கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலமற்ற வெளியில் மிதந்தபடியிருக்கும் முத்தங்கள்

Wednesday, July 02, 2014

ரான் பாமுக் இன்னமும் திறக்காத அப்பாவின் சூட்கேஸை உற்றுப்பார்த்தபடி இருக்கின்றார். அதில் பிரியங்கள் இருக்கின்றதா அல்லது கடக்கமுடியாத் துயரங்கள் இருக்கின்றதா என்கின்ற பதற்றங்களுடன் 'அப்பாவின் சூட்கேஸை'ப் பற்றி தன் நோபல் பரிசு உரையை அவர் நிகழ்த்துகின்றார். தனது இருபதுகளில் ஓர் எழுத்தாளனாய் வரவேண்டுமென விரும்பி எல்லாவற்றையும் உதறித்தள்ளி -நான்கு வருடங்கள் செலவழித்து- முதல் நாவலை எழுதியபோது எந்த மனோநிலையில் ஓரான் இருந்திருப்பார். 'எனது பெயர் சிவப்பில்' வரும் நுண்ணோவியர்களில் ஒளிந்திருப்பது ஓவியராக வரவிரும்பி தோற்றுப்போன இன்னொரு ஓரான் தானா?

ஒரானின் அப்பா மகன் வாசிப்பதற்காய், இதுவரை காலமும் தான் எழுதியவற்றைத் தன் சூட்கேஸிற்குள் போட்டு கொடுத்துவிட்டுப் போகின்றார். ஒரானின் தகப்பனாரும் ஒருகாலத்தில் கவிஞனாக வர விரும்பி தன் முயற்சியில் தோற்றுப் போனவர். நினைத்தபோதெல்லாம் ஓரானையும் தன் குடும்பத்தையும் விட்டுவிட்டு பாரிஸிற்கும் அமெரிக்காவிற்கும் பயணமாகிக்கொண்டிருந்தவர். இந்தப் பயணங்கள் தான் விரும்பியதை எழுதுவதற்கான சூழலையும், காலத்தையும் தருமென நம்பி அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தவர். அப்பாவை நினைவு கொள்ளும் ஓரான்,  ஓர் எழுத்தாளராக அப்பா வர முடியாவிட்டாலும் தனது வாழ்க்கையை நண்பர்களோடும் குடும்பத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு மறைந்து போயிருக்கின்றார் எனக் குறிப்பிடுகின்றார். தன்னால் தனது தந்தையைப் போல உற்சாகமாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கையை எதிர்நோக்க முடியவில்லை என்பதைத்தான் மறைமுகமாக அப்பாவை நினைவுகூர்வதன் மூலமாக ஓரான் சொல்ல வருகின்றாரா?

எழுதுபவர்களெல்லாம் தம்மை எவரும் தொந்தரவுபடுத்தாத ஓர் அறையில் தனித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் தனித்திருக்கும் கொஞ்ச நேரத்திலேயே தங்களால் மனிதர்கள் அருகில் இல்லாமல் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதும் அவர்களுக்குப் புரிந்துவிடுகின்றது. காதல் வேண்டாம் என வரும் உறவுகளை உதறித்தள்ளிவிட்டு, தனித்திருக்கும்போது காதல் தங்கள் கதவைத் தட்டாதா என எதிர்பார்க்கும் சாதாரண மனிதர்களின் மனதுதான் இந்த எழுத்தாளர்களுக்கு உரித்தானதோ?

சல்மான் ருஷ்டி முதல் நாவல் வெளியிட்டு வந்த 700 பவுண்ட்ஸோடு இந்தியாவைச் சுற்றியலைகிறார். அந்தப் பொழுதில் முளைத்ததே 'நள்ளிரவின் குழந்தைகளை' எழுதும் யோசனை. மீண்டும் இங்கிலாந்து திரும்பும்போது அவரிடம் பணமேயில்லை. ஒரு விளம்பரக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறார். ஒருகட்டத்தில் எழுதுவதே முக்கியமென வேலையை உதறித்தள்ளும்போது நிறுவன அதிபர் 'ஊதியத்தை இன்னும் உயர்த்துகிறேன், வேலையில் இரு' என்கிறார்.  பணத்திற்காக அல்ல, எழுதுவதற்காகவே வேலையை விடுகிறேன் என  ருஷ்டி கூறுகின்றபோது, அந்த நிறுவன அதிபர் இவன் பிழைக்கத்தெரியாதவன் என்றுகூட நினைத்திருக்கலாம்.

எழுத்தாளர்கள் எப்போதும் பித்துப்பிடித்தவர்கள் போலும். எதற்காய் இவர்கள் இப்படியான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை விளங்கிக்கொள்வதே கடினமானதுதான். மேலும் எந்த நாட்டில் எழுத்தாளர்கள் இருந்தாலும், தம்மை வாசிக்காத மதிக்காத ஒரு நாட்டில்/சமூகத்தில் தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என அநேகர் கவலைப்படவும் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் அறியாத தேசத்திலிருந்து, தினந்தோறும் புதுப்புது வாசகர்களை அவர்களை வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிவதில்லை.

மொழியை, கலாசாரத்தை, நாடுகளின் எல்லைகளைத்தாண்டி ஒவ்வொரு படைப்பும் எங்கோ தொலைவிலிருக்கும் பல்லாயிரம் வாசகர்களைத் தீண்டிக்கொள்ள அல்லவா செய்கிறது? அந்த வாசகர்கள் இவர் எங்கள் எழுத்தாளரென கோப்பிக்கடைகளிலும், வீட்டு வரவேற்பறைகளிலும் விவாதிக்கொண்டல்லவா இருக்கின்றார்கள். பெயர் தெரியாத தேசமொன்றில் ஒரு வாசகர் ஒரு பிரதியைக் கொண்டாடுகின்றபோது எழுத்தாளர்கள் தம் மொழியை/பண்பாட்டை/கதை நிகழும் புதிய நிலப்பரப்பை அறிமுகப்படுத்தும் பெரும்பணியை தெரிந்தோ தெரியாமலோ செய்தும் விடுகின்றார்கள்.
கலாச்சாரங்களையும், தேசங்களின் எல்லைகளையும் தாண்டி மனிதர்களுக்குள் இருக்கும் நுண்ணுணர்வுகளோடு ஒவ்வோர் படைப்பும் உரையாடுகிறதல்லவா? சிலவேளைகளில் அருகிலிருக்கும் மனிதர்களை விட தூரதேசத்திலிருக்கும் ஓர் எழுத்தாளரோடு நாம் அதிகம் நேசம் கொள்கின்றோமல்லவா? நாமெல்லோருந்தான் ஈற்றில் தூசுகளைப் போல இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்துவிடப் போகின்றோம். ஆனால் எழுதுபவர்கள் நம் ஆன்மாவைத் தீண்டும்போது அவர்களின் நினைவுகளுமல்லவா நம்மோடு கலந்துவிடுகிறது?  .

ஆனால் அவர்களின் வாழ்வு சந்தோசமாய் இருந்ததா?  காலம் முழுதும் துயரில் தோய்ந்தொழுகிய வாழ்க்கையை அல்லவா தாஸ்தவேஸ்கி வாழ்ந்திருகின்றார். நறுக்கான சொற்களில் கதைகளைச் சொல்லிய ரேமண்ட் காவருக்கோ, புதுமைப்பித்தனுக்கோ அவர்கள் விரும்பிய வாழ்வு கிடைத்ததா? பீடில்ஸ் கலாசாரத்தில் முக்கியமானவரும், பயணிப்பதையே வாழ்வின் உன்னதமாய்க்கொண்டவருமான ஜாக் கீரோவிற் (Jack Kerouac) ஏன் அத்தனை இளமையில் இறந்து போகின்றார்?  ஜாக்கைப் போல தன்னையே பிரதிகளில் சிதைத்துப் பார்த்த ரோபார்ட் பாலானோவை (Robert Bolano)  அவர் வாழ்ந்த காலத்தில் யார் கண்டுகொண்டார்கள்?

ருவகையில் இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த அந்தக் கணத்தில் வாழ முயற்சித்திருப்பார்களோ போலத் தோன்றுகிறது. நம்மைப் போல என்றுமே வரமுடியாத ஒரு பொற்காலத்திற்காய்க் காத்திருக்கவில்லைப் போலும். இல்லாவிட்டால் அவர்கள் தம் கனவுகளைப் பெருக்கி பெருக்கி எதையும் எழுதாமற் போயிருக்கக்கூடும். அவர்கள் அந்தக் கணத்திலே வாழமுடிந்ததால் தான், தாம் விரும்பியதைச் செய்திருக்கின்றார்கள். மகிழ வேண்டிய கணத்தில் மலர்ந்து, துயரம் சூழந்த பொழுதுகளில் சோர்ந்து அதையதை அந்தக் கணங்களில் அனுபவித்துப் போயிருக்கின்றனர். மதுவினதும் போதைப்பொருட்களினது பாவனை சிலரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது, பலரைச் சிதைக்கவும் செய்திருக்கிறது
எழுதுபவர்களில் அநேகர் எப்போதுமே எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடியும், கேள்விகளை எழுப்பியபடியும் இருக்கின்றார்கள். எல்லோராலும் வாழ்வை அனுபவிக்கமுடியும், ஆனால் கலைகளினூடாடு தாம் உணர்பவற்றை முன்வைக்க சிலராலேயே முடியும். அதிலும் சிலரால்தான் இன்னும் நுட்பமாகவும் ஆழமாகவும் முன்வைக்கமுடியும். ஆகவேதான் இந்த எழுத்தாளர்கள் மற்ற விடயங்களில் மிக மிகச்சாதாரணமாய்த் தெரிந்தாலும் அவர்களின் படைப்புக்களின் மூலம் நமக்குள் உயர்ந்து நிற்கின்றனர் அவர்களை மேலும் மேலும் நேசிக்க முடிகிறது.

இவர்கள் பிற எல்லாவற்றிலும் தோற்றவர்கள் என்றாலும் தம் படைப்பின் மூலம் மினுங்கிக்கொண்டிருப்பதால்தான் அவர்களைச் சலிப்பின்றி பின் தொடர்ந்து செல்ல முடிகிறது. ஆகவேதான் யாருமற்றவர்களாய் எதுவுமற்ற சூனியத்தில் அலைகிறோமென எப்போதாவது அவர்களின் உள்மனக்குரல்கள் பேசுகின்றபோது நாம் அவர்களை கதகதப்பாய் அணைந்துவிட விரும்புகிறோம்.

மேலும், காலமற்ற வெளியில் அவர்களுக்கான எமது  முத்தங்கள் என்றென்றும்  மிதந்தபடியே இருக்கின்றன.

(நன்றி: 'உரையாடல்' இதழ் -01)

0 comments: