கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசிப்பு இடைமறிப்பு

Wednesday, September 06, 2006

ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....

' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக் காக்க மதங்கள் இல்லை. சாதியையும், மதத்தையும், ஆண் மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விதத்தில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழஙக முடியும்.'

raj

'தலித்திய விமர்சனக்கட்டுரைகள்' எனப்பெயரிடப்பட்ட இத்தொகுப்பில் வெவேறு காலகட்டத்தில் ராஜ்கெளதமனால் எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகள் இருக்கின்றன. 'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்', 'குடும்பம் பெண்ணியம்', 'பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்', 'தலித்தியப்பார்வையில் பாரதி', 'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்பவை குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். விரிவாகவும், சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் இவை உண்மைக்கு அண்மையாக இருக்கின்றன என்ற வாசிப்பனுவத்தை எளிதாகப் பெறமுடிகின்றது.

'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்' என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் எப்படி ஒரு காலத்தில் கலகக்காராக இருந்து இறுதியில் 'ஜெயஜெய சங்கரா' பாடி இந்துமதப்பெரும் ஜோதியில் கலந்தார் என்பதை ராஜ்கெளதமன் அடையாளங் காட்டுகின்றார். 'இந்து மத்த்தில் புதைந்துள்ள கர்மவினைக் கோட்பாடில் ஏறுவரியையை ஜெயகாந்தனிடம் காணமுடியும்' என்று ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்டுள்ள முடிவுரை சரிபோலத்தான் தோன்றுகின்றது. அதேபோன்று ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களில் சித்தரிக்க்கபடும் தலித்துக்கள் எவ்வாறு கீழ்த்தரமாகக் காட்டப்படுகின்றார்கள் என்பதைச் அடையாளங்காட்டுவதோடு, பூமணி போன்ற சில தலித் எழுத்தாளர்கள் கூட மெல்ல மெல்ல உயர்சாதிக் கதாபாத்திரங்களை தங்கள் படைப்புக்களில் முக்கியபாத்திரங்களாக்கி நாவல் படைப்பதையும் ராஜ்கெளதமன் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அதே போன்று டானியலின் நாவல்களை முன்வைத்து, -எந்தமதமானாலும்- மதம் மாறினால் கூட சாதி இழிவும், பிரிவுகளும் நீங்கிவிடாது என்பதையும் கட்டுரையாசிரியர் கவனப்படுத்துகின்றார்.

நிறப்பிரிகை விவாதக்கூட்டமொன்றிற்காய் 90களில் வாசிக்கபட்ட, 'குடும்பம், பெண்ணியம்' முக்கியமான ஒரு கட்டுரை. பெண்ணிற்கான சுதந்திரத்தை பெண்கள தமக்கான வழிகளில் தேடுவதே மிகச்சிறந்த வழியாக இருக்குமென்பதையும், தலித்துக்களைப் போலவன்றி இன்னும் கடும் சவால்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தே பெண்கள் தமக்கான விடுதலையைப் பெறமுடியும் என்று ராஜ்கெளதமன் இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார். மேற்கத்தைய பெண்ணிய சிந்தனைவாதிககளின் முக்கிய விவாதப்புள்ளிகள் மிக விரிவாக இக்கட்டுரையில் மேற்கோள்களுடன் பேசப்படுதைக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று பாரதியைத் தலித்தியப் பார்வையில் கட்டுடைக்கும் கட்டுரையும் மிக அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது. 'பெண்ணையும், தலித்துக்களையும் முறையே சக்தி, சகோதரர்கள் என்று ஓர்மையாய் மதிக்கின்ற பாரதியே, கோழைத்தனத்தையும், இழிவையும் குறிப்பிடும்போது ஓர்மையின்றி 'பெட்டை', 'புலை' என்று எழுதிவிடுகின்றார் (ப 158). பாரதி தனது காலத்தைய பிற உயர்சாதிக்காரர்களின் சிந்தனைகளில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றாலும் (அதற்கான ஆதாரங்கள் விரிவாக இக்கட்டுரையில் பேசப்படுகின்றன), பாரதி உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மனதார விரும்பியவர் என்பதை எவரும் துளியளவும் சந்தேகிக்கமுடியாது என்கிறார் ராஜ்கெளதமன்.

'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்ற கட்டுரையில் தலித்துக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மூன்று முக்கிய ஆளுமைகளான அண்ணல் அம்பேத்கார், பெரியார் ஈ.வே.ரா, அயோத்திதாச பண்டிதர் பற்றி பேசப்படுகின்றன. அம்பேத்காரும், அயோத்திதாசரும் சாதி ஒழிப்பைப் பற்றி அதிகம் பேசியதாகவும், பெரியார் மத ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் இக்கட்டுரை பேசுகிறது. நாத்திகராய் பலர் மாறினாலும் அவர்களுக்குள்ளும் சாதியக்கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதால் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்காரும், அயோத்திதாசரும் முன் வைத்த சாதி ஒழிப்பே. பெரியார் முன்வைத்த மத ஒழிப்பை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றார் ராஜ்கெளதமன். அதேவேளை மத ஒழிப்பைவிட சாதி ஒழிப்புக்காய்த்தான் நீண்ட பாதையில் மிகவும் கடினமாய் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றார்.

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், அயோத்திதாசர் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிக்குள் முடங்கிப்போனதையும், அம்பேத்கார் -சாதி ஒழிப்புக்கு மட்டுந்தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்றால்- ஏன் அவர் தலித்துக்களை மதங்கள் (பவுத்தம், இஸ்லாம்) மாறச்சொல்லியிருக்கவேண்டும்? அதற்கான பின்னணி என்ன? என்பதைக் கவனப்படுத்தவும் தவறவிட்டு விடுகின்றார் ராஜ்கெளதமன். இன்றைய தலித் விடுதலை என்பது அம்பேத்காரியத்தையும், பெரியாரியத்தையும், மார்க்ஸிசத்தையும் உள்ளடக்கி, ஒன்றின் இடைவெளியை/போதாமையை மற்றொன்றதை வைத்து நிரப்புவதன் மூலம் சாத்தியமாவதற்கான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் அம்பேதகாரையோ, பெரியாரையோ ஒருவருக்கொருவர் தாழ்த்தி -தனிப்பட்ட மனிதர்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்வுக்காய்- அரசியல் செய்யும் வழிமுறைகளை தவிர்த்தல் நன்றாக இருக்கும் போல தோன்றுகின்றது.

மிக விரிவாக எழுதப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்ட) கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானவையோ, அதேபோன்று ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமானவையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், 'சிலுவைராஜ் சரித்திரம்' 'காலச்சுமை' போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இலக்கியத்திலும் தலித் அரசியலிலும் ஈர்ப்புள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஒரு ஆளுமையாக/ வழிகாட்டியாக எழுத்தால் இருக்கக்கூடிய ராஜ்கெளதமனும் -நாளை ஜெயகாந்தனைப் போல-'ஜெய ஜெய' கோசம் பாடிக்கொண்டு பார்ப்பனியத்தில் இரண்டறக்கலந்து நமக்கு ஆசிகளை வழங்காமல் இருந்தால் சரி.


* தமிழக தலித்தும் தலித் இலக்கியமும் என்ற கட்டுரையிலிருந்து...

0 comments: