கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 35

Sunday, June 09, 2024

 ஓவியம்: கோபிகிருஷ்ணன்

 

நேற்று அந்த ஒழுங்கைக்குள்ளால் போனபோது ஒரு மனிதர் தலை குப்புற விழுந்து கிடந்தார். இப்பெரு நகரின் நாகரிகமான இடங்களில் வீடற்ற மனிதர்கள் தெருக்களில் உருக்குலைந்து கிடப்பதைத் தினமும் பார்த்து எல்லோரையும் போலவும் வேலை நாட்களில் கடந்து போகின்ற ஒருவன்தான் நானும். ஆனாலும் இப்படி ஓர் ஒழுங்கைக்குள் ஒரு மனிதர் குப்புறக் கிடப்பதைப் பார்த்து காரில் சென்று கொண்டிருந்த எனக்கும், நண்பருக்கும் அந்தக் காட்சி மனச்சாட்சியைக் கொஞ்சம் உறுத்தியிருக்க வேண்டும்.

நாம் காரைத் திருப்பிக் கொண்டு வந்து அந்த முச்சந்தியில் வந்து நின்றோம். நண்பர் அந்த மனிதரைத் தேடிப் போக நான் காரை நிறுத்த இடந்தேடினேன். அதுவரை அப்படியொரு மனிதர் குப்புறக்கிடப்பதை காரிலும், நடந்தும் கவனிக்காத மாதிரி போனவர்கள் நாங்கள் போனதும் வந்து சேரத் தொடங்கினார்கள். அந்த மனிதருக்கு உதவி வேண்டுமா, வீட்டில் இருக்கும் யாரையேனும் அழைக்க வேண்டுமா என்று கேட்ட போதெல்லாம் வேண்டாம் என்றே முனகிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

தலைகுப்புற விழுந்ததில் நெற்றியில் காயமேற்பட்டு கொஞ்சம் இரத்தம் வந்து கொண்டிருந்தது. சற்றுத் தள்ளித்தான் வீடு போய்ச் சேர்ந்துவிடுவேன், என்னை தூக்கிவிடுங்கள் என்றார். அவரைத் தூக்கிவிட்டாலும் அவரால் நிற்க முடியவில்லை. கீழே இருத்தினாலும் அவரால் நிமிர்ந்து இருக்கக் கூட முடியவில்லை. அவரைப் பார்க்கும்போது எந்த போதைமருந்தும் எடுத்திருக்கமாட்டார் போலத் தோன்றியது. ஏதேனும் ஸ்டிரோக் வந்தோ அல்லது ஏதேனும் மருத்துவப் பிரச்சினைகளால் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை என்பது புரிந்தது. அவரது மறுப்பையும் தாண்டி, வேறு வழியில்லை என்று அவசர எண் 911இற்கு அழைத்தோம்.

எப்போதும் போல கண்டும் காணாதது போல தாண்டிச் செல்லாமல், நண்பரும் நானும் இப்படி ஒரு சிறு உதவியை யாரென்று தெரியாத ஒரு மனிதருக்குச் செய்தோம் என்று நிம்மதி ஏற்பட்டது. அவருக்குத் தேவையான உதவி வந்து சேர்ந்தவுடன் நாங்கள் அந்த இடத்திலிருந்து நீங்கினோம். இந்நிகழ்வுக்கு முன், என் மனம் லெளதீகப் பிரச்சினைகளில் சிக்குப்பட்டு எங்கெங்கோ எல்லாம் அலைந்து நிகழுக்கு வர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு முழுநாளை வேலை உறிஞ்சியெடுத்துவிட்ட களைப்பும் எனக்குள் இருந்தது.

அவ்விடத்தை விட்டு நீங்கி, ஒரு சிறுகாட்டுக்குள் நடந்து கொண்டிருந்தபோது, இப்போது உன் மனோநிலை சரியாகிவிட்டதா என நண்பர் கேட்டார். 'மனிதர்களோடு இருக்கும்போது நான் மிருகமாகிவிடுகின்றேன். மரங்களோடு இருக்கும்போது மட்டுமே நான் மனிதனாகிவிடுகின்றேன்' என்றேன். மரங்கள், நான் என்ன மோசமான நிலையில் இருந்தாலும் என்னை எளிதில் இயல்புநிலைக்கு வரச் செய்வதைக் கண்டிருக்கின்றேன். காடுகளும், மலைகளும், நதிகளும் என்னை ஆற்றுப்படுத்தி வழியனுப்பும் அற்புதமான தோழமைகள் என்பேன்.

இப்படி குப்புற விழுந்து கிடந்து மனிதரைத் தாங்கி நின்றது
, எங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்த மாணவர்கள். உடனே 911 இலக்கத்துக்கு அழைத்தது குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்த ஒரு தாய். சாதாரணமாக சும்மா கடந்து போயிருக்க வேண்டிய நாமெல்லோரும் ஒரு இடத்தில் சகமனுசருக்கான உதவிக்கென கூடியிருந்தோம். இவைதான் நாமின்னும் மனுசத்தன்மையை இழக்கவில்லை என்பதை நம்மை நம்பச் செய்கின்ற விடயங்கள். இதற்குள்ளும் ஒருவர் தன் முனைப்பைக் காட்டிப் படங்காட்டிக் கொண்டிருந்தார். இடையில் வந்து தானே 'எல்லாம்' போல படங்காட்டிய அவர் அவசர உதவி வருவதற்குள் காணாமலும் போயிருந்தார். எல்லோரும் சேர்ந்துதான் இவ்வுலகு. நாம் காவிக் கொண்டு செல்லவேண்டியவை அந்தத் தாயினதும், மாணவர்களின் அரவணைப்பைத்தானின்றி இந்தப் படங்காட்டியவரை அல்ல. ஆக அவரை நினைவிலிருந்து மறப்போம்.

னடா என்ற நாட்டின் மீது கட்டியமைக்கப்படும் விம்பங்களை அனேகர் இந்த நாட்டிற்கு வந்தபிறகே நன்கு அறிவர். அப்படி வரலாற்றை அறிய விரும்புபவர்க்கு இங்கிருக்கும் பூர்வக்குடி மக்களின் இன்றைய வாழ்க்கையை அறிவதிலிருந்து வரலாற்றைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் அவதானித்துப் போகச் சொல்வேன். அதுபோல இன்றைய பெரும் நுகர்வும், பணமீட்டும் கனவும், இங்கே மத்தியதர வர்க்க வாழ்க்கையை இல்லாமற் செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் அறியலாம்.

என் நண்பபொருவர் சில மாணவர்களோடு ஒரு வீட்டைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார். அவ்வீட்டில் ஓர் அறை காலியாக இருக்கின்றதென்று பார்ப்பதென்று ஒரு மாணவி வந்திருக்கின்றார். அவரோடு பேசியபோது அவர் பொருளாதார நெருக்கடியால், கடந்த நான்கைந்து மாதங்களாக ஒரு நேரச் சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார் என அறிந்திருக்கின்றார். என் நண்பருக்கோ இதைக் கேட்டு மனம் அவதிக்குள்ளாயிருக்கின்றது. அந்த இரவு பதினொரு மணியிலும் எதையெதையோ செய்து அம்மாணவிக்கு கோழிக்குழம்போடு சாப்பாடு செய்து கொடுத்திருக்கின்றார். சாப்பிட்டு முடித்த அந்த மாணவி எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு கோழிக்கறி சாப்பிட்டிருக்கின்றேன் என நெகிழ்ந்து சொல்லியிருக்கின்றார். வெளியே காட்டும் ஜிகினாத்தனமான வாழ்க்கை மட்டுமில்லை கனடா, இப்படியும் பலருக்கு வாழ்க்கை இருக்கின்றது.

யுத்தகாலத்தில் இந்திய இராணுவம்
, பின்னர் இலங்கை அரசின் பொருளாதாரத் தடையால் பொருட்கள் இல்லாமை என்றெல்லாம் மூடப்பட்ட யாழில் வாழ்ந்தபோதும் நான் (இறுதியுத்த முள்ளிவாய்க்கால் வேறுகதை) ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு பட்டினியால் இருந்ததாக நினைவில்லை, இப்படியெல்லாம் இந்தப் பிள்ளைகள் போதிய உணவில்லாது தவிக்கின்றார்கள் என்பது எவ்வளவு துயரமானது என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தக் கனடா வாழ்க்கை. அதுவும் இந்தப் பிள்ளை இந்தியாவில் எனக்கு மிகப்பிடித்தமான இடுக்கியிலிருந்து வந்தவர். என் வாழ்க்கையில் அற்புத அனுபவங்களைத் தந்த ஒரு ஊரைச் சேர்ந்த பிள்ளை ஒரு நேர உணவோடு மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்பது எவ்வளவு துயரம். இவ்வாறு ஊனையும் உணவையும் உருக்கித்தான் நான் கனடாவுக்கு வரமுன்னர் என் அண்ணாக்களைப் போன்ற தலைமுறையினர் இங்கு இருந்திருக்கின்றார்கள் என்பதையும் நானறிவேன். அப்படித்தான் இப்போதும் எத்தனையோ நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு மக்கள் அலையலையாக ஏதோ ஒரு நம்பிக்கையின் நிமித்தம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்யாவிட்டால் கூட, அவர்களை ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள முயலலாம்.

இன்று கனடாவில் புதிய குடிவரவாளர்கள்/மாணவர்களுக்கு எதிரான எதிர்ப்பலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. கனடிய அரசும் அவர்களை நோக்கி புதிய விதிமுறைகளைக் கடுமையாக விதிக்கத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு வருபவர்கள் சிலர் வந்த 'ஊரோடு ஒத்து வாழாமல்', தாங்கள் இன்னும் நிலபிரபுத்துவ நிலையில் இருப்பதாய் அவ்வப்போது சில சம்பவங்களால் காட்டிக் கொண்டிருந்தாலும், நாம் இவற்றையெல்லாம் மீறி வரும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளவே வேண்டும். ஏனெனில் நாமும் அப்படித்தான் வந்தோம். நம்மை அன்று ஏற்கனவே இருந்தவர்கள், வெளியே துரத்தியிருந்தால் நாம் தஞ்சம் புகுவதற்கு எந்தத் தேசம் இருந்திருக்கும்?

வீட்டுப் பிரச்சினை, வேலைப் பிரச்சினை, சமூக ஒழுங்குப் பிரச்சினை, காலநிலை மாற்றப் பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகளால் இப்பெரு நகரம் தத்தளித்துத்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நமக்குக் கிடைக்கும் பலதை -உணவோ, வீடோ- பிறரோடு பகிர்ந்துகொள்வதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. நாம் இந்த நாடுகளுக்கு எதுவுமேயில்லாதுதான் வந்தோம். நம்மில் பலர் சொந்த நாட்டிலே ஒவ்வொரு இடமாய் அகதியாய் அலைந்து கடைசியில்தான் இங்கு வந்து அடைக்கலாமாயிருந்தோம். பழையதை எல்லாம் அப்படியே காவிக் கொண்டிருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் எங்கிருந்து வந்தோம் என்கின்ற வேர்களை மறக்காது இருப்பது, நாம் இன்னும் மகிழ்ச்சியாக பூத்துக் குலுங்கி, எஞ்சியுள்ள இவ்வாழ்வை பிறருடன் பகிர்ந்து நிம்மதியாக வாழ்ந்து முடித்துவிட துணை புரியக்கூடும்.

****************


(May 11)


0 comments: