கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஸ்பெயின் - 02

Sunday, September 30, 2018

Plaza de Sant Felip

இந்தப் பிளாஸாவையும், இதனோடிருக்கும் தேவலாயத்தையும் பல்வேறு திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்போம். முக்கியமாக எனக்குப் பிடித்த ‘Vicky Christina Barcelona’ மற்றும் ‘Perfume’ல் எளிதில் அவதானித்திருக்க முடியும். Vicky Christina Barcelonaவில், அந்தோனியோ விக்கியோடும், கிறிஸ்டீனாவோடும் சேர்ந்து உணவருந்தும்போது, விக்கியின் கால்களைத் தடவி தவறான சமிக்ஞையைக் கொடுக்கும் காட்சி உங்களுக்கு நினைவில் வரக்கூடும். அது இந்த இடத்திலேயே படமாக்கப்பட்டிருக்கின்றது.

பின்னாட்களில் திரைப்படங்களினால் பிரபல்யம் வாய்ந்ததாக இந்த இடம் ஆகிவிட்டாலும் இதற்குள் ஒரு சோகமான வரலாறு இருக்கின்றது. ஸ்பெயினில் சர்வாதிகாரி பிரான்ஸிக்கோ ஃபிராங்கோவிற்கு எதிராக உள்நாட்டு யுத்தம் (1936-1939) நடைபெறுகின்றது. பார்சிலோனா உறுதியாக பிராங்கோவிற்கு எதிராகப் போராடியபோது, முற்றுகையை உடைக்க பிராங்கோ விமானத்தாக்குதல் நடத்துகின்றார். இந்தப் பிளாஸாவில் இரண்டு குண்டுகள் விழுகின்றன. முதல் குண்டில் இந்தத் தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த மக்களில் 30 பேரும், பிறகு 12 பேரும் கொல்லப்படுகின்றனர். இதில் 20 பேரளவில் சிறுவர்களாக இருந்ததனர் என்பது பெருஞ்சோகம். இத்தாக்குதல் நிகழ்ந்த சேதத்தை இப்போதும் மறக்கவிடாது நினைவூட்டியபடி பாதிக்கப்பட்ட சுவர் பாதுகாக்கப்படுகின்றது.

பார்சிலோனா பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம்வாய்ந்தெனினும், இன்றும் அதன் பெரும்பகுதியாக அரசவிழ்ப்பாளர்கள் (anarchists) இருக்கின்றார்கள் என்றும், அதற்கென தனியே ஒரு walking Tour இருக்கின்றதென எங்களுக்கு இந்த இடத்தின் விபரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சுற்றுலா வழிகாட்டி கூறியிருந்தார்.

இந்தச் சேதமடைந்த சுவருக்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகின்றது. ஃபிராங்கோவிற்கு எதிராகப் போராடிய அரசவிழ்ப்பாளர்கள், பலரை இதேயிடத்தில் சுட்டுக்கொன்ற பிராங்கோ அரசு, அதை மூடிமறைக்கவே விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியது என்றும் சொல்கின்றார்கள். எதுவாயிருந்தாலும், இலங்கையைப் போலவே தனது சொந்த மக்கள் மீது குண்டுத்தாக்குதலை நிகழ்த்திய ஒரு கொடுங்கோல் அரசுதான் ஃபிராங்கோவினுடையது என்பதும், பிறநாடுகள் பல 2ம் உலக மகாயுத்தத்தோடு ஜனநாயக ஆட்சியிற்கு வந்தபோதும், ஸ்பெயின் ஃபிராங்கோ மரணமாகிய 1975ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சியிற்குள் இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.


Churros

ஸ்பெயின் போனால் churros சாப்பிடாமல் வந்தால் 'சாபம்' கிடைக்குமென்று சாப்பாட்டுப் பிரியர்கள் கூறுகின்றார்கள். அதுவும் Churros , அதனோடு பிரத்தியேகமாய்த் தரும் சொக்கிலேட்டிற்குள் அமிழ்த்தி சாப்பிட்டால் அமிர்தமாக இருக்குமாம்.

இப்படி ஸ்பெயினில் Churros ஐச் சாப்பிட்ட ஆர்வத்தில், இன்னொரு நாட்டில் இருந்த ஆஜெண்டீனா கடையில் Churros வாங்கினால், அவர்கள் சீனியை மட்டும் மேலே தூவிவிட்டுத் தந்திருந்தார்கள். எனக்கென்னவோ அது எங்களின் வாய்ப்பனின் ருசி போல இருந்தது. வாய்ப்பனில் இருக்கும் வாழைப்பழம் மட்டும் அதில் 'மிஸ்ஸிங்'காக இருந்தது. ஆக கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் ஸ்பெயினிற்குப் போய், ஸ்பெயின் பெண்களின் கைகளிலிருந்து Churros வாங்கிச் சுவைத்தால் மட்டுமே அது Churros ஆகும்.


La Rambla

“The happiest street in the world, the street where the four seasons of the year live together at the same time, the only street on Earth that I wish would never end, rich in sounds, abundant of breezes, beautiful of meetings, ancient of blood: Rambla de Barcelona.”
-Federico García Lorca

La Rambla என்பது மரங்களும், பூக்கடைகளும், தெரு ஓவியங்களும், இன்னபிறவும் சூழந்த மிக அழகான கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீற்றர்கள் நீளும் ஒரு தெருவாகும். ஒரு முனையில் Plaça de Catalunya விலிருந்து தொடங்கி இன்னொருமுறையில் மிக உயரத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்தோபர் கொலம்பஸின் சிலையோடு முடிகின்றது. கொலம்பஸின் சிலையோடு பார்சிலோனாவின் கடல் தொடங்குகின்றது. கைகளால் காற்றின் திசையில் சுட்டிக்காட்டும் கொலம்பஸ் குறிப்பது அவர் 'கண்டுபிடித்த' அமெரிக்கா என்று பலர் சொன்னாலும், இந்தச் சிலை உண்மையான திசையின்படி சுட்டுவது அதற்கு எதிர்த்திசையிலான எகிப்தை என்று எங்களின் வழிகாட்டி நகைச்சுவையாகச் சொன்னார். Plaça de Catalunya என்பது ஒருவகையில் பார்சிலோனாவின் மத்தி. ஒரு திசையில் இதன் பழமை வாய்ந்த நகரான Gothic City இருக்கின்றதென்றால் அதன் மறுதிசையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுப்பப்பட்ட நவீன கட்டங்கள் விகசித்து நிற்கின்றன.


இருபக்கமும் மரங்கள் சூழ்ந்த La Rambla வினூடு நடந்துபோனால், மர்லின் மன்றோ மாடியில் காட்சியளிக்கும் Erotic Muesum ஐயும், மிகப் பிரசித்தம் பெற்ற உணவுச்சந்தையான La Boqueríaவையும் நீங்கள் எளிதில் அடையமுடியும். மனதை இதமாக்கிவிடும் இந்தத் தெருவில்தான் சென்ற வருடம் ஆவணியில் ஒருவர் வேகமாய் வாகனத்தை ஓட்டி 15 பேருக்கு மேலான மக்களைப் பலியெடுத்தும், இன்னும் பலரைக் காயங்களுக்கும் உட்படுத்தியதுமானதுமான துரதிஷ்டவசமான சம்பவமும் நிகழ்ந்திருந்தது.
                     


ஸ்பெயின் - 01

Saturday, September 29, 2018



ரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது.

La Sagarida Familla (Spain)

ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதாகும். உலகில் கட்டிமுடிக்கப்படாத ஒரு தேவாலயம் இந்தளவிற்கு புகழ்பெற்றதாக இருக்கின்றதா என்பது அரிதாகத்தான் இருக்கும்.

இது அந்தோனியோ கெளடியின் (Anthony Gaudi) மிகச்சிறந்த வடிவமைப்பில் உருவாகிய ஒரு தேவாலயமானது. மத்தியகால கோதிக் (Gothic) கட்டட வடிவத்தை உடையது. கோதிக் கட்டட அமைப்பானது வெளியில் பார்க்கும்போது icicles போன்ற வடிவத்துடன் வானை நோக்கும் கூரானவையாகவும், உள்ளே போய்ப்பார்க்கும்போது மாடவிதானங்கள் மிகுந்த உயரத்திலும் இருக்கும். இதன் அடிப்படையே இப்படி வானை நோக்கி மானிடர் நீண்டு சென்று கடவுளை அடைந்துவிடுவது என்பதாகும். அத்துடன் உள்ளே நாம் நின்று பார்க்கும்போது நம்மை அதன் வடிவமைப்பின் பிரமாண்டத்தில் மிகச்சிறியவர்களாக (கடவுளின் முன்) உணரச்செய்வதுமாகும்.

இதில் வானை நோக்கி நீளும் பத்து கூம்புகள் (இன்னும் சில கட்டிமுடிக்கப்படவில்லை) ஒவ்வொன்றும் கடவுள் அருளிய பத்துக்கட்டளைகளை (10 commandments) அடையாளப்படுத்துபவை. ஒவ்வொன்றிலும் அவை குறித்தான கதைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீளும் இந்தக் கட்டட நிர்மாணம், அந்தோனி கெளடி இறந்த நூற்றாண்டான 2026ல் நிறைவு செய்யப்படுமென கூறப்படுகின்றது.


Flamingo Dance

ஃப்ளமிங்கோ நடனம் இன்று ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. பாடல், ஆடல், கிற்றார் மற்றும் கைதட்டல் வழி இசையை மீட்டல் எனப் பல்வேறு கூறுகளை இந்த நடனம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று ஃப்ளமிங்கோ உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபல்யமாக இருந்தாலும், இது ஜிப்ஸிகளின் ஊடாக வந்துசேர்ந்த ஒரு நடனமாகும். ஸ்பெயினுக்குள்ளும், இந்தியா, ஈரான், எகிப்தினூடாக சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்துசேர்ந்த நாடோடிகளால் அந்தலூசியாப் பகுதிகளில் இது கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது. தொடக்கத்தில் தெருக்களில் நாடோடிகளால் ஆடப்பட்ட ஆட்டம், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பெயினின் கஃபேகளுக்குள்ளும், உள்ளக அரங்குகளுக்குள்ளும் நுழைந்திருக்கின்றது.

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோ வந்து வளர்ந்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதலில் நாடோடிகளால் கொண்டுவரப்பட்டு, பின்னர் ரொமாண்டிசக் காலத்தில் வளர்க்கப்பட்டு, பிராங்கோவின் ஆட்சியில் ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றப்பட்டதென்று கூறுகின்றார்கள். ஃபிராங்கோ தன் சர்வாதிகார ஆட்சியின்போது, ஸ்பெயினுக்குள் உல்லாசப்பயணிகளை வரவழைப்பதற்காகவும், தனது கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவும் ஃப்ளமிங்கோவைப் பாவித்திருக்கின்றார். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிகின்றபோது, ஃப்ளமிங்கோ தனக்கான ஓர் உயரிய இடத்தை ஸ்பெயினில் அடைந்துவிட்டிருக்கின்றது.

ஃப்ளமிங்கோ நடனத்தைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும், இதற்கெனத் தனித்துவமாக ஆடப்படும் அரங்கிற்குச் சென்று பார்த்தது இதுதான் முதற்தடவை. மிகச்சிறிய அரங்கு. முதல்வரிசையில் போய் அமர்ந்திருந்தேன். மெல்லிய இருளில், melancholyயான இசையில் ஃப்ளமிங்கோ இப்படி ஒரு உருக்கமானதும், eroticம் ஆன ஒரு நடனமாகவும் இருக்குமென எதிர்ப்பார்த்திருக்கவே இல்லை. வேறு பல்வேறுவகையான நடனங்களைப் பார்த்திருந்தாலும், அவற்றில் erotic ஆட்டமுறையால் மட்டுமில்லை, ஆடை முறைகளாலும் கொண்டுவந்திருப்பர். இதில் அப்படி எந்தவகையான 'கவர்ச்சிகரமான' ஆடை உடுத்தல்களும் இல்லாது, ஆட்ட முறையால் கொண்டுவந்தது வியப்பாக இருந்தது. இசை வாத்தியங்களைக் கூட அப்படிப் பெரிதாகப் பாவிக்கவில்லை. ஆனால் பாடலும், நடனமும் எங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவியபடி இருந்தது.

நான் ஃப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்தது பார்சிலோனாவின் பிரபல்யம் வாய்ந்த Los Tarantos என்கின்ற ஆடல் அரங்கில். இதே பெயரிலேயே பிரபல்யமான ஒரு திரைப்படம் ஃப்ளாமிங்கோ நடனத்தை அடிப்படையாகக் கொண்டு 1960களில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆட்டங்களைப் பார்த்த நீட்சியில் ஒரு சிறு ஆவணப்படத்தைப் பிறகு பார்த்தேன். அதில் ஃப்ளமிங்கோவின் இந்திய அடிவேர் தேடிவரும் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும் ஒப்பாரிப்பாடல்களில் அதன் சில கூறுகள் இருக்கின்றதென்று கூறுகின்றார். அதில் சின்னப்பொண்ணு தமிழ் ஒப்பாரிப்பாடலொன்றை உருக்கமாகப் பாடுகின்றார்.

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோவையும், கேரளாவில் கதகளியையும், இன்னபிற இடங்களில் வேறுவகை நடனங்களையும் பார்க்கும்போதெல்லாம், நாமுந்தான் எத்தகைய அற்புதகலைகளையும், அருமையான கலைஞர்களையும் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதை மதிக்கவோ, உலகின் பிற கலைகளுக்கு நின்று நிகராக நின்று நாம் சளைத்தவர்களில்லை என்று செப்பி எடுத்துச்செல்லவுந்தான், நம் சமூகத்தில் எந்தக்குரல்களும், உரிய அரசுக்களும் இல்லையென்ற சலிப்புத்தான் மேலிடுகின்றது.

ரமேஷ் பிரேதனின் 'ஐந்தவித்தான்'

Wednesday, September 26, 2018



ரணமில்லாது விட்டால் நமது வாழ்க்கை எவ்வாறிருக்கும் என்றேனும் கற்பனை செய்து பார்த்திருக்கின்றோமா? அவ்வாறு மரணத்தை இன்னுஞ் சந்திக்காது நூற்றாண்டுகளாக வாழும் இரு பாத்திரங்களினூடாக மொழியின் விளையாட்டைச் செய்துபார்க்கும் புதினமாக ஐந்தவித்தானை ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கின்றார். நாவல் 'மனநோயின் தோற்றமும் வளர்ச்சியும்' என்றும், 'மனநோயின் வளர்சிதை மாற்றம்' என்றும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

பகுதி ஒன்றில் மாதவன் என்பவனின் கதை சொல்லப்படுகின்றது. மாதவனின் மன/உடல் சிதைந்த தமக்கையின் மரணம், வீட்டை விட்டு வெளியேறிவிட்ட தகப்பன்,  அவ்வப்போது 'ஆட்டோக்காரர்' ஒருவரோடு உறவுகொள்ளும் தாய் எனப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அக்காவின் மரணம் இயல்பானதல்ல,  அவர் வன்புணர்ந்ததைப் பார்த்த சாட்சி மாதவன் என்பதை அறியும் தாய், அப்படி வன்புணர்ந்தவனை கொடூரமான முறையில் பழிவாங்குகின்றார். தகப்பனின் தேவையான அன்பும், தாயின் அரவணைப்பும் கிடைக்காத மாதவன் தனது தனிமைக்குள் சிக்குப்பட்டு அலைகின்றார்.

பிறகான காலங்களில் தகப்பனோடும், தாயோடும் ஒரு சுமூகமான வாழ்வு கிடைக்கும் என  மாதவனின் நம்பிக்கை கொள்ளும்போது,  மாதவனின் தாயார் எவரோ ஒருவருடன் ஓடிப்போய் விடுகின்றார்.  அதனோடு, தாயைப் பற்றி நினைக்கும் பொழுதுகளை மறந்து வளரும் மாதவன் வாழ்வில் இரண்டு பெண்களைச் சந்திக்கின்றார். ஒரு பெண் 'வர்க்கத்திற்கும்' மற்றப்பெண் 'சாதி'யிற்கும் தன்னைத் தாரைவார்க்க பெண் வாசனையில்லாது மிகுதிக்காலத்தைக் கழிக்கின்றார்.

ஒருபொழுது தனக்கான வீட்டைக் கட்டும்போது, தன் சகோதரி உயிர்விட்ட இடத்தில் தாழியொன்றைக் காண்கின்றார். அந்தத் தாழியிற்குள் இருக்கும் பனிக்குடத்திலிருந்து அவருடைய மகளான பூமிதா பிறக்கின்றாள். தனித்து பூமிதாவுடன் வாழும் மாதவனோடு, அவரின் முன்னாள் காதலியான தேவகி தன் குடும்பத்தினருடன் அருகில் வந்து சேர்கின்றார். பிள்ளையே இல்லாத தேவகியிற்கு, ழகரி என்னும் மகள் பிறக்கின்றார். மாதவன், கொஞ்சம் கொஞ்சமாய் தனிமைக்கு அல்லது மனநோயின் வளர்ச்சியிற்குள் போகின்றார். பூமிதாவும் வளர்ந்து, தகப்பனின் இருப்பு அச்சுறுத்த அவரை விட்டு விலகி இன்னொரு நகருக்குப் போகின்றார். தனது வீட்டிற்கு எவரும் வருவதைத் தடுக்கும் மாதவன், பூனைகளோடும், எலிகளோடும், பாம்புகளோடும், கறையான் புற்றுக்களோடும் வாழத்தொடங்குகின்றார்.

'நான் உனது மரணத்தை எதிர்பார்த்திருக்கின்றேன். வலிகளிலெல்லாம் தலையாய வலி இதுதான்' என மகள் பூமிதா சொல்வதைக் கேட்கின்ற மாதவன், மரணம் பற்றிய உரையாடலின் நீட்சியில் 'மகளே, மரணத்தைத் தொடும் வயதில் நீ இல்லை. மரணத்திற்குப் பிறகு ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாததற்குப் பெயர் மரணம். நீ பிறந்ததும் உனக்குப் பெயரிடுவது என்பது உனது மரணத்திற்குப் பெயரிடுவதுதான். உடம்பின் ஒவ்வொரு செயலும் மரணத்தை ஒத்திப்போடுவதே. வாழ்தல் என்பது மரணத்தைக் கொண்டாடுவது. வாழ்தலின் போதாமையுடன் மரணத்தைத் தொடுகிறோம். தொட்டதும், குழந்தையின் கையிலிருந்து வெடித்த பலூனுக்குள்ளிருந்த காற்று நீ' என்கின்றார். மகளிடம் விடைபெறும் மாதவன் ஒருநாள் தன் வீட்டிலிருந்து முற்றுமுழுதாக நீங்கிச் செல்வதுடன் இப்புதினத்தின் முதல்பகுதி முடிவுறுகிறது.

ரண்டாவது பகுதியில் தேவகியும், மாதவனும் தாங்கள் 'நாடக அரங்கில்' இருப்பது மாதிரியான பாவனையுடன் தங்களினதும், தாங்கள் அல்லாததுமான பல்வேறு கதைகளைச் சொல்கின்றார்கள். இருவரும் தாம் நூற்றாண்டுகளாக இறக்காது இருப்பதையும், பல்வேறு காலங்களில் பல்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்ந்த அனுபவங்களையும் எண்ணற்ற கதைகளினூடாக நம் முன் விரித்து வைக்கின்றனர். பல்வேறு கதையாடல்களினூடாக முதல் பகுதில் குறிப்பிடப்படும் ழகரியும், பூமிதாவும் இந்தப் பகுதியிற்கும் வந்து சேர்கின்றனர். ழகரியை இவர்கள் இருவரும் தத்தெடுகின்றனர்.

இந்தப் பகுதி முழுவதும் உலகின் வரலாறு, தமிழ் மனங்களின் இயங்குநிலை, பல்வேறு புனைவுகள்/தொன்மங்கள், அவை எங்கு தொடங்குகின்றன, எங்கு முடிகின்றன என்று தெளிவான பிரிப்புக்கள் இல்லாது பல்கிப்பெருகின்றன. வாசிக்கும் நமக்கு இது சுவாரசியமாகவும், சிலவேளைகளில் திகைக்க வைக்கின்றதாகவும், அவ்வப்போது சில விடயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றபோது அலுப்பாகவும் (முக்கியமான இரண்டு ஆண்களோடு ஒரு பெண் பகிரும் வாழ்க்கை முறைமை) இருக்கின்றன.

மேஷ் பிரேதனின் மொழியின் வசீகரமென்பதே பல்வேறு கதையாடல்களினால் தன் புனைவை நெய்துகொண்டு போவதைச் சொல்லலாம். அத்தோடு தன் மொழியால் கட்டிய சிகரங்களைக் கூட, பிறகு தயவுதாட்சண்யமில்லாது நொறுக்கிக்கொண்டும் போகின்றார். உணவில்லாது கூட சில நாட்கள் உயிர்வாழக்கூடிய மனிதர்களால், கதைகளில்லாது ஒருநாள் கூட வாழமுடியாது. கதைகளால் ஆனவர்களே மனிதர்கள். அவர்களின் மரணத்தின்பின் பல்கிப்பெரும் கதைகளினாலேயே ஒருவர் மரணமற்றவராகின்றார் என்று ரமேஷ் வார்த்தைகளில் செய்யும் வித்தைகள் தமிழ்ச்சூழலில் சிலாகித்துப் பேசப்படவேண்டியவை.

ஒரேவகையான நொய்ந்துபோன வார்தைகளால்/கதையாடல்களால், உணர்ச்சிகரமான சாம்பாரை மட்டும் விட்டு இலக்கியச் சோற்றில் ஒரேசுவையுடன் மட்டும் சாப்பிட விரும்புவர்க்கு, இந்த நடை அவ்வளவு உவப்பில்லாதிருக்கும். அத்துடன் விரிந்த  தத்துவ, வரலாற்று வாசிப்புக் கொண்ட ஒருவரால்தான், இவ்வாறு அதனூடாக தனக்கான மாய யாந்தீரிக உலகை விரிக்க முடியும். மற்றவர்களால் போலி செய்யதான் முடியும், அசலைப் படைக்கமுடியாது.

ரமேஷ்(-பிரேம்) மொழியில் செய்யும் புதுமையின் திகைப்பு, எனக்கு இப்போதல்ல பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஒருபோதும் அதுவரை பழகியிராத மொழியில் ரமேஷ்-பிரேமின் 'சொல் என்றொரு சொல்' வாசித்தபோதும் வந்திருந்தது. கிட்டத்த அதே பாணியாக இருந்தாலும், இப்போது ஐந்தவித்தானையும் அலுப்பில்லாதும் அதேவேளை வியப்போடும் வாசிக்க முடிகின்றதென்றால் அது ரமேஷ் கண்டடைந்திருக்கின்ற 'மொழியின் மர்மம்' எனத்தான் சொல்லவேண்டும்.

இதே மொழியின் வளத்தோடு கோணங்கி தன் பயணத்தை உற்சாகமாய்த் தொடங்கி,  பிறகு அதற்குள் தொலைத்து/தொலைந்துபோனது  போலின்றி, ரமேஷ் அதன் வசீகரமான மாயச்சூழலிற்குத் தன்னை அவ்வப்போது தாரை வார்த்தாலும் அதிலிருந்து மீளும் சூட்சூமமும் தெரிந்த கதைசொல்லியாக இருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டியது.

"கொல்லப்பட்ட புரட்சியாளர்கள் மூன்றாம் நாளில் உயிர்த்தெழவேண்டும் என்ற ஏக்கம் எல்லாக் காலத்திலும் மக்களுக்குள் சுரக்கிறது. விடுதலை பற்றிய கதைகளிலிருந்தே, அக்கதைகள் தரும் மரண பயத்திலிருந்தே இனத்தொடர்ச்சி மீதான அக்கறை பிறக்கிறது. இனக்குழுவில் தனியொருவர் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. சமூக மரணம் என்பது சாத்தியமில்லை. யாரொருவரின் கதைகூறலுக்குள்ளிருந்து நீ வெளிப்படுகிறாயோ அக்கணம் மீண்டும் உயிர்க்கிறாய். புரட்சியாளருக்கு நிரந்தர இறப்புமில்லை இருப்புமில்லை. தான் கடவுளாகவும் இச்சையிலிருந்து யாரும் தப்பியதில்லை. கடவுள், அரசன் என யாரையும் சார்ந்திராத விடுதலை சாத்தியமா? விடுதலை என்ற கருத்துரு சமூக விளைவு. சமூகத்திலிருந்து வெளியேறிய தன்னிலையே தடையற்ற விடுதலையே நுகரமுடியும் (ப.135)."
------------------

நன்றி:  'அம்ருதா', ஐப்பசி, 2018