சை போனை கட் செய்யமுன்னர், எனக்கும் உங்களுக்கு அனுப்பியதுபோல, வாசகிகள் கடிதம் எழுதுவது எப்படி என்று ஜடியா தாருங்கள்' எனக் கேட்டேன்.


'உன்னுடைய கொழுப்புக்கு,  உனக்கு அறுபது வயசானாலும் ஒருத்தியும் எழுதமாட்டாள்கள், இருந்து பார்' என்று போனை அவர் நிலத்தில் கோபத்தில் எறிந்தது கேட்டது.


அப்போது நிலவு வானில் எழுந்ததைப் பார்த்தேன். புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு. 


புத்தருக்கு ஞானம் அவரின் 35 வயதில் கிடைத்ததென்கின்றனர். எனக்கு 60இல் இல்லாவிட்டாலும், என் 61வது வயதிலாவது யாரேனும் சியாமளாவோ, சாந்தியோ ஒரு வாசகர் கடிதம் எழுதாமலா போய்விடுவார்கள் என்று என்னைத் தேற்றியபடி நடக்கத் தொடங்கினேன்.


ஓம் சாந்தி, ஓம் சாந்தி!


*********************


(May 16, 2022)

இளங்கோவின் மொழிபெயர்ப்பில் “சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்”

Saturday, October 29, 2022

-அரசி விக்னேஸ்வரன்


1.


சில மாதங்களுக்கு முன்னர் இளங்கோ தனது புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுக உரையொன்றை ஆற்றுமாறு என்னைக் கேட்கும் வரை, ப்யூகோவ்ஸ்கியை ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு தடவைகூட நான் வாசித்திருக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு மூலமாக கொரோனாத் தடைகள் தளர்ந்திருந்த ஒரு வேனிற்காலத்தில் எனக்கு ப்யூகோவ்ஸ்கி அறிமுகமானார். ப்யூகோவ்ஸ்கி தமிழுக்கும் புதியவரல்லர், அவரது ஆக்கங்கள் ஏலவே சிலரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறிகிறேன். ஆனால், இலங்கைத் தமிழ்க் கவியுலகுக்கு அவர் புதியவராகவும் புதுமையானவராகவும் எனக்குத் தெரிகிறார். ப்யூகோவ்ஸ்கியை ஏன் இவ்வளவு நாள் நான் அறியாமல் இருந்தேன் என்று என்னை நானே கேட்க வைத்தது இளங்கோவின் இந்தத் தொகுப்பு. 


அறிமுகமில்லாத கவிஞர் என்றாலும் எனது வாசிப்புக்கு இளங்கோவின் முன்னுரையே பெரும்பாலும் என்னைத் தயார்படுத்திவிட்டிருந்தது. அந்தக் கவிஞரின் தனித்துவமான ஆளுமையை சுருக்கமாக முன்னுரையில் இளங்கோ பதிவிட்டிருந்தார். எழுத்தாளரையும் அவரது எழுத்துக்களையும் தனித்தனியே நோக்க வேண்டும் என்று சில வேளைகளில் நான் நினைத்திருக்கிறேன். எழுத்துக்களை எழுத்தாளரின் வாழ்க்கைப் பின்னணியில் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் பிறகு நான் தெரிந்து கொண்டேன். ப்யூகோவ்ஸ்கியைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களை அவரது ஆளுமையில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது கவிதைகள் முழுவதும் அவரது ஆளுமை வியாபித்திருந்தது. அவர் தன் கவிதைகளில் மறுக்கமுடியாத பாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார். எனவே இளங்கோவின் முன்னுரை மிகவும் தேவையானதும் பயனுள்ளதாகவும் அமைந்தது. 


இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் ப்யூகோவ்ஸ்கியின் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு வகைமாதிரியாக அமையக்கூடிய தெரிவா அல்லது இளங்கோவைக் கவர்ந்த கவிதைகளின் தெரிவா என்று தெரியவில்லை. இவற்றை இளங்கோ எப்படித் தெரிவு செய்திருந்தார் என்று அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கலாம். இந்தக் கேள்வி என்னுள் எழக் காரணம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒருசிலர் இளங்கோவையும் ப்யூகோவ்ஸ்கியையும் ஆளுமை ரீதியில் ஒப்பிட்டுப் பேசியமையே. 


இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளை மூன்று வகையான கருப்பொருட்கள் அடிப்படையில் பிரித்து நோக்க முடியும். ஒன்று காதல், காமம் மற்றும் ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைகள். இரண்டாவது நகர வாழ்க்கை, அதில் உழலும் மக்களின் தனிமை, அதில் கவிஞர் அவதானிக்கும் பொதுப்படையான விடயங்கள் தொடர்பான கவிதைகள். மூன்றாவது ப்யூகோவ்ஸ்கி ஒரு எழுத்தாளனாகத் தன்னைத் தானே எப்படிப் பார்த்தார் என்கிற கருப்பொருளுக்குரிய கவிதைகள். 


முதலாவது வகைக் கவிதைகளை வாசிக்கையில் ப்யூக்கோவ்ஸ்கி எவ்வளவு தூரம் ஆண்-பெண் உறவின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்ந்திருக்கிறார், இரசித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. காமம், கலவி என்பன பற்றி வெளிப்படையாகவே கவிதை எழுதும் அதேவேளை காதல் என்கிற நுண்ணுணர்வினையும் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், புரிந்து கொள்ளல், பிரிவு என்கிற பல விடயங்களையும் ஆழமாகவே தன் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார்,  உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்பது பொய் என்று கருதும் அதேவேளை, பிரிவு என்பதன் வேதனையையும், குற்ற உணர்வையும் பேசுகிறார். பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஒருவராக தன் கவிதைகளில் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அந்த ஒவ்வொரு பெண்ணினதும் உடலுடம் மட்டுமன்றி ஆன்மாவுடனும் இணைந்த உறவையே நாடுகிறார். 


இரண்டாவது வகைக் கவிதைகள் வாழ்க்கையின் ஒரேமாதிரியான ஓட்டத்தில் ஓடும் நகர வாசிகள் அதற்காகக் கொடுக்கும் விலை அதிகம் என்பதை உணர்த்துகிறார். தனிமை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல் நகர வாசிகளின் ஒரு பொது அனுபவமாகிறது. எல்லோருமே தனிமையில் உழல்கிறார்கள். வாழ்க்கையில் எதையோ ஒன்றிறைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.  அவரது “தனித்து எல்லோருடனும் இருத்தல்” என்கிற கவிதை மிகப் பிரபலமானது. அதில் 


“பெண்கள் பூச்சாடிகளை சுவர்களில் 

எறிந்து உடைக்க 

ஆண்கள்  அளவுக்கதிகமாகக் குடிக்கிறார்கள்” என்கிறார். 


வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல ஒரு குடும்பத்தில் நடக்கும் தனிப்பட்ட சச்சரவாக யாரும் கருதக்கூடிய ஒரு நிகழ்வு எப்படி எல்லாருக்கும் பொதுவான ஒரு நிகழ்வாகவும் இருக்கிறது என்பதை மூன்றாம் மனிதராக, ஒரு அவதானியாகப் பதிவிடுகிறார். இதனை ஒரு முதலாளித்துவ, தனிமனிதவாத, நகர வாழ்க்கையின் மீதான ஒரு விமர்சன ரீதியான அவதானமாக அவர் வெளிப்படுத்துகிறார். 


மூன்றாவது வகைக் கவிதைகள் ப்யூகோவ்ஸ்கி என்கிற ஒரு எழுத்தாளனைப் பற்றியது. அவன் திட்டமிட்டு காற்றோட்டமான, வெளிச்சமான அறையொன்றில் இருந்து சிந்தித்து தன் எழுத்துக்களை உருவாக்கவில்லை. கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டே உருவாக்குகிறான். அவனது எழுத்துக்கள் அவனுக்கு வடிகாலாகின்றன, துணையாகின்றன, மனோதத்துவ நிபுணர் ஒருவரின் வேலையையும் அவ்வெழுத்துக்களே அவனுக்குச் செய்கின்றன. துன்பத்திலிருந்து நல்ல எழுத்துக்கள் பிறப்பதாக அவன் நம்புகிறான். ஒரு சில நல்ல வரிகளைத் தான் எழுதுவதற்காகவே கடவுளர்கள் தன்னைத் தீயில் உழல விடுகிறார்களோ என்றும் எண்ணுகின்றான். இந்த எழுத்தாளன் பிரபலமற்றவனாக இருந்து காணும் இடங்களில் அழகான பெண்களால் அடையாளம் காணப்படும் அளவுக்குப் பிரபலமானவன் ஆகிறான். ஆனால் அந்த பிரபலமான எழுத்தாளன் என்கிற அடையாளம் அவனைக் கூசச் செய்கிறது. அதை எப்படித் தன் போலியற்ற ஆளுமையுடன் ஒத்துபோக வைப்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. 


இந்த மூன்றாம் வகைக் கவிதைகளுள்  ப்யூக்கோவ்ஸ்கி கையால் எழுதியவை, தட்டச்சுப்பொறியால் எழுதியவை மட்டுமன்றி பிற்காலத்தில் தன் எழுபதுகளில் மக்கிண்டோஸ் கணிணியில் எழுதியவையும் அடங்குகின்றன.  அவர் நீண்ட காலம் வாழ்ந்து தன் படைப்புக்களைத் தொடர்ந்து வந்திருப்பதனால் தான் அவரை 

“நிகழ்ந்துவிட்ட அதிசயம்” என்று குறிப்பிடுகின்றார் இளங்கோ.


இந்தத் தொகுப்பில் கவிதைகள் எழுதப்பட்ட ஆண்டை ஒவ்வொரு கவிதைக்கும் அடியில் சேர்த்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் காலத்திற்கேற்ப கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். 



2.


மொழிபெயர்ப்பு என்பது ஒரு புதிய படைப்பு. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளரது தனிப்பட்ட இரசனை, தெரிவுகள் என்பவற்றின் பாற்பட்டது. உண்மையில் இந்தத் தொகுப்பினை ப்யூகோவ்ஸ்கி, இளங்கோ ஆகிய இரண்டு கவிஞர்கள் இணைந்து எழுதிய ஒரு தனித்துவமான படைப்பாகவே நோக்க வேண்டும். 



மொழி என்பது வெறும் தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது கலாசாரக் காவி. அந்த மொழிக்குரிய கலாசாரம், பண்பாடு, வரலாறு என்பவற்றினூடாக ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தங்கள் பல ஒவ்வொரு மொழிக்கும் வேறுபட்டிருக்கும். புனைவிலக்கியத்தை மொழிபெயர்க்கும் போது இந்த விடயத்தை இருவேறு விதங்களில் கையாள முடியும். ஒன்று மூலத்தை முழுமையான ஒரு தமிழ்ப் படைப்பாகுவது. தமிழ்க் கவிதை மரபுக்குரிய, தமிழ் வாசகர்களுக்குப் பழகிய இயல்பான மொழியில் முழுமையான ஒரு தமிழ்க் கவிதையாக எழுதுவது இந்த வகைப்படும். இந்த முறையில் மூலத்தின் உணர்வோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவத்தில் தமிழுக்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்படும்.  


இரண்டாவது வகை மூல மொழியின் கலாசார, மொழி வடிவங்களை அண்மித்திருக்கக் கூடியவாறான ஒரு மொழிபெயர்ப்பு. இந்த வகை மொழிபெயர்ப்பு தமிழில் மட்டும் வாசிப்பவருக்கு இடறுவது போல இருப்பினும், தமிழுக்கு புதிய எழுத்து வடிவங்களையும், கலாசார நுண்ணம்சங்களையும் கொண்டு வருவதில் முக்கிய பங்கினை ஆற்றும். இளங்கோவின் கவிதை மொழிபெயர்ப்பு எனக்கு இந்த இரண்டாம் வகைப்பட்டதாகவே தோன்றியது. இக்கவிதைகளை  ஆங்கிலத்தில் வாசித்தேனா தமிழில் வாசித்தேனா என்று கூட மறந்து கருப்பொருள் மட்டும் மனதில் நின்றது. 


முன்னுரையில் இளங்கோ தான் மௌன வாசிப்புக்குரிய கவிதைகளையே கூட விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் மௌன வாசிப்புக்குரியவை அல்ல என்று ஆரம்பத்தில் அபிப்பிராயப்பட்டதாகவும் கூறுகிறார். தமிழ்க் கவியுலகைப் பொறுத்தவரை, கவிதையும் ஓசையும் காலங்காலமாகப் பின்னிப்பிணைந்தவை. எதுகை மோனையெதுவுமற்ற புதுக்கவிதைகளில் கூட உரத்து வாசிக்கும் போது வெளிப்படும் உணர்வு கவிதைக்கு புதிய பரிணாமத்தைத் தரவல்லது. ஒரு கவிதை  மௌன வாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உகந்ததாக ஒரே நேரத்தில் இருக்கக்கூடும். இவ்விரண்டு வாசிப்பு முறைகளும் வெவ்வேறு அனுபவங்களைத் தரவும் கூடும். 


மூலக்கவிதையின் ஒரே வரியைத் திரும்பத்திரும்பக் கூறுதல் போன்ற உரத்த வாசிப்புக்குரிய அம்சங்களை இந்த மொழிபெயர்ப்பிலும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழியாக்கும் போது வரிகளைப் பிரிக்கும் இடங்கள், அவற்றின் வரிசைக்கிரமம் என்பவற்றில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் இக்கவிதைகளை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். 


புலம்பெயர் தமிழ்க் கவிதை உலகுக்கு மிக அண்மித்த கருப்பொருட்களைக் கொண்ட இக்கவிதைகளைத் தமிழில் கொண்டு வந்ததற்கும் அவற்றை வாசித்து அபிப்பிராயம் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பினை அளித்ததற்கும் இளங்கோவிற்கு நன்றி. 


*************************


(பி.கு: தொரொந்தோவில் 2022 மே மாதம் நடந்த இளங்கோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிமுக உரையின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவமே இக்கட்டுரையாகும்)


நன்றி: 'அம்ருதா' - புரட்டாதி, 2022

சமூகப் போராளியின் வர்ணங்கள் – ரதன்

Monday, October 10, 2022

 உதிரும் நினைவின் வர்ணங்கள் – இளங்கோவிலை  ₹150; வெளியீடு: அகநாழிகை, 26 ஜெயமன் தெருகோகுலபுரம்செங்கல்பட்டு – 603001, இந்தியாமின்னஞ்சல்: aganazhigai@gmail.com, கைபேசி: +91 999 454 1010


வ்வருடம் ‘கான்’ திரைப்பட விழா உக்ரேன் அதிபரின் பேச்சுடனேயே ஆரம்பமானது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விழாவின் அரசியல் நோக்கம் பற்றி சமூகவலைத் தளங்கள் கேள்வி எழுப்பின.


2015இல் ‘தீபன்’ படம் திரையிடப்பட்டதுடன் ‘கான்’ திரைப்பட விழா பற்றி கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. ஒரு சமூகத்துக்கு எதிரான திரைப்படம், அதன் பிரதான திரையிடலில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதும் வழங்கப்பட்டது. சமூக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக இனங்களுக்காக எதிர்க் குரல் எழுப்பிய ஷோபாசக்தி இதன் கதாநாயகன். கடந்த 28 வருடங்களாக எந்தவொரு இந்தியத் திரைப்படமும் ‘கான்’ விழாவில் திரையிடப்படவில்லை என பலர் கவலைப்பட்டனர். ஆனால், ‘தீபன்’ படத்தின் இறுதி 15 நிமிடங்கள் தெலுங்கு மசாலாப் படங்களையே ஒத்துள்ளது.


இன்று உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் நல்ல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்று கூறினால் அது தவறானது. திரைப்பட விழாக்களுக்கெனத் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே சமயம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படும் பல படங்கள் பார்க்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. கொரோனா ஒரு மாற்றத்தை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இணைய வழியில் பல விழாக்கள் நடைபெறுகின்றன. பல தளங்களில் கவனிக்கப்படாத பல படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன.


இதனை இங்கு கூறுவதற்கு காரணம், இளங்கோவிற்கும் திரைப்பட விழாக்களுக்கும் ஒரு உறவுப் பாலம் உள்ளது என்பதற்காகவேயாகும். ரொரன்ரோவில் நடைபெற்ற பல தமிழ்க் குறும்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களைப் பற்றிய தனது விமர்சனத்தையும் அறிமுகத்தையும் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் இளங்கோ எழுதியுள்ளார். பல விழாக்களில் நடுவராக இருந்திருக்கின்றார். இத் திரைப்பட விழாக்கள் புதிய படைப்பாளிகளுக்கான களத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. இங்கு கருத்தியலும் திரைமொழியும் கவனத்திற் கொள்ளப்படும். புதிதாக படமெடுப்பவர்களுக்கு இது ஒரு பயிற்சிக் களமாகக் கூட மாறும். இளங்கோ தனது விமர்சனங்களில் இதனைக் கருத்திற் கொண்டுள்ளார். பல படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொண்டுள்ளார். ரொரன்ரோ தமிழ் திரைப்பட உலகை நன்கறிந்தவர்ளில் ஒருவர் இளங்கோ என்றால் மிகையாகாது.


 

‘உதிரும் நினைவின் வர்ணங்கள்’ என்கின்ற இந்நூலில் பல வகையான (36) படங்களைப் பற்றி இளங்கோ எழுதியுள்ளார். ஒரு சிறந்த நாவலாசிரியர், சிறந்த கதைசொல்லியாக, தனது பார்வையில் இப் படங்களை பதிவு செய்துள்ளார். ஒரு பயணியாக இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கை போராளியாக, காதல்-பாச உணர்வு கொண்ட ஒரு சக காதலனாக, நண்பனாக, போரின் பாதிப்புக்களிலிருந்து மீள முடியாத ஒரு சமூகப் போராளியாக இப் படங்களுடன் இளங்கோ பயணிக்கின்றார்.


ஒரு அரசியல் சினிமா விமர்சகனாக, நான் இந் நூலில் உள்ள மூன்று படங்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்த மூன்று படங்களும் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படங்களாகும்.


முதல் படம், ‘போராளிக்கு இட்ட பெயர்’: சில வருடங்களுக்கு முன்னர் சதா பிரணவனின் ‘போராளிக்கு இட்ட பெயர்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவர் துரோகியாக்கப்பட்டவர். மற்றவரால் சித்திரவதை செய்யப்படுகின்றார். தனது நண்பனின் நெருங்கிய நண்பனை சென்னையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் நீண்ட நாட்களின் பின், பேருந்து ஒன்றில் சந்தித்துள்ளான். ஆனால் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் யார், எந்த இயக்கம், இவர் யார், எந்த இயக்கம் எனத் தெரியாது எதிரிகள் போல் பிரிந்து செல்கின்றனர்.


அடுத்து, ‘லைப் ஒப் அதேர்ஸ்’: இந் நூலில் உள்ள இரு படங்கள் கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி இணைந்த பின்னர் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளன. அதில் ‘லைப் ஒப் அதேர்ஸ்’ (Life of Others) என்ற படம் மிக முக்கியமானது. இப் படம் இடதுசாரிகள் மேல் விமர்சனங்களை முன்வைக்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு உளவாளி உள்ளார் என்ற விமர்சனங்கள் மேற்கால் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் மனிதாபிமானவை போன்ற போக்கை இவ்வாறான இடதுசாரி எதிர்ப்பு படங்கள் முன்வைக்கின்றன.


என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் அழகியலை அல்லது திரைமொழியை விட, அது முன்வைக்கும் கருத்தியல் முக்கியம். படம் எந்த பார்வையாளர்களை குறிவைத்து எடுக்கப்படுகின்றது, இதன் பின்னணி என்ன போன்ற விடயங்கள் என்பது எனக்கு முக்கியம். ஒரு அரசியல் படத்தை என்னால் மேலோட்டமாக பார்த்து விட முடியாது. பல படங்கள் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றன. சரித்திரத்தையே மாற்றிவிடுகின்றன. அண்மையில் வெளிவந்த ‘மேதகு’, மற்றும் சுமதி சிவமோகனின் ‘ஒரு தம்ளர்’ படங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. ‘ஒரு தம்ளர்’ படம் பற்றி அ. யேசுராசா திரைப்பட விழாவிலேயே தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். கடந்த ‘நிழல்’ இதழிலும் இப் படம் பற்றிய விமர்சனக் கட்டுரை இடம்பெற்றிருந்தது. மணிரத்தினத்தின் தேசியத்துக்கும் அமெரிக்காவின் துப்பாக்கி ஜனநாயகத்துக்கும் நெருக்கமான உறவுள்ளது.


‘லைப் ஒப் அதேர்ஸ்’ படமும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சிக்கின்றது. அதற்கப்பால் ஒரு கிழக்கு ஜேர்மனி அதிகாரி ஒருவர், இப்பொழுது சாதாரண வாழ்க்கைக்கு நுழைந்துவிட்டவர். அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் சந்திக்கும் பொழுது எழும் உணர்வுகள் போன்ற பல விடயங்களை படம் பதிவு செய்துள்ளது. (இப் படத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒரு தடவை கட்டாயம் பாருங்கள்)


‘அதிகாரப் போதை கூடக்கூட மனிதாபிமானம் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து விடுகின்றது’ என்று இளங்கோ இக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.


இதே அதிகாரப் போர்வையைக் காப்பாற்ற முயலும் பொழுது, நாங்கள் மிக மோசமானவர்களாக மாறிவிடுகின்றோம். ‘கோல்ட் வோர்’ (பனிப் போர்) முடிவுக்கு வந்த பின்னர், மேற்கு நாடுகள் சுதந்திரமாக எதிரிகளற்று இயங்கிக் கொண்டிருந்தன. மீண்டும் ருசியா தனது எழுச்சியை உறுதிப்படுத்தத் தொடங்க, ஸ்பில்பேர்க் களத்துக்கு ‘பிரிட்ஜ் ஒப் ஸ்பைஸ்’ என்ற படத்துடன் வருகின்றார். இதுவும் பழைய சோவியத் யூனியனைப் பற்றிய படம். அரசியல் கைதிகள் பரிமாற்றம் என்றாலும் சோவியத்தை விமர்சிக்கும் படம். மீண்டும் ருசியா எழுச்சி பெறும் போதே இப்படி என்றால், சோவியத் யூனியனில் லெனினின் பின்னர் ஸ்டாலின் ஆட்சிக் காலங்களில் என்ன செய்திருப்பார்கள்.


“1919-ல் இடம்பெற்ற பல வேலை நிறுத்தங்கள் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்தது. இக் காலகட்டம் ‘First Red Scare’ (1917-1920) எனக் கூறப்படுகின்றது. 1929-1939 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பாரிய பொருளாதார வீழ்ச்சியானது பல அமெரிக்கர்களை இடது சாரிகளாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக ‘Second Red Scare’ (1947-1957) உருவானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் உருவானது. இக் காலகட்டத்தில் இடதுசாரிகள் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என அமெரிக்க அரசு கருதியது. விளைவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கிய House Committee on Un-American Activities (HCUA) உருவாக்கப்பட்டது. 1945இல் இவ் விசாரணைக் குழு நிரந்தரமாக்கப்பட்டது. பின்னர் 1969இல் House Committee on Internal Security என பெயர்மாற்றம் பெற்றது.


HCUAஇன் காலத்தில் பல இடதுசாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அமெரிக்க அரசு மிக மோசமான வன்முறையை இடதுசாரிகள் மீது பிரயோகித்தது. இந்த விசாரணைக் குழு கலை இலக்கியவாதிகளையும் விசாரணைக்கு அழைத்தது. ஒருவர் சற்று முற்போக்காக உரையாடினால் அல்லது எழுதினால் அவர் மீது அமெரிக்க அரசு அச்சம் கொண்டது. முற்போக்கு சிந்தனை என்பதனையே பயங்கரவாதம் எனக் கருதியது.


இவ் விசாரணைக்குழு ஹொலிவூட் படைப்பாளிகள், கலைஞர்கள் மீதும் விசாரணையை மேற்கொண்டது. குறிப்பாக திரைக் கதையாசிரியர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நடிகர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து ஹொலிவூட்டில் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஹொலிவூட் 10’ எனப்படும் ஹொலிவூட்டின் மிக முக்கிய பத்து படைப்பாளிகளுக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டது. இவர்களில் பலர் சிறைவாசத்தையும் அனுபவித்தார்கள். இவர்கள் பதினொரு பேர். ஒருவர் ஐரோப்பாவில் குடியேறியமையால் பத்து பேர்கள் ஆனார்கள். இவர்களில் ஒருவர் Dalton Trumbo.


இந் நூலில் ‘ரம்போ’ (Trumbo) படத்தைப் பற்றிய கட்டுரையும் உள்ளது.. தமிழில் பல கட்டுரைகள் ஹொலிவூட் அரசியலைப் பற்றி வெளிவந்துள்ளன. ‘படச்சுருள்’ இதழ் சிறப்பிதழ்களையும் கொண்டுவந்துள்ளது. ‘நிழல்’ ஜூன் இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றும் வெளிவருகின்றது.


தடைசெய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கையே அமெரிக்க அரசின் சார்பில் இயங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். Screen Actors Guildஇன் தலைவராகவிருந்த முன்னால் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன் பல இடதுசாரிக் திரைக் கலைஞர்களை பற்றிய விபரங்களை அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக, தடைசெய்யப்பட்ட மற்றும் தலைமறைவான பல கலைஞர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.


இளங்கோ, ரம்போவை ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் ஆக நூலில் பதிவு செய்துள்ளார். உண்மையும்கூட. விசாரணையின் போது ஒருவரையும் இவர் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றிய பல விடயங்களை பலர் காட்டிக்கொடுத்தன் மூலமே அறிந்துகொண்டார்கள். Elia Kazan போன்றவர்களை இன்னமும் இடதுசாரிகள் மன்னிக்கத் தயாராகவில்லை


ஹொலிவூட் எடுக்கும் அரசியல் படங்கள் அனைத்தையுமே மிக நுணுக்கமாக பார்க்க வேண்டியுள்ளது. ‘கிறீன் புக்’ என்ற படத்துக்கு ஒஸ்கார் சிறந்த படத்துக்கான விருதை வழங்கியிருந்தது. இதனைக் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஆதரவுப் படம் என பலரும் கருதினர். உண்மையில் இதன் பின்னால் உள்ள நுண் கருத்தியல், அரசியல் என்பவை மிக மோசமானது.


எனவே, ‘ரம்போ’ போன்ற படங்களைப் பார்ப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயக வெளியின் எல்லைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


அமெரிக்கா தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டுக்குள் உலக நாடுகளை வைத்திருந்தது. மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிகள் அரசமைப்பதை எவ்வாறேனும் தடுத்து வந்தது. ஃபிடல் கஸ்ரோவை கொல்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்தனர். அவ்வாறே சிலியிலும் அமெரிக்கா தனது கைவரிசையைக் காட்டியது.


இவ் வருடம் மார்ச் மாதம் சிலியில் Gabriel Boric புதிய ஜனாதிபதியாக பதவியேற்கின்றார். 49 வருடங்களுக்குப் பின்னர் சிலியில் ஒரு இடதுசாரி அதிபர் பதவிக்கு வந்துள்ளார்.


சல்வடோர் அலண்டே 9-11-1973இல் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் சிலி மக்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். சுமார் 49 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு இடதுசாரி கப்ரியல் பொரிக் அதிபராகின்றார். இதற்கிடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட சர்வாதிகார ஆட்சியைப் பற்றி பப்லோ லைறைன், ‘ரையோலஜி’ என மூன்று படங்கள் எடுத்தார். இவற்றுள் என்னைப் பாதித்தது ‘போஸ்ட் மோர்ட்டம்’. ஆனால், இளங்கோ இந்நூலில் எழுதியிருக்கும் ‘நோ’ (NO) படமும் மிக முக்கியமானது.


இப் படம் 1988இல் பினாச்சேயின் சர்வாதிகார ஆட்சி தொடர்வதா இல்லையா என்ற வாக்கெடுப்பை மையப்படுத்தியது. ‘நோ’ பிரச்சாரம் எவ்வாறு தன்னை நிலைநிறுத்தியது என்பது இங்கு முக்கியம். இப் படத்தைப் பார்த்திருக்காவிட்டால் தயவு செய்து இளங்கோவின் கட்டுரையை வாசித்துவிட்டு ஒரு தடவை படத்தைப் பாருங்கள்.


 


னி நபர் கொலைகள் மூலமாக சமூகத்திலோ நாட்டிலோ அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது என்ற கருத்தியலை அலண்டேயின் கொலை மாத்திரமல்ல, பல கொலைகள் உலக வரலாற்றில் நிரூபித்திருக்கின்றன.


இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். தனது இணையத்தளத்தில் பல நூல்களை விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இவற்றில் பல அச்சிலும் வெளிவந்துள்ளன. இந் நூலிலும் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார். ஒவ்வொரு படத்தைப் பற்றி வாசிக்கும் பொழுதும் நாமும் அவரது பார்வையுடன் இணைந்து பயணிக்கின்றோம்.


***********


நன்றி: 'அம்ருதா' - ஆடி, 2022