நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical Society). இதிலிருந்து இரண்டு வேறு கிளைகள் அன்னி பெசண்ட், ஆல்காட் என பிரிகின்றது. அன்னி பெசண்ட் தரப்பு வைதீக, சமஸ்கிருதமாக்கலை உயர் இலட்சியமாக்க, ஆல்காட் தரப்பு பிராமணியத்துக்கு எதிரான பகுத்தறிவுச் சிந்தனைச் செல்நெறியை முன்னெடுத்தது என்கின்றார் சிவத்தம்பி. அந்த பகுத்தறிவுச் சிந்தனையிலிருந்து வந்தவரே அயோத்திதாச பண்டிதர் என்கின்ற முக்கியமான முடிவை, இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னரே சிவத்தம்பி எழுதிச் செல்கின்றார்.
அதேவேளை பண்டிததாசர் போன்றவர்கள் இலங்கைப் பெளத்தத்தோடு சேர்ந்து தமது சமூக மேனிலையாக்கத்துக்கு இலங்கைப் பெளத்தர்களின் ஆதரவை எதிர்பார்த்த போதும், அது நிகழமுடியாததற்குக் காரணம், சிங்களப் பெளத்தமும் சாதி அடிப்படையிலே இயங்கி வருகின்றது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் என்று சிவத்தம்பியின் அவதானம் முக்கியமானது. இன்று நெடுங்காலத்துக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தலித் எழுச்சியும், தமிழ் பெளத்த உரையாடல்களும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற காலத்தில், தமிழகத்திலிருந்து பல தலித்துக்கள் புத்தபிக்குகளோடு ஓர் இணைப்பை (எனது மட்டுப்படுத்தப்பட்ட முகநூல் நண்பர்களிலே சிலரை அவ்வாறு பார்க்கின்றேன்) ஏற்படுத்துவதைப் பார்க்கின்றேன். அவர்கள் இதை ஒரு முக்கிய புள்ளியாக கவனித்தாக வேண்டும். அதுமட்டுமின்றி இலங்கையில் இருக்கும் தேரவாத பெளத்த பீடங்கள் எவ்வாறு அரசியலில் செல்வாக்குச் செலுத்தி, இலங்கையில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தில் சிறு அசைவைக் கூட ஏற்படுத்த முடியாது நாட்டை சின்னாபின்னாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் கவனித்தாக வேண்டும்.
சிவத்தம்பி பின்நவீனத்துவம் பற்றிப் பேசமுன்னர் நவீனத்துவம் பற்றி விரிவாகப் பேசுகின்றார். அதில் அவர் மேற்குலகில் வரையறுக்கப்பட்ட நவீனத்துவமானது, இந்தியா/இலங்கை/தென்னாசியா சமூகங்களில் அதேயளவு பொருந்துகின்றதா எனக் கேள்வி கேட்கின்றார். ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்காலத்தில் தோன்றிய சனநாயக்கப்படுத்தலும், சமயசார்பின்மையும் எமக்கு நீண்டகாலத்துக்குப் பிறகே காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரே வந்தது என்கின்றார். ஏனெனில் நாம் காலனித்துவ காலத்தில் சில நூற்றாண்டுகள் இருந்தவர்கள்.
மேலும் நவீனத்துவ காலம் மேற்கில் தோன்றியபோது அதற்கு முந்தைய அம்சங்களை (கைத்தொழில் புரட்சி/முதலாளித்துவம் காரணமாக) அடித்துப் புரட்டிப் போனது போன்று நமக்கு நிகழ்வில்லை என்கின்றார். ஆனால் எம்மைப் பொறுத்தவரை நவீனத்துவமானது, காலனித்துவம்/ கிறிஸ்தவமயமாக்கம்/ மேனாட்டுமயமாக்கம் வழியாக மேற்கிளம்பி, பராம்பரிய மீட்புணர்வையும் ஏற்படுத்தியது என்கின்ற முக்கிய அவதானத்தை சிவத்தம்பி கவனப்படுத்துகின்றார். மேற்கூறிய மூன்றும் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளால் நாம் நமது 'முந்தைய பண்பாட்டு' பற்றிய மீளுருவாக்கத்தைச் சிந்தித்து, சிந்தனைவழி பெறப்பட்ட அதற்கு உருவம் கொடுத்தோம் என்கின்றார்.
இவ்வாறு நமது நவீனத்துவத்தில் பராம்பரிய மீள்நோக்கும் ஒரு முக்கிய அம்சமாவதால், நாம் பழமைகளுக்கு ஒரு 'புதிய' கட்டமைப்புக் கொடுத்து அவற்றை மீளுருவப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திராவிடக் கருத்துநிலை மீட்டெடுத்த 'தமிழர் பண்பாடு' என்பதை சிவத்தம்பி முன்வைக்கின்றார். அதுபோல மேற்குலகில் நடந்ததுபோல நம் சூழலில் நவீனத்துவம் ஒரு 'சமத்துவமான வளர்ச்சி'யைக் கொண்டிருக்கவில்லை என்றும் சிவத்தம்பி கூறுகின்றார். நம் சூழலில் நவீனத்துவம் சமனற்று நடந்ததால் புதுமை/பழைமை பிரிவினை தெளிவாக இருந்து நகரம்/கிராமம் என்கின்ற பெரும் வேறுபாடுகள் அதன்பின்னரே தோன்றின என்கின்றார். அதற்கு காலனித்துவமும், அதற்கு ஒத்தூதிக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர்களும் முக்கிய காரணம் என சிவத்தம்பி சொல்கின்றார்.
ஆக, சிவத்தம்பியின் முக்கிய கேள்வியாக மேற்குலகு நவீனத்துமல்ல நமது நவீனத்துவம் என்பதாக இருக்கிறது. அதுபோலவே நாம் இந்த நவீனத்துவத்தை முற்றாக கடந்து வந்துவிட்டுத்தான் பின்நவீனத்துவத்தைத் தமிழ்ச்சூழலில் பேசத் தொடங்குகின்றோமா என்பதுமாகும்.
இந்த நூலில் 'தமிழில் பின்நவீனத்துவம் பேசப்படுவதற்கு முன்', 'அண்மைக் காலத்து மேனாட்டு இலக்கிய விமர்சனம்', 'பின் நவீனத்துவம்' பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை மட்டுமில்லை, தனித்தனியே எடுத்து விரிவாக உரையாடுவதற்கான ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்புக்களாகும்.
நூலின் கட்டுரைகளைப் போன்று சிவத்தம்பியின் முன்னுரையில் குறிப்பிடும் ஒரு பகுதியும் எனக்குப் பிடித்தமானது:
"பின் நவீனத்துவத்தை நான் ஓர் 'அநாவசியமான இடையீடு' என்று கருதவில்லை. அதனைப் புரிந்துகொள்வதில் என்னளவில் நான் மிகுந்த நிதானம் காட்டினேன். அதனைத் தனியொரு 'நிகழ்வாக' நான் பார்க்கவில்லை. 1960கள் முதல் ஐரோப்பிய/மேற்குலக நாகரிக மாற்றத்தில் ஏற்பட்டுவரும் ஒரு 'வளர்நிலை'யாகவே காண்கிறேன். அமைப்பியல்வாதம்-பின் அமைப்பியல்வாதம்-பின் நவீனத்துவம் என்ற தொடர்ச்சியின் தர்க்கதைக் காண மறுப்பது மார்க்சீயத்தின் தர்க்கதை மறுதலிப்பதாகும். இந்த உண்மையை என் மார்க்சீயக் கருத்துநிலைத் தோழர்கள் புரிந்து கொள்கிறார்களில்லை. அவர்களுக்கு மார்க்சீயம் என்பது ஒரு 'வாய்பாடா'கி விட்டது. மார்க்சீயத்தை வாய்பாடாக்குவதைப் போன்று மார்க்சீய விரோதச் செயல் எதுவும் இருக்க முடியாது. நிறுவனங்களின் (காலத்துக் காலம்) மாறும் தேவைகளுக்கேற்ப மார்க்சீயப் புரிதல்களை வடிவமைப்பதில பல வரலாற்றுத் தவறுகள் நடந்துள்ளன.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறு நிம்மதி உண்டு. நான் எனது கருத்துக்களுக்காகப் பின்நவீனத்துவ நண்பர்களாலும், மார்க்சீயத் தோழர்களாலும் ஒரேவேளையில் கண்டிக்கப்படுகிறேன். எனது சிந்தனைதான் சரி என்றோ எவரையும் நான் நிர்ப்பந்திக்கவில்லை. நான் தொடர்ந்து சிந்திக்கிறேன் என்பதையும் சிந்திக்காமலிருப்பதை எதிர்க்கிறேன் என்பதையும், நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். அந்தச் சிந்தனை மார்க்சீய நிலை நிற்பது என்பதுதான் என் நிலைப்பாடு.'
என்று சிவத்தம்பி எழுதிச் செல்வது அவரை ஒரு முக்கியமான சிந்தனையாளராக மட்டுமின்றி, நமக்கு நெருக்கமான ஒருவராகவும் ஆக்கச் செய்கின்றது.
*******
(Apr 22, 2025)
0 comments:
Post a Comment