கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தாழம்பூ குறிப்புகள்

Monday, October 30, 2017

The Kindness Diaries

வசதியான வாழ்க்கை வாழும் ஒருவன், பணியின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றான். ஒருநாள் தனது பழைய (1978) மஞ்சள் மோட்டார் சைக்கிளுடன் எல்லாவற்றையும் துறந்து பயணிக்கத்தொடங்குகின்றான்.

அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா ஆசியா என நிலப்பரப்புகள் விரிந்தபடியே இருக்கின்றன. இதில் என்ன வியப்பியிருக்கின்றது, மனிதர்கள் இப்படிப் பயணித்தல் இயல்புதானே என நீங்கள் நினைக்கலாம். இந்த மனிதன் பொருட்களாலும்/பணத்தாலும் மட்டுமே நிரம்பியது இவ்வுலகு என்பதை மறுதலித்து, பணமில்லாது பயணிக்கத் தொடங்குகின்றான்.

தெரியாத மனிதர்களிடம் உணவு வாங்கித்தரச் சொல்லி, அந்நியமான நிலப்பரப்புகளில் யாரோ ஒருவரின் உதவியுடன் பெற்றோல் நிரப்பி, இரவுகளிலும் யாரோ தெரியாத ஒருவரின் வீட்டில் தங்கவும் செய்கின்றான். அதாவது இந்த உலகில் மனிதர்களின் அடிமனப்பண்பு என்பது பிறருக்கு உதவிசெய்தலும், உணவளித்தலும் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்கின்றான்.  எப்போதும் போல மிக அடிப்படை வசதிகளுடன் வாழும் எளிய மனிதர்களே மிகப்பெரும் இதயத்துடன் அவனை ஒவ்வொரு நிலப்பரப்புக்களிலும் வரவேற்கின்றனர். அந்த மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கதைகள் நமது நெஞ்சை ஆழமாய்த்தீண்டுகின்றன. எவரென்று தெரியாது தனக்கு உணவும், இரவு உறங்குவதற்கும் இடமுமளிக்கும் மனிதர்களுக்கு அவன் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் உதவி செய்தபடி போய்க்கொண்டே இருக்கின்றான்.

மனதை நெருட வைக்கும், சகமானிடர் மீது அளப்பரிய நேசம் வைக்கும் இந்தப் பயணம் ஆவணமாக்கவும் செய்யப்பட்டிருக்கின்றது. Leon Logothetis என்கின்ற இந்த மனிதனின் 'kindness one' எனப் பெயரிட்ட மஞ்சள்நிற மோட்டார்சைக்கிள் பயணத்திற்கு சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் டயரிகளே' முதன்மைக் காரணமாய் இருந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Feb 25, 2017)


War Machine

ஆப்கானிஸ்தானில் புதிய இராணுவத்தளபதியாகப் போகும் ஒருவரின் நிலைப்பாட்டிலிருந்து இந்தப் படம் பேசுகிறது. Brat Pitt  வழமை போலின்றி, அவர் இதில் மாற்றியிருக்கின்ற பேச்சு மற்றும் உடல் மொழி வித்தியாசத்தால் உடனே இதற்குள் நுழைவது கடினமென்றாலும், பிறகு சுவாரசியமாகப் பார்க்க முடிகிறது. முக்கியமாய் ஒரு நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் எந்தப் படையும் அங்குள்ள மக்களின் மனங்களை வெல்லமுடியாது எனவும், இவை எதுவுமே வெல்லப்படமுடியாத போர்கள் என்பதையும் இப்படம் சொல்ல விழைவதால் முடியும்வரை பார்க்கமுடிகின்றது.

அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு, 'ஒரு பத்து கிளர்ச்சியாளர்கள் இருந்து அதில் எட்டுப் பேரைக்கொன்றால், உங்கள் கணக்கின்படி இருவரே மிஞ்சியிருப்பார்களென நினைப்பீர்கள்; ஆனால் உண்மையான போர்க்களத்தில் அவ்வாறில்லை 20 பேர்கள் புதிதாய் தோன்றுவார்கள். எனெனில் கொல்லபப்டும் ஒவ்வொருவரினதும் உறவினர்கள்/நண்பர்கள் தமது வெஞ்சினத்தைக் காட்ட ஆயுதம் ஏந்துவார்கள் என்பதே யதார்த்தம்' என்பார் ஓரிடத்தில் Brat Pitt . தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு நகரைக் கைப்பற்றும் நோக்குடன் பெரும் படையுடன் அமெரிக்கா இறங்கும்போது, மக்களும் கொல்லப்படுகின்றார்கள். ஒரு இராணுவத்தளபதியாக அதற்குப் பொறுபேற்று அந்த மக்களிடம் சென்று மன்னிப்புக் கேட்கும்போது அந்த மக்கள் இறுதியில் சொல்வது: நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என்பதே.

சொகுசாக வாழும் யாரோ சிலரின் விருப்பிற்காய், வெல்லமுடியாப் போரில் சிக்கித்தவிர்க்கும் ஓர் அமெரிக்க இராணுவத்தை இதில் பார்க்கின்றோம். ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில் வெல்லமுடியாப் போரில் 2 நாடுகளில் போய் இறங்கினோம், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இப்போது ஏழு நாடுகளாக கூடிவிட்டன என ஒரு பாத்திரம் சொல்வதும் கவனிக்கவேண்டியது.

(Jun 06,2017)


மாவீரன் கிட்டு

'மாவீரன் கிட்டு' அண்மைக்காலத்தில் வெளிவந்த படங்களில் முக்கியமானது. சாதியக் கொடுமைகளைத் தெளிவாகப் பேசியதோடல்லாது, வெளிப்படையாகவே தலித்துக்களின் பக்கம் சார்பெடுத்து காட்சிகளை தனக்குள் வரைந்தும் கொண்டிருக்கிறது. சசிக்குமார் போன்றோரின், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமிதங்களை அலுக்கவும்/எரிச்சலும் வரச்செய்யும் திரைப்படங்களை மானுடவியலின் மூலம் நியாயப்படுத்தும் ஆய்வாளர்கள்/ஆதரவாளர்கள் இந்தத் திரைப்படத்தை தலையில் வைத்தல்லவா கொண்டாடியிருக்கவேண்டும். நமக்குள் இப்படியொரு திரைப்படம் வந்திருக்கின்றதே என்று 'உனக்குள் ஓடுவது தமிழன் இரத்தம் என்றால்' என சமூகவலைத்தளங்களில் எதையெதையோ எல்லாம் பகிர்பவர்கள் இதையல்லவா அதிகம் பகிர்ந்து விவாதித்திருக்கவேண்டும்?

Sairat, Kismath போன்ற படங்களில் காட்சிகளால் நம்மை நெகிழவைத்ததுபோல காட்சிகளின் அழகியலுக்கு அதிக முக்கியம் கொடுக்காது, எல்லாவற்றையும் உரையாடல்கள் மூலம் கொண்டுவரும் எத்தனிப்புக்கள் போன்ற குறைகள் இப்படத்தில் இருந்தாலும் பேசுபொருளை எவ்வித சமரசமுமின்றி, நம் சமூகத்தின் கொடுமைகளை அப்படியே காட்டியிருப்பதால் இத்திரைப்படத்தை எடுத்த சுசீந்திரனை நாம் மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

(Jan 28,2017)

Let Her Cry

Monday, October 16, 2017


ஷோக ஹந்தகமவின் 'Let Her Cry' ஒரு பேராசிரியருக்கும் அவரிடம் கல்வி கற்கும் மாணவியிற்கும் வரும் நெருக்கத்தையும் விலகலையும் பற்றிய படமிது. இவ்வாறான ‘முரண்’ உறவுகள் பல்வேறு படங்களில் காண்பிக்கப்பட்டுவிட்டாலும், இந்தப்படத்தில் வரும் மாணவி தனது காதல் மிக உண்மையானது, அதுவின்றி தன்னால் வாழமுடியாது எனவும் பேராசிரியரைப் பின் தொடர்ந்தபடி இருப்பார்.

ஒருகட்டத்தில் தங்களது உறவை, தாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கின்றோம் என்பதைப் பேராசிரியரின் மனைவிற்குக் கூறிவிட்டே இந்த மாணவி பேராசிரியரோடு அலைந்தபடியிருப்பார். குடும்ப உறவும், கெளரவமும் பாதிக்கப்படப்போகின்றது என்ற அச்சத்தில் பேராசிரியரின் மனைவி அந்தப்பெண்ணை தங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்தே இருக்க வைத்துவிடுவார். இன்னொருவகையில் தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பேராசிரியருக்கு, அவரது மனைவி கொடுக்கும் ‘பெருந்தண்டனை’யாகக் கூட இது இருக்கக்கூடும். பேராசிரியர் மீதும் அந்த மாணவி மீதும் வெறுப்பிலிருக்கும் பேராசிரியரின் மனைவி அந்த மாணவியை அவரின் பலவீனங்களுடன் புரிந்துகொள்ளச் செய்கின்றார். அந்த மாணவியின் காதலைத் தொடர்ச்சியாக மறுத்தபடியிருக்கும் பேராசிரியருக்கு, ஒருகட்டத்தில் அந்த மாணவி மீது காதல் வரத்தொடங்குகின்றது. ஆனால் அதேசமயம் அந்த மாணவிக்கு வேறொரு காதல் வந்துவிடுகின்றது (அல்லது அந்தப் பேராசிரியரை நம்ப வைக்கின்றார்).

சிலவேளைகளில் எல்லாமே (வாழ்க்கையே) ஒரு நகைச்சுவையாகிப் போய்விடுகிறது என்கிறார் பேராசிரியர். அவரின் மனைவியோ இதைக் கேட்டுச் சிரிக்கத்தொடங்குகின்றார். இது என்ன மாதிரியான சிரிப்பு, sarcasmமா என்கிறார். சிரிப்பு ஒருகட்டத்தில் அழுகையாக மாறுகின்றது. பேராசிரியரின் மகள் ஏன் அழுகின்றார் எனத் தாயிடம் கேட்கின்றார். அந்த மாணவியோ, 'அழுவதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கவேண்டுமா' என்கின்றார். மனைவி அழுவதைப் பார்க்கும்,  அழுகையின் பின்னிருக்கும் எல்லாக் காரணங்களையும் அறிந்த பேராசிரியர் கூறுகின்றார், 'Let her cry'.

தற்செயலாய், வெவ்வேறு திசைகளில் மனங்கள் சிதறிப்போன எல்லோரும் பன்சலையில் இறுதியில் சந்திக்கின்றனர். அங்கே நிகழும் ஒரு சம்பவம், இவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாய், அவரவர் செய்த குற்றங்களுக்கான மன்னிப்பையும், அந்தப் புத்தவிகாரையில் பொழியும் மழை வழங்கிவிடுவதாய் முடிந்துவிடுகின்றது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

தேநீர்

Sunday, October 15, 2017


தேநீர் அருந்துதல் என்பது அதன் எளிமையினால் பூரணத்துவமாகிவிட்ட ஒரு செயல்.
நான் தேநீர் அருந்துகையில், நானும் தேநீரும் மட்டுமே இருக்கின்றோம்.
மற்ற உலகு அனைத்தும் கரைந்துபோகின்றது.
எதிர்காலம் குறித்த எந்தக் கவலைகளும் இல்லை.
கடந்தகாலத் தவறுகள் குறித்த எத்தகைய எண்ணங்களுமில்லை.
தேநீர் என்பது எளிமை: தேயிலைத் தூள், சூடான தூய நீர், ஒரு கோப்பை.
தேயிலையின் சிறிய அழகான துகள்கள் கோப்பையின் மேலே மிதக்க, நான் அதன் வாசத்தை உள்ளிழுக்கின்றேன்.
தேநீரை நான் அருந்தும்போது, தேயிலையின் சாரம் என்னில் ஒரு பகுதியாக மாறுகின்றது.
நான் மாற்றமடைந்துவிட்டேன் என்று தேநீரால் அறிவிக்கப்படுகின்றேன்,
இதுவே வாழ்க்கையின் செயல், ஒரு பூரணமான தருணத்தில், இது போன்ற (தேநீர் அருந்தும்) செயலில், உலகு பற்றிய உண்மை வெளிப்பட்டுவிடுகின்றது:
மனத்திலுள்ள எல்லாவிதமான சிக்கல்கள், வலிகள், வாழ்க்கை பற்றிய நாடகங்கள் அனைத்துமே எந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகவும் இல்லை என்ற புரிதல் வந்துவிடுகின்றது.
நானும், இந்தத் தேநீரும் மட்டுமே இப்போது சந்திக்கின்றோம்.

- Thich Nhat Hanh
தமிழில்: டிசே தமிழன்

(நன்றி:Thich Nhat Hanh Gems)

பேயாய் உழலும் சிறுமனமே

Sunday, October 01, 2017

வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் 
(சித்திரை 18, 2017)