கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அலையும் நினைவுகள்

Saturday, December 19, 2015

நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபெத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார். அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருட்களைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

(Oct, 2014)

0 comments: