கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சூரியகாந்திப்பூ குறிப்புகள்

Monday, January 29, 2018


கட்சிக்காரன்
இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது ஏதேனும் நேர்த்திக்கடன் வைத்துவிட்டு படைப்புக்களை அனுப்புகின்றார்களோ என நினைக்குமளவிற்கு எனக்குப் பிடித்த சிலர் விகடனில் எழுதிய கதைகளை வாசிக்கும்போதும் யோசிப்பதுண்டு.

இந்தமுறை விகடனில் இமையம் எழுதிய 'கட்சிக்காரன்' கதை எனக்குப் பிடித்திருந்தது; முக்கியமாய் தி.மு.கட்சிக்காரரான இமையம் தனது கட்சியின் இன்றைய உண்மை நிலையை விமர்சித்து எழுதியிருப்பது. மேலும் தங்கம் தென்னரசு, அவரின் தந்தையான தங்கபாண்டியன் போன்றவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, ஒரளவு நேர்மையான அவர்களாலேயே எதையும் இன்றைய தி.மு.கவில் சாதிக்கமுடியாத அவலத்தை சமரசமின்றி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சிறுகதையிற்குள் விடப்படவேண்டிய மெளனத்தை மட்டுமில்லாது, எல்லாவற்றையும் உரையாடல்களால் சொல்லிவிடுவதையும் இமையத்தின் பலவீனமாய் ஏற்கனவே குறிப்பிட்டு எழுதியிருப்பேன். அதை அவர் இந்தக்கதையில் மீறியிருப்பதால்தானோ என்னவோ இன்னும் இந்தக் கதை பிடித்திருந்ததோ தெரியாது. கிட்டத்தட்ட 19 பக்கங்கள் அளவிற்கு நீளும் 'கட்சிக்காரனை' விகடன் பிரிசுரித்ததைப் பார்க்கும்போது இந்த உலகில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழும் வாய்ப்பிருக்கின்றதை நாங்கள் நம்பத்தான் வேண்டும் போலிருக்கிறது.
(June 2017)


மழையும் புத்தகங்களும்
தொடர்ந்து விடாத மழைபொழிந்து கொண்டிருக்கும் இன்று அன்னா அகமத்தோவாவும், போர்ஹேஸும், காஃப்காவும் சில மணித்தியாலங்களுக்குத் துணையிருந்தார்கள். காஃப்காவின் The Zürau Aphorisms சிறுசிறு குறிப்புகளாய் (109) எழுதப்பட்டதை வாசிப்பது வித்தியாசமான அனுபவமாயிருந்தது. அது போல போர்ஹேஸின் அனைத்துக் கவிதைத் தொகுப்பிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட 200 கவிதைகளுள்ள நூலில், அவரின் ஒவ்வொரு தொகுப்பிற்கான முன்னுரைகளும் சுவாரசியமானவை. அன்னா அகமத்தோவா சிலுவையில் அறையப்பட்டு முழந்தாழிட்ட நிலையில் தலையைக் குனிந்தபடியிருந்தார். எத்தனை துயரை அவர் வாழ்ந்த காலத்தில் அனுபவித்திருந்திருப்பார். அதையும் மீறி மூடிய நாடொன்றில் நடந்தவற்றை உலகிற்கு எடுத்தியம்பிய துணிச்சல்காரி என்றவகையில் அவரின் மீதான நெருக்கம் கூடிக்கொண்டே போனது.

முன்பு நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகேயும் புத்தகங்கள் விற்கும் கடையொன்றும் இருந்தது. குளிர்காலங்களில் வெளியே போக முடியாத சூழ்நிலையில் மதியவுணவு வேளைகளில் அங்கேயே அதிக நேரத்தைச் செலவழிப்பதுண்டு. அவ்வாறே சில புதிய புத்தகங்களை(மேரி ஆன் மோகன்ராஜ் -The Bodies in Motion, ஜூம்பா லகிரி -Unaccustomed Earth , .வி.எஸ்.நைபால்-Magic Seeds , மார்க்வெஸ்--Memories of My Melancholy Whores என்பவை இப்போது நினைவில் வருபவை) காசு கொடுத்து வாங்காமலேயே பகுதி பகுதியாய் அங்கேயிருந்து வாசித்து முடித்துமிருக்கின்றேன். இப்போதெல்லாம் அங்கே ஆறுதலாய் இருந்து வாசிப்பதற்கான வெளியையெல்லாம் குறைத்துவிட்டார்கள்.

அண்மையில் என்னோடு வந்த நண்பரிடம், இந்த மூலையிலிருந்துதான் அவ்வப்போது கண்ணாடிக்குள்ளால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வாசிக்கின்றனான் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். நம்முன்னாலேயே நடந்த பல பிடித்த விடயங்கள் எல்லாமே எப்போதோ நடந்ததுபோல 'கடந்தகாலமாய்'ப் போய்க்கொண்டிருப்பது ஒருவகையில் துயரமானது அல்லவா?

போர்ஹேஸின் -மேலேயுள்ள- 'காதலின் எதிர்பார்ப்பு' ஐ வாசித்தபோது, முன்னர் இப்படி அந்த புத்தகசாலையில் சென்று வாசித்துக்கொண்டிருந்தகாலத்தில் பறக்கும் நூலகம் என்று எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்தது.
(Sep, 2013)


பயனுள்ள ஓரு மாலை
யாரேனும் புதிய ஒருவரை - முக்கியமாய் இலக்கியம்/சினிமா சார்ந்து- சந்திக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அதாவது அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்களுடன் அவர்களைச் சந்திப்பதில்லை என்பதில் அவதானமாய் இருக்கவும் தேவையில்லாத ஏமாற்றங்களை அடையாதிருக்கவும் காலம் கற்றுத் தந்திருக்கின்றது. எனெனில் கடந்தகாலம் அவ்வாறான ஏமாற்றங்களைத் தந்திருந்தது. அவ்வாறான ஒரு நிலையுடன் இன்று ரொறொண்டோவில் நடந்த பயிற்சிப்பட்டறையில் சொர்ணவேலைச் சந்திருந்தேன். பயிற்சிப்பட்டறை காலையில் இருந்து தொடங்கியிருந்தாலும், அது முடியும் போதே சென்றிருந்தேன். அதன்பிறகு சமகால (தமிழ்) சினிமா என்கின்ற கலந்துரையாடலிலும் இருந்தேன். சொர்ணவேல் நிறைய விடயங்களைத் தெரிந்த சுவாரசியமானவராய் ஒருவராய்த் தெரிந்ததால் பிறகு சில நண்பர்களுடன் ஒரு கோப்பிக்கடையில் இருந்தும் நீண்ட நேரம் உரையாடிருந்தோம்.

ஜான் ஆபிரகாம், ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர்களோடான தனிப்பட்ட நட்பு சார்ந்தும், அவர்கள் மீது தனக்குள்ள விமர்சனங்களையும் முன்வைத்த சொர்ணவேலின் பார்வை எனக்கு உவப்பானது. அதைவிட அவர் விரிவாக சிலாகித்து உரையாடிய பிறமொழிப் படங்களும், ஆவணப்படங்களும், குறும்படங்களும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சொர்ணவேலில் நூலான, 'சினிமா:சட்டகமும், சாளரமும்' பற்றிப் பேசிய தேவகாந்தன் ஓரிடத்தில் இப்படிச் சொல்லியிருப்பார். 'நான் ஒரு தீவிர சினிமா பார்வையாளன் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் சொர்ணவேலில் நூலை வாசிக்கும்போது அவர் குறிப்பிட்ட படங்களில் 50% மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது புரிய, நான் இதுவரை நினைத்த பார்வைக்கே பங்கம் வந்திருக்கின்றது' என வெளிப்படையாகத் தேவகாந்தன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கும், சொர்ணவேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிடும் படங்களில் பெரும்பான்மையான பிறமொழிப் படங்களைப் பார்க்கவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சொர்ணவேல் எனது வலைத்தளத்தை அவ்வப்போது வாசித்திருக்கின்றார். எனது கதைகளில் ஒன்றான 'கள்ளி' அவருக்குப் பிடித்துமிருந்தது. வாசனையைப் பின் தொடரும் ஒருவனைப் பற்றிய கதையை காட்சிப்படுத்துவது கடினம் என்றாலும் என்றேனும் ஒருநாள் குறும்படமாக்கிப் பார்க்கலாம், சுவாரசியமானது என கதைத்துக்கொண்டிருந்தார்.

இது எல்லாவற்றையும் விட அவருக்கும் எனக்குப் பிடித்த தெரிதா பிடித்திருக்கின்றது. அவரது 'சினிமா: சட்டகமும் சாளரமும்' முன்னுரையிலே தெரிதாவே முக்கியமாய் இடம்பெற்றிருக்கின்றார். தெரிதாவின் மீதான் ஈர்ப்பாலோ என்னவோ முன்னுரையில் இருக்கும் இரண்டு படங்களும் தெரிதாவே இருக்கின்றார். ஆவணப்படங்களில் ஆர்வமும், ஆவணப்படங்களை எடுத்தவருமான சொர்ணவேல் தெரிதா பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த ஆவணப்படங்களில் அதுவுமொன்று.

அயோவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சொர்ணவேல் தற்போது மிஷிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
(Aug 31, 2013)

0 comments: