கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

A Kind of Magic

Thursday, October 07, 2021

1.

உங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் அற்புதம் நடந்தது. இயற்கையின் மீது வர்ணத்தை யாரோ விசிறியதுபோல, சட்டென்று நிறையப் பறவைகள் செம்மஞ்சளும், நீலமும், சாம்பலாகவும் தரையில் வந்திறங்கின. இவர்களோடு அறிமுகஞ் செய்யவேண்டும் என்ற ஆவலில் முயலார் அதேகணத்தில் பற்றைக்குள்ளிலிருந்து வந்துசேர்ந்தார். யாரோ ஒருவர் மாந்தீரிகக்கோலால் தட்டிவிட, இவையெல்லாம் நிகழ்வதுபோல நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நானும், நீங்களும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்போமா என்று நீங்கள் கேட்டபோதுதான், இந்த அற்புதம் இடைவெட்டிப் போயிருந்தது. தொலைவில் இருந்தால் என்ன, நமக்கான திரையில் காலத்தின் நேர்கோட்டில் வெவ்வேறு வெளிகளில் இருந்தபடி ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியிருந்தோம்.
இது நாங்கள் பார்த்த திரைப்படத்தைப் பற்றியது அல்ல.

இது இன்னொருவனைப் பற்றியது. அவன் வீட்டில் தனிமைப்பட்டவனாக இருக்கின்றான். அந்தப் பொழுதுகளில் தனக்கான ஒரு இசைக்குழுவைக் கண்டுபிடிக்கின்றான். அதற்குப் பிறகு நடப்பவை எல்லாம் வரலாறு. அவனது இசைக்குழு பிரபல்யமாக அடைகின்றபோது, அவனுக்கு ஒரு காதலியும் வாய்க்கின்றாள். ஆனால் வருடங்கள் கழியக் கழிய அவன் தன்னையொரு இருபாலினராகக் கண்டுகொள்கின்றான். அவனை அவளால் புரிந்துகொள்ளமுடிந்தாலும், அவனை விலக்கி ஒரு வாழ்வை அவள் தேர்தெடுத்துக் கொள்கின்றாள். ஆனால் அவனது காதல் தொடக்கத்தில் அவள் மீது இருந்ததுபோலவே இறுதிவரை இருப்பது அவ்வளவு அழகு.
அந்த இசைக்குழு ஐரோப்பா, அமெரிக்கா எங்கும் புகழ்பெறுகிறது. புகழின் உச்சிக்குப் போகும் எந்த நிகழ்வோ/தனிமனிதரோ பிறகு ஒரு துன்பியல் நாடகத்தைப் பெரும்பாலும் சந்திக்கவேண்டித்தான் இருக்கிறது. இவனும் அதைச் சந்திக்கின்றான். நான் அதைப் பற்றி அவ்வளவு பேசப் போவதில்லை.
ஆனால் இந்தக் கலையையும், கலை தேர்ந்தெடுக்கின்ற மனிதர்களையும் பற்றியே யோசிக்கின்றேன். அது தன்னியல்பிலே, எவருமே அறியாமலே அவரவர்க்குள் நிகழ்வதென்றே நினைக்கின்றேன். 'நாம் கலைக்குத் தாரை வார்த்தவர்கள்' என்பவர்கள் குறித்தோ, கலைஞர்க்கு இயல்பாய் இருக்கக்கூடிய பிறழ்வை அது கலைக்கான பாதை என்று தங்களையும் பிறரையும் சிதைக்க ஓர் கருவியாகப் பாவிப்பவர்களையும் புன்னகையால் விலத்தி வரவிரும்புகின்றேன்.
தியானம் நிகழ்வது என்பது தியானஞ் செய்கின்றோம் என்று யோசிக்காமல், தன்னியல்பில் நிகழ்வதைப் போலத்தான், கலைகளும் நிகழ்கின்றது என்று நினைக்கின்றேன். அது எனக்கு எழுதிக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் நடப்பது போல உங்களுக்கு கலைப்படைப்புக்களில் மூழ்கும்போதோ, இன்னொருவருக்குப் பாடிக் கொண்டிருக்கும்போதோ நிகழலாம்.
அவ்வாறு நிகழும்போது இவ்வாறு நிகழ்கின்றதே என்று சந்தோசப்படலாமே தவிர, அவ்வாறு நிகழ்வதற்கு நாம் ஒருபோதும் காத்திருக்கவே முடியாது. எந்தப் படைப்பையும் திரும்ப திரும்ப முயற்சிப்பதன் மூலம் செம்மையாக எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளலாம். ஆனால் அசலான படைப்பு என்பது அது படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது மட்டும் தற்செயலாக நிகழ்வது.
அவை எப்போது நிகழ்கின்றன என்பது சிறந்த கலைஞர்க்குத் தெரியும். ஆகவேதான் அவ்வகையான படைப்புக்கள் பிற்காலங்களில் நிகழமுடியாமல் போகின்றபோது அவர்களில் பலர் மனப்பிறழ்வுக்குள்ளாகின்றார்கள், தற்கொலையை நாடுகின்றார்கள். அந்த ருசியை அறிந்தவர்கள் ஒருபோதும் நகல்களை கலையாக்க என்றுமே விரும்பமாட்டார்கள்.

2.

நீங்கள் நட்சத்திரங்களையும், அதற்கப்பால இருக்கும் விந்தைகளையும் பேசிக்கொண்டிருந்தீர்கள். அதுமட்டுமில்லாது இந்தப் பூமியில் இருக்கும் சிறு உயிரிவரை உங்களை அதிசயக்க வைத்துக்கொண்டிருக்கின்றது என்றும் விவரித்துச் சொல்லத் தொடங்கினீர்கள். இந்த உரையாடல் நானொரு ஸென் கதையைச் சொல்லத் தொடங்கியதில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும்.

ஒரு ஸென் துறவி வண்ணத்துப்பூச்சியைக் கனவில் கண்டுவிட்டு, வண்ணத்துப்பூச்சி தன்னை அது தன் கனவில் கண்டால் எப்படியிருக்கும் என்று யோசிப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதன் நீட்சி நாம் வாழும் இந்த வாழ்க்கை உண்மையானதா? அல்லது நாம் யாரோ ஒருவரின் கனவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா என நம்மை யோசிக்கவைப்பதாய்ச் செல்லும்.
கடலுக்குள் இருக்கும் ஒரு உலகத்தைப் போல, கனவுகளும் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்கள். உங்களுக்கான ஒரு செயல்திட்டத்தின் ஆக்கமொன்றைச் செய்துவிட்டு, எனது சாயல் அதில் வந்துவிட்டது கவனீத்தீர்களா எனக் கேட்டீர்கள். அதை நீங்கள் அறியாமல் நிகழ்ந்துவிட்டதென்பது உங்களுக்கும் தெரியும், அதில் என் சாயல் வந்தது தற்செயல் என்பது எனக்கும் தெரியும்.

3.

அவன் இப்போது தன் இசைக்குழுவிலிருந்து, கூடா நட்பொன்றின் நிமித்தம் பிரிந்துவிட்டான். தனியே சென்று பாடுகின்றான். வழமையான இசைஞர்கள் அடிமையாவதுபோல மதுவுக்கும், போதைமருந்துக்கும் தன்னைத் தாரை வார்க்கவும் செய்கிறான். மேலும் அவனுக்கு இப்போது -அன்றைய- உயிர்கொல்லி நோயான எயிட்ஸும் வந்துவிட்டது. அதையும் தனது புறக்கணிக்கப்பட்ட காதலைப் போல ஏற்றுக்கொள்ளவே செய்கின்றான்.
பிரிந்த இசைக்குழு மீண்டும் ஒரு நற்காரியத்துக்காய் இணைகின்றார்கள். நண்பர்களிடம் தன் உயிர்க்கொல்லி நோயின் வீரியத்தைக் கூறி நான் வாழ்வது இன்னும் கொஞ்சக்காலந்தான் ஆனால் நீங்கள் வருந்தக் கூடாது என்றும் சொல்கின்றான். நான் பிறந்ததே perfomance செய்யத்தான். அதை ஒருபோதும் கைவிடமாடேன் என்று சொல்கின்றவன் தனது 45 வயதில் இறந்து போகின்றான்.
"Whatever happens, I'll leave it all to chance
Another heartache, another failed romance, on and on
Does anybody know what we are living for?
I guess I'm learning
I must be warmer now..."
என்று சொன்னவன், தனக்கான வாழ்வை வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கின்றான். அவன் சொன்னதுமாதிரி நாமிருக்கின்றோமோ இல்லையோ எப்போதும் The Show Must Go On இல்லையா?
அவனின் வாழ்க்கையை அறிந்துபோதும், அவனின் பாடல்களைக் கேட்டபோதும், நான் பல தடவைகள் அழுதிருக்கின்றேன் என்பதை உங்களால் நம்பமுடியுமா......? அவனின் எந்தப் புள்ளியில் என்னைப் பொருத்திப் பார்த்தேனோ தெரியாது. இது கூட நானறியாமல்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்.
அதையெல்லாம் இப்போது துடைத்தெறிந்துவிட்டு, அவன் பாடியதைப் போல Tonight I'm gonna have myself a real good time என்றுதான் சொல்ல விரும்புகின்றேன்.
ஏனென்றால் எனக்கு அருளப்பட்ட உயிர்ப்பின் பசுமையுடன் நானின்னும் இந்தப்பூமியில் இருக்கின்றேன். உங்களோடு கனவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
*************************************
(தலைப்பிலிருந்து, பாடல்கள் வரிகள் வரை ,அனைத்திலும் இருப்பது Freddie Mercuryம் அவனது Queen இசைக்குழுவும்)
-May, 2021-

0 comments: