கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நெப்போலியன் - இறுகப்பற்று - Pain Hustlers

Tuesday, December 26, 2023


1, நெப்போலியன்

 

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பேரரசனாக வரமுடியும் என்று வரலாற்றில் நிரூபித்தவர் நெப்போலியன். பிரான்ஸை நேசித்தவர் என்பதால் அந்தப் பேரரசுக் கனவுக்காய் 61இற்கு மேற்பட்ட போர்களை நடத்தி மில்லியன்கணக்கில் சொந்த நாட்டு மக்களையே பலிகொடுத்தவர். வெளியில் போர்களை நடத்துவதில் பெருமிதம் கொண்ட நெப்போலியன் ஒரேயொருவருக்கு மட்டும் தலைகுனிந்தவர் என்றால் அது அவரின் மனைவியான ஜோஸப்பினுக்காய். அந்தக் காதலுக்காய் ஜோஸப்பினின் எல்லாப் பலவீனங்களையும் சக்கரவர்த்தியாக இருந்தபோதும் நெப்போலியன் மன்னித்தவர். இறுதிவரை ஜோஸப்பின் காதலில் திளைத்தவராக, அவரின் முன் தன் 'ஆண்மைத்தனத்தை' இழந்த ஒரு நல்ல மனிதராகவும் இருந்திருக்கின்றார்.

இத்தனைக்கும் ஜோஸப்பின், நெப்போலியன் ஆதரவளித்த புரட்சிப்படை, மன்னராட்சியை ஒழித்தபோது கொன்ற ஒருவரின் மனைவியாவார். ஜோஸப்பினுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நெப்போலியனைத் திருமணம் செய்தபின் ஜோஸப்பினால் குழந்தையொன்றைப் பெறமுடியாததே அவர்களின் விவாகரத்துக்கும் பின்னாளில் காரணமானது. எனினும் நெப்போலியன் வாட்டலூ போரில் தோற்று தனித்தீவுக்கு எக்ஸிலாகப்பட்டு இறந்தபோது அவர் இறுதியில் உச்சரித்தவை மூன்று சொற்கள்: பிரான்ஸ், இராணுவம், ஜோஸப்பின்!

பின்னர் வந்த ஹிட்லர் எப்படி இரஷ்யாவிற்குப் படையெடுத்து தன் படைபலத்தை இழந்தாரோ, அப்படியே நெப்போலியனுக்கும் கிடைத்த பெரும் அடி அவர் இரஷ்யாவுக்குப் படையெடுத்தபோதுதான். வோட்டலூ யுத்தம் நெப்போலியன் இறுதியில், தன்மானமாக தோற்றுப்பார்த்த ஒரு போரே தவிர நெப்போலியன் எப்போதோ இரஷ்யாப் படையெடுப்போடு தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

இத்திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இப்படி ஈசல்களைப் போல போர்க்களத்தில் இறப்பதற்கு ஆண்களை எது காலங்காலமாக வரலாற்றில் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதையே அதிகம் யோசித்தேன். வரலாற்றில் இருந்து ஆண்கள் எதையும் கற்றுக்கொள்ளாத முட்டாள்கள் என்பதே கசப்பான உண்மை.

நெப்போலியன் ஜோஸப்பின் காதலைப் பெறுவதற்காகத்தான் தன்னைத் தோற்காத வீரனாகக் காட்டப் போர்களை நடத்தினார் என்று சொல்பவர்களும் உண்டு. நெப்போலியன் நல்லதொரு காதலனாக ஜோஸப்பினுக்காய் இருந்து, இந்த நாடுகளைப் பிடிக்கும் போர்வெறியை மட்டும் கைவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்; எத்தனை உயிர்கள் வரலாற்றில் காப்பாற்றப்பட்டிருக்கும்!

 


2. இறுகப்பற்று

 

'இறுகப்பற்று' நல்லதொரு படம். கதை/திரைக்கதை என்பவற்றில் சிறிதும் நம்பிக்கை வைக்காது அண்மைக்காலமாய் வந்து குவிந்து கொண்டிருக்கும் தமிழ்ப்படங்களைப் பார்த்து நொந்தவர்க்கு நான் சொல்வதன் அர்த்தம் புரியும். நேற்றுக் கூட ஒரு இயக்குநரில் நம்பிக்கை வைத்து தீபாவளிப் படத்தைத் தியேட்டரில் பார்க்கச் சென்றபோது உண்மையிலே வயிற்றைப் பிரட்டுவது போன்ற உணர்வே ஏற்பட்டது. நல்லவேளையாக அந்தப் பாவத்தை அதற்குப் பிறகு நள்ளிரவில் சைனீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள் ஆற்றுப்படுத்தின. லியோ படத்தைப் பார்த்தபின் நண்பர்களிடம் எனக்கு வயதாகிவிட்டது போலும்; இந்தத் தலைமுறையினரின் விருப்புக்கு ஏற்றவனல்ல, நான் காலவதியாகிவிட்டேன் எனச் சொன்னபோது அவர்கள் மறுத்து 'உன் வயதல்ல, படந்தான் அவ்வளவு மோசம்' என்றார்கள். நேற்று ஜப்பானைப் பார்த்து நொந்தபோது, ஒரு நண்பர் சொன்னார், எமது தலைமுறைதான் ஒரளவு நல்ல படங்களையும், பாடல்களையும் கேட்ட கடைசித் தலைமுறையாக இருக்கும் போல என்று.

இல்லை, இன்னும் முற்றாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதற்கான ஒரு மின்மினியாக இந்த 'இறுகப்பற்று'.


அதேவேளை ‘இறுகப்பற்றுன் அலைவரிசைக்குள் வரும் திரைப்படம் அல்ல என்பதையும் குறிப்பிட விழைகின்றேன். முக்கியமாக அந்த சைக்காலிஜிஸ்டை இறுதியில் ஓர் ஆணிடம் மண்டியிடும் விதமாக மாற்றிய விதம் எனக்கு உவப்பில்லாதது. மற்றவர்களின் மனங்களை ஆழப் புரிந்துகொள்ளும் ஒருவர் எத்தகைய vulnerable ஆக இருந்தாலும் அப்படி இருப்பதைப் பார்க்க சகிக்க முடியாதிருந்தது. நிச்ச்யம் அப்படி ஆளுமையுள்ள பெண் அதை வேறுவிதமாக அணுகியிருப்பார். என் பொருட்டு நீயும் சந்தோசமாக இல்லை. உன்னைப் பார்த்து என்னாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இருவரின் அமைதியின் பொருட்டு வா வேண்டுமென்றால் விவாகரத்தைச் செய்து கொள்வோம் என்று அழைத்திருப்பார். ஏனெனில் அந்தப் பாத்திரம் மற்றவர்களுக்கு அதுதான் இறுதியான முயற்சியென அறிவுரை கூறுகின்றதல்லவா.


இணையின் தொலைபேசியை கள்ளமாய்ப் பார்ப்பது, அவன் பேசும் பள்ளித்தோழியின் மீது பொறாமை கொள்வதுதான் இயல்பானது என்று அந்தப் பாத்திரத்தையே சாகடித்திருக்கின்றார்கள். மேலும் விவாகரத்து விண்ணபிக்கப் போகும் அநேகமானவர்கள் பெரும்பாலும் விவாகரத்தைப் பெறுதலே நிகழ்கின்றன. ஏனென்றால் அந்த நிலைமைக்கு ஒருவர் போகின்றார் என்றால் அந்த மனவிரிசல் எளிதில் எதனாலுமே ஒட்டவைக்க முடியாது. ஆனால் இதில் அப்படி விவாகரத்துக்குப் போகும் இரண்டு இணைகளுமே இறுதியில் சுமுகமாய்த் தீர்வைக் கண்டு மனந் திருந்திவிடுகின்றன. இவ்வாறான பல காரணங்கள் இருப்பதால் இந்தப் படம் எனக்குரியதல்ல‌ (This is not my cup of tea) என்றுதான் கூறுவேன்.

ஆனாலும் இதன் திரைக்கதை தான் சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றது. திரைக்கதைகளுக்கு நேரம் செலவிடும் பொறுமையற்றவர்கள் கத்திகளாலும் துப்பாக்கிகளாலும் வன்முறையை 'சாதாரணப்படுத்தும்' காலத்தில் இந்தப் படம் ஒரு முக்கிய வரவென்பேன். மேலும் 'OK கண்மணி' போன்று படம் முழுதும் living together இல் வாழ விரும்பும் பெண்ணை ஒவ்வொரு காட்சியிலும் 'முற்போக்குப் பாத்திரமாகக்' காட்டிவிட்டு இறுதியில் ஒரு சாதாரண பெண்ணைப் போல திருமணத்தில் சரணாகதியடைய வைக்கும் போலித்தனம் இதில் எதுவுமில்லை, எப்படி ஒரு பொதுமனம் பெரும்பாலும் விரும்புகின்றதோ அப்படியே இது காட்டியிருக்கின்றது. ஒருவகையில் இத்திரைப்படம் தான் எடுத்துக் கொண்ட கருத்துக்கு உண்மையாகவே இருந்தது போல எனக்குத் தோன்றியது. மற்றது இப்படி அங்கே சித்தரிக்கப்படும் விடயங்களை வெட்டியும் ஒட்டியும் உரையாடுகின்ற வெளியையும் இந்தப் படம் நமக்குத் தருகின்றது என்பதும் முக்கியம் என்பேன்.

 

 

3. Pain Hustlers


அனைத்து விடயங்களிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. மேலும் நிறுவனமயப்பட்ட பெருநிறுவனங்கள் இந்த நல்லது கெட்டது என்பதில் அக்கறை கொள்வதைவிட அவை இலாபம் மீட்டலையே முதன்மையாகக் கொண்டிருக்கும். அதற்காக அது எந்த எல்லைவரையும் போகும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் பலி கொடுக்கும்.


Pharmaceutical companies இன் பெரும் வெறியையும் அதன் கொடூரமான அரசியல் முகத்தையும் The Constant Gardener என்ற நூலும், அந்த நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் நமக்குக் கடந்தகாலத்தில் நினைவூட்டியது. அவ்வாறு சில வருடங்களுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோன் கபூர் இப்படியொரு pharmaceutical entrepreneur ஆகி, பில்லியனாராக மாறிய கதையை நாம் சிலவேளைகளில் அறிந்திருப்போம். அவரது மனைவி புற்றுநோயால் இறக்க, புற்றுநோயுக்கு வலிநிவாரணியாக fentanyl ஐ நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கச் செய்து, பலரின் மரணங்களுக்கும், உடல் பக்கவிளைவுகளுக்கும் காரணமானவர் என்று கபூர் பின்னர் கைதுசெய்யப்பட்டவர். அவரும், அவரைச் சுற்றியுள்ளவர்களும் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டாலும், ஐந்தரை வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்ட கபூர் இரண்டரை வருடங்களிலேயே வெளியில் வந்துவிட்டார்.

இவ்வாறுதான் தம் நுகர்வுக்கும் இடாம்பீக வாழ்வுக்குமாய் ஒரு உலகம், விளிம்புநிலை மனிதர்களை பலிவாங்கியபடி நகர்ந்தபடியே இருக்கும். அது முன்னரும் நிகழ்ந்தது. இப்போதும் நிகழ்கிறது. இனியும் நிகழும். இந்த ஜோன் கபூரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்போது 'Pain Hustlers' என்று ஒரு திரைப்படம் வந்திருக்கின்றது. அதை பணநுகர்வுக்குள் சிக்கிவிட்ட ஒரு வறிய அபலைப் பெண், பின் உண்மை நிலவரம் அறிந்து அறத்தின் பக்கம் நிற்பதினூடாக தன்னைச் சரிசெய்வதை திரைக்கதையினூடு நகர்த்திச் சென்றிருக்கின்றார்கள்.


******************


(2023)


0 comments: