கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கே.ஆர்.மீராவின் புதினங்கள்

Thursday, June 06, 2024

 

(கே.ஆர். மீராவின் புனைவுகளை வாசித்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசுவாமி ஒரு பதிவைத் தனது முகநூல் பக்கத்தில் எழுதினார். அதன் தொடர்ச்சியாக மீராவின் நாவல்களை முன்வைத்து எழுதிய ஒரு பதிவு இது.)

 

எம். டி.முத்துக்குமாரசுவாமியின் பதிவை வாசிக்க.. 

 

1.


கடந்தவாரம் கே.ஆர்.மீராவின் 'தேவதையின் மச்சங்கள்/கருநீலம்' நூலை வாசித்துவிட்டு, 'இனி கொஞ்சக் காலத்துக்கு மீராவின் புனைவுகளை வாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்' என நினைக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். என்னைப் போலவே மீராவின் இதுவரை தமிழில் வந்த அனைத்து நூல்களையும் வாசித்த நண்பருக்கு இப்படிச் சொன்னது சற்று ஆச்சரியமாக இருந்தது. 'இல்லை, அவர் ஒரு நல்ல எழுத்தாளராக எனக்குள் வந்துவிட்டார், அந்த நிலைப்பாடுடனேயே ஒரு இடைவெளி விட்டுக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்' என்றேன்.

 


மீராவின் புதினங்கள் குறித்து பகிர்ந்த ஒரு கட்டுரையில், 'அகநாழிகை' வாசுதேவன் 'மீராவின் அனைத்துப் படைப்புகளையும் தேடிப் பிடித்து வாசித்தேன். ஒன்றைக் கூட குறை சொல்ல முடியாது. சிறந்த எழுத்தாளர்கள் என நான் கருதும் பலரில் இந்தப் பண்பு காணக்கிடைத்ததில்லை' என்று கூறியிருந்தார். மீராவின் ('ஆராச்சார்') தவிர்த்த படைப்புக்களை வாசித்தவன் என்றவகையில் நானும் வாசுவின் கருத்துக்களோடு உடன்கின்றேன் என அங்கே சொல்லியிருந்தேன். ஒரு படைப்பாளியாக மீரா நீர்த்துப் போகாதபடைப்புக்களைத் தந்தாலும், இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அவர் இன்னொரு மொழியிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகின்றார். அதனால் அவரது சிறந்த படைப்புக்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் தெரிவு மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கின்றது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

 

இப்போது மீராவின் புனைவுகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசுவாமி எழுதிய பதிவைப் பார்த்தேன். அநேகமானஎம்.டி.எம்மின் எழுத்துக்கள் எனக்கு நெருக்கமானவை. இதில் நான் பார்த்த பார்வையிலிருந்து வேறொரு கோணத்தில் எம்.டி.எம், மீராவை அணுகுகின்றார். பல்வேறு பார்வைகள்/ பல்வேறு கோணங்கள் இல்லாது உரையாடல்கள் சாத்தியமில்லை. எனவே எல்லா மாற்றுப் பார்வைகளும் வாசிக்கப்பட வேண்டியவையே.

 

முதலாவதாக எம்.டி.எம்மைப் போல நான் ஒரே தொடர்ச்சியில் மீராவின் நூல்களை வாசித்தவனில்லை. ஒவ்வொரு புதினத்தையும் அவை கைகளில் கிடைக்கும் வேளைகளில் வாசித்திருக்கின்றேன். அநேகமானவை என் பயணங்களில் வாசிக்கப்பட்டவை. எனவே ஒரு உற்சாகமான மனோநிலையில் (அல்லது அப்படி நம்பி) வாசிக்கப்பட்டதால் எம்.டி.எம் கூறுவதுபோல மீராவின் அதீத வாதைகளை நான் அவ்வளவாகத் தொடர்ந்து காவிச் செல்லவில்லை. ஒரு கவிதைத் தொகுப்பை ஒரே 'மூச்சில்' வாசிப்பதற்கும், அதை நாட்கள் எடுத்து ஆறுதலாக வாசிப்பதற்கும் இடையில் எனக்கு வாசிப்பில் வித்தியாசப்படுவதுண்டு.

 

எம்.டி.எம் குறிப்பிடுவதைப் போல, மீரா ஒரேவித படிமங்களை ஒரு புதினத்தில் அடிக்கடி பாவிப்பது சிலவேளைகளில் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றது ("ஒரே படிமம் ஒரு கதையில் மீண்டும் மீண்டும் பலவகையில் சொல்லப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை" - எம்.டி.எம்). ஒரே படிமம் திருப்பத் திருப்ப மீரா பாவிக்கப்படும்போது, சில புதினங்களில் வெவ்வேறு விதமான அர்த்தங்கள் தரப்படும் இடங்களாக இருக்கும்போது அது பலமாக அமைகின்றது. அதேவேளை வாசகருக்கு ஒன்றையே திருப்பத் திருப்ப நினைவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்போது அது பலவீனமாகியும் மாறி விடுகின்றது.

 

 

2.

 

"அதீத வன்முறைகளின் சித்தரிப்புகளும் குரூரமான கதை சொல்லலும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஷோபாசக்தியின் சிறுகதைகளிலும், நாவல்களிலுமே நாம் அவற்றை வாசித்திருக்கிறோம். ஆனால் ஷோபாசக்தியின் கதைகளில் வரும் வன்முறை போரின் சித்தரிப்புகள். மீராவோ தினசரி வாழ்விலிருந்து வன்முறைகளை எழுதுகிறாரா இதயம் பலவீனமான எனக்குத் தாங்கமுடிவதில்லை. இதையே மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனும் ஒரு நூலின் முன்னுரையில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். மேலும் ஷோபாசக்தியின் விலகலான கதைசொல்லல் மீராவிடத்து இல்லை; சிவாஜிகணேசன் போல மிகை உணர்ச்சிக் கொந்தளிப்பில் கதை சொல்வதால் பலவகைகளிலும் பதற்றம் மேலிடுகிறது; அதில் ஒரு வகை அம்மா தாயே என்னை விட்டுவிடு என இறைஞ்சுவது; அது வாழ்க்கையோடும் இறைஞ்சுவது என்ற போதத்தை அடைவது.- எம்.டி.எம்

 

எம்.டி.எம், ஏன் இவ்வளவு வன்முறையாகவும், வாதையாகவும் மீரா எழுதுகின்றார் என ஒரு கேள்வியாக முன்வைக்கின்றார். வாழ்க்கையில் எத்தனையோ துயரமான விடயங்களோடு நாமெல்லோரும் அல்லாடிக் கொண்டிருக்கும்போது மேலதிக வாதைகள் தேவையா என நம் மனம் வினாவுவதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. அப்படியெனில் Frida Kahloவின் படைப்புக்களை நாம் எப்படிப் பார்க்கின்றோம். அவர் தன் வாழ்வின் வாதைகளினால் வந்தவர் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை அறியும்போது தெரிந்தாலும், படைப்பாளியின் பின்புலம் தெரியாமல் அவரின் ஓவியங்களைப் பார்ப்பவர் என்ன நினைப்பார்? 'அம்மா, ஃபிரைடாவே என்னை விட்டுவிடுஎன்று சொன்னால் எவருக்கு இழப்பு?  ஒருமுறை இன்னொரு நகரில் ஒரு வேற்றினத்தவரின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் வீடு முழுதும் ஃபிரைடாவின் அதீத வாதை நிரம்பிய ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து எனக்கு இயல்பாக மூச்சுவிடமுடியாத அவதி வந்திருந்தது. அதற்காக ஃபிரைடாவின் ஓவியங்கள் ஏன் இப்படி இருக்கின்றன எனக் கேட்டல் நியாயமற்றதே.

 

மேலும் எம்.டி.எம், ஷோபாசக்தியின் படைப்புக்களை மீராவின் ஆக்கங்களோடு ஒப்பிடுகின்றார். அவர் கூறும் அவதானங்களில் கூட எனக்கு மாற்றுக் கருத்துக்களுண்டு. போர் என்பது ஒரு பெரும் சமூகத்தைப் பாதிப்பது, அதனால் வரும் கூட்டு வன்முறை/ வாதை என்பது பலர் எளிதாக உணரக்கூடியவை. அதற்காய் ஒரு பெண் குடும்ப வன்முறையால் தனக்கு மூச்சுத்திணறல் வருவதாகச் சொன்னால் மறுத்துவிட முடியுமா என்ன? மேலும் அண்மையில் வரும் ஷோபாவின் புனைவெழுத்துக்களை வாசிக்கும்போது அவருடைய எழுத்து வாதைக்குள் சிக்கிக் கொண்டு தொடர்ந்து உழன்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். புலம்பெயர்ந்த கதைசொல்லிகளை/பாத்திரங்களை அநேகமாக எழுதும் ஷோபா எல்லோரையும் மனம்பிறழ்ந்தவர்களாக/ இயல்பு வாழ்க்கை வாழமுடியாதவர்களாகச் சித்தரிக்கும்போது, ‘போதும் ஷோபா நிறுத்துங்கள்என வாசிக்கும்போது  சிலவேளைகளில் எனக்குத் தோன்றுவதுண்டு.

 

புலம்பெயர்ந்த நாங்கள் எல்லோரும் அப்படியா இருக்கின்றோம். இவற்றையெல்லாம் தாண்டி எங்களுக்கு வேறொரு வாழ்வும் இங்கு இருக்கின்றது அல்லவா? பதின்மத்தில் இயக்கத்துக்குப் போய், 2-3 வருடங்களில் இயக்கத்தை விட்டு விலகியோ/விலத்தப்பட்டோ வெளிவந்த ஷோபாசக்தியின் போரில்லாதபுலம்பெயர் வாழ்வு 30 வருடங்களுக்கு மேலாக இருக்கும்போது, அதுவும் கிட்டத்தட்ட மூன்று புதிய தலைமுறைகள் வந்தபின்னும் ஏன் ஷோபாவின் புனைவுகளில் வாதைகள் இலலாத/ போர் அல்லாதஒரு புதினம் முழுமையாகத் தோன்றவில்லை என்று நாமும் கேட்கலாம். எம்.டி.எம் கூறுவதுபோலஷோபாவின் சிறுகதைகள் வேண்டுமெனில் இறுதியில் நம்பிக்கைகக் கீற்றுக்களோடு முடிந்தாலும், அவரின் நாவல்களில் அதீத வாதைகளுடன், அவநம்பிக்கையான முடிவுகளை நோக்கிப் போவதை நாம் தெளிவாகக் காணலாம். அதாவது ஒரு கடும் கையறு நிலை!

 

என்ன செய்ய, எம்.டி.எம், நீங்கள் மீராவை உணர்வதைப் போலத்தான், ஷோபாவை விடவும் போரின் கோரங்களை ஈழத்தில் இன்னும் இருந்து பார்த்து, வெளியில் வந்த நானும்/ எனக்குப் பின் வந்தவந்த தலைமுறையில் சிலரும் ஷோபாவின் எழுத்துக்களில் உணர்கின்றோம். அது கூடப் பரவாயில்லை, ஷோபாவின் பாதிப்பால் வந்த/வருகின்ற அடுத்த தலைமுறையும் ஷோபாவைப் போல அதீதமான வன்முறையையும்/வாதையையும் தான் எழுதிச் செல்கின்றது. எப்படி இந்த மூச்சுத்திணறல்களில் இருந்து வாசகராக நாம் தப்பித்துக் கொள்வது? மீராவிடமாவது ஒரு மோகினிப் பிசாசு இருந்தது, புளியமரத்தடியில் அதைக் கொண்டு பேய் ஆணியடிக்கலாம். நம்மிடம் இருக்கும் போர் அரக்கன்களுக்கு புளியமரங்களே போதாது. எங்களோடுதான் வாழ்விலும் எழுத்திலும் கூட வந்தபடி இருக்கின்றன.

 

3.

 

'யூதாஸின் நற்செய்தி'யில் வரும் பெண் போல, 'மீரா சாது'வில் பெரும் பெண் போல, ஏன்'தேவதையின் மச்ச'ங்களில்' அநியாயமாக இறந்துபோன ஏஞ்சலா போல எத்தனையோ பெண்களை நான் இன்றைக்கும் அறிவேன் (அண்மையில் கூட இங்கு தனது கணவனை விட்டுப் பிரிந்த இளம் தமிழ்ப்பெண், இந்த ஏஞ்சலாவைப் போலத்தான் கணவனால் வேலைக்குச் சென்று திரும்பும் வழியில் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றாள்). அவர்களில் பலர் சொல்லிக் கொண்டிருக்கின்ற கதைகளில் இருக்கும் வன்முறையை/வாதையைக் கேட்டு, சிலவேளைகளில் இதற்கு மேல் என்னால் கேட்கமுடியாது என்று தப்பியெல்லாம் ஓடி வந்திருக்கின்றேன். மனதில் மட்டுமில்லை, உடலிலும் இரணங்களோடு வாழ்கின்றவர்களை/அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் நினைவுபடுத்த இருக்கும் உடல் காயங்களை எல்லாம் கண்டிருக்கின்றேன்.

 

இத்தனைக்கும் ஒருகாலகட்டம் வரைக்கும் போரிற்குள் இருந்த என்னாலேயே இந்த வாதைகளின் கதைகளையே கேட்கமுடியாது போயிருக்கின்றது என்பதுதான் ஆச்சரியமானது. இறுதிப் போரில் 'அதிசயத்தக்கதாய்' தப்பிய ஒரு தோழி இன்று எங்கள் எவராலும் கற்பனையே செய்து பார்க்கமுடியாத குடும்ப வன்முறைக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதை நான் அறிந்தும், எதையும் செய்யமுடியாத கழிவிரக்கத்தோடு பார்த்தபடி இருக்கின்றேன்.

 

இவை அனைத்துக்கும் முன் மீரா எழுத்தில் வைக்கும் வாதைகள் ஒன்றுமேயில்லை. இந்த நாளாந்த வன்முறை எப்படி ஓவ்வொருவரின் கழுத்தையும் இறுக்கின்றதென்பதை மீராவை வாசித்து மேலும் பலர் எழுத வரக்கூடும் அல்லது ஆகக்குறைந்தது மீராவின் எழுத்துக்கள் 'நாங்கள் தனித்திருக்கவில்லை' என்ற நம்பிக்கையையாவது கொடுக்கும். அதற்காகவேனும் மீராவை வாசிக்க வேண்டும் என்பேன். ஆனால் நான் இனி கொஞ்சக்காலத்துக்கு 'ஆராச்சார்' உள்ளிட்ட மீராவின் படைப்புக்களை வாசிக்கப் போவதில்லை. எல்லாவற்றும் ஓர் இடைவெளி இருப்பது அவசியந்தானில்லையா?

 

************



(Mar 20, 2024)

0 comments: