கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 37

Monday, June 24, 2024

 

'எழுநா' இதழுக்கு எழுதுவதற்காக, ஷியாம் செல்வதுரையின் 'Hungry Ghosts' ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவல் 2013இல் வெளிவந்தபோதே வாசித்துவிட்டேன். ஷியாமின் Funny Boy, Cinnamon Gardens வெளிவந்த 15 வருடங்களுக்குப் பின் Hungry Ghosts வந்ததால் அதற்கு ஒரு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஷியாமும் இந்த நாவலே, தான் ஒரு எழுத்தாளன்தான் என்கின்ற நம்பிக்கையை முதன்முதலாகத் தனக்குத் தந்ததென்று ஒரு நேர்காணலில் கூறியுமிருந்தார். அவரின் கவனம் பெற்ற முதலாவது நாவலான 'விசித்திரமான சிறுவன்' வந்து 20 வருடங்களுக்குப் பின்னே, ஷியாம் தானொரு எழுத்தாளன் என்று நம்பிக்கை கொள்கின்றார் என்றால், நம் தமிழ்ச்சூழலில் 'எழுத்தாளர்கள்' என்று எழுத வந்தவுடனேயே பிரகடனம் செய்கின்றவர்களைப் பார்த்தால் நமக்குக் கொஞ்சம் திகைப்புத்தான் வரும்.

ஷியாமின் இந்த மூன்று நாவல்களின் பின்னணியும் கிட்டத்தட்ட ஒன்றே போலவே இருப்பவை. அவரின் நாவலின் முக்கிய பாத்திரம் இலங்கையில் தமிழ்-சிங்களப் பெற்றோருக்குப் பிறந்த ஒரு ஆணாகவும், அந்த ஆண் தற்பாலினராகவும் இருப்பார். இலங்கையில் தமிழர் என்ற அடையாளத்துடன் இருப்பது ஒரு விளிம்புநிலை என்றால், அந்த தமிழ் அடையாளத்தில் தற்பாலினராக இருப்பது இன்னும் விளிம்புநிலையானது. எனவே ஷியாமின் பாத்திரங்கள் அவ்வளவு சிலந்திவலைப் பின்னலாகவும், எளிதில் புரிந்துகொள்ள முடியாத அடையாளச் சிக்கல்களைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று ஆங்கிலத்தில் எழுதும் நமது புதிய தலைமுறைக்கு ஒரு பாதையை 30 வருடங்களுக்கு முன் புலம்பெயர் சூழலில் உருவாக்கித் தந்த முக்கியவராக ஷியாமைச் சொல்லலாம். புலம்பெயர்ந்த தமிழர் என்றவகையில் மட்டுமில்லாது, தற்பாலினர்க்கும் அவர் புதிய திசைகளை அறிமுகப்படுத்தியவர். மேற்கத்தைய சூழலில் விளிம்புநிலையினராக இருந்த (வெள்ளையின) தற்பாலினர் சமூகத்திலும், ஆசிய நாட்டவர்/மண்ணிறத்தவர் இன்னும் விளிம்புநிலையாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்ற குரல் ஷியாம் போன்றவர்களின் படைப்புக்களிலேயே தீவிரமாக முதன்முதலாக முன்வைக்கப்பட்டுமிருந்தன. 

 

'பசித்த பேய்கள்' 1983 இனக்கலவரத்தோடு கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதை. சிவன் 19 வயதில் இலங்கையில் உயர்தரப் பரிட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 84 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாயுக்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், 83 கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் அந்தப் பொழுதில் காப்பாற்றுகின்றது.

கனடாவுக்கு வரமுன்னரே தானொரு Gay என்பதை உணர்கின்ற சிவனுக்கு, கனடாச் சூழல் ஒரளவு சுதந்திரமான உணர்வைத் தருகின்றது. ஆனால் இங்கேயும் அவர் தற்பாலினராக இருப்பதால் சுரண்டப்படுகின்றார்/ஒடுக்கப்படுகின்றார். யோர்க் பல்கலைக் கழகத்தில் படிக்கும் சிவன், பின்னர் நான்கு வருடங்களில் இலங்கைக்கு அவரது அம்மம்மாவைப் பார்க்கத் திரும்புகின்றார்.

அப்போது ஜேவிபியின் இரண்டாம் 'புரட்சி'க்காக ஆயுதப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்றது. தமிழரின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடக்கின்றது. நாடு பூராவே கொந்தளிப்பில் இருக்கின்றது. இலங்கை திரும்பும் சிவன், தனது பதின்மக் காதலரான மிலி ஜெயசிங்கேயுடன் தனது காதலை மீளக் கண்டடைந்துகொள்கின்றார். காதலும், காமமும், குதூகலமாக இருக்கும் இந்த இணையின் உறவு ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவத்துடன் முடிவுக்கு வருகின்றது.

அதன்பிறகு அதுவரைக்கும் மிகுந்த பாசத்துடன் இருக்கும் அம்மம்மாவைச் சிவனால் மன்னிக்க முடியாதிருக்கின்றது. மீண்டும் கதை கனடவுக்குப் புலம்பெயர்கின்றது. அது ரொறொண்டோ, பின்னர் கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவர், அங்கே புதிய காதலை சிவன் கண்டடைதல், காதல் பிரிவு, குடும்ப இரகசியங்கள் எனப் பல பதிவாகின்றன.

ஒருவகையில் ஷியாம் தனது கதைகளைத்தான் பல்வேறு பின்னணிகள்/ கதைமாந்தர்களினூடாகச் சொல்கின்றாரோ என அவரது மூன்று புதினங்களையும் வாசிக்கும்போது தோன்றுகின்றது. ஒரு குட்டித் தீவில், கிழக்கும் மேற்குமாகப் போனால் 250 கிலோமீற்றர்களும், வடக்கும் தெற்கும் போனால் 450 கிலோமீற்றர்களும் இருக்கும் ஒரு நாட்டில் இருந்த வந்த நமக்குத்தான் சொல்ல எத்தனையெத்தனை கதைகள் இருக்கின்றன. இந்தக் குட்டித்தீவில் என்ன வளந்தான் இல்லையென ஒரு பயணியாகப் பயணிக்கும்போது வியப்பு வருவதைப் போல, இதே நாட்டில்தான் இந்தளவு இரத்த ஆறு ஓடியிருக்கின்றதா என்கின்ற திகைப்பும் வருவதைத் தவிர்க்கவும் முடிவதில்லை.

இன்றைக்கு ஷியாமுக்கு பின்னர் எழுதவந்த அனுக்கோ, வாசுகியோ, சங்கரியோ, நயோமியோ யாராக இருப்பினும் ஷியாமின் எழுத்துக்களின் பாதிப்புக்கள் எங்கோ ஓரத்தில் அவர்களிடம் இருப்பதை நாங்கள் எளிதாக கண்டுகொள்ள முடியும். அந்தவகையில் ஷியாம் பலவகையில் ஒரு முன்னோடிதான். ஷியாமின் எழுத்துக்களைத் தாண்டிப் போவதுதான் புதிதாக இலங்கைச் சூழலையும், புலம்பெயர் சூழலையும் எழுத வருகின்ற ஆங்கிலத்தில் எழுதும் தலைமுறைக்கு இருக்கும் முக்கியமான சவாலாக இருக்கும். அதேசமயம் ஷியாம் தனது comfort zone ஐ தாண்டி எழுதும்போதுதான் அவரது அடுத்த கட்டத்துக்கு பாய்ச்சலைச் செய்வதாக அமையும். இல்லாவிட்டால் ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுகின்றார் என்கின்ற விமர்சனக் குரல்களை கேட்கவேண்டிய நிலையும் அவருக்கு ஏற்படக்கூடும். அது தமிழில் எழுதும் பலருக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதையும், அது அவர்களின் வீழ்ச்சியாக சமகாலத்தில் மாறிக்கொண்டிருப்பதையும் நாமறிவோம்.

***************

(Jun 2024) 

0 comments: