கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரொபர்டோ பாலானோவின் 'Woes of the True Policeman'

Sunday, July 19, 2015

ரொபர்டோ பாலானோவின் இந்த நாவல் ஓரினப்பாலினர் பற்றி அதிகம் பேசுகிறது. சிலேயில் பிறந்த பேராசிரியர், பார்சிலோனாவில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும்போது அங்கே படிக்கும் மாணவன் ஒருவனோடு தற்பால் உறவில் ஈடுபட்டதால் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றார். துணையை ஏற்கனவே இழந்த இந்தப் பேராசிரியர், தன் மகளைக் காப்பாற்றும் பொருட்டு, மெக்சிக்கோவின் (அமெரிக்க எல்லையிலுள்ள) ஒரு நகருக்கு இடம்பெயர்கின்றார்.
கதை பிறகு மெக்சிக்கோவிற்கும், ஸ்பெயினுக்குமென பேராசிரியர் - மாணவர் எழுதும் கடிதங்களினூடு நீளுகின்றன.

பேராசிரியருக்கு மெக்சிக்கோவிலும் ஒரு மாணவனோடு உறவு முகிழ்கிறது. ஒருகட்டத்தில் அவரது மகள் பேராசிரியரின் தற்பால் உறவைக் கண்டும் கொள்கிறார். இதற்கிடையில் மெக்சிகோவில் பேராசிரியர் இருக்கும் நகரில் இளம் பெண்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள். அதற்கான காரணங்களைத் தேடும் பொலிஸார் ஒருகட்டத்தில் பேராசிரியரின் கடந்தகால வாழ்க்கையை அறியும்பொருட்டு அவரையும் பின் தொடர கதை பல்வேறு திசைகளில் பிரிந்து போகின்றது.

போர்ஹேஸ் மீது மிகுந்த ஈர்ப்பிருக்கும் ரொபர்டோவை இந்த நாவலில் இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். பேராசிரியர் மொழிபெயர்த்திருக்கும் பிரான்ஸ் எழுத்தாளர் பற்றியே ஒரு தனிக்கதை இந்நாவலில் நகர்கின்றதென்றால், இன்னொரு புறத்தில் மெக்ஸிக்கோவின் ஒருபகுதியை பெல்ஜியத்தினரும் பிரான்ஸ்சுக்காரரும் தாக்கும்போது அங்கிருந்த மக்களால் துரத்தியடிக்கப்படுகின்ற பல நூற்றாண்டுகள் பின்னாலுள்ள வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகின்றது. ரொபர்டோ நமக்கு அறிமுகமான எழுத்தாளர்களோடு எப்படி தனது கற்பனை கதாசிரியர்களையும் உலாவ விடுகின்றாரோ, அவ்வாறே அவர் கூறும் வரலாறுகளும் உண்மையில் நிகழ்ந்தவைதானா என்ற சந்தேகம் இந்நாவலை வாசித்துக்கொண்டு போகும்போது வருவதும் இயல்பானது.

ந்நாவலில் வரும் பேராசிரியர் பாத்திரமே ரொபர்டோவின் புகழ்பெற்ற 2666ல் வேறொருவராக வருகின்றார். ஸ்பெயினில் இருக்கும் பாஹதியா தான் எழுதுவதாய்க் கூறும் god of homosexuals ஐ பற்றி வரும் விவரிப்புக்கள், குறிப்புக்கள், குழப்பங்கள், இடையில் தொடரமுடியாத் தவிப்புக்கள் எல்லாமே ரொபர்டோ எழுதிய 2666 பற்றியதுதானோ என்று ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பது கூட சுவாரசியம் தரக்கூடிய விடயம்.

இந்நாவலை ரொபர்டோ 1980களில் எழுதத்தொடங்கி அவர் இறக்கும் வரை  (2003)  தொடர்ந்து முடிவுறாத ஒரு நாவலலென, இந்நாவலின் பிற்பகுதியில் ரொபர்டோவின் மனைவி குறிப்பிடுகின்றார். ஆனால் இது நாவலே அல்ல, ரொபர்டோ தான் எழுதிய மற்றும் எழுத நினைத்த நாவல்களிற்கான பெருங்குறிப்புக்களே இவ்வாறு ஐந்து பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அவரது கணனியிலும் கையெழுத்துப் பிரதியிலும் இருந்ததென, ரொபர்டோ எப்படி தன் நூல்களை வெளியிடவேண்டும் என உரையாடிய இன்னொரு எடிட்டர் குறிப்பிடுகின்றார். ரொபர்டோ பிற்காலத்தில் அவரின் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
ஒருவரின் எழுத்து பெரும்புகழ் அடையும்போது, அவர்களின் முடிக்கப்படாத எழுத்துக்கள் பிரசுரமாவது கடந்தகாலங்களில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால் அப்படி வெளிவருபவை எழுத்தாளரின் விருப்பாய் இருந்திருக்குமா அல்லது எழுதியவரின் முழுமையான ஆக்கங்களை இவ்வாறு முழுமையடையாத படைப்புக்கள் வெளிவரும்போது பாதிக்கச் செய்யாதா என்பவை விவாதத்திற்குரியவை.

என்னைப் பொறுத்தவரை, ரொபர்டோ எப்படி தன் நாவல்களை எழுதியிருக்கின்றார், எவ்வாறு பல்வேறுவகைகளில் திருத்தித் திருத்தி வேறு திசைகளில் புனைவுகளை மாற்றியிருக்கின்றார் என்பதை அறிவதும், ரொபர்டோவின் நாவல்கள் எந்தப் புள்ளிகளில் முழுமையடைகின்றன என தெரிந்து கொள்வதும் கூட ஒருவகையில் சுவாரசியந் தரக்கூடிய ஒரு விளையாட்டுப் போல இருக்கிறது.

(நன்றி: எதுவரை)

0 comments: