கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கலைஞர்களின் தளம்பல்கள்

Wednesday, December 18, 2013

('அரங்காடல்' இறுதியில் வரும்)
1
கலைஞர்கள் எப்போதும் தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே நிலையில் என்றுமே  இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும் அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும். ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் வித்தியாசமாக இருப்பதனால் அவர்கள் சாதாரணர்களை விட மேலோரானவர்களாய் இருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. சிலவேளைகளில் அவர்களின் படைப்புக்களினூடாக வசீகரிக்கப்பட்டு அவர்களின் தனிவாழ்வை அறிய நேரும்போது நமக்கு அவர்கள் எதிர்மறையான விம்பத்தையோ, ஏமாற்றத்தையோ  தரவும் கூடும். 'நானொரு கலைஞன் என்னை நீங்கள் மதிக்கவேண்டும்' என்று சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுபவர்களை விட, 'இந்தச் சமூகம் எப்படி என்னை நடத்தினாலும், நானொரு கலைஞன்' என மெளனத்தின் மூலம் சலனங்களை ஏற்படுத்துபவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்புண்டு.

உண்மையில் பெரும்பான்மையான கலைஞர்களின் வாழ்வு இருளின் வர்ணத்தைப் பூசியது. சிலவேளைகளில் இத்தகைய நெருக்கடிக்குள்ளும், துயரத்திலிருந்தும் எப்படி அவர்களால் இவ்வளவு அருமையான படைப்புக்களைத் தரமுடிந்ததென வியந்துமிருப்போம். எதற்காய் பாரதி உணவு சமைப்பதற்காய் இரவல் வாங்கிய தானியத்தைச் சிட்டுக்குருவிகளுக்குப் போட்டார்? ஏன் சி.செல்லப்பா தன் சொத்துக்களை இழந்து  தெருத்தெருவாக 'எழுத்தை' விற்றுத் திரிந்தார்? ஏன் நகுலன் எப்போதும் தன்னோடு பேசுவதில் அளவற்ற ஆர்வத்துடன் இருந்தார்? எதற்காய் வான்கோ காகினோடு சண்டைபிடித்து தன் காதின் நுனியை வெட்டிக்கொண்டார்? ஏன் காப்ஃகா கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அதிகாரங்களுடன் தளராது சமர் செய்துகொண்டிருந்தார்? ஏன் எங்களின் ஏ.ஜே தன்னைப் புகழ்ந்தெழுதிய பத்தியை premature obituary என்றும், அவரைப் பற்றி வெளியிட்ட சிறப்பிதழை தீண்டியும் பார்க்காமல் இருந்தார்?

நமக்கு இந்த 'ஏன்'களுக்குத் தெளிவான பதில் தெரியாது. வேண்டுமெனில் எங்களை நாங்கள் சமாதானப்படுத்திக்கொள்வதற்காய் 'இதெல்லாம் பைத்தியக்காரத்தனங்கள்' எனச் சொல்லி நம்மை நாமே ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த மனிதர்களுக்கெல்லாம் சாதாரணமானவர்களைப் போல வாழும் ஆசை இருந்திருக்காதா என் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படி அவர்களால் இருக்கமுடியாது, அவர்களைக் கலை    - கோயிலுக்கு நேர்ந்துவிட்ட தேவதாசிகளைப் போல- தேர்ந்தெடுத்துக்கொண்டது என நாம் அவர்களை இனியாவது கனிவுடன் பார்க்கக்கூடாதா? அவர்கள் தம் பெரு விருப்பங்களையும், மீளமுடியா வலிகளையும் முன்வைத்திருப்பதால்தான், நாம் அவர்களை வாசிப்பதன் மூலம் எங்களின் துயரங்களையும், சரிவுகளையும் தேற்றிக்கொண்டு மீள எழுந்து வாழமுடிகிறது என எப்போதாவது நினைத்திருக்கின்றோமா?

அன்னா கரினீனா என்கின்ற மாபெரும் காவியப்பெண்ணை உருவாக்கிய டாஸ்டாயினால் ஏன் அவரின் துணைவியான ஸோபியாவை புரிந்துகொள்ள முடியாமல் போனது? அதிகாரத்தின் நுண்தளங்களில் பயணித்துப் பார்த்த காப்ஃகா ஏன் இரண்டு முறையும் பெலிசியுடனான தன் திருமணத்தை இடைநிறுத்தினார்? இரண்டு தடவையும் திருமணஞ்செயய சம்மதித்த பெலிசி காப்ஃகா மீது எவ்வளவு காதலுடன் இருந்திருப்பார். ஏன் அவரை அந்தளவிற்குத்  துயருற வைத்தார்? காப்ஃகா பெலிசியிற்கு எழுதிய கடிதங்களில் எத்தகைய மோசமானவராக காப்ஃகா இருந்திருக்கின்றார் என் இன்றும் சாட்சியம் சொல்கின்றனவே? கலைஞர்களையும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையையும் எப்படிப் புரிந்துகொள்வதென்கின்ற குழப்பம் இப்போது நமக்கு வருகிறதல்லவா?

ஸோபியாவைப் புரிந்துகொள்ளாத டாஸ்டாயின் அன்னா கரீனீனாவை நம்மால ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. பெலிசியின் உணர்வுகளை உதறித்தள்ளிய காப்ஃகாவின் 'விசாரணை'யை நாம் கொண்டாடத்தான் செய்கின்றோம். ஏனெனில் கலைஞர்கள் வானத்திலிருந்து தோன்றிய சுயம்புகள் அல்ல என எமக்குத் தெரிகிறது. அவர்களும் நம்மைப் போலவே பலவீனங்களும், தடுமாற்றங்களும் கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். சிலவேளைகளில் இப்படித் தளம்பல்களைக் கொண்டவர்களாய் இருப்பதனால்தான் அவர்கள் இன்னுமின்னும் எங்களை வசீகரிக்கின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே பயணிக்காத பாதைகளில் கலைஞர்கள் தம் தேடல்களை நிகழ்த்தவே விரும்புவர். தீ சுடும் என்று நமக்குச் சொல்லித்தராத வரை தீயைத் தீண்டியல்லவா பார்த்திருப்போம். அப்படித்தான் இந்தக் கலைஞர்களும் நாமறியாத பாதைகளில் பயணித்து கலைகளினூடு தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்துவமான பயணங்கள் இருப்பதை நாம் நன்கறிவோம் நமகான பாதைகளில் நாம் பயணிக்கும்போது ஏற்கனவே அறிந்ததை உணரும்போது சிலிர்க்கின்றோம். அந்த அறிதலை இந்தக் கலைப்படைப்புக்கள் நமக்குத் தருகின்றன. ஆனால் இவை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இதற்காய்ச் சிலவேளைகளில் பல கலைஞர்கள் தமது முழுவாழ்க்கையையும் தொலைத்திருக்கின்றனர் என்றறியும்போது நமக்கு இன்னும் இந்தக் கலைஞர்கள் மீது நேசம் வருகின்றதல்லவா?  தன்னையே அழித்தழித்து 'மூலதனம்'  போன்றவற்றைத் தந்த மார்க்ஸை விட நாமின்னொரு உதாரணத்தைத் தந்துவிடமுடியுமா என்ன?

2.
மீள்வாசிப்பை நாம் எப்படியும் எதிலும் நிகழ்த்த முடியும். ஆனால் சில இடங்களில் நாம் கையே வைக்கமுடியாது. அவ்வாறு செய்யும்போது அது வேறொரு பிரதியாக  மாறிவிடுகின்றது. இராவணன் எவ்வளவு நல்லவராக, சிவபக்தனாக இருந்தாலும், இராவணன் இராமனைக் கொன்றார் என மாற்றிவிடமுடியாது. எவ்வளவுதான் மறுவாசிப்பைச் செய்தாலும் இறுதியில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்றாகத்தான் வேண்டும். அவ்வாறுதான் நாம் அன்னா கரினீனாவை எவ்வளவு மறுவாசிப்பை நிகழ்த்தினாலும் கரினீனா ரெயினின் முன் விழுந்து தற்கொலை செய்வதை மாற்றிவிடமுடியாது. டாஸ்டாய், ஸோபியாவை தன் மரணத்தருவாயிலும் இரெயின் நிலையத்தில் வைத்துச் சந்திக்க விரும்பவில்லை என்பதையும் மாற்றிவிடவே முடியாது. ஆகவே  நாம் மாற்றவே முடியாச் சில சம்பவங்கள் எல்லாப் பிரதிகளிலும் இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கரினீனா தனக்கு விருப்பமான வாழ்வை வாழ்ந்ததுபோலவே, தனக்குப் பிடித்தமான முறையிலே தனது தற்கொலையைத் தேர்ந்தெடுத்தாரென நாம் கூறிக்கொள்ளலாம். ஆனால் அதேயே இன்னொருவர் இல்லை, கரினீனா இப்படி தற்கொலையைச் செய்தவர் என்பதால் அவருக்குள் பகிரமுடியாத பெரும் துயரம் இருக்கிறதெனக் கூறினாலும் -நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ- அது இன்னொருவரின்  வாசிப்புச் சுதந்திரம் என விளங்கிக்கொண்டாக வேண்டும். வாழ்வை சாகசங்கள் மூலம் கொண்டாடிய எர்னாஸ்ட் ஹெமிங்வே கூட தற்கொலையே செய்துகொண்டார், அப்படியெனில் அவரது  வாழ்வுதான் தோற்றுவிட்டதா என்ன? இல்லைத்தானே. ஆகவே கரினீனாவை நாம் எமக்கு விரும்பியமாதிரி எப்படியும் வாசித்துக்கொள்ளலாம். ஆனால் எமது வாசிப்புக்கள் மட்டுமே சரியென்று கூறினால், நாம் மகாபாரதம்/இராமாயணம் போன்ற காவியங்கள் பற்றி எழுதப்பட்ட பன்முகப்பிரதிகளை மறுத்துவிடுகின்ற ஆபத்தான நிலைக்குப் போய்விடுவோம்.

ஆகவே நான் செழியனிடம் நீங்கள் இப்படி கரினீனாவின் பாத்திரத்தைப் படைத்தது நியாயமா எனக் கேட்கப் போவதில்லை. ஆனால் அன்னா கரினீனா போன்ற பல்வேறு உள்ளடக்குகள் கொண்ட பாத்திரத்தைப் படைத்த டாஸ்டாயை இன்னொரு பாத்திரமாகப் பிரதியில் படைத்திருக்கலாம். அங்கே டாஸ்டாய் 'அன்னா கரினீனாவைச் சிருஷ்டித்த என்னால் அருகிலிருந்த சோபியாவைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே. இறுதியில் என்னைப் பார்க்க ஆவலோடு ஓடோடிவந்த ஸோபியாவை இரெயின் நிலையத்தில் வைத்துக்கூட சந்திக்க மறுத்தேனே, அந்தத் துயரத்தைக் காவியபடி இன்றும் தூங்காது அலைந்து கொண்டிருக்கின்றேனே' என டாஸ்டாய் தோன்றி நம்மிடம் கூறியிருந்தால், செழியன் என்கின்ற கலைஞனை இன்னும் நெருக்கமாய் உணர்ந்திருப்பேன். செழியன் தவறவிட்டது இந்தப்புள்ளியைத்தான்.

எனெனில் ஏற்கனவே பயணிக்காத திசைகளில் பயணிக்கின்றபோதுதான் ஒருவர் உன்னதக் கலைஞர் ஆகின்றார்.
................

(Oct 18, 2013)

0 comments: