கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - ‍ 39

Tuesday, July 02, 2024

 ஓவியம்: குலராஜ் (மட்டக்களப்பு)


1.

நான் வேலை செய்யுமிடம் நகரின் மத்தியில் ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றையொட்டி (Lake Ontario) இருக்கின்றது. முக்கியமான ரெயின் நிறுத்தமான யூனியன் ஸ்ரேசனில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் அந்த அமைவிடம் இருக்கின்றது. நம் பெருநகரின் பேருந்து சேவையை விதந்து மாளாது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலைக்குத் தாரை வார்த்து, மிகுதியை போக்குவரத்திற்குக் கொடுக்க வேண்டி வரும். இதனால் இங்கிருப்பவர்க்கு வாழ வீடே தேவையில்லை என்று கனடிய அரசும் வீடுகளை விலையை மில்லியனுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மக்களின் மனம் அறிந்த நல்லரசு வாழ்க!

இடமேயில்லாதபோதும், வாவியை ஒட்டியும்/வெட்டியும் பல அடுக்கங்கள் வானை நோக்கி எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அமைக்கப்பட்டிருந்த‌ தெருக்களோ இன்னுமின்னும் சுருங்கியபடி போகின்றன. அநேகமாக ரெயின் நிலையத்திலிருந்து 2 கிலோமீற்றர்களை நான் நடந்தே கடந்து போய்விடுவேன். ஏற்கனவே ஏற்றங்களில் ஏறும்போது கால்களில் வலியொன்று வந்து போவதுண்டு. அத்தோடு அண்மையில் ஆடவரோடும், பூவையரோடும் பூப்பந்து விளையாடத் தொடங்கியதாலோ என்னவோ கொஞ்சத்தூரம் நடந்தவுடனேயே வலி விண்விண்னென்று காலில் வலி ஏறி நீண்டதூரம் நடக்கமுடியாமல் செய்கிறது. கால்களே, என் காதல்களைப் போல ஏன் என்னைக் கஷ்டப்படுத்துகின்றீர் என அவற்றிடம் கெஞ்சினாலும் அவை என் குரலைக் கேட்பதில்லை. இருவருமே அவ்வளவு பிடிவாதக்காரர்கள்!


வாவியையொட்டி வேலைத்தளம் இருப்பதாலும், பேருந்துப் பயணம் அவ்வளவு எளிதில் இல்லாதிருப்பதாலும், அந்த கட்டடத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்க்குமென தனிப்பட்ட பேருந்து சேவையை எமக்கு வழங்குகின்றார்கள். அந்த பஸ் யூனியன் ஸ்ரேசனில் இருந்து எம்மை அழைத்துச் செல்லும்.

2.
அந்தப் பேருந்துச் சாரதிகள் அவர்களின் மனோநிலைக்கேற்ப இசையையோ அல்லது சமகாலச் செய்திகளையோ போடுவார்கள். நான் இவற்றைப் பெரிதும் ஊன்றிக் கவனிப்பதில்லை. இணையத்தில் சதுரங்கம் ஆடுவதிலோ அல்லது இன்றைக்கு எந்தப் பெண் அழகான ஆடை அணிந்திருக்கின்றார் என்று என் 'இரசனை'யை வளர்ப்பதிலோ என் பெரும்பாலான நேரங்கள் போய்விடும்.

இன்றைக்கு எமது நிறுவனத்துக்கு ஒரு முறைப்பாடு வந்திருந்தது. காலையில் இதமான மனதோடு பஸ் ஏறும் எங்களுக்கு சாரதிகள் மிகவும் 'சென்ஸிட்டிவான' செய்திகளை ஒலிபரப்புகின்றார்கள். முக்கியமான மத்திய கிழக்கில் நடக்கும் போர் பற்றிக் கேட்கும்போது எம்மை அவை trigger செய்கின்றது. இதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என ஒருவர் கேட்டிருந்தார்.

இந்த முறைப்பாடை இரண்டு விதமாகப் பார்க்கலாம். போருக்குள் இருந்து வந்தவர்க்கோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்டவர்க்கோ உளவடுக்கள் இருந்து, ஆற்றுப்படுத்தும் காலத்தில் இருக்கும்போது, இவ்வாறான செய்திகள் துர்நினைவுகளை ஒருவருக்குள்
இழுத்துவிடும் ஆபத்து இருக்கின்றது. மற்றது, உலகில் என்ன நடந்தாலும், எங்கள் வாழ்வு நிம்மதியாக இருந்தால் போதும் இதையெல்லாம் கேட்க/பார்க்க முடியாது என்கின்ற மனோபாவம்.

உதாரணத்துக்கு இலங்கைக்குப் போகின்ற பெரும்பாலான இந்திய‌ தமிழ் எழுத்தாளர்க்கு, இலங்கையில் ஒரு கடும்போர் நெடுங்காலமாக நடந்ததென்ற சிறுதுளி நினைவுகூட‌ அவர்களுக்குள் இருக்காது, இலங்கையில் எனக்கு வாசகர் இல்லை என்றோ, இலங்கையில் தெருநாய்கள் அதிகம் என்று எதையெதையோ எழுதி தங்களைத்தான் முன்னிலைப்படுத்துவார்களே தவிர அங்கே ஒரு பாதிப்படைந்த தரப்பு அல்லாடிக் கொண்டிருக்கின்றதென்பது அவர்களின் 'ஊழ்கத்தில்' கூட எழாது. இவர்களால் நமது இலக்கியங்களை மட்டுமில்லை, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எத்தகைய உளவடுக்களில் போர் நிமித்தம் சென்றோம்/இன்னும் பலர் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதார அறிதல் கடினம்.


இவர்கள் இப்படி போரையும், போரின் பின்விளைவுகளையும் பற்றி அறிந்து இருக்க வேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயம் இல்லை. ஆனால் இந்த அறிதலினூடே இலங்கையிலிருக்கும் மக்களையும், கலை/கலாசாரங்களையும் அணுகவேண்டும். இவ்வாறுதான் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து எழுதும் பெண்களுக்குமான பார்வையை நான் முன்வைப்பேன். இந்தப் பெண்கள் எந்தச் சலுகையையும் எதிர்பார்த்து எழுதப்போவதில்லை. ஆனால் நாம் பெண்கள் எழுதும் படைப்புக்கு ஒரு பார்வையை வைக்கின்றோம் என்றால், இந்த மனநிலை நமக்குப் பின் தளத்தில் மறைமுகமாக நிற்றல் அவசியம். பெண்களுக்கு மட்டுமில்லை, தற்பாலினர்,தலித்துக்கள், திருநங்கைகள் என அனைத்து விளிம்புநிலையினர்க்கும் பொருந்தக்கூடியதே. மேலும் ஒருவர் (ஆணாக இருப்பதால்/ஆதிக்க சாதியாக இருப்பதால்) தமக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய‌ சலுகைகள் (privileges) பற்றியும் யோசித்தாக வேண்டும்.

3.
இந்த முறைப்பாடு செய்த நபர், செய்திகளில் உக்ரேன்X ரஷ்யா போர் பற்றிய செய்திகள் கேட்கும்போது இதற்குமுன் இவ்வாறுதான் முறைப்பாடு செய்தாரா என்றும் தெரியவில்லை. அவருக்கு பாலஸ்தீனத்தில் நடக்கும் இனவழிப்பு மட்டும் மனதை நோகச் செய்கின்றது என்றால், ஏனென்று அவர்தான் யோசிக்கவேண்டும். எல்லாவற்றையும் வடிகட்டி அமைதிப் பூங்காவைக் கட்டியமைப்பது சரியா என்றும் அவர் வினாவவேண்டும்.

நாம் வாழும் மேற்கத்தைய நாடுகள் மட்டுமின்றி, வாழ்வில்/மகிழ்ச்சியில் உயரதரத்தில் இருக்கும் ஸ்கண்டிநேவிய நாடுகள் ஏன் ஆயுத உற்பத்திகளை செய்துகொண்டும், ஏற்றுமதி செய்துகொண்டுமிருக்கின்றதென்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு, தொடக்கத்தில் இந்தியாவோ, பின்னாளில் பிறநாடுகளோ எமது இயக்கங்களுக்கும் இலங்கை அரசுக்கும் ஆயுத விநியோகம் செய்யாவிட்டால், அந்தச் சின்னஞ்சிறு தீவு இந்தளவுக்கு போரில் சின்னாபின்னாமாகிப் போகாது இருந்திருக்கும் அல்லவா?

நான் வேலை முடிந்து மாலை நேர நிறுவன பஸ்சிற்காய்க் காத்துக் கொண்டு நின்றேன். போக்குவரத்து ஊர்ந்து கொண்டிருந்ததால் எமக்கான பஸ் நெடுநேரமாய் வந்து சேரவில்லை. அப்போது காரில் சென்ற ஒருவர் என்னை ஏற்றிக் கொண்டார்.

அவர் எங்கள் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளாராகப் பணிபுரிபவர். அவ்வப்போது சிறு அறிமுகம் செய்துகொண்டிருந்தாலும், ஆறுதலாக இருந்து நாம் இதற்கு முன் பேசவில்லை. போக்குவரத்து ஊர்ந்து ஊர்ந்து சென்றதால் 30 நிமிடங்களுக்கு மேலாக நமது 2 கிலோமீற்றர் பயணம் தொடர்ந்திருந்தது.

அதனால் எங்களுக்குப் பேச நிறைய நேரமிருந்தது. அவர் எரித்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். எரித்தியாவை இத்தாலி, இங்கிலாந்து என்பவை காலனிப்படுத்தியவை. 1990களில் எரித்திரியா எத்தியோப்பாவிலிருந்து கடைசியாக சுதந்திரம் பெற்று தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. நிறைய நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதியோ பின்னாட்களில் சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரின் கட்சியைத் தவிர வேறெந்த கட்சிக்கும் அங்கே இப்போது இடமில்லை. எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மக்கள் எந்தக் கேள்விகளுமில்லாது ஒடுக்கப்படுகின்றார்கள். நண்பர்களாக இருந்தாலும் மனந்திறந்து எந்த அரசியலையும் எங்கு பேசமுடியாது. அந்தளவுக்கு மக்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்றார்.


இந்த நண்பரோ ஒரு அரசியல் செயற்பாட்டாளராக அங்கே இருந்திருக்க வேண்டும் (அவர் அதை நேரடியாக்ச் சொல்லவில்லை என்றாலும் என்னால் ஊகிக்க முடிந்தது). கிட்டத்தட்ட 7 வருடங்கள் இன்னொருநாட்டில் அகதியாக அலைந்து, இப்போது கனடாவில் அஸைலம் (Asylum) அடித்திருக்கின்றார். தனது தாய் உள்ளிட்ட எவரையும் 10 வருடங்களுக்கு மேலாகப் பார்க்கவில்லை, தனது சொந்த நாட்டுக்குப் போனால் இனி தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார். மிகப்பெரும் உளவு அமைப்பை 30 வருடங்களாக எரித்திரியாவை ஆளும் ஜனாதிபதி கட்டியமைத்து விட்டார் எனச் சொன்னார். கடந்தவருடம் இப்பெருநகரில் எரித்தியாவின் ஒரு பகுதி மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, நிதியும் சேகரித்தபோது, தானும் தன் நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, இறுதியில் அது வன்முறையாக மாறியது என்றும் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

இதெல்லாம் நாம் அனுபவித்து கடந்து வந்த பாதை. எனக்கு அவர் மேல் தோழமையுணர்வு தோன்றியது. அவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, இதேதான் எமது நாட்டிலும் நடந்தது என்றேன். பாருங்கள், பெரும் போரை முடித்து வைத்தேன் என்ற பெருமிதத்தில் நின்ற ஒரு குடும்பத்து ஜனாதிபதியை, அந்நாட்டு பெரும்பான்மையின மக்களே நாட்டைவிட்டுத் துரத்தினர் என்றேன். சர்வாதிகரிகளால் அதிகாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கி அழிசாட்டியம் செய்ய முடியும். ஆனால் ஒருநாள் மக்கள் எழுச்சி கொள்வாரென்பதற்கு சிலியின் பினோச்சோவை உதாரணத்துக்குச் சொன்னேன். என்றாலும் இந்தக் கொடுங்கோலர்கள் செய்து முடித்துவிட்ட அழிவுக்கு நிவாரணிகள் கிடைப்பதில்லை. இவர்களின் அதிகார ஆசைகளுக்காக பலியிடப்பட்டவர்க‌ளும், காணாமற்போனவர்களும், தொலைத்துவிட்ட நம் வாழ்வும் மீள நம்மிடம் திரும்பி வரப்போவதில்லை என்பதுதான் மிகத் துயரமானது.


இப்போது சொல்லுங்கள், உலகம் இவ்வாறு இயங்கும்போது, நீங்கள் யுத்தம் பற்றிய செய்திகளைக் கேட்பதையே தவிர்க்கப் போகின்றீர்களென்றால், யுத்தத்திற்குள் இருப்பவர்களை/அதை நேரடிச் சாட்சியாகக் கண்டு கடந்து வந்தவர்களை/ ஒரு சொந்த நாடில்லாது அடைக்கலம் தேடி கடல்களாலும் பனிநிலங்களாலும் கள்ளமாக எல்லை கடப்பவர்களை எப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்?

***********

(June 2024)

0 comments: