கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

டி.தருமராஜ்ஜின் 'ஜல்லிக்கட்டு' நூலை முன்வைத்து..

Wednesday, July 08, 2026

 

1.


சில நூல்களை வாசிக்கும்போது அவை அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடாது என்று தோன்றும். அவ்வாறு இந்த ஆண்டில் வெளியான இரண்டு நூல்களை மிக நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய 'புத்தம்' மற்றது டி.தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு'.

இவ்வளவு புதுமையும், சுவாரசியமுள்ள ஒரு நூலை அண்மையில் வாசித்ததில்லையென்ற வியப்பே ஜல்லிக்கட்டை வாசித்து முடித்தபோது தோன்றியது.

ஜல்லிக்கட்டு ஒரு புள்ளியே தவிர இந்த நூல் அதைத் தாண்டி பல பல அற்புதமான  பக்கங்களைத் தொட்டுச் செல்கின்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு (2017) எதிராக நடந்த ஒரு 'வெகுசன'ப் போராட்டத்தை இது சமகாலத்தில் மட்டும் வைத்து  பேசுவதில்லை. தமிழின் சங்ககாலத்தில் இருந்து தொடங்கி  பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம்வரை  இந்த 'வெகுசன'ப் போராட்டத்தை  முன்வைத்து இந்நூல் மதிப்பீடு செய்கின்றது. இங்கே வெகுசனப் போராட்டம் என்று அடைப்புக்குறிக்குள் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இந்த நூலில் வெகுசனம் வேறானது, மக்கள் வேறானது என்று தொடர்ந்து டி.தருமராஜ் வலியுறுத்தியபடி வருகின்றார்.

Uploaded Image

இந்த நூலை ஒருவகையில் ஆய்வு நூலாகவும், இன்னொருபுறம் ஒரு புனைவாகவும் வாசிக்க முடிவதுதான் சுவாரயம் தருவது. இந்த நூலில் குறிப்புகளாக அல்லது சுருக்கமாகச் சொல்லப்படும் விடயங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே இருநூறுக்கும் மேலே வரக்கூடியது. பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிக்குறிப்புகள் போன்று வறண்டதன்மையில் இல்லாது, அந்த அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும் நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு இந்த நூல்களின் அடிச்சாரத்தை 'ஜல்லிக்கட்டு' நூலில் தருமராஜ் பாவித்திருப்பதுதான் கவனப்படுத்த வேண்டியதாகும்.

என்னைப் போன்ற தமிழின் சங்கப் பாடல்களை ஆழ வாசிக்கவேண்டும் என்று விரும்புபவர்க்கு (அதேவேளை சோம்பலுடன் இருப்பவர்க்கு), இங்கே தருமராஜ் எடுத்தாளும் சங்கப் பாடல்கள்,  அவ்வளவு ஈர்ப்புடன் பழந்தமிழ் இலக்கியம் நோக்கி இழுத்துச் செல்கின்றது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்தை, அங்கிருந்த வள்ளல்களை (பாரி, பேகன்) போன்றவர்களை மூவேந்தர்கள் எதற்காய் ஆக்கிரமித்தார்கள் என்றும், எப்படி யவனர்களின் வருகையுடன் அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்றும், அதனால் எப்படி அவர்கள் அதுவரைகாலமும் இருந்த செழுமையான வாழ்க்கையிலிருந்து அவர்கள் இழிசன மக்களாக ஆகினார்கள் என்ற ஒரு புது திணைக்கோட்பாட்டை டி.தருமராஜ் முன்வைக்கும்போது அவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.

தமிழின் தொன்மையான நூல்களை மார்க்சிய/பின்னமைப்பியல் தளாங்களில் ஒப்பிட்டு தமிழவன் போன்ற அரிதானவர்களே மிக இயல்பாக எழுதியதை வாசித்திருக்கின்றேன். தமிழவனுக்குப் பிறகு, தமிழின் தொன்மையை பின்னமைப்பியல் புள்ளியில் வைத்து டி.தருமராஜ் எழுதியிருப்பது இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி தந்து கொண்டிருந்தது.
'மார்க்சியம் இந்த நூலின் அடிப்படையக் காரணியாக இருப்பதை வாசிக்கும் நீங்கள் அறியலாம்' என்று தருமராஜ் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டாலும், அதுவே பெரும்பாலான ஆய்வுகளுக்கு இயல்பு என்றாலும், என்னால் இந்த நூலை மார்க்சியம் தாண்டிய பின்னமைப்பியல்/பின நவீனத்துவ தளத்தில் அதிகம் வைத்தே வாசிக்க முடிந்தது. சிலவேளைகளில் என் வாசிப்பின் ஒரு சார்புநிலையாக இருக்கலாம். ஆனால் அப்படி வாசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

2.

இந்த நூல் 'ஆடிப்பெருக்கு-கிளர்ச்சியின் சூத்திரம்', தற்செயலும் வரலாறும் - காளையின் வம்சாவழி', 'காளை அரசியல்', 'பண்பாட்டுப் பதற்றம்', 'முதலீட்டீயமும் நாட்டுப்புறவியலும்' என்ற ஐம்பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே ஒவ்வொரு நூலாக வைத்து உரையாடுவதற்கான பல புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டு என்பது கிராமப் புறங்களில் நடைபெறும் ஒரு விளையாட்டு. ஆனால் அது தடைசெய்யப்பட்டபோது எப்படி நகரத்தார் இதை ஒரு வெகுசனப்போராட்டமாக ஆக்கினார்கள், இப்படி முரணான புள்ளிகள் ஒருங்கிணைந்த (கிராமத்தார்/நகரத்தார்) போராட்டத்தை எப்படிப் எதிர்கொள்வது என்ற குழப்பத்தை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்தது, மதுரையில் அந்தப் போராட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிந்தனையில் தோன்றியதே இந்த நூல் என்கின்றார் தருமராஜ். நாட்டுப்புறவியலில்  'வழக்காறு' என்பதே நிகழ்த்தப்படுவதுதானே, ஆனால் இங்கே 'நிகழ்த்தப்படாத வழக்காறை' எவ்வாறு எதிர்கொள்வது என்ற திகைப்பைத் தன்னைப் போன்ற நாட்டுப்புறவியலாளர்கள் சந்தித்தனர் என அவர் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மேலும் விஜய் (தற்போது தமிழக முதலமைச்சர்) 'தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அது ஏற்படுத்திய ஆரவாரத்தையும், அவரது அரசியல் புள்ளியையும் பார்த்தபோது, 'அது அலங்காநல்லூர்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போன்று இருந்தது, அதாவது விஜய் தன்னை இரகசியம் போல பூட்டி பூட்டி வைத்துக் கொள்வதும், அவரது பிரசன்னம் சில மணித்துளிகளே இருப்பதுபோல அரசியல் கூட்டத்தை வடிவமைத்துக் கொள்வதும், அந்த சில மனித்துணிகளில் காணப்படும் பாய்ச்சலையும், அதைக்காணும் வெகுசனம் உச்சக்கட்ட எழுச்சியை அடைவதும் ஜல்லிக்காட்டு என்கின்ற வீரவிளையாட்டின் ஒழுங்கமைப்பை ஒத்திருந்தது' என்றும் தருமராஜ் முன்னுரையில் எழுதிச் செல்வது, இன்று அரசியல்/பண்பாட்டுக் களங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய புள்ளியாகும்.

ஜல்லிக்கட்டு வெகுசனப் போராட்டத்தில் கடைசிவரை ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாயவே இல்லை. ஆனால் அதே ஒழுங்கில் அறிந்தோ/அறியாமலோ வாடிவாசலில் இதோ பாய்கின்றேன் என்று உறுமிக் கொண்டிருந்த ஒரு காளை அரசியல் களத்தில்  சீறிப் பாய்ந்திருக்கின்றது. பாய்ந்தது மட்டுமில்லை பலரும் எதிர்பார்க்காத, யாராலும் அடக்கமுடியாத அரசியல் காளையாக நின்று வென்றும் காட்டியிருக்கின்றது. இந்த எதிர்பாராத விஜய் என்ற ஜல்லிக்காட்டுக் காளையின் வெற்றி எவராலும் கணிக்கமுடியாதது மட்டுமில்லை, எந்த வகைக்குள் வைத்து இதை மதிப்பீடு செய்வது என்ற குழப்பத்தையும் பல ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைச் சரியாக 'வெகுசனப் போராட்டம்' என்றவகையில் கணித்தவராக மட்டுமின்றி அதற்கான பின்னணிச் சூழலோடு நுட்பமாக விளங்கிக் கொண்டவராகவும் தருமராஜ் இருந்திருக்கின்றார்.

இந்தப் பெரும் நூல் வெளிவந்ததும், இந்த வெகுசனத் திரளைச் சரியாக விளங்கி விஜய் தமிழக முதலமைச்சரானதும் நம் தமிழ்ச் சூழலில் அரிதாக நிகழும் ஓர் நிகழ்வென்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பதே வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தபின்னே முடிவுகளைக் கண்டடைவதாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்வைத்து, அதற்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாதபோதும், வெகுசனம் திரண்ட பின்னணிச்சூழலை சரியாகப் புரிந்துகொண்டு (அல்லது புரியாமலே) அதேபாணியில் ஓர் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது என்பது எவ்வளவு வியப்பானது.
Uploaded Image


இதேநேரத்தில் டி.தருமராஜ்ஜின் இந்த நூலை முன்வைத்து இலங்கையில், பங்களாதேஷில், நேபாளத்தில் நிகழ்ந்த ஸென் ஸீ போராட்டங்களைப் பார்க்க முடியும் என்கின்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துக்களோடு நான் சில புள்ளிகளில் முரண்படவும் செய்கின்றேன். இலங்கையிலோ இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளிலோ நடந்த போராட்டங்களில் ஒரு முதன்மையான எதிரி கண்முன்னே தெளிவாக இருந்தது. இலங்கையில் பொருளாதரத்தால் நாட்டைச் சீரழித்த (அவ்வாறே நேபாளத்தில்) ராஜபகஷே ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போதே இந்த வெகுசனப் போராட்டம் தொடங்கியது.

அங்கே ஏற்கனவே ஜல்லிக்காட்டுக் காளை களத்துக்குள்ளே பாய்ந்துவிட்டது. காளையை அடக்கவேண்டும் என்கின்ற உணர்வு போராட்டம் தொடங்கியபோது அந்த வெகுசனத் திரளுக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்காட்டு தடைப் போராட்டத்திலோ அல்லது விஜய் தமிழக முதலமைச்சரானபோதோ ஒரு தெளிவான எதிரி என்று வெகுசனத்துக்கு இருக்கவில்லை. அதாவது ஜல்லிக்கட்டுக்காளை களத்துக்குள் இறங்கவேயில்லை. அது அவிழ்த்துவிடாத ஒரு காளையாக மூசிக்கொண்டு வாடிவாசலை விட்டு இறங்காதிருந்தது என்பதே இவற்றுக்கு இடையிலான வித்தியாசமாகும்.

3.

எனக்கு இந்த ஜல்லிக்கட்டு நூலில் மிகப்பிடித்ததே தருமராஜ் எதையும் claim செய்யாத தன்மை. எனது நூலான 'பேயாய் உழலும் சிறுமனமே' அல்புனைவுத் தொகுப்பு வந்தபோது இடதுசாரிப் பின்னணியில் வந்த எனக்கு முன்னிலிருந்த தலைமுறையச் சேர்த்த ஒரு நண்பர், தங்கள் தலைமுறையில் ஒரு விடயம் குறித்து கறாரான முடிவெடுத்து உறுதியாக எழுதுவோம், ஆனால் இந்தத் தலைமுறை (என்னைப் போன்றவர்கள்) எல்லாவற்றையும் கேள்விகளுடன், சந்தேகங்களுடனும் அணுகின்றார்களே தவிர அறுதியான உறுதிகளை எடுக்கத் தயங்குகின்றார்கள்' என்று சொல்லியிருப்பார். அதை நேர்/எதிர்மறையாக துவிதங்களுக்குள் வைத்தெல்லம் பார்க்கத் தேவையில்லை.

நாம் இன்றைய சூழலைப் பார்த்தால் அப்படி கறாரான முடிவுகளை எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் ஈரான் விடயத்தை எடுத்துக் கொண்டால், ஈரான் தனது ஆட்சிக்கெதிராகப் போராடும் மக்களை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கின்றது என்பதை அறிவோம் (அதற்கு ஈரானிய மக்களின் சாட்சியங்களே போதும்). அதேவேளை இப்போது ஈரான் என்கின்ற நாட்டை  அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கும்போது ஈரானுக்குச் சார்பாகத்தான் நாம் நிற்க வேண்டும். அப்படியொரு சார்பு நிலை எடுக்கும்போது ஈரானிய அரசு தன் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை ஏற்றுக்கொள்கின்றோமா என்கின்ற கேள்விகளும் வரும். இவ்வாறான சூழ்நிலைகளால்தான் ஒரு விடயத்தை கேள்விகளோடும் சந்தேகங்களோடும் fragmentation ஆகத்தான் இவற்றை நாம் அணுகமுடியும் என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

அவ்வாறான ஓர் அணுகுமுறையை, நாம் இந்த ஜல்லிக்கட்டு நூல் நாட்டாரியலா அல்லது பின்னமைப்பியலா எந்த முறையியல் (methodology) மூலமாக  அணுகின்றது என்று சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தருமராஜ் இதில் ஓரு விளக்கத்தைத் தருகின்றார். 'இந்தப் புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சிகளின் சூத்திரத்தைக் கண்டுபிடிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்வேன். அமைப்பியல் மானிடவியல் ஆய்வுகளில் இது போல் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சாகசமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அப்படியொரு கணித சூத்திரத்தையோ அல்லது கிளர்ச்சிகளின் ஒழுங்கமைப்பையோ கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியம். இங்கே பயன்படுத்தப்பட்ட சூத்திரம் என்ற சொல், சூழ்திறம், சூழ்ச்சி என்று பொருள் தரும் வகையிலே கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று சொல்லியிருப்பதை வாசகர்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என நினைக்கின்றேன்.

பின்னமைப்பியல்/பின் நவீனத்துவத்தில் எல்லாவற்றையும் விளையாட்டாகப் பார்ப்பது என்று முக்கியமான ஒன்று.  அதாவது மிகத் தீவிரமாக எந்தவொன்றையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை (நமக்கு சமகால உதாரணம்  Slavoj Žižek). அதற்காக தருமராஜ் இங்கே பின்நவீனத்துவத்தை தனக்குரியதாக கொள்கின்றார் என்பதாக அர்த்தமல்ல. பின்னமைப்பியல் நிராகரிக்கும் பெருங்கதையாடலை (meta narratives), முக்கியமாக தத்துவத்தை நிராகரிக்கப் போவதில்லை என்று தருமராஜ் ஓரிடத்தில் உறுதியாகக் கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மேலே 'இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று தருமராஜ் சொல்லியிருப்பதற்குதான் நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டாலும், அதன் ஒழுங்குகளை குலைத்து புதிய அடுக்குகளை தன் அறிவால் தருமராஜ் கட்டுகின்றார். இவ்வாறு ஒழுங்குகளைக் குலைத்தும் சிதைத்தும் புதிதாய் ஓன்றை உருவாக்குவதை ஒரு 'விளையாட்டாக'ச் செய்யமுடியுமென்று வேறு எந்தத் தத்துவத்தைவிடவும் பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ நிலவரங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. அதற்கான சுதந்திரத்தை அவை கொடுக்கவும் செய்கின்றன. அந்த மிகப்பெரும் சுதந்திரமே தருமராஜ் அவர்களையும் நாட்டாரியல் இருந்து தொடங்கி பின்னமைப்பியல்வரை கட்டற்ற சுதந்திரத்தோடு இந்த நூலில் இயங்க வைக்கின்றது. ஒருவகையில் அதையேதான் பண்டிதர் அயோத்திதாசரையும், அவருக்கிருந்த அன்றையகால நடைமுறை அறிவோடு, பல விடயங்களை கலைத்தும் சிதைத்தும் ஒழுங்குபடுத்தி 'பெளத்தவயமாதல்' என்கின்ற மிக முக்கியமான ஒரு தளத்தை வந்தடையச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் நினைவூட்டிக் கொள்லலாம்.

மிகச்சோர்வான காலகட்டத்துக்குள் தமிழ் ஆய்வுச்சூழலும் அல்புனைவு நூல்களும் இருக்கின்ற காலகட்டத்தில் அவ்வளவு சுவாரசியமாகவும், அதேவேளை நம்மை இன்னுமின்னும் சிந்திக்க வைக்கின்றதுமாகவும், ஜல்லிக்கட்டு என்கின்ற ஓர் அரிய நூல் நம் கைகளை வந்தடைந்திருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

****

(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2026)

 

அகதி என்பது சிலருக்கு நிரந்தர அடையாளம்!

Thursday, May 21, 2026

 

-தொ.பத்தினாதனின் 'நாளையும் நாளையே' என்ற தொகுப்பை முன்வைத்து-


இலங்கையில் யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. போரின் நிமித்தம் அமைக்கப்பட்ட அகதி முகாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டிருக்கின்றன. அதே போன்று போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் பெரும்பான்மையானோருக்கு அந்த நாடுகள் தமது குடியுரிமையையோ/நிரந்தர வசிப்பிடத்தையோ கொடுத்திருக்கின்றனது. ஆனால் உலகில் மிகப் பெரும் ஜனநாயக நாடு எனச் சொல்லப்படுகின்ற இந்தியாவில், இலங்கையிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்னும் அகதிகள் என்ற அடையாளத்தோடோ இருக்கின்றார்கள். இப்படி அகதியாக அவர்கள் இருப்பது ஐந்தோ, பத்தோ ஆண்டுகள் அல்ல. கிட்டத்தட்ட 20/30 வருடங்களாக அகதிகளாக, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அகதி முகாங்களிலே விளிம்புநிலை மனிதர்களாய்த் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
அந்த அகதி முகாங்களில் அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பதிவு செய்பவர்களில் முதன்மையான ஒருவராக தொ.பத்தினாதன் இருக்கின்றார். பத்தினாதன் அவரது 16வயதில், 1990இல் ஓர் அகதியாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட இலங்கையில் வாழ்ந்ததை விட இரண்டு மடங்கு இந்தியாவில் வாழ்ந்திருந்தபோதும், அவர் அங்கே நிரந்தரமான அகதியாகவே வாழவேண்டிய துர்ப்பாக்கியமே நிகழ்ந்திருக்கின்றது.

பத்தினாதன் ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்கின்ற தன்வரலாற்று நூலையும், 'அந்தரம்' என்கின்ற நாவலையும் எழுதியிருக்கின்றார். இப்போது அவர் கடந்த பத்தாண்டுகளாக எழுதிய 12 கதைகளை உள்ளடக்கி 'நாளையும் நாளையே' என்கின்ற சிறுகதைத் தொகுப்பை  வெளியிட்டிருக்கின்றார்.

*

பத்தினாதன் இதுவரை எழுதியவற்றை வாசித்தவர்களுக்கு, இது அவர் ஏற்கனவே எழுதியவற்றவைகளின் ஒரு தொடர்ச்சியென எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அகதி முகாங்களில் நடக்கின்றன அல்லது அகதி என்கின்ற அடையாளத்தோடு புறச்சூழலில் நடக்கின்றவையாக இருக்கின்றன.

 'அகதி' என்கின்ற கதை, நட்சத்திர விடுதியில் திருமணக் கொண்டாட்டங்களில் உதவியாளராக வேலை செய்கின்ற ஒருவனின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்கிறதாக நீள்கின்றது. இந்தக் கதையில் வருகின்றவனுக்கு ஏற்கனவே நிறைய யோசனைகள் பீறிட்டுக் கிளம்பி, தனக்கு மனநலப் பிரச்சினை இருக்கின்றது என்று நம்புகின்றான். அதற்காக மருத்துவரைக் கூடப் பார்க்கின்றான்.

அப்படியான உளவியல் சிக்கலோடு நட்சத்திர விடுதியில் வேலை பார்க்கும்போது அங்கே ஏற்படுகின்ற அனுபவங்களை அவன் விபரிக்கின்றான். இத்தனைக்கு நடுவிலும் இலங்கையிலிருந்து வந்த அகதி  தானென்கின்ற அடையாளத்தை மறைத்தே அங்கே வேலை பார்க்கின்றான். இறுதியில் ஒரு சிக்கல் வந்து அவன் வெஞ்சினத்தில் வெடித்துச் சிதறும்போது, அவனை 'நீ மதுரக்காரனா?' என்று இன்னொருவன் அணைத்தலுடன் அந்த கோப நெருப்பு அணைந்து ஓர் அமைதி அவனுக்குக் கிடைத்து விடுகின்றது.

இதில் முக்கியமான கதைகளில் ஒன்றாக 'நோஞ்சானை'ச் சொல்லலாம். இக்கதையில் ஒரு நாடகம் நடக்கின்றது. அதை ஒருவர் எப்படி இலங்கையில் யுத்தம் இருந்தது, தமிழகத்தில் எப்படி அகதி வாழ்க்கை இருக்கின்றது என்று நடித்துக் காட்டுகின்றார். அப்படி நடித்துக் காட்டுபவரே சட்டென்று முழுநாடகத்தையும் முடிக்காமல் அமைதியாக ஒதுங்கி ஒளித்துக் கொள்கிறார். அதற்கு பார்வையாளர் மத்தியில் வாட்டசாட்டமாக ஒரு கியூ பிராஞ்ச் அதிகாரி உட்கார்ந்திருந்தமையே காரணம். இந்த உண்மையான காரணத்தை இதில் நடித்துக் கொண்டிருந்த பெரியசாமிக்கும், இந்த நாடகத்தை நிகழ்த்த இடம் கொடுத்த பேராசிரியர் பிரபாகருக்கு மட்டுமே தெரியும் என்று கதை முடியும். ஆக கலை இலக்கியங்களில் கூட முழுமையான சுதந்திரமாகப் பேச, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு இடமில்லை என்பதை அந்தக் கதை சொல்லாமல் சொல்லிச் செல்வதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதுபோல 'தேசியகீதம்' கதை, இந்திய ஜனாதிபதி மதுரைக்கு வருவதையிட்டு அகதிகள் அனைவரையும் அகதி முகாங்களுக்குள் அடங்கியிருக்கும்படி கட்டளையிடப்படுகின்றது. இந்த 'ஊரடங்கில்' பாடசாலைக்குப் போகும் குழந்தைகளுக்குக் கூட விதிவிலக்கு கிடைப்பதில்லை. அவர்களும் பாடசாலைக்குப் போகாமல் முகாங்களுக்குள் அடைந்து கிடக்கின்றார்கள். அப்படி இரண்டு நாள் பாடசாலைக்குப் போகாத குயின்ரனை, அவனது புதிய ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்டு அதட்டுகிறார். அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் தானொரு இலங்கை அகதி, எங்களை இவ்வாறான நாட்களில் அகதி முகாமை விட்டு வெளியே விடுவதில்லை என்று சொல்லத் தயக்கமாக இருக்கின்றது. ஆனால் அவனோடு பத்தாம் வகுப்பு கூடப்படிக்கும் ரோஸ்மேரிக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவள் நெஞ்சுரத்துடன் 'நாங்கள் அகதி முகாமில் இருப்பவர்கள். இவ்வாறு முக்கிய அரசியல்வாதிகள் இங்கு வரும்போது எமக்கு பாடசாலைக்கு வர அனுமதியில்லை' எனச் சொல்லி குயின்ரனைக் காப்பாற்றுகிறாள்.

பாடசாலை அசெம்பிளியில் தேசியகீதம் பாடப்படுகின்றபோது, அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடும்போது, குயின்ரன் அதைப் பாடவில்லை என்பதைக் கண்டுபிடித்து ஏன் என அந்த ஆசிரியர் கேட்கிறார். அவன் மெளனமாக இருக்கின்றான். ஆனால் ஆசிரியர் உறுக்கிக் கேட்ட்கும்போது குயின்ரன் கேட்கிறான், 'நான் ஏன் தேசிய கீதம் பாட வேண்டும்?'. அத்துடன் இந்தக் கதை, அவனை நோக்கி ஆசிரியரின் தண்டனை அவனுக்குப் பிடிக்காத பல்லியைப் போல ஆவேசமாக நாக்கைச் சுழற்றியபடி வருவதுடன் முடிகின்றது. ஓர் அகதியாக/நாடற்றவனாக குயின்ரன் இருக்கும்போது, அவனுக்குரிய தேசம் எது, தேசிய கீதம் எதுவென்பது அவ்வளவு அழுத்தமாக இந்தக் கதையினூடாகச் சொல்லப்படுகின்றது.

*

பத்தினாதனின் கதைகளினூடாக பல்வேறு விதமான அகதி முகாம் வீடுகளைப் பார்க்கின்றோம். எல்லா வீடுகளும் மழையின்போது அடிக்கடி  ஒழுகுகின்றன, கதவுகள் உடைந்து சாட்டுக்கு கதவுகள் போல காட்சியளிக்கின்றன, சேலையை கட்டி அறைகளாக்கி மனிதர்கள் எவ்வித அந்தரங்கமுமில்லாது படுத்துறங்குகின்றார்கள். அப்படிப்பட்ட அகதி முகாமில் தன்பாட்டில் வளர்ந்து வரும் காய்க்காத புடலங்காய் கொடியால் பாம்பு வந்துவிட்டதென்று, இனி புடலங்காய் செடியைக் கூட அகதிமுகாமில் வளர்க்கக் கூடாதென்று சட்டமொன்று கொண்டுவரப்படுவதை 'புடலங்காய்' கதை சொல்கின்றது.

அதுபோலவே அகதிமுகாமில் வாழும் பெண்கள் மீது நிகழும் பாலியல் துஷ்பிரயோகத்தை 'நாளையும் நாளேயே' சொல்கின்றது. அகதி முகாமில் கொடுக்கப்படும் சம்பளக் காசின் நிமித்தம் நடந்த பாலியல் சேட்டையைத் தனது கணவரிடம் சொன்னாலும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத அவல நிலையே அந்தக் கணவர்க்கு இருக்கின்றது. ஒருகட்டத்தில் இப்படியான துஷ்பிரயோகங்கள் தாளாது, இங்கே இருக்கவேண்டாம், இலங்கைக்குத் திரும்பப் போகப் பதிவு செய்துவிடுங்கள் என்று அந்தப் பெண் மன்றாடுகின்றார். எனினும் அடுத்தநாள் எதுவுமே நடக்காதமாதிரி கணவனான கணேஷ் பெயிண்ட் டப்பாவுடன் வேலைக்கு நடந்துகொண்டிருப்பதாக இந்த கதை அவ்வளவு அவலச்சுவையுடன் முடிவதை வாசகராக நாம் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

'பசிப்பாடல்' என்பது ஒரு அகதியின் ஒருநாள் பட்டினியை அவ்வளவு நெகிழ்ச்சியுடன் விபரிக்கின்றதென்றால், இன்னொரு கதையான   'அ(க)திகாரம்' கதை, மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சை பெறும் மகனின் நிலையை ஆவணங்களாகக் காட்டியும் ஏற்றுக்கொள்ளாது, அகதிகளுக்கான உதவிப்பணத்தைக் கொடுக்காத அதிகாரியின் அதிகாரத்தால் நொந்த ஓர் அகதி மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்கின்ற துயரக்கதையைச் சொல்கின்றது. ஒரு மனிதன் உயிரைத் தக்க வைப்பதற்காக நாடு கடந்து அகதியாக வந்து, அந்த இன்னொரு நாட்டில் கொடுக்கப்படும் நிர்ப்பந்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எவ்வளவு அவலமானது.

இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் சொல்வதைக் கவனித்தாக வேண்டும். இதில் 'பயம்' மற்றும் 'வடக்கத்தையான்' பத்தினாதனின் வழமையான மொழியை விட்டு விலகி நிற்பதால் அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட, அவரின் ஏனைய பத்துக் கதைகள் முக்கியமானவை என உறுதியாகச் சொல்ல முடியும்.

பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்.

பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்..

***

(நன்றி: 'கலைமுகம்' - 81)

ரைனெர் ரில்க

Monday, May 11, 2026

 

'வசந்தம் வராத காட்டில்  பறவையின் ஓர் அழைப்பு'
தமிழாக்கம்: பிரசாந்தி சேகரம்

***

.ஒருமுறை ஸ்பெயினில் ப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய அரங்கு. முன்வரிசை இருக்கை. நடனமாடிய பெண் நுனிக்காலில் தரையை அழுத்தி எழுந்த தருணந்தோறும் என் இதயத்துடிப்பைத் துல்லியமாக உணர்ந்தேன். அவ்வளவு intense & intimate ஆன நடன நிகழ்வு. அந்த ஒன்றரை மணி நடனநிகழ்வைப் பார்த்த அந்த நாள் முழுதும் பரவசத்தின் திளைப்பில் அலைந்தபடி இருந்தேன்.
 

அந்த ஞாபகங்களை அப்படியே தத்ரூபமாக நினைவுபடுத்துவது போன்று பிரசாந்தி தமிழாக்கிய ரில்கவின் 'ஸ்பானிய நடனக்காரி' கவிதை இருந்தது.

"கையில் பிடித்திருக்கும் ஒரு தீக்குச்சி
வெண்மையில் இருந்தது
வெடிக்கும் தீப்பிழம்பாக மாறுமுன்
எவ்வாறு அங்குமிங்கும்
துடிக்கும் நாக்குகளை நீட்டுகிறதோ
அவ்வாறு தொடங்குகிறது
அவளின் நடனம்
பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க
வேகமும் வெளிச்சமும் வெப்பமும் பரப்பி
சுற்றிச் சுழல்கிறாள் அவள்
....

சட்டென சுற்றிலும் முற்றிலும்
அவளின் எல்லாமும் தீப்பிடிக்கிறது
ஒரெயொரு பார்வையில்
தன் கூந்தலைப் பற்றவைத்து
ஒரு சுற்றில்
திடீரெனத் தனது ஆடை முழுவதையும்
தனித்துவமான ஒரு கவித்துவத்துடன்
அடங்காத் தீயில் விசிறிவிடுகிறாள்
அதிலிருந்து
திடுக்கிட்டு விழித்தெழும்பிய
பாம்புகள் போல
நீள்கின்றன சடசடத்த நிர்வாணக் கைகள்
பிறகு அணையும் தருவாயில்
அந்தத் தீ இருக்கக் கண்டு
மிகுந்த ஆணவத்துடன்
ஆளுமை செழிக்கும் சைகையுடன்
அனைத்தையும் ஒருசேர அள்ளியெடுத்து
வீசியெறிகிறாள்."

என இன்னும் தொடரும் இக்கவிதையைப் பார்க்கும்போது ரில்கவும் நானும் ஒரே நடனத்தைத்தான் வெவ்வேறான கால நீட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோமா என்று எனக்கு இந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானது.

ரைனர் ரில்க தமிழ்ச் சூழலில் அவரது கவிதைகளைப் போல, அவரின் 'இளம் கவிஞர்களுக்கு எழுதிய கடிதங்களாலும்' அறிமுகமானவர். அக்கடிதங்களை ரில்க அவரின் இருபதுகளில் எழுதியவர் என்பது மட்டுமின்றி அவரின் இறுதிக்காலம்வரை தொடர்ந்து பல்வேறு மனிதர்களுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தவர். ஒருவகையில் பார்த்தால் ரில்கவிற்கு கவிதைகள் மீதிருந்து பித்தைப் போல கடிதங்கள் எழுதுவதிலும் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு கடிதங்களை காதலிகளுக்கு, தோழிகளுக்கு எண்ணிறைந்து எழுதியிருக்கின்றார்.

அநேக கவிஞர்களைப் போல ரில்கவின் வாழ்க்கை தத்தளிப்புக்களால நிரம்பி வழிந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதும், பிறகு கவிதைகளை எழுதும் மனநிலையைத் தொலைப்பதும், அதை மீளக் கண்டுபிடிப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்பதும் என்று தொடர்ந்து அலைபாயும் வாழ்வை அகமும் புறமாகக் கொண்டவர் ரில்க.

ரில்கவின் கவிதைகளை மேலோட்டமாகப் பார்த்தாலே அவர் எந்தளவுக்கு காதல் கவிதைகளை எழுதியிருந்தாரோ அந்தளவுக்கு தனிமை குறித்தும் எழுதியிருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ரில்க மறைந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகள் கடந்தபின்னும் ரில்க சமகாலத்தில் உயிர்த்தெழுவது அவர் தனிமனிதர்களின் அகவுலகின் தனிமையை அசலாக எழுதிச் சென்றிருப்பதால்தானோ என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகின்றது.

தமிழில் ரில்கவின் கவிதைகள் அவ்வப்போது தமிழாக்கப்பட்டிருந்தாலும், பிரசாந்தி சேகரத்தால் 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு' என்கின்ற தொகுப்பில் ரில்கவில் ஒரு நூறு கவிதைகள் ஒரே நேரத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் தனித்துவமானது. இந்நூலின் முதல் சிறப்பு என்பது ரில்கவின் கவிதைகள் அவர் எழுதிய மூலமொழியான ஜேர்மனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

ரில்க, காஃப்கா அனைவரும் செக்கில் பிறந்தவர்கள். முதலாம் உலக மகாயுத்ததின் முன் ஜேர்மன், ஆஸ்ரியா, ஹங்கேரி, செக் எல்லாவற்றையும் உலகப்படத்தில் விளங்கிக் கொள்வதென்பது சிக்கல் வரக்கூடியது. ரில்கவோ, காஃப்காவோ செக்கில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவர்கள் ஜேர்மனியர்கள் என்கின்ற அடையாளத்தில் வருபவர்கள். ஒருவகையில் செக்கில்/ஆஸ்திரியாவில் பிறந்த அந்நியர்கள் இவர்கள் எனலாம். எனவேதான் அவர்கள் எப்போது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்கள் போல ஒரு விடுபட்ட தன்மையோடும், தனிமையோடும் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்தார்கள். அது அவர்களின் படைப்புக்களிலும் பிரதிபலித்திருக்கின்றது. எங்கும் வேரூன்ற முடியாத அவதி என  இந்தத் தவிப்பைச் சொல்லலாம்.

அது ஹெர்மன் ஹெஸ்ஸேக்கும், மிலான் குந்தேராவுக்கும் வேறுவகையில் நடந்திருக்கின்றது. ஆகவேதான் ஹெஸ்ஸே சுவிற்சர்லாந்திலும், குந்தேரா பிரான்சிலும் தமது இறுதிக் காலங்களைக் கழித்தவர்கள். ரில்கவும் அப்படித்தான் ஒவ்வொரு நகராக அலைந்து இறுதியில் சுவிற்சர்லாந்தில் போய் அடைக்கலமானவர்.

ரில்கவின் முதல் காதல் லூவுடன் (Lou) தொடங்குகின்றது. ரில்க இருபதின் தொடக்கத்தில் இருக்கும்போது, லூவுக்கு முப்பதுகளின் மத்தி. ஆனால் அந்த மூன்று வருட உக்கிரமான காதல் ரில்க என்கின்ற கவிஞனை ஆளுமையுடையனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. ரஷ்ய பின்னணியில் இருந்து வந்த லூவால் அன்றைய ரஷ்யாவுக்கு அடிக்கடி ரில்கவினால் பயணிக்கவும் முடிந்திருக்கின்றது.

ரில்கவின் தளும்பும் மனது காதல்களை மட்டுமில்லை, அரசியல் சார்புகளையும் சிக்கலாகவே முடிவு எடுத்திருக்கின்றன. ஒருபக்கம் ரஷ்யப் புரட்சியை வரவேற்றவர், இன்னொருபுறம் முஸோலினியின் பாஸிசம் அந்த நாட்டுக்குத் தேவையென்று இறுதிக்காலத்தில் சொன்னவர்.  இதற்கிடையில் ஜேர்மன் (ஆஸ்திரியா) முதலாம் உலகப்போருக்குப் போனபோது,  படைவீரராகவும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர். வயதின் காரணமாகவும், எழுத்தாளராக இருந்ததன் நிமித்தமும் இராணுவ சேவையில் இருந்து மிக விரைவில் விடுவிக்கப்பட்டவர். அது பிறகு அவரின் இறுதி பத்தாண்டு காலத்தில் மிகப் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியதும் என்றும் கூறுகின்றார்கள்.

ரில்க வாழ்க்கையில் இருத்தலியச் சிக்கலையும், இந்த அந்நியப்படுதலையும் தனது காதல்களாலும், பயணங்களாலும் கடந்து வந்தவராக ஒருவகையில் வகைப்படுத்தலாம். சிறுவயதுகளில் பெண்குழந்தை  இல்லாத காரணத்தால் பெண்களின் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தாயாரால் வளர்க்கப்பட்ட ரில்க, காலம் முழுதும் பெண்களின் கதகதப்புக்குள்ளேயே வாழ்ந்து முடித்தவர். மனைவி, காதலிகள், தோழிகள் ரில்கவின் ஆளுமையை மட்டுமின்றி அவரின் கவிதைகளைச் செதுக்குபவர்களாகவும், அவரை வறுமை எட்டவிடாது கனிவுடன் பராமரித்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

*

பிரசாந்தி ஜேர்மனிக்கு சிறுவயதிலே சென்றவர். அவருக்கு பத்தாவது வகுப்பிலே ரில்க பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். பிறகு பல்கலைக்கழகக் காலத்தில் மாலைநேர நண்பர்களின் கவிதை உரையாடல்களில் ரில்க அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறு ரில்க இளம்வயதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் பின்னர் ரில்கவின் அசலான ஆவணங்களைத் தேடி மூன்று நாட்கள் தொலைதூர நகருக்குச் சென்று தங்கி நுணுக்கமாகப் பார்க்கின்றார்.

ஒரு படைப்பாளிக்கு இப்படி பிரசாந்தி போல ஓர் அணுக்கமான வாசகர் கிடைப்பது அவர்களின் பெரும்பேறெனச் சொல்வேன். அதிலும் பிரசாந்தியின் பின்னுரையை வாசிக்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒருதலைக்காதலாக ரில்கவை நேசிக்கின்றாரோ என்றளவுக்கு அவ்வளவு நெருக்கமாக நம்மை உணரவைக்கின்றார்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு  மொழிக்கு அதன் சாரம் தொலைந்துவிடாது மொழிபெயர்ப்பது என்பது எளிதானதல்ல. அதிலும் கவிதைகளை தமிழாக்குவது என்பது இன்னும் சவாலானது. சிலவேளைகளில் நாம் அந்தப் படைப்பாளிகளில் தோய்ந்து அவர்களின் மூலமொழியில் வாசிக்கும்போது அப்படியொரு பரவசம் உணர்வைத் தரும். ஏனென்றால் நாம் தனித்து ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதில்லை. நாம் அந்தப் படைப்பாளியின் வாழ்கையில் தோய்ந்தெழுவதால் நமக்கு அவர்களின் ஒவ்வொரு வாக்கியங்களுக்கு அப்பால் தொக்கி நிற்கும் அர்த்தங்கள் தெரியும். ஆனால் சிலவேளைகளில் மொழிபெயர்த்துப் பார்க்கும்போது அது தனியே அந்தக் கவிதையாக வாசிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. அல்லது ஏன் இந்த மிக எளிய கவிதையை மொழிபெயர்த்தார் என்று மொழியாக்கத்தை வாசிப்பவர் நினைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.



சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியை தமிழாக்கும்போது நான் கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் வாசித்தும், நிறைய நேர்காணல்களைப் பார்த்தும் முடித்திருந்தேன். எனவே என்னால் அவரின் கவிதைகளின் பின்னால் ஒளிந்து நின்ற அர்த்தங்களை அல்லது இது எதனோடு தொடர்புகொண்டு நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள எளிதாக முடிந்திருந்தது. ஆனால் அதை நான் தமிழ்ப்படுத்தியபோது சிலவேளை மிகச் சாதாரண கவிதைகளாக அதைத் தனித்து வாசிக்கும்போது தோன்றியுமிருக்கின்றது. மேலும் ப்யூகோவ்ஸ்கி அந்தமாதிரி கெட்டவார்த்தைகளைப் பாவிப்பவர். எம்மிடையே இருக்கும் கெட்டவார்த்தைகளை அதற்குப் பாவித்தால் அது ஆங்கிலத்தில் வாசிப்பதுபோல ஒருவகைப் பரவசத்தைத் தராது. இந்தச் சந்தர்ப்பங்களில் நான் ஒரு தோற்றுப்போன மொழிபெயர்ப்பாளராக ப்யூகோவ்ஸ்கியின் முன் நின்றிருக்கின்றேன்.

பிரசாந்தி இந்நூலின் பின்னிணைப்பில் மொழிபெயர்ப்பின் ஒரு புதுப்பரிணாமம் குறித்து உரையாடுகின்றார். ரஷ்ய மொழியாக்கங்களில் அந்த மொழிபெயர்ப்பாளரே இன்னொரு படைப்பாளியாக முகிழும் தருணங்களையும், அதுபோல 'ரில்கவிடமிருந்து', 'ப்ராஸ்டிடமிருந்து' என்று அழைத்து மொழியாக்கங்களைச் செய்வதைக் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்க வேண்டியதொன்று.

மேலும் டொச்சில் ஒரு சொல்லிலே மூன்று அர்த்தங்களை இணைத்து எழுதுவார்கள், அதை எப்படி பிரித்து தமிழில் எழுவது என்கின்ற சிக்கல்களையும் பிரசாந்தி முன்வைத்து இதில் எழுதியிருப்பது சுவாரசியமானது.  நேரடி மொழிபெயர்ப்பில் 'காய்ந்த காடு' என்பதை, 'பூக்காத காடு' என்பதற்குச் சென்று இறுதியில் எப்படி 'வசந்தம் வராத காட்டை' அவர் வந்தடைந்தார் என்பது மொழிபெயர்க்கும்போது நாம் வந்தடைகின்ற பரவசமான தருணங்கள் எனச் சொல்வேன்.  இவ்வாறு 'Silent Spring' என்ற சொல்லுக்கு ஏ.ஜே.கனகரத்ன, 'ஒலிக்காத இளவேனில்' என்கின்ற அழகான தமிழாக்கத்தைக் கண்டுபிடித்தவர் என்பது இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது (இதே பெயரில் 17 ஈழ/புலம்பெயர் பெண் கவிஞர்களின் ஒரு தொகுப்பும் வெளிவந்திருக்கின்றது).

'காதல் கொண்ட பெண்' கவிதையின் ஒரு பகுதி இப்படி வரும்.

'..இருப்பினும்
இலைகள் துளிர்க்கும் இந்தப் பொழுதுகளில்
என்னுள் ஏதோவொன்று விடுவிக்கப்பட்டுள்ளது

அறிந்திராத இருண்ட காலத்திலிருந்த ஏதோவொன்று
அது எளிய கதகதப்பான என் வாழ்வை
யாரோ ஒருவரின்
கைகளில் கொடுத்துள்ளது
நேற்று நான் யாராக இருந்தேன்
என்றறியாத ஒருவரின் கைகளில்'

நாம் ஒவ்வொரு புதிய நேசத்துக்குப் போகும்போது இப்படித்தானே 'நேற்று நான் யாராக இருந்தேன்/ என்றறியாத ஒருவரின் கைகளில்'தான் எமது வாழ்க்கையை ஒப்படைக்கத் தயாராகச் செல்கின்றோம். அதுவே காதலின் அழகும் ஆபத்தும் எனக் கூடச் சொல்லலாம்.

பிரசாந்தி 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பை' நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். ஒருவகையில் வசந்தம் வந்துவிட்ட  தமிழ் எனும் பெருங்காட்டிற்கு, ரில்க என்னும் பறவையை பரவசமாக அழைத்துக் கொண்டு அவர் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

அந்தப் பறவையின் நூறு பாடல்களை நாம் ஆறவமர இருந்து இனி இரசிக்கலாம்.

***

கார்காலக் குறிப்புகள் - 147

Monday, April 13, 2026

 

பத்து வருடங்களுக்கு முன் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் (எம்.டி.எம்)'நிலவொளி எனும் இரகசிய துணை'  வெளிவந்திருந்தது. அந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகள் சிலதைச் சேர்த்தும், வேறு புதிய பலதைச் சேர்த்தும் அண்மையில் வெளிவந்த தொகுப்புதான் எம்.டி.எம்மின் 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்'. இதில் நாற்பது கலை இலக்கிய கட்டுரைகள் இருக்கின்றன. திரைப்படங்கள் சார்ந்த ஒரு சில  கட்டுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிகுதி அனைத்தும் எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கிய நூல்களையும் அறிமுகப்படுத்தும்/உசாவும் ஆக்கங்களென இத்தொகுப்பைச் சொல்லலாம்.

இன்றைக்கு தமிழில் முன்னெப்போதும் இல்லாதவளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றபோதும், அவை பெரும்பாலும் புனைவு சார்ந்தே இருக்கின்றன. மேலும் தமிழ்ச் சிற்றிதழ் மரபு கிட்டத்தட்டவே மறைந்துபோய்விட்ட காலத்தில் சமகாலத்தில் உலக இலக்கியப்பரப்பில் நிகழும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆழமான கட்டுரைகள் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் கட்டுரைகளையும் பெரும்பாலும் ஒற்றைப்படையாக 'இரசனை விமர்சனத்துக்குள்'  கொண்டுவந்து வரும் எத்தனங்களே இருக்கின்றன.


இந்த ஆபத்தை எம்.டி.எம், பாரதியார் குறித்த ஓர் உரையாடலில் '‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று 'நிலவொளி எனும் இரகசிய துணை'யிலே எச்சரித்திருக்கின்றார். இந்த இரசனை விமர்சனம் மட்டுமில்லை,  வழக்கொழிந்த இலக்கிய விமர்சன முறைகளையும் தமிழுக்கு இப்போதுதான் புதிதாய்க் கண்டுபிடித்த பாவனையில் எழுதுகின்றனர். அதில் நம் 'இரசனை விமர்சனக் குழு' கண்டுபிடித்த ஒருவர் ஹெரால்ட் ப்ளூம்.
 

 
'யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box checking  வேலையைச் செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூம் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச் சொல்லி, சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்;புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாசார மேலாண்மையை நிறுவுகிறார்கள் (ப. 94).' என எம்.டி.எம் எழுதுகின்றார்.

இதை அவர் எங்கே எழுதிச் செல்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். 'சார்த்தரின் No Exit நாடகத்தில் வரும்  Other is Hell ஏன் மிகவும் பிற்போக்கானது' என்ற கட்டுரையில் அதை விமர்சித்துவிட்டுத்தான் சார்த்தரின் மேதமையை அவரின் தத்துவச் சறுக்கலுக்கிடையில் வைத்து எம்.டி.எம் மதிப்பிடுகிறார். அப்படி சார்த்தர் சில இடங்களில் சறுக்கியிருந்தாலும், இந்த ஜெரால்ட் ப்ளூம் போன்றவர்களைப் போலவன்றி சார்த்தர் அசல் சிந்தனையாளரே என்று நிரூபிக்கவும் எம்.டி.எம் செய்கின்றார். இதைத்தான் அசலான வாசிப்புகளும், மதிப்பாய்வும் செய்யும்.

*

இந்த நூலிலிருக்கும் நாற்பது கட்டுரைகளில் முதன்மைப் படைப்பாளிகளைத் தவிர்த்து, எம்.டி.எம் அவற்றில் 'உப பாத்திரங்களாக' குறிப்பிடும் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நாம் தேடி நமது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் (நாம் இந்தளவு காலமாக எழுதுகின்றோம், இந்தளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றோம்) ஒருபுறம் பிரகடனங்களை  வெளியிட்டு தம்மைத்தானே  சிறந்த எழுத்தாளர்கள் அறிவித்துக்கொள்ளும் புகழ் விரும்பிகளும், இன்னொருபுறம் தமது ஆசான்களின் நீண்டகால உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அசட்டைசெய்து தாங்களும் ஆசான்களாகிவிட்டோமென 'இந்த இலக்கியம் என் இரத்தத்தையே பலி கேட்கிறது' என அலட்டும் (முக்கியமாக யாழ்ப்பாண/புலம்பெயர்) கத்துக்குட்டிகளுக்கும் இடையில், நீண்ட வரலாறுடைய தமிழ் இலக்கியம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக இலக்கியப் பரிட்சயம் சிறிதும் இல்லாது, ஒரு சிலர் சொல்வதையே மனப்பாடம் செய்து கிணற்றுத்தவளைகளாக இருக்கும் இவர்களைப் பார்க்க உண்மையிலே கவலையாகத்தான் இருக்கிறது.  

பரவாயில்லை இன்னும் கற்றுக்கொள்ளவும், தன்முனைப்பின் உணர்கொம்புகளைச் சுருட்டிக் கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதற்குத்தான், இப்படி 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்' போன்ற அல்புனைவு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன, தயவுசெய்து கவனியுங்கள் எனச் சொல்கிறேன்.  உலக இலக்கியம் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது நீங்கள் எவ்வளவு கட்டுப்பெட்டித்தனமாக 'இரசனை விமர்சனம்' மட்டுமே போதுமென இலக்கியத்தை அதன் வழிமட்டும் வாசிப்பது நியாயமா என்று கொஞ்சம் பரிசீலனை செய்யுங்களென அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கின்றது.

இந்த நூலில் புத்தகங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளும் வசீகரிப்பவை. நோர்வேஜிய நெறியாளாரான யோக்கிம் திரீயரின் 'The worst person in the world' திரைப்படத்தின் கட்டுரையில் எம்.டி.எம் பலமுறை சென்றிருந்தும் பிடிக்காத நோர்வே இந்தப் படத்தின் மூலம் வேறொரு பார்வையைத் தந்ததென்று ஆராய்கிறார். அதுபோல அப்பாஸ் கியரோஸ்டாமியின் 'The wind will carry us' குறித்த கட்டுரையை வாசித்தபோது, ஏற்கனவெ இத்திரைப்படத்தைப் பார்த்தபோதும், மீண்டும் இக்கட்டுரை நினைவுபடுத்தும் ஈரான்/குர்டிஷ் நிலப்பரப்பைப் பார்க்கும் உந்துதல் வந்து அத்திரைப்படத்தை மீளவும்  நான் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.

ஏற்கனவே வாசித்திருந்த கோபே அப்பேயின் 'மணற்குன்றுகளின் பெண்', ஜூலியா கிறிஸ்தவாவின் கவித்துவ மொழியில் புரட்சி' , காவபட்டாவின் 'நாவல்களை முன்வைத்து' போன்றவற்றை இன்னொருமுறை வாசித்தபோதும், அவை புத்துணர்ச்சி தருகின்ற ஆக்கங்களாகவே எனக்கு இருந்தன.

காஃப்காவின் பாதிப்பு எப்படி மார்க்வெஸின் படைப்புக்களில் இருந்தது என்பதை 'காலராக் காலத்தில் காதல்' நாவலை முன்வைத்து எம்.டி.எம் எழுதியிருப்பது கவனத்துக்குரியது. அதன் முடிவில் 'மார்க்வெஸின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட பின்பு இப்போது பின்னோக்கிப் பார்க்கும் நான் காஃப்காவின் செல்வாக்கு மார்க்வெஸின் மேல் இருந்தது நமக்கு அறிமுக நிலையிலே தெரிய வந்திருந்தால் தமிழிலக்கியத்தின் போக்கு வேறு திசையில் சென்றிருக்குமோ என வியக்கின்றேன் (ப 41)' என எம்.டி.எம் எழுதியிருப்பது சுவாரசியமான உரையாடலுக்குரியது.

நானும் ஒரான் பாமுக்கின் அல்புனைவுக் கட்டுரைகளை வாசித்தபோது அவருக்கு ரஷ்ய பேரிலக்கியங்கள் (முக்கியமாக தால்ஸ்தயேவ்ஸ்கி) மீது பெரு மதிப்பிலிருந்தாலும், அவர் எப்படி அதன் பாதிப்புக்களிலிருந்து துருக்கிக்குரியதான தனித்துவமான நாவல்களை உருவாக்கினார் என்று வியப்பதுண்டு. நாம் தமிழில் ரஷ்யப் பேரிலக்கியங்களைப் பேசியவளவுக்கு அப்படி தமிழ்ச்சூழலுக்குரிய தனித்துவமான பேரிலக்கியங்களை அதன் பாதிப்பில் இருந்து கூட, உலக இலக்கியப் பரப்பில் வைத்துப் பேச  ஏன் இன்னும் உருவாக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன்.

எம்.டி.எம் எழுதிய 'நிலவொளி எனும் இரகசிய துணை' நூல் எனக்கு மிகப்பிடித்தமான நூல்களில் ஒன்றெனவும், எப்போது மனம் சோர்வுற்றாலும் அதை எடுத்து வாசிப்பதற்காக அருகிலேயே வைத்திருப்பேன் எனவும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் இன்னொரு நீட்சித்த வடிவமென 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேனை'யும்' நான் நினைவில் வைத்திருக்க இதில் அரிய பல ஆக்கங்கள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகின்றது.

***

 

கார்காலக் குறிப்புகள் - 146

Sunday, April 12, 2026

 

ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின்  வாழ்வின் ஒரு காலகட்டத்தை விவரிக்கும் திரைப்படமான  'Springsteen: Deliver Me from Nowhere ஐ அண்மையில் பார்த்திருந்தேன். இது ஸ்பிரிங்ஸ்டீன் அவரது முதல் இசைக் கச்சேரிகளைப் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக நடத்திவிட்டு மிகுந்த சலிப்புடனும், சோர்வுடனும் திரும்புகின்ற காலத்தைப் பற்றியது. அவரது தயாரிப்பாளர்கள் இந்த வெற்றியின் சூட்டோடு சூட்டாக அடுத்த ஆல்பத்தைத் தயாரிக்கச் சொல்கின்றனர். ஆனால் அவரோ ஆரவாரத்தையும் புகழையும் தவிர்த்துவிட்டு அவரது சொந்த நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகின்றார். வீடு திரும்புதல் என்பது ஸ்பிரிங்ஸ்டீன் எளிதாக அமைவதில்லை. அவருக்கு அவரின் தந்தையார் தாய் மீது நிகழ்த்திய குடும்ப வன்முறைகள் நினைவுக்கு வருகின்றது. 
 
 

 
இவ்வாறு கடந்தகால உளவடுக்களோடும், தனிமையிலும் உழலும் ஸ்பிரிங்ஸ்டீன் தனது படுக்கையறையில் இருந்து மிகக் குறைந்த இசைக்கருவிகளை வைத்துப் புதிய பாடல்களை உருவாக்கின்றார். அவற்றை வழமைக்கு மாறாக ஆடியோ காஸெட்டுக்களில் பதிவு செய்துகொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு முகிழ்கிறது.
 
காஸெட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை மேலும் இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்த்து ரெக்கார்டிங் நிலையத்தில் பதிவு செய்யும்போது ஸ்பிரிங்ஸ்டீனுக்கு அந்த வடிவம் பிடிக்கவில்லை.

எனவே எப்படி அவர் சாதாரண காஸெட்டுக்களில் பாடல்களைப் பதிவு செய்தாரோ அதன் வடிவத்திலே புதிய ஆல்பமாக வெளிவருகின்றது. அதுவே 1980களில் வெளிவந்த 'Nebraska' ஆல்பம். இதை வெளியிட்டபோது அன்றைய கால வழமைக்கு மாற்றாக ஆல்பத்தின் முகப்பில் தனது புகைப்படம் வெளிவரக்கூடாது என்பதோடு, இந்த ஆல்பத்துக்காக எந்த விளம்பரப்படுத்தல்களோ, இந்த ஆல்பத்தை முன்னிலைபப்டுத்தும் எவ்விதமான இசைக்கச்சேரியையும் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக ஸ்பிரிங்ஸ்டீன் இருந்திருக்கின்றார். இவற்றைத் தாண்டியும் அது ஒரு வெற்றிகரமான இசைத்தட்டாக அன்றைய்காலத்தில் மாறியிருந்தது.

*

எனது பதிமங்களில் ஸ்பிரிங்ஸ்டீன், 'The boss' ஆக அறிமுகமாகியிருந்தார். அவரின் பாடல்களை விட கிட்டாரை வானத்தை நோக்கி உயர்த்தி நிற்கும் அவரின் அந்த கம்பீரமே என்னை அப்போது வசீகரித்திருந்தது. இப்போது ஸ்பிரிங்ஸ்டீனைப் பற்றிப் பேச விழைந்தது அவரின் பாடல்களுக்காக அல்ல. அவர் இசையோடு எப்படி தனது அரசியலை வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்கேயாகும். அன்றைய வியட்னாமிய போருக்கு எதிராக மட்டுமின்றி, தொடர்ச்சியாக அமெரிக்காவிற்குள் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர் ஸ்பிரிங்ஸ்டீன்.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் குடியேறிகளின் மீது அமெரிக்க அரசும் அதன் கொடும் அமைப்பான ICE ம் பெரும் வன்முறையைப் பிரயோகித்தபோது அதை எதிர்த்து நின்ற ஒரு பெண்ணும், இன்னொரு ஆண் தாதியும்  (Renee Good and Alex Pretti)  மினோஸ்டாவில் கொல்லப்பட்டிருந்தார்கள். 

 
அது பெரும் அதிர்ச்சியையும், எழுச்சியையும் அமெரிக்காவில் ஏற்படுத்தியிருந்தது. அப்போது 'மினியப்பாலிஸின் தெருக்கள்'  (Streets of Minneapolis)  என்ற அமெரிக்க அரச அதிகாரத்தை எதிர்க்கும் பாடலோடு ஸ்பிரிங்ஸ்டீன் வந்திருந்தார்.

முதலீட்டிய நாடாகவும், பெரும் நிறுவனங்களின் இராட்சதக் கரங்களால் நடத்தப்படும் அரசாகவும் அமெரிக்கா இருந்தாலும், அதன் மறுபக்கம் என்று ஒன்றிருக்கின்றது. அப்படி அதிகாரத்துக்கு அடிபணியாத ஒரு தரப்பு மிக உறுதியாக இருப்பதால்தான் அமெரிக்கா ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி அடிப்படை உரிமைகள் சார்ந்து நகராத ஓர் இடத்தில் இருக்கின்றது. இல்லாதுவிட்டால் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களால் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து  எளிதில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி நிலையை எளிதில் அடைந்துவிட முடியும்.

அமெரிக்காவின் இந்த மறுபக்க தரப்பின்  எதிர்ப்பு, தலைமுறை தலைமுறையான சனநாயகத்துக்கான அவர்களின் தொடர் போராட்டம், அமெரிக்கா முற்றுமுழுதாக ஓர் வலதுசாரி நிலைக்குப் போகாது எப்போதும் காப்பாற்றியபடி இருக்கின்றது.

அதுவே ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடச் செய்தது.  வியட்னாமிய போருக்கெதிரான பெரும் அலையாக எழ வைத்தது. எந்த வெள்ளையின பெரும்பான்மை நாட்டிலும் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத ஓர் கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவும் செய்தது.

இன்றைக்கு டிரம்பின் அரசு சர்வாதிகாரத்திலும் போர்வெறியிலும்  (குடிவரவாளர்கள் உள்ளிட்ட விடயங்களில்) நிறவெறியிலும் மிதந்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் உள்ளேயிருந்து எழும் குரல்கள் அவ்வளவு தீவிரமானவை.

இன்று மில்லியன்கணக்கான அமெரிக்க மக்கள் ஐம்பது மாநிலங்களிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈரானில் நடத்தப்படும் போருக்கும், உள்நாட்டில் குடியேறிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கும் எதிராக 'No Kings' ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருக்கின்றனர்.  இந்தப் பெயரில் கடந்த வருடம் டிரம்ப் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தார்கள். No Kings என்பது எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனதுக்கு மேலானவர் அல்ல என்பதை வலியுறுத்துவதாகும். நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அமெரிக்கச் சட்டத்தை ஏற்று நடக்கவேண்டும், சர்வாதிகாரியாக அல்ல என்ற இந்த 'கோஷம்' இன்றைய நாளில் இரண்டாவது பெரும் ஆர்ப்பாட்டத்தை மில்லியன்கணக்கான மக்களை பல்வேறு நகர்களின் தெருக்களுக்கு அழைத்து வந்திருக்கின்றது.

இன்றும் ஸ்பிரிங்ஸ்டீன்  தனது 77 வயதிலும் மக்களுக்காக தெருவுக்கு வந்து அமெரிக்க அரசுக்கெதிரான பாடலை மினோஸ்டாவில் No Kings பேரணியில் பாடிக் கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர் என்னைப் போன்றவர்க்கு The Boss!

***

கார்காலக் குறிப்புகள் - 145

Saturday, April 11, 2026

 

பா.திருச்செந்தாழையின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரேதம்' 2008இல் வந்தபோது அன்றையகாலங்களில் அதை வாசித்து ஒரு சிறுகுறிப்பை எழுதியிருக்கின்றேன். என் நினைவு சரியாக இருக்குமெனில் அதன் முன்னுரையில் வாசித்து எழுத ஓர் அமைதியான சூழ்நிலையும், எதிர்காலம் குறித்து அச்சப்படுத்தாத ஓர் குடும்பமும் அமைந்தால் நன்றாக இருக்குமென்று திருச்செந்தாழை கவலைப்பட்டு எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. திருச்செந்தாழையின் முதல் தொகுப்பு பலரால் கவனப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு. தொடக்கநிலை எழுத்தாளர் ஒருவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காத வரவேற்பு திருச்செந்தாழைக்குக் கிடைத்தபோதும் அவரின் அடுத்த தொகுப்பான 'விலாஸம்' வர கிட்டத்தட்ட 14 வருடங்கள் எடுத்திருந்தன.  



இந்த இடைவெளியை தமிழ்ச்சூழலில் இருந்து எழுதும் பலருக்கு ஏன் நிகழ்கின்றது என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் இது பெரும் உறங்குநிலைக் காலம்தான். ஆனாலும் திருச்செந்தாழையின் இரண்டாம் தொகுப்பான 'விலாஸம்' வந்தபோது அதற்குரிய வரவேற்பைத் தமிழ்ச்சூழலில் கொடுத்திருக்கின்றது. இப்போது 'நெருப்பில் வளர்ந்தவை' என்கின்ற திருச்செந்தாழையின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கின்றது.

திருச்செந்தாழையின் கதைகளில் அவர் பரபரப்பு தரும் கதைகளையோ அல்லது இறுதியில் அதிர்ச்சி தரும் முடிவுகளையோ எளிதில் தவிர்த்துவிடுகின்றார். மிக நிதானமாகவே தனது கதைகளை உருவாக்கியபடி, ஒரு சூழலை நமக்கு விரிவாக தர முயற்சிக்கின்றார். ஒருவகையில் நான் திருச்செந்தாழையின் கதைகளை 'கணங்களை உறையவைக்கும் மாயஜாலம்' எனச் சொல்வேன்.

ஏன் இந்த உறையவைக்கும் கணங்கள்  எப்போது மாயஜாலமாகின்றது என்றால் அவர் அதை கவித்துவ மொழியில் விரித்துச் சொல்லும்போதாகும்.  பலமாக இருக்கும் அதுவே சிலவேளைகளில் பலவீனமாகப் போகும் அபாயம் இருந்தாலும் அதுவே திருச்செந்தாழையின் தனித்துவமாக அமைகின்றது. கவித்துவ மொழியாக இருப்பதால் அது நீண்ட வாக்கியங்களாகவும் பல கதைகளில் இயல்பாக வந்துவிடுகின்றது. 'வருகை' கதையில் 'சிறியதும் பெரியதுமான எண்ணற்ற கடைகள் மஞ்சள் குண்டுபல்புகளுக்குக் கீழே விழித்துக் கொள்கிற யானைக்கல் பழமண்டியின் உலகம் வெற்றிலைக் கறை படிந்த சிரிப்புகளை, நிதானிக்கக் கூட நேரமில்லாத முகத்தைக் கிழித்துவிடுவதுபோலப் பழங்களும் கிழங்குகளும் நிலக்கடலையும் நிறைந்த மூடைகளைத் தூக்கி உரசி விரைகின்ற சுமைகளால் ஆனது' என திருச்செந்தாழை எழுதிச் செல்கின்றார். ஒருவகையில் இது ஆங்கிலத்தில் எழுதும் அனுக் அருட்பிரகாசத்தின் எழுத்து நடையை நினைவுபடுத்தியது. அவரும் இவ்வாறு நீண்ட வாக்கியங்களால் புனைவுகளை எழுத விரும்புகின்ற ஒருவர்

இன்னொரு இடத்தில் 'கண்ணாடியால் தங்களை வேய்ந்து எண்ணிலா கட்டிடங்கள் எழுந்து நின்றாலும், எதிர்பாராது எப்போதேனும் மின்சாரம் போய்ச் சட்டெனச் சூழ்ந்து கொளிற இருளில், சரசரவெனப் பல நூற்றாண்டுகள் பின் நகர்ந்து தனது புராதனமான முகத்தோடு கோயில் கோபுரங்கள் நிழலுருவாக எழுந்து வருகிற மதுரையின் தொன்மைக்குள் வைகை மட்டுமே காலத்தில் தொலைந்தவள்' என்று எழுதப்பட்டிருக்கும்.

இவ்வாறான நீண்ட வாக்கியங்களின் அழகென்பது கவித்துவத்தோடு அதற்குள் பல விடயங்களை/நிகழ்வுகளைப் புகுத்துவதென்பது. அதேவேளை இந்த நீண்டவாக்கியங்களால் சிலவேளைகளில் Lost in translation மாதிரி, வாசகர்கள் சொல்லவந்ததன்  முக்கிய விடயத்தை தவறவிட்டு காட்சிப் படிமங்களில் மட்டும்  சிக்கி விடுவதாக அமைந்துவிடவும் கூடும்.

'நெருப்பில் வளர்பவை' கதைத் தொகுப்பின் கதைகளை விரித்து சொல்லப்போவதில்லை. அவை புத்துணர்ச்சி தருகின்ற கதை மொழி. திருச்செந்தாழை இந்தக் கதைகள் மீது சாதாரண மனிதர்களையே உலாவ விடுகின்றார். அம்மானிடர் மனம் பிறழ்ந்தவர்களாகவோ, திருமணம் தாண்டிய உறவுகளில் திளைப்பவர்களாகவோ, வியாபாரத்தில் நொடித்துப் போனவர்களாக இருந்தாலும், அவர்களுக்கென்று அமைந்துவிட்ட வாழ்க்கையை, அவர்களின் சூழலுக்குள் நின்று எவ்வித தீர்ப்புக்களையும் அவசரமாக வழங்கிவிடாது நிதானமாகப் பார்க்க நம்மை அழைக்கின்றார்.

அப்பாவுக்கு இருக்கும் இன்னொரு உறவை அறிந்தும் அறியாமலும் விளங்கிக் கொள்ளும் ஒரு சிறுவனின் கதையைச் சொல்லும் 'அப்பா' கதையும், 'வியாபாரத்தில் தோற்றுப்போய் மனைவியின் குடும்பத்தில் மதிப்பற்றிருக்கும் மருமகனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்ளும் மாமியைப் பற்றிய 'ஒரு பிடி வெளிச்சமும்', தகப்பன் இறந்துபோக அந்தக் கடைக்கு வியாபாரம் சொல்லிக்கொடுக்க வரும் திருமணமானவன் மீது சோதிக்கு வரும் உறவு குறித்து விபரிக்கும் 'நிறைசூலி'யும்,  இரண்டு பிள்ளைகளைப் பெற்று நன்றாக இருந்து தாயிற்கு சட்டென்று மனப்பிறழ்வு வந்து அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதும் திரும்பலுமாக இருக்க அவரைப் புரிந்து கொள்ளும் லோகுவின் அவனின் இரண்டு பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் 'வருகை'யும், மலமள்ளிப் பிழைக்கும் பூம்பிடாகை பாட்டியின் பேர்த்தி எப்படி அவமானங்களைத் தாங்கி தன்னையே நெருப்பாக்கி பிறர் தன்னை எவ்விதத்திலும் தீண்டவிடாதிருக்கும் 'சாம்பலில் கனல்வது'ம் இத்தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்த கதைகள்.

இந்தவருடம் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களில் இதை முதன்மையான ஒன்றாக மட்டுமில்லை, தமிழ் இலக்கிய உலகு பெருமைகொள்ளக்கூடிய ஒரு படைப்பாகவும் இதை முன்மொழிவேன்.



***

 


ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains)

Thursday, April 09, 2026

 

ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains) என்கின்ற நூல் அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இது பாமுக் 2009இல் இருந்து 2022 வரை சிறுசிறு குறிப்புகளாக எழுதியவற்றின் தொகுப்பு. குறிப்புகளாக மட்டும் இல்லாது இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் பாமுக் ஓவியங்களை வரைந்து எழுதியிருப்பதுதான் இதன் சிறப்பு எனலாம்.


பாமுக் இப்படி ஒரு தொகுப்பை அவர் நோபல் பரிசை வென்ற அடுத்த ஆண்டு கொண்டு வந்திருந்தார். அது 'Other Colors'. அதில் பெரிய கட்டுரைகளிலிருந்து சிறு பதிவுகள் வரை சேர்க்கப்பட்டிருக்கும். இதுவரை காலமும் பாமுக் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரேயொரு சிறுகதையும் அதன் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும். 90களிலும், அதற்கு முன்னரும் இருந்த பாமுக்கை நாம் காண்கின்றோம்.
 

பாமுக் அவரது தகப்பன் வேலை செய்யும் ஜெனீவாவுக்கு செல்வது அவரது முதல் பயணம். அது அவரது 7 வயதில் நிகழ்கின்றது. பின்னர் ஆர்க்கிட்டெட் படிப்பை பாதியில் முறித்துவிட்டு ஓர் எழுத்தாளராகும் கனவுடன் வீட்டு அறையில் முடங்கிக்கிடந்து எழுதுகிறார். நள்ளிரவுகளில் விழித்திருந்து எழுதும் அவரை தாயார், 'நீ இவ்வளவு நிறைய சிகரெட்டுக்களைப் பிடிக்காது ஓர் எழுத்தாளராக ஆகப் பார்' என்று சொல்கின்றார். இப்படி எழுத்தாளாராகும் கனவில் இருக்கும் மகன்களை அணைத்துக்கொள்ளும் தாய்களை போர்ஹேஸிடம், நகுலனிடமும் நாம் பார்க்க முடியும்.
 
பாமுக், பிறகு அடுத்த வெளிநாட்டுப் பயணத்தை அவர் எழுத்தாளாராகிவிட்ட அவரது இருபதுகளின் இறுதியில் செய்கின்றார். அது நிறையத் துருக்கியர்கள் இருக்கும் ஜேர்மனிக்கு ஆகும். அங்கே அவர் நிறைய இடங்களில் புத்தக வாசிப்புக்களையும் கலந்துரையாடல்களையும் செய்கின்றார். இந்தக் கூட்டங்களில் துருக்கியர்கள், அரை ஜேர்மனியர் +  அரை துருக்கியர்கள், தன்னிடம் இலக்கியம் குறித்து கேள்விகளைக் கேட்பார்கள் என்று நினைத்தால் அவர்கள் துருக்கியைப் பற்றித்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிடிருந்தார்கள் என்று சொல்லி அவர் புலம்பெயர்ந்த நாட்டில் துருக்கியர்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து எழுதுவது மிகச் சுவாரசியமானது. பாமுக் ஜேர்மனியில் எதிர்கொண்டதற்கும் எம்மைப் போன்ற ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வதற்கும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லையென்பதை நாம் இதை வாசிக்கும்போது அறியமுடியும்.

அதுபோலவே தனது எழுத்தாளர் வாழ்க்கை முழுதும் யாருக்காக எழுதுகின்றேன் என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது என்று பாமுக் கூறுகின்றார்.  இப்போது உலகளவில் தெரியும் எழுத்தாளராகிவிட்டதால் இன்னும் புத்திசாலித்தனமாக, 'நீங்கள் ஒரு நாவலை எழுதும்போது துருக்கியரை நினைத்து எழுதுகிறீர்களா அல்லது உலகளாவிய வாசகர்களை நினைத்து எழுதுகின்றீர்களா என்று கேட்கின்றார்கள் என பாமுக் நகைச்சுவையுடன் கூறுகின்றார். இந்தக் கேள்வியை பலவிதங்களில் ஆராயும் பாமுக், இறுதியில் ஒரு நாவலாசிரியர் எப்போதும் தன்னை வாசிக்கும்  ஒரு ideal வாசகரை நினைவில் வைத்தே எழுதுகின்றார் என்று ஓர் அவதானத்தை முன்வைக்கின்றார்.
*
பாமுக்கின் இந்த ஓவியங்கள் இருக்கும் குறிப்பு நூல் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்'  மிகச் சிறிய குறிப்புகளாலானது. இதில் கோவா/மும்பையில் அவரின் அப்போதைய காதலியாக இருந்த கிராண் தேசாயுடன் கழித்த குறிப்புகள் சுவாரசியமானவை. எனினும் பாமுக் தனியே தன் அறையில் விடப்படுவதையே அவரது இருபதுகளில் இருந்தே விரும்புகின்றவராக இப்போதும் இருப்பதைக் காண்கின்றோம்.

தமிழில் இந்த நூல் அல்ல, இதற்கு முன்னர் வந்த 'Other Colour' தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். அது  நல்லதொரு முன்னுதாரண நூலாக எழுதுபவர்களுக்கு பயன்படும். மேலும் தமிழில் எப்போதும் புனைவுகளை எழுதுகின்றவர்களே கொண்டாடப்படுவதான பாவனை இருக்கின்றது. பாமுக்கின் இந்த நூல்களை வாசிக்கும்போது அவர் எந்தளவுக்கு வாசிக்கின்றவராக, பிற எழுத்தாளர்களைக் கொண்டாடுகின்றவராக, அவற்றைப் பதிவு செய்கின்றவராக மட்டுமின்றி, அவரது நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் எப்படி உழைத்திருக்கின்றார் என்பதையும் அறிய முடியும்.

இந்த இரண்டு நூல்களிலும் எனக்கு மிகப்பிடித்தது பாமுக் எந்தளவுக்கு vulnerable ஆக தன்னை பொதுவெளியில் முன்வைக்கின்றார் என்பதாகும். தனக்கு எழுத வருவது என்பது,  தனித்த அறையில் நீண்ட நேரம் இருக்கும்போது அப்போது ஏற்படும் சலிப்பான/அலுப்பான (இதை நல்லவிதமாகப் பார்க்கலாம்)  சூழ்நிலையிலே என்கின்றார். எப்போதும் சலிப்புற்று, எந்நேரமும் சந்தோசத்தோடும் இருந்து எழுதுகின்றோம் என்று சொல்கின்ற நம் தமிழ் எழுத்தாளர்களை  மட்டுமில்லை, உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் உறுதியான கருத்துக்களைச் சொல்லி, தாம் சொல்வதே சரியென்று வாதிடும்  அவர்களை இந்தக் கணத்தில் நினைத்துக் கொண்டேன். 


'பென்' அமைப்பில் இருந்தபோது மட்டுமில்லை, தனிப்பட்டு தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்கப்படும்போதுதான் தான் சொல்லும் பதில்கள் சரியா என்று எப்போதும் குழப்பம் வருவதாக பாமுக் சொல்கின்றார். அப்படி தன்னை பலவீனமாக அரசியல் கருத்துக்களில் முன்வைக்கின்ற பாமுக்தான் தான் இருக்கும் நாடு, அரசு எதுவும் குறித்தும் பயப்பிடாமல், 'துருக்கியர்கள் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தினார்கள் அந்த படுகொலையில் ஒரு மில்லியன் ஆர்மேனியர்களும், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட குர்திஷ்காரகளும் கொல்லப்பட்டவர்கள்' எனச் சொல்லியிருக்கின்றார்கள்.

இதன் நிமித்தம் அவர் மீது நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் நீதிமன்றப்படிகள் அதற்காய் ஏறியபோது துருக்கியர்களால் கற்களால் எறியவும் பட்டவர். சர்வதேச எழுத்தாளர்கள், அமென்ஸ்டி நிறுவனத்தின் எதிர்ப்பால் அவர் அந்த 'துருக்கியர்களை அவமானப்படுத்தினார்' என்கின்ற வழக்கிலிருந்து வெளிவந்தாலும், எப்போதும் கொலைப்பயமுறுத்தல் காரணமாக நீண்டகாலம் பாதுகாலவருடன் திரிந்திருக்கின்றார். அதன் சில பதிவுகளை இந்தப் புதிய புத்தகத்தில் பார்க்க முடியும். அதுபோலவே துருக்கியின் அரசியல் நிலவரம் குறித்துக் கேட்கும்போதெல்லாம், அநேக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருப்பது போல துருக்கியிலும் சிறுபான்மையினருக்கு அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன என்று கூறியிருக்கின்றார்.

இன்றைக்கு பாமுக் உலகறிந்த எழுத்தாளர். அது தனியே எழுதுவதால் மட்டும் வந்தல்ல. அரசியல் உண்மைகளையும் அவர் அச்சப்படாமல் சொல்வதால் கூட வந்திருக்கக் கூடும். ஆனால் தமிழில் பாருங்கள், தங்களுக்குத்தாமே முன்னணி நட்சத்திர எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எழுத்தாளர்கள் அரசு/அரசாங்கம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதுகூட பரவாயில்லை ஒருவர் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் துயரத்தின் துளி கூடத் தெரியாதென திருவாய் மலர்ந்தார். இன்னொருவர் 'லோலிடா' போல எழுதுவதாக நினைத்து சிறுமி மீதான பாலியல் விழைவை, வரலாற்றில் இந்திய இராணுவம் சிங்களப் பெண்கள் மீது செய்யாத பாலியல் வன்புணர்வைச் செய்ததாகக் கதைகள் புனைந்து 'சங்கீதம்' பாடி எங்களை மீண்டும் எழுத்தில் கொலை செய்தார். ஆனால் இவர்கள் அனைவருக்குமே தாங்கள் எழுதுவதும், பேசுவதும் உலகத்தரமானது, ஆனால் உலகம் நம்மைக் கவனிக்கவில்லை என்பதுதான் அவர்களுக்கு பெருங்கவலையாக இருப்பதுதான் அவல நகைச்சுவை.
 

பாமுக்கின் எழுத்துக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டது (முக்கியமாக ஆங்கிலத்தில்) அவரது நாற்பது வயதுகளில். அதற்கு முன்னரே அவரது பெரும்பாலான நாவல்களை துருக்கி மொழியில் எழுதிவிட்டார். பாமுக் எழுதிய 'என் பெயர் சிவப்பு, 'பனி' போன்றவை வெளிவந்தபின்தான் அவருக்கு இலக்கியத்துக்கான முக்கியமான டப்ளின், நோபல் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன.

பாமுக் இன்றைக்கும் பெரும்பாலும் கூட்டங்களைத் தவிர்த்து தனித்து இருக்கவே விரும்புகின்றார். ஒருவேளை பாமுக்கு இன்றிருக்கும் புகழ் வந்திருக்கா விட்டால், அன்று இருபதுகளில் எழுத்தாளர் ஆவதே கனவு என்று முடிவெடுத்த அவர் இப்போது எப்படி இருந்திருப்பார் என யோசித்துப் பார்க்கின்றேன். சிலவேளை தனது கடைசிக்காலம் வரை கவனிக்கப்படாத ரொபர்தோ பொலானோ போல, போதிய புகழ் வெளிச்சம் கிடைக்காவிட்டாலும்,   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவராக பாமுக் நிச்சயம் இருந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

சிலரின் இளவயதுக் கனவுகள் மிகத் துணிச்சலானவைதான். துருக்கியில் புத்தகங்கள் வாசிக்காமல் இருப்பது என்றால்தான் சாதாரணமானது. கொஞ்சம் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தாலே அவர்கள் பிறழ்ந்த மனதுடையவர்கள் எனச் சொல்லக்கூடிய சூழல் என்று பாமுக் கூறுகின்றார். அவ்வாறான ஓரு சூழலை அறிந்தும் முழுநேர எழுத்தாளராக இருக்க ஒருவர் இளமையிலே முடிவுசெய்தார் என்பது வியப்புக்குரியதுதான்.

நமக்கு பிற நாட்டு/கலாசார புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் நாட்டில் எழுத்தாளர்களை அப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற மாயை இருக்கின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் (தமிழை விட) எழுத்தாளாராக இருப்பது  அவலமானதாக இருக்கின்றது என்பதே யதார்த்தம். பாமுக் கூட அவரின் ஏதோ ஓர் உரையில், என்னை வாசிப்பவர்கள் எங்கள் நாட்டில் மிகக் குறைவானவர்கள் என்று குறிப்பிட்டுக் கவலைப்பட்டிருப்பார்.

எனவே தமிழில் எழுதுகின்றவர்கள் தம்மை நமது சூழல் கவனிக்கவில்லை என்று கவலைப்படுவதைவிட, நாம் தமிழுக்கு புதிதாக எழுத்தால் என்ன வளத்தைக் கொண்டுவந்தோம், சமகால உலக இலக்கியப்பரப்பில் இருந்து எவற்றை   புதிதாக இங்கே அறிமுகப்படுத்தினோம் என்று சிந்திப்பது தமிழுக்கு மட்டுமில்லை, அவர்களை வாசிக்கும் நமக்கும் நன்மை பயக்கும்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 136

Thursday, March 12, 2026

 

ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்'

ஒரு செவ்வியல் பிரதி என்பது அதை வாசிக்கும்தோறும் புத்தம் புதுத் திசைகளை அறிமுகப்படுத்தியபடி இருக்க வேண்டும். அதுபோலவே அவை எழுதப்பட்ட காலத்தைத் தாண்டித் தோன்றுகின்ற புதுத் தலைமுறைகளிடையேயும் நீர்த்துப் போகாது இருக்க வேண்டும்.

நான் பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட ஓரு படைப்பாளியின் புதினங்களை  வாசிக்கும்தோறும், ஏதோ எனக்காக, என் தலைமுறைக்காக எழுதப்பட்டதாக நினைத்துக் கொள்வதுண்டு.அது ஆதவனின் 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' ஆகும்.

நான் என் பல்கலைக்கழகக் காலம் முடியும்தருவாயில் காகிதமலர்களை வாசித்துத் திகைத்திருக்கின்றேன். அதேயளவு நெருக்கத்தை 'என் பெயர் ராமஷேசனும்' எனக்குத் தந்திருக்கின்றது.
 


இரண்டுமே பதின்மங்களிலும்/இருபதுகளிலும் இருக்கின்ற இளைஞன் ஒருவனின் கதையெனச் சொல்லலாம். இரண்டுமே ஒன்றோடொன்று எங்கோ இணைந்து கொள்கின்ற கதைகள் எனவும் கருதிக் கொள்ளலாம்.

சிலநாட்களுக்கு முன் 'என் பெயர் ராமஷேசனை' மீண்டும் வாசித்து முடித்தேன். இந்நாவல் மீதான என்னுடைய ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ வாசிப்பாக இது இருக்கலாம். ஆனால் என் வாசிப்பில் அலுக்காக ஒரு பிரதியாகவே இன்னுமிருப்பது வியப்பாக இருந்தது. வேண்டுமெனில் இந்நாவலின் பிற்பகுதி கொஞ்சம் (திரைப்பட இயக்குநரின் பகுதி) இழுபட்டது என்று சொல்வதைத் தவிர வேறெந்தக் குறையும் இல்லை.

இந்நாவலில் வரும் ராமஷேசன் சந்திக்கும் மாலா, பிரேமா போன்ற பெண்களை ஏதோ ஒரு காலத்தில் சந்திக்காத ஆண்கள் குறைவாகவே இருப்போம். அதுபோலவே பெண்களைக் கவர்வதற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகளையும், அதற்குப் பின்னாலிருக்கும் நம் சனாதன முகங்களையும் நாமே நம்மில் பல தடவைகள் பார்த்திருப்போம்/இரசித்திருப்போம்/ வெறுத்திருப்போம். பின்னர் இதுதான் நம் அசலான முகமெனத் தெளிந்து, இந்த வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தைக் காலத்தின் நீட்சியில் கண்டடைந்திருக்கவும் செய்திருப்போம்.

ஆதவன், என் பெயர் ராமஷேசனை எழுதியபோது நான் பிறக்கவேயில்லை. ஆனால் நான் இதில் வரும் ஆண் சந்திப்பது போலவே பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். குழப்பங்கள் உள்ள மனிதனாக பெண்களின் உறவுகள் சார்ந்து அந்த வயதுகளில் இருந்திருக்கின்றேன். சரியான அல்லது தவறான முடிவுகளை நம் கற்பிதங்களின் நிமித்தம் பெண்கள் சார்ந்து எடுத்துமிருக்க்கின்றேன்.

ஆக இன்னமும் பிறக்காத ஒரு தலைமுறையும் இதே இருத்தலியச் சிக்கல்களை எதிர்கொள்ளுமென ஒரு பிரதி உங்களுக்காக அடுத்த தலைமுறையில் காத்துக் கொண்டிருப்பதென்பது எவ்வளவு அருமையானது.


ஆதவன் அவரது நாற்பத்தைந்து வயதில் சிருங்கேரியில் நின்றபோது துங்கபத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டவர். ஆனால் நானோ ஆதவனை அவர் தன்னைத்தானே இந்த வாழ்விலிருந்து கைவிட்டபோது அவராகவே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கற்பனை செய்வதுண்டு. ஏனெனில் ஆதவனின் படைப்புக்களை வாசிக்கும்தோறும் அவர் நீரிலே அலைந்து போகின்ற ஒரு இலையைப் போன்ற மனதுடையவர் என நான் நினைப்பதுண்டு.

அவ்வாறு நீரின் போக்கில் இலை சென்று கொண்டிருந்தாலும், இலைக்கென்று ஒரு தனித்துவம் இருக்குமல்லவா? ஆனால் நீரின் போக்கில் மிதப்பதால் இலைக்கு என்றும் ஒரு கதை இருக்குமென்பதை மறந்து போய்விடுபவர்களாக நாம் இருப்போம். அவ்வாறுதான் ஆதவனுக்கு அவரளவில் அவர் நமக்கு ஒருபோதும் சொல்லாத பெருங்கதை, 'இலை' போல அவருக்குள்ளே அலைந்தபடி இருந்திருக்கும் என நான் நினைப்பதுண்டு.

என் பெயர் ராமஷேசனில் வரும் ராமுக்கு மாலா என்கின்ற அழகான பெண்ணோ அல்லது பிரேமா என்கின்ற அறிவுஜீவிப் பெண்ணோ தராதா ஏதோவொன்றை அவனது மாமியாரான் பங்கஜம் மாமி கொடுக்கின்றார். ஆனால் அவனது எல்லா அறிவுஜீவி/முற்போக்கு/புரட்சிகர ஆண் முகமூடிகளையும் அவனது தங்கை இன்னொரு ஆடவனோடு இருட்டில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் காணும்போது  அவ்வளவு எளிதில் உதிர்ந்துவிடுகின்றன.  

'இந்த தடியன்களை எனக்குத் தெரியும். இவன்களுடைய கீழான எண்ணங்களும் வழிமுறைகளும் தெரியும்' என்று ராமசேஷன் சொல்வது, பிற ஆண்களைப் பற்றியல்ல, தன்னைப் பற்றித்தான் என நாம் புதினத்தின் இறுதியில் கண்டு புன்னகைக்கின்றோம். இதுவரை ராமஷேசன் பிறரை விமர்சித்ததும், தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டவையும், இறுதியில் இந்தளவு அற்பத்தனத்துக்காகத்தானா என்று ஆதவன் சொல்ல வைக்கும்போதுதான், இப்பிரதியை வாசிக்கும் நம் ஒவ்வொருவரினது முகமூடிகள் கழன்று விழத் தொடங்குகின்றன.

அது நம்மை இன்னும் பதற்றப்படுத்தச் செய்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாது, இளமை நம் மீது கவிழ்த்திய கற்பிதங்களை நோக்கிச் சபிக்கத் தொடங்குகின்றோம்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 134

Saturday, March 07, 2026

 

இ.ஜீவகாருண்யனின் 'தேடலும் விமர்சனங்களும்..' நூலை அது வெளிவந்த காலத்தில் (2009) மேலோட்டமாக வாசித்திருக்க வேண்டும். பின்னர் இப்போது அதை முழுமையாக வாசித்துவிட்டு நண்பர் எமிலைத் தொடர்புகொண்டு ஜீவகாருண்யன் இதில் எழுதுவதாகச் சொன்ன 'மு.த(ளையசிங்கம்) - ஒரு நோக்கு' என்ற நூலை எழுதிவிட்டாரா, அப்படி எழுதியிருந்தால் அதை எப்படியாவது நாங்கள் பதிப்பிக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஜீவகாருண்யனின் பிற்காலத்தைய ஆக்கங்களில் அநேகம் எமில் ஆசிரியராக இருக்கும் 'கலைமுகம்' இதழில் வெளிவந்திருக்கின்றன. ஜீவகாருண்யனுக்கு இப்போது வயது எண்பதுகளைத் தாண்டிவிட்டது, எனவே எதையும் எழுத முடியாதிருக்கின்றார் என்று எமில் சொல்லியிருந்தார்.

ஜீவகாருண்யன், மு.த(ளையசிங்கம்), சு.வி(ல்வரத்தினம்), மு.பொ(ன்னம்பலம்), எம்.கே.மகாலிங்கம் போன்றவர்களுடன் 70/80களில் நெருக்கமாகப் பழகிய ஒருவர். மு.தவின் 'சர்வ மத சங்க' பிரார்த்தனை/தியான வகுப்பில் கலந்து கொண்டவர். அந்தவகையில் இன்றைக்கு அந்தப் பரம்பரையில் இறுதியாட்களாக ஜீவகாருண்யனும், மகாலிங்கமும் மட்டுமே இருக்கின்றனர் என நினைக்கின்றேன்.



இன்றைக்குக் கூட மு.தளையசிங்கம் 1973 மரணமாகும்வரை அந்த 'சர்வமத சங்க' விடயங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நம்புகின்றேன். ஒரு படைப்பாளியை அவரின் ஆக்கங்கள் மட்டுமில்லை, அவரைப் பற்றிப் பேசும் சிறந்த விமர்சகர்கள்/வாசகர்கள் கிடைப்பதும், அவர்கள் அந்தப் படைப்பாளியையும், படைப்புக்களையும் தொடர்ந்து பேசும்போது மட்டுமே அப்படைப்பாளி காலத்தில் முன் நிறுத்தப்படுவார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். மு.தளையசிங்கத்தை முன்னிறுத்த அவரின் சகோதரர் மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் போன்றோர் இருந்திருக்கின்றனர். எஸ்.பொ(ன்னுத்துரை)வுக்கு அவரின் அணுக்க நண்பரான ரஹ்மான் அமைந்தது அவரின் நல்லூழ் எனச் சொல்லவேண்டும்.

இந்நூலிலும் ஜீவகாருண்யன், மு.தவைப் போன்ற ஓர் ஆளுமையை தன் வாழ்நாளில் சந்தித்தில்லை என்று சொல்கின்றார். 'முதல் சந்திப்பின்போது பிரமித்துப் போனேன். உண்மையும் உறுதியும் வீரமும் கொன்ட அப்படியான ஒருவர் 'மனித வடிவில்' இருக்கமுடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. கண்களிலே ஒளி, பேச்சிலே தீட்சண்யம், கருத்துகளில் தெளிவு, முகத்திலே ஒரு பிரகாசம். இந்த உலகினில் எதையோ சாதிக்கப் பிறந்தவராய் என்னுள் பிரமாண்டத் தோற்றத்தை எழுப்பினார் என் முதல் சந்திப்பிலே' என்று எழுதிச் செல்கிறார்.

அப்படி மு.தவிற்குப் பிறகு எவ்வித விமர்சனமும் இன்றி ஜீவகாருண்யன் ஏற்றுக்கொண்ட எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சு.ராவுக்கு எழுதும் கடிதத்தில் கூட 'நான் முதன்முதலில் சந்தித்த உண்மையான மனிதன் மு.தளையசிங்கம். நான் இன்றுவரை சந்தித்த உண்மையான மனிதனும் அவர்தான், இன்னுமொருவரை அப்படித் தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் கிடைப்பாரா?' என்று கூட மு.தவை குறிப்பிட்டிருக்கின்றார்.


ஜீவகாருண்யனின் எழுதவும், அவரின் எழுத்துக்களைத் திருத்திய ஒருவராக அ.யேசுராசா இருப்பதையும், அ.யேசுராவின் எழுத்துக்களுக்கு எதிராக அன்றைய காலங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு திருப்பி பதில் கொடுக்கும் ஒரு தீவிர வாசகராகவும் ஜீவகாருண்யன் இருந்திருப்பதை இந்நூலில் இருக்கும் கட்டுரைகளினூடாக பார்க்க முடியும்.

இதில் ஜீவகாருண்யன் சு.வில்வரத்தினம் மறைவையொட்டி எழுதும் நீள்கட்டுரையும், சண்முகம் சிவலிங்கத்தின் 'நீர் வளையங்கள்' தொகுப்பை முன்வைத்து எழுதிய வாசிப்பும் முக்கியமானவை.

ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி படைப்பாளியின் படைப்புக்கள் மட்டுமல்ல, அவரோடு ஊடாடிய மற்றவர்களின் அனுபவங்களும் இன்னும் செழுமையை ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கக் கூடுமென்பதற்கு, இந்த நூலில் ஜீவகாருண்யன் சு.வி, சசி போன்றவர்களின் படைப்புக்களினூடு அவர்களுடனான அனுபவங்களைப் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சு.வில்வரத்தினம் எந்தந்த காலகட்டத்தில் எந்தந்த அவரது கவிதை நூல்களை வெளியிட்டார் என்பதும், சசியுடனான ரயில் பயணத்தில், யாரோ ஒருவர் இவர்களின் இருக்கையை எடுத்துவிட, அவரை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் பேசி இருக்கையை ஜீவகாருண்யனுக்குக் கொடுத்த சண்முகன் சிவலிங்கத்தின் ஓர்மத்தையும் இந்நூலை வாசிக்கையில் அறிய முடியும்.

ஏஜே என்கின்ற அருமையான மனிதரைப் பற்றியும், 'க.கைலாசபதியைப் பற்றிய எனது கட்டுரையை வாசித்துவிட்டு அவர் (ஏஜே) சொன்னார், கைலாசபதியைக் குறைகூறுவதற்கு நியாயங்கள் இருந்தாலும் அவரிடம் ஆக்கபூர்வமான பக்கம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களை உள்வாங்கி, வரவழைத்துத் துரைத்தனமற்ற ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார். எனவே அதை ஏற்றுக்கொண்டு, கைலாசபதியை முற்றாக ஒதுக்குவதாக இல்லாமல் எழுதினால் நல்லது என்றார்' என்று ஜீவகாருண்யன் எழுதுகின்றார்.

அதுவே ஜீவகாருண்யன் அவருக்கு இன்னொருமுனையில் இருந்த மார்க்சியரான சண்முகம் சிவலிங்கத்தைச் சந்திக்கின்றபோது 'எந்தத் தர்க்கத்தின்போதும், கருத்துகளுக்குப் பின்னாளுள்ள உன்னத மனிதனை நேசிக்க வேண்டும் என்று ஏ.ஜே.கனகரத்ன சொல்வார்' என்று நினைவுகூரவும் செய்கின்றார்.

இன்னொரு பொழுதில், சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மீதான பிடிப்பால் ஜீவகாருண்யன் வெங்கட் சாமிநாதனை இந்தியாவில் சந்திக்கின்றபோது, சு.வியின் கவிதைகளை நிராகரித்துப் பேசுகின்ற வெங்கட்சாமிநாதனோடு எதிர்வினையாற்றுகின்றார். அதை வெசா அன்றைய 'காலம்' இதழில் எழுதியபோது, அதற்கும் எதிர்வினையாற்றி சு.வில்வரத்தினத்தை கைவிடாது ஓர் உண்மையான நண்பராக இருந்திருப்பதையும் நாம் அவதானிக்க முடியும்.

அதுபோலவே சுந்தர ராமசாமியை நிராகரித்து ஒரு கட்டுரையை யதீந்திரா எழுதுகின்றபோது அதற்கு நிரம்பிய தரவுகளோடு சுந்தர ராமசாமியின் ஆளுமையை ஒரு கட்டுரையினூடு நிரூபிக்கவும் செய்கிறார்.

ஜீவகாருண்யன் அவருக்கிருந்த வாசிப்புகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்ப அவ்வளவு நிறைய எழுதியவரல்ல. ஆனால் கொஞ்சமாக எழுதினாலும் காத்திரமாகவே எழுதியிருக்கின்றார். அவரின் சொந்தப்படைப்புக்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதைத்தாண்டி அவரொரு சிறந்த வாசிப்பாளராகவும், அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களை கைவிடாத நல்லதொரு வாசகராகவும் இருந்திருக்கின்றார் என்பதையே இந்த நூல் ஒருவகையில் நிரூபிக்கின்றது.

ஜீவகாருண்யனைப் போன்றோரை இந்தத் தலைமுறையில் காண்பது அரிதென்பதால் அவரைப் போன்றோரை நாம் கவனப்படுத்த மட்டுமில்லை நாம் இப்படிப்பட்டவர்களை இந்தக்காலத்தில் உருவாக்கவும் வேண்டியிருக்கின்றது.

***