

தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.
Elanko Dse











அதுபோன்று “பறந்துபோன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்” என்ற கதை பல்குரல் கொண்டதாயும் (polyphony), ஒருவரின் அநுபவம் மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக் கூறப்படுதலால் பல் அடுக்குகள் கொண்டதாயும் (multi-layered narration) அமைந்துள்ளது. Metafiction என்ற உத்தியையும் இக்கதை பயன்படுத்தக் காணலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: லெஸ்பியன் உறவில் இருக்கும் தன் தோழியின் கதையை கேட்டுப் பதிவு செய்யும் கலிஸ்தீனோ ”அவர் [தோழி] கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச்சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளே இருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இது விளிம்புநிலை மனிதர்களுடைய கதைகளைப் பிறர் கூற முனைதலைக் கதைக்குள்ளேயே வைத்து விமர்சிப்பதாகும். கதையின் ஒருபகுதியாகவே இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்
பிந்திய
இரண்டாயிரங்களில் இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து,
வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து
இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ.
கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம்,
பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர்.
தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட
சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை. அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது
சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர்
சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை
ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப்
புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி
வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில்
இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும்
தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும்
சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை
உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப்
பார்க்கவேண்டியிருந்தது.
முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம். மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக் காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான். இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள்.
முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள்.
ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட வாழ்வை வாழ்பவனாகத் தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.
இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க் கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன.
தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை.
இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில் பதின்ம வயதில் மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான்.
தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத உளவியல் நோய்க்கூறுகளையும் சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப் பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது.
தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள் வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.
*******
('அம்ருதா'
ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில்
புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன்
சுருக்கிய எழுத்து வடிவம்)
எழுத்து என்பது ஒருவகையில் எனக்கு
அந்தரங்கமானது. ஆகவே என் அகமனதோடான உரையாடல் என்றும் அதைச்ஃ சொல்லிக் கொள்ளலாம்.
எழுதுவது இதமானது என்றால் நூலைப் பதிப்பிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வு நடத்துவது என்பது போன்றவை
பதற்றத்தைத் தரக்கூடியது. ஒருவகையில் அப்போது மட்டுமே புறவுலகத்தோடு தொடர்பு
கொள்வதால் அது என்னளவில் அவ்வளவு உவப்பானதாக ஒரு செயலாக இருப்பதில்லை.
இதனாலேயே 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான 'தாய்லாந்து' குறுநாவலுக்கு எந்த வெளியீட்டு நிகழ்வையும் செய்யாமல் இருந்தேன். இப்போது 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் அதில் அவ்வளவு ஆர்வங்காட்டாதே இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அது என் நண்பரான தளவாய் சுந்தரத்தின் முயற்சியால், அவர் அப்போது பொறுப்பாக இருந்த 'கயல்கவின்' பதிப்பகத்தால் வெளிவந்தது. என் கெட்டகாலமோ இல்லை தமிழுலகின் நல்லகாலமோ என்னவோ, அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோது 'கயல்கவின்' பதிப்பகமும் மூடும் நிலைக்கு வந்திருந்தது. எனவே அவ்வளவு வெளியில் தெரியாத தொகுதியாக அது போயிருந்தது.
எந்த நூலாயினும் அது தகுதியுள்ளதாயின் காலம் அதற்கென ஓரிடம் வழங்குமென்பதில் நம்பிக்கையுடையவன் நான். இந்த 12 வருடங்களில் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' குறித்து புதியவர்கள் அதை வாசித்து மதிப்புரை எழுதினார்கள். நாஞ்சில் நாடன் போன்றவர்களின் கண்களில்/கரங்களில் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்து, அன்று நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவன் என்றவளவில் விகடன் நேர்காணலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் வாப்பாவுக்கு ஓர் ஆனையிருந்தது' என்று பழங்கதைகள் பேசுவதில் என்ன பயன்? சமகாலத்தில் எம் எழுத்து என்னவாகும் இருக்கும் என்பதை நேரடியாகச் சந்திப்பதுதானே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் முன்னால் இருக்கும் பெரும் சவால்.
ஒருவகையில் நம்மால் தொடர்ந்து இதே வகைமைக்குள் எழுதமுடியுமா என்று நம்மை நாமே கத்தி தீட்டிப் பார்ப்பதற்கான வழிதான் கதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது என்னுடைய வழியாகும். ஆகவேதான் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், அதற்கான விருது/மதிப்பீடுகள் கிடைத்தபோதும், இன்னொரு தொகுப்பை நூலாக்கும் எண்ணம் வரவில்லை. அதற்காக அதன்பிறகு கவிதைகள் அதன்பிறகு எழுதவில்லை என்றல்ல அர்த்தம். ஏற்கனவே எழுத்து அந்தரங்கமானது என்று குறிப்பிட்டதுமாதிரி, எழுதியவை வெளியிடப்படாதவரை அவை என்னோடு அந்தரங்க உரையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லிக் கொள்ளலாம்.
சிறுகதைகளைக் கூட இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவாக எழுதவில்லை. இந்தத் தொகுப்புக்காக எழுதியவற்றிலிருந்து 10 கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆக ஒருவருடத்துக்கு ஒரு கதை கூட எழுதவில்லை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதில் குறையேதுமில்லை, ஆகக்குறைந்தது தேர்ந்தெடுத்து நூலாக ஆக்க 10 கதைகளாகவது இருக்கின்றனவே என்கின்ற நிறைவே இருக்கின்றது.
'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூல்கள் கைகளை அடைந்து மாதங்களாகிவிட்டபோதும், புத்தக வெளியீட்டு நிகழ்வு நடத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. நெருக்கமான சிலர் உந்தித்தள்ளியதால் சரி ஒரு வெளியீட்டு நிகழ்வைச் செய்யலாம் என்று முடிவு செய்தாலும், வழமையான செய்யும் அரங்கிற்கான இடமும் கிடைக்கவில்லை. அரங்கு கிடைத்தபோது கிட்டத்தட்ட 10 நாட்களில் செய்யவேண்டிய நிலைமை. இந்தக் குறுகிய காலத்தில் நூலை வாசித்து கருத்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. மேலும் இங்கு இப்போது இரண்டுமாத பாடசாலை விடுமுறை/கோடைகாலம் என்பதால் எல்லோரும் குடும்பம்/பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.
ஒரளவு வாசிப்பதில் ஆர்வம் இருக்கும் நானே இப்படி யாரேனும் கேட்டால் முடியாது என்றுதான் உடனேயே மறுத்திருப்பேன்.ஆனால் நான் விரும்பிக் கேட்டேன் என்பதற்காக மைதிலி, ஜயகரன், அரசி, செல்வம், இலங்கதாஸ் என அனைத்து நண்பர்களும் குறுகிய காலம் என்கின்றபோது நூலை வாசித்து பேசச் சம்மதித்தார்கள். அவர்கள் இல்லாதுவிடின் இந்த நிகழ்வு நடந்திருக்கவே மாட்டாது.
வழமையான மரபான நிகழ்வில் இருந்து மாற்றவேண்டுமென நிரோஜினியிடம் கதையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டேன். அவர் சம்மதித்தார். அதுபோலவே இம்முறை கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜூவனிட்டா நாதனை அழைத்திருந்தேன். அவர் அரசியல்/சமூக செயற்பாட்டாளாராக இருந்தாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். அண்மையில் தமிழில் முதுமாணி பட்டத்தை இங்குள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தினூடு பெற்றுமிருந்தார். கனடிய நீரோட்டத்தில் மட்டும் கால்பதிக்காது, தமிழ்த்துவத்திலும் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தில் நேரமிருப்பின் நிகழ்வுக்கு வருகை தர அழைத்தேன். அவர் நூலை வெளியிட்டதோடு எனது புதிய இணையத்தளமான www.elankodse.com அறிமுகம் செய்து வைத்தார்.
********
(Jul 25, 2025)
2009 ·இளங்கோ- டிசே by TNB