கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Malcolm & Marie

Saturday, February 27, 2021


ஒரு இயக்குநர் தனது திரைப்பட வெளியீடு முடிந்து நள்ளிரவு தன் காதலியோடு வீடு திரும்புகின்றார். விமர்சகர்கள் படத்தைப் பாராட்டிய உற்சாகம் நெறியாளருக்கு, ஆனால் காதலி எதனாலோ உறுத்தப்படுகின்ற பாவனையுடன் இருக்கிறார்.  இயக்குநர் என்ன நடந்தது எனக் கேட்க, இந்த இரவு எதையும் பிரயோசனமாகப் பேசுவதற்காய் இருக்கப் போவதில்லை. அடுத்த நாள் பேசலாம் என்கிறார் காதலி.


இந்த உரையாடல் இப்படியே நீண்டு, காதலி எல்லோருக்கும் திரையிடலில் நன்றி கூறியபோது தனக்கு நன்றி கூறாது தவறவிட்டது உறுத்துகின்றது எனச் சொல்ல அந்த இரவு வேறொன்றாக மாறத் தொடங்கின்றது. அப்படியே பல்வேறு திசைகளில் பேச்சு போக, அதுவரை மறைந்து வைத்திருந்த பல இரகசியங்கள் வெளிவரத்தொடங்கின்றன.


இத்திரைப்படத்தின் கதை, இந்தக் காதலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இருபதுகளில் போதையிற்கு அடிமையான மேரியின் தத்தளிப்புக்களே மால்கம் எடுத்த இந்தத் திரைப்படம். நீ எனது கதையை எடுத்துவிட்டு என்னைத் தனித்துவிட்டுவிட்டாய் என்கின்றார் மேரி. நீ கதையாக எழுதியும், அதில் ஒரு நடிகை நடித்தும் எனக்கான கதையை எங்கேனும் இனிச் சொல்வதற்கான எல்லா இடத்தையும் அடைத்துவிட்டீர்களென மேரி மேலும் குற்றஞ்சாட்டுகின்றார்.


இதனால் கோபமடையும் மால்கம், இந்தக் காட்சிகள் எல்லாம் நீ சொன்னதின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல. எனது கடந்தகாலக் காதலிகளின் அனுபவங்களில் இருந்தும் எழுதப்பட்டதென அவற்றைப் பட்டியிலிடத் தொடங்கின்றார். அது மட்டுமின்றி அவர்களோடு கழித்த தனிப்பட்ட பொழுதுகளை விபரிக்கவும் செய்கின்றார்.


கடந்தகாலக் காதல்கள் என்பது முற்றுமுழுதாக புதிய காதலிக்குத் தெரியாமல் இருப்பதுதான் அழகானது. அந்த மர்மங்கள் அவிழ்ந்துவிட்டால் உன்னை அறிந்துகொள்ளும் எல்லாப் பாதைகளும் அடைபட்டுவிடும். உனது பழைய காதலிகள் அவ்வளவு அழகானவர்களா, அறிவானவர்களா, நீ அவர்களோடு எதையெதைச் செய்வாய், அதைவிட நான் இன்னும் முன்னே ஒருபடி இருக்கவேண்டும் என்ற ஒருவித மெல்லிய பதற்றம் துளிர்க்கையில்தான் நம் காதல் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று மேரி மால்கத்திற்குச் சொல்கிறார்.


நான் உன்னோடு எவ்வளவு கோபத்தோடு இருந்தாலும், உன்னைப் போல நான் என் கடந்தகாலக் காதல்களை இப்படியெல்லாம் விலாவரியாக விபரிக்க மாட்டேன். அது உன்னைக் காயப்படுத்தும் என்பதைவிட என்னை இன்னும் அதிகமாய்க் காயப்படுத்தும் என்கிறார் மேரி. 


தான் நெறியாள்கை செய்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதான மகிழும் மால்கமின் இரவு இன்னும் இருண்மையாகின்றது. இப்படி உரையாடல் போகும்போது, திரைப்படம் பற்றிய முதலாவது விமர்சனம் ஒரு பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளிவருகின்றது. அதை வாசித்து வாசித்து மால்கம் விமர்சிக்கத் தொடங்கின்றார். கறுப்பினத்தவராக இருக்கும் தன்னை அடையாள அரசியலுக்குள்ளும், 'அரசியல்' இல்லாத தன் திரைப்படத்தை ஏன் அரசியல் படமாக்கியும் மதிப்புரை எழுதுகின்றார் என மால்கம் இப்போது இதை எழுதிய வெள்ளையினப் பெண் விமர்சகர் மீது கோபப்படுகின்றார். அதை மெல்லிய புன்னகையுடன் மேரி கேட்டுக்கொள்கிறார். 


மெல்ல மெல்ல இரவு இவர்களுக்குள் நெகிழ்வாகின்றது. நீ எனது அரிய காதலி, உன் காதல் இல்லாது என்னால் இதைச் சாதித்திருக்கமுடியாது என்று உருகின்றவராக மால்கம் மாறுகின்றார். கோப இரவு காதலுக்கான பொழுதாக மாறும்போது, சட்டென்று நானும் ஒரு நடிகையாக இருக்கும்போது என்னையேன் நீ இத்திரைப்படத்தில் நடிக்கவைக்கவில்லை என்ற முக்கிய கேள்வியை மேரி எழுப்புகின்றார். நீ ஆடிஸனுக்கு வரவில்லை என்று காரணத்தைச் சொன்னாலும் மால்கமிற்கு அவரது பெருந்தவறு புரிகிறது. சட்டென்று ஒருகாட்சியில் மேரி போதைக்கு அடிமையான ஒருவரைப் போல கத்தியைக் கொண்டு நானின்னும் இந்த அடிமையிலிருந்து வெளிவரவில்லையென ஒரு தனிநடிப்பைச் (monologue) செய்கின்றார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நடிப்பென்று கூடச் சொல்லமுடியாது. அது அவரின் கடந்தகால வாழ்க்கையின் ஒரு பகுதி.


இப்போது மீண்டும் இரவு அடர்த்தியாகின்றது. இவர்களுக்குள் அடுத்து என்ன நடக்குமென்று ஒரு பதற்றம், திரைப்படத்தைப் பார்க்கும் நமக்கு வருகின்றது.


இத்திரைப்படம் ஒரே இரவில் நடப்பது. இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான் திரையில் வருகின்றன. இது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இந்த இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கும் இரு நடிகர்களும் ( Zendaya & John Washington) அவ்வளவு இயல்பாக  நடிப்பை வெளிப்படுத்துகின்றார்கள். ஹொலிவூட்டில் இருக்கும் அடையாள அரசியல், இனவாதம், இன்னபிற ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாக இதில் பேசப்படுவதும் கவனத்திற்குரியது. அத்துடன் இவர்களிடையே முரணும் உறவும் மாறி மாறி வரும்போது பின்னணியில் ஒலிக்கின்ற பாடல்களும் சிறப்பான தேர்வு. 


ஆண் X பெண்,  இயக்குநர்  X நடிகை என்ற இடைவெளியில்/இடைவெட்டுக்களில்  இரு பாத்திரங்களுக்குள் உரையாடல்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் இத் திரைப்படம் அவ்வளவு எளிதில் எல்லோரையும் கவர்ந்துவிடாது. ஆனால் இதில் விவாதிக்கப்படும் விடயங்கள் நமக்கு அவ்வளவு தொலைவில் இருப்பதில்லை. இந்தக் கறுப்பு வெள்ளை படத்துக்குள் நாம் மூன்றாவது பாத்திரமாக ஒருவேளை நுழைந்துவிட்டால்,  நமக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இது ஆகிவிடவும் கூடும்.

.....................................

(Feb 06, 2021)

0 comments: