கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ (இளங்கோ) - இராமசாமி செல்வராஜ்

Sunday, March 23, 2025

 

 ண்பர் டிசே தமிழனின் (இளங்கோ) மெக்சிக்கோ நாவலை நூலகங்களின் வழியே கடன்வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நூல். அவருடைய எழுத்தும் நடையும் வலைப்பதிவுகளின் வழியே அறிந்த ஒன்றுதான் என்றாலும், முழுநூலாய்ப் படிப்பது இதுவே முதன்முறை.


சிக்கலான கதைக்களம். அதனால் நடையும் சொற்பாவனைகளும் சற்று அந்நியமாய் உணரச் செய்தது. தொராண்டொ, மெக்சிக்கோ, அமெரிக்கா என்று சற்றேனும் அறிந்த ஒருவர்க்கே விலகிநிற்கும் சூழல் என்பதால் தமிழ்ச்சூழலில் பிறர்க்கு எவ்வளவு ஒட்டும் என்பது ஒருகேள்விக்குறி. ஆனால், நெட்பிலிக்சும் பிற திரைக்காட்சி வாய்ப்புகளும் பரவலாய் இருக்கின்ற இந்நாளில் அது பெருந்தடையாய் இல்லாமலும் இருக்கக்கூடும்.

 

அந்தப்பின்புலத்தைத் தவிர்த்துப் பார்த்தால், eat pray love சாயலில் எதையோ தொலைத்துத் தேடித் திரியும் ஒருவன் சந்திக்கின்ற பெண்ணும், அவர்கள் சேர்ந்து போகும் பயணங்களும், ஆண் பெண் உறவின் அத்துனைச் சாத்தியங்களோடும் (:-)) முழுதும் விவரித்துச் செல்லும் கதை. ஈழத்தில் பிறந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஒருவன் மெக்சிக்கோப் பயணத்தில் சந்திக்கிற கொலம்பியப் பெண்ணோடான கதை. கடந்த காலமும் நிகழ் காலமும் கலந்து வெளிப்படுகின்ற கதை தொடர்ந்து ஒரு நம்பகமில்லாத நிகழ்வுக்கோவைகளாக இருக்கின்றதே என்றும், அவர்களுக்கு இடையேயான ஈர்ப்புக்கு வலுவான காரணம் இல்லையே என்றும் தோன்றவைத்தது. ஆனால் அந்தக் கேள்வியைக் கதைமாந்தரே கேட்டுக்கொள்வதும், தற்செயல் நிகழ்வுகளின் கூட்டுத்தொகையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் விடைபகிரும் ஆசிரியர் இறுதியில் வேறொரு விடையைப் பகிர்ந்து அனைத்துக்கேள்விகளுக்குமான விடையாக வைக்கின்றார்.

 

மனித மனம் சார்ந்த அந்த விடை ஏற்புடையதாய் இல்லாமலும் இருக்கலாம்; அல்லது, அதன்மேலும் கேள்வியெழுப்ப முடியாத முழுவிடையாகவும் இருக்கலாம். அது வாசிப்பவரின் அனுபவம், ஏற்பு இவற்றைப் பொறுத்தும் அமையக்கூடும். இதற்குமேலும் இறுதித்திருப்பம் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்படியான ஒரு திருப்பம் இருக்கிறது என்று முன்பு படித்த ஒரு விமர்சனம் இதனைப் படிக்க எனக்கு ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

 

ஒரு பிழைகண்டுபிடிப்போனாகப் பல என் கண்ணில் பட்டன . ஒரு சில வடவெழுத்து ஒரீஇ காரணமாக இருக்கலாம். அல்லது பல்வேறு உச்சரிப்புகளைத் தமிழில் வெளிப்படுத்த முயன்றது காரணமாய் இருக்கலாம். ஆனால் முழுதும் அவ்வாறு ஒருதரத்துடன் இல்லை. Van என்பதை வேன் என்றோ வான் என்றோ எழுதலாம். ஆனால் இரண்டு வகையாகவும் ஒரே பக்கத்தில் எழுதுவதைத் தவிர்க்கலாம். சில இடங்களில் வேற்றுமை உருபு மயக்கம் தமிழக ஈழத் தமிழ் நடை வேறுபாடுகளாலும் இருக்கக்கூடும். ஆனால் ஆசிரியர்க்கு இல் விகுதி மீது அப்படி என்ன பிடிப்போ தெரியவில்லை. விடுதிக்கு, அறைக்கு, தம்பிக்கு என்று சொல்லும் இடங்களில் விடுதியிற்கு, அறையிற்கு, தம்பியிற்கு என்று அள்ளித் தெளித்திருக்கிறார்.

 

இனிய நடைக்குச் சொந்தகாரரான டிசே தமிழன் சற்றே வேறுபட்ட முயற்சியைச் செய்து தன் எல்லைகளை விரிக்கச் சற்றுச் சிக்கலான தெரிவைக் கையாண்டிருக்கிறார். படிக்கலாம்.

 

மெக்சிக்கோ

இளங்கோ

டிசுக்கவரி புக்கு பேலசு

2019

 

******

 

நன்றி: https://www.facebook.com/ramasamy.selvaraj.9/posts/pfbid01PvNcHq95AXrQA6tsWmKgHTZyonF15TLo3mfF7uyKwvqLnaEEp7oBNnTcxxLSi2Ql 

(பங்குனி 12)

'இசை அழைத்துச் செல்லும் பாதைகள்' குறித்து க.நவம்

Thursday, March 20, 2025


‘காலம்’ 61&62 ஆவது இதழில் ‘இசை அழைத்துச் செல்லும் பாதைகள்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் காலம் இதழ் வெளியீட்டு விழா கனடாவில் நடந்தபோது க.நவம் அவர்கள் அது குறித்துப் பேசிய காணொளி:





நன்றி: தடயத்தார்/ 'காலம்' செல்வம்/க.நவம்

கார்காலக் குறிப்புகள் - 82

 

பால்கியின் இந்தநேர்காணலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் சிம்பொனியை மட்டுமில்லை, ஓர் இரசிகர் எப்படி ஒரு மேதையைக் கொண்டாட முடியும் என்பதற்கும் நல்லதொரு உதாரணமாக இதைச் சொல்லலாம். எவ்வளவு அழகாக இளையராஜா தனக்கு இசையினூடு தந்து கொண்டிருப்பவற்றை மட்டுமின்றி, இசையில் இருந்து வெளியே வரும்போது அவ்வப்போது பிறர் குற்றஞ்சாட்டும் அவரின் 'Arrogance' ஐ எப்படி நாம் புரிந்துகொள்வதைப் பற்றியும் உரையாடுகின்றார். இளையராஜாவின் இந்த சிம்பொனிக்காக தமிழ்த்திரையுலகமே இங்கிலாந்துக்குத் திரண்டு சென்றிருக்க வேண்டும், அவ்வளவு அற்புதமான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டார்களென பால்கி வருந்துவதையும் இதில் கேட்கலாம்.

 

இளையராஜாவின் வாழ்க்கை சம்பந்தமான திரைப்படத்தை பால்கியே முதல் இயக்குவதாக இருந்ததாகவும், அவரை ஒரு 'டிவைனாக' தன் உள்ளம் கொள்வதால் தன்னால் அந்தப் படத்தை ஒருபோதும் இயக்கமுடியாது என்பதை -ஒன்றரை வருடங்கள்- காலம் எடுத்து சொன்னதாகவும் பால்கி குறிப்பிடுகின்றார். உண்மைதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக, உங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆளுமையிடமிருந்து விலத்தி நின்று அவரைப் பற்றி ஒரு சிறந்த கலைப்படைப்பை உருவாக்க முடியாதுதான். பால்கி அதைச் சரியாகவே முடிவு செய்திருக்கின்றார்.

 

இந்த சிம்பொனிக்கு ஏதேனும் 'ஜடியா/கருப்பொருள்' இருந்ததா என்று இளையராஜாவிடம் கேட்டபோது, ஏன் எல்லாவற்றுக்கும் அர்த்தங்களைத் தேடி அலைகின்றாய், இது தரும் உணர்வை மட்டும் அனுபவி என்று இளையராஜா பால்கியிடம் சொன்னதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவும் நிறைய இருக்கின்றது.

 

பால்கியைப் போன்றவர்களினூடாக இளையராஜாவின் இசையை மட்டுமில்லை, இளையராஜா என்கின்ற மனிதரைப் பற்றியும் அறிய முடிகின்றது. "நானொரு நாத்திகவாதி, யாரின் காலிலும் விழுந்ததில்லை (தந்தையின் காலில் கூட வீழ்ந்ததாய் ஞாபகமில்லை). ஆனால் சிம்பொனி கேட்டு முடிந்தவுடன் நான் இளையராஜாவின் காலில் என்னையறியாமலே விழுந்தேன். அப்படியொரு மகா அனுபவம். அது மட்டுமின்றி அப்படி இளையராஜாவின் காலில் விழுந்துவிட்டு, தன்னை ஏதாவது கடிய வார்த்தை கொண்டு திட்டவும் அவரிடம் கேட்டேன். அப்போதுதான் இந்த அற்புதமான இசையை அளித்தவர், ஒரு சாதாரண மனிதர் என்பதையும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்ளமுடியும்" என்று கூறும் பால்கியின் இளையராஜாவின் இசை மீதான பித்து நமக்குள்ளும் பற்றிக்கொள்கின்றது.


*

 

'சுழல்' தொடர் (2002) எப்போதோ வெளிவந்திருந்தாலும் அதை இத்தனை வருடங்களாகப் பார்க்காமலே இருந்தேன். இவ்வாறான தொடர்களுக்குள் விழுந்தால் அதில் இருந்து எழுவது கடினமென்பதால் இவற்றைப் பெரும்பாலும் பார்ப்பதைத் தவிர்ப்பேன். எனினும் Money Heist, Queen of the South போன்றவற்றின் அனைத்துத் தொடர்களையும் பார்த்து முடித்திருக்கின்றேன். சுழல்-2 இந்த மாத முடிவில் வரப்போகின்றதை தற்செயலாக அறிந்ததால், சுழல்-1ஐ பார்க்கத் தொடங்கினேன்.

 

அங்காளம்மாள் பரமேஸ்வரியின் மயான கொள்ளைத் திருவிழாவின் பின்னணியில் சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கின்றனர். மயானக் கொள்ளை திருவிழாவை இதில் காட்சிப்படுத்திய விதம் இது குறித்து அவ்வளவு அறியாத எனக்கு நல்லதொரு காட்சியனுபவமாக இருந்தது. அநேகமாக இவ்வாறான உள்ளூர்க்கலைகளை மலையாளத் திரைப்படங்களில் உயிரோட்டமாகப் பார்த்திருக்கின்றேன். தமிழில் இவ்வாறான முயற்சிகள் அவ்வப்போது நடந்தாலும் அவை அவ்வளவாக நம் மனதோடு நெருக்கமாக உறவாடியவை அல்ல. ஆனால் சுழலில் ஒவ்வொரு எபிசோட்டிலும் திருவிழாவின் தினம் ஒரு நாளென விழாவுக்கு ஒரு பெயரிட்டு, 9 நாள் திருவிழாவையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கின்றனர். அந்தத் திருவிழாக் காட்சிகளில் எமக்கும் உரு வருகின்றமாதிரியான ஆட்டமும் இசையும் இலயம் பிசகாது இணைந்திருந்த அனுபவம் அருமையானது.

 

ஒரு சுவாரசியமான திரில்லர் கதையில், நம் அன்றாட வாழ்வில் எளிதில் கடந்து செல்கின்ற முக்கியமான ஒரு விடயத்தைப் பேசுபொருளாக்கியதும் சுழலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நமது தமிழ்ச் சூழலில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் எம்மோடு சம்பந்தப்பட்டவர்களாலே நிகழ்த்தப்படுபவை. அது ஆணவக்கொலையாக இருந்தாலென்ன, பாலியல் வன்முறைகளால் ஆனாலென்ன, இவர்களா செய்திருப்பார்களென அதிர்ச்சியடையவைக்குமளவுக்கு நமக்கு நெருக்கமானவர்களே இவற்றில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.

 

முதலாவது சுழல் தந்த சுவாரசியத்தை இரண்டாவது சீஸனும் தருமா தெரியாது. ஆனாலும் புதிய தொடரையும் பார்க்க விரும்புகின்றேன். ஏனெனில் இந்தத் தொடரைப் பார்த்தபோது இதனோடு சம்பந்தப்பட்ட புஷ்கா-காயத்திரி உள்ளிட்ட குழு எவ்வளவு கடுமையாக திரைக்கதைக்காக உழைத்திருக்கின்றார்கள் என்பது அவ்வளவு தெள்ளிடையாகத் தெரிந்தது. தமிழ்ச்சூழலில் எத்தனையோ படைப்புக்கள் அளவுக்குமீறி விதந்ததேந்தப்படுகின்ற அபத்தமான சூழநிலையில், இவர்களின் உழைப்புக்கும், கலை மீதான காதலுக்கும், நாம் ஏதோ ஒருவகையில் மரியாதை கொடுத்தாக வேண்டும்.

 

*************

 

(பங்குனி, 2025)

 

கடிதங்கள் - 05

Tuesday, March 18, 2025

 

 அன்பு இளங்கோ,

 

இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், மிகக் கவனமாகவும், மிதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது இளங்கோ. அப்படி எழுதப்பட்டிருந்தாலும், இது சொல்லும் வரலாறு திடுக்கிடலையும், துக்கத்தையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு வன்முறையான வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆள், எந்த மிகை உணர்வுக்கும் ஆளாகாமல், அல்லது அவற்றிலிருந்து தள்ளி நின்று கொண்டு, உண்மைச் சம்பவங்களை திரும்பிப் பார்த்து, அதை இப்படி எழுத முடிவதே எனக்கு ஆச்சரியத்தையும் ஆறுதலையும் கொடுக்கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம், இலங்கைப் பின்புலம் கொண்ட அனுபவப் படைப்புகளை அனுப்புமாறும், அதைத் திரட்டி நீங்கள் தொகுப்பொன்று போட எண்ணமிட்டிருப்பதாகவும் முன்பு உங்கள் பக்கத்தில் படித்த நினைவு. நான் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறேனா? சரி என்றால் அந்த முயற்சி என்ன ஆயிற்று?

 

இந்திய ராணுவம் என்றில்லை, எந்த ராணுவத்தின் / மன்னர்களின் வெற்றிக் கதைகளை நான் கேள்விப்படும்போதும், அதற்கு எதிரில் நின்றவரின் உணர்வுகள் எப்படியாக இருந்திருக்கும், அவர்களின் வரலாறுகளில் அது என்னவென்று எழுதப் பட்டிருக்கும் என்று எண்ணிப்பார்ப்பது உண்டு. சமகாலத்தில் நடக்கும் பல வன்முறைகளுக்கும், முன்பு நடந்த வன்முறைகளுக்கும், நாங்கள் வரலாற்றை சமன் செய்கிறோம் என்ற ஒரு நியாயம் முன் வைக்கப் படுகிறது. 'Information is Wealth' என்று சொல்வார்கள், ஆனால் மனிதர்கள் தங்களுக்கு ஆதாயம் தரும் வரலாற்றுத் தகவல்களை மட்டுமே, தங்களை முன்நிறுத்திக் கொள்ள துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். இதை எல்லாம் யோசித்தால் நாம் இன்னும் ' blood for blood' என்ற காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன் நகரவே இல்லை என்று தோன்றுகிறது. மன்னராட்சியிலும் போர் புரிந்தோம், மக்களாட்சியிலும் போர் புரிகிறோம். மக்கள்/தலைவர்கள், இப்படியான வன்முறையை உள்ளே வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக் கொண்டு இயங்கும் இந்த நிலையில், இவ்வளவு அதி வேகத் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு பயங்கர விளைவுகளை உண்டு பண்ணப் போகிறதோ என்று அச்சமாக இருக்கிறது. ஒருவேளை உடனடி விபரீதங்களிலிருந்து நமது தலைமுறை தப்பிக்கலாம், ஆனால் மெல்ல stew ஆகிக் கொண்டிருக்கும் இந்த பயங்கரத்திலிருந்து நமது குழந்தைகள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?

 

நானும், மகளும் அமரன் படம் பார்க்கலாமா வேண்டாமா என்று அந்தப் படம் வந்த புதிதில் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவள் என்னிடம் ராணுவத்தில் சேர்வது என்பதே தங்களைக் கௌரவத் தற்கொலைக்கு ஒப்புக் கொடுப்பது போலத் தான் என்றாள். ஒரு மேஜர் முகுந்த் இறந்து போனால், இன்னொரு முகுந்த் உடனடியாக தயாராகி படையில் சேர்ந்து விடுவார். இவர்கள் எல்லாம், யாரை, யாரிடமிருந்து காப்பாற்ற தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்? ஏன் நாம் எல்லோரும் ஒற்றுமையாக சுமுகமாக வாழ முடியாது என்று கேட்டாள். இதே தான் எனது நிலைப்பாடு என்றாலும், அவள் எவ்வளவு தூரத்திற்கு ஆழமாக சிந்தித்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ளவும், இன்ன திசையில் உரையாடலை செலுத்த வேண்டும் என்ற எந்த முன் நோக்கமும் இல்லாமலும், நான் அவளுடன் கொஞ்சம் devil's advocate பாணியில் பேசிக் கொண்டிருந்தேன். நாடு என்று ஒன்று இருந்தாலே அதை பாதுகாக்க வேண்டும் அல்லவா? நாம் தென் பகுதியில் இருப்பதாலும், கடல் சூழப் பாதுகாப்பாக இருப்பதாலும் படையெடுப்புகளால் வட இந்தியாவைப் போல பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. மிகவும் சௌகரியமான இடத்தில் அமர்ந்து கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்க முடிவதால் இராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து நாம் அறியவில்லை என்றேன். மேலும், என் நாடு என்று உரிமை கொண்டாடினாலே பிரச்சனை தான், அங்கே பொறாமையும் போட்டியும் வளரும், பிறகு அதைப் பாதுகாக்க ராணுவமும் வேண்டும் என்றேன். அதற்கு அவள், நாடு என்பது administration point of view யில் தேவைதான், பாகங்களாக பிரித்துக் கொண்டதால் resources யை சரியாக நிர்வகிக்க சுலபமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்கட்டும், எப்படியும் தேசங்கள் உருவாகி, கோடும் கிழித்தாகி விட்டது, இதில் அடுத்தவன் தேசமும் நமக்கும் வேண்டும் என்று எண்ணுவது என்ன நியாயம் என்றாள். இப்படி எங்கள் உரையாடல் தொடர்ந்த படி இருந்தது.

 

இங்கே உங்களுக்கு இன்னொரு அனுபவத்தை குறிப்பிட நினைக்கிறேன். எனது தோழி ஒருவரும் என்னைப் போல gentle parenting முறையைக் கையாள்பவர். தான் மட்டுமல்ல தன் குடும்பத்தினரும் அந்த முறையத்தான் கடைபிடிக்க வேண்டும் என்பதை அவர் இன்னும் உறுதியாக அதைக் கடைபிடிப்பவர். நமது ஊர்களில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு குழந்தைக்கு தம்பியோ. தங்கையோ பிறந்து விட்டால், அந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், 'உன்னோட தம்பி/தங்கச்சிப் பாப்பாவை நான் எடுத்துட்டு போயிடுவேன்' என்று விளையாட்டாக பேசுவதைப் போல வினையாக சீண்டுவார்கள். குழந்தைகளுக்கு அந்த வயதில் தங்களது பொருட்களின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அதீதமான உடைமை உணர்வு இருக்கும். அப்போது மற்றவர், உனது வளையலைக் கொடு, கொலுசைக் கொடு, பாப்பாவை எடுத்துக் கொள்கிறேன் என்றால் அது அழத் துவங்கும் இல்லாவிட்டால் 'அடி'க்கத் துவங்கும். இந்த ஜென்ட்டில் பேரன்டிங்கில் வளரும் தோழியின் குழந்தையின் குடும்ப சூழலில், யாரும் எதை ஒன்றையும் என்னுடையது, உன்னுடையது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அதையேதான் அவளும் imitate செய்கிறாள். இது வரை home schooling ல் இருந்த அவள் தற்போது தான் பள்ளிக்கு செல்லத் துவங்கி இருக்கிறாள். அதே பள்ளியில் நானும் வேலை செய்வதால் என்னால் இவளை குடும்ப சூழல் மற்றும் பள்ளி சூழல் இரண்டிலும் கவனிக்க முடிகிறது. பள்ளியில் தனது பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் அவள் எப்போதுமே முன் நிற்கிறாள். அவள் அவளது பொருட்களை உரிமை கொண்டாடுவதில்லை. குழந்தைக்கு இருக்கும் பற்றைப் போலத் தான் எனது நாடு, எனது மொழி, எனது மதம், இனம், குணம் என்ற எந்த வகையான உரிமை கொண்டாடல்களும்! எதன் ஒன்றின் மீதும் பற்று கொண்டிருந்தால், அது நம்மை நீ பெரிசா நான் பெரிசா என்ற போர்க்களத்திலேயே நம்மை நிறுத்தும். இதைத்தான் ஜித்துவும் சொன்னார்

 

“When you call yourself an Indian or a Muslim or a Christian or a European, or anything else, you are being violent. Do you see why it is violent? Because you are separating yourself from the rest of mankind. When you separate yourself by belief, by nationality, by tradition, it breeds violence. So a man who is seeking to understand violence does not belong to any country, to any religion, to any political party or partial system; he is concerned with the total understanding of mankind.”

 

நாங்கள் வேறு, நீங்கள் வேறு என்ற உணர்வை உள்ளே வைத்துக் கொண்டு இன்னொருவரிடம் பழகும் போது, உண்மையிலேயே மத நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேட்கிறேன் இல்லை இளங்கோ. எனக்கு நானே எனது புரிதலை திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன். நம்மைப் போன்று இப்படி சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு. அதனாலேயே எனக்கு உங்களிடம் பேச நிறைய இருக்கிறது.

 

சரி, குடும்ப அமைப்புகள், சமூகம், தேசங்கள் எல்லாமே உருவாகி விட்டன. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தால், எனக்கு ஜித்து கிரிஷ்ணமூர்த்தியின் 'The Perfume of the teachings' யில் தொகுக்கப் பட்டிருக்கும் உரையாடல் நினைவுக்கு வருகிறது. அதில் கிரிஷ்ணமூர்த்தி, தனது UK, US, Indian Krishanamurti foundation யில் இருந்த ட்ரஸ்ட்டிக்கள் மற்றும் நண்பர்கள் சிலரை அழைத்து, தான் இறந்து போன பிறகு இந்த ட்ரஸ்ட்டுகள் என்ன ஆகும்? இந்த அமைப்புகளை தன் பொறுப்பில் இருந்து யார் நடத்தி செல்ல முடியும்? என்று கேள்வி கேட்டிருப்பார். கிரிஷ்ணமூர்த்தி ஒரு நெறியாளராக கேள்விகள் மட்டும் கேட்பார், அவர்கள் பதிலில் இருந்து திரும்பவும் இன்னொரு கேள்வி கேட்பார். இவரைக் குறித்த புரிதல் உங்களுக்கும் இருப்பதால், இது எத்தனை சிக்கலான கேள்வி என்று உங்களுக்கு தெரியும். அவர் எப்போதும் தன்னை தலைவன் என்றோ, குரு என்றோ முன்னிருத்திக் கொண்டதில்லை. The teachings are sacred என்று சொல்வாரே ஒழிய, அது தன்னுடையது என்று ஒருபோதும் உரிமை கொண்டாதியதில்லை. இப்போது யார் வழிநடத்துவார் என்ற கேள்விக்கு வரலாம். அங்கே தலைவன் concept கிடையாது. அதனால் ஒருவரை கைகாட்டி விட முடியாது. ட்ரஸ்ட்டிக்கள் /நண்பர்கள் என்ன பதில் சொன்னாலும், நான் நாளை இல்லை, K has died, இப்போது என்ன செய்வீர்கள் என்று திரும்ப திரும்ப அந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை சிந்திக்க வைப்பார்.

 

அவர்கள் நாள் கணக்கில் அதை அலசுவார்கள். அதில், அனைத்து கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன்களுக்கும் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும், அதாவது இந்திய பவுண்டேஷன்களின் செயல்பாடுகளில் UK,US பவுண்டேஷங்களும் (and vice versa) பங்குகொள்ள வேண்டும் என்று பேச்சு போகும்போது, இந்திய நடைமுறைகள் வேறு விதமாக இருக்கின்றன, புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது என்று மேற்கத்திய அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து கருத்து வரும். (இதை சரியாக புரிந்து கொண்டு சொல்கிறேனா என்று தெரியவில்லை) இருந்தாலும் எனது புரிதலின் படி, அங்கே ஒரு அமைப்புக்கும், இன்னொரு அமைப்புக்கும் இருக்கும் கலாச்சார, மனப்போக்கு, நடைமுறை வேறுபாடுகள் குறிப்பிடப்படும். அப்போது அதை சமாளிக்க, சுழற்சி முறையில் ஒவ்வொரு கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்கும், மற்ற கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனிலிருக்கும் ட்ரஸ்ட்டிக்கள் சென்று மாதக்கணக்கில் தங்கி இருந்து, நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் நடைமுறையில் ஒத்திசைந்து வருகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அப்போது உள்ளூர் கலாச்சார அனுபவமும், அறிமுகமும் கிடைக்கும், அப்படி ஒருவரை ஒருவர் ஆழமாக அறிந்து கொள்ளும் போது நமக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் எளிதாக இருக்கும் என்ற பரிந்துரை வரும். நான் இன்னும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. ஆனால், இது எனக்கு என்ன சொல்கிறது என்றால், ஜனநாயகம் என்பதும் இப்படித் தானே இருக்க வேண்டும். உலக அமைதி காத்தல் எல்லாருடைய பொறுப்பும் தானே! உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, பாரப்பா, நாம் செய்து கொண்டிருப்பது சரி தானா? இப்படியாகத் தொடர்ந்தால் நமது எதிர்காலம் என்ன என்று நேர்மையாக கலந்துரையாட வேண்டும் தானே? ஆனால், who will be the next big brother என்று தானே உலகம் போய்க் கொண்டிருக்கிறது.

 

முந்தா நாள், 'I don't feel at home in this world anymore' என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் பெண் ஒருவர் செவிலியராக நடித்திருப்பார். அவர், இந்த உலகத்தில் ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏன் இவ்வளவு வன்முறை என்று யோசித்து துன்புறுவார். நானும் இப்படி பல முறை யோசித்ததுண்டு. அதன் விளைவாகத் தானோ என்னவோ நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருப்பது. எங்கள் பள்ளியில் ஒருவனுக்கு ஹிட்லரின் மீது அபாரமான பிரியம் இருக்கிறது. பொடியன் அவன், அவனுக்கு அவரைக் குறித்து எவ்வளவு தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மீசை மீது அவனுக்கு ஒரு மோகம். அதைப் போலவே தனது மேலுதட்டின் மீது பேப்பரை ஒட்டிக் கொண்டு,'I am the Hitler' என்று சொல்லிக் கொண்டு சுற்றுவான். எனக்குப் பார்க்கும் போது சிரிப்பு வரும், ஏனென்றால், அவன் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.

 

அவனிடம், நீ ஹிட்லராக விரும்பினால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள், அதாவது நீ, 'The Hitler who spread kindness' என்று பெயர் வாங்கக் கூடிய ஹிட்லராக இருக்க வேண்டும் என்றேன். அவனுக்கு என்ன புரிந்ததோ, அவனும் நிச்சயமாக என்றான். நாம் இன்றைக்கு இயங்கும் போது, நாளை இந்த பூமியில் இருக்கப் போகும் குழந்தைகளுக்காகவும் சேர்த்து பொறுப்புணர்வோடு இயங்க வேண்டும் இல்லையா? நமது தலைவர்க்ளுக்கும் இதை யாராவது gentle parenting செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை சொன்ன போது என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது இளங்கோ. உங்கள் பதிவு என்னை எப்படி எல்லாம் எழுத வைக்கிறது பாருங்கள். நீங்களும் அதைத்தான் உங்கள் பதிவில் சொல்லி இருந்தீர்கள், 'நமது நினைவுகளை, கற்பனைகளை விரிப்பதற்கான வெளிகளை உருவாக்குவதுதானே எழுத்து என்பதாக இருக்கவேண்டும்' என்று. அதைத் தான் உங்கள் எழுத்தின் மூலம் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு என்ன வருமோ அதைப் பொறுப்பாகத் தொடர்ந்து செய்வோம். இதற்கு பொருந்தும் விதத்தில் ஒரு quote யையும் குறிப்பிட விரும்புகிறேன்.

 

“Never doubt that a small group of thoughtful, committed, citizens can change the world. Indeed, it is the only thing that ever has.”

― Margaret Mead

 

இன்னும் என்ன எல்லாமோ பேசத் தோன்றுகிறது இளங்கோ,,,, ஆனால், விடைபெறுகிறேன், மறுபடி எழுதும்வரை...

 

பிரியங்களுடன்,

இனியா

 

***************

 

அன்பின் இனியா,

 

உங்களின் பதிவு (கடிதம்) நிறைய முக்கியமான புள்ளிகளைத் தொட்டுச் செல்வதால், எங்கிருந்து தொடங்குவதென்று தயக்கமாயிருக்கின்றது. ஆகவே அந்தப் பதிவுக்குப் பிறகு பதிந்த காணொளியிலிருந்துதொடங்குகின்றேன். "20 வருடங்களில் நான் கற்றதை உங்களுக்குக் குறைந்த நிமிடங்களில் கூறுகின்றேன்" எனத் தொடங்கும் காணொளியை நான் ஏற்கனவே பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிர்ந்திருக்கின்றேன்.

 

இந்தக் காணொளியைச் செய்யும் ஹித்திஸை 10 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். நான் அப்போது பயணங்களைச் செய்பவர்களை விடாது பின் தொடர்ந்திருக்கின்றேன். காணொளிகள் அப்போது அவ்வளவு பிரபல்யம் ஆகாத காலம். மேலும் எனக்கு எழுத்துக்களிலிருந்து காட்சிகளை விரித்துப் பார்ப்பது பிடிக்குமென்பதால் பயணங்களை எழுத்துக்களில் பதிவு செய்பவர்க்கு முதலிடம் கொடுப்பேன். அந்தக் காலங்களில் ஹித்திஸ் இந்தியாவுக்குள் மிகக் குறைந்த செலவில் (நாளொன்றுக்கு ரூ 100 என்ற வகையில்?) backpacker ஆக பயணித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பயணித்தவர் பின் ஹரித்துவாரில் ஓரிடம் எடுத்து கோ(கா)ப்பிக் கடையை பயணிகளுக்காவென்று புறநகரொன்றில் நடத்திக் கொண்டிருந்தவர். அங்கு வரும் வெளிநாட்டவர்கள் தமது அடையாளங்களை விட்டுச் செல்லும் இடமாக அந்த கடையின் ஒரு சுவர் இருந்தது. என்றேனும் ஒருநாள் நானும் அந்தக் கஃபேக்கு இந்தியாவின் வடக்குக்குப் போனால் செல்லவேண்டும் என்று நினைத்தும் இருக்கின்றேன். சட்டென்று ஹித்திஸ் பயணியாக வந்த ஒரு ரூமேனியாப் பெண்ணுடன் காதல் வசப்பட்டு ரூமேனியாவுக்குப் போயிருந்தார். அதன் பின் அந்த கஃபேக்கு என்ன நடந்தது என்று அறியேன். அவர் அதன் பின்னர் ரூமேனியாவில் இருந்து யோகாக் காணொளிகளை பதிவு செய்யத் தொடங்கியபோது நான் அவரிடமிருந்து விலகி வரத்தொடங்கினேன். யோகா பிடிக்காதென்பதல்ல அர்த்தம். நான் இப்போதும் நேரங்கிடைக்கும்போது யோகா செய்பவன். ஆனால் அவரிடமிருந்து பெற இனி எதுவுமில்லையென்று விலகி விட்டிருந்தேன்.

 

இப்போது வேறொரு வடிவத்தில் ஹித்திஸ் வந்து நிற்பதை இந்தக் காணொளியினூடுதான் அண்மையில் பார்த்தேன். தெரிந்த முகமாக இருக்கின்றதென நினைவை மீட்டபோதுதான் இவையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. இப்போது ஹித்திஸ் திருமணம் செய்த ரூமேனியாப் பெண்ணை விவாகரத்து செய்து இந்தியாவுக்கு வந்து தரிசு நிலத்தைக் காடாக்கும் முயற்சியில் இருக்கின்றார் என நினைக்கின்றேன். ஒருவகையில் அவரின் வாழ்க்கை ஒரு வட்டச் சுழற்சியை முடித்து இன்னொரு 'புதிய இலையாக முகிழ'த் (Turn over a new leaf) தொடங்கியுள்ளதோ தெரியவில்லை.

 

ஒருவகையில் இவ்வாறுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு வட்டத்தை முடித்து புதிதாகத் தொடங்குகின்றல்லவா? அந்தவகையில்தான் எனக்கு கனடாவில் இருக்கும் நான்கு பருவக்காலநிலை மிகப் பிடிக்கும். ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ஒரு தெளிவான காலநிலை. இயற்கை தன் வட்டச்சூழற்சியை முடித்து ஒவ்வொரு பருவத்தைத் தொடங்குவது என்பது எவ்வளவு அழகு. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கின்றதல்லவா?

 

இதை எழுதும் இந்தக் கணத்தில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குகின்றதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சூரியன் அவ்வளவு பிரகாசமாக இருக்கின்றது. குவிந்திருந்த பனிமலை மெல்ல மெல்லக் கரைய ஆரம்பிக்கின்றது. இலைகள் உதிர்ந்த மரங்களில் துளிர்கள் அரும்பத் தொடங்குகின்றன. இனி பறவைகள் வந்து பாட வசந்தகாலம் கோலாகலமாகக் களைகட்டும்.

 

*

 

இராணுவம்/தாய்நாடு குறித்த பெருமிதம் பற்றி உங்கள் மகள் வைத்திருக்கும் புரிதல்களும்/கேள்விகளும் அவ்வளவு அருமையானவை. நாமெல்லாம் இந்தப் புரிதல்களுக்கு வர எவ்வளவு காலம் எடுத்திருக்கின்றன. எமக்கு எல்லாவற்றையும் துவிதங்களாக (dichotomy) கற்றுத் தந்ததால் நாம் எப்போது பிரிவுகளைப் புரிந்துகொள்ள அதிகம் நேரத்தைச் செலவளிக்கின்றோமே தவிர, எப்படி இந்த இடைவெளியைக் குறைப்பதென்ற திசையில் நின்று யோசிப்பதேயில்லை.

 

இங்கு கனடாவில் வலதுசாரிகளின் கட்சியில் எமது தமிழர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்; வெற்றிகளைச் சூடி எம்பிபிகளாகக் கூட வந்திருக்கின்றனர். நம்மவர்கள் பலருக்கு அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் கட்சியின் கொள்கைகளை விட, ஒரு தமிழர் அதில் நிற்கின்றாரே என கண்ணைமூடியபடி வாக்களிப்பார்கள். எனது அண்ணாவின் மகன் சில நாட்களுக்கு முன்கூட எப்படி நமது தமிழ் மக்கள் இப்படி முட்டாள்தனமாய் இருக்கின்றார்கள் எனக் கேட்டான். இத்தனைக்கும் அவன் எங்களைப் போல மார்க்ஸையும்,கம்யூனிஸத்தையோ, புரட்சிகளைப் பற்றியோ அறிந்தவனோ அக்கறைப்பட்டவனோ இல்லை. ஒரு எளிய அரசியல் தெளிவோடே நம்மைப் போன்றவர்கள் வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையும், வேட்பாளர்களாக இருப்பதையும் அவன் கேள்விக்குட்படுத்துகின்றான்.

 

அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் குழந்தைகளாக இருக்கும்போதே பொருட்களைப் பகிர்ந்து கொள்வது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு அருமையானது. இந்தப் பொதுப் பகிர்தல்களை மறந்து உடைமையாக்குவது என்ற சிந்தனையால்தானே இன்று பெரும்பாலான இயற்கை வளங்கள் தனியாருக்குச் சென்றிருக்கின்றது. பெரும் நிறுவனங்கள் இவ்வாறு உடமையாக்குவதன் மூலம் இயற்கை வளங்களை எப்படி வணிகப்படுத்துகின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.

 

இந்தப் பகிர்ந்தளித்து வாழும் முறையை நாம் இங்கிருக்கும் பூர்வீகக்குடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியொருவர் பூர்வீககுடிகளின் நிலங்களை வாங்க விரும்பியபோது chief சியாட்டில் என்ற பூர்வீகத் தலைவர் எழுதிய இயற்கை வளங்கள் குறித்த கடிதம் அவ்வளவு பிரபல்யம் பெற்றதல்லவா? இந்த உடைமையாக்கம் எவ்வளவு வன்முறையாக மாறுகின்றது என்பதற்கு நமது குடும்ப அமைப்புக்களே மிகச் சிறந்த உதாரணம்.

 

குடும்பம் என்ற அமைப்புக்குள் எல்லோருமே 'பொருட்களாக' ஆக்கப்பட்டு, அங்கே அதிகாரமும், உடைமையாக்கமும் அதன் நீட்சியில் வன்முறையாக்கமும் எளிதில் நடைபெற்றிருக்கின்றது. இதெல்லாம் புதிய கருத்துக்களுமல்ல. மார்க்ஸ்/ஏங்கல்ஸ் காலத்திலேயே 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' ஆகியவற்றின் தோற்றம் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன. ஆனால் முரண்நகை என்னவென்றால் மார்க்ஸை முன்னோடியாகக் கொண்டு புரட்சிகளும்/ஆட்சிகளும் நடத்திய நாடுகளில் கூட பெரும் மாற்றங்கள் இந்த விடயங்கள் குறித்து வரவில்லை என்பதுதான்.

 

இந்தக் கனவுகள் எல்லாம் ஏன் முழுமையான அளவில் சாத்தியமாகவில்லை என்று யோசிக்கும்போது, அனைவருமே புறவயமாக மாற்றங்களைச் சிந்திக்கின்றார்களே தவிர எவரும் தம்மளவில் மாற விரும்பாதவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். இங்கேதான் உங்களுக்குப் பிடித்தமான ஜித்து கிருஷ்ணமூர்த்தியோ, ஓஷோவோ, எனக்கு உவப்பான ஸென்னோ வருகின்றது. ஜேகே, நாராயணகுரு போன்றவர்கள் அமைப்புக்கு எதிராக இருந்தவர்கள். உங்களுக்கான விடுதலையை உங்களைத் தவிர வேறெவரும் தரமுடியாது என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள். நமக்கெல்லாம் ஒரு நாடு விடுதலையானவுடன் (அல்லது சுதந்திரமான நாட்டிலிருந்தால்) எல்லாமே மாறிவிடுமென்றுதான் சொல்லித் தந்திருக்கின்றார்கள். அப்படியெனில் இன்று அமெரிக்காவிலோ, பிரான்ஸிலோ இருக்கின்றவர்கள் அனைவரும் உண்மையான விடுதலையுணர்வுடனா இருக்கின்றார்கள்? அல்லது இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தவுடன் அங்கிருந்த மக்களெல்லோரும் முழுமையான விடுதலை அடைந்துவிட்டார்களா?

 

எனக்கு ஸென் வரலாறு பற்றி வாசிக்கும்போது ஒரு சுவாரசியமான விடயம் கிடைத்தது. ஸென்னின் முக்கியமான ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த நாடுகள் மிக மோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த நிலையில்தான் தோன்றியிருக்கின்றார்கள். அந்தக் கடும்சூழலில் இருந்து ஸென்னை மிக வலுவாக வளர்த்தெடுக்கின்றார்கள் என்பது. அப்படித்தான் எனது ஸென் ஆசிரியராகக் கொள்கின்ற தாய் கூட அமெரிக்க-வியட்னாமிய போரில் முகிழ்ந்த ஒரு முக்கிய ஆசிரியராகக் கொள்ள முடியும். ஆக ஒருவர் விடுதலை அடைவதற்கு புறச்சூழல் ஒரு பெரும் தடை அல்ல என்பது புரிகிறது.

 

நீங்கள் உங்கள் பதிவில், 'என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி ஒரு வழி தெரியும்போது பற்றிக்கொண்டு எழுவதுதானே நல்லது.

 

ஒன்றுமே செய்யாமல்/சிந்திக்காமல், குழப்பங்களுக்குள்/கவலைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்காமல், நமக்கான ஒரு உலகை (அது நிகழுமா/நிகழாதா) என்கின்ற எந்த அக்கறையுமில்லாது அப்படியான ஒரு பாதையில் பயணிப்பதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை.

 

"சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது." எவ்வளவு அழகானது உங்களின் இந்த வரிகள். லா-சூ சொன்னதுபோல, ஒரு நீண்ட பயணம் என்பது ஒரு காலடியை வைக்கத் தொடங்கும்போதுதான் ஆரம்பிக்கிறது அல்லவா? நாம் நினைத்த முடிவிடத்தை சென்றடைய வேண்டும் என்று கூட இல்லை. உற்சாகமாக நடந்து கொண்டிருப்பதுதான் முக்கியமானது.

 

இப்போது இதை எழுதத் தொடங்கியதே உங்களின் பதிவுக்கான மறு கடிதமாக. ஆனால் அது எந்தெந்தத் திசையிலோ இடம் மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு எளிய கடிதமே இப்படி இருந்தால் நமது சிக்கலான வாழ்க்கை அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

 

எனது ஆசிரியரான தாய் சொன்ன, 'இந்தப் பூமியில் இந்தக் கணத்தில் உயிரோடு இருப்பதைவிட வேறெந்த அற்புதமும் இல்லை' என்பதையே இங்கே நானும் நினைவுகூர்கிறேன்.

 

இதையெழுத் தொடங்கியபோது வசந்தகாலம் பற்றிச் சொன்னேன். பறவைகள் இனி வந்து பாடுமென்றும் குறிப்பிட்டேன். பாருங்கள், இந்தக் கடிதத்தை முடிக்கும்போது பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இன்றைய நாளில் எமக்காய் அருளப்பட்ட அற்புதம் அது!

 

அன்புடன்,

இளங்கோ

 

**********************

 

(பங்குனி, 2025)

 

கார்காலக் குறிப்புகள் - 81

Monday, March 17, 2025

 

காலம்' இதழில் மு.பொன்னம்பலம் (மு.பொ) குறித்து என்.கே.மகாலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சூழவிருந்த தீவுகளிலிருந்து மக்கள், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் வெளியேறத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் நெடுந்தீவு,புங்குடுதீவு, நயினாதீவு போன்ற பல தீவுகளில் வயதானவர்களும், நோயுற்றவர்களும் மட்டுமே எஞ்சி நின்றார்கள். இலங்கை இராணுவம் அந்தத் தீவுகளை ஆக்கிரமித்தபோது, மு.பொவும் அப்படி தங்கிவிட்டவர் என மகாலிங்கம் எழுதியிருந்தார். பின்னர் 2000 தொடக்கத்தில் இருந்து கொழும்பில் மு.பொ வாழத் தொடங்கினார் என்று எழுதியிருப்பார்.

இது சரியான தகவலா எனத் தெரியவில்லை. ஏனெனில் நான் கொழும்பில் 90களின் மத்தியில் இருந்தபோது மு.பொவின் இளையமகன் எங்களோடு படித்துக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் பிள்ளைகள் தீவை விட்டு வெளியேற மு.பொ மட்டும் புங்குடுதீவில் வாழ்ந்தாரா என்று தெரியவில்லை. தமது புங்குடுதீவுக் கிராமம் கைவிடப்பட்ட துயரத்தை சு.வி(ல்வரத்தினம்) தனது 'காற்றுவழிக்கிராமம்' கவிதைத் தொகுப்பின் மூலம் காலத்தில் அழியாது நமக்கு ஆவணப்படுத்தியிருப்பார்.

சு.வி இந்தக் கவிதைகளை 'சரிநிகரில்' எழுதிக் கொண்டிருந்தபோது நான் கொழும்பில் எனது ஊரை விட்டும் வந்திருந்தேன். அதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் போரின் காரணமாக பல்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தாலும், கொழும்புக்கு இடம்பெயர்ந்தபோது இனி என்றைக்குமாக ஊருக்கு மீளப் போகமுடியாது என்பது தெளிவாகப் புரிந்து போயிற்று. ஆகவே மீளமுடியாத் துயரத்தை சு.வியின் 'காற்றுக்கு வந்த சோகம்' கவிதையிலும், 'வேற்றாகி வந்த வெளி'யிலும் கரைத்துக் கொண்டிருந்தேன்.

எமது கிராமத்தை இராணுவம் கிட்டத்தட்ட சு.வியின் ஊரைக் கைப்பற்றிய 90களின் தொடக்கத்திலே கைப்பற்றியது. முற்றுமுழுதாக எமது கிராமத்தை விட்டு நீங்காத காலத்தில், இராணுவம் எந்நேரமும் எமது ஊருக்கு வந்த பயத்தில், பகலில் ஊரில் கழிப்பதாகவும், இரவில் இன்னொரு ஊரிலும் போய்த் தூங்குவதுமாகவும் மாதங்கள் கழிந்துகொண்டிருந்தன. இரவில் பக்கத்து ஊரில் நடந்து (சிலவேளைகளில் சைக்கிள் கிடைத்தால் அதில் ஏறிப்போவதோ) கூடப் பரவாயில்லை. ஆனால் விடிகாலையில் ஊருக்குத் திரும்புவதைப் போல நரகம் வேறில்லை.

அந்த நாள் விடிவதற்குள், மக்கள் தெருக்களில் நடமாடுவதற்குள் நாங்கள் திரும்பி ஊருக்குப் போகும்போது கடும் குளிராக இருக்கும். அப்போது சூரியன் வந்திராத மென்னிருளாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்த காலங்களில் ஆஸ்மா என் நிழலைப் போல எப்போதும் பின் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்தக் குளிர் இன்னொரு எதிரியாகிவிடும்.

இப்படி போய்க்கொண்டிருந்த இரவு/பகல் இரட்டை வாழ்க்கை இனி வேண்டாமென்று, இராணுவம் ஊருக்குள் நுழையவும், நாங்கள் முற்றுமுழுதான அகதி வாழ்வுக்கு மாறியிருந்தோம். அப்போதும் ஊருக்கு அருகிலிருந்த இன்னொரு ஊரில்தான் இடம்பெயர்ந்திருந்தோம். அங்கேயேதான் எமது பாடசாலை மதிய நேரங்களில் நடந்துகொண்டிருந்தது. அகதி என்பதன் அடையாளமே சென்று சேரும் இடத்துக்கேற்ப தன்னை உடனே தகவமைத்துக் கொள்வதுதானே.

நானும் என் கைகளுக்குக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாசித்தபடி, ஏதேனும் கோயில்கள் நடத்தும் போட்டிகளில் பங்குபற்றியபடி இருந்தேன். ஈழத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருக்கின்றதென்பதே அப்போதுதான் அறிந்தேன். அதில் விநாசித்தம்பிப்புலவர் என்பவர் ஏதோ சமயம் சம்பந்தமாக நடத்திய போட்டியில் பரிசொன்றை வென்றேன். (அவர் அன்றைய நாளுக்கான பிரசங்கம் நடத்திவிட்டு நம்மிடம் கேள்விகள் கேட்பார், நாங்கள் சரியான பதில்களை அளிக்கவேண்டும்., அப்படி ஏதோவொரு போட்டி)

இரவில் நடந்த பரிசளிப்புவிழாவில் அருமையான வர்ணப்பக்கங்களில் அச்சிடப்பட்ட (ராமகிருஷ்ணன் மடம் வெளியிட்ட நூல்களாக இருக்கவேண்டும்) நூல்களையும் வாங்கிக் கொண்டு எமது தற்காலிக வீட்டுக்கு -கற்கள் பரவிய தரையே தெருவெனச் சொல்லப்பட்ட- ஒழுங்கையால் நடந்துகொண்டிருந்தேன்.

இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த வீட்டுக்கும், கோயிலுக்கும் ஒரு கிலோமீற்றர் தூரந்தான் இருக்கும். பன்னிரண்டு வயதுச் சிறுவனுக்கு அது நெடும்பாதை. எந்த வெளிச்சமும் இல்லாத ஒழுங்கையில் நடந்துகொண்டிருக்கும்போது எங்கள் பாடசாலையில் படித்த ஒரு மாணவர் உங்கள் பக்கமாய் ஆர்மி வந்துவிட்டது என்றான். எனக்கு வந்ததோ அப்படியொரு பயம். என்ன நடக்கப் போகின்றதோ, அம்மா/அப்பாவை இனிப் பார்க்கமுடியுமோ என்று ஒரே பதற்றமாக இருந்தது.

ஏனெனில் அதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நாமெல்லாம் மத்தியானப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை இராணுவம் அருகிலிருந்த சில கிராமங்களைப் பிடித்துக் கொண்டது. என்னோடு படித்த ஒரு தோழியின் பெற்றோர் அப்படி இராணுவம் பிடித்த கிராமத்தில் மாட்டுப்பட, இந்தத் தோழி தம் பெற்றோரிடம் போக வழி தெரியாது திகைத்து கேவிக்கேவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன். ஒரு 12 வயதுப் பிள்ளை, பெற்றோர் இல்லாது எங்கே போய்த்தான் வாழ்வது?

எனக்கும் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்து, இராணுவம் எங்கள் வீட்டைப் பிடித்துவிட்டால் நானெங்கே போவது என்று யோசிக்க, பயம் கூடி நெஞ்சு பதறத்தொடங்கிவிட்டது. வீட்டை நோக்கி இன்னும் வேகமாக ஓடிப்போய், 'அம்மா ஆர்மிக்காரங்கள் கிட்ட வந்திட்டாங்களாம், வாங்கோ வெறெங்காவது போவோம்' என்று நான் அவ்வளவு பெருங்குரலில் கத்திச் சொன்னது இப்போதும் நினைவுக்கு வருகின்றது. அந்த இரவில் இராணுவம் வரவில்லை. என்னைப் பயமுறுத்துவதற்காக அந்த நண்பன் 'சும்மா போகின்ற போக்கில்' சொல்லிச் சென்றிருந்தான்.

தற்கு முன்னரான காலமான இந்திய இராணுவக் காலத்தில் வேறுவிதமான அனுபவங்கள் இருக்கின்றன. இந்திய இராணுவக் காலத்தில்தான் எனது அக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவர் அப்போது பரமேஸ்வராச் சந்திக்கருகில் இருந்த வீடொன்றில் அறையெடுத்து தங்கியிருந்தபோதும், அங்கே இருப்பதும் பாதுகாப்பில்லையென அடிக்கடி வீட்டில் வந்து நிற்பார். சிலவேளைகளில் கொஞ்சம் சூழல் சுமுகமாகும்போது அவருக்கு வகுப்புக்கள் கம்பஸில் தொடங்கும். சில வாரங்களாக யுத்தம் காரணமாக நடக்காத வகுப்புக்கள் தொடங்கியபோது, இந்திய இராணுவ முகாங்களினூடாக எங்கள் ஊரிலிருந்து யாழ் நகர் செல்வது பாதுகாப்பில்லை என்பதால் என்னையும் அவ்வப்போது துணைக்கு அழைத்துச் சென்றார். ஒருமுறை அப்படி அக்கா என்னையும், அவரின் நண்பி அவரின் பக்கத்து வீட்டு பையனையும் (என்னைவிட 2 வயது மூத்தவர்) தமது சைக்கிள்களில் ஏற்ரிக்கொண்டு போனார்கள். தெருக்களில் இடைக்கிடை (தெல்லிப்பளை, சுன்னாகம், மருதனார்மடம்) இருந்த இராணுவ முகாங்களும், இராணுவத்தின் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து ஒருமாதிரி போய்ச் சேர்ந்துவிட்டோம். அக்காவும் அவரது நண்பியும் லெக்சர்களுக்குப் போக நானும் மற்றப்பையனும் காலையிலிருந்து மாலைவரை ஒரே அறையில் இருந்தோம்.

அவன் அப்போது ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினான். தனக்கு இந்த வயதிலேயே திருமணம் செய்துவிட்டது என்றான். எனக்கு அப்போது 10/11 வயதிருக்கும். எனவே அவன் சொல்வதை ஒரு கட்டத்தில் முழுவதாக நம்பத் தொடங்கினேன் (நல்லதொரு கதைசொல்லி போலும்). திருமணம் என்றால் அடுத்து என்ன நடக்கும், முதலிரவுதானே. அவன் அதையெல்லாம் விபரிக்க விபரிக்க நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் மட்டும் கேட்டிருந்தால் பரவாயில்லை. அவன் சொன்ன 'கெட்ட' கதைகளை அந்த வீட்டுச் சொந்தக்கார அன்ரியும் கதவுக்குப் பின்னால் நின்று கேட்டதுதான் தவறாகிப் போய்விட்டது. பிறகு அக்காவிடம், அந்தப் பையன் மோசமானவன்,என்னை அந்தப் பெடியனோடு சேர விடவேண்டாமென்றெல்லாம் அறிவுரை சொல்லியிருக்கின்றார்.

அப்படி 10/11 வயதிலே காமத்தில் முற்றிப்போனவனின் 'மெக்ஸிக்கோ'வை வாசித்துவிட்டு இங்கிருக்கும் ஒரு எழுத்தாளர் 'மெக்ஸிக்கோ' பாத்ரூமுக்குள் கொண்டு போய் சுயவின்பம் செய்வதற்கு ஏற்ற நூல் என்று ஒரு விமர்சனத்தை வைத்தார். அப்போது நான் நினைத்தது; நான் 10 வயதிலிருந்து கேட்ட காமக்கதைகளை எல்லாம் எழுதினேன் என்றால் அவரால் ஒருவருடத்துக்கு மேலாக பாத்ரூமை விட்டு வெளியே வரமுடியாமல்தான் இருந்திருக்கும், நல்லவேளை நான் அதை இன்னும் செய்துவிடவில்லையென்று. மேலும், ஒரு நூலுக்கு எந்தவிதப் பயனும் இல்லாதிருப்பதைவிட சுயவின்பம் பெறுவதற்காவது அது உதவுகின்றது என்று நினைத்து அவர் மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்.

பாருங்கள்! மு.பொவைப் பற்றி வாசித்த கட்டுரை எங்கெங்கோ எல்லாம் அழைத்துச் சென்றிருக்கின்றது. அதைத்தானே ஒரு எழுத்துச் செய்யவேண்டும். நான் சொல்வதை மட்டுமே நீ கேட்கவேண்டும் என்று ஒரு பிரதி அடம்பிடித்தால் அதை வாசிப்பதால் என்ன பயன்? நமது நினைவுகளை, கற்பனைகளை விரிப்பதற்கான வெளிகளை உருவாக்குவதுதானே எழுத்து என்பதாக இருக்கவேண்டும்.

இந்தக்கட்டுரையில் ஒரு முக்கிய சம்பவமொன்று குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் செய்த மிலேச்சனத்தனமான செயல்களில் ஒன்று யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து 60இற்கு மேற்பட்ட நோயாளிகள்/வைத்தியர்கள்/தாதிகளைப் படுகொலை செய்த சம்பவம். அந்த சம்பவத்தின்போது மு.பொன்னம்பலம் அதே வைத்தியசாலையில் தங்கியிருந்து அதிஷ்டவசமாக அந்தச் நிகழ்வு நடக்கும்போது வைத்தியசாலையை விட்டுத் தப்பியோடி ஊர் போய்ச் சேர்ந்திருக்கின்றார் என்று இதில் மகாலிங்கம் எழுதியிருக்கின்றார்.

அப்படியானால் மு.பொவுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் அல்லது ஒரு மீளுயிர்ப்பு அவரின் வாழ்க்கையில் வழங்கப்பட்டிருக்கின்றதெனச் சொல்லலாமோ தெரியாது. பலருக்கு இவ்வாறான சொற்ப கணங்களில் வாழ்தல் மாறி மரணத்தைத் தழுவிய சோகமான தருணங்களையும் யுத்தம் தன்னகத்தே வைத்திருந்தபோது மு.பொவின் அந்தத் தப்பிப்பிழைத்தல் ஒர் அதிசயமெனத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

*"நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்."

 
*******

* சு.வில்வரெத்தினத்தின் 'காற்றுவெளிக் கிராமம்' தொகுப்பில் இருக்கும் 'புள்வாய்த்தூது' கவிதையின் ஒருபகுதி.

 

 புகைப்படம்: இணையம்

(Mar 04, 2025)

கார்காலக் குறிப்புகள் - 80

Sunday, March 16, 2025

 

ருவன் ஓவியம் வரைவதில் பெருவிருப்பமுடையவனாக இருக்கின்றான். நள்ளிரவில் விழித்திருந்து நிலவையும், விடிகாலையில் துயிலெழுந்து சூரியனையும் வரைய விரும்பும் அவன் காதலை தனது 20களில் சந்திக்கின்றான். அந்தக் காதலி தற்செயலாக கர்ப்பமாக அவளையே மணம் புரிகின்றான். அவனது பெற்றோருக்கு அவன் இப்படி இளமையின் தொடக்கத்திலே குடும்ப வாழ்க்கைக்குள் நுழைகின்றான் என்பதில் கவலை இருக்கின்றது.

காலம் நகர்கின்றது. இவன் தனது ஓவியக்கனவைக் கைவிட்டு, சாதாரண ஒருவனாக நாளாந்த வேலைக்குச் செல்லத் தொடங்குகின்றான். பொருளாதாரம் காரணமாக அவனது பெற்றோரின் வீட்டிலே அவனின் குடும்பமும் வாழ்கின்றனர். அந்த வீடு இந்தக் குடும்பத்தில் எல்லா உயர்வு/தாழ்வுகளையும் பார்க்கின்றது. அவனின் மனைவியோ நாங்கள் எமக்கான ஒரு வீட்டை வாங்கவேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றாள். எப்படி தங்களின் 'கனவு வீடு' இருக்க வேண்டுமென்பதைக் கூட அவன் வரைந்து வைத்திருக்கின்றான். ஆனால் அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறவில்லை.

அவனின் பெற்றோர் வயதாகும்போது அவனுக்கு அந்த வீட்டைக் கொடுத்து ஒரு முதியோர் இல்லத்துக்கு இடம்பெயர்கின்றனர். அப்போதும் அவன் இந்த வீட்டை விற்க விரும்பவில்லை. மனைவிக்கு வேறு விதமான பல கனவுகள் இருக்கின்றன. தமக்கான சொந்த வீடு/ பல்வேறு நாடுகளுக்குப் பயணிப்பதென்று அவளின் கனவுகள் வேறுவிதமானவை. இப்போது இவர்களின் மகள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கவும், மேற்படிப்புப் படித்து வக்கீலாகவும் வர விரும்புகின்றார். அந்தப் பெண்ணுக்கான படிப்புச் செலவுக்காக இந்த வீட்டையே மோட்கேஜ் வைக்கின்றனர். இவ்வாறு இந்த தம்பதிகளின் கனவுகளான் வீட்டைக் கட்டுவதோ, இணைந்து பயணங்கள் செய்வதோ ஒருபோதும் சாத்தியமாகாமல் போகின்றது.

ஒருகட்டத்தில், அவனின் மனைவி பிரிந்து போகின்றாள். அவனால் அவளைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இத்தனைகாலம் சேர்ந்து வாழ்ந்த பெண்ணல்லவா அவள்.

அவனின் தாயாரும் முதியோர் இல்லத்தில் இறந்துபோக, நடக்கமுடியாத தன் தந்தையை வீட்டில் வைத்து இவனே பார்த்துக் கொள்கின்றான். தந்தை இறக்கும்வரை நல்லதொரு மகனாக இருந்து பார்த்துக் கொண்டு, இவன் தன் ஓவியம் வரையும் கனவைத் தூசி தட்டி ஓவியங்களை மீண்டும் வரையத்தொடங்குகின்றான்.

ப்போது அவனுக்கும் அவளுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். காலங்காலமாக மிகுந்த கோலாகலத்துடனும், குதூகலத்துடனும் நடக்கும் Thanks Giving Day Dinner எவருமே இல்லாது கொண்டாடப்படுகின்றது. ஒருமுறை அவளும் இவனும் அந்த விருந்தைக் கொண்டாடுகின்றனர். தனித்து இருக்கும் இவன், அவளை இந்த வீட்டில் வந்து இரு எனக் கேட்கின்றான். அவள் மரியாதையாக முடியாதென மறுக்கின்றாள்.

காலம் அவளைத் தின்று ஞாபகமறதி என்னும் 'நோயை'க் கொண்டு வருகின்றது. அவளுக்கு பெறுமதியான நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டன. சின்னச்சின்ன சந்தோசங்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அவன் இதுவரையும் விற்கமறுத்த அந்த வீட்டை இறுதியில் விற்கின்றான். அவளை அதை விற்க முதல் அழைத்து அமரவைத்து பழைய நினைவுகளைப் பகிர்கின்றான்.

இது 'Here' என்கின்ற திரைப்படத்தின் ஒரு பகுதி. ஒரு வீடு எவ்வளவு நினைவுகளை வைத்திருக்கின்றது என பல்வேறு மனிதர்களின் வாழ்வினூடு வெளிப்படுத்தி நமக்கு நெருக்கமாகின்ற ஒரு திரைப்படம் இது.

இதில் வரும் அந்த 'அவனின்' வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஒருவன் தனது கனவுகளை குடும்பத்துக்காய்க் கைவிடுகின்றான். அவனளவில் அவன் தனது எல்லாவற்றையும் பிறருக்காக கொடுக்கின்றான். ஆனால் அது போதாது இருக்கின்றது அல்லது மற்றவர்களின் கனவுகள் வேறு விதமாக இருக்கின்றது. மகள் படிப்பதற்காக வீட்டை விட்டுப் போகின்றாள். மனைவி அவனை விட்டுப் பிரிந்து போகின்றாள். பெற்றோர் இறந்து போகின்றனர்.

அவன் எப்போதும்போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இந்த வாழ்வை வாழ்கின்றான். எவர் மீதும் கோபமும் இல்லை; எதன் மீதும் அளவுக்கதிகமான ஒட்டுதலும் இல்லை. அப்படியெனில் அவனை நாம் எவ்வாறு மதிப்பிடுவோம்.

நாம் அவனைப் போல வாழும் ஒருவராக இருக்கவே, பெரும்பாலான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனில் நாம் நமது வாழ்வை உண்மையிலே வாழ்ந்தவர்களா அல்லது இந்த சமூகத்தின் பார்வையில் தோற்றுப் போனவர்களா? இன்னொருவகையில் நாம் சமூகம்/குடும்பம் என்று இருந்தாலும் என்றென்றைக்கும் தனித்து இருக்க சாபமிடப்பட்டவர்கள்தானோ? அந்தத் தனித்திருத்தலில் இருந்து, வாழ்வின் 'இறுதி உண்மைகளை'க் கற்றுக்கொண்டு, நம் இறுதிக்காலங்களில் ஓர் தெளிவை அடைகின்றோமா?

சிலவேளைகளில் தமது முதுமையை ஆறுதலாக அடையாமல் சட்டென்று இடைநடுவில் மரணத்தைத் தழுவியர்கள், இவ்வாறான கடும் இருத்தலியக் கேள்விகளைச் சந்திக்காமல், வாழ்ந்து முடிக்க ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

*****************

 

(Mar 16, 2025)