கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குறிஞ்சித்திணை நேசம்

Wednesday, June 12, 2024


சந்தகாலத்தில் வந்திருக்கின்ற இந்தப் பனிப்பொழிவு உன்னை நினைப்பதற்காகத்தான் வந்திருக்கவேண்டும். நிலத்தையும் மரங்களையும் பனி, வெண்முகிலாய்ப் போர்த்தியிருக்க எல்லாமே நிசப்தத்தில் உறைந்திருக்கின்றன. பனி மூடிய மலையுச்சிகளிலும், மரங்கள் அடர்ந்த காடுகளிலும் புத்த மடாலயங்கள் அமைந்திருப்பதற்கு, அது மனதை எளிதாக அழைத்துச் செல்லும் அமைதியின் பாதைகளுக்கு எனலாம். பனியைப் பார்க்க உள்ளம் தன்னியல்பிலே நிரம்பும். இந்த வாழ்வே போதுமென மந்திரம் போல சொற்கள் விரியும். மனிதர்களை அவர்களின் அத்தனை தத்தளிப்புக்களோடு அள்ளியணைக்க நெஞ்சம் ததும்பவும் செய்யும்.


'நமக்கு இரண்டு வாழ்க்கை இருக்கின்றன. எமக்கு ஒரு வாழ்வுதான் இருக்கின்றது என்று உணரும்போது, நமது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது' என கன்பூஸியஸ் கூறியதைப் போல, எனக்காகத் தரப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பத்தில்தான் நானுனது நேசத்தை உணர்ந்து கொண்டேன். முதலாவது சந்தர்ப்பத்தில் காதல் என்ற பெயரில் தன்முனைப்பும், பொறாமையும், கோபமும் கொண்ட ஒருவனாக உன்னைச் சீண்டியபடி இருந்தேன். ஏன் இந்த நேசம் இவ்வளவு நம்மை காயப்படுத்துகின்றது என்று இருவரும் பிரிந்து போனோம்.


நமக்கான பாதைகள் கிளை விரித்து வெவ்வேறானது. காதல் இன்றி வாழ முடியா உயிரிகளென்பதால் அதன்பிறகு நாம் புதிய காதலர்களை அல்லது பழைய காதல்களைச் சந்தித்தபடி இருந்தோம். ஒருநாள் அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று எனக்கு நிகழ்ந்தபோது ஒரு புதிய நாட்டிலிருந்து உன்னைத் தொடர்புகொண்டேன். எதையுமே அடுத்து சிந்தித்துப் பார்க்க முடியாத உறைந்தநிலையில் இருந்த என்னை அடுத்தடுத்து என்ன செய்வதென்று தொலைவிலிருந்து நீ வழிகாட்டினாய். அன்று நான், நீ அருகிலிருந்தபோது கவனிக்கத் தவறிய. உனது இன்னொரு விசுவரூபத்தைக் கண்டேன்.

'உனக்கு ஒரு பெண்ணோடு இரண்டு காதல்கள் இருக்கின்றன. நீ அப்பெண்ணோடு ஒரேயொரு காதல் வாழ்க்கைதான் இருக்கின்றது என்று உணரும்போது, உனக்கான இரண்டாவது காதல் அவளோடு ஆரம்பிக்கின்றது' என்று கன்பூஸியஸ் எனக்கு மறைமுகமாகச் சொல்லியிருக்க வேண்டும். எனவே ஒரு புதிய பயணத்துக்குத் திட்டமிட்டபோது உன்னால் கூடவே வரமுடியுமா எனக் கேட்டேன். நீ மறுப்பேதுமின்றி வரச் சம்மதித்தாய்.

நீயொரு சகபயணி அதற்கு மேல் இந்தப் பயணத்தில் எமக்கிடையில் எதுவுமில்லை என்று நான் சொன்னது உன்னைக் காயப்படுத்தியிருக்கும். நீயுன் வாழ்க்கையில் என்னைப் போல எத்தனையோ அரைகுறை ஆண்களைச் சந்திருப்பாய். எனவே அந்த சொற்களைத் துடைத்தெறிந்து விட்டு என்னோடு பயணமானாய்.

ரு மலையுச்சி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தோம். விழிகள் அசையும் பக்கமெல்லாம் மலையும் அதன் பசுமையும். மாலையில் சூரியன் மறைகையில் யாரோ செம்மஞ்சளையும், சிவப்பையும் தெளித்துவிட்டால் போல வர்ணஜாலம். மலையிலிருந்து கொஞ்சம் எம்பிப் பறந்தால் முகில்களை எட்டிப் பிடித்துவிடலாம் போல அவ்வளவு அண்மையில் அவை மிதந்தன.

எம் உதவிக்கென்று நின்ற இளைஞனை ஓய்வெடுக்கச் சொல்லி ஒருநாள் அங்கே சமைத்தோம். நீ பிரியாணியும், நான் கோழிக்கறியும் செய்தோம். மலையின் குளிரில் சுடச்சுட எது சாப்பிட்டாலும் மதுரமாகும். உதவிக்கு நின்ற பையனின் கதை கேட்டோம். அம்மாவோடு சண்டைபிடித்து படிப்பை நிறுத்திவிட்டு நண்பனுக்கு உதவிக்கென வந்தவன், இங்கேயே மாதக்கணக்காக நிற்கின்றேன் என்றான். என்ன இருந்தாலும் அம்மா இல்லையா, அழைத்துப் பேசு என்றோம்.

மாதக்கணக்கில் இந்த மலையுச்சியில் தனிமை வாசத்தில் இருந்தவன், நாங்கள் அங்கிருந்து திரும்புவதற்குள் அம்மாவைக் காணவும், கல்லூரிப் படிப்பைத் தொடரவும் போகத் தயாரானான். 'நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா அவனுக்கு பிரியாணியும், கோழிக்கறியும் செய்து கொடுத்தோம், உடனேயே மலையிலிருந்து இறங்கிப் போகின்றானே' என அவனைப் பார்த்து நானும் நீயும் சொல்லிக் கொண்டிருந்தோம். கைகளில் அப்போதிருந்த கொஞ்சப் பணத்தை அவனது ஷேர்ட் பொக்கட்டிற்குள் திணித்தபோது வேண்டாமென்று அவன் மறுத்தபோதும் எங்களுக்கு தம்பி இருந்தால் என்ற 'சென்டிமெண்டால்' அவனை வாயடைக்கச் செய்தோம். தாயைக் காணும் பயணத்தின் இடைநடுவில் அண்ணா/அக்கா, உங்களோடு நான் சேர்ந்தெடுத்த புகைப்படத்தை அனுப்ப மறக்கவேண்டாம் எனத் திருப்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்படி மனிதர்களோடு நெருக்கமாகி, அவர்களை அறிந்து பிரிந்து போவதுதானே வாழ்க்கை. அதுபோலவே காதலும் என்ற புரிதல் சட்டென்று எட்டிப் பார்த்தபோது உன்னை அணைத்து கூந்தலைக் கோதிக் கொண்டேன். அப்போது நான் எம்.டி.வாசுதேவனின் 'மஞ்சு'வை வாசித்துக் கொண்டிருந்தேன். நீ மீராவின் 'யூதாஸின் நற்செய்தி'யை வாசித்து அதன் தாளமுடியாத பாரத்தால் அடிக்கடி பெருமூச்சுவிட்டு நிறுத்தி நிறுத்தி வாசித்தபடி இருந்தாய்.

'மஞ்சு'வில் விமலா ரீச்சர் தனது காதலனுக்காய் நீண்ட காலமாக காத்திருக்கின்றார். அவருக்கு அந்தக் காதலனடோடு கழித்த கொஞ்ச நாட்களே என்றென்றைக்குமாய்ப் போதுமாயிருக்கின்றது. விமலா ஆசிரியர் உணர்கின்ற அதே குளிரும், அவர் காதலனுடன் ஊடாடித் திளைத்த பொழுதுகளும் நமக்கு இப்போது வாய்த்திருக்கின்றது. நாம் இந்த மலையுச்சியில் வந்து இப்படி உணர்வோம் என்று முற்கூட்டியே எம்.டி.வாசுதேவன் உணர்ந்து எழுதியிருக்கின்றார் போலுமென நினைத்துக் கொள்கின்றேன்.

மாலையில் பறவைகள் கூடடையும் சத்தம் கேட்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல வர்ணங்களை இழந்து மலைகளுக்குள் காணாமற் போகின்றது. மலைகளின் வீடுகளின் சமையலறையில் இருந்து புகை எழும்புகின்றது. மனிதர்கள் தம் 'வீடு' அடைந்துவிட்டனர். எனது ஆசிரியரான தாய் அடிக்கடி கூறும் 'I've arrived, I'm home' ஐ என் மனம் தன்னியல்பிலே சொல்லிப் பார்க்கின்றது. 'நான் வந்துவிட்டேன்' என்பது, நான் நிகழில் கணங்களுக்கு வந்துவிட்டேன் என்பதாகும். ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு காலடியும், நாம் இங்கே இப்போது இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்துகின்றது. அவ்வண்ணமே நாம் இவ்வாழ்வைச் சந்தித்து, புத்துணர்ச்சியையும், ஆற்றுப்படுதலையும் பெறுகின்றோம்' என்பதையே இந்த 'நான் வந்துவிட்டேன், நான் வீட்டில் (இருக்கின்றேன்)' என்பதன் அர்த்தமாகும்.

அந்தப் பொழுதில் நான் உணர்ந்தது, 'I've arrived, I'm home'! உன் கரங்களை எடுத்துக் கோர்த்தபடி, 'எம்மால் எவ்வளவு தூரம் இயல்பாகப் போக முடிகின்றதோ, அதுவரைக்கும் நீயென் காதலியாக இருக்கமுடியுமா?' எனக் கேட்கின்றேன்.

வியப்பில் விரிந்த உன் விழிகளில், அவ்வளவு புத்துணர்ச்சியான ஒரு சூரிய விடியலை அவ்விரவில் நான் தரிசித்தேன்.

******************** 


(Mar 23)

ஓவியம்: இணையம்

0 comments: