கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகள்'

Sunday, August 07, 2016

.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகளில் 15 கட்டுரைகள் இருக்கின்றன; அநேகமானவற்றை 'ஜீவநதி'யிலும், அ.யேசுராசாவின் முகநூலிலும் எழுதப்பட்டபோது வாசித்தபோதும், இன்னொருமுறை முழுதாகச் சேர்த்து வாசித்தபோதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது. அ.யேசுராசாவில் நமக்கு எத்தகைய விமர்சனம் இருந்தாலும், இந்தத் தொகுப்பை நிறைவு செய்யும்போது அவர் அறிமுகப்படுத்தும் விடயங்களுக்காய் ஏதோ ஒருவகையில் நாம் அவருக்கு நன்றியுடையவர்களாக மாறிவிடுவோம். இலக்கியவாதிகளையும், இலக்கிய நிகழ்வுகளையும், சினிமாக்களையும், ஓவியங்களையும் அ.யேசுராசா இதில் பேசுகின்றார் என்கின்றபோதும், அதனூடு ஒரு குறிப்பிட்ட காலத்தின் (1970/1980) சுவடுகளையும் நாம் இவற்றில் அடையாங்காணமுடியும்.

ஒரு கடற்றொழிலாளியின் மகனாக வறுமையான குடும்பத்தில் பிறந்து, விரும்பிய கல்வியைத் தொடரமுடியாது தொடக்கத்தில் மேசன் வேலையும், பின்னர் தபால் கந்தோரிலும் பணிபுரியும் அ.யேசுராசாவிடம் 'நிலவினில் பேசுவோம்' போல, 'நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யலாம்' எனவும் சிலர் கேட்கின்றனர். அதுபோலவே அவர் சேகரிக்கும் நூற்களையும், அதில் எவ்வளவு பிரியமுடையவராக இருக்கின்றார் என்றும் எழுதப்பட்ட கட்டுரை அற்புதமானது. ஒருவகையில் அ.யேசுராசாவின் நூல் பித்து எனக்கு ஃபோர்ஹேஸை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. தனிமனிதர்களின் உறவை விட அவரின் புத்தகங்கள் மீதான நேசம் ஒருகட்டத்தில் எனக்கு அச்சமூட்டியதென்றாலும், புத்தகங்களின் மீதான தீரா வாஞ்சையும், அவையில்லாமல் ஒரு பொழுது விடிந்து முடியாதென நம்புகின்ற ஒருவனாக நானும் இருப்பதால் ஒருவகையில் யேசுராசாவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹாகவி, ஏ.ஜே, எஸ்.பொ போன்ற ஆளுமைகளில் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துகின்ற யேசுராசா, அவ்வளவு கவனிக்கப்படாத ஆனந்தமயில், செ.கதிர்காமநாதன் போன்றவர்களை மட்டுமின்றி, இலக்கியம் சாராத சாதாரணமனிதர்களைக் கூட அவர்களின் பங்களிப்புக்களுக்காய் நினைவுகூரவும் செய்கின்றார். அதேசமயம் டானியனில் படைப்புக்கள் மீது (முக்கியமாய் 'பஞ்சமர்') குறித்த தன் கறாரான பார்வையையும் முன்வைக்கின்றார். ஆனால் இன்று டானியலின் படைப்புக்கள் முழுதாய் வெளிவந்திருக்கின்ற/வாசிக்கப்படுகின்ற காலகட்டத்தில் டானியலை அவ்வளவு எளிதாய் அ.யேசுராசாவைப் போல புறந்தள்ள முடியுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன. அதேபோன்று கைலாசபதியினதோ, டொமினிக் ஜீவாவினதோ, மு.பொன்னம்பலத்தினதோ முரண்பாடுகளை இத்தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருக்கலாமோ எனவும் தோன்றியது. மேலும் அவர்கள் என்ன எழுதினார்கள்/ எந்த விமர்சனத்தை முன்வைத்தார்கள் என்பதை அறியாது ஏதோ இடைநடுவில் ஆதியும் அந்தமும் தெரியாது யேசுராசாவின் பதிவுகளை மட்டும் வாசிப்பதில் சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய விடயங்களுக்கு எதிர்வினையாற்றல் அவசியமென்கின்றபோதும் இத்தொகுப்பில் இதன் தேவை இல்லைபோலவே தோன்றியது. அதுபோலவே இதில் சேர்க்கப்பட்ட 15வது கட்டுரையும் எனலாம்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அ.யேசுராசா அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை புதிது புதிதாய் அறிய விழைகின்றவராய், அவற்றைப் பகிரவிரும்புகின்றவராய் இருப்பதே என்னைப் பொறுத்தவரை கவர்கிறது. கட்டுரையிற்கான அவரின் கச்சிதமான மொழி நம்மை அலுப்பின்றி வாசிக்க வைக்கின்றது. பத்தி/கட்டுரைகளில் எழுதுவதில் ஆர்வமிருக்கும் என்னைப் போன்றவர்கள் அ.யேசுராசாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவரின் அனுபவங்களினூடாக பயணிக்கவும் நிறைய உள்ளன. திரைப்படங்கள் பற்றிய ஒருகட்டுரையில் பிரசன்ன விதானகேயின் 'With you Without you' பிடித்தது பற்றியும், அஷோக ஹந்தகமவின் 'இனி-அவனில் இருக்கும் சிக்கலால் விலகிப்போனது பற்றியும் எழுதிய பார்வை எனக்கும் உவப்பானது.

அ.யேசுராசா என்ற ஆளுமை மீது நமக்கு வேறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால் அவர் நம்மோடு பகிர்வதற்கும் இன்னும் நிறைய விடயங்கள் இருக்கிறதெனவே நம்புகின்றேன். எதிலும் கறாரான பார்வையுடைய, எழுதும் மொழியின் கச்சிதம் அறிந்த, எதன் பொருட்டும் சமரசம் செய்யாத ஒருவராக அ.யேசுராசாவை அவரின் எழுத்தினூடும், அவரை அறிந்தவர்களினூடாகவும் அறிந்து வைத்திருக்கின்றேன். எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருந்த அவர் 'ஜீவநதி'யில் எழுதத்தொடங்கியதிலிருந்து மீள வந்திருப்பதாய் இத்தொகுப்பின் முன்னுரையில் கூறுகின்றார். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்துக்களை இரசித்தும் முரண்பட்டும் செல்ல, என்னைப் போன்ற நிறையப் பேர் அவற்றை வாசிக்க ஆர்வத்துடன் இருப்பார்களெனவே நம்புகின்றேன்.

(நன்றி: 'தீபம்')

0 comments: