கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ வாசிப்பனுவம்

Saturday, December 02, 2023

 

-சுகிர்தா இனியா

 

நாவல் : மெக்ஸிக்கோ

நாவலாசிரியர் : இளங்கோ

 

ளங்கோவின் மெக்ஸிக்கோ தான் எனது சிறிது கால வாசிப்பு இடைவெளிக்குப் பிறகு நான் முழுவதுமாக படித்து முடித்த நாவல். இளங்கோவின் எழுத்தின் மீது எனக்கு அதீத ஒட்டுதல் உண்டு. காரணம் என்னால் பத்திக்கு பத்தி தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளக்கூடிய எழுத்தாக அவருடைய எழுத்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக முகப்புத்தகத்தில் அவருடைய பதிவு ஒன்றைப் பார்த்தும், அட நம்மைப் போல ஒருவர் என்று தோன்றியதும் அவருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன். நட்பு அழைப்பும் கொடுத்தேன். அப்போது அவரைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. பிறகு அவருடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தேன். அதற்கு பிறகு தான் அவர் நாவலாசிரியர், சிறுகதையாளர், இன்ன பிற திறமையாளர் என்று அறிந்து கொண்டேன். அப்படி அறிந்து கொண்ட பிறகு அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

 


இளங்கோவின் எழுத்தில் தொனிக்கும் ஒரு aloofness/solitary nature என்னைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று. மெக்ஸிக்கோவில் அவரது முக்கியக் கதாப்பாத்திரம் இத்தகைய குணாம்சம் வாய்ந்தவராகவும், தன்னையே introspect செய்து கொள்பவராகவும், தனது குறைபாடுகளை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படுத்துபவராகவும், அவை விமர்சிக்கப்படும்போது அதில் உண்மை புலப்பட்டால் அதை மனதார ஏற்றுக்கொள்பவராகவும் என அவர் அதை படைத்திருந்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இது எப்படியென்றால் கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்களோ அல்லது நெசவுத் துணியோ ஏதாவது ஒரு இடத்தில் பிசகி இருக்கும். அதன் தனித்தன்மை அது தான். அப்படியான ஒரு ஹாண்ட்மேட் கதாப்பாத்திரம் இது.

 

//விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்.//

 

முதல் அத்தியாயத்தில் இந்த வரிகளைப் படித்தபோதே இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஒட்டுதலும் பரிவும் வந்தது. இப்படி என்னை இறுகப்பற்றிய பத்திகள் இந்த நாவலில் ஏராளம் உள்ளன. அவற்றில் சில பத்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 

//இந்த நள்ளிரவு தாண்டிய பொழுது, ஏன் என்னை இப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறது? மழையின் சாரலிற்குள் நுழைந்து என் சோகத் துளிகளைக் கரைக்க வேண்டுமென விம்முகிறது நெஞ்சு. சனங்கள் நிரம்பித் ததும்பும் இப்பெரு நகரத்தில் யாருமேயற்ற ஒருவனாய் உணர்வது

எவ்வளவு கொடுமை. தனிமையின் கனந்தாங்காது என்னைப் போல யாரேனும் ஒருவர் தூக்கந் தொலைத்து பல்கணியில் நிற்கவும் கூடுமோ? // 

 

இந்தப் பத்தியை உறக்கம் தொலைந்து வெறுமையான இரவின் பிடியில் தன்னந்தனியாக நின்று சலித்த ஒவ்வொருவராலும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். நம்மைப் போல இந்த அகால இரவில் யாரேனும் விதானத்தை வெறித்துப் பார்த்தபடி கிடப்பார்களோ அல்லது மொட்டைமாடியில் வான்நோக்கிப் படுத்துக்கொண்டு சூனியத்துள் வெறிப்பார்களோ என்றும் நாம் தனிமையில் நெட்டித் தள்ளிய இரவுகள் நம் நினைவில் ஊசலாடும்.

 

//ஒரு உண்மையை உணர்ந்தேன்.

இந்த உலகிற்கு நான் தனித்தே வந்தேன். மரணிக்கும் போதும்  தனித்தே போகப்போகின்றேன். இடையில் மட்டும் ஏன்

மற்றொருவர் எப்போதும் தொடர்ந்து என்னோடு வரவேண்டும் என நினைக்க வேண்டும் என்றுணர்ந்த கணம்என்றாள்..//

 

இந்த தத்துவார்த்த பத்தி அவரது காதலி சொல்வது போல வரும். இந்த உண்மை நமக்கு தெரிந்தே இருந்தாலும் கூட நாம் சமயங்களில் இம்மைக்கும் எம்மைக்கும் என்று உருகிவிடுவோம். அப்படி உணர்ச்சிவயப்படும்போது இப்படியான உரையாடல்கள் நம்மை நிதானிக்கவும், சமநிலைப்படுத்தவும் செய்யும்.

 

// ஒவ்வொருமுறையும் இப்படிச் சோர்ந்துபோகும்போது, என்ன காரணம் என வினாவாமலே யாரேனும் ஒருவர் வந்து அணைத்துக் கதகதப்பாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொண்டு அவள் உடல்சூட்டில் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டுகொண்டேன். இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்.//

 

தனியாக இயங்குபவள் தனிமையை விரும்புபவள் நான் என்றாலும், சமயங்களில் உள்ளிருந்து உதறும் குளிர் போல சமநிலை குலையும்போது, சிந்தையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு மண் வீழும் மலர் போல இன்னொருவருக்குள் சரணடைய வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

 

// எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் இன்னொருவர் தரும் நேசமும் அரவணைப்பும் ஒரு பாவமன்னிப்பைப் போல நம்மை மீண்டும் மனிதர்களாக்கி விடுகின்றது.//

 

அன்புக்கு அந்த வல்லமை உண்டு இல்லையா என்று தோன்றியது.

 

// பயணங்களின்போதுதான் மனிதர்கள் எப்படி மாறிப்போய் விடுகின்றார்கள். எல்லாவற்றையும் புறப்படும் இருப்பிடங்களில் விட்டுவிட்டு, அசலான முகங்களோடு வலம் வரத் தொடங்குகின்றார்கள். தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் தம்மை இயல்பாகத் திறந்து காட்டவும் செய்கின்றார்கள். நான் நின்ற விடுதியில் நான் பல்வேறு விசித்திரமானவர்களைச் சந்திக்க முடிந்தது.//

 

இதை நானும் கவனித்திருக்கிறேன். தனித்துப் பயணிக்கும்போது எனக்கு ஒரு உதவி தேவை என்று யாரிடமும் கேட்கத் தயங்கியதில்லை. பயணிகளிடம் எல்லோருமே வாஞ்சையாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் பயணிகளுக்கு 'பயணிகள்' என்ற சலுகை கிடைக்கிறது. ஒரு பயணி ஒரு இடத்தில் வழமைக்கு மாறாக ஏதாவது செய்துவிட்டாலும், பாவம் வெளியூர்க்காரங்க அவங்களுக்கு தெரியாது என்று மன்னிக்கவும் தயாராகவே மனிதர்கள் இருக்கிறார்கள். நம் மீது பிம்பங்கள் இல்லாதபோது, நமக்கு இன்னொருவர் மீது எந்த பிம்பமும் இல்லாதபோது, இயல்பாக இருப்பது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் வாசித்து நெகிழ்ந்த இன்னொரு முக்கியமான உரையாடலும் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் இந்தப் பதிவு மிக நீளமாகப் போகும் என்பதால் வேண்டாம் என்று விடுகிறேன்.

 

மெக்ஸிக்கோ நாவலை துவங்கியவுடன் சரசரவென வாசிக்கத் துவங்கிய நான் 32 ஆம் அத்தியாயம் 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வந்தபோது சற்று விளங்க முடியாமல் அங்கேயே தேங்கி நின்றேன். வாசனையைப் பற்றி வந்து கொண்டிருந்த எறும்பொன்று திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் தடுமாறி நிலைகுலைவது போன்ற தடுமாற்றம் அது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கிருந்து எனது வாசிப்பைத் துவங்கியபோது எனக்கு அந்த சரடு பிடிபட்டது. அந்த வாசிப்பு இடைவெளி எனக்கு அவசியமானதாகவும், ஒரு புதிய கண்ணோட்டத்தில் இந்த நாவலை வாசிக்கும் அனுபவத்தையும் கொடுத்தது. உண்மையைச் சொன்னால் இந்த 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வாசிக்கும்போது நான் உணர்ச்சி வயப்பட்டேன். இந்தப் பகுதி எனக்கு மிகவும் ஆத்மார்த்தமாகப் பட்டது. இதோ இவனை எனக்குத் தெரியும் என்று திரும்ப திரும்ப என் மனம் அடித்துக் கொண்டது. இந்த உணர்வு எனக்குப் புரிகிறது. ஆமாம் புரிகிறது என்று என் மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது.

 

கதையின் முடிவு எதிர்பார்க்காத முடிவு என்றாலும்  ஒரு வாழ்வனுபவத்தைப் போல மிக இயல்பான முடிவாகவே இருந்தது.

 

தொடர்ந்த வாசிப்பாலும், நேர்மையான உரையாடல்கள் மூலமும் நம்மை நாமே உள் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது அவசியம். நேர்மையான உள் ஆய்வுதான் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள உதவும். நமக்குள் தான் எத்தனை எத்தனை நிறங்கள் இருக்கின்றன என உரையாடல்களும், வாசிப்பும் நமக்கு காட்டிக் கொடுக்கும். இப்படித்தான் என்னையே அடையாளம் காட்டக் கூடியதாக, தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக் கூடியதாக, ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்க கூடியதாக எனக்கு மெக்ஸிக்கோ வாசிப்பனுபவம் இருந்தது.


 ***************


நன்றி: சுகிர்தா இனியா

https://www.facebook.com/photo?fbid=199156269864891&set=a.104123939368125

0 comments: