கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Unearthed -10 years in Sri Lanka (2005-2015)

Thursday, April 06, 2017

Kusal Pereraவின் 2005-2015ற்குமிடையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தனியே சிங்கள மக்களைப் பற்றியோ, தமிழர்களை எதிர்த்தரப்பாகவோ பார்க்காது அவர் இரு இனங்களுக்கிடையிலான சிக்கல்களை நிதானமான தொனியில் பேசுவது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆவலான மனோநிலையைத் தந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள்/அரசியல்கட்சிகளை மட்டுமின்றி இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு, இலங்கையில் செல்வாக்குச் செலுத்திய/செலுத்தும் புள்ளிகளை தெளிவாக இனங்காட்டுகின்றார்.  1983 கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரையில் எவ்வித சமரசமுமின்றி சிங்கள இனவாதிகளின் மிலேச்சத்தனத்தைக் கண்டிக்கின்றார்.

தமிழ் இயக்கங்களில் புலிகளும் புளொட்டும் ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்தோங்கியது என்றும், புளொட் தொடக்ககாலங்களில் சிங்கள இடதுசாரிகளிளோடு சேர்ந்து இயங்கி ஆட்சியை மாற்றியமைப்பதன் மூலம், தமக்கான கோரிக்கையை அடையலாம் என நினைத்ததும், புலிகளின் தலைவர் தமிழரின் செழிப்பான காலமாயிருந்த சோழர் காலத்து அடையாளங்களை மீட்டுயிர்ப்பதன் மூலம் ஒரு வீரமரபை உருவாக்கி, தனிநாடு அடையலாமென அங்கே மினக்கெட்டாரெனவும் வரலாற்றை குஸல் பெரேரா மீள்பரிசீலனை செய்கின்றார். மேலும், புலிகளின் கரும்புலிகள் பற்றி மேலெழுந்தவிதமாய் எழுதாது, அதை தமிழர்களின் தற்கொலைகளின் மரபிலிருந்து விளங்கிக்கொள்ள முயல்கின்றார். கிட்டத்தட்ட அவ்வகையான கட்டுரைகளை தமிழில் தமிழவனும் நாகார்ஜூனனும் எழுதியதும் நினைவிற்கு வருகின்றது.
ஒரு போராட்டத்தில் தற்கொலைப்படையாளிகளாவது குறித்து நமக்கு ஏற்றுக்கொள்ளமுடியாக் கருத்துக்கள் இருப்பினும், ஏன் இதுவானது (தற்கொலைப்படை மட்டுமின்றி,  அமைதியான போராட்டங்களில்  தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் தற்கொலை செய்துகொள்வது வரை) தமிழ் மரபில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதற்கு பண்பாட்டின் அடித்தளங்களுக்குள் போகாது, அதன் நீட்சியை நாம் மேலெழுந்தவாரியாகக் கதைப்பதன் மூலம் வெட்டியெறிய முடியாது என்பதே நிதர்சனமாகும்.

இன்னும், 'குழந்தை' ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள், அசோக ஹந்தகமவின் 'இனி அவன்' போன்றவை குறித்தும் விரிவாக எழுதியுள்ளதோடு, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் குறித்தும் ஆராய்கின்றார்.  இலங்கையில் மொழிக்கான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாய் மாறியது போல, ஏன் இந்தியாவில் தனித்தமிழ்நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் வன்முறைக்குள் இறங்கவில்லை என பெரியாரை முன்வைத்து பேசுவது, அதுவும் முக்கியமாய் சிங்களத்தரப்பில் பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
ஒரு மனிதாபிமானி எப்படி இருக்கலாம் என்பதற்கு குஸல், இந்திய அரசின் பிரதிநிதிகளுக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்குமான மரணதண்டனையை இரத்துச் செய்யச் சொல்லி எழுதும் கடிதம் முக்கியமானது. போர் தின்றுவிட்ட ஒருநாட்டின் 30 மில்லியன் மக்களின் பிரதிநிதிகளின் ஒருவனாய் போர் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்துமென எனக்கு நன்குதெரியுமென அவர் தொடங்கும்  இந்தக் கட்டுரையை, நாம் தனிப்பட்ட சிங்களவரின் செயல்களை முன்வைத்து பொதுப்புத்தியாக எழுதும் நம்மிடையே இருக்கும் சிலருக்கான எதிர்வினையாகக் கூட இதனைக் கொள்ளலாம். மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி தமது கோரிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டிருப்பதையும், முக்கியமாய் புனர்வாழ்வு முகாங்கள் குறித்து அவர்கள் எதுவுமே செய்யாது தோற்றுப்போயினர் என்பதையும் சுட்டிக்காடுகின்றார்.

இதை வாசிக்கும்போது தமிழில் யாரெனும் ஒருவர் கடந்த பத்தாண்டுகளாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, அவற்றை வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன். அரிதாக ஒரு சிலர் தவிர்த்து,  தமிழில் இருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் என்பவர்களோ, அறிவுஜீவிகள் என்பவர்களோ குறுகிய வட்டத்திற்குள் சுழல்கின்றவர்களே என்ற நினைப்பு சோர்வைத் தந்து, அவற்றைத் தொகுக்காமல் விட்டாலே தமிழ்ச்சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் போலவும் தோன்றியது.

'Political Opposition in a Nihilistic Sinhala Society'  என்பதில் எப்படி இலங்கையிலிருக்கும் புத்தமதத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் விமர்சனம் செய்கின்றார் எனப் பாருங்கள்;

தனிமைப்படுத்தி, உளைச்சலுக்குள்ளாக்கும்  இன்றைய நுகர்வோர் வாழ்வானது மனிதர்களை புதிய  மத விடயங்களை நோக்கி ஓடச்செய்கிறது. இது புதிய ஆச்சிரமங்களையும், கொண்டாடப்படும் பிக்குகளையும் உருவாக்கி, ஹீனயான புத்த கொள்கையை இன்னும் பரவச்செய்கிறது. ஹீனயானமானது ஒருவகையில் சிங்கள அரசிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதையும் நியாயப்படுத்துகிறது.
இப்படியான தனிமைப்பட்டதும், உள்ளொடுங்கியதும் , வித்தியாசமான சிந்தனைகளுமற்ற ஒரு சமுகம் அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியுமா? அரசியல் பிரச்சினைகளை கூட்டுணர்வோடு சமூகத்தளத்தில் பேசித்தீர்க்க முடியுமா? மேலும் அறிவுத்தகைமையுடைய ஒரு எதிர்க்கட்சி இல்லாதபோது இந்தப்பிரச்சினைகள் எதுவும் தீர்ந்துவிடாது என்கிறார் குஸல். இப்படி 2011ல் மகிந்த ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டாலும் இப்போதும் எதிலும் பெ ரிய மாற்றம் வந்துவிடவில்லை என்பதே யதார்த்தமும் ஆகும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

1 comments:

Anonymous said...

hi dj,
try this website www.thiratti.in

4/07/2017 07:41:00 AM