கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாககன்னி

Thursday, November 30, 2006

போர் பேரலையாகி
மூர்க்கமாய் எற்றித்தள்ள
சமுத்திரங்கள் தாண்டி
பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன்
புரட்டுகின்றான்
பூர்வீகநிலம் அபகரிக்கப்படும்
வரலாற்றின் பக்கங்களை

இவன்
இருப்பிழந்த வலியின்
கனந்தாங்காது துடித்த தேவதைகள்
மழைக்காலத்தில் அனுப்பிய
நாககன்னியுடன்
பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க
அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின
குழந்தைகள் குதூகலத்துடன்

இங்கு
வாழ்வு செழிப்பாகவும்
இயற்கை தாலாட்ட
எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும்
தற்செயலாய் வந்திறங்கிய
கடற்கொள்ளையரிடம்
செய்தி கொடுத்தனுப்பினான்;
உயிருக்காய்
அலைமேல் தத்தளிக்கும்
தன் நாட்டு மக்களுக்கு.

கூட்டமாய் வந்தவர்கள்
தம்வாழ்வு
துப்பாக்கிமுனையில் தீர்மானிக்கப்பட்ட
பொழுதுகள் மறந்து
பசும்மரங்களை தீயிட்டு கொளுத்தி
இசைமீட்டிய பறவைகளை
நாண்பூட்டி வதைக்கவும்
தொடங்கலாயினர்

விரும்பியதை புனைந்து
விரும்பியதை அருந்தி
இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை
வன்மத்துடன் புணரத்துடித்த
குறிகளின் வசீகரப்பேச்சில்
தன்சுயத்தையும் தொலைத்தான்
ஆதிமனிதன்

சூரியன் துணையிருக்கும்வரை
அவளை அடைதல் ஆகாதெனும்
உண்மை கசக்க
தங்களைப் போல பிறப்பால்
சாதிப்பச்சை குத்தப்படாதவள்
இழிபிறவியென கற்பிதங்கள் இயற்றத்தொடங்கினர்
பெயர்ந்தவர்கள்

ஓர் அமாவாசையிரவில்
நாககன்னியையும்
பச்சை குத்தப்படமுடியா குழந்தைகளையும்
சாதியுருவேறியாடி
கொன்று புதைக்க
வெகுண்டெழுந்தான் ஆதவன்
விழிகள் சிவக்க

மீண்டும்
நாடற்றவர்களான இவர்களை
இனி
தேவதைகளும்
அரவணைக்கப்போவதில்லை.

(2006)
(காலம் - இதழ் 27)


'வாழும் தமிழ்'

Saturday, November 25, 2006

-காலம் சஞ்சிகை ஆதரவில் நடந்த புத்தகக்கண்காட்சி-
(ரொரண்டோ)

P1010020


P1010018


P1010035


P1010032

P1010034


P1010026

P1010022

திரைப்படங்கள் திரையிடல், இன்னிசைக்கச்சேரி போன்றவற்றோடு 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சி நடந்தேறியது. திரையிடலின்போது குறித்த நேரத்துக்குப்போக முடியாதபோதும், இன்னிசைக் கச்சேரியை கேட்கமுடிந்தது. நீண்டநாட்களுக்குப் பின் பாரதியார் பாடல்களை இசையுடன் இனிய குரல்களுடனும் கேட்டது நல்லதொரு அனுபவம்.

வாங்கிய சில புத்தகங்கள்

P1010048

(1) முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன - ரமேஷ்-பிரேம்
(2) இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் - பிரேதா - பிரேதன்
(3) பெரியார்: தலித்துக்கள் முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்
(4)அழுவதற்கு நேரமில்லை - தாமரைச்செல்வி
(5) அமைதியான ஒரு மாலைப்பொழுதில் (மொழிபெயர்ப்புக் கதைகள்) - எம்.எஸ்
6) கனவுப்புத்தகம் - ஜே.பி. சாணக்யா
(7) நான் பேச விரும்புகின்றேன் (கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து....) - ச.தமிழ்ச்செல்வன்
(8) மீனுக்குள் கடல் - பாதசாரி
(9) அந்தமான் நாயக்கர் - கி.ராஜநாராயணன்
(10) வெயிலோடு போய் - ச.தமிழ்ச்செலவன்
(11) அகாலம் - சமயவேல்
(12) வாளின் தனிமை - ச.தமிழ்ச்செல்வன்

அன்புடன் கிடைத்தவை
(13)வலை - டானியன் அன்ரனி (டானியல் அன்ரனியின் சகோதரர் டானியல் ஜீவா தந்தது)(14)காலம் - இதழ் -27 ( 'காலம்' செல்வம் தந்தது; கவிதையென்று எதையோ ஒன்றை சஞ்சிகைக்காய் எழுதிக்கொடுத்த கஷ்டத்திற்காய்... )

மூன்று பெண்களின் கவிதைகள்.

Thursday, November 23, 2006

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது

நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.

ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.

உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?

உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக... பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.

எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.

- ரோஸ்மேரி (மலையாளம்)
.......

வாமனன்

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
ஓரடி பூமிமேல் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேசியைப்போல பேசுவது என்ன்?
குடையும் மறைப்புமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
இரண்டாவது அடி ஆகாயத்தில் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேட்டைக்கிறங்கிய
யட்சியைப்போல பேசுவது ஏன்?
மறைப்பும் குடையுமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
எனக்கு உன்மேல் நேசம்
ஆனால்
மூன்றாமடியை என் உச்சியில் அழுத்தி
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்ன இதன் அர்த்தம்?

முடிவடையாத அந்த விசாரணைக்கும்
காலடியிலிருந்து நழுவிய பூமிக்கும்
தலைமுறைகளிடமிருந்து மறைந்த ஆகாயத்துக்கும் மேலாக
நான் சொன்னேன்

எனக்கு உன்னிடம் நேசம்
குடையும் மறைப்புமில்லாமல்..
பயமும் பாசாங்குமில்லாமல்.

-சாவித்திரி ராஜீவன் (மலையாளம்)
........
(அஸின், பாவனா போன்ற மலையாளச்சேச்சிகளைப் பார்த்து மட்டும் ஜொள்ளுவிடாமல், மலையாள ஆக்க இலக்கியங்களையும் கொஞ்சம் அறிந்துகொள்க என்று மலையாளக் கவிதைகள் சிலவற்றை அனுப்பி வைத்த தோழியின் அன்புக்கு நன்றி.)
.....

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.

(சுகிர்தராணி)
நன்றி: புதியகாற்று

சுகிர்தராணியின், ஆரம்பக்காலக் கவிதைகள் மற்றும் 'இரவு மிருகம்' தொகுப்பை வாசித்து அவரில் மதிப்பு இருந்தாலும், தொடர்ந்து ஒரே வித்மான கவிதைகளையே எழுதித் தள்ளுகின்றார் என்ற சலிப்பு அண்மைக்காலமாய் அவர் எழுதிவரும் கவிதைகளை வாசிக்கும்போது வருகின்றது. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமான வாசிப்பனுபவமாய் இந்தக் கவிதை -எனக்கு- தோன்றியது.

சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்

Thursday, November 09, 2006

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.

('Lesson' by Maya Angelou)


புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்து அநேகமாய் வலிகளே வெளியேறுகின்றன. பிரியும் பக்கங்களிலிருந்து இறங்கும் வலிகளைப் பின்தொடரும் ஒவ்வொருபொழுதிலும் என்னை அவை அவிழ்க்க முடியாத புதிர்களுக்குள் சிக்கவைத்துவிட்டு வெளியேறி விடுகின்றன. நானோ, இது புத்தகத்தின் வாதையா இல்லை என் அனுபவங்களின் வாதையா என்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றேன்.

கனடாவுக்கு வந்து ஒரு வருடம் இருந்திருக்குமா? அதுவரை அனுபவித்திராத காலநிலை; ஆங்கிலமொழிப் பரீட்சயம் அவ்வளவாய் இல்லை என்கின்ற அவதிகளினூடாக விழி பிதுங்கிக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்குணம் மிகுந்தவனாய், கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவனாய் அறிமுகமாயிருந்தான் அவன். புலம்பெயர்ந்த அநேகருக்கு போர் தந்தவலிகளைப் போல, அவனுக்குள்ளும் இரத்தக்கறை படிந்த கடந்தகாலத்தின் பக்கங்கள் உறைந்துபோய்க் கிடந்தன. சிறுவயதில் அவனது தாயார் அவனது கண்முன்னாலேயே இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பிற நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அதை விரிவாகக் கேட்கும் தைரியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. அவனது துயரநதி பெருக்கெடுத்துப் பாய்ந்தால் அதைக்கட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எதன் பொருட்டும் அவனது தாயாரை அவன் திரும்பிப் பெறமுடியாது என்ற வாதையும் சோர்வும்தான் என்னை இதுகுறித்து பேசுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு கணணி என்பதே என்னவென்று அறிமுகமாயிருந்தது. கோடைகாலத்தில் நான் எடுத்த கண்ணி சம்பந்தப்பட்ட பாடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியாக பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னால் தொடர்ந்து இதைக் கற்கமுடியாது என்று சோர்வாய் இருந்தபொழுதில் இந்த நண்பன்தான் 'எல்லாவற்றின் அறிமுகங்களும் இப்படித்தான் பயமுறுத்தும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் முடிச்சு அவிழ நமக்கு அவை நெருக்கமாகிவிடும்' என்று பரிவான வார்த்தைகள் பேசி என்னை உற்சாகப்படுத்தியவன். பிறகு கணணியில் இருந்த சுவாரசியத்தை விட -வருடத்தில் குறுகிய காலம் வரும் கோடையில்- வண்ணமயமாய்த் திரியும் காரிகைகளில் ஈர்ப்பு வந்து அப்பாடத்தைத் தொடராது இடைநடுவில் நிறுத்தியிருந்தாலும், இன்றும் புதிதாய் எதையாவது கற்றுக்கொள்ளும்போது அவனது அந்த உற்சாக வார்த்தைகள்தான் உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

பிறகு நண்பன் ஒருநாள் இறந்துபோனான். அவன் தேடிய மரணத்தின் வழி மிகக் கொடூரமானது. தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டான். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் தான் தப்பிவிடக்கூடுமோ என்று யோசித்தோ என்னவோ தன்னுடலை நீண்ட பொலித்தீனால் இறுக்கக்கட்டி பெற்றோலை ஊற்றியிருக்கின்றான். சம்பவம் கேள்விப்பட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தபோது பசும்புல்வெளியில் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தான். கடைசிக்கணத்தில் நண்பன் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பியிருப்பான் என்பதை கருகிய அந்தப்புற்கள் மட்டுமே அறியும்.

ஏனிந்த முடிவை எடுத்தான் தோழன்? அவனைச் சிலிர்க்க வைத்து குழம்பிப்போன காதல் என்றார்கள். அவனது தாயின் மரணத்தை நேரில் கண்ட மனப்பிறழ்வு என்றார்கள். காரணங்களைக் கண்டறிந்து என்ன செய்யப்போகின்றோம்? எங்களுக்காய் திரும்பி அவன் உயிர்த்தெழுந்து வந்து பாடசாலை வாசலில் சிரித்துக்கொணடு நிற்கவா போகின்றான்?

எனினும் அவன் மரணத்தோடு -என்றுமே அழித்துவிடமுடியாததாய்- ஒரு குற்றவுணர்வு எனக்குள் குந்திக்கொண்டது. அவனது மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான் நானும் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தேன். வகுப்புக்களில் அளவுக்குமதிகமான மெளனத்தையும், நூலகங்களில் தனித்திருக்கும் தனிமையும் கண்டு, என்னில் ஒருவித பரிவான உணர்வு அவளுக்குள் தலைத்தூக்கியிருக்கலாம். அதை 'தெய்வீக'க்காதல் எனக் கற்பிதங்செய்துகொண்டேன் நான். 'இப்போது பதினாறு வயது, உனக்கு என்னைப் பிடித்திருந்தால் இன்னும் நான்கு வருடங்கள் காத்திரு' என்று கூறி இன்னுமின்னும் கனக்க சரளமான ஆங்கிலத்தில் சலசலவென்று கதைத்துக்கொண்டே போனாள் அவள். எனக்கு அவளின் உரையாடலில் வந்த காதல் என்ற ஒரு வார்த்தையே போதுமானதாயிருந்தது நிறையக் கனவுகளை வளர்க்க. நான்கு வருடங்கள் காத்திரு என்றவள், நாற்பது நாட்களுக்கும் குறைவான நாட்களில் முகத்தைத் திருப்பி விறைத்துக்கொண்டபோது மனது உடைந்துபோனது.

சங்ககாலத்தில் கைக்கிளைக்காதலால் மடலேறி மாய்த்துக்கொண்ட யாரோ ஒருவன் எனக்கு உறவாயிருந்து அவனது மரபணுக்கள் என்னுள் கடந்தப்பட்டிருக்க வேண்டும் போல. தற்கொலைக்கு முயற்சித்தபோது -அதைக் கச்சிதமாய் நிறைவு செய்வதற்கான துணிவின்மை மற்றும் அம்மாவின் கடைசி நேர நுண்ணுணர்வு- என்னைக் காப்பாற்றி இப்போது இதை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி நான் முயற்சித்தேன் என்றும் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்(?!) என்றும் அந்த நண்பனிடம் அன்று மனம் திறந்து பேசியிருந்தால், அவனும் தன்னம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். தற்கொலை மட்டுமே ஒற்றைவழியல்ல; வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று யோசித்து, தனது மரணத்தை இயற்கை தேர்ந்தெடுக்கட்டும் என்று தோழன் முடிவெடுத்து எங்களில் ஒருவனாய் இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

இந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதில் -ஆகக்குறைந்தது எனக்கு நெருக்கமானவர்களிடம்- கவனமாயிருக்கின்றேன். பிறகொருபொழுதில் தோழியொருத்தி நிறைய தூக்க மாத்திரைகள் எடுத்து அதிஸ்டவசமாய்த் தப்பி, அடுத்த முறை தற்கொலையைத் திருத்தமாய் செய்வேன் என்று என்னிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். வைத்தியசாலையில் இருந்து வந்து அடுத்தநாளே -என்ன எழுதுகின்றேன் என்று தெரியாமல்- பக்கம் பக்கமாய் தற்கொலை குறித்து நிறைய எழுதி அவளிடம் கொடுத்திருக்கின்றேன் (இப்போது அதை நானோ இல்லை தோழியோ வாசித்துப் பார்த்தால் எவ்வளவு குழந்தைத்தனமாய் அது இருக்கும் என்பது வேறுவிடயம்). மஞ்சள்நிற ரோஜாப்பூக்களுடன் அவளைச் சந்தித்து - மனந்திறந்து பேசட்டும் என்று- ஒரு முழுநாளை அவளுடன் வளாகத்தின் study loungeல் கழித்ததும் நினைவிலுண்டு. 'ஒரு நாளும் பூக்கள் எனக்காய் வாங்கித் தராத நீ, நான் சாகப்போகின்றேன் என்றவுடன் ரோஸஸை வாங்கி தருகின்றாயா?' என்றார். 'அப்படியொன்றுமில்லை; பூக்கள் விற்கும் பெண்ணில் ஒரு crush வந்து அவரைச் சைட் அடிப்பதற்கு பூக்களை வாங்கவேண்டியதாய்ப் போய்விட்டது, அதுதான் வாங்கினதை இனி வேஸ்டாக்கக் கூடாது என்றுதான் உங்களிடம் தந்தேன்' என்று கூற, 'மவனே...' என்று ஆரம்பித்து அவர் திட்டத்தொடங்கியபோது, தோழி விரைவில் இயல்புநிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்தது.

(II)

நிறைவேறாத ஆசைகள் கனவுகளாய் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் என்பார்கள். எனக்குள் தற்கொலை குறித்த எண்ணங்கள் கனவுக்கும் நனவுக்கு இடையிலான பாதையில் அடிக்கடி மூடிய பனியாய் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில்தான் சில்வியா பிளாத்தும், சிவரமணியும் எனக்கு நெருக்கமாகி இருக்கின்றார்கள் போலும். சிவரமணி இறந்துவிட்டார் என்று அக்கா யாழ் வளாகத்திலிருந்து ஒரு பின்னேரப்பொழுதில் கலங்கிய முகத்துடன் சொன்னபோதுதான் தற்கொலை குறித்த முதற்குறிப்பு எனக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

சிவரமணி எனக்கு முதலில் கவிஞையாக அறிமுகமானவரல்ல; அக்காவின் தோழியாகத்தான் அறிமுகமானவர். சிறுவயதுகளில் அக்காவின் அல்பங்களில் அவரின் படத்தைப் பார்த்து -கன்னக்குழி விழ அழகாகச் சிரித்துக்கொண்டிருப்பவர்- ஏன் இப்படியான முடிவை தேடினார் என்றுதான் அதிகம் யோசித்திருக்கின்றேன். 'கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாயிருக்கப் பழகவும்' என்ற வலி(மை) நிறைந்த வார்த்தையை அக்கா கத்தரித்து வைத்திருந்த சிவரமணியின் படத்திலிருந்துதான் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது. இந்த வார்த்தை பல இடங்களில் அமைதியாக இருக்கச் செய்து தேவையில்லாத மன உளைச்சல்கள் என்னை நெருங்கவிடாது தடுத்திருக்கின்றது. சில்வியா பிளாத் தற்கொலை குறித்து வெளிப்படையாக எழுதியதைப் போன்று சிவரமணி தற்கொலை குறித்த குறிப்புக்களை நமக்காய் விட்டுச்சென்றதில்லை. சில்வியா 'சாவதும் ஒரு கலை' என்று சொன்னதோடு மட்டுமின்றி, தனது ஒரு நீண்டகவிதையில் எழுதியதுமாதிரியே தன் தற்கொலையின் வழியையும் தேர்ந்தெடுதெடுத்தவர். சில்வியாவின் கவிதைகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகரின் பொருட்டு சில்வியா மீண்டும் தற்கொலை செய்துகொள்கின்றார், அந்த வாசகர் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்ற பதட்டத்துடன்.

இன்றையபொழுதில் எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களை கேள்விப்பட்டும் வாசித்தும் விட்டாயிற்று. பெறுபெறுகள் குறைகின்றது என்ற பயத்தில் -நதிக்குள்-, அம்மா தன்னை அதிகம் திட்டிவிட்டார் என்பதற்காய் -நெடுஞ்சாலையில்-, நீ என்னை நேசிக்கவில்லையென்றால் இறந்துவிடுவேன் என்று கண்ணித்திரையில் எழுத்துக்கள் உறைந்துகிடக்க - அடுக்குமாடிக்கட்டட்டத்தில்- என எத்தனையோ சம்பவங்கள் நினைவின் அலையில் புரள்கின்றன. ஏன் இதை எழுத ஆரம்பித்த சென்ற வாரத்திற்கும், இப்போது எழுதி முடிக்கும் இந்த வாரத்திற்கும் இடையிலான வார இறுதியில்கூட, தமிழர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு - domestic violence பெரும்பங்கு வகித்தது என்றாலும்- தானும் தற்கொலை செய்திருக்கின்றார் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

பனிக்காலம் ஆரம்பிக்கின்றது. வந்து இறங்கிய புலத்தில் வேர்களையும் பதித்து அடுத்த சந்ததிகளின் விழுதுகளும் வளரத்தொடங்கிவிட்டன. ஆனால் பனிப்புலத்தை உழுது -ஈழத்தில் இருப்பதைவிட மோசமாய்- சாதி, சமயம், புரளி, அந்தஸ்து என்று 'அருமையான' விளைச்சல்களை அமோகமாய் பெற்றுக்கொண்டிருக்கின்றோமே தவிர சக உயிர்களின் மதிப்பை இன்னும் உணர்ந்தோமில்லை. சாதி, சமயம், கெளரவம் இன்னபிறவற்றால் மன அவசத்தையோ தற்கொலையையோ, வன்முறையையோ தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று எப்போது எமக்கு உறைக்கப்போகின்றது?

இனி, சூரியன் புதைந்துபோன வானப்பின்னணியைப் போல எம் மனங்களையும் எரித்துச் சாம்பராக்க-winter blue- விரைவில் வரப்போகின்றது. வெளியே -நினைத்த நேரத்தில் உலாத்தித்திரிந்து புத்துணர்ச்சி பெறுவதைத் தடுத்து - பனியும் காற்றும் பயங்கரமாய்ச் சுழன்றாட, இழந்துபோன எவற்றையோயெல்லாம் அசைபோட்டு மனது குழம்பிச் சிதறப்போகின்றது.

கொஞ்சம் கனிவு தரும் வார்த்தைகள்; மனந்திறந்து பேச சில நிமிடங்கள் என்று சக மனிதருக்காய் சிறுபொழுதை ஒதுக்கும்போது - உங்களை அறியாமலே- நடக்கவிருக்கும் ஒரு தற்கொலையை நீங்கள் நிறுத்திவிடவும் கூடும். ஆதியில் மடலேறியவனின் மரபணுவை கொண்ட என்னைப் போல, யாரேனும் ஒருவர் -தான் இன்று வாழ்ந்துகொண்டிருப்பதற்கு- நீங்கள்தான் காரணமென்று நாளை நன்றியுடன் ஒரு குறிப்பை அன்பு ததும்ப உங்களுக்காய் எழுதவும் கூடும்.