கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் ‍ 36

Thursday, June 13, 2024

 ஓவியம்: சுசிமன் நிர்மலவாசன்


சாம்பல் வானத்துப் பின்னணி என்பது இலையுதிர்காலத்துக்குரிய தனித்துவம், பசுமை போர்த்திய‌ இளவேனிலில் மழை அதே சாம்பல் பின்னணியில் பொழிகின்றது. இலைகள் உதிரும் காலத்தில்தான் மனது நெகிழும் என்றால், இப்போதும் ஏன் உள்ளம் குழைந்து கொள்கின்றது. வாவியின் மீது துளிகள் வீழ்கையில் நீரின் வர்ணமும் சாம்பலாகி விடுகின்றது. உயிர் விட்டுப் பிரியும் உடலங்களை எரித்து நீரில் விசிறும் மரபொன்று நமக்கு இருப்பதால், கடலை மழைத்துளிகள் முத்தமிடுகையில் எழும் கடும் சாம்பல்வர்ணத்தை மறைந்து போய்விட்ட ஆன்மாக்களின் அசைவுறுதல்களென‌ எடுத்துக் கொள்ளலாமோ? காட்டிற்கு நடுவில் இருக்கும் சுடலையின் பொடியைப் பூசி ஆடும் ஒருவன் உள்ளங்கவர் கள்வனாவது போல‌, கடலின் நடுவில் சாம்பல் வர்ணத்துளிகளைப் பூசி, காலமாகிவிட்ட நமக்கு நெருக்கமானவர்கள் எழுந்து வருதல் கூடுமோ?

துளித்துளியாய் கண்ணாடி யன்னலில் திரண்டு பின்னர் கரைந்துபோகும் மழையைப் பார்த்தபடி ஒருவன் இருக்கின்றான். காதல்கள் உருத்திரண்டு பின்னர் காதலிகள் பிரிந்து போவதுபோல இந்த மழைத்துளிகளை அவன் உவமித்துக் கொள்கின்றான். வாழ்வு என்பதே எப்போது தொட்டாலும் உடைந்துவிடக்கூடிய குமிழ் எனில் அதற்குள் உருந்திரளும் இந்த நேசத்துளிகளின் அர்த்தந்தான் என்ன? ஆனாலும் மனது காதலிக்கவே விரும்புகின்றது. கடந்தகாலத்து துயர் நினைவுகளை அன்றி, நெகிழ்ந்த கணங்களை அள்ளியெடுத்து எதிர்காலத்துக்குப் போகவும் அவாவுகின்றது.

சல்மான் ருஷ்டிக்கு ஒரு குடிகாரத் தந்தை இருந்திருக்கின்றார். சிறுவயதுகளில் இருந்தே அந்த வன்முறையான தகப்பனின் செயல்களைப் பார்த்து வளர்ந்தவர் ருஷ்டி. ஒருநாள் தாயோடு தனவுப்படும் தந்தையை, பதின்ம வயது ருஷ்டி கோபத்தில் அடித்துவிடுகின்றார். அதைச் செய்யும் துணிவு தனக்குள் எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆச்சரியப்படும் ருஷ்டி, தந்தை தன்னைத் திருப்பி அடிப்பார் என்று நினைத்தற்கு மாற்றாக, ஏன் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் என்பதற்கான கேள்வியை ருஷ்டி அவரது 70 வயதிலும் தேடிக் கொண்டிருக்கின்றார்.


அது மட்டுமின்றி ருஷ்டியின் நாவலொன்று வெளிவந்து அதில் தன்னைப் பற்றி மறைமுகமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றதென்று ருஷ்டியின் தந்தையார் ஆவேசப்படுகின்றார். அதன் நிமித்தம் தனக்கு விவாகரத்து வேண்டுமென்று ருஷ்டியின் தாயாரிடம் அவரின் தந்தையார் மல்லுக்கட்டுகின்றார். எழுதிய நாவல், அதன் நிமித்தம் தந்தையின் விவாகாரத்து மன்றாடலால், வீட்டை விட்டு வெளியேறும் ருஷ்டி பின்ன்ர் ஒருபோதும் தன் வீடு திருப்புவதில்லை. அவரின் தந்தையாரின் இறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே ருஷ்டி சொந்த வீட்டுக்குத் திரும்புகின்றார். அப்போது திரும்பும் ருஷ்டி, எந்த ருஷ்டி? அது இளமையில் வீட்டை விட்டு விலகிய‌ ருஷ்டியாக மட்டும் நிச்சயம் இருந்திருக்கவே முடியாது.

நாமும் நம் காதல் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து வெளியேறும்போது முன்னர் இருந்த நாங்களாக நாம் ஒருபோதும் இருப்பதில்லை. நம்மில் ஏதோ ஒரு பகுதியை அந்தக் காதல் எடுத்துச் சென்றுவிடுகின்றது. அது என்னவென்பதை நாமறிவதில்லை. வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் ஒரேயொரு விடயம் என்னவென்றால் நாம் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதானென‌ ஜேர்மனியத் தத்துவியலாளர் ஜோர்ஜ் ஹெகல் கூறியதைப் போல, நாங்களும் காதல்களிலிருந்து அறியும் ஒரு விடயம் என்னவென்றால், கடந்தகாலக் காதல்களிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை என்பதையேயாகும். ஆனால் நாம் வரலாற்றைச் சிரத்தையாக கற்றுக்கொள்வதான பாவனையில் இருப்பதைப் போல, காதலையும் நாம் கற்று அறிந்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்கின்றோம். அதனால் மீண்டும் மீண்டும் புதிய‌ காதல்களுக்குள் நுழைகின்றோம் அல்லது காதலிக்கும் ஆசைகளைப் பெருக்கியபடி இருக்கின்றோம்.

ர்னஸ்ட் ஹெமிங்வே, ஹென்றி மில்லர் மட்டுமில்லை, சல்மான் ருஷ்டியும் ஐந்து முறைக்கு மேலாகத் திருமணம் செய்தவர்கள். மிகுந்த அறிவும், ஆழ்ந்த அனுபவங்களும், எழுத்தில் தனித்தன்மையும் வாயக்கப் பெற்ற‌ இவர்கள் எப்படி இவ்வளவு திருமணம் செய்ய விரும்பினார்கள் என்பது ஆச்சரியமூட்டக்கூடியது. அதைவிட வியப்பு, இப்படி இவர்களின் திருமணங்கள் ஒவ்வொருபொழுதும் தோல்வியுற்றபோதும், அவர்களைத் தேடிப் புதிய பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள் என்பதாகும். ஹெமிங்வேயும், ஹென்றியும் தமது காதலிகள்/மனைவிகளை தமது புனைவுகளில் அவர்களின் அனுமதியோடோ/அனுமதியின்றியோ கொண்டுவந்திருந்தார்கள். இருபத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதிவிட்ட ருஷ்டி அப்படி நேரடியாக புனைவுகளில் கொண்டுவந்தற்கான ஆதாரங்கள் குறைவு. எனினும் அவரின் மாய யதார்த்த எழுத்துக்குள் அந்தப் பெண்கள் சிறகுகளை விரித்துப் பறந்தபடியிருக்கலாம்.

ருஷ்டிக்கு அவரது ஐந்தாவது மனைவியாகப் போகின்ற எலிஸாவைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. எலிஸாவை முதன்முதலில் சந்தித்து வீட்டுக்குப் போனவுடனேயே எலிஸாவின் அனைத்து கவிதைத் தொகுப்புக்களையும் இணையத்தில் ஓடரும் செய்துவிடுகின்றார். இத்தனைக்கும் அவர்கள் இருவருக்கும் 32 வயது வித்தியாசம். ருஷ்டியின் புதிய நூலில் எலிஸாவை அப்படிக் கிறங்க கிறங்கக் காதலிப்பவராகத்தான் எழுதுகின்றார். ருஷ்டி, பத்மா லக்ஷ்மியைப் பிரிந்தபோது, பத்மா ருஷ்டியை எச்சரித்திருக்கின்றார், நீ எதையும் என்னைப் பற்றி எழுதினால், நமது அந்தரங்கமான விடயங்களை எல்லாம் நான் பேசவேண்டியிருக்கும் கவனம் என்று. அந்தவகையில் எலிஸா சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றார் போலும். அது ருஷ்டிக்கு, மயிரிழையில் கத்திக்குத்துக்களால் தப்பிவந்துவிட்டதால் கிடைத்துவிட்ட ஓர் வெகுமதியெனலாம். ஆனால் ருஷ்டி அந்தக் காதலையும், கருணையையும் அவ்வளவு அழகாக சலிப்பு வராது எழுதிச் செல்கின்றார். காதலென்பது ஒருபோதும் முடிந்துவிடாத தீராத வியப்புத்தானோ?

இப்போது வெளியே மழை ஒய்ந்துவிட்டது. சாம்பல் வர்ணம் கரைந்துபோய் நீலவானம் விரிந்து கொண்டிருக்கின்றது. வாவியும் தன் இயல்பான நிறத்துக்குத் திரும்பி விட்டது. அவன் தன‌து காதலிகள் அள்ளிக் கொண்டுவந்து சேர்ந்த நேசத்தையும், அனுபவங்களையும் நினைத்துக் கொள்கின்றான். எல்லாக் காதலும் ஒருநாள் சலித்துப்போகும் அல்லது பிரிவு வந்து அனைத்தையும் வாரி அள்ளிப்போகும். ஆனாலும் என்ன எழுதுவதைப் போல இந்தக் காதல்களையும் ஆராதிக்கவே மனம் விரும்பும். அவை கொண்டு வரும் புத்துணர்வுக்காகவும், காதலிகள் தம் புருவம் உயர்த்திச் சொல்லும் வியப்புறு கதைகளுக்காகவும் நேசத்தை ஆரத்தழுவிக் கொள்ளவே செய்வான்.

ஒரு காதலைக் கண்டடைகின்றபோது இருவரின் இதயங்களையும் குத்திவிடக்கூடிய இருமுனை கொண்ட குறுவாள் காத்திருக்கின்றதென்றாலும், நாம் காட்டிலிருந்தோ, கடலிருந்தோ எழும் சாம்பலைப் பூசிய கடவுளரைப் போல, நமக்கு அருளப்பட்ட காலத்தில் காதலின் நடனத்தைக் கள்வெறி கொண்டு ஆடித்தீர்ப்போம்.

***********


(May, 2024)

0 comments: