கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலத்தின் முன் தொலைந்து போகாத படைப்பாளிகள்

Sunday, November 12, 2023

 

1.


நான் திரைப்படம் குறித்து எழுதிய முதல் விமர்சனம் ‘Finding Forrester’ என நினைக்கிறேன். இந்தத் திரைப்படத்தைப்  படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தேன். அதன் பாதிப்பில் ஒரு விமர்சனம் எழுதி, அது  வெளியான பத்திரிகையொன்றில் வெளிவந்தது. ஒரு கறுப்பின பதின்மனுக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இடையில் மலரும் நட்பைப் பற்றிய படமது. 


எழுத்தாளர் புலிட்ஸர் விருது பெற்ற படைப்பாளி என்றாலும் எல்லா வெளியுலகத் தொடர்புகளையும் மூடி தன் வீட்டுக்குள் வசிப்பவர். தன்னை திறந்து காட்டாத எழுத்தாளர் அந்த கறுப்பின பதின்மனுக்கு ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்திக் கொடுக்கும் நண்பராகின்றார். இதில் Sean Connery எழுத்தாளராக நடித்திருப்பார். இது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், J.D.Salinger இன் பாதிப்பு இப்படத்தில் தனக்குள் இருந்ததென்று சீன் கானரி பின்னர் சொல்லியிருக்கின்றார்.


ஆங்கிலத்தில்  சாலிஞ்ஜர் (Salinger), ஹார்ப்பர் லீ (Harper Lee) போன்றவர்கள் தமது முதலாவது நாவல்களின் பெரும் வெற்றிகளுக்குப் பின் எதையும் எழுதாமல் அல்லது எழுதினாலும் நூலாக வெளியிடாமல் இருந்தவர்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் பெரும் பாதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தி அடுத்து என்ன நாவல்கள் எழுதுவார்களெனக் காத்திருக்க வைத்தவை. சாலிஞ்ஜரின் 'The Catcher in the Rye' பதின்மன் ஒருவனின் வாழ்க்கையைச் சொன்னாலும், பல நாடுகளில் அது தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவிலும் பல பாடசாலைகளில் கத்தோலிக்க மதத்தை நிந்தனை செய்வதாக படிப்பது தடை செய்யப்பட்டது. 1951 இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் மில்லியன கணக்கில் விற்கப்பட்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின், இப்போதும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. 


நான் கனடாவில் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு இந்த நாவலும், ஹார்பர் லீயின் To Kill a Mockingbird உம் , பாடத் திட்டத்தில் இருந்தன. எங்கள் ஆசிரியர் ஹார்ப்பர் லீயைத் தெரிவு செய்ததால் நாங்கள் To Kill a Mockingbird ஐ வாசித்தோம். இப்போது ஹர்ப்பர் லீயின் நாவலும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை காக்க வந்த ஒரு மீட்பராக அதில் வெள்ளையின Atticus Finch என்ற பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது  குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. கிட்டத்தட்ட 20 இடங்களில் மேல் கறுப்பினத்தவர்களை இழிவுசெய்யும் 'N' வார்த்தை பாவிக்கப்பட்டதை, 9/10ம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு சரியா என்று சர்ச்சைகளும் போய்க் கொண்டிருக்கின்றன. 


ஹார்ப்பர் லீ என்ற வெள்ளையினப் பெண்மணி, Scouts என்கின்ற ஒரு வெள்ளைச் சிறுமி வயதுக்கு வருகின்ற பார்வையினூடு இதை எழுதினாலும், அந்தக் காலத்தில் இருந்த நிறவாதத்தை இனங்காட்டிய ஒரு முக்கியமான நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்நாவல் 1960களில் வெளிவந்தாலும், 1930காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. எனவே அந்தக் காலகட்டத்து உலகத்தைத்தான் ஹர்ப்பர் லீ பிரதிபலித்தார் என்பதும் சரியே. ஆனால் அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள், நெடுங்காலமாக அடிமையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளும், குரல்களும் முக்கியமானதே. 


ஒடுக்கப்படுவோர் குரல் என்றும் எங்கேயும் பிற எதையும் விட முதன்மை கொடுத்துச் செவிமடுக்க வேண்டியவை. இன்றைக்கு இந்த ஆங்கிலேய நாடுகளில் (அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) கறுப்பின/பூர்வீக மக்கள் ஏற்கனவே நடத்திய பெரும் போராட்டங்களால்தான், எங்களைப் போன்ற மண்ணிறமக்கள் ஒரளவுக்குச் சுதந்திரமான மனிதர்களாக இந்த மேற்கத்தைய நாடுகளில் வாழ முடிகின்றது என்பதை நாம் உணர்ந்தால் நாம் யாரின் குரல்களோடு சேர்ந்து ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பது புரியும்.


0000000



சாலிஞ்ஜரும் 'Catcher in the Rye' எழுதியபின் பெரிதாக எந்த நாவலும் எழுதவில்லை. அதற்கு முன்னர் எழுதிய சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பும், 'Franny and Zooey' ஒரு குறுநாவல் (+ சிறுகதை) தொகுப்பும் வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு சாலிஞ்ஜர் போய் விட்டிருந்தார். இப்படி தலைமறைவில் இருந்த சாலிஞ்ஜரோடு 90களின் நடுவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்புகளை வைத்து ஒரு நூல் வெளிவந்திருக்கின்றது. அது My Salinger Year. 


ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற Joanna Rakoff  ஒரு பதிப்பகத்தில் முகவராகச் சேர்கின்றார். அவர்களே சாலிஞ்ஜருக்கு முகவராக இருப்பதால், ஜோனாவுக்கு சாலிஞ்ஜரோடு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. சாலிஞ்ஜரின் 1950 நாவலுக்கு, 1990களிலும் பல வாசகர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். சாலிஞ்ஜர் தனது தலைமறைவு வாழ்க்கையால் எவரோடும் தொடர்பு கொள்வதில்லை. அவரது முகவரியோ/தொலைபேசி எண்ணோ எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று ஜோனாவின் நிறுவனம் ஜோனாவுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 


ஜோனாவின் பெரும்பாலான வேலை, Catcher in the Rye இற்கு வரும் வாசகர் கடிதங்களை வாசித்துவிட்டு குப்பைக் கூடைக்குள் எறிவதாகும். சிலருக்கு மட்டும், 'உங்கள் கடிதத்திற்கு நன்றி, ஆனால் சாலிஞ்ஜர் இந்தக் கடித்தை வாசிக்க விரும்பவில்லை' என்று பதிப்பகத்தினூடு ஒரு சிறுகடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


ஒரு காலத்தில் எதையும் வாசிக்காமல் குப்பைத்தொட்டிக்கு கடிதங்களை எறிந்த பதிப்பகம் ஒரு அசம்பாவிதத்தின் பின், கடிதங்களை திறந்து வாசித்துவிட்டு குப்பைத் தொட்டிக்குள் எறிகின்றது. அது பீடில்ஸ் இசைக்குழுவின் ஜான் லெலனின் கொலைக்குப் பிறகாகும். ஜான் லெனனை சுட்டுக்கொன்ற கொலையாளி தன் கையில் வைத்திருந்தது சாலிஞ்ஜரின் இந்த நாவலையே. இந்நாவலே தன்னை இப்படி ஜான் லெனனைக் கொலை செய்யத் தூண்டியது என்று ஒரு வாக்குமூலத்தை அந்த கொலையாளி கொடுத்திருந்தார். 


அதன்பின் இந்த பதிப்பகம் சாலஞ்ஜருக்காய் வரும் எல்லாக் கடிதங்களையும் திறந்து வாசிப்பது என்று முடிவை எடுக்கின்றது. ஒருபோதும் எந்தக் கடிதத்திற்கும் சாலிஞ்ஜர் பதில் எழுதுவதில்லை என்கின்றபோதும் தினமும் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அந்தக் கடிதங்களின் உட்பொதிந்திருக்கும் சுவாரசியமான விடயங்களால், பதிப்பகத்திற்குத் தெரியாமல் ஜோனா பதில் கடிதங்களை இரகசியமாக எழுதத் தொடங்குகின்றார். சாலிஞ்ஜரோடு தொலைபேசியில் அவ்வப்போது பேசும் ஜோனாவின் எழுத்தாளராகும் கனவைக் கண்டு சாலிஞ்ஜர் அவரைத் தினமும் முப்பது நிமிடமாவது எதையாவது எழுதும்படி அறிவுறுத்துகின்றார். 


மேலும் நீ இந்த அலுவலகத்தில் இருந்து வரும் பிரதிகளை வாசித்து திருத்தங்களைச் செய்யும் ஒருத்தியல்ல, படைப்பாளி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே என்கின்றார். தொழிலில் தேர்ந்து ஒரு சிறந்த எடிட்டராக/முகவராக ஒருகட்டத்தில் வரும் ஜோனா இந்த வேலையைத் துறந்து தனது எழுத்தாளராகும் கனவைப் பின்தொடர்ந்து போகின்றார். அந்த ஜோனா தன் சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய நூலே பின்னர் இதே பெயரில் (My Salinger Year) திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.


ஆக 1950களில் ஒரு நாவல் எழுதப்பட்டு இன்று 70 ஆண்டுகள் கழிந்தபின்னும் ஏதோ ஒருவகையில் இந்நாவல் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சாலிஞ்ஜர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியவர். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்தவர் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இறுதிக்காலத்தில் தனது மகளிடம் 'நீ எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் உன்னால் எரிகின்ற தசையின் மணத்தை உனது மூக்கிலிருந்து ஒருபோதும் அகற்றமுடியாது' என போரின் கொடும் நினைவுகளில் இருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாதிருப்பது பற்றிக் கூறியிருக்கின்றார். 


சாலிஞ்ஜர் ஆகக்குறைந்தது இன்னமும் பதிப்பிக்காத இரண்டு நாவல்களை எழுதியிருக்கின்றார் எனச் சொல்லப்படுகின்றது. 'There is a marvelous peace in not publishing ... I like to write. I love to write. But I write just for myself and my own pleasure' என பதிப்பிப்பதை விட எழுதுவதையே அதிகம் விரும்பிய சாலிஞ்ஜரின் புதிய நாவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவரலாம். அப்போது சிலவேளைகளில் இன்னொருவகையான சாலிஞ்ஜரை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் கூடும்.


மனிதர்களாகிய நாம் உதித்தும், மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலரையே இந்த உலகம் நினைவில் நீண்டகாலம் வைத்துக் கொண்டிருக்கின்றது. எழுத்தாளர்களாக இருக்கும் பலர் தனி வாழ்வில் வறுமையிலும் வேதனையிலும் உழலக்கூடும், ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலம் கடந்தும் பேசப்படும் ஆசிர்வாதத்தையும் இதே எழுத்தே அவர்களுக்கு மனமுவந்து அளிக்கவும் செய்கின்றது.


***********


(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)


0 comments: