கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மழைக்காலம்

Wednesday, October 20, 2010

(2006, சேக‌ர‌ம்)

மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

ஊரில் இருந்தபோது நோயின் நிமித்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.

மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.

புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.

அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?

(Friday, May 26th, 2006 at 8:55 am)

0 comments: