கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)

Friday, June 25, 2021

1.


ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா.  அவர்  பல நூற்றுக்கணக்கனோர்  பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் பிரதியான  'தனுஜா'வை ( ஈழத் திருநங்கையின் பயணமும், போராட்டமும்) வாசிக்கத் தொடங்கியபோது, அது இற்றைவரை தமிழ்ச்சூழலில் வெளிவராத  ஒரு நூலென்ற எண்ணம் தொடக்கத்திலே வந்துவிட்டது. 


எல்லா privilagesம் இருக்கும் ஆண்களாகிய நாங்களே எமது வாழ்வில் நடந்தவற்றை எமக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் கூடப் பகிரத் தயங்குகின்றபோது, நமது சமூகத்தில் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையான ஒருவர்  இவ்வளவு நேர்மையாக தன்னை முன்வைக்க முடியாமென  ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர இதை வாசித்தபோது வந்தது. 


தனுஜாவின் சிறுவயது, ஆணுடலுக்குள் சிக்குப்பட்ட பெண்ணின் கையறுநிலை என்றால், பின்னர் ஒரு பெண்ணாக 'நிர்வாணம்' செய்தபின், தனது இந்த நிலைக்காக அவமதித்த ஆண்களை அவர் 'பழிவாங்கும்' சந்தர்ப்பங்களைக் கூட நம்மால் அவ்வளவு எளிதால் செரித்துக்கொள்ளமுடியாது. ஆனால் இதுதான் நான், என்னை உங்களைப் போன்ற ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமது புரிதல்களைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்திக்கொண்டே தனுஜா இருக்கின்றார்.


2.


ஒவ்வொரு வாரவிறுதியிலும் நண்பர்கள் சிலர் மெய்நிகர் உலகில்  இலக்கியம் சார்ந்து கூடிப் பேசுவதுண்டு. அவ்வாறு ஒருமுறை சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் பற்றிய பேச்சுவந்தது. அதன் தொடர்ச்சியில் சாருவின் எழுதிய 'உன்னத சங்கீதம்' போன்ற கதைகளுக்காய் சாருவை நிராகரிக்கின்றேன் என்று ஒரு நண்பர் சொல்ல அதுகுறித்து பேச்சு இழுபட்டது. விளாடிமோர் நபகோவின் 'லொலிடா'வின் மிக மலினமான கதை 'உன்னத சங்கீதம்' என்பதும், அந்தக் கதை குறித்தே அன்றே புலம்பெயர் பெண்கள் பெரும் எதிர்ப்பை அறிக்கையாக/தொகுப்பாக முன்வைத்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. 


நான் சாருவின் அனைத்துப் புனைவுகளையும் தேடித்தேடி வாசிக்கின்ற ஒருவன். அவரின் மொழியின் எளிமைக்கும், அங்கததற்குமாய் அவரை இன்னும் விடாது பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றவன்.  ஒரு வளர்ந்த ஆணுக்கு, ஒரு சிறுமியோடு சலனம் வருவது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அந்தச் சிறுமியின் பார்வையை முற்றாக மறுத்து ஒரு வளர்ந்த ஆணின் பார்வையிலும், வரலாற்றுப் பிழைகளோடும் (இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்றும்) genuine இல்லாது எழுதப்பட்டதால் உன்னத சங்கீதத்தை எனக்கும் நிராகரிக்கக் காரணம் இருந்தது. அதை அந்த நண்பர்களின் கூடலில் சொல்லியுருமிருந்தேன்.


எனினும் அடுத்த நாள் ஒரே இருக்கையில் தனுஜாவின் இந்த நூலை வாசித்தபோது நான் சரியாகத்தான் பேசுகின்றேனோ என்பதில் சந்தேகங்கள் எழுந்தன. தனுஜா ஒரு ஆணாகப் பால்நிலை சார்ந்து பிறந்ததால், அவரைப் பெண்ணாக  இருக்க மறுக்கும் சமூகத்தில், தன்னைப் பெண்ணாக உணரவைக்கும் ஆண்களை எல்லாம் ஒருவித கருணையுடன் அவர் எதிர்கொள்கின்றார். தனுஜா தனது 12 வயதோடு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும், அவரின் இந்த ஆணின் உடலுக்குள் அடைபட்ட பெண் தன்மையால், அவர் அதற்கு முன் வாழ்ந்த இந்தியாவிலும், இலங்கையிலும் உடல் சார்ந்த வாதைகளுக்கு உட்படுகின்றார். இந்த நூலில் தனுஜா வயது வந்த ஆண்களோடு தனது சில அனுபவங்களை பாலியல் வன்புணர்ச்சிகளாகவும், சிலவற்றை அவ்வாறில்லாதும் குறிப்பிடும்போது குழந்தைப் பிராயத்திலே ஏற்படக்கூடிய பாலியல்  விழிப்புக்களைப் பற்றி நான் அறிந்துகொண்டவை சரியா என்ற கேள்விகளும் எழுந்துகொண்டிருந்தன.  


3.


தனுஜாவின் இந்த நூலின் ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் இந்தளவுக்கு ஒருவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அதைவிட முக்கியமாக பிறர் எவ்வளவு வன்முறையை/இழிவுகளைத் தனக்குச் செய்திருந்தாலும் எவரையும் தேவையில்லாது கீழிறக்காது எழுத முடிகிறதென்ற வியப்பே வந்துகொண்டிருந்தது. தனுஜா தனது உடல் சார்ந்த போராட்டங்களை மட்டுமில்லாது, திருநங்கை சமூகங்களுக்கிடையில் இருக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பிணக்குப்பாடுகளையும் மறைக்காது முன்வைக்கின்றார். ஒருவகையில் நாமும் பலவீனமுள்ள மனிதர்கள்தான் என்பதை,  தான் சார்ந்த சமூகத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிலவற்றைப் பேசும்போதும், நமக்குத் தனுஜா புரியவைக்க முயல்கின்றார். இதுவே இந்தப் பிரதிக்கும் இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றது.


ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு வசதியின் நிமித்தமும், இளமையின் நிமித்தமும் பொறாமை கொண்டு ஏதாவது தவறைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் வரும்போது, அந்தச் சர்ச்சைகளை மறந்து நம்மைப் போன்றவர்களுக்கு நம்மைவிட வேறு யார் உதவப்போகின்றார்கள் என்று ஆதரவு அளிக்கின்ற சந்தர்ப்பங்கள்  அற்புதமானவை. 


ஜேர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் தனுஜாவின் புலம்பெயர் வாழ்வைச் சொல்கின்ற அனுபவங்கள் பெரும்பாலும் சுவிஸிலும், கனடாவிலும் நடக்கின்றவையாக இருக்கின்றன. முக்கியமாக கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்கின்றவராக அதுவும் நான் வசிக்கும் அதே நகரில் இருந்திருக்கின்றார் என்பது இன்னும் சுவாரசியம் தரக்கூடியது. அதிலொருவர் குறும்படங்களில் நடிப்பவர். அவரைத் தனுஜா வன்கூவரில் சந்தித்து பிறகு அவரோடும் அவர் குடும்பத்தோடும் ரொறொண்டோவில் வசிக்கத் தொடங்குகின்றார் (குறும்பட உலகு சிறியது என்பதால் அவர் யாரென்பது அடையாளங்காண்பதும் அவ்வளவு கடினமில்லை). 


கிட்டத்தட்ட ஒரு சிறைபோல அவர் வீட்டுக்குள் இங்கு வைக்கப்பட்டிருந்தாலும், பிற எதைப்பற்றியும் கவலைப்படாது அப்படி ஒரு 'குடும்பப் பெண்'ணாக மட்டுமே இருப்பதே அவருக்கு போதுமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த ஆண் அவரை ஒரு முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தனுஜாவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. இன்னொரு கனேடிய தமிழ் ஆண், அவரை மலேசியாவுக்குப் போவதற்கான பயணத்தின் செலவை ஏற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லி தனுஜாவைக் கூட்டிக்கொண்டு இலங்கையின் தென்பகுதி முழுவதும் திரிகிறார். அவர் திருமணஞ் செய்த ஆண். தனது மனைவியின் உறவினர்களைக் காணச் செல்கின்றபோது மட்டும் இவரைக் கைவிட்டுவிடுகின்றார். இவ்வாறு தனக்கான துணையைக் கண்டடைந்துவிடுவேன், ஒரு அற்புதமான வாழ்வை வாழப்போகின்றேன் என்று தனுஜா நம்புகின்ற ஒவ்வொரு பொழுதும் காதலின் நிமித்தம் கைவிடப்படுகின்றார்.


பிறகு அவருக்கு ஆண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடிகிறது. நீயும், நான் கண்ட இன்னொரு அந்த ஆண்தானே என ஒருவித பரிகாசப் புன்னகையுடன்  எல்லா ஆண்களையும் எதிர்கொள்கின்றார். தன்னைப் பெண்ணாகப் பெருமையாக முன்வைத்து வாழ்வின் சவால்களை சந்திக்கின்றார். ஒருகாலத்தில் பெற்றோரினாலும், உறவுகளாலும் ஒடுக்கப்பட்ட தனுஜாவைப் பிறகு அவரின் குடும்பம் ஏற்றுக்கொள்கின்றது. இடையில் இவரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்ளபோது இவரின் குடும்பம் ஒடுக்கியபோதும், தனுஜாவின் குடும்பம் அவரைத் தம்மோடு வைத்துக்கொள்வது கூட கவனிக்கத் தக்கது. கெளரவமும்,  சாதித்திமிரும், அடியுதைகளும், வார்த்தைகளால் அதைவிட வன்முறைகளும் செய்துகொண்டிருக்கும் தனுஜாவின் தந்தைகூட அவரைத் தமது குடும்பக் 'கெளரவத்தின்' காரணமாக வெளியே போகச் சொல்லாதுதான் விட்டுவைத்திருக்கின்றார்.


திருநங்கைகளுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனுஜா தனது அடையாளஞ்சார்ந்து செய்கின்ற தேடல்களும், தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதுவரை -நாமாக திருநங்களைகளைப் பற்றிப் பேசுகின்றபோது- வைத்திருந்த நிறையக் கற்பிதங்களை உடைத்துச் செல்கின்ற பிரதியாக இந்த சுயவரலாற்று நூல் இருக்கின்றது. தனுஜா தன் அடையாளம் சார்ந்து சுவிஸ், மலேசியா, இந்தியா என்று எங்கெங்கோ  எல்லாம் அலைந்து தன்னைத் தேடி அலைகிறார். தனக்குப் பிடித்தமான விடயங்களைச் செய்கின்றார். 


நான் பெண்ணாக உணர்கின்றேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது கேட்காதவர்களை, பிறகு அவ்வளவு அழகாக எதிர்கொள்கின்றார். அத்துடன் திருநங்கைகளைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அதே திருநங்கைகளைக் காமத்தின் பொருட்டு தேடிப்போகின்ற எண்ணற்ற தமிழ் ஆண்களை இந்த நூலில் காண்கின்றோம். உள்ளூர ஒன்றை விரும்பியபடி, ஆனால் அதை 'நாகரிகமாய்' மறைத்தபடி, நமது ஆண் உள்ளங்களை நாமே மீண்டும் கண்ணாடியில் பார்ப்பதுபோல இந்த ஆண்கள் நம்மைக் கடந்துபோகின்றார்கள். 


4.


இன்னமும் முப்பதையே தொட்டுவிடாத தனுஜா கடந்து வந்திருக்கின்ற பாதை மிக நீண்டது. நாம் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் இவ்வாறு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாதவளவுக்கு அவ்வளவு கடுமையான பாதையது. அவர் தன்னை 'நிர்வாணம்' செய்துகொள்கின்ற அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிய விபரிப்புக்கள் அவ்வளவு வலிமிகுந்தது. ஆனால் அந்த கடின வழியைக் கடந்துவந்து, எதன் பொருட்டும்/எவர் பொருட்டும் தன்னைச் சமரசம் செய்யாது தனுஜா தனது கதையை வெளிப்படையாக முன்வைக்கின்றார் என்பதற்காய் நாம் அவரின் கரங்களை நன்றியுடன் பற்றி  அரவணைத்துக்கொள்ளவேண்டும். எத்தனையோ சீழ்களையும், கீழ்மையும் கொண்ட ஒரு சமூகத்தில், தன்னை அதிலிருந்து வெளியேற்றாது, தானும் அதில் ஒருவரே என தன்னையும் முன்வைத்து அதே சமயம் தான் சந்தித்தவர்களைக் கூட அதிகமாய் தாழ்த்தாது, இவ்வளவு அனுபவங்களுக்கிடையிலும் மிகுந்த கம்பீரமாக முன்வைக்கின்றார் என்பதே இந்த நூலில் இன்னொரு சிறப்பம்சம்.


கொழும்பில் தன்னை அடித்த ஒரு மாமாவை தனுஜா நீண்ட வருடங்களின் பின் இலங்கையில் சந்திக்கின்றார். மாமா ஏன் என்னை எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எனக் கேட்கிறார் (தனுஜாவின் பெண்மைத்தன்மையின் நிமித்தம் சிறுவயதில் இந்த மாமாவின் வன்முறை மிகுந்த கொடுமையானது). அப்படி அந்தப் பெண்தன்மையை வெறுத்த மாமா தனுஜாவை முத்தமிடுகிறார். வாயில் பாம்பு கடிப்பதைப் போல அதிர்ந்துபோனேன் என்று சொல்கின்ற தனுஜா 'இவ்வளவு தானடா உங்கள் குடும்பப் பாசம்? இவ்வளவு தானடா உங்களது தமிழ்ப்பண்பாடு' என நினைத்துக்கொள்கிறார்.


பிறகு அவரோடு உடலுறவில் ஈடுபடுகிறார். நீங்கள் என்னை எவ்வளவோ அடக்கி வைத்திருந்தாலும், நான் எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பெண்ணாக மாறிவிட்டேன். என் ஆன்மா விரும்பியதை நான் சாதித்து விட்டேன்' என்பதை அந்த உடலுறவின் மூலம் அவருக்கு அறிவித்தேன்' என்கின்றார் தனுஜா.


இப்படிச் சிறுவயதில் கொடுமை செய்த மாமாவுக்கு அவர் வித்தியாசமான ஒரு 'பழிவாங்கலை'ச் செய்கின்றார். ஆனால் வாசிக்கும் நமக்கோ அதிர்ச்சி வருகின்றது. அதையும் புரிந்துகொள்கின்ற தனுஜா இறுதியில் இவ்வாறு கூறுகின்றார்:

"ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. பொது அறங்களால், பொது நீதியால், பொதுக் கலாசாரங்களால், பொது இலக்கியங்களால், பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுதும் வஞ்சிக்கப்படவர்களான எங்கள் பயணம் புதிர்வட்டப் பாதை. இந்தப் புதிரை  யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள் கூட அவிழ்த்ததில்லை."


.................................................


(நன்றி: ‘கலைமுகம்’-  ஜனவரி-மார்ச், 2021 -  இதழ் 71)

0 comments: