கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார். Show all posts
Showing posts with label நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார். Show all posts

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' குறித்து..

Saturday, December 20, 2025


விஜிரூபிணியின் முகநூல் பக்கத்திலிருந்து..

Uploaded Image


நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.இலங்கையிலிந்து பறந்து யேர்மனி வந்துள்ளது. திரு இளங்கோவின் எழுத்துருவில் உருவாகிய இந்நூல். தலைப்பை பார்த்ததும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது, அட்டைப்படம் வாஞ்சையை கூட்டியது.அண்மையில் நண்பி ஒருவர் இலங்கை சென்றிருந்தார்,இப்புத்தகம் கிடைத்தால் வாங்கிவரச் சொன்னேன்.இன்று கையில்கிடைத்தது.திரு இளங்கோ அவர்களின் எழுத்துகள் தனித்தன்மையானவை. வாசித்து முடித்ததும் மீண்டும் பகிர்கிறேன்.

(ஆவணி 29,2025)

*
இனிய மாலை வணக்கம்....

தங்களுடைய "நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" முற்றுமுழுதாக வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வைத் தந்தது. கதாபாத்திரங்கள் இன்னும் உயிர்ப்புடன் மனதில் உருவெடுத்தபடி இருக்கின்றன.

Uploaded Image

எவ்வித மிகைப்படுத்தல்களுமின்றிய வர்ணனைகள், யதார்த்தங்களுக்கு  புறம்பில்லாத எழுத்தாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 'முள்ளிவாய்க்கால்' கதை மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. இது கதையல்ல நிஜம். எத்தனை எத்தனை நிஜங்கள் புதைந்து போயுள்ளன.

தாங்கள் எழுத்தாளர். நானோ ஒரு வாசகி மட்டுமே. ஏதோ படித்ததைப்  பகிர்ந்துள்ளேன். ஒரு முறை தாங்கள் எழுதியிருந்தீர்கள் எழுத்துக்கள் உங்களுக்கு அந்தரங்கமானவை என்று. அவ்வாறிருந்தாலும்
தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.

(புரட்டாதி 11, 2025)

***
நன்றி: விஜிரூபிணியின் முகநூல் பக்கம்

 

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'!

Thursday, December 18, 2025

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின்  (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centreஎஇல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக ,  மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது.  'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

Uploaded Image

நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட்  இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார்.  வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரனின் இயக்கத்தில் மேடையேறிய இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 

ஜயகரன் தனது உரையைப் பொதுப்பட வைத்து, மொழி , சிந்தனை பற்றிய தொடர்புகளை மையமாக வைத்தும் , இடையில் இளங்கோவின் கதைகளைக் குறிப்பிட்டும்  ஆற்றினார். முனைவர் மைதிலி  தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசித்ததாகவும், ஆனால் அவற்றில் இரண்டைத்  தவிர்த்து , மிகுதிப் பத்துக் கதைகளை மையமாக வைத்தே உரையாற்றப்போவதாகவும், ஜயகரனைப்போல்  பொதுப்பட்டதாகத் தனது உரை இருக்காதென்றும், விரிவாகவே இருக்கும் என்றும்  குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார். 

அரசி விக்கினேஸ்வரன் , முனைவர்  மைதிலி தயாநிதி தவிர்த்த இரு கதைகளை மையமாகவே வைத்துத் தனது உரை பெரிதும் இருக்குமென்று குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார்.  இறுதியில் வந்த 'காலம்' செல்வம் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வு ததும்பத் தன் உரையினை ஆற்றினார். அவ்வப்போது சபையோரைச் சிரித்துக் குலுங்க வைத்தார். அது மேலும் அவருக்கு உற்சாகம் தரவே மேலும் உத்வேகம் மிக்கவராக அவரது உரை தொடர்ந்தது. அவர் தனது உரையில் புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' சிறுகதையைக் குறிப்பிட்டு, இளங்கோவின் கதைகளிலும் புதுமைப்பித்தனின் கதைகளில் தென்படும் நுட்பங்கள் சில இருப்பதாகச் சிலாகித்தார்.

Uploaded Image

நிகழ்வின் நடுவில், பாராளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் நூலை வெளியிட்டு வைத்ததுடன், எழுத்தாளர் இளங்கோவின் புதிய இணையத்தளத்தையும் அறுமுகம் செய்தார்.  தான் இளங்கோவின் வாசகி என்றார். கூடவே அண்மையில் நடைபெற்றப்  பாராளுமன்றத் தேர்தலில்  தன் நண்பர்களுடன் வந்து ஆதரவு தேடிய இளங்கோவுக்கு நன்றியும் தெரிவித்தார்.  தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை இளங்கோவின் பெற்றோர்,  எழுத்தாளர் தமிழ்நதி, சமூக, அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன், எழுத்தாளர் மணற்காடர் (ராஜாஜி ராஜகோபாலன்), காலம் செல்வம்  உட்படப் பலர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து தலைமை வகித்த இலங்காதாஸ் பத்மநாதன் நூல் பற்றிய தன் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார், முடிவில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், கேட்கும்போதெல்லாம் உணர்வுடன் ஒன்றி ,இழந்த மண் மீதான ஏக்கத்தை உணரவைக்கும் மலையாளத்திலிருந்து  தமிழுக்கு வந்த பாடலான 'அன்றங்கே ஒரு நாடிருந்ததே; அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே' பாடலை உணர்வு பூர்வமாகப் பாடினார் நிரோஜினி றொபேர்ட்.   தொடர்ந்து இளங்கோவின் நன்றி கூறலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

Uploaded Image


நிகழ்வின் இன்னுமொரு முக்கிய அம்சம். எழுநா இதழ்களின் வெளியீட்டுக்கு முக்கிய காரணகர்த்தாவான எழுத்தாளர்  'உரையாடல்' நடராஜா முரளிதரனுக்கு ஒரு மேசை வழங்கப்பட்டிருந்தது. எழுநா இதழ்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  வழக்கமாக இவ்விதமான இலக்கிய நிகழ்வுகளில்  காலம் செல்வத்தின் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் இடம் பெறுவது வழக்கம்.  அவ்விதம் நடக்காததாலோ என்னவோ அவர் நிகழ்வின் முடிவில் பார்க்கிங் லொட்டில் நின்றபடி நூல்களை விற்றுக்கொண்டிருந்தார். அண்மையில் காலநதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரகேசரின் , எழுத்து வெளியீடாக வெளிவந்திருந்த 'வெளியேற்றம்' நாவலின் பிரதியொன்றினையும் கூடவே வாங்கிச் சென்றேன். 

இளங்கோவின் நூலை இன்னும் வாசிக்கவில்லை. அது பற்றி உரையாற்றியவர்கள் தம் உரைகள் காரணமாக அதனை விரைவில் வாசிக்கும் ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. வாசிப்பேன். கருத்துகளையும் பகிர்ந்துகொள்வேன்.

நிகழ்வுக்காட்சிகளை அலெக்ஸ் வர்மா, 'தடயத்தார்' கிருபா கந்தையா ஆகியோர் எடுத்துக்கொண்டிருந்தனர்.  கிருபா கந்தையா நிகழ்வுக் காணொளியையும் எடுத்துக்கொண்டிருந்தார். நானும் சில காட்சிகளை என் அலைபேசிக்குள் அகப்படுத்தி வைத்தேன்.

***
நன்றி: வ.ந.கிரிதரன் முகநூல் பக்கம்

 

சிறுகதைத் தொகுப்பு வெளியீடு குறித்து - தமிழ்நதி

Wednesday, December 17, 2025

 

 
நேற்று (ஜூலை 19, 2025) மாலை, இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பாகிய 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'  வெளியீடு ஸ்காபுரோவில் நடைபெற்றது. பா.அ.ஜெயகரன், அரசி விக்னேஸ்வரன், மைதிலி தயாநிதி, இலங்கதாஸ் பத்மநாதன், செல்வம் அருளானந்தம் ஆகியோர் நூல் குறித்து செறிவாக உரையாற்றினர்.   சிறுகதையொன்றின் ஒரு பகுதியை நிரோஜினி வாசித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன், நூலையும் இளங்கோவின் படைப்புகளைப் பதிவேற்றப்பட்டிருந்த இணையத்தளத்தையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதற் பிரதி நூலாசிரியரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
Uploaded Image

நீண்ட நாட்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.  'காலம்' செல்வத்தார், சிறுகதை நூலைக் குறித்தல்லாமல் இளங்கோவைப் பற்றியே சிரிப்பலைகளினூடே உரையாற்றிக் கொண்டிருந்தார். நான் நெடுந்தூரம் செல்லவேண்டியிருந்த்தால், இருளத் தொடங்கவும் (ஒன்பது மணிக்கு சாவதானமாக இருள்கிறது) இளங்கோவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். 

அதன் பிறகாவது செல்வம் அண்ணா புத்தருக்குள் வந்தாரா அறியேன். ஆனால், உரையினிடையில் என்னைப் பற்றி 'புத்தகப் பிசாசு' என்று அவர் குறிப்பிட்டதாக பிறகு கேள்விப்பட்டேன்.  

Uploaded Image

செல்லவேண்டிய பேருந்தை சில நொடி தாமதத்தால் தவறவிட்டு, நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த என்னை நண்பர் மீராபாரதி வ.க.செ யும் அவரது இணையரும் தமது காரில் ஏற்றிக்கொண்டு வந்து வீடு சேர்த்தனர். நன்றி.

மனவருத்தம் என்னவென்றால், "இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்" என நான் கூறியதை, என்னோடு கதைத்த யாருமே நம்பவில்லை என்பதுதான். 

கேசரியும் வடையும் சுவையாக இருந்தன. கூட்டங்களுக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன ஆதலால் அவற்றைச் சாப்பிட இடைவேளை விடுவார்கள் என்பதை மறந்து இடையிலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன். இனி கவனமாக இருக்கவேண்டும்.

கூட்டம் முடியும்வரை இருந்திருந்தால் நிரோஜினி (Nirojini Robert)  பாடுவதைக் கேட்டிருக்கலாம்.  'மிஸ்' பண்ணிவிட்டேன்.  இளங்கோவின் புத்தகத்தை விரைவில் வாசித்துவிட்டு அதுபற்றி எழுதுகிறேன்.

***

Mr K சிறுகதை குறித்து..

Monday, December 15, 2025

 

கனடாவில் வசிக்கும் எழுத்தாள நண்பர் இளங்கோ  தனது சிறுகதை தொகுப்பான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூலை நண்பர் வடகோவை வரதராஜன் ஊடாக என்னிடம் சேர்ப்பித்திருந்தார். அவருக்கு முதலில் எனது அன்பும் நன்றியும்.

10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. அதில் உள்ள 'Mr.K' என்ற சிறுகதை குறித்த பதிவாக இது அமைகிறது.

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர்களை பாத்திரமாகக் கொண்ட பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு வசதிக்காக அவற்றை நான்கு வகையாக வகைப்படுத்தி நோக்கலாம் எனத் தோன்றுகிறது.

Uploaded Image

1. எழுத்தாளர்களின் குணநலன்களை  விதந்தோதி அவர்களின் சொந்தப் பெயர்களையே பாத்திரமாகச் சித்திரித்து எழுதப்பட்டவை.
2. எழுத்தாளர்களின் குணவியல்புகளை உள்வாங்கி வேறு பெயர்களில் பாத்திரமாக்கி எழுதப்பட்டவை.
3. எழுத்தாளர்களை வசை பாடியோ அல்லது அவர்களது நடத்தைக் கோலங்களை எதிர்மறையாகச் சித்திரித்தோ புனைவுப் பாத்திரமாக எழுதப்பட்டவை.
4. தாம் வாசித்த எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களை தாம் எழுதும் படைப்புக்களில் வரும் பாத்திரங்களோடு ஒப்புநோக்கி எழுதப் பட்டவை.

மேற்படி முதல் இரு வகைகளுக்கும் உதாரணமாக பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றின் சிறுபகுதியை  எடுத்துக் காட்டலாம்.

Uploaded Image


"எல்லா மனிதர்களையும்போலத் தன் குடும்பம், தன்மனைவி, தன் அடையாளம் என வாழ்க்கையை நடத்தாமல் / நடத்த விரும்பாமல் விலகிய பயணத்தைத் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின் கடைசிக்கால வாழ்க்கை முறை பலருக்கும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. கதையாக ஆக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆக்கியிருக்கிறார்கள். சி.மோகனின் 'விலகிய கால்கள்' கதைக்கும் முன்பே நான்கைந்து கதைகளை வாசித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வெளியூர்வாசிகள். பாண்டிச்சேரிக்குப் போன ஜி.நாகராஜனைத் தற்செயலாகப் பார்த்துப் பிரபஞ்சன் தனது கதைக்குள் எழுதிக் காட்டியிருக்கிறார். தன்னைப் பார்ப்பதற்காகவே  நாகர்கோவில் வந்தவரை சுந்தரராமசாமி தனது கதையில் எழுதியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தவரை அசோகமித்திரனும் திலீப்குமாரும் எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனும்கூடக் கொஞ்சம் விலகலோடு தான் எழுதிக் காட்டுகிறார். ஆனால் திலீப்குமாரின் கதைக்குள் அவரை முழுமையாகப் புரிந்துகொண்ட ஓர் இளைஞனின் பார்வையில் நிறுத்தப்படுவார் ஜி. நாகராஜன். இவர்களெல்லோருமே கதைக்குள் தங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டு கதையைச் சொல்லியிருப்பார்கள்.  அவர்களெல்லாம் அவரது வாழ்க்கையைப் போன்றதொரு வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் என்று வாசகர்களுக்கும் முன்வைக்கவில்லை.

ஜி. நாகராஜன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்; அவர் மற்றவர்களைப் போன்ற எழுத்தாளர் அல்லர்; என்னைப்போலவும்கூட அல்ல என்ற தொனி அவற்றில் உண்டு என்று கூறும் கதைகளையே எழுதிக்காட்டி இருக்கிறார்கள். ஆம் அவை கதைகள் தான்; வரலாறல்ல. அக்கதைகளில் எல்லாம் அவர் மட்டுமே உண்மைப் பாத்திரங்கள்.  அல்லது மையப்பாத்திரங்கள். கதைசொல்லிகளாக வரும் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் காட்டிக் கொள்ளாத முன்னிலைப் பாத்திரங்கள் மட்டுமே. அந்தக் கதைகளை வாசிக்கும்போது ஏற்படுவது இரக்க உணர்வு. இன்னும் சில காலம் அவர்  இருந்திருக்கலாம் என்பதான இரக்க உணர்வு"

இதே போன்று புதுமைப்பித்தன், ஆத்மாநாம், ஆதவன் ஆகியோர்களை கதாபாத்திரமாகக் கொண்ட சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாவது வகை கதைகளுக்கு  ஈழத்திலேயே நிறைய உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 2011ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு' அரங்கில் நண்பர்  தேவ முகுந்தன் 'இலக்கியவாதிகளை பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு கட்டுரை வாசித்ததும்  நினைவில் வருகிறது.

Uploaded Image

நான்காவது வகைக்கு உதாரணமாக குந்தவை எழுதிய இரண்டு சிறுகதைகளை எடுத்துக் காட்டலாம்.

"இப்படியான 'ஆண்கள்' எல்லாருமே நீலபத்மனாபனின் 'திரவி' போன்றவர்கள் தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள்"
( 'வீடு நோக்கி' சிறுகதையில்...)

"காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரணமானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன். 'தகழி'யின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே 'தகழி'யும் எழுதியிருக்கிறார்"
( 'யோகம் இருக்கிறது' சிறுகதையில்...)

இந்த நான்கு வகையான சித்திரிப்புகளைத் தாண்டி 'Mr.K' சிறுகதையில் இளங்கோ செக் நாட்டு எழுத்தாளரான காஃப்காவையும் தமிழ் எழுத்தாளரான கோபி கிருஷ்ணனையும் சிறுகதைக்குள் கொண்டு வந்து நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்துள்ளார்.

Mr.K கதையில் வரும் கதைசொல்லி  காதலினால் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இருவேறு சூழ்நிலைகளில் ஆளாகித் தடுமாறும் போது அந்த மனநிலைக்குப் பொருந்தக்கூடிய பிரதிபலிப்புகளை காஃப்காவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடும் அவரின் படைப்புகளின் வாயிலாகவும் ஒப்புநோக்கிச் சித்திரித்து, காஃப்காவை புரிந்து கொள்வதில் ஏற்படும்  விலகலையும் ஏற்பையும் விபரித்து,  நம் இருத்தலிய வாழ்வில் காஃப்கா ஒரு போதும் விலத்திப் போக முடியாதவர் என்றும் காட்டுகின்றார்.

அதற்கு காஃப்காவின் 'பெர்லின் பொம்மை' கதையையும் 'மழை' சிற்றிதழுக்காய் கோபி கிருஷ்ணனை,  யூமா வாசுகி எடுத்த நேர்காணலின் சில பகுதிகளையும் இந்தக் கதையில் பொருத்தமுறக் கையாண்டுள்ளார்.

இந்தக் கதையைப் படித்ததும்  எப்போதோ வாங்கிய சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்த "உலகப் புகழ் பெற்ற கலைஞன் : காஃப்காவின் கடிதங்கள்,கதைகள், கட்டுரைகள்" நூலையும் 'புது எழுத்து' சிற்றிதழ் வெளியிட்ட 'கோபி கிருஷ்ணன்' சிறப்பிதழையும் வாசிக்கத் தூண்டி உள்ளது.

***
 
(Oct, 2025)

 

இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்”-மைதிலி தயாநிதி

Tuesday, December 02, 2025


னடாவில் வாழும் எழுத்தாளரான இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” எனும் சிறுகதைத் தொகுப்பு  சென்னையிலுள்ள  டிஸ்கவரி ப்பளிகேஷன்ஸ்  நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.  இளங்கோவின் எட்டாவது நூலான இது மொத்தம் 142 பக்கங்களிற் பத்துச் சிறுகதைகளைக் கொண்டுள்ளது.  இந்நூல் தொடர்பான இலக்கியப்பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட அறிமுகம் ஒன்றினை வழங்குதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

இத்தொகுப்பினை வாசித்தபோது, எழுத்தாளரின் பின்னணி, நோக்கம் என்பவற்றை விட, அவரின் எழுத்து எவ்வாறு வாசகர் மனதில் அர்த்தங்களை உருவாக்குகிறது என்பது எனக்கு முக்கியமாகத் தெரிந்தது.  குறிப்பாக, இளங்கோ ”உறைந்த நதி”எனும் சிறுகதையின் இறுதியிற் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு கோட்பாட்டாளர் ரோலண்ட் பார்த்ஸின்  (Roland Barthes) "ஆசிரியர் இறந்துவிட்டார்"  (The Death of the Author)  என்ற கருத்துநிலையுடன் எனக்குப் பெரும் இணக்கம் உண்டு.  ”நூலாசிரியர் பற்றிய விடயங்கள் வாசகரின் இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பானவை. எனவே இலக்கியப் படைப்பு எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும் என்பதை ஆசிரியர் பற்றிய செய்திகள்  தீர்மானிக்கக்கூடாது” என்று பார்த் அக்கட்டுரையில் வாதிடுகிறார். இலக்கியப் பிரதியின் அர்த்தம் பிரதியுடனான வாசகர்  தொடர்புகளிலிருந்தே பிறக்கிறது.  எனவே "ஆசிரியர் என்ன சொன்னார்?" என்பதிலிருந்து "பிரதி  என்ன சொல்கிறது?" அல்லது "வாசகர் அதில் என்ன காண்கிறார்?" என்பது நோக்கி இக்கோட்பாடு நம் கவனத்தைத் திருப்புகிறது.

அவ்வகையில், இளங்கோவின் கதைகள் வாசகரின் பங்களிப்பைப் பெரிதும் வேண்டுவன. வாசகர் பிரதியுடன் கொள்ளக்கூடிய ஆழ்ந்த ஈடுபாடு மூலமே இக்கதைகளுக்கான  அர்த்தங்களை அவர்கள் உருவாக்கிக்  கொள்ள முடியும்.  அத்தகைய வாசிப்பு அனுபவங்களை உருவாக்குவதற்குப் பன்முகப்பின்னற்கதைகள் (layered narratives), மேம்பட்ட கதைசொல்லல் உத்திகள் (advanced storytelling techniques) குறியீடும், உருவகமும் (symbolism and metaphor), வேண்டுமென்றே விடப்பட்ட கதை இடைவெளிகளும் மௌனங்களும் (intentional gaps and silences)  போன்ற நுட்பங்கள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன  இவை குறித்த  சுருக்கமான விளக்கங்களை அளிக்கும் அதே சமயம், இக்கட்டுரையைக் கதைகளில் அவதானிக்கக் கூடிய பொதுப்பண்புகளான களப்பின்னணி (setting), பாத்திரங்கள், கருப்பொருட்கள், கையாளப்படும் மொழியின் இயல்பு  என்பவை குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறேன்.
 
இத்தொகுப்பில் காணப்படும் கதைகளின் களங்கள்  வேறுபடுகின்றன. அதற்கேற்ப, அவை பேசும் விடயங்களும் வேறுபடுகின்றன. இலங்கையை மட்டும் நிகழிடமாகக் கொண்ட  மூன்றுகதைகள் வரலாறு, அரசியல், காதல், வன்முறை, துயரநினைவுகள் முதலானவற்றுடன் ஆழமான தொடர்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன.  ஆனால், கனடாவை நிகழிடமாகக் கொண்ட ஐந்து கதைகள் சமூக வரலாற்றுத் துயரங்களை விடுத்துப் புலம்பெயர் வாழ்க்கையில் தனிமனிதர் எதிர்கொள்ளும் தனிமை, அந்நியமயமாதல் (alienation), மனநலச்சிக்கல்கள், பாலியல் நோக்குநிலை (sexual orientation),  வெவ்வேறு இனங்களுக்கிடையிலான  காதலுறவு, தனிநபர் ஆன்மிகம் (personal spirituality)  போன்ற விடயங்களை ஆராய்கின்றன.  தாய்லாந்தை நிகழ்களனாகக்  கொண்ட  ”இயக்கக்காரி”  எனும் கதை அதிர்ச்சி (trauma), நினைவு (memory), பாலின அடிப்படையிலான வன்முறை (gendered violence) ஆகிய கருப்பொருள்களை மையப்படுத்துகிறது. இலங்கையையும் கனடாவையும் நிகழிடங்களாகக் கொண்ட ”கௌரி” எனும் சிறுகதை பதின்மவயதுக் காதல், வன்முறை, புலப்பெயர்வு, போருக்குப் பிந்தைய புலம்பெயர்ந்தோர் அரசியல் என்பவற்றைப் பேசுகிறது.


இக்கதைகளில் தோன்றும் பெரும்பாலான கதைமாந்தர்கள் போர்களால், அரசியல் ஒடுக்குமுறைகளால், மற்றும் பல்விதமான உளச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் போரின் ஆறாவடுவைச் சுமந்து கொண்டு, அதன் பின்விளைவுகளோடு வாழ்பவர்கள். சிலர் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகளாகும் தனிமை, அந்நியப்படுகை, அடையாளச் சிக்கல் போன்றவற்றால் தவிப்பவர்கள் . எடுத்துக்காட்டாக, மனநோய்கள் தரக்கூடிய சவால்கள், தனிமை ஆகியவற்றின் தீர்க்கப்படாத சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் “ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதை இலக்கியத்தில்  அதிகம் பேசப்படாத ஒரு தனிநபருக்காகக் குரல் கொடுப்பதைக் காண்கிறோம். தனது பாலியல் நோக்குநிலையை வெளிப்படுத்த முடியாத பெண்ணும், பிள்ளைப்பருவப் பாலியல் அத்துமீறல்களினால் பாதிப்புற்ற பெண்ணும் இத்தொகுப்பில்  இடம் பெறுகின்றனர்.  சமூகத்துடன் பூரணமாக ஒன்றிணைய முடியாத நிலையில் உள்ள, ஒருவித மன வெறுமையுடன் வாழும் இவர்களை விளிம்புநிலை மனிதர்கள் (marginalized) என்று கூறலாம்.

மேலும், இத்தொகுப்பு உளரீதியான பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்  முக்கியத்துவம் அளித்திருக்கக் காணலாம்.   இப்பிரச்சினைகளை  (அ) உளவடு ((trauma) மற்றும் (ஆ) உளவியல் நோய்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாட்டை இலக்கிய வாசகர் என்ற ரீதியில் செய்கிறேனே தவிர உளவியலாளர் நிலைமையில் இருந்தன்று என்பதைக் கவனிக்கவும்.  “இயக்கக்காரி” எனும் கதையில், இளம் வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான கதாநாயகியின் மனரீதியான பெரும்பாதிப்பு வெளிப்படுகிறது.
அதேபோல், ”வெள்ளவாய்க்கால் வைரவர்” கதையில், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறுவனின் உளவியற் பாதிப்பு மிக யதார்த்தமாகக் காட்டப்படுகிறது. இதைவிட, தனிமையால் பாதிக்கப்பட்ட மற்றும் நீடித்த உளவியல் சிக்கல்களால் தவிக்கும் கதாபாத்திரங்களையும் சில கதைகள் முன்வைக்கின்றன. 
 
”ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதையில், bipolar disorder கொண்ட ஒரு பாத்திரத்தைச் சந்திக்கிறோம். ”உறைந்த நதி” எனும் கதையில், தன்னுடைய பண்பாட்டுக்கு அந்நியமான ஒரு பெண்ணைக் காதலித்து, அந்த உறவின் முறிவால் உளவியற் சிதைவுக்குள்ளாகும் ( psychological breakdown) கதாபாத்திரம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அதேசமயம் நவீன வாழ்க்கை இருத்தலியத்தில் உணரப்படும் தவிர்க்கமுடியாத தனிமை  (inescapable loneliness), அந்நியமாதல்  (alienation) என்பவற்றைப் புலம்பெயர் சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை ”Mr. K” , ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” போன்ற கதைகளும் உணர்த்துகின்றன.

பொதுவாக, இந்தக் கதைகள் பாலுணர்வை நுட்பமாகக் ககையாளுகின்றன. இது வெறும் உடல் ரீதியான செயல் என்பதைத் தாண்டி, ஆழ்ந்த உளவியல், இருத்தலியல் என்பவற்றின் பரிமாண வெளிப்பாடாகவே கதைகளில் சித்திரிக்கப்படுகிறது. உதாரணமாக, ”ஏகாந்தம்  என்பதும் உனது பெயர்” எனும் கதையில் bipolar disorder ஆல் பாதிக்கப்பட்ட பாத்திரத்தின்  எதிர்பாராத விதமாக மாறக்கூடிய உளநிலைகள் , நிலையான உறவுகள் உருவாகுவதைச் சிக்கலாக்குகின்றன. அதே சமயம். குறிப்பிட்ட மனச்சூழலில் பாலியல் நெருக்கமானது  தற்காலிகமாக இருந்தாலும் கூட, சுயத்தினை உறுதிப்படுத்துவதாக அமையக் காணலாம். அதே போன்று ”Mr. K” கதையில் Kafka இன் நூல்களில் ஈடுபாடு கொண்ட இளைஞனுக்கும், அவன் காதலிக்குமிடையில் உள்ள உடல்ரீதியான நெருக்கம் குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. இது  உடல் ரீதியான நெருக்கத்தின் மூலம் ஒருவித இருத்தலியல் அடித்தளத்தை அவன் கண்டறிகிறான் என்பதைக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக “நான் உன்னை முத்தமிட்டபோது புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” என்ற கதையில், பாலியல் உறவு  தாந்திரிக பௌத்தத்தின் அடிப்படையில் இருத்தலிய விடுதலைக்கான, ஆன்மிக மீட்சிக்கான  வழியாகச் சித்திரிக்கப்படுகின்றது.  புத்தரின் புன்னகையுடன் முத்தத்தை இணைப்பது - சரீர இணைப்புக்கும் ஆன்மிக விழிப்புணர்வுக்கும் இடையிலான ஒரு சந்திப்புப் புள்ளியைக் குறிக்கிறது. சிற்றின்பமும் புனிதமும் ஒன்றையொன்று தொடும் புள்ளியை நோக்கிக் கதை நகர்கிறது. அத் தொடர்பு ஏற்பட்ட தருணம் விடுதலையை உணர்தலின் தருணமாக மாறுகிறது. அது “ என்னிலிருந்து எனது நானை விடுவித்துக்கொண்ட சுதந்திரம்”  ஆகும். இருத்தலிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞன் கண்டு அடைந்த விடுதலை இது.  இலங்கையைக் களமாகக் கொண்ட”முள்ளிவாய்க்கால்”, ”கௌரி” எனும் கதைகளில் இடம் பெறும் பதின்மவயதுக் காதற் சித்திரிப்பை மேற்கூறியவற்றுடன் ஒப்பிட்டுப்  பார்க்கலாம்.

த் தொகுப்பிலுள்ள கதைகளில் நிகழ்வுகளோ, பாத்திரங்களோ இலட்சியமயப்படுத்தப்படுவது (romanticization) தவிர்க்கப்படுகிறது. இதனால் கதைகளின் எழுத்துநடை, பெரும்பாலும்,  புறவயமானதாயும் உணர்ச்சிகளை எழுப்பாததாயும் அமைகிறது. கதைசொல்லி தன் சொந்த நினைவுகளை, அனுபவங்களை அமைதியாக ஆவணப்படுத்துவது போன்றதொரு யதார்த்தமான நடை இங்கு காணப்படுகின்றது. பேச்சுத்தமிழ்ப் பிரயோகமோ அல்லது ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களோ இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் நியமத் தமிழே (standard Tamil) பயன்படுத்தப்பட்டுள்ளது.  

அது அவ்வப்போது புனைவுக்கும் அல்புனைவுக்கும் (non-fiction) இடையிலான எல்லையைத்  தெளிவற்றதாக்குகிறது. எனினும், நான் கூறுவது எல்லாக்கதைகளுக்குக்கும் பொருந்தும் என்றும் சொல்ல முடியாது.  எடுத்துக்காட்டாக,  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ” என்ற கதையிலும் ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” என்ற கதையிலும் இந்த ஆவணத் தமிழ் நடையின் நெகிழ்வுத்தன்மையை அவதானிக்கலாம்.  ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ”  என்ற கதையில் மொழியானது  உணர்ச்சி நிறைந்ததாய் சரளமாகவும், இயல்பாகவும், தெளிவாகவும் நீரோடை போலச் செல்கிறது. ”வெள்ளவாய்க்கால் வைரவர் ” கதையில் மூத்தண்ணையின் பாத்திர வர்ணனை ஓர் ஓவியம் போன்று வாசகர் மனதில் படிகிறது.

அத்துடன், குறியீட்டு வலுக் கொண்ட ஆழமான மொழியும் இங்கு உண்டு. எடுத்துக்காட்டாக, ”உறைந்த நதி” என்ற கதையில் இடம்பெறும் வலை என்ற குறியீட்டு பிம்பம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடலாம்.
”வலை, வலை, வலை. எல்லாமே வலையாகத் தெரிந்து கொண்டிருந்து. சிலவேளைகளில் தானே ஒரு வலையாக ஆகிக்கொண்டிருக்கின்றேனோ  என்ற எண்ணம் அவனுக்குள்ளும் எழுந்து கொண்டிருந்தது.  ஒரு வலையை அகற்ற இன்னொரு வலை; அந்த இன்னொரு வலையை அகற்ற  இன்னுமின்னுமாக நிறைய வலைகள். வலைகளை மீன்கள் மட்டுமில்லை மனிதர்களுந்தான் விரும்புவதில்லை. சிலந்தி வகைகளில் ஏதோவொரு சிலந்தியினம் தனது வலையிற் தானே மாட்டித் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரோ எழுதியிருந்ததை வாசித்தது அவனது நினைவலைகளில் வந்து போயிற்று.” (பக்கம் 121)

இது ஒரு வலுவான உளவியற் சித்திரம் ஆகும். விடுதலைக்கான ஒவ்வொரு முயற்சியும் மற்றொரு வடிவிலான கட்டுப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது  என்ற கருத்தினை மையமாகக் கொண்டது. ‘வலை’ என்ற குறியீடு, உளவியற் சிக்கல்களில் சிக்கி, விடுதலை ஒருபோதும் சாத்தியமற்றது என எண்ணும் பாத்திரத்தின் நம்பிக்கை குலைந்த நிலையை வர்ணிக்கிறது.  அத்துடன், சிலந்தியானது தான் பின்னிய சொந்த வலையிலேயே சிக்கி அழிந்து போவது பற்றிய குறிப்பு,  கதையின் இறுதியில் வரும் பாத்திரத்தின் தற்கொலையினை முன்கூட்டியே சூசகமாக உணர்த்துவதாக உள்ளது (foreshadowing). இவ்வர்ணனை இடம்பெறும் “உறைந்த நதி” என்ற தலைப்பே மனச்சிதைவுக்கு ஆளாகிக் கொண்டு செல்லும் பாத்திரத்தின் உளப்பிரச்சினையைக் குறிப்பாகச் சுட்டும் உளவியல் உருவகமாகும்.  உறைநிலையிலுள்ள நதியின் உட்புறத்தே மறைந்திருக்கும் பதற்றம் கதையின் இறுதியில் வன்முறையாக வெடிப்பதைக் காணலாம். 

அடுத்து, இத்தொகுப்பில் காணப்படும் சில கதைசொல்லல் உத்திகள் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிடல் வேண்டும். சிறுகதையின் ஆழத்தை மேம்படுத்துவதற்காக ஊடுபனுவலாக்கம் (inter-textuality) என்ற உத்தி பயன்படுத்தப்படுவதுண்டு. இது பெரும்பாலும் குறிப்புகள், ஒப்புமைகள் அல்லது நேரடி மேற்கோள்கள் மூலம் நிகழும். இத்தொகுப்பிலுள்ள “Mr. K”
 எனும் கதை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இங்கு Kafka எழுதிய நூல்களும், அவரது கருத்துகள் பற்றிய குறிப்புகளும், அவர் எழுதிய ”பெர்லின் பொம்மை” என்ற கதையும் , எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் நேர்காணலின் சில பகுதிகளும் காணப்படுகின்றன.  இவை  “Mr. K” எனும் கதையின் கருப்பொருட்களை மேம்படுத்துவதுடன், கதையில் நேரடியாகக் கூறப்படாத விடயங்களை உய்த்துணர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. 
Uploaded Image

 

அதுபோன்று “பறந்துபோன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்” என்ற கதை  பல்குரல் கொண்டதாயும் (polyphony), ஒருவரின் அநுபவம் மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக் கூறப்படுதலால் பல் அடுக்குகள் கொண்டதாயும் (multi-layered narration) அமைந்துள்ளது. Metafiction என்ற உத்தியையும் இக்கதை பயன்படுத்தக் காணலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: லெஸ்பியன் உறவில் இருக்கும் தன் தோழியின் கதையை கேட்டுப் பதிவு செய்யும் கலிஸ்தீனோ ”அவர் [தோழி] கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச்சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளே இருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இது விளிம்புநிலை மனிதர்களுடைய கதைகளைப் பிறர் கூற முனைதலைக் கதைக்குள்ளேயே வைத்து விமர்சிப்பதாகும். கதையின் ஒருபகுதியாகவே இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், விடுபடுதல் (Omission) என்பது  ஒரு கதை சொல்லும் உத்தியாகக் கருதப்படலாம் என்பதற்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற கதையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  அதாவது கதையிற் சேர்க்கப்பட்டவை போன்று விடுபட்டவையும் அர்த்தமுடையதாக இருக்கும் பட்சத்தில் விடுபடுதல் என்பது கதைசொல்லல் செயற்பாட்டில் ஆற்றல் மிக்க கருவியாக அமைந்துவிடுகிறது. ”முள்ளிவாய்க்கால்” என்ற கதை காணாமலாக்கப்பட்ட போராளி ஒருவரின் காதற் கதை. தமிழீழ இலட்சியத்தை விட அதிகமாகத் தன்னையே தனது காதலன் நேசித்தான் என்று நம்பும் ஓர் இளம் பெண்ணின் கதையும் கூட.  பெரும் அரசியல் கதையாடல்களை ஓரங்கட்டும் காதற்கதை இது.  உள்ளார்ந்தமான காதற்கதைகள் முள்ளிவாய்க்கால் தொடர்பான  அரசியற் பெருங்கதையாடல்களுக்குள்ளே காணாமல் போய்விடுகின்றன என்பதை இக்கதை உணர்த்துகிறது.  தனிநபர் துயரங்களைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பதையும் இது  நுட்பமாக எதிர்க்கிறது.

அதேசமயம் இக்கதையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடுமைகள் விவரிக்கப்படவே இல்லை. அந்தப் பெண் அக்கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறாள், அதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரும் அவை பற்றிக் கேட்கவில்லை.  ஒரு போராளி காணாமல் ஆக்கப்பட்டான் என்பது எண்ணற்ற உயிர்கள் அழிக்கப்பட்டமைக்கும், பலர் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமான பெருங்குறியீடாக விளங்குகிறது என்றே நான் கருதுகிறேன்.  இந்தக் கதை என்ன சொல்கிறது என்பதை விட, இது சொல்லாமல் விட்டவை தொடர்பான நினைவுகளே மனதைக் கனக்க வைக்கின்றன.  பிரதியின் இந்த மௌனம் மொழியாற் பேசவொணொத வலிகளைப் பிரதிபலிக்கிறது.

கதைகளைப்,  பொதுவாக சம்பவங்களை மையமாகக் கொண்ட கதைகள் (action-driven), பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் (character-driven) என வகுப்பது வழக்கம்.   ஆனால்  தொகுப்பில் உள்ள கதைகளை இந்த இருமுனைப் பாகுபாடுகளுக்குள் உள்ளடக்குவது என்பது கடினம். பொதுவாக, இக்கதைகளைக் கருப்பொருட்களை மையமாகக்  கொண்டெழுந்த கதைகள் ((theme- driven) எனலாம். எனினும் பாத்திரச்சிறப்பு மேவிய கதை   (charcater -driven) என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அரசியல், போர் வன்முறை, சமயம், ஆன்மிகம் , நாட்டுப்புற மரபுகள்,  மனவடு, தற்கொலை எனப் பல்வேறு கூறுகள் ஒன்று சேரும் ”வெள்ளவாய்க்கால் வைரவர்” என்ற கதையைக் கூறலாம்.  ஒரு சிறுவன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதையில் மூத்தண்ணையின் உருவமும், குணாதிசயங்களும், செயற்பாடுகளும் மிக்க சுவாரஸ்யமாக விவரிக்கப்படுக்கின்றன. நீதியையும் காவலையும் பிரதிபலிக்கும் வைரவருடன் மூத்தண்ணை கதையில் ஒன்றுபடுத்தப்படுகிறார். வன்முறை சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் காட்டும் நல்லதொரு சிறுகதை இது.. இக்கதையில் இடம் பெறும் சிறுவனின் அம்மா பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.. பௌதிக உலகம், ஆன்மிக உலகம் இரண்டினையும் இணைப்பவளாய் அவள் திகழ்கிறாள். ஆன்மிக உலகின் பிரதிநிதியான மூத்தண்ணையைச் சோறிட்டுக் காப்பவளாகவும், இறுதியில் மகனைத் தற்கொலையினின்று காப்பவளாகவும் அவள் விளங்குகிறாள்.

நிறைவாக, இக்கதைகள் குறிப்பிடத்தக்க இலக்கிய நேர்த்தியுடனும் நுட்பத்துடனும் எழுதப்பட்டுள்ளன. இவை  நேரடியான, உணர்ச்சிபூர்வமான மொழியில் சொல்லப்படும் கதைகளுக்குப் பழக்கப்பட்ட தமிழ் வாசகர்களின் வாசிப்பு அநுபவத்தை விரிவாக்க விழைகின்றன. சில கதைகள் முதலில் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தக் குழப்பம் (ambiguity ) வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்று, தலைப்புகள், பெரும்பாலும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் கதைகள் எளிதான தீர்வுகளைத் தர மறுக்கின்றன. அறரீதியான மதிப்பீடுகளுடன் இக்கதைகளை வாசித்தல் சாத்தியமில்லை. ஏனெனில் அவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ”உண்மைகளுக்கான” மாற்றுப் பார்வைகளை முன்வைக்க, அல்லது அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த முனைகின்றன. சுருங்கச் சொல்லின், நம்மை வெறுமனே வாசித்தற் செயற்பாட்டிற்கு அப்பால், மனத்தடைகள் இன்றி, ஆழமாகச் சிந்திக்க தூண்டுகின்றன.

*****

(நன்றி: 'கலைமுகம்' - அமுத மலர் (80)


 

இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'

Friday, October 17, 2025

நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்


பிந்திய இரண்டாயிரங்களில்   இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து, வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ. கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம், பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர். தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை.  அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.  புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது. 


இந்தப் புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது.


முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான  இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. 


புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும்  ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம்.   மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும்  என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக்  காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான்.  இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள். 


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள். 


ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட  வாழ்வை வாழ்பவனாகத்  தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.


இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க்  கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன. 



தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு  சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை. 


"வெள்ளவாய்க்கால் வைரவர்" என்னும் இன்னொரு கதை இந்திய இராணுவக் காலத்தில் அமைந்து, ஒரு சிறுவனைக் கதைசொல்லியாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுவது போல் அநேகமான இடகங்களில் இருந்தாலும் சில இடங்களில் அவன் வளர்ந்தபின் சொல்வதுபோல, இளங்கோவின் வழமையான கதைசொல்லி எட்டிப்பார்க்கும் இடங்களில் அமைகிறது. இந்தக் கதையும் காவல் தெய்வமான வைரவரைக் கூடக் காக்க முடியாத, அநியாயங்கள் நடப்பதை பார்த்தும் மௌனியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் ஆற்றாமையையம் அது ஏற்படுத்தக்கூடிய ஆழமான மனவடுவினையும் துலக்குகிறது. 


இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில்  பதின்ம வயதில்  மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி  கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான். 


தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத  உளவியல் நோய்க்கூறுகளையும்  சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப்  பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது. 


தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள்  வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை  என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.

 

*******


('அம்ருதா' ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன் சுருக்கிய எழுத்து வடிவம்)


சிறுகதைத் தொகுப்பு நிகழ்வு குறித்து..

Tuesday, August 19, 2025


ழுத்து என்பது ஒருவகையில் எனக்கு அந்தரங்கமானது. ஆகவே என் அகமனதோடான உரையாடல் என்றும் அதைச்ஃ சொல்லிக் கொள்ளலாம். எழுதுவது இதமானது என்றால் நூலைப் பதிப்பிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வு நடத்துவது என்பது போன்றவை பதற்றத்தைத் தரக்கூடியது. ஒருவகையில் அப்போது மட்டுமே புறவுலகத்தோடு தொடர்பு கொள்வதால் அது என்னளவில் அவ்வளவு உவப்பானதாக ஒரு செயலாக இருப்பதில்லை.

 

இதனாலேயே 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான 'தாய்லாந்து' குறுநாவலுக்கு எந்த வெளியீட்டு நிகழ்வையும் செய்யாமல் இருந்தேன். இப்போது 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் அதில் அவ்வளவு ஆர்வங்காட்டாதே இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அது என் நண்பரான தளவாய் சுந்தரத்தின் முயற்சியால், அவர் அப்போது பொறுப்பாக இருந்த 'கயல்கவின்' பதிப்பகத்தால் வெளிவந்தது. என் கெட்டகாலமோ இல்லை தமிழுலகின் நல்லகாலமோ என்னவோ, அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோது 'கயல்கவின்' பதிப்பகமும் மூடும் நிலைக்கு வந்திருந்தது. எனவே அவ்வளவு வெளியில் தெரியாத தொகுதியாக அது போயிருந்தது.

 

எந்த நூலாயினும் அது தகுதியுள்ளதாயின் காலம் அதற்கென ஓரிடம் வழங்குமென்பதில் நம்பிக்கையுடையவன் நான். இந்த 12 வருடங்களில் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' குறித்து புதியவர்கள் அதை வாசித்து மதிப்புரை எழுதினார்கள். நாஞ்சில் நாடன் போன்றவர்களின் கண்களில்/கரங்களில் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்து, அன்று நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவன் என்றவளவில் விகடன் நேர்காணலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் வாப்பாவுக்கு ஓர் ஆனையிருந்தது' என்று பழங்கதைகள் பேசுவதில் என்ன பயன்? சமகாலத்தில் எம் எழுத்து என்னவாகும் இருக்கும் என்பதை நேரடியாகச் சந்திப்பதுதானே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் முன்னால் இருக்கும் பெரும் சவால்.

 

ஒருவகையில் நம்மால் தொடர்ந்து இதே வகைமைக்குள் எழுதமுடியுமா என்று நம்மை நாமே கத்தி தீட்டிப் பார்ப்பதற்கான வழிதான் கதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது என்னுடைய வழியாகும். ஆகவேதான் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், அதற்கான விருது/மதிப்பீடுகள் கிடைத்தபோதும், இன்னொரு தொகுப்பை நூலாக்கும் எண்ணம் வரவில்லை. அதற்காக அதன்பிறகு கவிதைகள் அதன்பிறகு எழுதவில்லை என்றல்ல அர்த்தம். ஏற்கனவே எழுத்து அந்தரங்கமானது என்று குறிப்பிட்டதுமாதிரி, எழுதியவை வெளியிடப்படாதவரை அவை என்னோடு அந்தரங்க உரையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

சிறுகதைகளைக் கூட இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவாக எழுதவில்லை. இந்தத் தொகுப்புக்காக எழுதியவற்றிலிருந்து 10 கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆக ஒருவருடத்துக்கு ஒரு கதை கூட எழுதவில்லை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதில் குறையேதுமில்லை, ஆகக்குறைந்தது தேர்ந்தெடுத்து நூலாக ஆக்க 10 கதைகளாகவது இருக்கின்றனவே என்கின்ற நிறைவே இருக்கின்றது.

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூல்கள் கைகளை அடைந்து மாதங்களாகிவிட்டபோதும், புத்தக வெளியீட்டு நிகழ்வு நடத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. நெருக்கமான சிலர் உந்தித்தள்ளியதால் சரி ஒரு வெளியீட்டு நிகழ்வைச் செய்யலாம் என்று முடிவு செய்தாலும், வழமையான செய்யும் அரங்கிற்கான இடமும் கிடைக்கவில்லை. அரங்கு கிடைத்தபோது கிட்டத்தட்ட 10 நாட்களில் செய்யவேண்டிய நிலைமை. இந்தக் குறுகிய காலத்தில் நூலை வாசித்து கருத்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. மேலும் இங்கு இப்போது இரண்டுமாத பாடசாலை விடுமுறை/கோடைகாலம் என்பதால் எல்லோரும் குடும்பம்/பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.

 

ஒரளவு வாசிப்பதில் ஆர்வம் இருக்கும் நானே இப்படி யாரேனும் கேட்டால் முடியாது என்றுதான் உடனேயே மறுத்திருப்பேன்.ஆனால் நான் விரும்பிக் கேட்டேன் என்பதற்காக மைதிலி, ஜயகரன், அரசி, செல்வம், இலங்கதாஸ் என அனைத்து நண்பர்களும் குறுகிய காலம் என்கின்றபோது நூலை வாசித்து பேசச் சம்மதித்தார்கள். அவர்கள் இல்லாதுவிடின் இந்த நிகழ்வு நடந்திருக்கவே மாட்டாது.

 

வழமையான மரபான நிகழ்வில் இருந்து மாற்றவேண்டுமென நிரோஜினியிடம் கதையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டேன். அவர் சம்மதித்தார். அதுபோலவே இம்முறை கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜூவனிட்டா நாதனை அழைத்திருந்தேன். அவர் அரசியல்/சமூக செயற்பாட்டாளாராக இருந்தாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். அண்மையில் தமிழில் முதுமாணி பட்டத்தை இங்குள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தினூடு பெற்றுமிருந்தார். கனடிய நீரோட்டத்தில் மட்டும் கால்பதிக்காது, தமிழ்த்துவத்திலும் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தில் நேரமிருப்பின் நிகழ்வுக்கு வருகை தர அழைத்தேன். அவர் நூலை வெளியிட்டதோடு எனது புதிய இணையத்தளமான www.elankodse.com  அறிமுகம் செய்து வைத்தார்.

 

********

 

 (Jul 25, 2025)