கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label பேயாய் உழலும் சிறுமனமே. Show all posts
Showing posts with label பேயாய் உழலும் சிறுமனமே. Show all posts

'பேயாய் உழலும் சிறுமனமே' - கட்டுரைகளின் தொகுப்பு குறித்து

Saturday, May 18, 2024

 

இளங்கோ, தனித்து இயங்கும் படைப்பாளி. அடிப்படையில் நான் அவரது எழுத்தின் வாசகன். எனக்குப் பிடித்தமான எழுத்துகளில் அவருடையதும் உண்டு. அதற்கு முக்கியமான காரணம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். வாசிக்கிறவர்களுக்கு விடலைத்தனமான எழுத்து என்று தோன்றக்கூடும்; ஆனால் அப்படியல்ல, அழுத்தந்திருத்தமாகத் தன் கருத்துகளைப் பகிரக்கூடியவர். வெற்றுக் பந்தாக்களும், வெளிச்ச ஒளி வட்டங்களும் ஏற்படுத்திக் கொள்ளாதவர். அவருடைய கட்டுரைகளை மெய்ப்பு நோக்கும் பொருட்டும், திருத்தும்பொருட்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்ததில் என்னளவில் நுட்பமாக கவனித்த ஒரு விஷயம், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அக்கறை ஏதுமின்றி அவர் பதிந்திருக்கும் விஷயங்கள். குறிப்பாக, என்னை மிகுந்த சிந்தனைக்குள்ளாக்கியது ‘சில ‘அரசியல்’ பிரதிகள்’ என்ற கட்டுரை. ஈழம், புலம்பெயர்வு, தமிழர் நிலை என்பதை எழுத்தாக்கும்போது அதைத் தங்களுக்கான அடையாளமாகவும், அனுகூலமாகவும் செய்து கொண்டிருக்கிற பலரை இன்று என்னால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படியான அடையாளச் சிக்கல்கள், விளம்பரப்படுத்தல்கள் ஏதுமின்றி, எந்தவித கட்டாயங்களுமின்றி தன்னைப் பதிவு செய்திருக்கிறார் இளங்கோ. ‘பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என தன்னை பாதித்த, தான் சந்திக்க நேர்ந்த, வாசித்த, அனுபவித்த விஷயங்களைப் பற்றி விருப்பு வெறுப்பற்றபதிவாக எழுதியிருக்கிறார். ‘பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற இளங்கோவின் கட்டுரைத் தொகுப்பு அகநாழிகை வெளியீடாக அடுத்த மாதம் வெளிவருகிறது.

பொன். வாசுதேவன்

படைப்புக்கள் குறித்து பா.அ.ஜயகரனின் குறிப்பு

Friday, February 04, 2022


ளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முன்பே தனிக் கவிதைகளாக சிலவற்றை வாசித்திருந்தேன். அவரது கவிதை மொழி எனது கவனத்தை ஈர்த்தது. ஈழத்தின் போர் அனுபவங்கள், புலம்பெயர் வாழ்வபனுவங்களை அவர் கவிதைகள் நுட்பமாக வெளிப்படுத்துவபன.

வாழ்வு என்பது அலைவுதான். அந்த அலைவின் நினைவை எவராலும் மறக்க முடியாது. குறிப்பாக படைப்பாளிகளினால் அவற்றை கடந்து செல்ல முடியாது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களில் புலம்சார் விடயங்கள் தவிர்க்க முடியாதது. வாழ்வின் மிக முக்கிய தருணங்களை புலம்சார் நினைவுகள் சுமந்திருக்கின்றன. அதன் வலியை கடப்பதற்கும் நாம் எழுதியே ஆகவேண்டும். மறத்தலுக்கு எதிரான இயல்பான செயற்பாடு அது. புலம்பெயர் இலக்கியத்தின் மிகமுக்கியமான ஓட்டமாக அதை அவதானிக்க முடியும். புலம்பெயர் இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு அந்த புரிதல் மிகமுக்கியமானது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு நமது காலத்தின் அதிர்வை, அலைவை, வலியை சுமந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது அவற்றைக் கடத்திக்கொண்டும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இவரது சிறுகதைகளையும் அணுக முடியும். 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைகளிலும் புலம், புலம்பெயர்வு குறித்த எம் வாழ்வின் அலைதலை தரிசிக்க முடியும். வாசிப்பும், தேடலும், அனுபவமும் அவரை சிறந்தவொரு கதை சொல்லியாக செப்பனிட்டிருக்கிறது. அதை அவரது கதைகளுக்கூடாக பயணித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
அவரது வாசிப்பும், தேடலும், தேர்வும் எம்போன்ற வாசகர்களுக்கு புதிய விடயங்களை தந்து கொண்டிருக்கின்றன. வாசிப்பு என்பது 'மெல்ல இனிச் சாகும்' என்ற நிலையில் உள்ள என் போன்றோருக்கு சில பக்கங்களை காட்டிச் செல்கிறார். அதனால் நாமும் தேடி வாசிக்க உந்தப் படுகின்றோம். புத்தகம், பயணம், திரைப்படம், இசை விமர்சனங்கள்-அறிமுகங்கள் என்பன அவரது எழுத்தின் முக்கியமான இன்னொரு பக்கம். 'பேயாய் உழலும் சிறுமனமே' அவரது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இலக்கியப் புனைவுகளுக்கு அப்பால் எழுத்தில் நிகழவேண்டிய பன்முகப் போக்கை காட்டுகிறது.
இவ்வகைய பன்முக எழுத்து எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இளங்கோவுக்கு அது வாய்த்திருக்கிறது. இவரின் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்கள், அறிமுகங்கள், ஏனைய இலக்கிய-அரசியல் விவாத எழுத்துக்கள் மிக முக்கியமானவை. இவை காழ்ப்புணர்வு சார்ந்தவை அல்ல. இலக்கியத்தில் நிகழவேண்டிய ஆழமான உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாகவே நான் கருதுகிறேன். அத்தகைய ஆரோக்கியமான களத்தின் அவசியம் நமக்கு இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களை 'வேலிச் சண்டை'யாக்கக் கூடியவர்களால் நாங்கள் சோர்ந்து போய் இருக்கிறோம். திறனாய்வுக்கு திறந்த மனமும் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது. அவரின் அபுனைவு எழுத்துக்கள் தொடரவேண்டும்.
அண்மையில் இளங்கோவின் 'மெக்ஸிக்கோ' நாவலை வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின்னர் ஒரு நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். பாராட்டு இருவருக்கும். இறந்தகால ஆணும், நிகழ்காலப் பெண்ணும் எக்காலமும் இருக்கும் நிலத்தை தரிசிக்க முயலும் நாவல் என்று இதைச் சொல்லிவிட முடியும். தரிசிப்பு என்பதை நான் அழுத்திச் சொல்லவிரும்புகிறேன். தரிசனம் உள்ளார்ந்தமானது. அதை அடைவதென்பது ஒரு நிலைப்பட்டதோ அல்லது ஒரு போக்கைச் சார்ந்ததோ அல்ல. பன்னிலைகளில் நிகழ்வது. நம்மைக் கடத்தல், மற்றோரை அணுகுதல், காதல், காமம், நினைவைப் பேசுதல், பண்பாட்டைப் பேசுதல், தன்னைப் பேசுதல், பயணம், தனிமை என நாவலின் பல்வேறு அடுக்குகளுக்கூடாக தரிசனத்திற்கான வெளி இருந்து கொண்டேயிருக்கிறது. அவரின் ஆதர்ச எழுத்தாளர்களின் பயண அனுபவ எழுத்துகள் இந் நாவலுக்கு உந்துதலாக இருந்திருக்கக்கூடும். இன்றைய இடர்காலத் தனிமை, பயணம்பற்றிய நித்திய வேட்கை என்பன 'மெக்ஸிக்கோ' நாவலை இன்னும் நெருக்கமாக்கி நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

-பா.அ.ஜயகரன்

நன்றி: முகநூல்

சுகுமாரனின் உரை

Wednesday, June 12, 2019

கனடாவில் நிகழ்ந்த 'பேயாய் உழலும் சிறுமனமே' வெளியீட்டு விழாவில் சுகுமாரனின் சிறப்புரை



பேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு

Saturday, January 27, 2018







இளங்கோவின் “பேயாய் உழலும் சிறுமனமே” -மைதிலி தயாநிதி

Wednesday, December 06, 2017

“பேயாய் உழலும் சிறுமனமே” என்று பாரதியின் பாடல் வரியினைத் தனது தலைப்பாக வரித்துக்கொண்ட இளங்கோவின் நூல் அகநாழிகை வாயிலாக 2016 செப்தெம்பரில்  வெளிவந்துள்ளது.  இது 2004 -2014 ஆண்டுகாலப் பகுதியில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதப்பட்ட  30 கட்டுரைகளை  ஏறத்தாழ 185 பக்கங்களில்  உள்ளடக்கியிருக்கும் ஒரு கட்டுரைத்தொகுப்பாகும்.  அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்று  ஆறு பகுதிகளாக இக்கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன.   ஓரிடத்தில் நில்லாது அலைந்து கொண்டிருக்கும் பேய் மனதின் எண்ணக் கருக்களின் சொல்வடிவமே இக்கட்டுரைகள் எனலாம்.   

போரும், அதன் வலியும், வடுவும் நிறைந்த பிள்ளைப்பருவ ஞாபகங்கள் பொதிந்த அனுபவக் கட்டுரைகளை முதலாவது பகுதியாக நூலில் வைத்துள்ளமை, அத்தகைய நினைவுகளினூடாக நூலின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான தொடர்பையும், அவை ஒவ்வொன்றுள்ளும் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகளுக்குமிடையிலான தொடர்பையும் கட்டமைத்துக் கொள்ள உதவுகின்றது.    இராணுவ அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் வதிந்த  நூலாசிரியரின் பால்ய அனுபவங்கள் கனேடிய பல்லின சமூகத்தில்  சமூக, அரசியல் மையங்களினால் ஒடுக்கப்படுபவர்களின்  நிலைப்பாடுகளினை ஆதரித்துக் குரல் எழுப்புவராக அவரைப் பரிணமிக்க வைத்திருப்பதை புலம்பெயர்வு தலைப்பின் கீழ்  உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.   தீவிர வாசகராகத் தன்னை அடையாளம் காட்டும் ஆசிரியர், போரை மையமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் பின்னர் எழுந்த ஈழத்திலக்கியம், போர் குறித்த அபுனைவுப் பிரதிகள் என்பன பற்றி அலசல், வாசிப்பு  பகுதிகளில் பதினொரு கட்டுரைகளைத் தந்திருப்பதுடன், போரினைப் பின்புலமாகக்  கொண்டு சிங்கள-தமிழ் மக்களின் உறவினைச் சித்திரிக்கும் சிங்கள இயக்குனர்களின் திரைப்படங்களுக்கான விமர்சனங்களையும், ஒடுக்கப்பட்டவரின் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான இசை பற்றிய அறிமுகத்தையும் (மாயா, ‘ராப்’ பாடல்களினூடு சிறுபயணம் ) எழுதியுள்ளார்.

கவிஞனாயும், (நாடற்றவனின் குறிப்புகள் , 2007), சிறுகதை (சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் , 2012), பத்தி எழுத்தாளனாயும் விளங்கும் நூலாசிரியருக்கு மொழி வசப்படுகிறது என்பது ஆச்சரியம் அளிக்கும் விடயம் அன்று.  தெளிவு, சொற்றிறம், தடையற்ற மொழி ஓட்டம் எனும் அம்சங்களை இவர் எழுத்தில் அவதானிக்கலாம். மிகுந்த அவதானிப்புகளைப் பிரதிபலிக்கும் இவரின் இளமைப்பருவ வர்ணனைகளில் போர் ஏற்படுத்திய பீதி உறைந்திருப்பினும்,  மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூருங்கால் ஏக்கத்தின் (nostalgia)சுவடுகளையும்   காணக்கூடியதாக உள்ளது. இவரின் எனக்கான தெருக்கள் முதலாவது கட்டுரை  மாறுபட்ட பண்பு கொண்ட  இருவகையான தெருக்களை அருகருகே வைத்துப் பேசுதல் (contrast) மூலமாக  போரின் கொடுமையினையும், அவலத்தினையும் வெளிக்கொணர்கிறது.  போரின் வலிகள் எனும் நாரில் இவ்வனுபவக் கட்டுரைகள் கோர்க்கப்பட்டிருப்பினும், போரின் நிழல்படியாத நினைவுக் குவியல்களாக யாழ்ப்பாணத்து அழகிய மழைக்கால வர்ணனை இடம்பெறுகின்றது.   மேலும், வளர்ப்புப் பிராணிகள் மழைக்காலத்தில் வீட்டு விறாந்தைக்கு இடமாற்றப்படுவது பற்றிய குறிப்பு  இக்கட்டுரையில்  காணப்படும் அதே சமயம், கட்டுரையாசிரியர்  குடும்பமே போர் காரணமாக இடம் பெயர்வது குறித்து அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள வாளின் நுனியில் சிதறும் வாழ்வு எனும் கட்டுரை பேசுகிறது.

வாசித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள் என்பன பற்றிய கட்டுரைகளில் அவரின் தர்க்க ரீதியிலான அணுகுமுறையினை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன், சரிசமநிலையுடைய  பார்வையினை  (balanced view) எல்லாக் கட்டுரைகளிலுமே அவர் தர முயன்றிருக்கின்றார்.  விசேடமாக, அசோகஹந்தகமவின்  இனி அவன் என்ற திரைப்பட விமர்சனம், வரலாற்றின் தடங்களில் நடத்தல் எனும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாக இவர் எழுத்து தன் கருத்தை வலுவாகக் கூறித் தன்பால் வசப்படுத்தும், persuasive எழுத்து. தர்க்கரீதியாக விடயத்தை அணுகினும் விவாதங்களையும், விமர்சனங்களையும் சிலசமயங்களில் உணர்ச்சிகரமான மொழியில் முன்வைக்கின்றார் போல் எனக்குப் பட்டது. இது அவர்  தனது வாசகர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இருக்கக்கூடும்.  பலசமயங்களில் வாசகர்களே எழுத்தாளனின் மொழிநடையினைத் தீர்மானிக்கின்றனர்.

அத்துடன்,  இவரது பெரும்பாலான கட்டுரைகளில் இறுதிப் பந்தி மிக முக்கியமானதாக அமைகின்றது.  கட்டுரையில் ஆராயப்பட்ட நூலின் முக்கியத்துவம்,  நூலிலிருந்து வாசகர் பெறக்கூடிய செய்தி, நூல் பற்றிய மதிப்பீடு, அந்நூல் அல்லது அது கூறும் விடயம் குறித்த மறுபார்வை என்பவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.

இவர் எழுத்துகள் அனைத்திலும் ஊடே ஓடிக்கொண்டிருக்கும், இவரின் கட்டுரைகளினை வழிநடத்தும்  விழுமியங்கள்  இன, நிற, மத, சாதி, வர்க்க, பால், பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதரை மதித்தல்,நேசித்தல்,  மனிதரைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழிக்கும் போருக்கும், எதேச்சாதிகாரத்திற்கும்  எதிரான நிலைப்பாடு,  இயற்கையை ஆராதித்தல், விட்ட பிழைகளுக்கான கூட்டுப்பொறுப்பு  என்பனவாகும். இத்தகைய மானுடம் சார்ந்த விழுமியங்களால் இவர் எழுத்துகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
.  
இனி, இவர் நூல் பற்றிய எனது மறுபார்வையச் சுருக்கமாக  இங்கு பதிவு செய்கிறேன்.  முதலாவதாக, கட்டுரைகள்  சிலவற்றினைக் கால ஓட்டத்திற்கேற்ப மீள்பார்வை செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.  எடுத்துக்காட்டு: சமகால ஈழத்து இலக்கியம் (2010),  சில அரசியல் பிரதிகள் (2012).  

மேலும்,  இந்நூலின் 46-47 ஆம் பக்கங்களில் காணப்படும் A Second Sunrise எனும் தொகுப்பிலிருக்கும் colour எனும் கவிதை பற்றிய நூலாசிரியரின் விமர்சனம் கவனத்தை ஈர்க்கிறது.  இக்கவிதை நிறம் எனும் பெயரில் ஏற்கனவே  மீண்டும் கடலுக்கு எனும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பே என்கிறார் நூலாசிரியர்.  Colour எனும் ஆங்கிலக் கவிதையை நான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.  ஆனால் அது நிறம் எனும் கவிதையின் விசுவாசமான மொழிபெயர்ப்பு எனில், அது வீடற்ற மனிதர்கள் அனைவரையும்  மாறாநிலைப்படுத்துகின்றது  (sterotyping)  என்றோ, வீடற்ற எல்லா விளிம்பு நிலை  மனிதர்கள் பற்றிய விமர்சனமோ என்று கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.  

காட்டுப்பச்சை இராணுவத் தொப்பியுடனும், நீலக்கண்களுடன் இருந்த முதிய வீடற்ற தனிமனிதன் ஒருவன் visual minority சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மீது இனவாத இழிசொல்லொன்றை வீசுகின்றான் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த வசைச் சொல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட சமூகங்களை இழிவுபடுத்தும் சொல். ஆனால் அதைக் கூறியவனுக்குக் கவிதையில் விசேட அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவனை வீடற்ற, இரந்து காசு கேட்கும் விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக, அக்கவிதையை மூலமொழியில் வாசிக்கும்போது என்னால் பார்க்கமுடியவில்லை.

அடுத்ததாக,  with you without you   என்ற பிரசன்ன விதானகேயின் திரைப்படம் குறித்து,நூலாசிரியரின் விமர்சனத்திற்குச் சார்பாக ஒரு கருத்தினைக் கூற விழைகின்றேன்.   சூழ்நிலை காரணமாக நடுத்தரவயது சிங்கள அடகுபிடிப்பாளரை மணமுடிக்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தற்செயலாகத் தனது கணவனின் கடந்தகாலம் பற்றி அறிகிறாள். இதன்பின்னர்  அவனுடன் சுமுகமாக வாழ்க்கை நடத்தவியலா நிலையில் ’ விபரீத முடிவொன்றினை’ எடுக்கின்றாள்.  இப்படம் பற்றி நூலாசிரியர் “இது இரண்டு தனி மனிதர்களின் சிக்கலான வாழ்க்கை என்பதை விட இன்னும் சற்று விரித்துப் பார்த்தால் இரண்டு இனங்களுக்கிடையிலான முரண்  என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  இன்று ஈழத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாழ்ந்து விடலாம் என்கிற மேலோட்டமான அறைகூவலை எவ்வித பிரசார நொடியும் இல்லாது இந்தத் திரைப்படம் அடித்து நொறுக்கி விடுகின்றது.” என்று கூறுகின்றார்.  

இந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதே. எனினும், இத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர் என் மனதில் எழுந்த கேள்வி,  ”அந்த இரு தனி மனிதர்கள் ஏன் சிங்கள ஆணாகவும், தமிழ்ப் பெண்ணாகவும் இருக்கவேண்டும்? சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் ஏன் இருந்திருக்கக்கூடாது?” என்பதுதான்.  சிங்கள-தமிழ் கலப்புத் திருமணம் தொடர்பாக புலமைசார் கட்டுரைகள் யாதேனும் உள்ளனவா என நான் தேடும்போது 2003 இல் வெளியிடப்பட்ட   Feminists under fire: Exchanges across war zones என்ற நூலில் நெலுகா  சில்வா    The politics of intermarriage in Sri Lanka in an era of conflict  (147-156) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை கிடைத்தது.  ஸ்ரீலங்கா தொலைக்காட்சிநாடகங்களில் சிங்கள-தமிழ் கலப்புத்திருமணம் பற்றிய சித்திரிப்பு பற்றி இதில் இவர் எழுதுகிறார்.  சிங்கள-தமிழ்க் கலப்புத் திருமணம் முதலில் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவரால் ஆதரிக்கப்படாதிருந்தபோதிலும்,   1998 க்குப் பிற்பட்டு வெளிவந்த  தொலைக்காட்சி நாடகங்களில் அதற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க சாதகமான போக்கினை அவதானிப்பதாகக் கூறும் அவர்  இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

அதிகாரபூர்வமான பொதுவெளிச் சொல்லாடல்களிலும் (public discourse), ஊடகங்கங்களிலும் ஆதரிக்கப்படும் இரு இனங்களுக்கிடையிலான தொடர்பின் கூட்டிணைவு பிரச்சினைக்குரிய மாதிரியைப் பின்பற்றுவதுபோன்று தோன்றுகிறது.    ஆராயப்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் பெண் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்தவளாகவும்,  ஆண்  பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவனாகவும் விளங்குகின்றான்..  (இதற்கு மாறான நிலை பொதுஅரங்கில் இதுவரை காட்டப்படுவதற்குத் தகைமை வாய்ந்ததாக அமையவில்லை.) சிங்கள ஆணை விவாகம் செய்வதன் மூலம்  தன்னியப்படுத்தல் அரசியல் (politics of assimilation) நிகழ்கிறது.  இப்பெண்கள் தமது அடையாளங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றான தமிழ்க்குடும்பப் பெயரைக் கைவிட்டு,  ஆணின் சிங்களப் பெயர்களை  ஏற்றுக்கொள்வர் என ஊகிக்கலாம். சுர அசுர தொலைக்காட்சி நாடகத்தில் தனது இனத்துவத்தின் அடையாளமான பொட்டினைத் தொடர்ந்து அணியினும்,  இரஹந்த யத எனும் தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகி பொட்டிடலைத் தவிர்க்கின்றாள். இது அவளின் தமிழினத்துவத்தினை இன்னுமொருபடி சென்று துடைத்தழிக்கின்றது.” (பக்கம் 154) 
என்று கூறும்  நெலுகா சில்வா  சிங்கள ஆணைக் காதலிக்கும் அல்லது  திருமணம் செய்யும் தமிழ்ப்பெண் சிங்கள மொழியில் உரையாடுபவளாகவும், அதே சமயம் ஆண் தமிழில் பேசுதற்கு எவ்வித எத்தனமும் எடுக்காதவனாவனாகவும் காட்டப்படுகின்றான்.  இதை பெரும்பான்மைச் சமூகத்தின் மொழிமேலாண்மைக்குச் சிறுபான்மை இனத்தவர் உட்படுத்தப்படுவதைக் குறிக்கின்றது. தமிழ்ப் பெண்களை திருமணமூலமான உள்வாங்கல்கள் அடிப்படையில் ஒற்றைப்படையான சமூகத்தினை உருவாக்க முடியும் என்ற  பெரும்பான்மையினர்  மத்தியில்  போர்க்காலத்தில் செல்வாக்குப் பெற்ற  கருத்தியலின் பொருத்தப்பாடின்மையையும் with you without you   திரைப்படம் சுட்டிக்காட்டுகின்றது அல்லது தகர்க்கின்றது என்றும் கூறலாம்..

நூலில் இறுதியாக உள்ளடக்கப்பட்டுள்ள நீரிற் கரையும் சொற்கள்  இலக்கிய வாசிப்பும் விமர்சனமும், மனித மனத்தின் விரிதிறம், அன்பை வெளிப்படுத்தல், உயிர்த்திருத்தல்  என்பன குறித்துப் பேசுகின்றன. இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் குறித்து இளங்கோ இவ்வாறு கூறுகிறார்.

இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றவை. ஒருபுத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது, எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தாற்றான் அந்தப் படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவிற்கு வருகின்றது.  உண்மையில் இந்தத்தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது.  விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக் கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவற விடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்து போக விரும்புகின்றேன்.  ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புகளை வாசித்து விட்டு, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளிவிட்டுப் போக விரும்புகின்றேன்.  பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர்தலே சாலச்சிறந்தது. ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை (பக்கம் 184)


ஆசிரியரது இக்குறிப்பு இலக்கியத்திற்கும், விமர்சனத்திற்கும் இடையிலான  மன அசௌகரியமான தொடர்பு பற்றிப் பேசுகிறது.  இது குறித்த எனது கருத்துகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.  எல்லா இலக்கியப் பிரதிகளுமே அரசியற்பிரதிகள் என்றுதான் நான் கருதுகிறேன். சில  மிக வெளிப்படையானவை. பல தன் சார்பு நிலையை வெளிப்படுத்தாதவை.    இலக்கிய விமர்சனம் என்பது பிரதியின் பலம் பலவீனங்களை மதிப்பிடுவது (evaluation) என்று மிகக் குறுகிய வட்டத்தில் சிந்திக்கின்றோம். வெவ்வேறு கோட்பாடுகளுக்கூடாகப் அப்பிரதியைப் பார்க்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும்  மறந்து விடுகின்றோம்.   இலக்கியப்பிரதியின் கர்த்தா, பிரதி எழுந்த சூழல் இவற்றை எல்லாம் புறம் தள்ளி, வெறுமனே பிரதியை மட்டும் மையமாகக் கொண்டெழுந்த விமர்சனமுறையும் உண்டு.  

அது குறித்த கட்டுரைகளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடான இளங்கதிரில் பேராசிரியர் செல்வநாயகம் எழுதியுள்ளார்.  மேலும், பிரதி எவ்வளவு தூரம் சமூகப்பொறுப்புடையதாக இருக்கின்றது என்பதில் மட்டும் விசேட கவனம் செலுத்தி,  அதன் வடிவம் சார்ந்த அழகியல் அம்சங்களைப் புறக்கணித்து விடுகிறோம்.   ”ஏன் இன்னும் எமது படைப்புகள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்தெடுக்கப்படவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது என்று இளங்கோ கூறுவதும் (பக்கம் 43), தமிழிலக்கிய மரபு தனக்கென அழகியலை வளர்த்தெடுத்துக் கொள்ளல் அவசியம் என்று கவிதையியல், அழகியல், சமகாலத்தமிழ்க் கவிதை எனும் கட்டுரையில்  பேராசிரியர் செல்வா கனகநாயகம்  குறிப்பிடுவதும் நமது கவனத்திற்கும் சிந்தனைக்கும் உரியன. 
-------------------------------

(நன்றி: 'பிரதிபிம்பம்')

’பேயாய் உழலும் சிறுமனமே’ நூலில் தெரியும் இளங்கோவின் மனம்!

Saturday, November 11, 2017

-எஸ்.கே.விக்னேஸ்வரன்

2007 இல், சரிநிகர் பத்திரிகையை மீண்டும் சஞ்சிகை வடிவில் கொண்டுவரத் தொடங்கியபோது, தமது வலைத்தளங்களில் எழுதிவரும் கவனத்துக்குரிய ஒருசில படைப்பாளிகளின் படைப்புக்களை சந்தர்ப்பம் கருதி சரிநிகரில் மறுபிரசுரம் செய்வதம் மூலம் சரிநிகர் வாசகப் பரப்புக்கும் அவர்களை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் ஒருசில படைப்புக்களை வெளியிடத்தொடங்கியிருந்தோம். இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு அப்போதுதான் வெளிவந்திருந்தது, கவிதை மட்டுமன்றி, கதைகளும், டிசே தமிழன் என்ற பெயரில் கட்டுரைகளும் தனது வலைத்தளத்தில் எழுதிவருவதன் மூலம் அவர் ஒரு கவனத்துக்குரிய இளந்தலைமுறைப் படைப்பாளியாக அப்போது இனங்காணப்பட்டிருந்தார். அசோக கந்தகமவின் ‘இவ்வழியால் வாருங்கள்’ என்ற திரைப்படம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்று சரிநிகரில் வெளியிடுவதற்காக நண்பர் சிவகுமாரால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரை ஏற்கனவே அவரது வலைதளத்தில் வெளியாகிவிட்டிருந்ததா அல்லது சரிநிகருக்காக அவரால் அனுப்பப்பட்டதா என்பது தற்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அந்தக் கட்டுரை வெளிவந்த போது தான் அவர் எனக்குத் தெரிந்த நட்பு வட்டத்தை சேர்ந்த ஒருவர்தான் என்பதை அறிந்து கொண்டேன். (அந்தக் கட்டுரை இந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது). ஆயினும், அவரைச் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ அப்போது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பம் 7 வருடங்கள் கழித்து, கனடாவில் தான் கிடைத்தது.

000

இளங்கோ தனக்கென தனித்துவமான புனைவு மொழியில் கவிதைகளையும், கதைகளையும் எழுதிவருபவர். ஏற்கனவே அவரது கவித்தொகுப்பு ஒன்றும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளன. அளவில் சிறியவை என்றாலும் அதற்கு நேரெதிரான விதத்தில் பரவான கவனிப்பை பெற்றவை அவை. தனது படைப்புக்களாலும் பத்தி எழுத்துக்களாலும் பரவலான கவனத்தையீர்த்துள்ள படைப்பாளியான அவரது இந்த நூல், முழுக்க முழுக்க புனைவுசாராத, அரசியல்,இலக்கியம், இசை, சினிமா மற்றும் பயணங்கள் சார்ந்த அவரது எழுத்துக்களில் அவரே தேர்ந்தெடுத்த சிலவற்றின் தொகுப்பாகும். 2002 முதல் 2013 வரையான கிட்டத்தட்ட பத்தாண்டு காலப்பகுதியில் அவர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகள் அல்லது பத்தி எழுத்துக்களில் 31 ஆக்கங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்ற தலைப்புக்களின் கீழ் அவர் எழுதியுள்ள இவ்வாக்கங்களில், அவை பேசும்பொருள் சார்ந்த அவரது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் எண்ணப் போக்குகளை ஒரு வாசகர் தெரிந்துகொள்ளப் போதுமான அளவுக்கு பேசப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு எழுத்தாளரின் பன்முகப் பரிமாணத்தையும் பத்தாண்டு காலத்துள் அவரில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தையும் அடையாளம் காட்டும் தொகுப்பாக இது அமைந்துள்ளது கவனத்துக்குரியது.

000

அவர் மேற்குறிப்பிட்டுள்ள  ' அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு' என்ற தலைப்புக்களில் தொகுக்கப்பட்ட ஆக்கங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளன.இந்தக் கட்டுரைகளை வசிக்கும் ஒருவர், ஈழத்தில் எண்பதுகளின் ஆரம்பத்துக்குச் சற்று முன் பின்னாக பிறந்த சந்ததியினரின் சிந்தனைப் போக்கின் விசேட தன்மைக்குரிய அடையாளங்களைக் காணமுடியும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய பரம்பரை உருவாகிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன,  ஒரு பிரதேசத்தில் ஏற்படும் அரசியல் சமூக மற்றும் உற்பத்தி மாற்றங்களுக்கமைய இது வேறுபடலாம்.  ஈழத்தில் எமது நிலமைகளைப் பொறுத்தவரை கடந்த  1980 முதல் 2010 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை ஒரு தனித்துவமான  பரம்பரை உருவாகியிருப்பதாக பொதுமைப்படுத்தி எடுத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன். 1980இன்  ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 1990 ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 2000 ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகளும் மூன்று வேறுவேறான வாழ்க்கை அனுபவங்களினூடாக உருவாகி வளர்ந்திருக்கிறார்கள்.

இவர்களை, மூன்று பரம்பரையை சேர்ந்த குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால், இவர்கள் தமது குழந்தைப்பராயங்களில் மூன்றுவிதமான சமூக நெருக்கடிகளையும், வாழ்வியல் மாற்றங்களையும், எதிர்கொண்டவர்களாக வளர்ந்துள்ளனர். முதற் தொகுதியினர், இனக்கலவரம், போராளிகளின் உருவாக்கம், யுத்தம், விமானக் குண்டுவீச்சு, தரைப்படை நகர்வு என்று விரிவுபெற்றதும், வகை தொகையற்ற கைதுகள், துப்பக்கிச் சூடுகள், இடப்பெயர்வு, பதுங்குகுழி வாழ்க்கை, இலங்கை இராணுவம், இந்தியப்படை இரண்டினதும் நெருக்கடிகள், போராளிகளின் வளர்ச்சி, அவர்களிடையேயான தாக்குதல்கள் என்பவற்றை, தமக்கு முன்னைய பரம்பரையினருடன் சேர்ந்து நேருக்கு நேராக முதன்முறையாகக் கண்டவர்கள். இந்த யுத்தகாலம், முழு சமூகத்திடமிருந்து, இப் புதிய பரம்பரை தன் வாழ்க்கை தொடர்பான விழுமியங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள், மற்றும் கல்வியும் அனுபவமும் சார்ந்த, காலதிகாலமாக வளர்ந்துவந்த தொகுக்கப்பட்ட அறிவாற்றல் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் அவகாசம் அற்றதாக, உயிர் பிழைப்பதற்கான நாளாந்த நெருக்கடிக்குள்ளிருந்து தப்புவதற்கான ஓட்டத்தோடு வளர்ந்த பரம்பரை. இந்தப் பரம்பரை தமது வளரிளம் பருவத்தை அண்மிக்கையில், அதற்கு அதன் பட்டறிவு மற்றும் தாம் தேடிப் பெற்ற அறிவு மட்டுமே வழிகாட்டும் அறிவாக அமைகிறது. சமூகத்தில் நிலவிய பல்வேறு கருத்து மற்றும் சிந்தனைப் போக்குகள் பற்றிய அறிமுகமோ,அலசலோ செய்வதற்கு அவகாசமற்ற வேகத்துடன் ஓடவேண்டிய நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்டனர்.

இதற்கடுத்த  90களில் பிறந்தவர்கள் இலங்கை அரசின் முழு அளவிலான யுத்த நெருக்கடி மற்றும் சமாதான முயற்சிகள், நம்பிக்கையும் ஏமாற்றமும் மலிந்த காலகட்டத்தை தமது சிறு பராயத்தில் கடந்தவர்கள், விடுதலைப் போராட்டம் முழுக்க முழுக்க ஒரே தலைமையின்கீழ் ஒரே அரசியற் கோட்பாட்டின் மூலம் தான் சாத்தியம், மற்றெல்லாம் எதிரிக் கருத்துக்கள் என்ற அடிப்படையில், வளர்ந்து வந்த பரம்பரை. மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குவதோ, அவைபற்றி சிந்திப்பதோ கூட, விடுதலைக்கு எதிரானதோ என்று நினைத்துச் செயற்படவேண்டிய சூழலில் அவர்கள் வளர்ந்தனர். அரசின் தொடர்ச்சியான யுத்தத்தை எதிர்த்து போராடுதல் என்பது, ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற செய்கைகளைக் கூட நியாயப்படுத்துமளவுக்கு முக்கியமான ஒன்று என்ற நம்பிக்கையுடன் இந்த சந்ததி வளர்ந்தது.

2000 த்தின் பின்னான பரம்பரை முழுச் சமூகமுமே யுத்தம் புரியும் சமூகமாக மாறிவிட்டஒரு நிலையினை எதிர் கொண்டு வளர்ந்த பரம்பரை. யுத்தத்தை நடாத்துவதற்காக முழுச் சமூகமுமே களத்தில் இறங்க வேண்டிய, கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையை எதிர்கொண்டு வளர்ந்த  பரம்பரை இது. இந்தப்பரம்பரைக்கு, யுத்தத்திற்கான காரணம், அதற்கான வரலாற்றுப் பின்னணி என்பவைகள் எவையுமே தெரிந்திருக்க வேண்டியிருக்கவில்லை. வாழ்வா சாவா என்ற நிலையில், கண்முன்னே உலவித்திரியும் ஆயுதமேந்திய எதிரியிடமிருந்து மண்ணை மீட்பதற்காக யுத்தமிடுதல் ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

இந்த மூன்று பரம்பரைகளும், தமது சமூகத்தின் அரசியல்,கலை பண்பாடு மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய திரட்டப்பட்ட அனுபவத்தையோ, அவைபற்றிய அறிவையோ, தமக்கு முந்தைய பரம்பரையிடமிருந்து அதன் இயல்பான கைமாற்றலூடாகப் பெற்றுக் கொள்ளவில்லை. ஆக இந்த பரம்பரையினர் மத்தியில் இருந்து எழுந்துவந்த படைப்பாளிகள், அவர்களின் படைப்புக்களில் இவர்களுக்கு முன்னான படைப்பாளிகளின் அறிவு அனுபவச் செழுமை ,பேசும் மொழி என்பவற்றினைப் பெற்று இயல்பான வளர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அற்றவர்களாகவே வளர்ந்தனர். மாறாக, அச்சம், நிச்சயமின்மை, தொடர்ச்சியான இடப்பெயர்வு, கல்விக்கூடங்களின் சிதைவும் கல்வியின் வீழ்ச்சியும் என்று அவர்கள் அவர்கள் எதிர்கொண்ட சவால்களின் செல்வாக்கினூடாகவே அவர்களது உலகப்பார்வையும், சிந்தனையும் வளர்ச்சி பெறுகின்றன.

குறிப்பாக முதலாவது அணியை சேர்ந்த பரம்பரையினருக்கு, அவர்கள் தமது பதின்ம வயதுக்கு வருகையில், அதாவது தொண்ணூறுகளில், இரண்டே தெரிவுகள் தான் இருந்தன. போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைவது, அல்லது போராட்டக் களத்திலிருந்து வெளியேறிவிடுவது. இந்த இரண்டையும் தவிர்ந்த இன்னொரு பாதை இருக்கவில்லை. போராட்டக் களமோ, அனைத்து மக்களது நலன்களின் குரலை ஒலிக்கும் களமாக, மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடமளித்து ஜனநாயக வழிப்பட்ட நடைமுறையைக் கொண்டு மக்களை அணிதிரட்டும் சக்தியாக அமைந்திருக்கவும் இல்லை. போராட்டம்  எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கமுடியாத அவசியமான ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது முழுமக்களதும் பங்களிப்பையும் உள்வாங்கி ஜனநாயக பூர்வமாக அணிதிரட்டிச் செல்லும் சக்திவாய்ந்த்தாக இருப்பதும், அதன் வெற்றிக்கு மிகவும் அவசியமாகும். ஆயினும், அங்கு நிலவிய யதார்த்தம் இந்தத் தன்மைகளைக் கொண்டதாக இருக்கவில்லை.

போராட்டத்தில் நிலவிய இந்தப் பலவீனம், சந்தேகங்களையும், நம்பிக்கை வரட்சியையும், மன நெருக்கடிகளை கொண்டதுமான  ஒரு பக்கத்தையும் போராட்ட வளர்ச்சியுடன் சேர்த்தே வளர்த்து வந்ததென்பதை மறுக்க முடியாது. இது போராட்டக் களத்தில் வளமான பங்கினை ஆற்றக்கூடிய கணிசமான மக்கட் தொகுதியை களத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத்தள்ளியது. முதலில் இடப்பெயர்வாகவும் பின்னர் புலம்பெயர்வாகவும் இது வளர்ச்சி பெற்றது. இந்தவரலாற்று நிகழ்வு, ஈழத்தின் படைப்புச் செயற்பாட்டில் ஒரு தனித்துவமான, இதுவரைகாலமும்  ஈழத்தில் நிலவிய இலக்கிய படைப்பு முயற்சிகளிலிருந்தும் வேறுபட்ட, புதிய உருவம், புதிய உள்ளடக்கம், புதிய பார்வை,புதிய சிந்தனை என்று முற்றிலும் தனித்துவமான ஒரு போக்கை அல்லது போக்குகளை உருவாக்கிவிட்டுள்ளது என்று சொல்ல்லாம். இவ்வாறு வெளியேறியவர்களில், 60பது 70பது களின் ஆரம்ப காலப்பகுதிகளில் பிறந்தவர்களும் கூட வெளியேறி இருப்பினும், இந்தக் காலகட்டத்தவர்களது படைப்புகளிலிருந்து, 80 களில் பிறந்த சந்ததியினரின் எழுத்துக்களை தெளிவாக வேறுபிரித்துக் காணமுடியும்.

000

இளங்கோ இந்த 80களின் பரம்பரையினைச் சேர்ந்தவர். போராட்டக் களத்தை விட்டு இடம்பெயர்ந்த இந்தப் பரம்பரையினர் தமது வாசிப்புக்களை வளர்த்துக் கொண்ட காலத்தில், அதாவது 90களில், ஏற்கனவே  தவிர்க்க முடியாமல் புலம்பெயர்ந்த மாற்று கருத்துக் கொண்டோர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 25 க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் புலம்பெயர் தேசங்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன. அவற்றில் வெளிவந்த விமர்சனங்கள் மற்றும் அரசியற் கருத்துக்கள் இந்தப் பரம்பரையின் முக்கிய கவனத்துக்குரிய வாசிப்புக்கான விடயங்களாக இருந்தன. இவை தவிர, அப்போது தமிழ் நாட்டிலிருந்து வெளியிடப்பட்ட பின்னவீனத்துவ சிந்தனைகள் தொடர்பான நூல்கள் மற்றும் தலித்திய சிந்தனைகள் தொடர்பான கருத்துக்கள் என்பவை இந்தப் பரம்பரையினரின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் தன்மையைக் கொண்டிருந்தன எனலாம். இந்த வாசிப்புப் பின்னணிகளும், தமது இளமைக்கால அனுபவங்களும் இணைந்து உருவான ஆளுமைகளில் ஒருவராக இளங்கோவை அடையாளம் காணலாம். அவரது கனடிய கல்விச் சூழலும்,வாழ்க்கை சூழலும் இந்த ஆளுமை விருத்தியை மேலும் வளர்த்தெடுத்திருப்பதை அவரது எழுத்துக்களில் அடையாளம் காணமுடியும்.

இந்தப் பரம்பரையினருக்குக் கிடைத்தவை இதற்கு முன்பிருந்த பரம்பரையினரை விட வேறான அனுபவங்கள். எமது வரலாற்றின் புதிய அனுபவங்கள். முந்திய பரம்பரைக்கு போராட்டம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு அது இவர்களது பிள்ளைப்பருவத்தை அச்சத்திலும் இடப்பெயர்விலும் கழியவைத்தது. தம்மைச் சுற்றி நடப்பவைகளால் அவர்களின் மனது தமது குழந்தைப்பராயக் கற்றுக்கொள்ளல்களை வேறுவிதமாகவே பெற்றுக் கொண்டார்கள்..ஆனால் இவர்களுக்கு அடுத்த பரம்பரைக்கு இல்லாத இன்னொரு வாய்ப்பு இருந்தது. இவர்கள் தமது வளர்ச்சியினூடே, ஏன் போராட்டம் அவசியம் என்றதற்கான வரலாற்றியும் ஓரளவுக்காவது அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதற்கு அடுத்த சந்த்திக்கு அதுவும் இருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், கண்முன்னே நிலைகொண்டிருக்கும் எதிரியுடன் யுத்தம் செய்யாமல் வாழமுடியாது என்பது மட்டுமே!

000

இந்தப் பின்னணியில் இளங்கோவின்  ’பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற நூற் தலைப்பைக் கண்டபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், பேய் என்ற சொல் எம்மால் 'மிக அதிகமாக' என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படும் ஒன்றுதான். பேய் வெயில். பேய் மழை, என்று பேசுவது கிராமவழக்கு. பேயாய் உழலும் மனம் இல்லாமல் ஒருவர் நல்ல படைப்பாளியாக இருக்க முடியாது என்பது இதற்கு ஒரு காரணம்.

இரண்டாவது இது பாரதியின் வரி என்பது. அறுபதுகளில்  வெளிவந்த பாரதியார் கவிதைகள் தொகுப்பொன்றிற்கு பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் ஒரு அணிந்துரை வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையில், பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடல் இன்னுமொரு கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு பாடப் பெற்றால் அதை அனுபவிக்க முடியாது என்றும், ஆனால் அவரது தோத்திரப் பாடல்கள்,வேதாந்தப் பாடல்கள்,கண்ணன் பாடல்கள், குயில் பாடல்கள், பாஞ்சாலி சபதம் என்பவை என்றும் நிலைபெற்று வாழும் என்றும் எழுதியிருந்தார். இத்தனை காலம் கடந்தும் பாரதியின் வேதாந்தப் பாடல்  பேராசிரியர் சொன்னதுபோல நிலைத்து நிற்கிறது என்பதற்கு இளங்கோவின் இந்தத் தலைப்பு ஒரு சான்று என்றும். அதனால் தான் இது எனக்கு ஆச்சரியமூட்டவில்லை என்றும் நான் இங்கு சொல்ல வரவில்லை. பேராசிரியரின் அந்தக் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடும் இல்லை. எனக்கு இது ஆச்சரியமளிக்காததற்குக் காரணம், இதுதான் இளங்கோவின் இயல்பு, சிந்தனை, எழுத்து அனைத்துக்கும் அடிநாதமாக இருந்து வெளித்தெரியும், தன்னை குறித்தான அவரது உணர்வு நிலை என்பதுதான்.

இந்த நூலுக்கு பாரதியின் வரி ஒன்றைத்தான் தலைப்பாக வைக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், அதற்கு பொருத்தமான பல வரிகளை அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். நூலில் உள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான வரியை. ஆனால், அவர் இந்த வரியை பாவிக்க வேண்டும் என்று விரும்பியபடியால் தான், இந்தக் கட்டுரைகளுக்கல்ல, கட்டுரை ஆசிரியனுக்கே பொருந்துகின்ற அல்லது அவர் தன்னை வெளிக்காட்ட்ட விரும்புகின்ற வரியான அதை தெரிவு செய்துள்ளார் என்று எனக்குத் தோன்றியது. அது பொருத்தமானதும் கூட என்று எனக்கும் தோன்றியதால், நான் ஆச்சரியப்படவில்லை. பாரதி தனது மனதுக்குக் கட்டளையிடுவதாக அமைந்த இந்தப் பாடலில், 'நான் சொல்வதை செய், நினது தலைவன் நானே காண்’ என்று அவர் தனது மனதுக்கு அறிவுறுத்துகிறார். இளங்கோ அந்தப் பேயாய் உழலும் தனது மனதின் எண்ணங்களை அனுபவங்களை, உணர்வுகளை இந்தத் தொகுப்பில் தொகுத்துத் தந்திருக்கிறார்.

அவரது நூல் முழுவதிலும் அவர் தான் நேரடியாகப் பேசுவதை விட தனது மனதுநினைப்பது எது என்ற விதத்தில் தான் அவரது  எழுத்துக்கள் உரையாடல்கள் அமைந்திருப்பதை காணலாம். அதாவது அவரது எழுத்துக்களில், அவர் தனது கருத்துக்களுக்கு அழுத்தம் தருவதை விட தமது மன உணர்வுகளுக்கு அழுத்தம் தருவதே அதிகமாயிருக்கும். அல்லது இன்னொரு வகையில் சொல்வதானால், அவர் தனது கருத்துக்களைக்கூட தமது மன உணர்தலின் வழியாகவே வெளிப்படுத்துகிறார். கவிதைகளிலும், கதைகளிலும்  அவர் கையாளும் புனைவு மொழியிலும் மட்டுமல்ல, கட்டுரைகளிலும் கூட அதையே அவர் கையாளுகிறார். இதுவே இளங்கோவின் தனித்துவமான மொழிக்கும், அவரது ஆளுமையின் வெளிப்பாட்டுக்கும் அடிப்படைகளாக அமைகின்றன,
பாருங்கள், எனக்கான தெருக்கள் என்ற பதிவில் இப்படி எழுதுகிறார்:

"புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய் / கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.” 

'வாளின் நுனியில் சிதறும் வாழ்வில்' இப்படி எழுதுகிறார்:
"என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன்."

இந்த இரண்டு கட்டுரைகளும், அவரது ஆரம்பகாலக் கட்டுரைகள். தவிரவும் அவை அவரது சொந்த அனுபவங்கள். பின்னால் வந்த கட்டுரைகளில் இந்தச் சொல்லும் முறைகளில், குறிப்பாக,அலசல், வாசிப்பு,திரை என்ற பிரிப்புக்குள் வரும் கட்டுரைகளில் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆயினும், அவரது மனதின் உழலலோடு சம்பந்தப்பட்ட முத்திரைத் தன்மை முற்றாக இல்லாமல் போகவில்லை. இவை இரண்டிலும் கட்டுரையாளர் தான் சொல்லவரும் விடயத்தை முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்ட மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து வெளிப்படுத்துவதைக் காணலாம். இராணுவத்தினின் பிரசன்னம் அச்சத்தை ஏற்படுத்துவதும்,அதிலிருந்து விடுபடுவதற்கான துணையைத் தேடுவதுமான வாழ்வு ஏற்படுத்தும் யுத்தசூழல் தொடர்பான பார்வை, எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளும் கையறு நிலையில் தன்னை வைத்திருக்கிறது என்ற விசனத்துடன் கலந்ததாக அந்தச் சிந்தனை வளர்கிறது. இது ஒரு வளர்ந்த படைப்பாளியாகிவிட்ட பின்னாளில், அவரது சிந்தனையில் எப்படி ஒரு தயக்கத்துடன் கூடிய மொழியில் தனது கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைகிறது என்பதை நாம் காணலாம். உதாரணமாக வன்னியுத்தம் என்ற நூல் பற்றிய குறிப்பில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

”இந்நூலை வாசித்து முடித்த போது, இரண்டு விடயங்கள் தாண்டிப் போகமுடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடங்கப்படும் எந்தப் போராட்டத்திலும் மனமுவந்து ஆதரவுகொடுக்க முடியுமா என்பது. இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால் இணைந்து வாழ முடியுமா என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. ஏனென்றால் இவ்வளவு அழிவுகளும் நிகழ்ந்தகாலத்தில் நாம் கையறு நிலையில் தான் இருந்தோம் என்ற குற்ற உணர்விலிருந்து அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய் எதைதான் பேசிவிட முடியும்.”

ஆம். தாம் இருந்த கையறு நிலை காரணமாக, இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதை எம்ம்மால் முன்வைக்க முடியுமா? என்று கேட்டு முடியாது என்ற முடிவை நோக்கி அவர் செல்கிறார். அவர் தேடிக்கொண்ட வரலாற்றறிவு, அதன் காரணமான அரசியல் ரீதியான யதார்த்தம் பற்றிய அவரது கணிப்பீடு என்பவை அவரை நியாயமான கேள்விகளை எழுப்ப வைக்கின்றன, ஆயினும் அவற்றுக்கான விடை தேடலில், அவர் தனது முடிவு என்ன என்பதை தெரியாமலோ சொல்ல விரும்பாமலோ, அதை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அங்கு வாழும் மக்களே என்பதை மிகத் தெளிவாக முன்வைக்கின்றார். ஆனால்  மாறாக அதை சொல்ல நாமெல்லாம் யார். என்ற கேள்வியையும் பதிலாக அவர் தருகிறார். இதற்கு நாமிருந்த கையறு நிலையையும்
இவ்வாறு பல இடங்களில் நாம் இதை அவதானிக்கலாம்.

இது அவரது மொழியினதும் சிந்தனையினதும் முத்திரை. ஆனால் இந்த வகையான எழுத்து அவரை சமூக அரசியல் நியாயங்களின் போது, நியாயத்தின் பக்கம் நிற்பதை தடுத்துவிடவில்லை. தனது ஆதரவு நிலைப்பாட்டை அவர் தனக்கேயுரிய மொழியில் வெளிப்படுத்தத் தவறவில்லை தனது மாறுபாடான கருத்துக்களையும், விமர்சனம் சார்ந்த கேள்விகளையும் அவர் தமக்கேயுரிய மொழியில் முன்வைக்காமலும் இல்லை. சி.புஷ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 'பற்றிய நூல் தொடர்பான விமர்சனத்தில், அவர் சொல்லாது விட்ட விடயங்களின் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையிட்டு கேள்வி எழுப்புகிறார். புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக கனடாவில் நடந்த யுத்த ஆதரவு, மற்றும் பெண்களின் தாம் அணியும் ஆடைமீதான கருத்து போன்றவற்றை விமர்சிப்பதிலும், மக்களினதும்,பெண்களதும் உரிமை தொடர்பான நியாயமான பக்கத்தை சார்ந்து நின்று அவர் தனது கருத்தை முன்வைக்கிறார்.

000

இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும், இவை தொடர்பாக அல்லது இவை போன்ற விடயம் தொடர்பாக இவருக்கு முந்திய சந்ததியினர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகளை ஒப்பிட்டு வாசிப்பது ஒரு சுவாரசியமான, இரண்டு சந்த்தியினரதும் பார்வை,மொழி, சிந்தனை என்பவற்றின் தெளிவான வேறுபாட்டை அடையாளம் காட்டும் அனுபவத்தைக் காணலாம். இவற்றில் எது சிறந்ததென்று கூறுவதல்ல எனது நோக்கம், இந்த இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணமாக அமைந்த சமுக நிலவரம் பற்றி வலியுறுத்தவே இதை முன்வைக்கிறேன். இதன் முக்கிய வேறுபாடு, இவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பத் தயராக இல்லை.

முன்னைய பரம்பரை,தமக்கு மிகத் தெளிவாக தெரிந்ததெனக் கூறும் எந்த விடயத்தையும் இவர்கள் கேள்வியின்றி நம்பத் தயராக இல்லை. தமது எந்தக் கருத்தையும் மாற்றுக் கருத்துக்கு இடம்வைத்து சொல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் இவர்கள் தமது கருத்திலேயே நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதாக தோன்றும். ஆயினும் அவர்கள் அப்படிப் பேசுவதையே தெரிவு செய்கிறார்கள்.
இந்த நூலிலுள்ள எனக்குப் மிகப் பிடித்த கட்டுரையாக’வரலாற்றின் தடங்களில் நடத்தல்’ என்ற கட்டுரையைச் சொல்வேன்.

கிறிஸ்தோப்பர் ஒண்டாச்சியின் ’வூல்ப் இன் சிலோன்’ என்ற நூல் பற்றிய ஒரு முக்கியமான,  விபரமான அறிமுகமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை இவ்வாறு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு வகையில் மிக முக்கியமான ஒரு பணி. இளங்கோ, தனது பயணங்கள், வாசிப்புகள், திரைப்படங்கள் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றினூடாக இத்தகைய ஒரு பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார். அவரது அத்தகைய எழுத்துக்களிலும் கூட, இளங்கோவின் இந்த மேற்சொன்ன முத்திரையைக் காணமுடியும். உதாரணமாக ஒண்டாச்சியின் நூல் பற்றிய இந்தக் கட்டுரையை முடிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்.

” காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச் சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்."

மேலே நான் காட்டியுள்ள விடயங்களில் வெளித்தெரியும் இளங்கோவின் முத்திரையான இந்த ஐயம் தோய்ந்த கருத்து வெளிப்பாட்டு நடைதான் அவரிடம் இருக்கும் தனித்துவம். கேள்விகளில் உள்ள வேகமும் உறுதியும், முடிவுகளில்  அல்லது தீர்வுகளில் வெளிப்படாமல் இருத்தல் என்பது இந்தப் பரம்பரையினரிடையே ஆங்காங்கு நான் அவதானித்திருக்கிறேன். அவற்றை விவரிக்கும் இடம் இதுவல்ல ஆயினும் அது இயல்பானதும் நியாயமானதும் கூட. ஐயம் இன்றேல் தெளிவு இல்லை அல்லவா?
தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் நான் ஏற்கனவே படித்தவை சில புதியவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான சில இலக்கிய,அரசியல் மற்றும் சமூக நிலமைகள் பற்றிய எதிர்வினைகளை இந்த நூல் பேசுகிறது. இந்தக் கட்டுரைகள் முன்வைக்கும் கருத்துக்கள் உணர்வுகள் அவதானிப்புக்களுடன் உடன்படமுடியாத, மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டவர்களுக்கும் கூட ஒன்றிப்போன வாசிப்பனுபவத்தை தரக்கூடிய நூல் இது.

நூலில், மனதில் உறுத்திய ஒரே மாதிரியான தவறுகள் ஒருசில இடங்களில் வந்துள்ளன. எழுவாயும் பயனிலையும் ஒருமை பன்மைத் தவறைக் கொண்ட வசனங்கள் சிலவற்றையும் பார்த்தேன். இப்போதெல்லாம் இது ஒன்றும் பெரிய தவறல்ல என்று கருதும் போக்கு வளர்ந்து வருகிறது. ஆனால் இளங்கோ அந்தக் கருத்துடன் உடன்பாடுள்ளவரல்ல.என்பது எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன் மற்றப்படி இந்த நூல் தீவிர வாசகர்களுக்கு மட்டுமல்லாது, ஒரு ஆரம்ப வாசகருக்குக் கூட பல முக்கியமான நூல்கள், படைப்பாளிகள், திரைப்படங்கள் போன்ற பல விடயங்களை அறிமுகப்படுத்தவும் செய்கிறது. அந்தவகையிலும் இது ஒரு முக்கியமான நூல் என்றே நினைக்கிறேன். ஆக, இளங்கோவின் தலைமையில் அவரது பேயாய் உழலும் மனம், அள்ளிவந்த விடயங்களிற்காக அதற்கு நன்றி சொல்வோம்.
--------------------------------------------------

('அம்ருதா' - கார்த்திகை, 2017)

பேயாய் உழலும் சிறுமனமே

Sunday, October 01, 2017

வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் 
(சித்திரை 18, 2017)



















நூல் வெளியீடு

Friday, June 23, 2017


பேயாய் உழலும் சிறுமனமே- நூல் வெளியீடு

Monday, June 19, 2017

எனது மூன்றாவது தொகுப்பின் வெளியீட்டு விழா