கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மித்திரா எனப்படும் அருச்சுனா

Sunday, March 20, 2022


(எஸ்.பொ - பகுதி 05)


 1. 

எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுதியில் உச்சக்கதையாக வெளிப்பட்டிருப்பது ஆண்மை- 15. அதைக் கதையெனக் கூடச் சொல்லமுடியாது. இயக்கத்துக்குப் போய் சாவடைந்து விட்ட தனது மகனைப் பற்றிய எஸ்.பொவின் நினைவிடை தோய்தலெனச் சொல்லலே திருத்தமானது. நமது ஆயுதப்போராட்டம் தந்தையர்கள் கண்முன்னே உயிரோடு இருக்க, தனயர்கள் இல்லாமற்போய் இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக்கி இருந்தது. எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம், மு.வாஞ்சிநாதன் போன்ற பல்வேறு படைப்பாளிகளின் பிள்ளைகள் இளவயதில் இறந்துபோக, இவர்களைப் போன்ற தந்தையர்கள் அந்தத் துயரத்தோடோ காலம் முழுக்க வாழ வேண்டியிருந்திருக்கின்றது.


தான் எழுதியவற்றை ஆறு மாதமோ, ஒரு வருடமோ 'ஊறுகாய்' போட்டு வைத்திருக்கத் தயங்காதவரும், சில கதைகளை மூன்று நான்கு தடவைகளுக்கு திரும்பவும் எழுதுவற்கு அலுப்புப்படவே மாட்டாதவருமான எஸ்.பொ, அப்படியே ஒரு அமர்வில் குந்தி எழுதிய கதையென்றால் அது அவரது மகனான மித்தி பற்றிச் சொல்கின்ற ஆண்மை-15 கதைதான்.  எழுதியதை திருப்பிப் பார்க்காததற்கும், புதுக்கி மீண்டும் எழுதாததற்கும், 'என் எண்ணமே எழுத்தாக வேண்டும் என்ற வெறி' என எஸ்.பொ முன்னீட்டில் எழுதுகின்றார். இது ஒருவகையில் தனது மனதில் இருந்த எல்லாத் துயர்களையும், பாரங்களையும் இறக்கிவைக்க எஸ்.பொ விரும்பியிருக்கின்றார் என எடுத்துக்கொள்ளலாம். கல் குவாறிகளினூடாக ஏறிய இயேசு தனது சிலுவையை இறக்கிவைக்கின்ற ஒரு தருணம். 


யாழ்ப்பாணத்தில் 90களில் வாழ்ந்தவர்க்கு, புலிகள் இயக்கம் பல்வேறு வீதிகளுக்கு, தமது சாவடைந்த போராளிகளின் பெயர்களைச் சூட்டியது நினைவிருக்கக்கூடும். எப்போதாவது யாழ் நகருக்கு அப்பாவோடு அவர் பணிபுரிந்த யாழ் கச்சேரிக்கும், நோயின் நிமித்தம் யாழ் வைத்தியசாலைக்கும் போன நாட்களில் எனக்கு ஒரு வீதியின் பெயர் அப்படியே ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. ஸ்ரான்லி வீதியெனபட்ட அந்த வீதி 'அருச்சுனா வீதி' என மாற்றப்பட்டிருந்தது. அந்த 'அருச்சுனா வீதி'யிலிருந்து வெளிவந்த ஏதோ ஒரு பத்திரிகையோ அல்லது சிறுவர் சஞ்சிகையையோ அன்றைய காலங்களில் வாசித்ததாக மங்கலாக ஞாபகமும் இருக்கின்றது.


அப்படி அந்த வீதிக்கு அருச்சுனா வீதியெனப் பெயரிடப்பட்டிருந்தற்கு,  போராளியாகிக் காலமாகிவிட்ட எஸ்.பொவின் மகனென அறிய எனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. எஸ்.பொவின் மகன் மித்திரா எனப்படும் அருச்சுனா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. புலிகள் ஒளிப்பதிவுக்கென ஒரு புதிய கூடத்தை உருவாக்கியபோது அதற்கும் 'அருச்சுனா புகைப்படக் கலையகம்' எனப் பெயரிட்டிருந்தார்கள். இளவயதிலேயே (20களில்) இறந்து போய்விட்டாலும், சிறந்த ஆளுமையாக வந்திருப்பதற்கான தெறிப்புக்களைக் கொண்ட ஒருவர் மித்தி போலும்.


2.

ஒரு தந்தையாக மித்தியின் ஞாபகத்தை எஸ்.பொ நமக்கு ஓவியமாக வரைகின்றார். ஐந்து பிள்ளைகளுக்கு நடுவிலன் என்பதால் அவரைப் பார்த்தன் என அழைக்க, அந்தப் பெயருக்கு நிகர்த்த அருச்சுனாவை, மித்தி தன் இயக்கப் பெயராக மாற்றியதாக எஸ்.பொவுக்கு கடிதம் எழுதுகிறார். மித்தி இளவயதில் நிறைய வாசிப்பவராக,  1978ல் கிழக்கில் வந்த சூறாவளியில் எஸ்.பொ சிக்குகின்றபோது காப்பாற்றுகின்றவராக, தோழிகளுடன் மிகுந்த இயல்பாகப் பழகுகின்றவராக நமக்கு இந்த நனவிடைதோய்தலின் மூலம் காட்டப்படுகின்றார். 


மித்தி தனது தோழிகளில் ஒருத்தியை, தான் காதலிக்கின்றேன் எனச் சொல்ல எஸ்.பொ, 'டேய் நான் உனது வயதில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்பிள்ளைகளைத் துரத்திக்கொண்டு திரிந்தேன்' என்று பதில் சொல்லிச் சிரிக்கின்றார். அந்தளவுக்கு மகனோடு ஓர் அந்நியோன்னிய உறவை எஸ்.பொ பேணியிருக்கின்றார். தனது மகன்களில் மித்தியே தன்னைப் போல எழுத்துலகிற்கு வருவான் என எஸ்.பொ கனவு காண்கின்றபோது, மித்தி இயக்கத்தில் சேருகின்றார். இந்தக் கதையில் நேரடியாக சொல்லாவிட்டாலும், பழ.நெடுமாறன் இலங்கைக்குக்குப் போன முதல் பயணத்தில் மித்தியே அந்தப் பயணத்தையும்,  அந்தக்காலத்தில் மக்கள்படும் கஷ்டங்களையும் 1985 இல்  ஒளிப்பதிவாக ஆவணப்படுத்துகின்றார். 40 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்ட அந்த ஆவணம், பிறகு 2 மணித்தியாலங்களாய்ச் சுருக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயக்கத்தின் பிரச்சாரத்துக்காய்ப் பாவிக்கவும் பட்டிருக்கின்றது.


மித்தி இறந்தபின் அவரின் புகைப்படத்தோடு, தெருவுக்கு அருச்சுனா என்று பெயரிட்டிருப்பதை, எஸ்.பொவின் மார்க்சியத் தோழர் நீங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காசு அனுப்பி செல்வாக்கு செலுத்தித்தான் இவ்வாறு செய்திருக்கின்றீர்கள் என்று சொன்னதை, எஸ்.பொவால் ஒருபோதும் இந்த நனவிடைதோய்தலில் மறக்கமுடியாதிருக்கின்றது. தன் மகன் இழந்த சோகத்தை ஏன் இவரால் புரிந்துகொள்ள முடியவில்லையென எஸ்.பொ வருந்துகின்றார். எனினும் அதைச் சம்பவமாக மட்டும் சொல்லிவிட்டு எஸ்.பொ நகர்ந்திருக்கலாமென எனக்கு இந்த நனவிடை தோய்தலை வாசித்தபோது தோன்றியது. அவர் யாரென நேராகப் பெயர் சொல்லாவிட்டாலும், எஸ்.பொ விவரித்த வகையில் அவர் யாரென அடையாளங் கண்டுகொள்ள முடியும். அவரும் ஒரு முக்கியமான படைப்பாளிதான். 


இந்தக் கதையின் முதல் பகுதி நினைவோடையில் எழுதப்பட்டதென்றால், 2ம் பகுதி மித்தியைப் பற்றி அறிந்தவர்கள் கூறியது, மித்தியைப் பற்றி பிறர் எழுதியது என்பதைத் தொகுத்து எஸ்.பொ எழுதியிருக்கின்றார். மித்தி தனது 23வது வயதில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வரும்போது இலங்கைக் கடற்படையோடு ஏற்பட்ட மோதலில் கடலில் இறந்துபோகின்றார். எஸ்.பொ தொடர்ந்தும் மித்தி கொடுத்த சிறுபரிசுகளால் மித்தியை நினைத்துக்கொள்ளவும்,  தனது முக்கியமான தருணங்களில் மித்தியின் இருப்பில்லாதபோது அந்த வெற்றிடத்தை உணரவும் செய்கின்றார். எஸ்.பொ இதை உணர்வுக்கு முக்கியம் கொடுத்து எழுதியதால் இக் கதையை இதுவரை நான்கைந்து தடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் கண்களில் நீர் மெல்லிய திரையிடுவதைத் தடுக்க முடியவில்லை.


************

(புகைப்படம்: இணையம்)


நம் தன்னிலைகளை உரையாட அழைக்கும் நகுலன்

Thursday, March 17, 2022


1.

வாழ்வில் வெறுமை, அதன் நிமித்தம் ஏற்படும் சலிப்பு, முடிவில் நீளும் தனிமை போன்றவற்றைக் கடந்து செல்லாத மனிதர்கள் அரிதாகவே இருப்பார்கள். நான் என்கின்ற தனியன்கள் பலவாறாக பெருகிப் பரவ அதில் திளைத்துத் திகைந்தும், கரைந்தும் காணாமலும் போனவர்கள் பலர். சிலருக்கு தனிமையும் வெறுமையையும் வேறு லெளதீக விடயங்களைத் தேடிச் செல்லவும், வேறு பலருக்கு தமக்குள் அமிழ்ந்து, ஆழ்ந்து போகவும் செய்திருக்கும்.

இந்த வெறுமையைக் கடக்கத்தான் ப்யூகோவ்ஸ்கியும், ஹெமிங்வேயும் பெண்களையும் குடியை நோக்கியும் தம் வாழ்வை நகர்த்தியவர்கள். இந்த தனிமையோடு, கூடவே யுத்தங்கள் கொடுத்த வெறுமையினால், தம்மை போதையிலும், நாடோடித்தனத்திலும் தொலைத்து வாழ்வின் அர்த்தங்களைத் தேடுவதாய் 'பீட் ஜெனரேசன்' வெளிப்பட்டது. அதேகாலகட்டத்தில் ஐரோப்பியாவிலிருந்து சார்த்தர், காம்யூ போன்றவர்கள் இருத்தலின் அர்த்தத்தை/அர்த்தமின்மையைத் தேடத் தொடங்கினார்கள்.

தமிழ்ச்சூழலில் நமது நகுலனோ வார்த்தைகளினூடாக தன் வாழ்வின் அர்த்தத்தைத் தேட முயன்றவர். சொற்களை உடைத்து உடைத்து, இன்னும் ஆழம் போகமுடியுமென்று நினைத்து சொற்களின் சுழலுக்குள் சிக்கிய ஒரு படைப்பாளியாகவும் நகுலனைச் சொல்லலாம்.

எப்படி ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களை வாசிக்கும்போது, அவரின் கவிதைகளையும் சமாந்தரமாக வைத்து வாசித்தால் ஒரு சித்திரம் முழுதாகத் தீட்டப்பட்டு துலங்கமுறுவதைப் போல இருக்குமோ, அவ்வாறே நகுலனின் கவிதைகளின் மூலத்தை ( or vice versa) அவரின் நாவல்களில் இருந்து எளிதாகக் கண்டுபிடித்து வியக்கலாம்.


நகுலனின் 'நினைவுப் பாதை'யில் எழுத்து, எழுத்தாளர்களின் அவதி, அவர்களுக்கிடையில் இருக்கும் பொறாமை/வியப்பு, பதிப்புச் சூழலின் அவலம் என எவ்வளவு இருந்தாலும், நான் 'நினைவுப்பாதை'யை சுசீலாவுக்கு காணிக்கை செய்யப்பட்ட ஒரு சிறந்த ஒரு புனைவாகவே பார்ப்பேன். ஏனெனில் அதுவரை நகுலன் அல்லது நவீனன் அல்லது கதைசொல்லி என்கின்ற தன்னிலைகள் பல்வேறாக வெவ்வேறு விடயங்களைக் கதைத்துக் கொண்டிருந்தாலும், இந்த டயரிக்குறிப்புக்களினான நாவல் சுசீலாவைப் பற்றிப் பேசத்தொடங்கும்போதே இன்னொரு வடிவத்தைப் பெறுகின்றது. அதுவே கனதியாக மாறுகின்றது.

ஒருவகையில் இங்கே கதைசொல்லிக்கு அதுவரை பார்க்குந்தூரத்தில் இருந்த சுசீலா, சடுதியாகத் திருமணஞ்செய்து பிள்ளை பெற்றபிறகும் அந்தத் தாய்மையை இரசித்துக்கொண்டிருந்த நவீனனின் மனதுக்கு, சுசீலா கணவருடன் வேறொரு நகருக்குப் போவதுதான் பலத்த இழப்பாக இருக்கின்றது. அதுவே ஒருவகையில் இந்தப் புனைவை டயரிக்குறிப்புக்களாக கதைசொல்லியை எழுதவைக்கின்றது.

இன்றைய காலத்தில், ஆகக்கூடியது 'நான்கு நிமிடங்களே தொடர்ச்சியாகப் பேசிய' ஒரு பெண்ணுக்காக ஒருவன் தன் வாழ்க்கையே காணிக்கை செய்வானா என்பது சிரிப்பாக இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு ஒருவன் இருந்ததால், அவன் காதலின் ஆழத்தில் இவ்வாறாகச் சென்றதால், நமக்கு நினைவுப்பாதை கிடைத்திருக்கின்றது.

காதலித்திருக்கும் நமக்குப் பலருக்குத் தெரிந்திருக்கும்- காதல் என்பதை அடைந்த சொற்ப காலங்களிலேயே அதுவரை அது தந்துகொண்டிருந்த சிலிர்ப்புக்களும், வியப்புக்களும் வடிந்துபோகத்தொடங்குவதை அவதானித்திருப்போம். அப்போது காதல் என்பது நாம் உருவாக்கி வைத்திருக்கும் உணர்வுகளின் அடிப்படையில்தான் எழுகின்றதே தவிர இன்னொருவரின் வருகையினால் உருவாக்கப்படுவதில்லை என்கின்ற யதார்த்தம் நம்மை எதிர்க்காற்றாய் விரட்டியடிக்கும்.

அதேயேதான் நகுலன் சுசீலாவின் காதலில் காண்கின்றார். அவர் சில பொழுதுகளை சந்திக்கும், அதைவிடச் சொற்ப வார்த்தைகளையே பேசும் ஒரு பெண்ணை தனக்கான கற்பனையில் ஒரு அற்புதமான பாத்திரமாக உருவகிக்கின்றார். நகுலனுக்கு மட்டுமில்லை, நமக்கும் இந்தப் புனைவில் வருபவன், சுசீலாவை காதலால் அடைந்து, சேர்ந்து வாழ்ந்திருந்தால் சுசீலா என்கின்ற காலங்கள்தாண்டி வாழும் ஒரு காதற்பாத்திரம் ஒருபோதும் நிகழ்ந்தேயிருக்காது என்பது தெரியும்.

'உன்னை நான் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் என்னையே நான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றேன்' என்று நவீனன் சுசீலாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூறுகின்றார். இதைப் பார்க்கும்போது நவீனன் காதலின் ஊடு சுசீலாவையல்ல, தன்னைத் தானேதான் தேடுகின்றார் என்பது நமக்கு விளங்குகின்றது. அதேபோன்று 'உண்மையான அன்பு என்பது பேச்சு, ஸ்பர்சம் என்ற நிலைகளைக் கடந்த ஒன்றுதானோ என்று நான் என்னையே கேட்டுக் கொள்கின்றேன்' என்று கதைசொல்லி கூறும்போதும் காதலுக்கான வேறொரு வரைவிலக்கணத்தை நாம் கண்டடைந்தும் கொள்கின்றோம்.

2.

நகுலனின் (அல்லது இந்தப் புனைவில் வரும் நவீனனின்) வாழ்க்கை ஒருவகையில் போர்ஹேஸை நினைவுபடுத்துவது. போர்ஹேஸூக்கு தாய் ஒரு நிழல் போல் இருந்தாரென்றால் இங்கே நவீனனுக்கும் -சொல்லாமலே எல்லாவற்றையும் புரிந்துகொள்கின்ற- ஒரு தாயார் இருக்கின்றார். இரவுகளில் முழித்திருந்து எழுதும் நவீனனை எட்டிப் பார்த்து இன்னும் தூங்கவில்லையா என்று மட்டும் கேட்டுவிட்டு, அந்த அறையைக் கடந்து போகின்ற, அவரின் தனிமையைத் தொந்தரவுபடுத்தாத தாயாரே நவீனனுக்கு வாய்த்திருக்கின்றார்.

அதேபோன்று ஒரு திருமணத்தைக் காரணங்காட்டி நான் நாகர்கோயிலுக்கு ஒரு வாரம் போய் தங்கப்போகின்றேன் என்கின்றபோதும், தாய் நல்லதுதான் நீ போ என்று சொல்கின்றாரே தவிர, அதற்குப் பிறகு எங்கே நிற்பாய், யாரின் திருமணம் என்று ஒன்றையுமே கேட்பதில்லை. அதேபோல நாகர்கோயில் விடுதியொன்றில் இரண்டு நாட்கள் மட்டும் சும்மா தங்கிவிட்டு, திரும்பி வருகின்ற நவீனனிடமும் தாய், ஏன் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாய், கல்யாணம் எப்படி நடந்தது என்பது பற்றி எதையும் கேட்பதில்லை. அவ்வளவு விளங்கிக்கொண்ட ஒரு தாய் அவர்.

தாயின் நெருங்கிய நிழலோடு வாழ்ந்த ஆண்பிள்ளைகள் அவ்வளவு எளிதில் வெளியில் காதல்களைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் 'ஏனின்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றாய்' என்று குடும்பமும் உறவுகளும் நெருக்குகின்றபோதும் நவீனன் அதை வேறுவிதமாகக் கடந்துபோகின்றார். மேலும் தாயின் நிழல்களோடு வளரும் ஆண்களை, இணையராக் கொள்ளும் பெண்களுக்கு இப்படிப்பட ஆண்களை எதிர்கொள்ளல் என்பதும் அவ்வளவு எளிதுமல்ல.

கண்ணுக்குத் தெரியாத தொப்புள் கொடிகளால் இந்தப் பிள்ளைகள் தமது தாய்களோடு இன்னும் இணைந்தேயிருக்கின்றார்கள். இது சரியா, பிழையா என்கின்ற உரையாடல்கள் வேறொரு தளத்தில் வைத்துப் பேசவேண்டியவை. ஆனால் அவ்வாறு இருக்கும் நவீனனையே நாம் பார்க்கின்றோம். அது பிறகு தாயிலிருந்து தமக்கைக்கு இடம் மாறுவதையும் 'நினைவுப்பாதை'யை நுட்பமாக வாசிக்கும் ஒரு வாசகர் கண்டுகொள்ளமுடியும்.

3.

ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும் என்று நாவலின் இறுதி அத்தியாயத்தில் சொல்லப்படுகின்றது. இவ்வாறான ஒரு உளவியல் மையத்தில்தான் நவீனனுக்கும், இன்னொரு எழுத்தாளரான நாயருக்கும் உரையாடல் நிகழ்கின்றது. இவற்றுக்கிடையில் ஒரு இயந்திரத்தனமான, மொழியின் கவனம் சிதறிய, மனப் பிறழ்வை அண்டிய எழுத்துக்களின் தெறிப்புக்களைப் பார்க்கின்றோம். பிறகு நாயருடன் நடக்கும் உரையாடல் உச்சத்தைத் தொடுபவை.

'நிறுத்தாதீர்கள், அப்படியே தொடர்ந்து பேசுங்கள்' என நாயர் சொல்லச் சொல்ல நவீனன் மடைதிறந்ததைப் போலப் பேசுவது, ஒரு படைபாளியின் ஆழ்மனதை அப்படியே வெளிப்படையாக முன்வைக்கும் இடங்கள். ஒவ்வொரு படைப்பாளியும் பிறழ்வுக்கு உள்ளாகாது ஒரு படைப்பை முழுமையாக எழுதமுடியாது என்பதற்கு இந்த நாவல் தன்னையே எவ்வித அலங்காரமுமில்லாது காட்சிப்படுத்துகின்றது. அதையேதான் 'அவனுக்கு அப்பொழுது தன் ஒவ்வொரு நாவலை எழுதி முடித்த பிறகும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல்தானே என்று ஒரு உணர்ச்சி தோன்றியது' எனச் சொல்லப்படுகின்றது.

இந்த நாவலில் சங்ககால கவிதைகள் தொடக்கம் லா.ச.ராவின் 'புத்ர'விலிருந்து, ஹெமிங்வேயின் 'The moveable Feast' வரை பல்வேறு புத்தகங்கள் பற்றிப் பேசப்படுகின்றன. ஓரிடத்தில் சுசீலா, நவீனன் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து தன் தோழி கொடுத்தாள் என அவரிடம் கொடுக்க வருவார். நவீனன் அதை வாசிக்காதபோதும், நான் வாசித்துவிட்டேன் என்று பொய்சொல்லி அதைப் பெற்றுக்கொள்வதை மறுத்துவிட்டுச் செல்வார். பிறகு ஏன் அப்படி மறுத்தேன் என்று உள்மனதின் ஆழங்களுக்கு எம்மை சில பக்கங்களுக்கு அழைத்துச் செல்வார். இதை எல்லோராலும் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது அல்லது இதென்ன முட்டாள்தனமென்றுதான் பலர் எளிதாகக் கடந்தும் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கிருந்து எழுவதே வாழ்வின் இருப்புக் குறித்துக் கேள்வி. அதுவே பிறகு நம் எல்லோரினதும் இருத்தலியக் சிக்கலாகின்றது.

சுசீலா - ஆகக்குறைந்தது அவளுக்காக எழுதப்பட்ட பக்கங்களை வாசிக்கவேண்டும் என்ற தவிப்பும், எழுதப்படும் இந்த '400 பக்க' நாவல் பிரசுரமாக்கப்படுமா என்ற அச்சமும் கலந்த ஒரு படைப்பாளியின் பதற்றத்தை, நவீனன் என்கின்ற கதைசொல்லிக்குள் வாசகராகிய நாம் நுழையாமல், நம்மால் ஒருபோதும் அதை எளிதாகப் புரிந்துகொள்ளவேமுடியாது.

"நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை!"

என்ற நகுலனின் கவிதையை விரித்துப் பார்த்தால் எழுவதே நினைவுப்பாதை என்கின்ற இந்த நாவல். நவீனன் பயமாக இருந்தாலும் பார்க்காமல் இருக்க முடியாத அவதியினால் தனது கதையை நமக்குச் சொல்கின்றார். ஊர்ந்து செல்லும் நமது நினைவுகளை நம்மால் அதே நேர்மையுடன் எழுதவோ பார்க்கவோ முடிந்தால், நம்மால் நினைவுப்பாதையை நெருக்கமாகிக் கொள்ளமுடியும். அதற்கு முன் நிபந்தனையாக 'நாவல்' என்கின்ற சட்டகங்களை ஒருவர் தாண்டி செய்பவராக இருத்தல் அவசியம். அதையும் விட முக்கியமானது நீங்கள் தனிமையில் தோய்ந்து உங்களோடு நீங்களே ஓர் உரையாடலை தயவுதாட்சண்யமின்றிச் செய்பவராகவும் இருக்க வேண்டும்.

*******************

(நன்றி: 'கலைமுகம்' - இதழ்-73)
ஓவியம்: மருது /நன்றி: இணையம்

எஸ்.பொவின் சில கதைகள்

Sunday, March 13, 2022

(எஸ்.பொ - பகுதி - 04)


1. 'ஆண்மை' தொகுப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய கதையாக 14ஆவதைச் சொல்வேன். இந்தக் கதை ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் உரையாடிக்கொள்கின்ற காட்சிகளாக விரிகின்றது. இருவரும் தியேட்டருக்குப் படம் பார்க்கத் தனித்தனியே செல்கின்றனர். இதில் வரும் மிகத்தீவிரமான பெண்ணியவாதி, ஆண்கள் 'ஆண்களுக்கு மட்டும்' எனச் செல்கின்ற, மட்டுநகரிலுள்ள‌ தியேட்டருக்குள் படம் பார்க்கப் போகின்றாள். இப்படி, தான் தனியே படம் பார்க்கப் போவதும் பெண்ணியமென அந்தப் பெண் சிந்திக்கின்றவள். அவளுக்குப் பக்கத்தில் தற்செயலாக இருக்கின்ற ஆண் ஒரு நாடகக் கலைஞன். அவன் தன்னோடு நடிக்கும் நடிகைகளையே பணியவைக்கின்றவன். இப்படி ஒரு பெண் தனியே வந்து 'வயது வந்தோர்க்கான' படம் பார்ப்பது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மற்றப் பெண்களைப் போல இந்தப் பெண்ணையும் அடைந்துவிடலாமெனக் ‘கணக்கு’ப் போடுகின்றான். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு சிங்களப் பெண்ணியவாதியுடன் காதல் இருந்திருக்கின்றது.. இந்தப் பெண் தன் உடலை தானே 'I have conquered myself' என் நினைக்கும் லெஸ்பியன்காரி. 'என் உடம்பு ஆண்களாகிய உங்கள் தீண்டல்களினால் tune செய்யப்படாது. அதுதான் ஆணாதிக்கத்தின் முதுகில் கொடுக்கும் முதல் சாட்டையடி' என நினைக்கின்றவள்.
இந்த ஆணோ அவளின் இயல்பு அறியாதவன், அவளை எப்படியும் இந்தப் படம் முடிவதற்குள் தன் விருப்புக்கு சம்மதிக்க வைத்துவிடலாமென நினைக்கின்றவன். ஆகவே மெல்ல மெல்லமாக அவளின் உடலின் மீதான இச்சைகளைத் தீண்டி ஆழம் பார்க்க விரும்புகின்றான். அவளும் இவனின் மெல்லிய துலங்கல்களுக்கு தூண்டல்களைக் காட்டுவதைப் போல நடித்து, இறுதியில் தன் வித்தையைக் காட்டிவிடுகின்றாள். இவனோ படத்தின் நடுவில் ஐயோ என்று துள்ளி எழுகின்றான். படம் பார்க்கின்றவர்கள் என்னவெனக் கேட்கின்றனர். இவளோ, "ஏதோ நட்டுவக்காலியோ, தேளோ கடிச்சுப் போட்டுதாம். சேர், படம் பார்க்கிறவங்களைத் தொந்தரவு செய்யாமல், Bar பக்கம் போய் வேட்டியை நல்ல உதறிப் பாருங்கள்' எனச் சொல்கின்றாள். அவளை 'கொல்கின்ற வெறி'யோடு தியேட்டரை விட்டு ஆண் விலகிச் செல்வதோடு கதை முடிகின்றது. கதை முடியும்போது மட்டுமல்ல, அதை வளர்த்திக் கொண்டும்போகும்போதும், ஆண்Xபெண் என்கின்ற எதிரெதிர்நிலைகளின் சிந்தித்தல்/உணர்வுகள் போன்றவற்றை இறுக்கமாக எஸ்.பொ எழுதிச் செல்கின்றார். ஒரு பெண் தன் உடலை லெஸ்பியன் உறவின் மூலம் கண்டுகொள்வதைக் கூட விரசமில்லாமல், கூரிய அவதாதங்களுடன் எஸ்.பொ எழுதிச் செல்லும்போது 1930களில் பிறந்த எஸ்.பொவின் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் படைப்புமனம் நீர்த்துச் செல்லவில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம். இவ்வாறு ஒரு gay ஆணான டொமினிக்கின் கதையை ஆண்மை-03ல் எழுதிச் செல்லும் எழுதும்போது எஸ்.பொவுக்கு வரும் சில குழப்பங்கள் கூட, இந்தக் கதையில் இருக்கவில்லை. அவ்வளவு தெளிவாக லெஸ்பியன் உறவை, பெண்களின் மீட்பை, எந்தப் பெண்ணாகினும் சரணடைய வைக்க முடியுமென்கின்ற ஆண்களின் திமிரைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு நவீனமான எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் காண்கின்றோம்.
2. ஆண்மை-01 இல் இலங்கையில் அரசர்களில் ஒருவராக இருந்த துட்டகைமுனுவின் மகனொருவனின் கதை சொல்லப்படுகின்றது. துட்டகைமுனுவின் போர் வெறியையும், அதிகார ஆசையும் வெறுத்து தனக்குப் பிடித்த ஒரு சாதாரண குடியானப் பெண்ணோடு வாழும் ஒருவனின் கதை இது. அந்தப் பெண்ணுக்கோ இப்படி அரச இடாம்பீகத்தைத் துறந்து, தந்தையின் கோபத்தையும் சம்பாதித்து வரும் அரசிளங்குமரனை எப்படி வைத்துத் தாங்குவதென்ற கவலை வருகின்றதது. அவன் தனது விருப்பைப் புரியவைக்கின்றான். எனதும் உனதும் குழந்தை இந்தக் காட்டுக்குள் -போலித்தனமான அரச மரியாதைகள் இல்லாது- இயற்கையுடன் இயைந்து வாழட்டுமெனச் சொல்கின்றான். ஆண்மை -02 கதையில் ஒரு இளமைக்கால எஸ்.பொவைச் சந்திக்கின்றோம். எஸ்.பொ தொடக்க காலத்தில் தீவுப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கின்றார். இந்தக் கதை அவ்வாறான ஒரு பாடசாலையிலிருந்து திரும்பவும் யாழ் நகருக்குத் திரும்பும் பஸ் பயணத்தில், சந்திக்கும் ஒரு பெண்ணோடு தொடங்கி அந்தப் பெண் தனக்கான தரிப்பிடத்தில் இறங்குவதில் முடிகின்றது. கதைசொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகின்ற அவரின் மாணவர்களின் ஒருவன் கூட எமக்கு நெருக்கமாகின்றவன். அவன் அவ்வளவு படிக்காதவன் என்கின்றபோதும் குறும்புத்தனமானவன். அவன் வலித்துச் செல்லும் சிறுபடகில் இவரையும் அந்த ஆசிரியையும் ஏற்றிவருகின்றான். இந்த ஆசிரியையோ வேறொரு பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றவர். அவரை ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்திக்கின்றார். ஆண் ஆசிரியர்கள் நூலோடு ஓடிச் சென்று, பெண் ஆசிரியைகள் வைத்திருக்கும் ஊசியில் இந்த நூலைக் கோர்க்கவேண்டும். கதை சொல்லி, இந்த ஆசிரியையில் ஒரு ஈர்ப்பு வந்து அவரை நோக்கி ஓட, இன்னொரு ஆசிரியர் குறுக்காய் நுழைந்து அந்தச் சந்தர்ப்பதை தடுத்துவிடுகின்றார். இப்போது அவர்கள் இருவரும் சிறுபடகில் போகும் சந்தர்ப்பம். அது பிறகு பஸ்சிலும் அடுத்தடுத்த இருக்கைகளில் செல்லும் பயணமாக மாறுகின்றது. இந்த ஆசிரியையே எப்படியாவது ஈர்த்து நேசித்துவிடவேண்டுமென்கின்ற ஆசை இவருக்குள் பெருகுகின்றது. ஆனால் நல்ல சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் -மற்ற‌ ஆசிரியர் நூலோடு குறுக்கே புகுந்தமாதிரி- இடையில் கைகூடாது நழுவிவிடுகின்றன. வாசிக்கும் நமக்கும் இவர்கள் இருவரும் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றுகின்றது. ஆனால் அந்தோ பரிதாபம். இறுதியில் நடக்கும் ஒரு நிகழ்வால் எல்லாக் கனவுகளும் கலைந்துவிடுகின்றன. இவ்வாறாக ஒரு அந்நியமான பெண்ணில் ஈர்ப்புவருவதும், பிறகு அவை கலைந்துபோகின்றதுமான சந்தர்ப்பங்களை நாம் ந‌ம் வாழ்வில் கண்டிருப்போம். எஸ்.பொவின் இந்தக் கதையைப் போல, நான் பஸ்களில் போகும்போது ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கின்றேன். அவருக்குச் சுருள் சுருளான தலைமயிர் என்பதும் ஞாபகம். தொடக்கத்தில் சாதாரண ஒருவரைக் கடந்துபோகின்றதுமாதிரி இருந்த எனக்கு ஒருநாள் அவரை சற்று ஆழமாக அவதானித்தபோது மூக்குத்தி அணிந்திருப்பது தெரிந்தது. அதன் பின் எப்படி எனக்குள் ஒரு வசீகரம் அவரைப் பற்றி வந்ததெனத் தெரியாது. அவரைக் காணும்போதெல்லாம் உள்ளம் நெகிழ்ச்சியுறும். புன்னகைக்கின்றாரா இல்லையா, பேச‌ விரும்புகின்றாரா இல்லையா என்பதைத் தெரியாமலே அப்படி ஒரு விளையாட்டை நாம் இருவரும் ஆடிக்கொண்டிருந்தது சுவாரசியமாக இருந்துமிருக்கிறது. 3. இன்னொரு கதை கள்ளுச் சீவுகின்ற தொழிலாளியைப் பற்றியது. வீட்டோடு கள்ளுக்கொட்டிலை வைத்திருந்ததால், தனது பிள்ளைகளின் படிப்புக் கெடுகின்றது என்பதையும் அந்தத் தந்தை அறிந்தே இருக்கின்றார். அவரின் மகன் சென்னையில் படிக்கும் இடைவெளியில், வீட்டில் வந்து தங்கி நிற்கின்றான். கள்ளுக்குடிக்க வரும் வின்ஸர் தியேட்டர் நிர்வாகி, வீட்டுப் பிரச்சினையுடன் கள்ளுப்போதையில் கொஞ்சம் எகிறுகின்றார். தூசணமெல்லாம் பேசுகின்றார். அப்போது அடைப்புக்குறிக்குள் எஸ்.பொ கூட இந்தளவுக்குத் தூஷணமெல்லாம் பேசமாட்டான் என்கின்ற குறிப்பில் தெரிவதுதான் எஸ்.பொவின் குறும்புத்தனம்.. 'நாங்கள் யார், நீங்கள் எளிய சாதிகள்' என்று அரைகுறைத் தமிழிலும் சிங்களத்திலும் அந்த முதலாளி பேசுகின்றார். ஒரளவுக்குத் தாங்கிக் கொள்ளும் கள்ளுக்கடைக்காரர் ஒரு அறைபோட்டு சாத்தி அவரை அமைதியாக்கின்றார். அப்பாவோடு யார் இப்படி சண்டையிடுகின்றதென்ற‌ சினத்தில் சென்னையில் படிக்கும் மகன் உலக்கையோடு ஓடிவருகின்றான். 'இது சின்னப்பிரச்சினை இப்படி உலக்கையோடு வரவா நானுன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிப்பிக்கின்றேன்' என்கின்றார் தகப்பன்.

இந்தக் கதையில் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதி அடையாளத்தை படிப்பாலும், பொருளாதாரத்திலும் மீற முயலும் ஒரு அழகான குடும்பத்தை நாம் பார்க்கின்றோம். அடித்ததால், அந்த வின்ஸர் நிர்வாகி மயங்கிவிழுந்தாலும் அவரைத் தூக்கிக்கொண்டு அவரின் பட்டறைக்குள் விட்டுவிட்டே திரும்பி இந்தத் தந்தை வருகின்றார். இப்படி அறைந்ததால் மனம் சரியில்லை என்று கொட்டிலுக்குள்ளேயே படுக்கின்றவருக்கு அவரின் மனைவி சாப்பாடு கொடுத்து தூங்க‌ வைப்பதுடன் கதை முடிகின்றது.
ஒடுக்கப்பட்ட சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறையுடன், தம் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத மனிதர்களை நாம் இங்கே பார்க்கின்றோம். இந்தத் தந்தையின் பிள்ளைகள் இன்னும் உறுதியாய் தம் மீது திணிக்கப்படும் சாதிய வன்மங்களை வீரியமாய் எதிர்கொண்டு முன்னகர்ந்து செல்வார்கள் என்பதை எமக்கு எஸ்.பொ இந்தக் கதையில் மட்டுமில்லை, வரலாற்றில் வாழ்தலிலும் சொல்லியிருக்கின்றார்.
இவ்வாறான கள்ளுக்கொட்டில் அனுபவங்களை தெணியான் தனது சுயசரிதையாக எழுதிய 'இன்னும் சொல்லாதவை' இல் நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கின்றோம். கள்ளுக்கொட்டிலை வைத்திருக்கும் அவர் தகப்பன் ஒருகட்டத்தில் உதவிக்குக் கூட படிக்கின்ற மகனை (தெணியான்) வரவேண்டாம் என்று நிறுத்துவதில் இருந்து சாதிய ஒடுக்குதல்களின் பல திசைகள் நமக்குப் புலப்படுகின்றது.
ஆண்மை 9வது கதையில், பராசக்தி அக்கா தான் சிறுவனாக இருந்தபோது ஆண்மையை விழிக்கச் செய்ததாக கதைசொல்லி தனது பேரப்பிள்ளைகள் வந்துவிட்ட‌ காலத்தில் இருந்தபடி அசைபோடுகின்றார். அவர் அடிக்கடி விளையாட்டைக் காரணஞ்சொல்லி பராசக்தி அக்கா வீட்டுக்குபோனது கண்டுபிடிக்கப்பட்டு வெண்தாடிக்கிழவர் எனப்படும் அவரது அப்பையாவினாலும், மாமாவினாலும் அடிகொடுக்கப்பட்டு 'திருத்தப்படுகின்றார்'. சிறுவர்களாகிய நாம் எப்போது இளைஞர்களாகின்றோம், அது நம்மெல்லோருக்கும் இனிய அனுபவமாகத்தான் இருக்கின்றதா என இந்தக் கதையை முன்வைத்து நாம் நனவிடைதோய்ந்தும் பார்க்கலாம்.

*****************

(புகைப்படங்கள்: நன்றி/இணையம்)

எஸ்.பொவின் 'ஆண்மை'

Wednesday, March 09, 2022


(எஸ்.பொ - பகுதி -03)


1.


எஸ்.பொவை முதன்முதலாக 2000ம் ஆண்டளவில் சந்தித்தபோது, அவரது 'ஆண்மை' தொகுப்பை ஏற்கனவே வாசித்திருந்தேன். 'ஆண்மை'யில் எந்தக் கதைக்கும் பெயரிடப்படவில்லை. ஆண்மை- 01 எனத் தொடங்கி ஆண்மை- 15 வரை கதைகள் அதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் அப்போதுதான் இலக்கியம் என்பது பாலகுமாரனைத் தாண்டியும் இருக்கின்றதென உணர்ந்து, தீவிரமாய்ப் பிறரையும் வாசிக்கத் தொடங்கிய காலம். எஸ்.பொ அந்தக்காலகட்டத்தில்தான் புலம்பெயர் இலக்கியத்தை தானே முன்னத்தி ஏராக நின்று, நகர்த்துவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பல்வேறு கண்டங்கள்/நாடுகளுக்குப் பயணித்துப் பாடுபட்டுக்கொண்டிருந்தார். அவ்வளவு நம்பிக்கையோடு இலக்கியத்தின் மீது இருந்த எஸ்.பொ என்ற முன்னோடியின் தீயின் சிறு'துளி'யாவது என்னைப் போன்றவர்களை அன்று தீண்டாமல் இருந்திருந்தால்தான் வியப்பாயிருந்திருக்கும்.


அந்தப் பயணத்தின்போது கனடாவுக்கு எஸ்.பொ வந்தபோது, அவரது தடித்த கண்ணாடிகளுக்குள் இருந்து தீட்சண்யமாக வெளிப்படுத்திய பேச்சை விட அவரிடம் நான் வாசித்த 'ஆண்மை'யைப் பற்றிக் கேட்க சில கேள்விகள் இருந்தன. நிகழ்வு முடிந்து வெள்ளைவேட்டி சரசரக்க நடந்து வந்தவரை இடைமறித்தேன். எல்லாக் கேள்விகளைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்காதபோதும், ஆண்மை-09ல் பராசக்தி அக்கா, அவன் அவ்வளவு சிறுவன் என்று தெரிந்தும் அவனின் உடலோடு விளையாடியது சரியா, எழுத்தில் இப்படி வைப்பது முறையா எனக் கேட்டேன். 'தம்பி, எழுத்தில் வைப்பது சரியா, இல்லையா என்பதைவிட, அப்படி எனக்கு நடந்தது அதைத்தான் எழுதினேன்' என்றார் எவ்விதத் தயக்கமும் இல்லாது. எஸ்.பொவுக்கா அல்லது இன்னொருவருக்கா இது நடந்தது என்பல்ல முக்கியம், புனைவின் சுதந்திரம் குறித்தும், உதறித்தள்ளவேண்டிய தயக்கங்கள் பற்றியும் நானாக இதை உணர எனக்குப் பல ஆண்டுகள் பின்னர் தேவைப்பட்டது.


ஆண்மையில் இது ஒரு முக்கியமான கதையல்ல. ஒருவகையில் இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் 'ஆண்மை' என்பது எதுவாக இருக்கும் என்று நேரடியாகவும் மறைமுகமாவும் பரிட்சித்துப் பார்க்க விரும்புகின்றதென எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு கதையும் இதுதான் 'ஆண்மை' என்று தெளிவாக வரையறுக்காமல் வழுக்கிச் செல்வதுதான் இந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் சலிக்காது வாசிக்க முடிவதற்கும் ஒரு காரணமாகின்றது.


இத்தொகுப்பில் முக்கிய கதைகளில் ஒன்றாக ஏழாம் கதையைச் சொல்வேன். அது நிச்சாமத்தில் நிகழ்ந்த சாதி வன்முறைக்கு எதிராக நின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் நெஞ்சுரத்தை மிகத்தெளிவாகப் புனைவில் முன்வைக்கின்றது. சாதிமான்கள் நடத்தும் தேநீர்க்கடைகளில் தேநீர் குடிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையும் போராட்டம் ஆதிக்க சாதிகளால் பொலிஸ் துணையுடன் வன்முறையாக்கப்படுகின்றது. நிச்சாமம் கிராமம் ஆயுதப்பொலிஸால் சுற்றிவளைக்கப்படும்போது, அதற்கு தலைமைதாங்கும் ஒருவர்  மக்கள் அநியாயமாகக் கொல்லப்படப்போகின்றார்கள் என்பதன் நிமித்தம் சரணடைகின்றார். மணியம் என்கின்றவர் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவராக இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமைகளைக் காப்பாற்றுவதற்காக தன்னைக் கைது செய்யச் சொல்வதை எஸ்.பொ 'ஆண்மை' என்கின்றார். ஓர் உண்மையான போராட்டக்காரன் ஒருபோதும் அநியாய பலியெடுப்புக்களுக்குப் போகமாட்டான் என்பதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் தொடர்ந்து செல்வதற்கு இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்பதையும்  இந்தக்கதையின் முடிவை வைத்து நாம் விளங்கிக்கொள்ளலாம். 


இந்தக் கதையை வாசிக்கும்போது நாம் வரலாற்றின் ஒரு குரூர காலத்தில் நுழைகின்றோம். நமக்கு ஒருபக்கத்தில் தமிழீழத்தைப் பெற்றுத்தருகின்றோம் என்று முழங்கியவர்களே, எப்படி தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு பொலிஸ்/அரசு அதிகாரத்தை ஏவிவிட்டார்கள் என்பதையும் நாமறிகின்றோம். இந்துக்கோயில்களில் மட்டுமில்லை இளவாலையில் இருக்கும் கத்தோலிக்கத் தேவாலயத்தில் வழிபடக் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமிருக்கவில்லை என்பதையும் கண்டுகொள்கின்றோம். நிச்சாமம் சாதி எதிர்ப்பின் உச்சமாய்த் திமிர்ந்தபோது,  அங்கே சாதிச் சண்டை நடக்கவில்லை, ( சீன மார்க்ஸிஸ்ட்டுக்களின்) ஷாங்காய் புரட்சி நடக்கின்றது என்று கொழும்பில் பேசிய தமிழ்த்தலைவர்களின்  இரட்டை வேடங்களும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன.


இன்று அமெரிக்க ஹொலிவூட்காரர்கள் பலரின் தாத்தாமார்கள் ஒருகாலத்தில் பெரும் அடிமை வியாபாரத்தை நடத்தியும், தம் பண்ணைகளில் அடிமைகளையும் வைத்திருந்தார்கள் என்று அறிய வருகின்றபோது பல நடிகர்கள் தன் முன்னோர்களின் செயல்களின் நிமித்தம் மன்னிப்பைக் கேட்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இன்றளவும் அன்று சாதிமான்களாக இருந்து, அவர்களின் வாரிசுகளாக  இப்போதிருக்கும் பிள்ளைகளிலும் பேரப்பிள்ளைகளிலும்  எத்தனைபேர் வெளிப்படையாக அன்றைய சாதி வெறியின் பேரில் இந்த மன்னிப்புக் கோரலைக் கேட்டிருக்கின்றனர்?  அது குறித்து குற்றவுணர்வையாவது கொண்டிருக்கின்றார்களா என்பது குறித்த கேள்விகளை நாம் கேட்கவேண்டியவராகின்றோம்.


2.


இந்த நிச்சாமக் கதைக்கு நிகராக, 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும் பத்தாவது கதையையும் சொல்வேன். இந்தக் கதை முற்றிலும் மட்டக்களப்பில் நிகழ்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதைசொல்லி, மட்டக்களப்புக்கு வேலை நிமித்தம் போய், அங்கிருந்த குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகுகின்றார். அவருக்கு, அந்த வீட்டில் பெற்றோரை இழந்து தாய்மாமனோடும், அம்மம்மாவோடும் இருக்கும் பெண்ணின் மீது மையல் வருகின்றது. காதலைத் தாண்டி 'தசை' ஆசை இன்னும் இந்தக் கதைசொல்லியைத் தொந்தரவு செய்கின்றது. 


ஒரு பூரணைநாளில் அந்தப் பெண்ணை அடையமுயல்கின்றபோது அவள் இடைநடுவில் நிறுத்துகின்றாள். கதைசொல்லி கோபத்துடன் யாழ்ப்பாணம் போய்விடுகின்றார். பெண்ணோ திரும்பி வரும்படி உருக்கமான கடிதங்களை எழுதுகின்றாள். எப்படியெனினும் உங்கள் மீதான காதலில் அடுத்த பூரணையில் என்னை முழுதாகத் தருகின்றேன் என்கின்றாள்.


கதை சொல்லி மீண்டும் மட்டுநகருக்குத் திரும்பிவருகின்றார்.  கோபத்தோடு இருக்கும் கதைசொல்லிக்குத் தன்னை முழுமையாகக் கொடுக்க அந்தப் பெண் தயாராகின்றாள். அந்தவேளையில் அந்தப் பெண்ணின் பரிபூர்ணமான மனது கதைசொல்லியை நடுங்கவைக்கின்றது  அவளை விட்டுவிலகி ஓடுகின்றார். திரும்பி வாருங்களென அவள் கூப்பிடுகின்றாள். அப்போதுதான் கதைசொல்லி உண்மையைச் சொல்கின்றார். தனக்கு ஏற்கனவே மனைவி யாழில் இருக்கின்றாள். உன்னளவில் அழகில்லையென்றாலும் அவளின் காத்திருப்பைத் தாண்டி எதுவும் செய்யமுடியாது என்று இந்தப் பெண்ணின் தன்னைகொடுக்கும் பரிபூர்ண இழத்தலின்  முன் சரணடைகின்றார். இத்தோடு கதை முடிந்திருந்தால் அது சாதாரணமாகிவிடும். எஸ்.பொ முடிக்கும் இடத்தைப் பாருங்கள். 


"மட்டக்களப்பாரின் மந்திரம் என்ன?

பாயோடும் ஒட்டும் பழிப்புரை என்ன?

இந்தக் கொச்சையான ஜோடிப்பிற்குப் பின்னால், எத்தனை அமரிகளுடைய கன்னிமை என் போன்ற யாழ்ப்பாண ஓநாய்களினால் குதறப்பட்டது?

அமரி நீ கார்த்திகை நட்சத்திரக்காரி. உன் மாப்பிள்ளை என்றாவது ஒருநாள் உன் வீடு தேடிவருவான்..

நான் மனிதனாய் மீளுயிர்ப்புப் பெற்ற திருப்தி, ஏனைய சோகங்களை விழுங்க, ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது."


எவ்வளவு அற்புதமான கதையாக ஒரு பெண்ணின் அந்தப் பரிசுத்த அன்பின் முன், தன்னை மீளுயிர்ப்புப் பெற்ற மனிதனாக கதைசொல்லியை மாற்றி இந்தக் கதையில் எஸ்.பொ முடிக்கின்றார். இந்தக் கதையை எஸ்.பொவைத் தவிர வேறொருவராலும் இவ்வளவு அருமையாக எழுதியிருக்கவே முடியாது.  எழுத்து தன்னை மறந்து தானே நிகழ்த்திக்கொள்ளும் வித்தையை இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்தே உணரமுடியும்.


3.


இதேபோன்று இன்னொரு முக்கியகதையாக ஆண்மை-12ஐக் கொள்வேன். இந்தக் கதையில் தமிழ் - முஸ்லிம் உறவின் அரிய காலத்தைக் காண்கின்றோம். இப்படியெல்லாம் மனிதர்கள் ஒருகாலத்தில் வாழ்ந்திருக்கின்றார்களா என இனங்களுக்கிடையிலான முரண்கள் உச்சத்தில் இருக்கும் அவலகாலத்தில் அல்லவா இப்போது நாம் வாழ்கின்றோம்.


பாணந்துறையில் கடை நடத்தி வரும் வேலாயுதபிள்ளை இனக்கலவரத்தில் அவரின் கடையோடு வைத்துக் கொளுத்தப்படுகின்றார். அவரோடு நண்பராக இருக்கும் ஹஜியார், அவரின் மகனான கணபதிக்காக அந்தக் கடையை மீளவும் கட்டிக்கொடுக்க, அடுத்த தலைமுறையான கணபதியும், ஹஜியாரின் மகனான அஸாருத்தீனும் நல்ல நண்பர்களாகின்றனர். ஹஜியாரின் குடும்பத்தில் கணபதியும் ஒரு மகனாகின்ற அளவுக்கு நெருக்கமாகின்றான். ஆயிரம் பேரைக் கொன்ற அங்குலிமாலாவையும் மன்னித்த கருணாமூர்த்தி புத்தரின் அஹிம்சையைச் சொல்லிக்கொண்டிருந்தபோதும், சிங்களப்பேரினவாதம் பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக அங்குலிமாலாவின் கதை இந்தக் கதையில் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இப்போது வருடம் 1983. அஸாருத்தீன் கொழும்புக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வர, பாணந்துறையில் இருக்கும் கடைக்கு சிங்களக் காடைக்குழு  தீ வைக்கப் போக, அதை தடுத்து நிறுத்த கணபதி ஓடுகின்றான். கொழும்பிலிருந்து பாணந்துறைக்கு, கொழும்பில் நடந்த கலவரத்தைச் சாட்சியாகப் பார்த்துவிட்டு பதறிவரும் அஸாருத்தீன், தாயிடம் ஏன் கணபதியை கடைக்கு அனுப்பினீர்கள் என வைதபடி, அவனைக் காப்பாற்ற இன்னொரு 'தொப்பியையும், ஜூப்பாவையும்' எடுத்துக்கொண்டு கணப்தியை முஸ்லிமாக மாற்றிக் காப்பாற்றத் தெருவுக்கு ஓடுகின்றான். அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்ததென்று ஒரு கதையை எஸ்.பொ சொல்லிவிட்டு, பிற்சேர்க்கையாக வாசகனுக்கு இன்னொரு முடிவையும் சொல்கின்றார். ஒரு காலத்தில் வரலாற்றை, ஆனால் அந்த வரலாற்றின் முடிவை வேறுவிதமாக எழுதவேண்டுமென ஆசைப்படும் எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் பார்க்கின்றோம். 


ஒருவகையில் புனைவைவிட உண்மையே தன்னை தொந்தரவு செய்கின்றது என, இந்த இனவெறித்தாக்குதல்கள் நடந்தபோது தான் நைஜீரியாவில் வாழ்ந்துகொண்டிருந்தேன் என எஸ்.பொ வாசகருக்காக ஒரு குறிப்பையும் தருகின்றார். இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது புத்தரின் காருண்யத்தைத் தனதாகக் கொண்ட சிங்களப் பேரினவாதம் எப்படியெல்லாம் தமிழர்களின் மீது நடந்துகொண்டதோ அதுபோல நாமும் பின்னர் முஸ்லிம் மக்களை எப்படி எங்களிலிருந்து பிரித்து விலத்திவைத்தோம் என்பதையும் இந்தக் கதையை முன்னிட்டு வாசித்துப் பார்க்கலாம்.


நிச்சாமம் கதையில், மிகத் தெளிவாக தேசியப்போராட்டத்தை நிகர்த்து சாதிப்போராட்டம் இருக்கின்றதென எஸ்.பொ முன்வைக்கின்றார். அதேவேளை எஸ்.பொ பிற்காலத்தில் தமிழ்த்தேசியத்தையும் மிக உறுதியாக முன்வைத்தவராக இருந்தபோதும்,  இறுதிவரை எழுத்திலும், பேச்சிலும் முஸ்லிம்களின் வடபகுதி வெளியேற்றத்தை தவறான விடயமெனக் கண்டித்தபடியே இருந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மக்களின் மீதான சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைகளை எஸ்.பொ தொடர்ச்சியாக வலியுறுத்த வந்ததை ஏற்றுக்கொண்டாலும், பிற்காலத்தில் எழுதிய 'மாயினி' நாவலில் பண்டாரநாயக்க குடும்பத்தை மிகக் கொச்சையான எள்ளல்களால் கீழிறிக்கியும் வைத்தது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். அப்படி எழுத எங்களுக்கு எஸ்.பொ தேவையில்லை. இங்கே சமூகவலைத்தளங்களில் எழுதும் அரைகுறை வாசிப்புள்ளவர்களே போதும் என்பேன்.


*****************

(2019)