கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - ‍40

Thursday, July 04, 2024

 

ஷோக ஹந்தகமவின் புதிய திரைப்படமான 'ராணி'க்கு வெளியிடப்பட்ட போஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனித்தான் Trailer வெளிவரப் போகின்றதென்றாலும், இது ரிச்சர்ட் டீ ஸொய்சா பற்றிய திரைப்படம் என நினைக்கின்றேன். ரிச்சர்ட் டீ ஸொய்சா, தமிழ்த் தாயுக்கும், சிங்கள (பறங்கிய) தந்தைக்கும் பிறந்தவர். ஒரு பத்திரிகையாளராக இருந்து தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியதால், ஒரு இரவில் இலங்கைப் பொலிஸாரால் கடத்தபட்டு அடுத்தநாள் கொல்லப்பட்டு கடற்கரையில் வீசப்பட்டவர் ரிச்சர்ட் டீ ஸொய்சா.

90களில் இது நடக்கும்போது அவருக்கு வயது 31. தாயாருடன் வாழ்ந்து கொண்டிருந்த ஸொய்சாவை அன்று 'இனந்தெரியாத ஆயுதக்குழு' வந்து கடத்திக் கொண்டுபோய் கொலை செய்ததாகச் சொல்லப்படடாலும், அது அன்றைய இலங்கையரசு ஜேவிபி கிளர்ச்சியை அடக்குவதற்காய் உருவாக்கியிருந்த dead squad ஆலேயே அவர் கொல்லப்பட்டார் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸில் இருந்த அந்தக் குற்றவாளிகள் யாரென்று 2005இல் அடையாளங் காட்டப்பட்டபோதும், அந்தக் குற்றவாளிகள் 'உரிய சாட்சிகள்' இல்லையென்ற காரணத்தால் ஒருபோதும் கைது செய்யப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இவ்வாறு தனது மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட துயரத்தோடு, மனோராணி அவர் இறக்கும்வரை (2004), இலங்கையில் இப்படிக் கடத்தப்பட்டு 'காணாமற் போனவர்களுக்கான' குரல் கொடுக்கும் ஒரு செயற்பாட்டாளாராக இருந்தவர்.

அண்மையில் மான் புக்கர் பரிசு பெற்ற ஷெகன் கருணாதிலகவின் 'மாலி அல்மெய்டாவின் ஏழு நிலாக்கள்' (The Seven Moons of Maali Almeida) நாவலில் முக்கிய பாத்திரம் ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் பின்னணியாக வைத்து படைக்கப்பட்டிருப்பதை எளிதாக நாம் அறிந்துகொள்ள முடியும். 90களில் அன்றைய இலங்கை ஜனாதிபதியான பிரேமதாஸா ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொலையோடு தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார் என்பதை 90களில் இலங்கை அரசியல் சூழலை அவதானித்தவர்க்குத் தெரிந்திருக்கும்.

ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொல்லப்பட்ட உடலை கடற்கரையில் முதன்முதலில் அடையாளங்கண்டு சொன்னவர் தமிழ் ஊடகவிலாளரான தராகி சிவராம். ஒரு தசாப்தத்தின் பின் (2000களின் தொடக்கத்தில்) தராகியும், ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் போல 'இனந்தெரியாதோரால்' கடத்தப்பட்டு கொல்லப்பட்டு கொழும்பின் ஆற்றங்கரையில் வீசப்பட்டவர் என்பதுதான் துயரமானது. நமது தீவு நாடு கடந்தகாலத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பற்கு இவை மட்டும் உதாரணங்களில்லை. அதற்குப் பிறகு இப்படி இனந்தெரியாதரோல் ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

ந்தப் பாதிப்பில் நானெழுதியதுதான் 'அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்' என்கின்ற சிறுகதை. புனைவின் மூலம் கண்டடைந்து கொண்ட பிரகீத்தின் மனைவியான சந்தியாவை, கடந்தவருடம் கொழும்பில் 'முள்ளிவாய்க்கால் நினைவு' நிகழ்வு நடந்தபோது நேரே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. அவரிடம் இந்தக் கதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து, பிரகீத்தை நாம் மறக்கவில்லையெனச் சொல்லி, அதைக் கொடுத்துவிட வேண்டுமென மனம் அப்போது அவாவியது.

அஷோக ஹந்தகம 'ராணி'க்கு முன் எடுத்த திரைப்படம் 'Alborada'. அது பாப்லோ நெரூடா இலங்கையில் இருந்த காலத்தைப் பின்னணியாகவும், அப்போது அவர் வலிந்து பாலியல் உறவுகொண்ட தமிழ்ப்பெண்ணை முன்னிலைப்படுத்தியும் வந்திருந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயரான 'ராணி' என்பது ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் தாயான மனோராணிவின் பெயரில் இருந்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவகையில் ரிச்சர்ட் டீ ஸொய்சா கொல்லப்பட்டு 30 வருடங்களின் பின்னும் இன்னும் பலரின் நினைவுகளில் இருந்து மறைக்கப்படாது இருக்கின்றார் எனச் சொல்லவேண்டும். உண்மைகளை மறைக்கலாம், ஆனால் ஒருபோதும் புதைக்க முடியாது என்பதற்கு கலை ஒரு முக்கிய சாட்சியமாகின்றது. நமது கவிஞர் இளவாலை விஜயேந்திரனும் 91இல் 'றிச்சர்ட் டி சொய்சா; உதிரமுடியாத ஒரு நினைவு' என்று ஸொய்சாவிற்காக ஒரு கவிதை எழுதியிருக்கின்றார்.

கொலைகாரர்களும், கொலைசெய்ய ஏவியவர்களும் ஸொய்சாவைப் போலத்தான் மரணத்தை ஒருநாள் சந்தித்தார்கள் (மிஞ்சிய சிலர் சந்திக்கவும் போகின்றார்கள்). ஆனால் அவர்களுக்கு வரலாற்றில் எந்த இடமும் இல்லை. மேலும், விடுதலையையும், அறத்தையும் அவாவி நின்ற மானுட நேயர்களை கலை/இலக்கியங்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை.

ஆகவேதான் தாம் நம்பிய உண்மைகளுக்காக தமது உயிரைப் பலிபீடங்களில் வைத்த ரிச்சர்ட் டீ ஸொய்சா போன்றவர்களை, அஷோக ஹந்தகம, இளவாலை விஜயேந்திரன், ஷெகான் கருணாதிலக போன்ற கலைஞர்கள் தமது படைப்புக்களின் மூலம் என்றென்றைக்கும் மறக்கமுடியாதபடிக்கு நம்மிடம் மீள எடுத்து வருகின்றார்கள். நாம் அநியாயமாகப் பலியாகிப் போன அவர்களை கருணையுடன் நினைவுகூர்ந்து, நேசத்துடன் அரவணைத்துக் கொள்கின்றோம்.

******************


(Jun, 2024)

0 comments: