கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கலைஞர்களின் தளம்பல்கள்

Wednesday, December 18, 2013

('அரங்காடல்' இறுதியில் வரும்)
1
கலைஞர்கள் எப்போதும் தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே நிலையில் என்றுமே  இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும் அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும். ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் வித்தியாசமாக இருப்பதனால் அவர்கள் சாதாரணர்களை விட மேலோரானவர்களாய் இருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. சிலவேளைகளில் அவர்களின் படைப்புக்களினூடாக வசீகரிக்கப்பட்டு அவர்களின் தனிவாழ்வை அறிய நேரும்போது நமக்கு அவர்கள் எதிர்மறையான விம்பத்தையோ, ஏமாற்றத்தையோ  தரவும் கூடும். 'நானொரு கலைஞன் என்னை நீங்கள் மதிக்கவேண்டும்' என்று சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுபவர்களை விட, 'இந்தச் சமூகம் எப்படி என்னை நடத்தினாலும், நானொரு கலைஞன்' என மெளனத்தின் மூலம் சலனங்களை ஏற்படுத்துபவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்புண்டு.

உண்மையில் பெரும்பான்மையான கலைஞர்களின் வாழ்வு இருளின் வர்ணத்தைப் பூசியது. சிலவேளைகளில் இத்தகைய நெருக்கடிக்குள்ளும், துயரத்திலிருந்தும் எப்படி அவர்களால் இவ்வளவு அருமையான படைப்புக்களைத் தரமுடிந்ததென வியந்துமிருப்போம். எதற்காய் பாரதி உணவு சமைப்பதற்காய் இரவல் வாங்கிய தானியத்தைச் சிட்டுக்குருவிகளுக்குப் போட்டார்? ஏன் சி.செல்லப்பா தன் சொத்துக்களை இழந்து  தெருத்தெருவாக 'எழுத்தை' விற்றுத் திரிந்தார்? ஏன் நகுலன் எப்போதும் தன்னோடு பேசுவதில் அளவற்ற ஆர்வத்துடன் இருந்தார்? எதற்காய் வான்கோ காகினோடு சண்டைபிடித்து தன் காதின் நுனியை வெட்டிக்கொண்டார்? ஏன் காப்ஃகா கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அதிகாரங்களுடன் தளராது சமர் செய்துகொண்டிருந்தார்? ஏன் எங்களின் ஏ.ஜே தன்னைப் புகழ்ந்தெழுதிய பத்தியை premature obituary என்றும், அவரைப் பற்றி வெளியிட்ட சிறப்பிதழை தீண்டியும் பார்க்காமல் இருந்தார்?

நமக்கு இந்த 'ஏன்'களுக்குத் தெளிவான பதில் தெரியாது. வேண்டுமெனில் எங்களை நாங்கள் சமாதானப்படுத்திக்கொள்வதற்காய் 'இதெல்லாம் பைத்தியக்காரத்தனங்கள்' எனச் சொல்லி நம்மை நாமே ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த மனிதர்களுக்கெல்லாம் சாதாரணமானவர்களைப் போல வாழும் ஆசை இருந்திருக்காதா என் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படி அவர்களால் இருக்கமுடியாது, அவர்களைக் கலை    - கோயிலுக்கு நேர்ந்துவிட்ட தேவதாசிகளைப் போல- தேர்ந்தெடுத்துக்கொண்டது என நாம் அவர்களை இனியாவது கனிவுடன் பார்க்கக்கூடாதா? அவர்கள் தம் பெரு விருப்பங்களையும், மீளமுடியா வலிகளையும் முன்வைத்திருப்பதால்தான், நாம் அவர்களை வாசிப்பதன் மூலம் எங்களின் துயரங்களையும், சரிவுகளையும் தேற்றிக்கொண்டு மீள எழுந்து வாழமுடிகிறது என எப்போதாவது நினைத்திருக்கின்றோமா?

அன்னா கரினீனா என்கின்ற மாபெரும் காவியப்பெண்ணை உருவாக்கிய டாஸ்டாயினால் ஏன் அவரின் துணைவியான ஸோபியாவை புரிந்துகொள்ள முடியாமல் போனது? அதிகாரத்தின் நுண்தளங்களில் பயணித்துப் பார்த்த காப்ஃகா ஏன் இரண்டு முறையும் பெலிசியுடனான தன் திருமணத்தை இடைநிறுத்தினார்? இரண்டு தடவையும் திருமணஞ்செயய சம்மதித்த பெலிசி காப்ஃகா மீது எவ்வளவு காதலுடன் இருந்திருப்பார். ஏன் அவரை அந்தளவிற்குத்  துயருற வைத்தார்? காப்ஃகா பெலிசியிற்கு எழுதிய கடிதங்களில் எத்தகைய மோசமானவராக காப்ஃகா இருந்திருக்கின்றார் என் இன்றும் சாட்சியம் சொல்கின்றனவே? கலைஞர்களையும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையையும் எப்படிப் புரிந்துகொள்வதென்கின்ற குழப்பம் இப்போது நமக்கு வருகிறதல்லவா?

ஸோபியாவைப் புரிந்துகொள்ளாத டாஸ்டாயின் அன்னா கரீனீனாவை நம்மால ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. பெலிசியின் உணர்வுகளை உதறித்தள்ளிய காப்ஃகாவின் 'விசாரணை'யை நாம் கொண்டாடத்தான் செய்கின்றோம். ஏனெனில் கலைஞர்கள் வானத்திலிருந்து தோன்றிய சுயம்புகள் அல்ல என எமக்குத் தெரிகிறது. அவர்களும் நம்மைப் போலவே பலவீனங்களும், தடுமாற்றங்களும் கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். சிலவேளைகளில் இப்படித் தளம்பல்களைக் கொண்டவர்களாய் இருப்பதனால்தான் அவர்கள் இன்னுமின்னும் எங்களை வசீகரிக்கின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே பயணிக்காத பாதைகளில் கலைஞர்கள் தம் தேடல்களை நிகழ்த்தவே விரும்புவர். தீ சுடும் என்று நமக்குச் சொல்லித்தராத வரை தீயைத் தீண்டியல்லவா பார்த்திருப்போம். அப்படித்தான் இந்தக் கலைஞர்களும் நாமறியாத பாதைகளில் பயணித்து கலைகளினூடு தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்துவமான பயணங்கள் இருப்பதை நாம் நன்கறிவோம் நமகான பாதைகளில் நாம் பயணிக்கும்போது ஏற்கனவே அறிந்ததை உணரும்போது சிலிர்க்கின்றோம். அந்த அறிதலை இந்தக் கலைப்படைப்புக்கள் நமக்குத் தருகின்றன. ஆனால் இவை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இதற்காய்ச் சிலவேளைகளில் பல கலைஞர்கள் தமது முழுவாழ்க்கையையும் தொலைத்திருக்கின்றனர் என்றறியும்போது நமக்கு இன்னும் இந்தக் கலைஞர்கள் மீது நேசம் வருகின்றதல்லவா?  தன்னையே அழித்தழித்து 'மூலதனம்'  போன்றவற்றைத் தந்த மார்க்ஸை விட நாமின்னொரு உதாரணத்தைத் தந்துவிடமுடியுமா என்ன?

2.
மீள்வாசிப்பை நாம் எப்படியும் எதிலும் நிகழ்த்த முடியும். ஆனால் சில இடங்களில் நாம் கையே வைக்கமுடியாது. அவ்வாறு செய்யும்போது அது வேறொரு பிரதியாக  மாறிவிடுகின்றது. இராவணன் எவ்வளவு நல்லவராக, சிவபக்தனாக இருந்தாலும், இராவணன் இராமனைக் கொன்றார் என மாற்றிவிடமுடியாது. எவ்வளவுதான் மறுவாசிப்பைச் செய்தாலும் இறுதியில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்றாகத்தான் வேண்டும். அவ்வாறுதான் நாம் அன்னா கரினீனாவை எவ்வளவு மறுவாசிப்பை நிகழ்த்தினாலும் கரினீனா ரெயினின் முன் விழுந்து தற்கொலை செய்வதை மாற்றிவிடமுடியாது. டாஸ்டாய், ஸோபியாவை தன் மரணத்தருவாயிலும் இரெயின் நிலையத்தில் வைத்துச் சந்திக்க விரும்பவில்லை என்பதையும் மாற்றிவிடவே முடியாது. ஆகவே  நாம் மாற்றவே முடியாச் சில சம்பவங்கள் எல்லாப் பிரதிகளிலும் இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கரினீனா தனக்கு விருப்பமான வாழ்வை வாழ்ந்ததுபோலவே, தனக்குப் பிடித்தமான முறையிலே தனது தற்கொலையைத் தேர்ந்தெடுத்தாரென நாம் கூறிக்கொள்ளலாம். ஆனால் அதேயே இன்னொருவர் இல்லை, கரினீனா இப்படி தற்கொலையைச் செய்தவர் என்பதால் அவருக்குள் பகிரமுடியாத பெரும் துயரம் இருக்கிறதெனக் கூறினாலும் -நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ- அது இன்னொருவரின்  வாசிப்புச் சுதந்திரம் என விளங்கிக்கொண்டாக வேண்டும். வாழ்வை சாகசங்கள் மூலம் கொண்டாடிய எர்னாஸ்ட் ஹெமிங்வே கூட தற்கொலையே செய்துகொண்டார், அப்படியெனில் அவரது  வாழ்வுதான் தோற்றுவிட்டதா என்ன? இல்லைத்தானே. ஆகவே கரினீனாவை நாம் எமக்கு விரும்பியமாதிரி எப்படியும் வாசித்துக்கொள்ளலாம். ஆனால் எமது வாசிப்புக்கள் மட்டுமே சரியென்று கூறினால், நாம் மகாபாரதம்/இராமாயணம் போன்ற காவியங்கள் பற்றி எழுதப்பட்ட பன்முகப்பிரதிகளை மறுத்துவிடுகின்ற ஆபத்தான நிலைக்குப் போய்விடுவோம்.

ஆகவே நான் செழியனிடம் நீங்கள் இப்படி கரினீனாவின் பாத்திரத்தைப் படைத்தது நியாயமா எனக் கேட்கப் போவதில்லை. ஆனால் அன்னா கரினீனா போன்ற பல்வேறு உள்ளடக்குகள் கொண்ட பாத்திரத்தைப் படைத்த டாஸ்டாயை இன்னொரு பாத்திரமாகப் பிரதியில் படைத்திருக்கலாம். அங்கே டாஸ்டாய் 'அன்னா கரினீனாவைச் சிருஷ்டித்த என்னால் அருகிலிருந்த சோபியாவைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே. இறுதியில் என்னைப் பார்க்க ஆவலோடு ஓடோடிவந்த ஸோபியாவை இரெயின் நிலையத்தில் வைத்துக்கூட சந்திக்க மறுத்தேனே, அந்தத் துயரத்தைக் காவியபடி இன்றும் தூங்காது அலைந்து கொண்டிருக்கின்றேனே' என டாஸ்டாய் தோன்றி நம்மிடம் கூறியிருந்தால், செழியன் என்கின்ற கலைஞனை இன்னும் நெருக்கமாய் உணர்ந்திருப்பேன். செழியன் தவறவிட்டது இந்தப்புள்ளியைத்தான்.

எனெனில் ஏற்கனவே பயணிக்காத திசைகளில் பயணிக்கின்றபோதுதான் ஒருவர் உன்னதக் கலைஞர் ஆகின்றார்.
................

(Oct 18, 2013)

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்

Saturday, December 07, 2013

வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம் இருக்கிறது என்று தெரிந்து பயணித்தாலும், நம் பயணங்கள் எல்லாம் அந்தக் கரையைப் போய்ச் சேரும் என்பதும் அவ்வளவு உறுதியானதில்லை. இடையிலும் எதுவும் நடக்கலாம், சுவடுகளற்று நாம் போகலாம். மிக எளிய கனவுகளோடு வாழத்துடிக்கின்ற ஆனந்தியும், பிரபாகரும் இடைநடுவில் அணைந்துபோகின்ற இரண்டு மெழுகுதிரிகளாய் ஆவதை 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் பார்க்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் முதன்முதலாகத் தாம் பார்த்த திரைப்படங்கள் பற்றிய அனுபவம் மறக்கமுடியாது இருக்கும். நான் ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் தியேட்டர்கள் ஒரு வரலாற்றுச்சின்னம் போல எவ்விதத் திரைப்படங்களும் திரையிடப்படாது தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. போர் எதைத்தான் விட்டுவைக்கின்றது. மின்சாரம் மட்டுமின்றி, விளக்குகளுக்கு வேண்டிய மண்ணெண்ணெயே தட்டுப்பாடாக இருந்த காலமே என்னுடைய சிறுவயதுப் பருவம். அப்படி இருக்கும்போது தியேட்டர்களில் எல்லாம் படம் ஓடுமா என்று எதிர்ப்பார்ப்பதே சற்று அதிகப்படியானதுதான். 

அப்படியிருந்தும் 'மழை நின்றபோதும் தூவானம் நிற்கவில்லை' போல அவ்வபோது சமாதானக் காலங்கள் வரும்போது மின்சாரம் வரும். அத்தகைய காலப்பகுதியில், ஊரே திருவிழாக்கோலம் பூண்டதுபோல -தொலைக்காட்சி, விசிஆர்- வாடகைக்கு எடுத்து இரவிரவாய் யாருடைய வீட்டிலாவது நான்கைந்து படங்கள் இடைவெளியில்லாது 'திரை'யிடப்பட்டிருக்கின்றன.  அதில் எப்போதும், முதற்படமாய் ஒரு ஆங்கில வீரதீரப்படம் இருக்கும். இரண்டாவதாய் நிறைய சண்டைகள் இருக்கும் தமிழ்ப் படம் கட்டாயம் இருக்கும். இந்த இரண்டு படங்களைப் பார்ப்பதற்குள்ளேயே என்னை நித்திராதேவி ஆரத்தழுவி அரவணைத்திருப்பார். இப்படிப் படங்களைத் திரையிடும்போது இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. ரீவி,விசிஆர் போன்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்கு அன்றைக்கு யார் உபயக்காரர்களாய்  இருக்கின்றார்களோ அவர்களின் செல்வாக்கு தெரிவுசெய்யப்படும் படங்களில் அதிகமிருக்கும். சிலவேளைகளில் அவர்களுக்கு வெளிநாட்டில் யாரேனும் உறவுக்காரர் இருந்தால், முதற்காட்சியாய் வெளிநாட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தையோ, பூப்புனித நீராட்டுவிழாவையோ பார்க்கும் சித்திரவதையும் கிடைக்கும். எனவே திரைப்படம் பார்ப்பது எப்போதும் எனக்கு ஓர் இனிய நிகழ்வாக இருக்கிறதென நீங்கள் நினைக்கக்கூடாது.  சில திரைப்படங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களைத் துண்டு துண்டாக அறுத்து வதைப்பார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது. எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனக்கூறப்படுவதைப் போல, எல்லாம் கூடியதுதான் திரைப்படங்களுமென நம்மை நாமே ஆறுதற்படுத்தவேண்டியதுதான்.

இவ்வாறாக நிறையச் சண்டைகாட்சிகளும், நகைச்சுவைக்காட்சிகளும் அமைந்த படங்களே மிகச்சிறந்தவை என நினைத்துக்கொண்டிருந்த என் கலைப்பார்வையை 'உழைப்பாளி'தான் மாற்றியது என்று கூறினால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். எப்போது மண்ணெண்ணெயில் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் நிற்கப்போகின்றதோ என்கின்ற பதற்றத்துடன் 'உழைப்பாளி' பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்திருந்த நண்பன், 'இப்போது இந்தப்பாட்டில் பார், ரஜனியை ரோஜா தன் முன்பக்கத்தால் முட்டுவா' என்றான். அதன்பிறகு எனக்குச் சண்டைக்காட்சிகள் பிடிக்காமல் பாடல் காட்சிகள் நன்கு பிடிக்கத் தொடங்க பதின்மத்திற்குள் நான் நுழைந்திருந்தேன்.இவ்வாறாக என் 'கலைப்பார்வை' காலத்துக் காலம் மாறிக்கொண்டிருக்கையில், நான் எப்படி  இப்படியிருப்பதுதான் சிறந்த திரைப்படம் என அறுதியும் இறுதியுமாய்க் கூறமுடியும்? 

திரைப்படம் சார்ந்த கோட்பாட்டு விளக்கங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன் எனினும் அவை கூட ஒரு சிறந்தபடம் இதுதான்  எனக்கூறுவதில்லை. வேண்டுமெனில் இக்கோட்பாடுகள் நமக்குப் பிடித்த திரைப்படங்களில் நாம் தவறவிட்ட பக்கங்களைக் கண்டுகொள்ளவும், ஆழமாய் விளங்கிக்கொள்ளவும் உதவுகிறதென  கூறிக்கொள்ளலாம். மேலும் வெகுசனச் சினிமா, கலைப்படம் என்ற பிரிப்புக்களில் கூட நான் அவ்வளவு அக்கறைகொண்டதில்லை. எனக்குப் பிடித்த சினிமா, பிடிக்காத சினிமா என்று ஒரு எளிய புரிதலிற்காய் வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.

த்தனையோ தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்த நான் ஏன் 'கற்றது தமிழ்'ஐ பிடித்த ஒரு திரைப்படமாகத் தேர்ந்தெடுத்தேன் என யோசித்துப் பார்க்கின்றேன். முதலாவது இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' பிடித்திருக்கின்றது. சிலவேளை இதை எழுதிமுடிக்கும்போது எனக்கு வேறொரு திரைப்படம் பிடித்திருக்கவும் கூடும். நாம் கடந்து வந்த பாதையில் தீர்க்கமாய் நம்பிய எத்தனை விடயங்களை காலப்போக்கில்  உதறிவிட்டு வரும்போது, எது பிடித்த திரைப்படம் என்பதில் குழப்பங்கள் வருவதென்பது இயல்பானதுதான் அல்லவா? 'கற்றது தமிழ்' ஏன் தவிர்க்கமுடியாத ஒரு திரைப்படமாய் எனக்குள் வந்தமர்ந்திருக்கிறது என்றால், இத்திரைப்படம் ஒவ்வொருகாட்சியிலும் நாம் ஒரு ஆனந்தியாகவோ, பிரபாகரராகவோ எந்தக்கணத்திலும் ஆகிவிடலாம் என்கின்ற பதற்றத்தைக் கொண்டுவருவதாலேயே எனக்கு நெருக்கமான உணர்வைத் தந்திருக்கின்றது என நினைக்கின்றேன். 

படம் தொடங்கும்போதே எந்த வம்புக்கும் போகாத ஓர் அப்பாவியான- பிள்ளைகளுக்கு 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்' எனச் சொல்லிக்கொடுக்கின்ற ஆசிரியர், யாரோ இருவரின் காதல் ஆட்டத்திற்கு பலியாகின்றவராகக் காண்பிக்கப்படுகின்றார். அதனால் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்குள்ளாகும் பிரபாகர், நீதிமன்றம் செல்லும் வழியில் தப்பிச்செல்லும் ஓட்டம், இறுதியில் அவரும் ஆனந்தியும் இரெயினொன்றை இருட்குகையில் சந்திக்கும்வரை முடிவதேயில்லை.  முக்கியமாய் அநேக மனிதர்களுக்கு வாழ்க்கையில் தாம் ஏதும் தவறு செய்யாமல், எவரையும் ஏமாற்றாமல் இருந்தால் அமைதியான வாழ்வொன்று கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. அதை இப்படம், நல்லவர்களாய் இருப்பதால் நல்லதொரு வாழ்க்கை அமைந்துவிடுமா என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. இன்னும் நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கொண்டாடுகின்ற 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே ஒருவகையில் ஆட்டங்காணச் செய்கிறது.  நாம் தனியர்களாய் இருக்கவிரும்பினாலும் நமது வாழ்வு நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, பிறராலும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் பிரபாகரின் வாழ்வு திசைமாறிப்போகும்போது நமக்குப் புரிகிறது.

எல்லார் முன்னும் அவமானப்பட்டும், மயிர் நீங்கின் உயிர் வாழாக் கவரிமானாய் ஆக விரும்பி தற்கொலை செய்ய முயற்சித்தும் கூட பிரபாகரனுக்கு வாழ்வு நெடியது என்கின்றது விதி. ஆனால் தற்கொலை முயற்சியில் தப்பித்த பிரபாகர் முன்னைய பிரபாகர் அல்ல. 'நான் சிவனாகிறேன்' என தனக்குத்தானே சமாதானம் சொல்லி யார் யாரையெல்லாம் கொல்ல விரும்புகின்றாரோ அவர்களைக் கொன்று தன்னையொரு உருத்திரனாகப் பாவனையும் செய்துகொள்கிறார். இவ்வாறு பிரபாகர் ரிக்கெட் விற்பவரையும், ரெயினுக்குள் ரிக்கெட் பரிசோதிப்பவரையும் எழுந்தமானமாய் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கொல்லும்போது, இப்படத்தைப் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒரு காரணமிருக்கும் என்கின்றதை இப்படத்தில் நடைபெறும் கொலைகள் உடைத்து நொறுக்குகின்றன. இப்படிக் கூட நாம் யோசித்துப் பார்க்கலாம், எத்தனை பேர் வாழவேண்டிய இளவயதில் எல்லாம் சட்டென்று மறைந்துபோகின்றார்கள். அவை ஏன் அவ்வாறு நிகழ்கின்றதென்பதும் நமக்குத் தெரிவதில்லை. அதை விளங்கிக்கொள்ளும் அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் நாம்,  தான் சிவனாகியதாய் எண்ணிக்கொள்ளும் பிரபாகர்  எழுந்தமானமாய்ச் செய்யும் கொலைகளையும் ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள நிர்ப்பந்திக்கபடுகின்றோம். 

பிரபாகர் இளவயதில் நேசிக்கும் ஓவ்வொருவரும் இடைநடுவில் இறந்துகொண்டிருப்பதால் அவருக்கு ஏற்படக்கூடிய மனப்பிறழ்வு விளங்கிக்கொள்ளக்கூடியதென்றாலும், இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய பகுதியும் இருக்கிறது. அது எவ்வாறு இன்றைய உலகமயமாதலில், பிளவுகள் ஏற்பட்டு நமது மனிதாபிமானம் எப்படிச் சுருங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது என்பது பற்றியது. 'கற்றது தமிழ்' - பிரபாகர் என்னும் அன்புக்கு ஏங்கும், சற்று மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள ஒருவரைப் படைத்திருந்தாலும், பிரபாகரைப் போல நாம் எவருமே - மனச்சிதைவுக்கு ஆளாகாமல் விட்டால்கூட-  இவ்வாறு கொலைகளைச்  செய்யும் ஒருவராய் மாறிவிடும் அபாயத்தைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதையும் கவனித்தாகவேண்டும். பணம் தேடும் வாழ்வில் மிகப்பெரும் இடைவெளிகள் மனிதர்களுக்கிடையில் எப்படி  உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும், நாம் எப்படி பிறமனிதர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் இழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் ஒவ்வொரு காட்சியிலும் 'கற்றது தமிழ்' சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பிரபாகர் மட்டுமில்லை, இப்படத்தில் வரும் அநேக கதாபாத்திரங்கள் பலமும் பலவீனமும் உள்ளவர்களாய்த்தான் படைக்கப்ப்ட்டிருக்கின்றனர். எந்த இடத்திலும் பிரபாகருக்கு 'நாயக விம்பம்' வழங்கப்படவேயில்லை. அவருக்கு ஆனந்தி மட்டுமே பரிசுத்தமான ஒர் உயிர். ஆகவே ஆனந்தியை அவரால் மனம் நிறைந்து நேசிக்கவும் முடியும்; அவள் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டு செய்த தவறுகளைக்கூட பிரபாகரால் மன்னிக்கவும் முடிகிறது. ஆனால் அதே பிரபாகருக்கு, 'உனக்கு துணிச்சலிருந்தால் என்னைத் தொட்டுப்பார்' என்ற ரீ-சேர்ட்டை அணிந்த பெண் எரிச்சலூட்டுகிறாள். எனக்குத் தைரியமிருக்கிறது என அவளின் மார்புகளைத் தொடவும் செய்கிறான்.

இங்கேதான் நமக்கு பிரபாகரை எப்படிப் பார்ப்பது என்னும் குழப்பம் வருகிறது. நமது காதலிகளைத் தேவதைகளாக்கியபடி, பிற பெண்களைப் பாலியல் சுரண்டல் செய்ய விரும்பும் நம் உள்மன ஆசைகள் பெருகத்தொடங்குகின்றன. நாம் தான் அந்தப் பிரபாகரோ என நினைக்கும் புள்ளி நம்மையின்னும் பதற்றமடையச் செய்கிறது. அது மட்டுமில்லை, பிரபாகர் ஆனந்தியோடு பஸ்சில் பயணிக்கும்போது, ஆனந்தி ஒரு விலைமாது எனத் தெரிந்து சேட்டை செய்கின்ற மனிதரை பிரபாகர் அடித்து உதைப்பதேயில்லை. மென்மையாக 'அவள் எனக்குரியவள்' என்பதைச் சொல்லிவிட்டு அந்த நபரை விட்டுவிடுகின்றார். ஒரு பெண்  'உனக்குத் தைரியமிருந்தால் என்னைத் தொட்டுப் பார்' என்றோ அல்லது 'என் பட்டன்களை கழற்று' என்கின்ற வாசகங்களையுடைய ஆடையை அணிந்திருப்பதோ உறுத்தச் செய்யவும், அதனால் பதற்றடையும் பிரபாகர் ஏன் பாலியல் சேட்டை செய்யும் ஆணோடு மூர்க்கமே கொள்வதில்லை? இதைவிட ஆண் மனதின் பெண்களில் அதிகாரம் செலுததும் வேட்கையை தெளிவாகச் சொல்லிவிடமுடியுமா? இன்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கு, அவர்கள் அணியும் ஆடைகளே என தம் வக்கிரகங்களை மறைக்கக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா இல்லையா?  

தமிழைக் கற்பதால் எவ்வளவு அவமானப்பட வேண்டியிருக்கிறது என்பது பற்றி வரும் காட்சிகளும் கவனத்தில் கொள்ளவேண்டியது. வெளியிடங்களில் மட்டுமில்லை, தமிழ்த்துறையிலேயே ஒருவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் -தமிழைக் கற்கவிரும்புகின்றான் என்பதற்காய்- எவ்வளவு அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் பிரபாகர் தனக்குப் பிடித்த தமிழைக்கற்று ஓரு ஆசிரியராகவும் ஆகி விடுன்றான். அவன் ஓரிடத்தில் தமிழ் சாந்தத்தைக் கற்றுத்தரும், அதேவேளை தேவையெனில் ரெளத்திரமாய் இருக்கவும் முடியுமெனச் சொல்கின்ற இடம் அற்புதமான தருணம்.

இதைத் தவிர்த்து இந்தப் படத்தில் ஒலிக்கமுனையும் பன்மைக்குரல்களையும் நாம் அவதானிக்கலாம். பிரபாகர் தனது சாட்சியத்தைப் பதிவுசெய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பான பின், ஏதோ வாசகம் எழுதிய ரீசேர்ட் அணிந்த ஒரு பெண்  கருத்துக் கூறுவார் 'நாங்கள் இப்படி எதுவும் எழுதாத ஆடைகள் அணிந்து வந்தால் கூட,   இவங்கள் ஏதோ அங்கே பார்க்காமலா இருக்கபோகிறாங்கள்' என்பதெல்லாம் பிரபாகரின் சாட்சியத்தை குலைக்கமுயல்பவை. அதேசமயம் இன்னொருகுரல், வளர்ச்சி என்பது இயல்பான நிலையில் நடக்கவேண்டும். உடலில் கால்மட்டும் வீங்கினால் அது வளர்ச்சியல்ல வியாதி எனக்கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. அந்நியமோகத்தையும், ஐடி தொழிலையும் விமர்சிக்கும் பிரபாகருக்கு, அவர்கள் இறுதிக்கச்சாய்ப் பொருளே தவிர, இதற்கு முதன்மைக்காரணங்கள் அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் என்பதை எவ்வளவு எளிதாகக் கடந்துபோகமுடிகிறது? தமிழை இன்னும் தாழ்த்தியதும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதும்  இந்த ஜ.டிக்காரகளா? தமிழ் தமிழ் என்று தமிழுக்காய்த் தீக்குளிப்போம் என் அப்பாவி இளைஞர்களை பலியாக்கவும் தயங்காத அரசியல் கட்சிகள் அல்லவா இவற்றுக்கு முக்கிய காரணம்? அவர்களை நோக்கியல்லவா பிரபாகர் பேசியிருக்கவேண்டும்?  இதையொரு பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இதையெல்லாவற்றையும் விட பிரபாகர் இறுதியில் கூறுவதைத்தான் நாம் இன்னும் கவனத்துடன் கேட்கவேண்டும். இப்போது ஏழைகள் பணக்காரர் என்று இருபெரும் பிரிவுகள் வந்துவிட்டன. இனி சின்ன விசயத்திற்குக்கூட மனிதர்களை மாறி மாறி கொல்லவும் துணியத் தயங்கமாட்டார்கள் என்னும் குரல்.

னந்தியின் பாத்திரம் அவ்வளவு இயல்பாய் 'கற்றது தமிழில்' இருக்கிறது. காதலிக்க விரும்பும் மனதையும், அதை வெளிப்படையாகக் காட்ட முடியாத அவதியோடு அவரது வாழ்வு நூலறுந்து பட்டம் போல அலைகிறது. ஆனந்தியாக நடிக்கும் அஞ்சலி ஒவ்வொருமுறையும் 'நிஜமாய்த்தான் சொல்கிறியா' எனக் கேட்கும் ஒவ்வொரு தருணங்களும் கவிதைக்கு நிகர்த்தது.காலத்தின் நிர்ப்பந்தத்தால் ஆனந்தி பாலியல் தொழிலாளியாக மாறியபோது - தான் எழுந்தமானமாய் கடற்கரையில் சுட்டுக்கொன்ற காதலர்களில்- ஆனந்தியும் ஒருத்தியாக இருந்திருந்தால் என்னவாயிருக்குமென பிரபாகர் எண்ணிப்பார்த்திருப்பாரா? அப்படி அவர் தன் ஆனந்தியைப் போலத்தான் பிறரும்... என நினைத்திருந்தால் எந்தப் பெண்ணையும் வெறுத்திருக்கமாட்டார் அல்லவா?  ஆகவேதான் சொல்கிறேன் பிரபாகரை எப்படிப் புரிந்துகொள்வதென்ற சிக்கலே இன்னுமின்னும் என்னை இப்படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. 

பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர,  பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க்  இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன. 

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி  ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம்.  எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்.


(நன்றி: 'காட்சிப்பிழை' - ஒக்ரோபர் 2013)