கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையின் கொலைக்களங்களும், இன்னபிறவும்

Tuesday, April 10, 2012

ப்போது ‘இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka, Killing Fields: War Crimes Unpunished)’இரண்டாவது பகுதியாக பிரித்தானியாவின் சனல்4ல் வெளிவந்திருக்கின்றது. முதலில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka, Killing Fields) ஆவணப்படத்தைப் பார்க்காததைப் போலவே இந்த இரண்டாம் பகுதியையும் பார்க்கவில்லை. அதற்கான மனோதிடம் என்னிடமில்லை என்பதால் தவிர்த்திருந்தேன். எனினும் நண்பர்கள் முகப்புத்தகங்களில் இவற்றைப் பகிர்ந்தபோது அதைத் தாண்டிப் போகவும் கடினமாயிருந்தது. இந்த இரண்டாவது ஆவணப்படம் ஒளிபரப்பாகிய அன்று எழுதப்பட்ட சில கட்டுரைகளை வாசித்தே, அன்றைய இரவு தூங்கமுடியாது நினைவுகள் அலைக்கழிந்து கொண்டேயிருந்தன.

போருக்குள் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் நாளாந்தம் பார்ப்பதாய் இருந்திருக்கும். எனக்கு இவ்வாறான போர்க்குற்ற அசையும்/அசையாய்ப் படங்களை பொதுவில் வைப்பதிலும் சிக்கலுமுள்ளது. தமிழகத்து நண்பரொருவர் இவ்வாறான சலனக்காட்சிகளை வெளிப்படையாக முன்வைத்தால் மட்டுமே மேற்குலகின் முகத்தில் அறைந்து நீதி கேட்பது போல இருக்கும் என்றார். இன்னொரு ஈழத்து நண்பரொருவர் எங்களுக்கு எப்போதோ இவற்றைப் போன்று பலவற்றை நேரில் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது என்றார். இந்தியா,சீனாவிலிருந்து மேற்குலகுகின் பல நாடுகள் வரை ஈழத்தின் இறுதிப் போரின் இரத்தத்தில் கை நனைக்காதவர்களென எவரும் இல்லையென்றேதான் கூறவேண்டும். இன்றைய காலத்தில் வடிக்கப்படும் இந்த நாடுகளின் நீலிக்கண்ணீர் பற்றியும் ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நன்கு தெரியும், எனினும் இழப்புக்களையும், வடுக்களையும், காயங்களையும் மறந்து தொடர்ந்து வாழ, அவர்களுக்கு யாரிடையதோ பெருங்கருணையும் ஆதரவும் தேவையாய் இருக்கின்றது.

எங்கள் ஊரில் வைரவர் கோயிலுண்டு. அங்கு பூசை செய்துகொண்டிருந்தவர் என் மீது பிரியமாய் இருந்திருக்கின்றார். 5ம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையின் நிமித்தம் மேலதிக வகுப்புக்களுக்காய் சில கிலோமீற்றர்கள் மாலை நேரங்களில் நடந்து போய்க்கொண்டிருப்பேன். அப்போது தெருவில் இடைநடுவில் நடந்துவரும் என்னைக் காணும்போதெல்லாம் அவர் தன் சைக்கிளில் ஏற்றிக்கொள்வார். ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் அப்போது வேலை செய்துகொண்டிருந்தார். இறுதிப் போரின் காலங்களில், காலில் ஷெல் துண்டுபட்டு வெளியேறிய இரத்தத்தை நிறுத்த முடியாது இறந்து போயிருந்தார். சாதாரண மருத்துவ வசதி அன்றிருந்தாலே எளிதாகத் தப்பக் கூடிய காயந்தானென -அவரின் இறப்பு வீட்டுக்கு இங்கே சென்றபோது- அவரின் உறவுக்காரர்கள் கூறியிருந்தனர். நினைவுகள் தொடர்ந்து துயரத்தில் அமிழ்த்தியபடியே இருக்கின்றன. எவற்றை மறக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவை ஞாபகங்களைப் பலமடங்களில் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்று ஈழத்தமிழர்களில் தங்களின் உறவுகளில் ஒருவரையோ அல்லது அயலவர்களில் ஒருவரையோ போருக்குப் பலிகொடுக்காத யாரையேனும் காண்பது என்பதே அரிதாகத்தானிருக்கும். எல்லாவற்றையும் மறந்துவிடலாமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாவது தென்படுதா எனப் பார்த்தால் கூட, பெரும் வெறுமையே அவர்களைச் சூழ்வதாய் இருக்கிறது. இது போதாதென்று வென்றவர்கள் தோற்றவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்வார்கள் என்றால் இவ்வாறான படுகொலைகள் எதுவுமே நடக்கவில்லையென வென்றவர்களில் ஒருசாரார் கொழும்பில் நின்று ஆர்ப்பாட்டஞ் செய்கின்றார்கள். போர் முடிந்துவிட்டது என்கிறார்கள், ஆனால் இன்னமும் போர் இலங்கையிலுள்ள மக்களில் மனங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகின்றது. எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்த்திசையிலிருப்பவர்களைப் பார்த்தே கையைக் காட்டுகின்றார்களே தவிர எவருமே தங்கள் தவறுகளை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதே இன்றைய கசப்பான யதார்த்தம்.

டி.எச்.லோறன்ஸின் ‘The Lady's Chatterley's Lover’ நாவல் முதலாம் உலகப் போர் முடிந்து மிகப் பெரும் 'அழிவின் பின் சிறு நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கின்றது; எனினும் எத்தனை முறை வானம் இடிந்து வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து வாழத்தான் வேண்டும். போகும் பாதை எளிதானதாயில்லாதபோதும் தடைகளைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும்' எனத் தொடங்குகின்றது. இந்தப் புதினம், அது பேசும் விடயங்களுக்காகவும், எழுதப்பட்ட மொழியிற்காகவும் ஒருகாலத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டதோடு பல்வேறு நாடுகளில் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கின்றது.  நாவலில் காமம் ஒரு முக்கிய இழையாக இருந்தாலும் அதையும் தாண்டி கைத்தொழில் புரட்சியிற்கு எதிரான கருத்துக்களும், உயர்வர்க்கத்தின் போலி ஆடம்பர வாழ்வு குறித்த எள்ளலும் கூர்ந்த கவனிக்கத் தக்கவை. பெண்ணின் காமம் குறித்து மிக நுட்பமாக டி.எச்.லோறண்ஸ் கவனித்து அதை ஆழமாக முன்வைத்திருக்கின்றார். மேலும் உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்/ நடுத்தர குடும்பத்தினர்/ கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென பாத்திரங்களைப் படைக்கும்போது அவர்கள் பேசும் மொழியை ஒவ்வொருவருக்குமென வித்தியாசப்படுத்தி தனித்துவமாய் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பல 'கெட்ட வார்த்தைகள்' நேரடியான பேசுமொழியில் பாவிக்கப்படுவதால் இந்நாவல் எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் ஒருவருக்கு சிலவேளைகளில் அதிர்ச்சியைத் தரவும் கூடும்

இந்நாவல் காமத்தை மட்டுமின்றி மனிதர்களின் உளவியலை, முதலாம் உலகப்போரின் பின்பான நிலைமைகளை, தொழிற்புரட்சியினால் ஏற்படும் விளைவுகளை மிக விரிவாகப் பார்ப்பதாலும், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவற்றை முன்வைப்பதாலும் கவனிக்கத்தக்கதொரு புதினமாயிருக்கின்றது. டி.எச்.லோறண்ஸ் இதையெழுதிய கடைசி நான்காண்டுகளில் வெவ்வேறு விதமாய் மூன்று தடவைகள் எழுதிப் பார்த்திருக்கின்றார் என்கின்றபோது இப்படைப்பிற்காய் அவர் செலவிட்ட உழைப்பை நினைத்து வியக்காமலும் இருக்கமுடியவில்லை.
.
கொலம்பஸ் 'அமெரிக்கா' என்னும் புதிய உலகைக் கண்டுபிடிக்கும்போது அவர் அந்நிலப்பரப்புக்களில் இருந்த பூர்வீக மக்களுக்கு நிறைய அநியாயங்களைச் செய்திருக்கின்றார். 15ம் நூற்றாண்டில் நடந்த இந்த விடயங்களை ஒரு பாதிரியார் குறிப்பாய் எழுதி வைக்க, அதை ஆதாரமாகக் கொண்டு சமகாலத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒரு குழு பொலிவியாவிற்குப் புறப்படுவதோடு Even the Rain திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஏனைய நாடுகளை விட ஏழ்மையான மக்கள் பொலிவியாவில் இருப்பதால், குறைந்த செலவில் இப்படத்தை எடுக்காலாமென்பது தயாரிப்பாளரின் திட்டம். தேர்ச்சி பெற்ற நடிகர்களோடு உள்நாட்டிலேயே இன்னும் அழிபடாது எஞ்சியிருக்கும் பூர்வீக மக்களையும் சேர்த்துத் திரைப்படத்தில் நடிக்க வைக்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் காலத்திலேயே பொலிவியாவின் தண்ணீர் ஊற்றுக்களைப் வேறு நாடுகளிலிருந்து வரும் பெரும் நிறுவனங்கள தமக்குரியனவையாக வளைத்துப் போட முயற்சிக்கின்றன. இதற்கு எதிராக அங்கிருக்கும் பூர்வீக மக்கள் போராடத் தொடங்க, அதற்குத் தலைமை தாங்குபவரே -இத்திரைப்படத்திலும் பூர்வீகமக்களின் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவராக இருக்கின்றார். இவர் போராட்டத்தில் பங்குபெறுவதால் திரைப்படத்தைத்தொடர்ந்து எடுக்க முடியாது அந்தரப்படும் நிலை படக்குழுவினருக்கு ஏற்படுகின்றது.

ஒரு திரைப்படம் என்கின்ற விம்பத்திரையும், யதார்த்தில் நடைபெறும் போராட்டமுமென மாறி மாறிக் காட்சிகள் இப்படத்தில் விரிந்து கொண்டேயிருக்கின்றன. பொலிவியாவிற்கு வந்த திரைப்படக்குழுவினர் ஒழுங்காய்ப் படத்தை எடுத்து முடித்தார்களா, தண்ணீருக்கான போராட்டத்திற்கு என்ன நடக்கின்றது என்கின்ற பதற்றங்களோடே கதை நகர்கின்றது. தண்ணீருக்குக் கூட அரசியல் இருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை உரத்துக் கூறுவதாய், அதற்காய்க் கூட இரத்தம் சிந்த வேண்டியிருக்கின்றது என்பதை இத்திரைப்படத்தின் பெண் இயக்குனரான இசியர் போலைன் பார்ப்பவருக்குள் பதியும்படி எடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி கொலம்பஸ் வந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்ததிலிருந்து, இற்றைவரை அந்தப் பூர்வீக மக்கள் இன்னமும் பல்வேறு வழிகளால் சுரண்டப்பட்டு அவர்களின் இயற்கையோடு இயைந்த இயல்புவாழ்க்கை குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இப்படம் ஒளிவுமறைவின்றி முன்வைக்கின்றது. எப்போதும் ஒடுக்குமுறைகளோ சுரண்டல்களோ தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை, என்றோ ஒருநாள் அவற்றுக்கெதிரான போராட்டங்கள் வெடித்தெழும்பும் என்பதைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். எனினும் அதற்கான விலைகளையும், இழப்புக்களையும் பற்றி யோசிக்கும்போது வரும் சோர்வு மிகப்பெரியது. பிணங்களின் மேலே நின்று அரசியல் செய்ய ஒடுக்குபவர்களினால் முடியும். ஆனால் ஓடுக்குமுறைக்கு எதிராய்க் கொதித்தெழும்புவர்க்கு இழப்பின் பெறுமதியும் துயரமும் நன்கு தெரியும். ஒவ்வொரு போராட்டமும், உள்ளே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் எதையோ கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் முடிவை அடைகின்றன. இத்திரைப்படத்தின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து வரும் தயாரிப்பாளருக்கு, பூர்வீகக் குடியொருவர் சிறுபோத்தலில் நினைவாகக் கொடுக்கும் தண்ணீரும் அவ்வாறே பல கதைகளைச் சொல்லாமற் சொல்லி நிற்கின்றது. யதார்த்ததிலும், 2000ம் ஆண்டுகளவில் பொலிவியாவின் Cochabambaவில் தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ணையம் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியமல்ல. அதன் எல்லைகளற்ற 'எல்லை'கள் பற்றியும், நம்மை அறியாமலேயே நாம் கண்காணிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் நாமனைவரும் அறிவோம். இணையத்தின் மூலம் சாத்தியமாகிய அரபுப் புரட்சிகளின் பின் அதிகாரமிக்க எல்லா நாடுகளும் இணையத்தை இன்னுமின்னும் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. தனி நபர் ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் சட்டங்களை இன்னுமின்னும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன.

அதேபோன்று எப்படிச் சாதாரண சமூகம்  வெளியில்இருக்குமோ அப்படியே இணையமும் எல்லாம் கலந்து கட்டியே இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சேர்க்கவேண்டியதைச் சேர்ந்து விலத்த வேண்டியதை விலத்த வேண்டியது தனிப்பட்ட ஒவ்வொருவரின் பொறுப்பே தவிர, இணையம் இப்படி கரடுமுரடாய் இருக்கிறதென எவரும் ஒப்பாரி வைக்க முடியாது. தமிழ்ச் சூழலில் இணையத்துக்கு வரும் படைப்பாளிகளில் அநேகர் 'ஏன் இணையம் இப்படிப் போர்க்களமாய்' இருக்கின்றதெனக் கூறியபடிதான் இணையத்திற்கு வந்திருக்கின்றனர். பிறகு தங்களுக்கான வாசகர்கள் அதிகரித்தவுடன், இணையமே கதியென இயங்கி தங்களுக்கான வாசகர் வட்டங்களை உருவாக்கி கணகணப்பு அடுப்புக்களின் முன்னால் குளிர்காய்ந்துகொண்டுமிருக்கின்றார்கள். அவரவர்க்கானதை அவரவர் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இணையத்திலும் உண்டென அவர்களுக்கு விளம்பி, 'இணையமென்றாலே அக்கப்போர் நிகழும் இடம் மட்டுந்தானா?’ என அவர்களின்  தொடக்ககால விசனங்களுக்கு இப்போது என்னவாயிற்றென நினைவுபடுத்த வேண்டியுமிருக்கின்றது.

இணையத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு பேர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் பெரும்பாலும் பின் தொடர்ந்து வாசிப்பவர்கள் இலக்கியம்/திரைப்படம்/அரசியல்/தத்துவம் போன்ற விடயங்களை எழுதுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இது என் தனிப்பட்ட தேர்வு. தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து இணையச் சூழலின் வெகுசனக் கடலில் அல்லுப்பட்டுப் போகாது இன்னமும் தங்கள் போக்கில் தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். கரிசல்  என்கின்ற பெயரில் வலைப்பதிவு எழுதும் சன்னாசி. இற்றைவரை தனது சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு எவ்வித அலட்டலுமில்லாது எழுதிக்கொண்டிருப்பவர். ஆழமான வாசிப்பும், கவனிக்கப்படாத திரைப்படங்கள் மீதான தன் கவனங்களைக் குவித்தும் எழுதிக்கொண்டிருப்பவர். இன்று மேற்குச் சூழலில் அதிகம் பேசப்படும் ரொபர்த்தோ பொலானோவை (2666, The Savage Detectives) தமிழில் மிக விரிவாக முதன்முதலில் அறிமுகஞ்செய்து வைத்தவர் சன்னாசி. அது மட்டுகின்றி இணையச் சூழலிலிருந்து பதிப்புச் சூழலுக்குப் போகும் பலரைப் போலவன்றி, தனது கவிதைகளையும்(‘தோட்டா’), சிறுகதைகளையும் (‘பேய்களின் ஒத்திகை’) தொகுத்து இணையத்திலேயே முதன் முதலாய் வெளியிட்டவரும் கூட. அண்மையில் அவ்வாறு தன் கவிதைத் தொகுப்பை  இணையத்தில் வெளியிட்ட இன்னொருவர், தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் அநேகருக்குப் பரிட்சயமான எம்.டி.முத்துக்குமாரசுவாமி.

மற்றொருவர் தனிமையின் இசை என்ற வலைப்பதிவு எழுதும் அய்யனார் விஸ்வநாத். இணைய உலகில் நிதானமாக நுழைந்து, பிறகான காலங்களில் வாசிப்பில் ஆழமாய்ச் சென்று, தனக்கான தனித்துவமான ஒரு மொழிநடையைத் தன் படைப்புகளில் கொண்டுவர முயற்சிக்கும் ஒருவர். கோபி கிருஷ்ணணையும், நகுலனையும் தனக்குப் பிடித்த முன்னோடிகளாய் வரித்துக் கொண்டவர். இதுவரை நான்கு தொகுப்புக்களை அச்சில் வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் வம்சி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தது 'இருபது வெள்ளைக்காரர்கள்' என்கின்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. 

நல்ல படைப்புக்கள் எப்போதும் ஆர்ப்பாட்டங்களில்லாது, நீரின் அடியில் இருக்கும் என்கின்ற கூற்று பலரால் சொல்லப்படுவதுதான். ஒவ்வொரு வாசகருக்கும் இன்றைய சூழலில் உள்ள முக்கியமான சவால், அவ்வாறான நல்ல படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே. இரைச்சல்களின் ஒலியிலும், ஜிகினா வெளிச்சங்களிலும் நம் தேடலைத் தொலைக்காது, நிதானமாய் எல்லாத் திசைகளிலும் நம் வாசிப்பின் சிறகுகளை பறப்பதற்கான சுதந்திரத்தை நாம் கொண்டிருந்தால், நல்ல படைப்புக்களை அவ்வளவு எளிதில் தவறவிடமாட்டோம் எனத்தான் நினைக்கின்றேன்.
0000000000000000000000000

(அம்ருதா, ஏப்ரல்,2012)

0 comments: