கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ட்றம்போ (Trumbo)

Friday, July 15, 2016

ழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும் ட்றம்போ ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும், வெளியிலும் black listல் பட்டியலிடும்போது ட்றம்போவின் பெயரும் சேர்க்கப்படுகின்றது. ஹொலிவூட்டுக்குள்ளும் ட்றம்போ உட்பட பலர் 'இடதுசாரி நச்சுவிதை'களைக் கலக்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தங்களையும், பிறரையும் கம்யூனிஸ்டாக காட்டிக்கொடுக்காது ட்றம்போம் நண்பர்களும் இருந்தாலும் அதன் நிமித்தம் வழக்கில் தோற்கின்றனர். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடும்போது பெருஞ்செலவும், தோல்வியும் அங்கும் ஏற்படுகின்றது. இதனால் ட்றம்போ கிட்டத்தட்ட ஒருவருடம் சிறைக்குள் இருக்கவேண்டிவருகின்றது.

'தண்டனைக்காலம்' முடிந்து வந்தபின் முன்னதைவிட இன்னும் தீவிரமாக திரைக்கதைகளை எழுதத் தொடங்குகின்றார். எனினும் கறுப்புபட்டியலில் அவர் பெயர் இருப்பதால் அவை 'அநாமதேயப் பெயர்களில் எழுதப்படுகின்றன. மிகவும் பிரபல்யம் பெற்ற படமான Roman Holiday யின் திரைக்கதை ட்றம்போவினால் எழுதப்பட்டாலும், ஒஸ்கார் விருது அதற்காய் கிடைக்கும்போது வேறொருவரே அந்தத் திரைக்கதையிற்காய் ட்றம்போவினால் முன்னிறுத்தப்படுகின்றார். இடையில் வெளிப்படையாக வேலை செய்யமுடியாததால், பிள்ளைகளை வளர்ப்பதிலும் சிக்கல்படுகின்றார். ஹொலிவூட் உலகைச் சேர்ந்த பலர் ட்றம்போ எந்தவகையிலும் நுழைந்துவிடக்கூடாது என்று (முக்கியமாய் ரொனால்ட் றீகன் போன்ற வலதுசாரிகள்) கவனமாய் இருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் மீறி மீண்டும் நாம் எழுவோமென ட்றம்போ நம்பிக்கைகொண்டாலும் அவரோடு தடை செய்யப்பட்ட நண்பர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. 'நீ மீண்டும் ஹொலிவூட்டிற்கும் நுழைய விரும்புகின்றாய், ஆனால் நானோ மாற்றத்தை வேறுவகையில் கொண்டுவர விரும்புகின்றேன்' என நண்பரொருவர் ட்றம்போவோடு முரண்படுகின்றார். ஹொலிவூட்டிற்குள் நுழைவது முதலடி, அதிலிருந்து மாற்றங்களுக்காய் அங்கிருந்து போராடுவோம் என ட்றம்போ அந்த நண்பருடன் வாதிடுகின்றார்.

தொடர்ச்சியான உழைப்பில் கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின் முதன்முதலாக அநாமதேயப் பெயரின்றி ஸ்ரான்லி குப்ரிக் இயக்கிய Spartacusல் ட்றம்போவின் பெயர் திரையில் காண்பிக்கப்படுகின்றது. மேலும் Exodus கதையை திரைக்கதையாக்கிக் கொடுக்கும் ட்றம்போவை, அதன் நெறியாளர் ஊடகத்தில் வெளிப்படையாக ட்றம்போ தன்படத்தில் பணிபுரிகிறார் எனவும் அறிவிக்கின்றார்.

1960களில் மெல்ல மெல்லமாக கறுப்புப் பட்டியலில் இருந்து வெளியில் வருகின்றார் ட்றம்போ.  அவர் அவ்வாறு பொதுவெளிக்கு வருகின்ற சமயத்தில் கொடுக்கும் ஒரு நேர்காணலில் ஒஸ்கார் விருது கிடைத்தால் என்ன செய்வீர்களென்று வினாவப்படுகின்றார்; 'எனது மகள் 3 வயதில் இருக்கும்போது என்னை கறுப்புப் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். இப்போது அவளுக்கு 13 வயது. அவளையொத்த எல்லாக் குழந்தைகளிடம் அப்பா என்ன செய்கின்றார் எனக் கேட்கும்போது, சொல்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும். ஆனால் என் மகளிற்கு அப்படியான ஒரு நிலை இல்லை. நான் எதற்காய்க் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றேன் எனபதைக் கூட அவள் சரியாக அறியாள். அப்படி ஒரு பரிசு கிடைக்கும்போது அவளுக்கே அதைச் சமர்ப்பணம் செய்வேன்' என்கின்றார்.

இறுதியில் ஹொலிவூட்டாலும் ட்றம்போ அங்கீகரிக்கப்படுகின்றார். ஹொலிவூட் எழுத்தாளர்கள் கூடி  ஒரு நிகழ்வில் மதிப்பளிக்கப்படும்போது, 'இந்தக் கறுப்புப்பட்டியலால் என்னைப் போன்றவர்கள் எத்தனையோ இழந்துவிட்டோம். சிலர் தம் சொத்தை, வேறு சிலர் தமது துணைகளை, இன்னுஞ்சிலர் தற்கொலையும் செய்துமிருக்கின்றனர். அந்தளவிற்கு இது பயங்கரமானது. ஆனால் இப்போது நான் எவரையும் குற்றஞ்சாட்டப்போவதில்லை. நமக்கு இப்போது குணமடைதலே (healing) தேவையாக இருக்கின்றது. எனெனில் இங்கே நாயகர்களோ வில்லன்களோ என்று எவருமில்லை. நாமெல்லோரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் (victims)' என அழகாக உரையாற்றுகின்றார்.

ஓர் அசலான கம்யூனிஸ்ட், தனது நம்பிக்கைகளுக்காய் எதையும் இழக்கத் தயராக இருப்பான் என்பதோடு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூட பொது அநீதிகளாய்க் கருதி, எவரும் தன்பொருட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்பதில் கவனமாயிருப்பான் என்பதற்கு ட்றம்போ போன்றோர் உதாரணம் மட்டுமில்லை இன்றைய உலகில் விதிவிலக்கானவர்களும் கூட.

(நன்றி: 'தீபம்')

எழுதித் தீராக் கதைகள்

Wednesday, July 13, 2016


செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப்பக்கங்கள்'  கனடாவில் தாய்வீடு இதழில் தொடராக வந்திருந்தபோது பெரும்பாலும் வாசித்திருந்தேன். என்கின்றபோதும் நூலாகத் தொகுக்கப்பட்டபின், அவற்றை ஒன்றாக சேர்த்து வாசிப்பதென்பது வித்தியானமான ஓர் அனுபவம். பிரான்ஸிற்குச் சென்ற ஈழத்தமிழரின் முதற் தலைமுறை சந்தித்த அனுபவங்கள் இஃதென ஒருவகையில் எடுத்துக்கொள்ளலாம். 80களிலிருந்து 90வரையான காலப்பகுதியில் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.

காலனித்துவத்தின் ஆதிக்கத்தால்,  ஈழத்தில் ஆங்கிலத்தை பலரால், ஏதோ ஒருவகையில் கற்கவோ வாசிக்கவோ முடிந்திருக்கின்றது. ஆனால் ஆங்கிலம் பேசாத ஜேர்மனி,பிரான்ஸ், சுவிஸிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நிலை வேறுவகையானது. ஆகவேதான் முன்பொருமுறை (2009ல்) கனடாவில் நிகழ்ந்த பொ.கருணாகரமூர்த்தியின் நூல் வெளியீட்டுவிழாவில், புலம்பெயர்வைப் பொதுவாகப் பார்ப்பதில் ஆபத்துண்டு, அதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன, அவற்றை நுட்பமாக அவதானிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தேன்.கனடா போன்ற நாடுகளில் 'நாசூக்காய்' உள்ளொளிந்திருக்கும் இனத்துவேஷம் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிக வெளிப்படையாகக் காட்டப்படும். ஆனால் அதற்கு அப்பாலும், பல்வேறு இனங்களில் புலம்பெயர்வை முன்வைத்துப் பார்க்கையில், ஈழத்தமிழர்கள் குறுகியகாலங்களில் புலம்பெயர்ந்ததேசங்களில் -அது நல்லதோ/கெட்டதோ- அடைந்த வளர்ச்சி ஒருவகையில் பிரமிப்பானது.

கனடாவில் கிழக்குப் பகுதியான நோவா ஸ்கோஷியாவிற்கு (ஐரோப்பாவை நெருங்கி நிற்கும் நிலப்பரப்பு)  சமீபத்தில் போனபோது, Canadian Museum of Immigration என்கின்ற குடிவரவாளர்க்கான மியூசியத்திற்குப் போயிருந்தேன். 'Pier 21' என முன்னொருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடத்திலேயே வைத்தே கப்பலிலிருந்து பிறநாடுகளிலிருந்து வந்த குடிவரவாளர்கள்   வரவேற்கப்பட்டார்கள். உலகப்போர்க்காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்திறங்கிய குடிவரவாளர்களையும், அவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களையும்  இங்கே ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு குடிவரவாளர்களை ஏற்றுக்கொண்ட கனடாவிற்கு இன்னொரு முகமும் உண்டு. சீக்கிய மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஏற்றிக்கொண்டு வந்த கப்பலைத் திருப்பியனுப்பியிருக்கின்றனர். திரும்பிப்போன குடிவரவாளர்களில் (கொமகட்டா மரு) ஒரு பகுதியினரை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் வைத்துச் சுட்டுக்கொன்றது. மிகுதிப்பேரை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்தது.அண்மையில்தான் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ரூடோ அவ்வாறு திருப்பி அனுப்பியதற்காய் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

இவ்வாறு ஆவணப்படுத்திய கப்பல்களையும், இன்னபிறவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இறுதிப்போர் முடிந்தபின் இரண்டு கப்பல்களில் தப்பிவந்த ஈழத்தமிழர்களை கனடிய அரசு நடத்திய விதம் நினைவிற்கு வந்தது. அன்றைய காலங்களில் கனடாவில் எல்லாத்திசைகளிலிருந்தும் துவேஷமான குரல்கள் இந்த 'முறையற்ற அகதிகள்' திரும்பி அனுப்பப்பட வேண்டுமென்றே ஓங்கி ஒலித்திருந்தன. அப்படி வந்தவர்களை சிறைக்கைதிகளுக்கான செம்மஞ்சள்நிற ஆடைகள் அணிவித்து கையிலும் காலிலும் சங்கிலி மாட்டிச் சென்ற புகைப்படங்களை அவ்வளவு எளிதில் மறக்கவும் முடியாது.

இப்படி பூர்வீகமக்கள் வாழ்ந்த நிலத்திற்கு முன்னொருகாலத்தில் 'பேராசை'யிலும், பின்னர் பெருந்தொகையில் உலகப்போரின் நிமித்தமும் கப்பல்களில் வந்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த நண்பரிடம், ஈழ அகதிகள் கப்பலில் வந்தபோது கத்திப் பெருங்குரலெடுத்தவர்களை இந்த மியூசியத்திற்கு அழைத்துவந்து உங்களின் மூதாதையரும் எம்மைப்போலவே வந்தவர்கள் என தலையிலடித்து ஞாபகப்படுத்தவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

பிரான்சில் முதன்முதலாக பலவற்றைக் கற்றுக்கொள்கின்ற செல்வத்தின் அனுபவங்களுக்கிடையில் தெறிக்கும் எள்ளலே இத்தொகுப்பின் ஒருவகையான தனித்துவம் என்பேன். எல்லோருக்கும் -அது முதல் தலைமுறையாக இருந்தாலென்ன, பிறகு வந்த தலைமுறைகளான என்னைப்போன்றவர்களாய் இருந்தாலென்ன- தனிப்பட்ட, வெவ்வேறு அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்தில் முன்வைத்து அதை வாசிக்கும்போது, நமக்குள் கடந்தகாலம் ஒரு நதி போலப் பெருக்கெடுத்துப் பாயச் செய்கின்றது. அந்த நதி கடலில் கலக்கும்முன் காணும் அனுபவங்களே முக்கியமானது போல, செல்வமும் தனிப்பட்ட மனிதர்களுக்குள்ளால் அன்றைய காலங்களைப் பதிவு செய்கின்றார்.

இந்நூலில் பதிவுசெய்யப்படுகின்ற பிரான்சுப் பெண்களைக் கண்டு சிலிர்த்தல், நிர்வாண விடுதிக்குச் செல்லல், வயது வந்தவர்க்கான படங்களைப் பார்த்தல், அறைகளிலிருந்து விடியவிடிய குடியும்/பேச்சுமாய்க் கழித்தல் என்பவற்றுக்கு அப்பால் என்னைக் கவர்ந்தவை, வேறு விடயங்களாய் இருந்தன. முக்கியமாய் அன்றைய போர்க்காலங்களில் எப்படி ஈழத்திலிருந்து செய்திகள் வருகின்றன என்பது ஓர் ஆவணமாய் எழுதித்தீராப் பக்கங்களில் இருக்கின்றன.

வாரங்களோ மாதங்களோ எடுத்துவரும் கடிதங்களிலேயே அனைத்து விடயங்களும் இருக்கின்றன. ஓரிடத்தில் இயக்கத்திற்குப் போன தம்பி இறந்தசெய்தியை மூன்றுவாரங்களின் பின் கண்டுகொள்ளும் ஒரு அண்ணனும் தம்பியும் சுவரில் தலையை இடிக்க என்ன நடந்ததென்று அறியாது ரூமில் இருந்த பிறர் திகைக்கின்றனர். இன்னொரு கதையில், தன் தாய் ஷெல்லடிபட்டிறந்ததை சில வாரங்களின் பின் அறியும் ஒருவன், பஸ்ஸில் விம்மிக்கொண்டு போவதைக் கதை சொல்லி காண்கின்றார். யாரோடும் தன் துயரைப் பகிரமுடியாத் துயரில் பஸ்சில் அலைந்துகொண்டிருக்கும் அவனை அரவணைத்து, ஒரு தேவாலயத்திற்குப்போய் காலமான தாயின் நினைவாக மெழுகுவர்த்தியை இருவருமாய்ச் சேர்ந்து கொளுத்துகின்றனர். நிறைய மனிதர்கள் அன்றைய காலத்தில் அகதி மனு நிராகரிக்கப்பட்டோ, புலம்பெயர் தேசத்தில் இருக்கமுடியாத அவதியிலோ ஈழத்திற்குத் திரும்பியும் போகின்றனர்.

இதையெல்லாவற்றையும் விட, 1983 ஆடிக்கலவரத்தின்போது பாரிஸ் நிகழ்ந்தவற்றை செல்வம் பதிவு செய்தவற்றையே முக்கியம் என்பேன். கொழும்பில் சிறைக்குள் தொடங்கிய படுகொலை நகரெங்கும் சூழ்ந்துகொள்ளும்போது, ஈழத்தமிழர்கள் பிரான்சிலிருக்கும் இலங்கைத் தூதராலாயகத்தின் முன் கூடுகின்றனர். இவ்வளவு தமிழர்கள் பிரான்ஸில் இருக்கின்றார்களா என கதைசொல்லி வியக்கின்றார். பிறருக்கு ஈழத்தில் நடக்கும் நிலையைச் சொல்ல மொழியோ/பதாதைகளோ/சுவரொட்டிகளோ இல்லாத காலம் அது.

அந்தக் கொந்தளிப்பின் நீட்சியில் பிரான்சில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகின்றனர். சிங்களவர்களும் திரும்பித் தாக்குகின்றனர். அன்றைய காலத்தில் மூன்று தமிழர்களும், இரண்டு சிங்களவர்களும் இந்தத்தாக்குதலில் நீட்சியில் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். எதையாவது செய்யவேண்டுமென துடிப்பில் ஜேர்மனியில் இருந்துகூட பிரான்சிற்கு சிலர் வருகின்றனர். சிங்களவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற கொதிப்பில் அவ்வாறு ஜேர்மனியில் இருந்து வந்த ஒருவன், இவர்கள் சமையலுக்கென வைத்திருந்த ஒரேயொரு கத்தியையும் எடுத்துக்கொண்டு இரவில் வெளியே போகின்றான். 'இலக்கியமும் அரசியலும் பேசிக்கொண்டிருந்த நீங்கள் வீட்டுக்குள் பதுங்கியிருக்க அதில் அக்கறையெதுவும் இல்லாத நாங்கள்தான் வெளியில் அடிபடுகிறோம்' என ஒருவன் கதைசொல்லிக்குச் சொல்கின்றான். அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

இவ்வாறு ஜேர்மனியில் இருந்து சிங்களவரோடு அடிபடுவதற்காய் பிரான்ஸிற்கு வந்தவன் சில மாதங்களில் இந்தியாவிற்குப் போய் ஒரு இயக்கத்தில் சேர்கின்றான். அடுத்தவருடத்தில் அந்த இயக்கத்தின் உட்கொலையில் அவன் பலியும் கொடுக்கப்படுகின்றான். நமது போராட்டந்தான் எவ்வளவு சிக்கலானது. இவ்வாறு மக்களுக்கு எதையாவது செய்யப் புறப்பட்ட எத்தனை ஆன்மாக்கள் இடைநடுவில் ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன என நினைக்கையில் வெப்பியாரமே வருகின்றது.

அதேபோன்று ஒரு சிங்களவனைப் பிடித்துவைத்திருக்கின்றோம், என்ன செய்யலாமென ஒருவன் கேட்க, ரூமிலிருந்த ஒருவர் இந்தச் செய்கையினால், கோபத்தில் ஷேர்ட்டைக் கிழித்துவிட்டு, 'நான் தமிழனோ கொம்யூனிஸ்டோ இப்போதில்லை, முதலில் நானொரு மனுஷனடா' இப்படியொரு அக்கிரமத்தைச் செய்வதற்குப் பதிலாய் என்னைக் கத்தியால் குத்துங்கடா என தெருவில் வெறிபிடித்தபடி ஓடுகின்றார்.

இந்த நெகிழ்ச்சியான மனிதர்களை/இவ்வாறான சம்பவங்களை முப்பது ஆண்டுகளின் பின்னால் ஞாபகப்படுத்த நமக்கு ஆகக்குறைந்தது இந்த எழுத்துக்களாவது மிஞ்சியிருக்கிறதே என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான்.

('எழுதித் தீராப் பக்கங்கள்' - செல்வம் அருளானந்தம், 'தமிழினி' வெளியீடு)

(நன்றி: 'அம்ருதா' ஆடி இதழ்)

பயணக்குறிப்புகள் - 13 (Canada)

Tuesday, July 05, 2016

ஒன்ராறியோவிற்குள் பயணித்தல்

யணம் செய்தல் என்றவுடன் பலருக்குத் தொலைதூரங்களுக்குப் பயணிப்பதைப் பற்றிய ஒரு விம்பமே எழும். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிப்போகும் எந்தப் பாதையுமே அது  இதமான ஒரு மனோநிலையைத் தருமென்பதைப் பலர் மறந்துவிடுகின்றார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் நமக்கு இன்னொரு நாட்டிற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ சென்றால் மட்டுந்தான் நிறையப் புது இடங்களைப் பார்க்கலாம் என்கின்ற ஓர் எண்ணமுண்டு. அதில் ஒரளவு உண்மை இருந்தாலும் ஒன்ராறியோவிற்குள்ளே ஒரு நாளுக்குள்ளேயே பார்ப்பதற்கு நமக்கு நிறைய இடங்கள் உண்டென்பதைப் பலர் மறந்துவிடுகின்றோம்.

எல்லோருக்குந் தெரிந்த நயாகரா நீர்வீழ்ச்சி, சிஎன் ரவர் போன்ற சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களை இப்போதையிற்குத் தவிர்த்துவிடுவோம். ஒன்ராறியோவில் நிறைய வாவிகளும், சிறு நதிகளும், பார்க்குகளும்  இயற்கையுடன் இயைந்து களிக்கவும் நமக்காய்க் காத்திருக்கின்றன. பெரும்நகரங்களை நாம் தாண்டிச் சென்றவுடன் வரும் சிறு பட்டினங்கள் நமக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தரக்கூடும். அதிலும் ஓரிரு நாட்கள் அங்கே தங்கிவிட்டால் ஏதோ நீண்ட விடுமுறையில் இருப்பதுபோன்ற மனோநிலையை அந்தச் சூழல் நமக்குள் உருவாக்கிவிடவும் கூடும்.

ஒன்ராறியோவிற்குள் இருப்பதில் மிக அமைதியானதும், அழகானதுமான இடங்களில் ஒன்றாக Bruce Peninsula. இங்கே
நிறையத் தீவுகளையும், கப்பல் உடைவுகளையும்(ship wrecks), பூச்சாடி வடிவிலான )நிறையப் பாறைகளையும் (flower pot பார்க்க முடியும்.  அதன் தெற்குமுனையில் இருப்பது Tobermory. அங்கிருந்து ferry எடுத்து  சென்றால் நமக்கு இன்னும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்.. நெடுஞ்சாலை 06 முடியும் இடத்தில் இருக்கும் இச்சிறுநகரில் பிராண்ட் பெயர்களுள்ள  துரிதகதியுள்ள உணவுக்கடைகளையோ, பிற பெரும்கடைகளையோ காணமுடியாது . Ferry எடுத்துப்போய்த்தான் இந்த பூச்சாடி வடிவிலான பாறைகளைப் பார்க்கமுடியும். Hiking செய்வதற்கு நிறைய இடங்களுள்ள பிரதேசம்.. அண்மையில் Google Maps ஜிபிஎஸ்ஸை நம்பி ஒருவர் காரைத் தண்ணீருக்குள் விட்டது இங்கேதான் நிகழ்ந்தது. கனடாவில் இருப்பவர்கள் கோடைகாலத்தில் தவறவிடாது பார்க்கவேண்டிய ஓரிடம் இதுவென்பேன்.

இன்னும் மேலதிகமாய் நாட்கள் இருந்தால் Manitoulin Island சென்று பார்க்கலாம். இதுவரை அங்கு சென்றதில்லையெனினும் சென்றவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது மிக அமைதியான இடமென நினைக்கின்றேன். பூர்வீகக்குடிகள் பெரும்பான்மையாக இந்த நிலப்பரப்பில் வாழ்கிறார்கள் என்பதால் அவர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழும் வாழ்வை அறிவது புதிய அனுபவமாக நமக்கு இருக்கலாம்.

ரோபமோரியில் ஸ்நோகிளிங்கில் ஆர்வமுள்ளவர்க்கு அதைச் செய்வதற்கு ஏற்ற இடங்கள் இருக்கின்றன. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கென படகுச் சவாரிகளும் அடிக்கடி போகின்றன. ரொறொண்டோவில் இருந்து போகின்றவர்களாயிருப்பின் போகும் வழியில் இருக்கும் சாபிள் கடற்கரையைத் (sauable beach) தவறவிடக்கூடாது என்பேன். ஒன்ராறியொவிற்குள் இருக்கும் நீண்டதூரம் வரை crystal clearயாய்ப் பார்க்கக்கூடிய அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த வழியெங்கும் தரித்து நிற்பதற்கான காம்பிங் இடங்களும்,  காட்டேஜ்களும் இருக்கின்றன. செலவு குறைத்து கவலைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் தங்குமிடங்களைத் தர airbnbகளும்  இருக்கின்றன.

Bruce Peninsula போகும்போதோ அல்லது திரும்போதோ நெடுஞ்சாலை 06ல் இருந்து நெடுஞ்சாலை 21ஐ எடுத்து கியூரன் ஏரியின் கரையோரம் கீழே தெற்குப் பகுதியாக காரில் பயணித்தால் அழகான நக Goderich, Blue water beach போன்ற இடங்களைக் காணலாம். அங்கே பலருக்குப் பிடித்த ஜஸ்கிறிமைச் சிறு கடைகள் ஏதேனும் ஒன்றில் வாங்கி சுவைத்துக்கொண்டு, சூரிய அஸ்தமனத்தை இரசிக்கலாம். ஒரு பகல் பொழுதைக் கழிப்பதற்கு Macgregor, Pinery Provincial Parks இருப்பதைப் போகும் வழியில் காணலாம். அவ்வாறு சானியாவை  (sarnia) அடைந்துவிட்டால் கனடா-அமெரிக்க எல்லைகளைப் பிரிக்கும் பாலத்தைக் காணலாம். இவ்வாறான வேறு நகர்களுக்குப் போகும்போது எமக்கு ஏற்கனவே அறிமுகமான  கடைகளில் உணவருந்தாமல், அந்தந்த நகர்க்குரிய சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிடும்போது அந்த நகரை இன்னும் ஆழமாய் நினைவு வைத்துக்கொள்ளும் அனுபவங்களும் கிடைக்கலாம்.

இன்னும் தெற்கு நோக்கி காரில் நெடுஞ்சாலை 40ல் பயணித்தால் Point Pelee National park ற்குப் பயணிக்கலாம். அலைகள் மூர்க்கமாய் அடிக்கும் முடக்கில் இருந்துகொண்டு பறவைகளின் குரல்களைக் கேட்டு இரசிக்கமுடியும். இன்னும் இந்த அனுபவங்களின் மூழ்கவேண்டுமானால், படகில் போய் Point Pelee தீவைப் பார்க்கலாம். அவ்வாறே ஏரி Erieயோடு பயணித்தால் Long point, Turkey point போன்ற பார்க்குகளையும் தரிசிக்கவும், விரும்பினால் கூடாரம் அமைத்து தங்கவும் முடியும்.   Long pointல் ஒருவர் வைத்திருக்கும் சிறுகடையில்  உள்ளே குளிரும் வெளியும் சூடும் உள்ள ஐஸ்கிறிமும் அப்பிளும் கலந்து அப்பிள் பையைத் தவற விடக்கூடாது என்பேன்.

தொலைவாய் இருந்தாலென்ன, அருகில் இருந்தாலென்ன எந்தப் பயணமாயினும் நமக்கு வேறுபட்ட அனுபவங்களைத் தந்துவிடுகின்றன. புதிய நிலப்பரப்பை, கலாசாரங்களை, உணவுவகைகளை அறியும்போது நமது மனம் இன்னும் விசாலிக்கச் செய்கின்றன. நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து எழும் சலிப்புக்களுக்கும், சோர்வுகளுக்கும் அப்பால் நம் சிறகுகளை விரிக்க நமக்கு பயணங்கள் அவ்வப்போது அவசியமாகின்றன.

(நன்றி: 'தீபம்')