கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 147

Monday, April 13, 2026

 

பத்து வருடங்களுக்கு முன் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் (எம்.டி.எம்)'நிலவொளி எனும் இரகசிய துணை'  வெளிவந்திருந்தது. அந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகள் சிலதைச் சேர்த்தும், வேறு புதிய பலதைச் சேர்த்தும் அண்மையில் வெளிவந்த தொகுப்புதான் எம்.டி.எம்மின் 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்'. இதில் நாற்பது கலை இலக்கிய கட்டுரைகள் இருக்கின்றன. திரைப்படங்கள் சார்ந்த ஒரு சில  கட்டுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிகுதி அனைத்தும் எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கிய நூல்களையும் அறிமுகப்படுத்தும்/உசாவும் ஆக்கங்களென இத்தொகுப்பைச் சொல்லலாம்.

இன்றைக்கு தமிழில் முன்னெப்போதும் இல்லாதவளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றபோதும், அவை பெரும்பாலும் புனைவு சார்ந்தே இருக்கின்றன. மேலும் தமிழ்ச் சிற்றிதழ் மரபு கிட்டத்தட்டவே மறைந்துபோய்விட்ட காலத்தில் சமகாலத்தில் உலக இலக்கியப்பரப்பில் நிகழும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆழமான கட்டுரைகள் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் கட்டுரைகளையும் பெரும்பாலும் ஒற்றைப்படையாக 'இரசனை விமர்சனத்துக்குள்'  கொண்டுவந்து வரும் எத்தனங்களே இருக்கின்றன.


இந்த ஆபத்தை எம்.டி.எம், பாரதியார் குறித்த ஓர் உரையாடலில் '‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று 'நிலவொளி எனும் இரகசிய துணை'யிலே எச்சரித்திருக்கின்றார். இந்த இரசனை விமர்சனம் மட்டுமில்லை,  வழக்கொழிந்த இலக்கிய விமர்சன முறைகளையும் தமிழுக்கு இப்போதுதான் புதிதாய்க் கண்டுபிடித்த பாவனையில் எழுதுகின்றனர். அதில் நம் 'இரசனை விமர்சனக் குழு' கண்டுபிடித்த ஒருவர் ஹெரால்ட் ப்ளூம்.
 

 
'யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box checking  வேலையைச் செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூம் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச் சொல்லி, சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்;புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாசார மேலாண்மையை நிறுவுகிறார்கள் (ப. 94).' என எம்.டி.எம் எழுதுகின்றார்.

இதை அவர் எங்கே எழுதிச் செல்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். 'சார்த்தரின் No Exit நாடகத்தில் வரும்  Other is Hell ஏன் மிகவும் பிற்போக்கானது' என்ற கட்டுரையில் அதை விமர்சித்துவிட்டுத்தான் சார்த்தரின் மேதமையை அவரின் தத்துவச் சறுக்கலுக்கிடையில் வைத்து எம்.டி.எம் மதிப்பிடுகிறார். அப்படி சார்த்தர் சில இடங்களில் சறுக்கியிருந்தாலும், இந்த ஜெரால்ட் ப்ளூம் போன்றவர்களைப் போலவன்றி சார்த்தர் அசல் சிந்தனையாளரே என்று நிரூபிக்கவும் எம்.டி.எம் செய்கின்றார். இதைத்தான் அசலான வாசிப்புகளும், மதிப்பாய்வும் செய்யும்.

*

இந்த நூலிலிருக்கும் நாற்பது கட்டுரைகளில் முதன்மைப் படைப்பாளிகளைத் தவிர்த்து, எம்.டி.எம் அவற்றில் 'உப பாத்திரங்களாக' குறிப்பிடும் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நாம் தேடி நமது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் (நாம் இந்தளவு காலமாக எழுதுகின்றோம், இந்தளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றோம்) ஒருபுறம் பிரகடனங்களை  வெளியிட்டு தம்மைத்தானே  சிறந்த எழுத்தாளர்கள் அறிவித்துக்கொள்ளும் புகழ் விரும்பிகளும், இன்னொருபுறம் தமது ஆசான்களின் நீண்டகால உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அசட்டைசெய்து தாங்களும் ஆசான்களாகிவிட்டோமென 'இந்த இலக்கியம் என் இரத்தத்தையே பலி கேட்கிறது' என அலட்டும் (முக்கியமாக யாழ்ப்பாண/புலம்பெயர்) கத்துக்குட்டிகளுக்கும் இடையில், நீண்ட வரலாறுடைய தமிழ் இலக்கியம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக இலக்கியப் பரிட்சயம் சிறிதும் இல்லாது, ஒரு சிலர் சொல்வதையே மனப்பாடம் செய்து கிணற்றுத்தவளைகளாக இருக்கும் இவர்களைப் பார்க்க உண்மையிலே கவலையாகத்தான் இருக்கிறது.  

பரவாயில்லை இன்னும் கற்றுக்கொள்ளவும், தன்முனைப்பின் உணர்கொம்புகளைச் சுருட்டிக் கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதற்குத்தான், இப்படி 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்' போன்ற அல்புனைவு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன, தயவுசெய்து கவனியுங்கள் எனச் சொல்கிறேன்.  உலக இலக்கியம் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது நீங்கள் எவ்வளவு கட்டுப்பெட்டித்தனமாக 'இரசனை விமர்சனம்' மட்டுமே போதுமென இலக்கியத்தை அதன் வழிமட்டும் வாசிப்பது நியாயமா என்று கொஞ்சம் பரிசீலனை செய்யுங்களென அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கின்றது.

இந்த நூலில் புத்தகங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளும் வசீகரிப்பவை. நோர்வேஜிய நெறியாளாரான யோக்கிம் திரீயரின் 'The worst person in the world' திரைப்படத்தின் கட்டுரையில் எம்.டி.எம் பலமுறை சென்றிருந்தும் பிடிக்காத நோர்வே இந்தப் படத்தின் மூலம் வேறொரு பார்வையைத் தந்ததென்று ஆராய்கிறார். அதுபோல அப்பாஸ் கியரோஸ்டாமியின் 'The wind will carry us' குறித்த கட்டுரையை வாசித்தபோது, ஏற்கனவெ இத்திரைப்படத்தைப் பார்த்தபோதும், மீண்டும் இக்கட்டுரை நினைவுபடுத்தும் ஈரான்/குர்டிஷ் நிலப்பரப்பைப் பார்க்கும் உந்துதல் வந்து அத்திரைப்படத்தை மீளவும்  நான் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.

ஏற்கனவே வாசித்திருந்த கோபே அப்பேயின் 'மணற்குன்றுகளின் பெண்', ஜூலியா கிறிஸ்தவாவின் கவித்துவ மொழியில் புரட்சி' , காவபட்டாவின் 'நாவல்களை முன்வைத்து' போன்றவற்றை இன்னொருமுறை வாசித்தபோதும், அவை புத்துணர்ச்சி தருகின்ற ஆக்கங்களாகவே எனக்கு இருந்தன.

காஃப்காவின் பாதிப்பு எப்படி மார்க்வெஸின் படைப்புக்களில் இருந்தது என்பதை 'காலராக் காலத்தில் காதல்' நாவலை முன்வைத்து எம்.டி.எம் எழுதியிருப்பது கவனத்துக்குரியது. அதன் முடிவில் 'மார்க்வெஸின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட பின்பு இப்போது பின்னோக்கிப் பார்க்கும் நான் காஃப்காவின் செல்வாக்கு மார்க்வெஸின் மேல் இருந்தது நமக்கு அறிமுக நிலையிலே தெரிய வந்திருந்தால் தமிழிலக்கியத்தின் போக்கு வேறு திசையில் சென்றிருக்குமோ என வியக்கின்றேன் (ப 41)' என எம்.டி.எம் எழுதியிருப்பது சுவாரசியமான உரையாடலுக்குரியது.

நானும் ஒரான் பாமுக்கின் அல்புனைவுக் கட்டுரைகளை வாசித்தபோது அவருக்கு ரஷ்ய பேரிலக்கியங்கள் (முக்கியமாக தால்ஸ்தயேவ்ஸ்கி) மீது பெரு மதிப்பிலிருந்தாலும், அவர் எப்படி அதன் பாதிப்புக்களிலிருந்து துருக்கிக்குரியதான தனித்துவமான நாவல்களை உருவாக்கினார் என்று வியப்பதுண்டு. நாம் தமிழில் ரஷ்யப் பேரிலக்கியங்களைப் பேசியவளவுக்கு அப்படி தமிழ்ச்சூழலுக்குரிய தனித்துவமான பேரிலக்கியங்களை அதன் பாதிப்பில் இருந்து கூட, உலக இலக்கியப் பரப்பில் வைத்துப் பேச  ஏன் இன்னும் உருவாக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன்.

எம்.டி.எம் எழுதிய 'நிலவொளி எனும் இரகசிய துணை' நூல் எனக்கு மிகப்பிடித்தமான நூல்களில் ஒன்றெனவும், எப்போது மனம் சோர்வுற்றாலும் அதை எடுத்து வாசிப்பதற்காக அருகிலேயே வைத்திருப்பேன் எனவும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் இன்னொரு நீட்சித்த வடிவமென 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேனை'யும்' நான் நினைவில் வைத்திருக்க இதில் அரிய பல ஆக்கங்கள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகின்றது.

***

 

கார்காலக் குறிப்புகள் - 146

Sunday, April 12, 2026

 

ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின்  வாழ்வின் ஒரு காலகட்டத்தை விவரிக்கும் திரைப்படமான  'Springsteen: Deliver Me from Nowhere ஐ அண்மையில் பார்த்திருந்தேன். இது ஸ்பிரிங்ஸ்டீன் அவரது முதல் இசைக் கச்சேரிகளைப் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக நடத்திவிட்டு மிகுந்த சலிப்புடனும், சோர்வுடனும் திரும்புகின்ற காலத்தைப் பற்றியது. அவரது தயாரிப்பாளர்கள் இந்த வெற்றியின் சூட்டோடு சூட்டாக அடுத்த ஆல்பத்தைத் தயாரிக்கச் சொல்கின்றனர். ஆனால் அவரோ ஆரவாரத்தையும் புகழையும் தவிர்த்துவிட்டு அவரது சொந்த நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகின்றார். வீடு திரும்புதல் என்பது ஸ்பிரிங்ஸ்டீன் எளிதாக அமைவதில்லை. அவருக்கு அவரின் தந்தையார் தாய் மீது நிகழ்த்திய குடும்ப வன்முறைகள் நினைவுக்கு வருகின்றது. 
 
 

 
இவ்வாறு கடந்தகால உளவடுக்களோடும், தனிமையிலும் உழலும் ஸ்பிரிங்ஸ்டீன் தனது படுக்கையறையில் இருந்து மிகக் குறைந்த இசைக்கருவிகளை வைத்துப் புதிய பாடல்களை உருவாக்கின்றார். அவற்றை வழமைக்கு மாறாக ஆடியோ காஸெட்டுக்களில் பதிவு செய்துகொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு முகிழ்கிறது.
 
காஸெட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை மேலும் இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்த்து ரெக்கார்டிங் நிலையத்தில் பதிவு செய்யும்போது ஸ்பிரிங்ஸ்டீனுக்கு அந்த வடிவம் பிடிக்கவில்லை.

எனவே எப்படி அவர் சாதாரண காஸெட்டுக்களில் பாடல்களைப் பதிவு செய்தாரோ அதன் வடிவத்திலே புதிய ஆல்பமாக வெளிவருகின்றது. அதுவே 1980களில் வெளிவந்த 'Nebraska' ஆல்பம். இதை வெளியிட்டபோது அன்றைய கால வழமைக்கு மாற்றாக ஆல்பத்தின் முகப்பில் தனது புகைப்படம் வெளிவரக்கூடாது என்பதோடு, இந்த ஆல்பத்துக்காக எந்த விளம்பரப்படுத்தல்களோ, இந்த ஆல்பத்தை முன்னிலைபப்டுத்தும் எவ்விதமான இசைக்கச்சேரியையும் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக ஸ்பிரிங்ஸ்டீன் இருந்திருக்கின்றார். இவற்றைத் தாண்டியும் அது ஒரு வெற்றிகரமான இசைத்தட்டாக அன்றைய்காலத்தில் மாறியிருந்தது.

*

எனது பதிமங்களில் ஸ்பிரிங்ஸ்டீன், 'The boss' ஆக அறிமுகமாகியிருந்தார். அவரின் பாடல்களை விட கிட்டாரை வானத்தை நோக்கி உயர்த்தி நிற்கும் அவரின் அந்த கம்பீரமே என்னை அப்போது வசீகரித்திருந்தது. இப்போது ஸ்பிரிங்ஸ்டீனைப் பற்றிப் பேச விழைந்தது அவரின் பாடல்களுக்காக அல்ல. அவர் இசையோடு எப்படி தனது அரசியலை வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்கேயாகும். அன்றைய வியட்னாமிய போருக்கு எதிராக மட்டுமின்றி, தொடர்ச்சியாக அமெரிக்காவிற்குள் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர் ஸ்பிரிங்ஸ்டீன்.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் குடியேறிகளின் மீது அமெரிக்க அரசும் அதன் கொடும் அமைப்பான ICE ம் பெரும் வன்முறையைப் பிரயோகித்தபோது அதை எதிர்த்து நின்ற ஒரு பெண்ணும், இன்னொரு ஆண் தாதியும்  (Renee Good and Alex Pretti)  மினோஸ்டாவில் கொல்லப்பட்டிருந்தார்கள். 

 
அது பெரும் அதிர்ச்சியையும், எழுச்சியையும் அமெரிக்காவில் ஏற்படுத்தியிருந்தது. அப்போது 'மினியப்பாலிஸின் தெருக்கள்'  (Streets of Minneapolis)  என்ற அமெரிக்க அரச அதிகாரத்தை எதிர்க்கும் பாடலோடு ஸ்பிரிங்ஸ்டீன் வந்திருந்தார்.

முதலீட்டிய நாடாகவும், பெரும் நிறுவனங்களின் இராட்சதக் கரங்களால் நடத்தப்படும் அரசாகவும் அமெரிக்கா இருந்தாலும், அதன் மறுபக்கம் என்று ஒன்றிருக்கின்றது. அப்படி அதிகாரத்துக்கு அடிபணியாத ஒரு தரப்பு மிக உறுதியாக இருப்பதால்தான் அமெரிக்கா ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி அடிப்படை உரிமைகள் சார்ந்து நகராத ஓர் இடத்தில் இருக்கின்றது. இல்லாதுவிட்டால் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களால் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து  எளிதில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி நிலையை எளிதில் அடைந்துவிட முடியும்.

அமெரிக்காவின் இந்த மறுபக்க தரப்பின்  எதிர்ப்பு, தலைமுறை தலைமுறையான சனநாயகத்துக்கான அவர்களின் தொடர் போராட்டம், அமெரிக்கா முற்றுமுழுதாக ஓர் வலதுசாரி நிலைக்குப் போகாது எப்போதும் காப்பாற்றியபடி இருக்கின்றது.

அதுவே ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடச் செய்தது.  வியட்னாமிய போருக்கெதிரான பெரும் அலையாக எழ வைத்தது. எந்த வெள்ளையின பெரும்பான்மை நாட்டிலும் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத ஓர் கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவும் செய்தது.

இன்றைக்கு டிரம்பின் அரசு சர்வாதிகாரத்திலும் போர்வெறியிலும்  (குடிவரவாளர்கள் உள்ளிட்ட விடயங்களில்) நிறவெறியிலும் மிதந்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் உள்ளேயிருந்து எழும் குரல்கள் அவ்வளவு தீவிரமானவை.

இன்று மில்லியன்கணக்கான அமெரிக்க மக்கள் ஐம்பது மாநிலங்களிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈரானில் நடத்தப்படும் போருக்கும், உள்நாட்டில் குடியேறிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கும் எதிராக 'No Kings' ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருக்கின்றனர்.  இந்தப் பெயரில் கடந்த வருடம் டிரம்ப் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தார்கள். No Kings என்பது எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனதுக்கு மேலானவர் அல்ல என்பதை வலியுறுத்துவதாகும். நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அமெரிக்கச் சட்டத்தை ஏற்று நடக்கவேண்டும், சர்வாதிகாரியாக அல்ல என்ற இந்த 'கோஷம்' இன்றைய நாளில் இரண்டாவது பெரும் ஆர்ப்பாட்டத்தை மில்லியன்கணக்கான மக்களை பல்வேறு நகர்களின் தெருக்களுக்கு அழைத்து வந்திருக்கின்றது.

இன்றும் ஸ்பிரிங்ஸ்டீன்  தனது 77 வயதிலும் மக்களுக்காக தெருவுக்கு வந்து அமெரிக்க அரசுக்கெதிரான பாடலை மினோஸ்டாவில் No Kings பேரணியில் பாடிக் கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர் என்னைப் போன்றவர்க்கு The Boss!

***

கார்காலக் குறிப்புகள் - 145

Saturday, April 11, 2026

 

பா.திருச்செந்தாழையின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரேதம்' 2008இல் வந்தபோது அன்றையகாலங்களில் அதை வாசித்து ஒரு சிறுகுறிப்பை எழுதியிருக்கின்றேன். என் நினைவு சரியாக இருக்குமெனில் அதன் முன்னுரையில் வாசித்து எழுத ஓர் அமைதியான சூழ்நிலையும், எதிர்காலம் குறித்து அச்சப்படுத்தாத ஓர் குடும்பமும் அமைந்தால் நன்றாக இருக்குமென்று திருச்செந்தாழை கவலைப்பட்டு எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. திருச்செந்தாழையின் முதல் தொகுப்பு பலரால் கவனப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு. தொடக்கநிலை எழுத்தாளர் ஒருவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காத வரவேற்பு திருச்செந்தாழைக்குக் கிடைத்தபோதும் அவரின் அடுத்த தொகுப்பான 'விலாஸம்' வர கிட்டத்தட்ட 14 வருடங்கள் எடுத்திருந்தன.  



இந்த இடைவெளியை தமிழ்ச்சூழலில் இருந்து எழுதும் பலருக்கு ஏன் நிகழ்கின்றது என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் இது பெரும் உறங்குநிலைக் காலம்தான். ஆனாலும் திருச்செந்தாழையின் இரண்டாம் தொகுப்பான 'விலாஸம்' வந்தபோது அதற்குரிய வரவேற்பைத் தமிழ்ச்சூழலில் கொடுத்திருக்கின்றது. இப்போது 'நெருப்பில் வளர்ந்தவை' என்கின்ற திருச்செந்தாழையின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கின்றது.

திருச்செந்தாழையின் கதைகளில் அவர் பரபரப்பு தரும் கதைகளையோ அல்லது இறுதியில் அதிர்ச்சி தரும் முடிவுகளையோ எளிதில் தவிர்த்துவிடுகின்றார். மிக நிதானமாகவே தனது கதைகளை உருவாக்கியபடி, ஒரு சூழலை நமக்கு விரிவாக தர முயற்சிக்கின்றார். ஒருவகையில் நான் திருச்செந்தாழையின் கதைகளை 'கணங்களை உறையவைக்கும் மாயஜாலம்' எனச் சொல்வேன்.

ஏன் இந்த உறையவைக்கும் கணங்கள்  எப்போது மாயஜாலமாகின்றது என்றால் அவர் அதை கவித்துவ மொழியில் விரித்துச் சொல்லும்போதாகும்.  பலமாக இருக்கும் அதுவே சிலவேளைகளில் பலவீனமாகப் போகும் அபாயம் இருந்தாலும் அதுவே திருச்செந்தாழையின் தனித்துவமாக அமைகின்றது. கவித்துவ மொழியாக இருப்பதால் அது நீண்ட வாக்கியங்களாகவும் பல கதைகளில் இயல்பாக வந்துவிடுகின்றது. 'வருகை' கதையில் 'சிறியதும் பெரியதுமான எண்ணற்ற கடைகள் மஞ்சள் குண்டுபல்புகளுக்குக் கீழே விழித்துக் கொள்கிற யானைக்கல் பழமண்டியின் உலகம் வெற்றிலைக் கறை படிந்த சிரிப்புகளை, நிதானிக்கக் கூட நேரமில்லாத முகத்தைக் கிழித்துவிடுவதுபோலப் பழங்களும் கிழங்குகளும் நிலக்கடலையும் நிறைந்த மூடைகளைத் தூக்கி உரசி விரைகின்ற சுமைகளால் ஆனது' என திருச்செந்தாழை எழுதிச் செல்கின்றார். ஒருவகையில் இது ஆங்கிலத்தில் எழுதும் அனுக் அருட்பிரகாசத்தின் எழுத்து நடையை நினைவுபடுத்தியது. அவரும் இவ்வாறு நீண்ட வாக்கியங்களால் புனைவுகளை எழுத விரும்புகின்ற ஒருவர்

இன்னொரு இடத்தில் 'கண்ணாடியால் தங்களை வேய்ந்து எண்ணிலா கட்டிடங்கள் எழுந்து நின்றாலும், எதிர்பாராது எப்போதேனும் மின்சாரம் போய்ச் சட்டெனச் சூழ்ந்து கொளிற இருளில், சரசரவெனப் பல நூற்றாண்டுகள் பின் நகர்ந்து தனது புராதனமான முகத்தோடு கோயில் கோபுரங்கள் நிழலுருவாக எழுந்து வருகிற மதுரையின் தொன்மைக்குள் வைகை மட்டுமே காலத்தில் தொலைந்தவள்' என்று எழுதப்பட்டிருக்கும்.

இவ்வாறான நீண்ட வாக்கியங்களின் அழகென்பது கவித்துவத்தோடு அதற்குள் பல விடயங்களை/நிகழ்வுகளைப் புகுத்துவதென்பது. அதேவேளை இந்த நீண்டவாக்கியங்களால் சிலவேளைகளில் Lost in translation மாதிரி, வாசகர்கள் சொல்லவந்ததன்  முக்கிய விடயத்தை தவறவிட்டு காட்சிப் படிமங்களில் மட்டும்  சிக்கி விடுவதாக அமைந்துவிடவும் கூடும்.

'நெருப்பில் வளர்பவை' கதைத் தொகுப்பின் கதைகளை விரித்து சொல்லப்போவதில்லை. அவை புத்துணர்ச்சி தருகின்ற கதை மொழி. திருச்செந்தாழை இந்தக் கதைகள் மீது சாதாரண மனிதர்களையே உலாவ விடுகின்றார். அம்மானிடர் மனம் பிறழ்ந்தவர்களாகவோ, திருமணம் தாண்டிய உறவுகளில் திளைப்பவர்களாகவோ, வியாபாரத்தில் நொடித்துப் போனவர்களாக இருந்தாலும், அவர்களுக்கென்று அமைந்துவிட்ட வாழ்க்கையை, அவர்களின் சூழலுக்குள் நின்று எவ்வித தீர்ப்புக்களையும் அவசரமாக வழங்கிவிடாது நிதானமாகப் பார்க்க நம்மை அழைக்கின்றார்.

அப்பாவுக்கு இருக்கும் இன்னொரு உறவை அறிந்தும் அறியாமலும் விளங்கிக் கொள்ளும் ஒரு சிறுவனின் கதையைச் சொல்லும் 'அப்பா' கதையும், 'வியாபாரத்தில் தோற்றுப்போய் மனைவியின் குடும்பத்தில் மதிப்பற்றிருக்கும் மருமகனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்ளும் மாமியைப் பற்றிய 'ஒரு பிடி வெளிச்சமும்', தகப்பன் இறந்துபோக அந்தக் கடைக்கு வியாபாரம் சொல்லிக்கொடுக்க வரும் திருமணமானவன் மீது சோதிக்கு வரும் உறவு குறித்து விபரிக்கும் 'நிறைசூலி'யும்,  இரண்டு பிள்ளைகளைப் பெற்று நன்றாக இருந்து தாயிற்கு சட்டென்று மனப்பிறழ்வு வந்து அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதும் திரும்பலுமாக இருக்க அவரைப் புரிந்து கொள்ளும் லோகுவின் அவனின் இரண்டு பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் 'வருகை'யும், மலமள்ளிப் பிழைக்கும் பூம்பிடாகை பாட்டியின் பேர்த்தி எப்படி அவமானங்களைத் தாங்கி தன்னையே நெருப்பாக்கி பிறர் தன்னை எவ்விதத்திலும் தீண்டவிடாதிருக்கும் 'சாம்பலில் கனல்வது'ம் இத்தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்த கதைகள்.

இந்தவருடம் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களில் இதை முதன்மையான ஒன்றாக மட்டுமில்லை, தமிழ் இலக்கிய உலகு பெருமைகொள்ளக்கூடிய ஒரு படைப்பாகவும் இதை முன்மொழிவேன்.



***

 


ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains)

Thursday, April 09, 2026

 

ஓரான் பாமுக்கின் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்' (Memories of Distant Mountains) என்கின்ற நூல் அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இது பாமுக் 2009இல் இருந்து 2022 வரை சிறுசிறு குறிப்புகளாக எழுதியவற்றின் தொகுப்பு. குறிப்புகளாக மட்டும் இல்லாது இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் பாமுக் ஓவியங்களை வரைந்து எழுதியிருப்பதுதான் இதன் சிறப்பு எனலாம்.


பாமுக் இப்படி ஒரு தொகுப்பை அவர் நோபல் பரிசை வென்ற அடுத்த ஆண்டு கொண்டு வந்திருந்தார். அது 'Other Colors'. அதில் பெரிய கட்டுரைகளிலிருந்து சிறு பதிவுகள் வரை சேர்க்கப்பட்டிருக்கும். இதுவரை காலமும் பாமுக் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரேயொரு சிறுகதையும் அதன் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும். 90களிலும், அதற்கு முன்னரும் இருந்த பாமுக்கை நாம் காண்கின்றோம்.
 

பாமுக் அவரது தகப்பன் வேலை செய்யும் ஜெனீவாவுக்கு செல்வது அவரது முதல் பயணம். அது அவரது 7 வயதில் நிகழ்கின்றது. பின்னர் ஆர்க்கிட்டெட் படிப்பை பாதியில் முறித்துவிட்டு ஓர் எழுத்தாளராகும் கனவுடன் வீட்டு அறையில் முடங்கிக்கிடந்து எழுதுகிறார். நள்ளிரவுகளில் விழித்திருந்து எழுதும் அவரை தாயார், 'நீ இவ்வளவு நிறைய சிகரெட்டுக்களைப் பிடிக்காது ஓர் எழுத்தாளராக ஆகப் பார்' என்று சொல்கின்றார். இப்படி எழுத்தாளாராகும் கனவில் இருக்கும் மகன்களை அணைத்துக்கொள்ளும் தாய்களை போர்ஹேஸிடம், நகுலனிடமும் நாம் பார்க்க முடியும்.
 
பாமுக், பிறகு அடுத்த வெளிநாட்டுப் பயணத்தை அவர் எழுத்தாளாராகிவிட்ட அவரது இருபதுகளின் இறுதியில் செய்கின்றார். அது நிறையத் துருக்கியர்கள் இருக்கும் ஜேர்மனிக்கு ஆகும். அங்கே அவர் நிறைய இடங்களில் புத்தக வாசிப்புக்களையும் கலந்துரையாடல்களையும் செய்கின்றார். இந்தக் கூட்டங்களில் துருக்கியர்கள், அரை ஜேர்மனியர் +  அரை துருக்கியர்கள், தன்னிடம் இலக்கியம் குறித்து கேள்விகளைக் கேட்பார்கள் என்று நினைத்தால் அவர்கள் துருக்கியைப் பற்றித்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிடிருந்தார்கள் என்று சொல்லி அவர் புலம்பெயர்ந்த நாட்டில் துருக்கியர்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து எழுதுவது மிகச் சுவாரசியமானது. பாமுக் ஜேர்மனியில் எதிர்கொண்டதற்கும் எம்மைப் போன்ற ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வதற்கும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லையென்பதை நாம் இதை வாசிக்கும்போது அறியமுடியும்.

அதுபோலவே தனது எழுத்தாளர் வாழ்க்கை முழுதும் யாருக்காக எழுதுகின்றேன் என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது என்று பாமுக் கூறுகின்றார்.  இப்போது உலகளவில் தெரியும் எழுத்தாளராகிவிட்டதால் இன்னும் புத்திசாலித்தனமாக, 'நீங்கள் ஒரு நாவலை எழுதும்போது துருக்கியரை நினைத்து எழுதுகிறீர்களா அல்லது உலகளாவிய வாசகர்களை நினைத்து எழுதுகின்றீர்களா என்று கேட்கின்றார்கள் என பாமுக் நகைச்சுவையுடன் கூறுகின்றார். இந்தக் கேள்வியை பலவிதங்களில் ஆராயும் பாமுக், இறுதியில் ஒரு நாவலாசிரியர் எப்போதும் தன்னை வாசிக்கும்  ஒரு ideal வாசகரை நினைவில் வைத்தே எழுதுகின்றார் என்று ஓர் அவதானத்தை முன்வைக்கின்றார்.
*
பாமுக்கின் இந்த ஓவியங்கள் இருக்கும் குறிப்பு நூல் 'தொலைதூர மலைகளின் நினைவுகள்'  மிகச் சிறிய குறிப்புகளாலானது. இதில் கோவா/மும்பையில் அவரின் அப்போதைய காதலியாக இருந்த கிராண் தேசாயுடன் கழித்த குறிப்புகள் சுவாரசியமானவை. எனினும் பாமுக் தனியே தன் அறையில் விடப்படுவதையே அவரது இருபதுகளில் இருந்தே விரும்புகின்றவராக இப்போதும் இருப்பதைக் காண்கின்றோம்.

தமிழில் இந்த நூல் அல்ல, இதற்கு முன்னர் வந்த 'Other Colour' தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். அது  நல்லதொரு முன்னுதாரண நூலாக எழுதுபவர்களுக்கு பயன்படும். மேலும் தமிழில் எப்போதும் புனைவுகளை எழுதுகின்றவர்களே கொண்டாடப்படுவதான பாவனை இருக்கின்றது. பாமுக்கின் இந்த நூல்களை வாசிக்கும்போது அவர் எந்தளவுக்கு வாசிக்கின்றவராக, பிற எழுத்தாளர்களைக் கொண்டாடுகின்றவராக, அவற்றைப் பதிவு செய்கின்றவராக மட்டுமின்றி, அவரது நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் எப்படி உழைத்திருக்கின்றார் என்பதையும் அறிய முடியும்.

இந்த இரண்டு நூல்களிலும் எனக்கு மிகப்பிடித்தது பாமுக் எந்தளவுக்கு vulnerable ஆக தன்னை பொதுவெளியில் முன்வைக்கின்றார் என்பதாகும். தனக்கு எழுத வருவது என்பது,  தனித்த அறையில் நீண்ட நேரம் இருக்கும்போது அப்போது ஏற்படும் சலிப்பான/அலுப்பான (இதை நல்லவிதமாகப் பார்க்கலாம்)  சூழ்நிலையிலே என்கின்றார். எப்போதும் சலிப்புற்று, எந்நேரமும் சந்தோசத்தோடும் இருந்து எழுதுகின்றோம் என்று சொல்கின்ற நம் தமிழ் எழுத்தாளர்களை  மட்டுமில்லை, உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் உறுதியான கருத்துக்களைச் சொல்லி, தாம் சொல்வதே சரியென்று வாதிடும்  அவர்களை இந்தக் கணத்தில் நினைத்துக் கொண்டேன். 


'பென்' அமைப்பில் இருந்தபோது மட்டுமில்லை, தனிப்பட்டு தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்கப்படும்போதுதான் தான் சொல்லும் பதில்கள் சரியா என்று எப்போதும் குழப்பம் வருவதாக பாமுக் சொல்கின்றார். அப்படி தன்னை பலவீனமாக அரசியல் கருத்துக்களில் முன்வைக்கின்ற பாமுக்தான் தான் இருக்கும் நாடு, அரசு எதுவும் குறித்தும் பயப்பிடாமல், 'துருக்கியர்கள் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தினார்கள் அந்த படுகொலையில் ஒரு மில்லியன் ஆர்மேனியர்களும், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட குர்திஷ்காரகளும் கொல்லப்பட்டவர்கள்' எனச் சொல்லியிருக்கின்றார்கள்.

இதன் நிமித்தம் அவர் மீது நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் நீதிமன்றப்படிகள் அதற்காய் ஏறியபோது துருக்கியர்களால் கற்களால் எறியவும் பட்டவர். சர்வதேச எழுத்தாளர்கள், அமென்ஸ்டி நிறுவனத்தின் எதிர்ப்பால் அவர் அந்த 'துருக்கியர்களை அவமானப்படுத்தினார்' என்கின்ற வழக்கிலிருந்து வெளிவந்தாலும், எப்போதும் கொலைப்பயமுறுத்தல் காரணமாக நீண்டகாலம் பாதுகாலவருடன் திரிந்திருக்கின்றார். அதன் சில பதிவுகளை இந்தப் புதிய புத்தகத்தில் பார்க்க முடியும். அதுபோலவே துருக்கியின் அரசியல் நிலவரம் குறித்துக் கேட்கும்போதெல்லாம், அநேக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருப்பது போல துருக்கியிலும் சிறுபான்மையினருக்கு அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன என்று கூறியிருக்கின்றார்.

இன்றைக்கு பாமுக் உலகறிந்த எழுத்தாளர். அது தனியே எழுதுவதால் மட்டும் வந்தல்ல. அரசியல் உண்மைகளையும் அவர் அச்சப்படாமல் சொல்வதால் கூட வந்திருக்கக் கூடும். ஆனால் தமிழில் பாருங்கள், தங்களுக்குத்தாமே முன்னணி நட்சத்திர எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எழுத்தாளர்கள் அரசு/அரசாங்கம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதுகூட பரவாயில்லை ஒருவர் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் துயரத்தின் துளி கூடத் தெரியாதென திருவாய் மலர்ந்தார். இன்னொருவர் 'லோலிடா' போல எழுதுவதாக நினைத்து சிறுமி மீதான பாலியல் விழைவை, வரலாற்றில் இந்திய இராணுவம் சிங்களப் பெண்கள் மீது செய்யாத பாலியல் வன்புணர்வைச் செய்ததாகக் கதைகள் புனைந்து 'சங்கீதம்' பாடி எங்களை மீண்டும் எழுத்தில் கொலை செய்தார். ஆனால் இவர்கள் அனைவருக்குமே தாங்கள் எழுதுவதும், பேசுவதும் உலகத்தரமானது, ஆனால் உலகம் நம்மைக் கவனிக்கவில்லை என்பதுதான் அவர்களுக்கு பெருங்கவலையாக இருப்பதுதான் அவல நகைச்சுவை.
 

பாமுக்கின் எழுத்துக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டது (முக்கியமாக ஆங்கிலத்தில்) அவரது நாற்பது வயதுகளில். அதற்கு முன்னரே அவரது பெரும்பாலான நாவல்களை துருக்கி மொழியில் எழுதிவிட்டார். பாமுக் எழுதிய 'என் பெயர் சிவப்பு, 'பனி' போன்றவை வெளிவந்தபின்தான் அவருக்கு இலக்கியத்துக்கான முக்கியமான டப்ளின், நோபல் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன.

பாமுக் இன்றைக்கும் பெரும்பாலும் கூட்டங்களைத் தவிர்த்து தனித்து இருக்கவே விரும்புகின்றார். ஒருவேளை பாமுக்கு இன்றிருக்கும் புகழ் வந்திருக்கா விட்டால், அன்று இருபதுகளில் எழுத்தாளர் ஆவதே கனவு என்று முடிவெடுத்த அவர் இப்போது எப்படி இருந்திருப்பார் என யோசித்துப் பார்க்கின்றேன். சிலவேளை தனது கடைசிக்காலம் வரை கவனிக்கப்படாத ரொபர்தோ பொலானோ போல, போதிய புகழ் வெளிச்சம் கிடைக்காவிட்டாலும்,   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒருவராக பாமுக் நிச்சயம் இருந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

சிலரின் இளவயதுக் கனவுகள் மிகத் துணிச்சலானவைதான். துருக்கியில் புத்தகங்கள் வாசிக்காமல் இருப்பது என்றால்தான் சாதாரணமானது. கொஞ்சம் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தாலே அவர்கள் பிறழ்ந்த மனதுடையவர்கள் எனச் சொல்லக்கூடிய சூழல் என்று பாமுக் கூறுகின்றார். அவ்வாறான ஓரு சூழலை அறிந்தும் முழுநேர எழுத்தாளராக இருக்க ஒருவர் இளமையிலே முடிவுசெய்தார் என்பது வியப்புக்குரியதுதான்.

நமக்கு பிற நாட்டு/கலாசார புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் நாட்டில் எழுத்தாளர்களை அப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற மாயை இருக்கின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் (தமிழை விட) எழுத்தாளாராக இருப்பது  அவலமானதாக இருக்கின்றது என்பதே யதார்த்தம். பாமுக் கூட அவரின் ஏதோ ஓர் உரையில், என்னை வாசிப்பவர்கள் எங்கள் நாட்டில் மிகக் குறைவானவர்கள் என்று குறிப்பிட்டுக் கவலைப்பட்டிருப்பார்.

எனவே தமிழில் எழுதுகின்றவர்கள் தம்மை நமது சூழல் கவனிக்கவில்லை என்று கவலைப்படுவதைவிட, நாம் தமிழுக்கு புதிதாக எழுத்தால் என்ன வளத்தைக் கொண்டுவந்தோம், சமகால உலக இலக்கியப்பரப்பில் இருந்து எவற்றை   புதிதாக இங்கே அறிமுகப்படுத்தினோம் என்று சிந்திப்பது தமிழுக்கு மட்டுமில்லை, அவர்களை வாசிக்கும் நமக்கும் நன்மை பயக்கும்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 144

Sunday, March 29, 2026

 

போர் என்பது எவ்வளவு குரூரமானது என்பதை அறிய இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எங்களைப் போன்று போர்ச்சூழலுக்குள் வாழாதவர்களாயினும் இது உங்களை அவ்வளவு நொறுங்க வைக்கும். அமெரிக்காவின் கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகளாலும் வெல்லப்படாத போர் என்பது வியட்னாம் போர்தான். அதேபோல இந்த அரசியல்வாதிகள் எப்படி தமது அதிகாரத்துக்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும் தமது சொந்தப் படையை பகடைக்காய்களாக வைத்து போரை நீடித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.
 

அதேபோல கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருந்த வடக்கு வியட்னாமோடு வீணாகப் போர் செய்யப்போய் கடைசியில் அமெர்க்காவுக்குச் சார்பாக இருந்த தென்வியட்னாமையும் கம்யூன்ஸிட்டுப் படைகளுக்குத் தாரை வார்த்துவிட்டுத் தப்பிப்போனவர்கள்தான் அமெரிக்கர்கள். இந்த வியட்னாம் போரில் இறுதியில் எப்படி அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர்களை அமெரிக்கா இறுதியில் கைவிட்டதோ அதேயேதான்  ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மக்களையும் இறுதியில் தலிபான்களின் கைகளில் கொடுத்துவிட்டு வந்தார்கள் என்று அன்று வியட்னாமியப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நினைவுபடுத்துகின்றார்கள்.

ஆக அமெரிக்கா எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டுமில்லை அமெரிக்காவை நம்பும் மக்களையும் தனது நலம் என்று வரும்போது அமெரிக்கா எப்போதும் கைவிடத் தயாராக இருக்கின்றது என்பதையும் இது நமக்கு நினைவுபடுத்துகின்றது.

ஈராக்கிய போர் குறித்து அன்றைக்கு போர் நடத்திய அமெரிக்க ஜெனரல் ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது. ஈராக்கைத் தாக்குவது என்று தெளிவாகத் தீர்மானித்திருந்திருந்தோம். அங்கே weapons of mass destruction (WMD) இருக்கின்றது என்று போருக்குச் செல்வதற்கு மக்களை நம்பவைக்க அப்படிச் சொல்லப்பட்டதே தவிர, ஈராக்கில் அப்படி ஏதுமில்லாமல் paper clips மட்டும் இருந்தால் கூட போரை நடத்தியிருப்போம் என்று அவர் சொல்லியிருப்பார்.

இந்த ஆவணப்படத்தில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதிகள், அவர்களின் செயலாளர்கள், இராணுவ ஜெனரல்கள் வெள்ளைமாளிகையில் உரையாடியவற்றின் பதிவுசெய்யப்பட்ட டேப்புகளில் இருந்து குரல்வழியே அன்று நடந்ததைக் கேட்க முடிகின்றது. இவ்வாறு அமெரிக்கா ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் ,ஏன் இப்போது ஈரானில் நடத்தும் அட்டூழியங்கள் குறித்த உண்மைகளையும் அறிய நாம் இன்னும் 20-30 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா, அதற்குள் பெரும் அழிவுகளைப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டுமா என்று ஒருசேர சலிப்பும், விரக்தியும், வெறுமையுமே மிஞ்சுகின்றது.

Turning Point: The Vietnam War என்கின்ற ஆவணப்படம் ஐந்து பாகங்களாக வியட்னாம் போர் முடிந்து 50 ஆண்டுகளை நினைவுபடுத்த வந்திருக்கின்றது. தென்வியட்னாமின் தலைநகராக சைகோன் நகர் இருந்தது. அமெரிக்கர்கள் வெளியேறியவுடன் வடவியட்னாம் கம்யூனிஸிட்டுகள் அதைக் கைப்பற்றிய ஆண்டு 1975. அத்துடன் ஒன்றிணைந்த வியட்னாம் உருவாகி விட்டிருந்தது. இப்போது சைகோன் நகர், ஹோசிமின் நகராக மாறிவிட்டிருக்கின்றது.

இந்த கம்யூனிஸிட்டுகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவுகின்றார்கள் என்று கம்போடியா, லாவோஸ் மீதும் தேவையே இல்லாது பல்லாயிரக்கணக்கான குண்டுகளை அமெரிக்கர்கள் வீசியிருக்கின்றனர். அன்று வியட்னாம், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகள் மீது வீசப்பட்ட குண்டுகள் அமெரிக்கா இரண்டாம் உலக மகாயுத்ததின்போது ஜேர்மனியர்களுக்கு மேலாக வீசிய குண்டுகளை விட அதிகமானது என்கின்றது புள்ளிவிபரம்.

இந்த ஆவணப்படத்தில் அன்றைக்கு இருந்த ஜனாதிபதிகளுக்கு அருகிலிருந்தவர்கள்,  வியட்னாமிய களநிலவரத்தின் உண்மை நிலவரத்தைச் சரியாகச் சொல்லாது, 'நாம் வென்று கொண்டிருக்கின்றோம்' என்று பொய்யைத் திரும்பச் திருப்பச் சொல்லி அழிவை அதிகரித்ததைக் காண்கின்றோம். இப்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருப்பதற்கும் அன்று நடந்ததற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசமில்லை.

இப்போது ஈரான் குறித்து அமெரிக்கா சொல்வதும்  'நாம் அவர்களில் முக்கியமானவர்களை அழித்துவிட்டோம், விரைவில் வெல்வோம்'.

***

 

கார்காலக் குறிப்புகள் - 143

Saturday, March 28, 2026

 

 அகிலனின் 'சித்திரப் பார்வை'க்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது, அதை எதிர்த்து சுந்தர ராமசாமி 'போலி முகங்கள் -  சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு'  கட்டுரையை எழுதியிருந்தார். அது 1976 ஆம்  ஆண்டு 'பிரக்ஞை' இதழில் வெளிவந்திருக்கின்றது (பார்க்க ;சுந்தர ராமசாமியின் 'ஆளுமைகள் மதிப்பீடுகள்', ப.202).


இப்போது ஜெயமோகன், வைரமுத்துக்கு ஞானபீடம் கிடைத்தற்கு பொங்கியெழுந்ததற்காக, அவர் அகிலன் நினைவுப்பரிசை 'ரப்பர்' நாவலுக்கு 1990இல் பெற்றது எந்தவகையில் நியாயம் என்று கேட்கப்படுவதைச் சில இடங்களில் பார்த்தேன். 



உண்மையில் சுந்தர ராமசாமியின் காலம் என்பது வேறு வகையானது. அறம்/அரசியல் சார்புகள் என்பவை தீர்க்கமாக எடுக்கப்பட்ட நவீனத்துவ காலம். சிற்றிதழ்கள் X வெகுசன இதழ்கள் என்று தெளிவான கோடு அன்றிருந்தது. சுந்தர ராமசாமி போன்றோர்  வெகுசன இதழ்களில் ஒருபோதும்  எழுதமாட்டோம் என்று தீவிர இலக்கியத்தின் ஒரு முகமாக பிடிவாதமாக இருந்த பொழுதுகள் அவை.

இன்று தீவிர இலக்கியத்துக்கும், வெகுசன இதழ்களுக்கும் இடையில் கோடுகள் தெளிவற்றுப் போனது மட்டுமில்லை, மூன்றாவது தளமான சினிமாவும் மேற்கூறிய இரண்டு விடயங்களோடு இடைவெட்டிக் கொண்டிருக்கின்றன. சுந்தர ராமசாமி இன்று உயிரோடிருந்தால், இன்றைக்கு தீவிர இலக்கியவாதிகள் என நாம் அழைக்கும் பலரை சினிமா/வெகுசன இதழ்களில் பங்காற்றுவதற்காக, அகிலனுக்கு அடித்ததைவிட இன்னும் தீவிரமாக அவர்களை அடித்துத் துவைத்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.

சுந்தர ராமசாமி அப்படி இருந்தது சரியானதா இல்லையா என்பது உரையாடலுக்குரியது ஒருபுறம் என்றாலும், அப்படி இருந்ததாலேயே சுந்தர ராமசாமி ஒரு தரப்பின்/ஒரு காலத்தின் முக்கிய அடையாளமாக இன்றும் நின்று நிலைத்தபடி இருக்கின்றார்.

ஜெயமோகன் அகிலன் நினைவுப்பரிசுக்காக அவரது ரப்பரை 1990இல் அனுப்பியபோது, சுந்தர ராமசாமியின் 'போலி முகங்கள் - சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு' கட்டுரையை எப்படியேனும் வாசித்திருப்பார். ஏனெனில் சுந்தர ராமசாமியோடு அவருக்கு 1985இலே அறிமுகமாகிவிட்டது (பார்க்க அவரது இணையத்தளத்தில் 'அறிமுகம்' பக்கம்). கிட்டத்தட்ட ஜெயமோகன் அவரது 'விஷ்ணுபுரம்' வெளியாகிய 1997 ஆம் ஆண்டுவரை சுராவோடு ஜெமோ நெருங்கிய நட்பாகவே இருந்தவர். ஆக, இந்த 'அகிலன் நினைவுப்பரிசு' குறித்து இவர்கள் இருவருக்குமிடையில் ஏதேனும் உரையாடல் நிகழ்ந்ததா என்பது அறிவது சுவாரசியமாக இருக்கும்.

இது ஒருபுறமிருக்க, எனது கேள்வி என்னவென்றால் இதே வைரமுத்து கொடுக்கும் விருதுகளை ஆண்டுதோறும் இலக்கியவாதிகள் பெற்றுக்கொள்வதைப் பற்றி நம் தமிழ்ச்சூழல் இவ்வாறு கிளர்ந்தெழுந்து பேசியிருக்கின்றதா?

அதுபோலவே சுஜாதாவின் பெயரில் விருதுகளை உயிர்மை வழங்கியபோதும் இன்று பொங்குகின்ற பல எழுத்தாளர்கள் சிரித்தபடி புகைப்படங்களுக்கு படங்காட்டியபடிதானே இருந்திருக்கின்றார்கள். ஏன் அண்மையில் பாலகுமாரன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டபோதும் இதே இலக்கியவாதிகள் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்தானே?

இதை நம் தமிழ் இலக்கியவாதிகள் அணிகின்ற இரட்டை வேடம் எனச் சொல்லலாமா? ஒருபக்கம் அகிலன், வைரமுத்து, சுஜாதா எழுதியவை அசலான இலக்கியம் அல்ல என்று கொந்தளித்துக் கொண்டு, இன்னொருபக்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

ஆக, இதுதான் தமிழ்ச்சூழலின் இயல்பு என்று ஏற்றுக்கொண்டு மெளனமாக இருக்க வேண்டுமா?. அல்லது இவை குறித்து நமக்குள் சுயவிமர்சனம் அவசியமானது என்று இவ்வாறான விருதுகள் குறித்தும் உரையாட வேண்டுமா?

***

சிறுகுறிப்பு (பின்னர் சேர்க்கப்பட்டது):

தற்சமயம் அசோகமித்திரனின் 'காலக்கண்ணாடி'யை (கணையாழி இதழில் எழுதியவை) மீள வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் 'சில நிருபணங்கள் (கதைக் கடன்)' பத்தியில்,

 'கேரளத்தில் உள்ள குமரன் ஆசான் நினைவு இலக்கிய அமைப்பு சமீபத்தில் க.நா.சுவுக்கு அவருடைய 'மயன் கவிதை'களுக்காகப் பரிசு அளித்திருக்கிறது. எழுபதை எட்டப்போகும் கநாசுவுக்கு இதுவே முதல் பரிசு என்று கூறலாம். படிப்பு முடித்து வந்த நாள் முதல் எழுத்தே பணியென்று வாழ்ந்து வரும் இவர்' என்று அசோகமித்திரனின் அந்த பத்தி எழுத்து நீளும்.

ஜூன் 1981 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு க.நா.சு உயிரோடு வாழ்ந்தது ஏழே ஏழு ஆண்டுகள்தான். ஆக இப்படியான மனிதர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விருதுகளும் இன்றி இளமைக்காலம் தொடக்கம் சாகும்வரை எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


(ஓவியம்: சின்மயா)

 

கார்காலக் குறிப்புகள் - 143

Friday, March 27, 2026

 

மிழ்ச் சூழல் தங்களுக்குத் தாங்களே சூடிக்கொண்ட  மலினமான கவியரசுகள், கவிப்பேரரசுகளின்  பக்கமும், இன்னொருபுறம் ஏதென்று அறியாத கல்லூரிகள் வழங்கும் 'டாக்டர்' பட்டங்களில் தமது எழுத்தாளுமையை புதைத்து பெருமிதம் கொண்டு, விருதுக்கு எதிர் விருதென  ego centric trip களில் தொலைந்து போகின்ற காலத்தில், ஓர் எழுத்தாளர் இன்னமும் தன்னை எங்கேயும் முன்னிறுத்த விரும்பாது, தான் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதையோ அல்லது தனது புகைப்படங்களையோ பிரசுரிக்காது (ஒரு குறிப்பிட்ட காலம்வரை மிலான் குந்தேராவும் அப்படி இருந்தவர்) 'தலைமறை'வாக எழுத மட்டும் செய்கின்றார் என்பதை இந்த நவீன காலத்திலும் நம்ப முடிகின்றதா?

அவர்தான் Thomas Pynchon.
 

60களில் இருந்து எழுதிவரும் தோமஸ், அவரது அறுபது வருட எழுத்து வாழ்க்கையில் பத்துக்கு குறைவான நாவல்களே எழுதியிருக்கின்றார். கடந்த வருடம் அவரது பத்தாவது நாவலான Shadow Ticket  வந்திருந்தது.

தோமஸ் சிக்கலான, அபத்தமான நகைச்சுவையுடைய, அதேவேளை  வரலாறு, கலை மற்றும் வெகுசன கலாசாரத்தையும் உள்ளக்கி எழுதும் ஓர் பின்நவீனத்துவ எழுத்தாளரெனக் கொண்டாடப்படுகின்றார்.
இந்தக் கூறுகளைக் கொண்ட அவரின் நாவல்களில் ஒன்றான, 'Vineland'ஐ தழுவி எடுக்கப்பட்ட படமே One Battle After Another.

இத்திரைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு அதில் இருக்கும் அன்றைய அமெரிக்க சமகாலமும் (60/70), அதேவேளை புரட்சி என்கின்ற பெருங்கனவு எவ்வளவு அபத்தமான நகைச்சுவையாக அமெரிக்க மண்ணில் ஆகின்றது என்பதை ஒருகாலத்தில் புரட்சியாளனாக இருந்த லியானார்டோ டீகாப்பிரியோ பாத்திரம், பிற்காலத்தில் குடிக்கும், போதைப்பொருளுக்கும் அடிமையான ஒரு paranoid தகப்பனாக மாறுவதைக் காண்கின்றோம்.

இதற்குள் அமெரிக்காவிற்குள் நுழையும்  இலத்தீன் அமெரிக்க குடிவரவாளரை அனுதாபத்துடன் அணுகுதல், காப்பாற்றி தலைமறைவாக வைத்து அனுப்புதல், Black Panthers ஐ  நினைவுபடுத்தும் கறுப்பினப்பெண்களின் புரட்சிக்கான தலைமைதாங்கல், காட்டிக்கொடுப்புகள், கொடூரமான அமெரிக்க இராணு  (DEA/ICE) அமைப்புக்கள் என இன்றை சமகாலத்துக்கும் பொருந்துவதாக கதை இருக்கின்றது.

இதே தோமஸின் இன்னொரு நாவலான Inherent vice உம், அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றது. ஆக ஓர் எழுத்தாளர் தனது நாவல்கள் திரைப்படமாகும்போதோ, ஏன் சிறந்த திரைப்படத்துக்கென மிக உயரிய விருதைப் பெற்றபோதோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது ஓர் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு பெருமிதப்படக்கூடியது.

நாவல்களை பின்நவீனத்துவமாக எழுதுவது மட்டுமில்லாது, எழுத்தை மட்டும் பார்,, எழுதும் நான் யாரென்பது முக்கியமில்லை என்று அதே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் சொல்வதைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் தோமஸ் உண்மையிலே மதிப்புக்குரியவர்தான்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 142

Wednesday, March 25, 2026

 

The Secret Agent
***

ஒருவன் மூன்றுநாட்களாகப் பயணித்து ஒரு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காரை நிறுத்துகிறான். அதன் அருகில் செத்துப்போன மனிதனின் உடல் இருக்கின்றது. இலையான்கள் மொய்த்தபடி இருக்கும் அந்த உடலை அவ்வப்போது தெருநாய்கள் வந்து கடிக்கவும் முயல்கின்றன.

மார்செல்லோ என்கின்ற அந்த மனிதன் இதைக் கண்டு அந்த இடத்தைவிட்டு நகர விரும்புகின்றான். நீயும் போனாய் என்றால், எரிபொருள் நிரப்ப எவரும் வரப்போவதில்லை என்று காஷியர் சொல்கின்றான். என்ன நடந்தது அந்த இறந்தவனுக்கு என்று மார்செல்லோ கேட்கின்றபோது, அவன் இங்கிருக்கும் என்ஜின் ஓயிலை களவெடுக்க வந்தபோது இரவில் சுட்டுக்கொல்லப்பட்டவன் என்கின்றான் காஷியர்.


இரண்டு நாட்களாக இங்கே கிடக்கும் உடலை, பொலிஸுக்கு தகவல் சொல்லியும் இங்கு வந்து உடலை எடுத்துச் செல்லவில்லை எனச் சொல்லப்படுகின்றது. மார்செல்லோ பெற்றோலை நிரப்பிவிட்டு அங்கிருந்து நகரும்போது, பொலிஸ் ஜீப் வருகின்றது. ஆனால் அவர்கள் வருவது அந்த உடலுக்காக அல்ல. தொலைதூர நகரிலிருந்து வந்திருக்கும் மார்செல்லோவிடமிருந்து இலஞ்சம் வாங்குவதற்காக. மார்செல்லோவின் எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் அதை முன்வைத்து பணம் பறிக்க முடியாதிருப்பதால், இந்நகரில் இப்போது வருடாந்த பெரும் திருவிழா (carnival) நடக்கின்றது, அதற்கான பொலிஸ் நிதிசேர்தலுக்கு உன் பங்களிப்பைத் தா என்று பொலிஸ் கேட்கின்றது. அதிலிருந்து எப்படி மார்செல்லோ தப்பிப் போகின்றார் என்பதுடன் நீண்ட காட்சி முடிவதே அருமையான ஒரு குறும்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறுதான் The Secret Agent  என்கின்ற பிரேசிலத் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இதுவும் 'I'm still here' திரைப்படம் போல, பிரேசில் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்த 70களில் நிகழ்கின்றது. இன்னும் திருத்தமாகச் சொல்வதால் இது 1977இல் நடக்கும் ஒரு கதை.

காரில் போகும் மார்செல்லோ உண்மையில் யார் என்பதை நாம் இத்திரைப்படத்தில் நடுப்பகுதியிலே அறிந்துகொள்கின்றோம்.
அதுவரை அவர் ஒரு இரகசிய உளவாளியா, அரசுக்கு எதிராக இயங்கும் குழுவைச் சேர்ந்தவரா என்கின்ற முடிவுக்கு வராது நாம் அவரைப் பின் தொடர்கின்றோம்.

ஏனெனில் இத்திரைப்படத்தில் எந்த முக்கிய பாத்திரமும், தாம் சர்வாதிகார அரசால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ரோம் என்ற பயத்தினால், நேரடியக உண்மையைக் கதைக்க அஞ்சுகின்றனர். மார்செல்லோ வந்து சேரும் நகரில் அடைக்கலம் கொடுக்கும் முதியபெண்ணான டொன்னா செபஸ்டியனா விசித்திரமான பெண். அவரது கடந்தகாலத்தில் இரகசியமானது என்றாலும், அவர் ஒரு புரட்சிக்காரியாக இருந்தவர். எனவே அவர் தனது தொடரடுக்கில் இப்படி அரசால் தேடப்படுபவர்களுக்கும், இராணுவத்தால் கொல்லப்பட சாத்தியமுள்ளவர்களுக்கும் தஞ்சம் கொடுக்கும் இடமாக அது அமைந்திருக்கின்றது.



பிரேசில் நாட்டிலிருப்பவர்கள் மட்டுமில்லை, அங்கோலா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் இருந்து அரசியல் காரணமாக தப்பிவந்தவர்களும் செபஸ்டினா வீட்டில் தங்கியிருக்கின்றனர். ஆனால் எவருமே தமது உண்மைப் பெயரை அங்கே தமது உயிரின் பாதுக்காப்பு சார்ந்து சொல்வதில்லை. அப்படியே தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தையும் சொல்வதில்லை.

நமக்கு திரைப்படத்தில், மார்செல்லோவின் மகன் ஒருவரும் இந்த நகரில் இருக்கின்றார் என்பதும், அவன் அவரின் இறந்துபோன மனைவியின் பெற்றோருடன் வாழ்கின்றான் என்பதையும் அறிகின்றோம். மார்செல்லோவோடு அவ்வளவு எளிதில் அவரது மகனைச் சந்திக்க முடிவதில்லை. அவரது கடந்தகாலத்தில் ஏதோ நடந்திருக்கின்றது. அரசு அவரை கண்காணித்தபடி இருக்கின்றது என்பதை அறிகின்றோம்.

மார்செல்லோ தனது மகனையும் அழைத்துக் கொண்டு வேறொரு நாட்டுக்கு அகதியாக தப்ப விரும்புகின்றார். ஆனால் அப்படி முயல்கின்றபோது அவரது பாஸ்போர்ட் அரசால் முடக்கப்பட்டதை அறிகின்றார்.  அவர் தப்பிப் போவதற்கு உதவ விரும்பும் அரசுக்கு எதிரான புரட்சிக்காரர் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்வரை அந்நகரில் இருக்கும் அடையாள அட்டை வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்கின்றனர்.

இப்படி ஒருபக்கத்தில் மார்செல்லோவின் வாழ்க்கை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பிரேசிலில் அக்காலத்தைய புறவுலகம் விபரமாகவும், நிதானமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. மிக இருண்ட காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இப்படம் காட்டுவது இதில் சிறப்பு. திருவிழா நடக்கின்றது. மக்கள் இந்தளவு அல்லாடல்களுக்கும் இடையில் அதைக் கொண்டாடுகின்றார்கள்.

இன்னொருபக்கம் அந்நகரில் அரசுக்காகவும், இராணுவத்துக்காகவும் கொலைகள் நடக்கின்றன. மோசமான பொலிஸ் அதிகாரி இந்தத் திருவிழாவோடு 90 கொலைகளைச் செய்துவிட்டோம், மிக விரைவில் 100 இலக்கத்தை கொலைகளில் எட்டுவிடுவோம் என்று சொல்கின்றார்.

மார்செல்லோவின் இந்த தலைமறைவு வாழ்க்கைக்கு சமாந்திரமாக, அரசியல்/தனிப்பட்ட கொலைகள் செய்பவர்களின் வாழ்க்கை காட்டப்படுகின்றது. ஒருகாட்சியில் மார்செல்லோவின் புகைப்படத்தைக் காட்டி இவர் கொலை செய்யப்படவேண்டியவர் என்று இரு கொலைகாரர்களுக்கு (தகப்பனும்/மகனும்) கட்டளை ஒரு பெரும் நிறுவன அதிகாரியால் கட்டளையிடப்படுகின்றது.

அந்தக் கொலைகாரர்கள் இவரைத் தேடி புறப்படுகின்றார்கள். மார்செல்லோவுக்கு நீ இனி உயிரோடு இருக்க நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றது. எப்படியாவது தப்பிப் போய் விடு என்று புரட்சிக்காரர்களால் தகவல் சொல்லப்படுகின்றது.

இப்போதுதான் நாம் மார்செல்லோவின் கதையை அறிகின்றோம். அவரை, அவரின் மாமனார் வேலை செய்யும் தியேட்டரில் இந்தப் புரட்சிக்காரர்கள் சந்தித்து, அவரது கதையைப் பதிவு செய்கின்றனர். அந்தப் பதிவு செய்த சில காஸேட்டுக்கள் பாதுகாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக மாணவி ஓர் ஆய்வின் நிமித்தம் கேட்கின்றாள். அவளுக்கு மார்செல்லோவின் வாழ்க்கையும், அவருக்கு என்ன நடந்தது என்று அறியவும் ஆர்வம் கூடுகின்றது.

*

மார்செல்லோ, ஒரு இடதுசாரியோ அல்லது அரசுக்கு எதிரான புரட்சிக்குழுவில் இருந்த ஒருவரோ அல்ல. அவர் ஒரு சாதாரண பேராசிரியர். அவர் ஆய்வு செய்கின்ற லித்தியம் பட்டரிகள், எதிர்காலத்தில் வரப்போகும் மின்சாரகார்களுக்கு உதவும் என்பதால் அரசின் அமைச்சில் பங்குவகிக்கும் ஒரு பெருநிறுவனம் இவரது ஆய்வை வாங்க விரும்புகின்றது. அவர் அதற்கு உடன்படாததால், ஆய்வுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துகின்றது. அத்தோடு அந்த நிறுவன அதிபரோடும்/மகனோடும் சந்திக்கும் இரவு விருந்தில், அவர்கள் மார்செல்லோவின் மனைவியை அவமானப்படுத்துகின்றனர். அதை எதிர்ந்த மார்செல்லோவின் மனைவி கதைக்கத் தொடங்கும்போது வாக்குவாதம் முற்றும்போது மார்செல்லோ அந்நிறுவன மகன் மீது கையை வைத்துவிடுகின்றார். அவ்வளவுதான் அந்தக் காட்சி.


இப்போது மார்செல்லோ முடித்து வைக்கப்பட்ட வேண்டிய ஓர் இரை.  மார்செல்லோவின் மகனை மார்செல்லோ நீண்டகாலமாகச் சந்திக்கும்போது, மகன் அம்மா என்று கேட்கின்றார். ஆனால் அவர் வருத்தம் காரணமாக இறந்துவிட்டார் என மகனுக்குச் சொன்னாலும், தாயார் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று அறிகின்றோம்.

இந்தச் சம்பவம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. மார்செல்லோ அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருப்பது மறைமுகமாக நமக்குத் தெரிகின்றது. இனி பிரேசிலில் வாழமுடியாது எங்கேயாவது மகனுடன் தப்பிப் போய்விடுவோம் என்று தீர்மானித்துத்தான் மகன் வாழும் இடத்துக்கு ஓர் இரகசியப் பெயருடன் மார்செல்லோ வந்திறங்குகின்றார் என்பது இப்போது நமக்குப் புரிகிறது.

மகன் ஓரிடத்தில் தலைமறைவாக இருக்கும் தகப்பனுக்கு செய்தி அனுப்புகின்றான். 'அப்பா, அம்மாவின் முகம் எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டது, உங்கள் முகமும் மறக்கமுன்னர் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்' என்று அது இருக்கும்.

மார்செல்லோ தவறான நேரத்தில் அதிகாரத்தில் மாட்டிக் கொண்ட ஒரு சாதாரண மனிதன். இப்போது அவனது சொந்த வாழ்க்கை அவனுக்குரியதல்ல. அவன் ஒருபொழுது திருவிழாக் கொண்டாடத்தில் கலந்துகொண்டு தன் மனம் நிறைந்த கவலைகள் மறந்து ஆடுகின்றான். இன்னொருபொழுதில் தலைமறைவானவர்களுடன் டொன்னா செபஸ்டியானா வீட்டில் விருந்துண்ணும்போது, 'என்னை இன்னும் சில நாட்களில் கொன்றுவிடுவார்கள். நான் வாழவே விரும்புகின்றேன்' என்று இயலாமையுடன் சொல்கின்றேன்.

அந்த வீட்டில் அடைக்கலம் புகுந்த சிங்கள் மதருடன் அவனுக்கு உடல் சார்ந்த உறவின் பின் தூங்கும்போது, பெற்றோல் நிலையத்தில் பார்த்த தலை சிதைந்த உடலுக்கு உயிர் வந்து நடமாடும் பயங்கரக் கனவு கண்டு உடல் விதிர்விதிர்க்கின்றான். கூடவே படுத்திருக்கும் பெண் அவனை ஆரத்தழுவி அவன் பதற்றம் தணிக்கின்றாள்.

ஆக மார்செல்லோ வாழ்க்கையை வாழவிரும்பும் மனிதன் மட்டுமில்லை, மிகுந்த vulnerable ஓர் ஆண் என்பதையும் கண்டுகொள்கின்றோம். ஆனால் அவர்களையும் சும்மா வாழ தமது குடும்பத்துடனோ, பிள்ளைகளோடு வாழ அரச அதிகாரங்கள் விடுவதில்லை என்பதை இங்கே பார்க்கின்றோம்.

மார்செல்லோவைத் தேடி வந்த கொலைகாரர்கள் மார்செல்லோவின் இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். தமது வேலையைக் கச்சிதமாக முடிக்க உள்ளூரிலே கொலைகளைத் திருத்தமாகச் செய்யும் ஒருவனை வாடகைக்கு அமர்த்துகின்றனர். அவன் மார்செல்லோவைத் தேடி அடையாள அட்டை அலுவலகத்துக்குச் செல்கின்றான். தன்னைத் தேடி கொலைகாரர்கள் வந்துவிட்டதை, அவரது அசல்பெயரை வைத்து அழைப்பதில் மார்செல்லோ கண்டுபிடிக்கின்றார். அவரின் நல்லூழ் காரணமாக பொலிஸுக்கும் அந்த கொலைகாரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை காரணமாக இவர் அங்கிருந்து தப்பியோடும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

*

அந்தக் காட்சியோடு 70களின் கதை முடிகின்றது. நாம் மார்செல்லோ தப்பிவிட்டார் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். இப்போது கடந்தகாலத்தின் கதையை பதிவுசெய்யப்பட்ட காஸெட்டுக்களில் இருந்து கண்டுபிடிக்கும் பல்கலைக்கழக மாணவியிடம் திரும்புகின்றோம். அந்தக்காலத்தில் இவ்வாறான இணையத்தேடல் வசதி இல்லை. அந்தப் பெண் மார்செல்லோ இப்போது எங்கேயிருக்கின்றான் என்று அன்றைய பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கின்றார். அதில் சட்டென்று ஒரு செய்தி இடைவெட்டிப் போகின்றது.

இந்தப் பல்கலைக்கழக மாணவி, மார்செல்லோ கடைசியாக இருந்த நகருக்குச் செல்கின்றார். அங்கே இப்போது மார்செல்லோவின் மகன் வைத்தியராக பணிபுரிகின்றார். இம்மாணவி மார்செல்லோவின் மகனிடம் தந்தையைப் பற்றிய நினைவுகளைச் சொல்லச் சொல்கின்றார். எனக்கு தந்தையைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லை என்கின்றார். அன்று தனது தந்தையிடம், 'எனக்கு அம்மாவின் முகம் மறந்துவிட்டது' என்று மகன் சொன்னதுபோல, இப்போது அப்பாவின் நினைவுகளும் இல்லை என்கின்றார்.

அம்மாணவி பல்கலைக்கழக ஆய்வுக்காக இருந்த டேப்களை யூஎஸ்பியில் பதிவு செய்து இதில் உனது தந்தையின் கதை மட்டுமில்லை, அவரின் குரலையும் நீங்கள் கேட்கலாம் என்கின்றார். மார்செல்லோவின் மகனோ, 'என்னை விட உங்களுக்கு என் தந்தையை அதிகம் தெரியும் போலிருக்கின்றது என்கின்றார்.

பிறகு அவர் வேலை செய்யும் வைத்தியசாலை உனக்கு எதுவும் நினைவுபடுத்துகின்றதா எனக் கேட்கின்றார். இல்லை என்கின்றபோது இதுதான் எனது தாத்தா வேலை செய்த தியேட்டர். இங்கேதான் நீ 70களில் கேட்ட டேப்புகள் பதிவு செய்யப்பட்ட இடம் என்கின்றார் மார்செல்லோவின் மகன்.

நமக்கு காலம் அவ்வளவு விரைவாக மாறிவிட்டது என்பது தெரிகின்றது. காலம் மட்டுமில்லை இடங்களும், மனிதர்களும் இலகுவில் மறக்கப்படிவிட்டார்கள் என்பதும் புரிகின்றது.

மார்செல்லோ அவரை முதலில் தேடி கொலைகாரர்கள் வந்தபோது அருந்தப்பில் தப்பிவிட்டார் என்றாலும், பின்னர் அவரை ஏதோ ஒருவகையில் கொலை செய்துவிட்டார்கள். அந்த மாணவி தேடியெடுத்த பத்திரிகைத்துண்டுச் செய்தியில் 43 வயது மார்செல்லோ தெருவில் இரத்தவெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடக்கின்றார். ஒரு சாதாரண மனிதனாக வாழ இருந்த மனிதன் வரலாற்றில் எவ்வித அடையாளங்களுமற்றுப் போயிருக்கின்றார். அவரின் குடும்பத்துக்கே அவர் எதனால் கொல்லப்பட்டார் என்கின்ற முழுவிபரமும் தெரியாது அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துவிடவும் செய்துவிடுகின்றது என்பதுதான் இன்னும் துயரமானது.

இத்திரைப்படத்தை இந்த வருடத்தில் பார்த்த மிகச் சிறந்த திரைப்படமாக மட்டுமில்லை, இந்த ஞாயிறு நடக்கும் ஆஸ்கார் விருதுக்காக பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் (எனக்குப் பிடித்த One Battle Afer Another, Sentimental Value போன்றவை பட்டியலில் இருந்தாலும்) இது விருது பெற்றால் மிகவும் அகமகிழ்வேன்.

பிரேசிலின் இருண்ட சர்வாதிகார இராணுவ ஆட்சியைப் பின்னணியாக வைத்து 'I'm still here', 'The Secret Agent' என்பவற்றைப் பார்க்கும்போது என்றேனும் ஒருகாலத்தில் நமது ஈழப்போராட்டத்தை முன்வைத்து ஒரு தலைமுறை சிறந்த திரைப்படங்களை எடுக்கும் என்கின்ற நம்பிக்கை வருகின்றது. மேற்கூறிய இரண்டு திரைப்படங்களையும் எடுத்தவர்கள் பிரேசிலியர்கள். படங்களும் போர்த்துக்கீஸிய மொழியைப் பேசுகின்றவை.

'I'm still here' உண்மைக்கதையை, எழுதப்பட்ட தன்வரலாற்று நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்றால், The Secret Agent திரைப்படத்தை தனது சொந்தநகரில் பார்த்ததை புனைவாக மற்ற இயக்குநர் இயக்கியிருக்கின்றார்.

I'm still here குடும்பத்துக்குள் நடக்கும் அல்லாடல்களை குடும்பத்துக்குள்ளேயே அகவயமாகப் பார்த்ததென்றால், The Secret Agent புறவயமாக பிரேசிலின் அன்றைய கால வாழ்க்கையை நேர்த்தியாகச் சித்தரித்தபடி ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு தகப்பனை நமக்குக் காட்டுகின்றது.  

இத்திரைப்படங்களைப் பார்க்கும்போது நாம் நமது கொடுங்காலத்தை ஏதோ ஒருவகையில் பதிவு செய்வது என்பது முக்கியமாகத் தெரிந்தது. அதிலும் போர்க்காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்கள் ஏதோ ஒருவகையில் பதிவு செய்யப்படாதவிடின் அது பிறகு வந்த சந்ததி தேடும்போது கதைகளை உருவாக்கவோ, வரலாற்றை மறுவாசிப்புச் செய்யவோ முடியாது போய்விடும். அதைத்தான் நாம் இந்தக் காலத்தில் கவனத்தில் மிகவும் கொள்ளவேண்டும்.

***

கார்காலக் குறிப்புகள் - 141

Monday, March 23, 2026

 

இந்தத் தொடரை விளாடிமீர் (நபகோவ்) என்கின்ற பெயருக்காகவும், அதில் முதன்மைப் பாத்திரமாக நடித்த ராச்சல் வெல்ஸிற்காவும் பார்த்தேன். பல்கலைகழகச் சூழல்/MeToo/Open Marriage போன்ற பின்னணிச்சூழலில் இக்கதை நிகழ்ந்தாலும், தெளிவாக வரையறுக்க முடியாத ஒருவகை கலவையான உணர்வே (mixed feelings) இதைப் பார்த்து முடித்தபின் எனக்கு ஏற்பட்டது.

50 வயதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு பேராசிரியையே இதன் முதன்மைப் பாத்திரம். அவரே இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு போகின்றார். அவரது துணைவரும் ஆங்கிலத்துறையின் டீனாக இருக்கின்றவர். கதை நிகழும் காலத்தில் இந்த ஆண் பேராசிரியர் மீது கடந்தகாலத்தில் மாணவிகள் மீது ஏற்படுத்திக் கொண்ட பாலியல் உறவுகளால் பல்கலைக்கழகத்தால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார். அந்த விசாரணை தொடங்கி தீர்ப்புக்கள் வழங்கப்படும் காலத்தில் நடக்கின்ற கதைதான் இது.

 



பெண் பேராசிரியைக்கு இந்தப் பொழுதில் புதிதாக வருகின்ற ஒரு இளம் ஆண் பேராசிரியர் மீது பாலியல் சார்ந்து ஈர்ப்பு வருகின்றது. நீண்டகாலத்துக்கு, அவரின் வயது காரணமாக அடங்கியிருந்த பாலியல் வேட்கை மீள இந்தப் பெண்ணுக்கு ஏற்படுவதும், அதேவேளை அவரது துணை இப்படி மாணவிகளுடன் ஈடுபட்ட பாலியல் உறவுகள் பற்றி இந்தப் பெண் பேராசிரியை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்கின்ற பல்கலைக்கழகமட்ட விமர்சனங்களையும் கேட்டுக் கொண்டு இந்தப் பெண்ணின் நாட்கள் கழிகின்றன.

இது ஏற்கனவே வெளிவந்த நாவலான 'விளாடிமீர்' என்கின்ற நாவலை (2022) அடிப்படையாக முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. நபகோவ்வின் மீதிருந்த ஈர்ப்பினால் இந்த நாவலை ஜூலியா எழுதியதோடு அவரின் பெயரையும் இந்த நாவலுக்கு வைத்திருக்கின்றார். பலர் இந்த நாவல் நபகோவ்வின் 'லோலிடா' நாவலின் பாதிப்பு இருப்பதாகக் கூறியிருந்தாலும், நாவலாசிரியரான ஜூலியா இதற்கு 'லோலிடா' அல்ல, நபக்கோவின் மற்றொரு 'Laughter in the Dark' இதற்கு ஆதர்சம் என ஒரு நேர்காணலில் கூறுகின்றார். 

 

 
அந்த நாவலில் 'நாம் நமது வேட்கைகளால் எவ்வாறு சிறைப்பட்டிருக்கின்றோம்' என்பதையும், 'அதன் நிமித்தம் நாம் மனிதாபிமானத்தை இழந்து, யதார்த்தத்தை மறந்து, நமது வாழ்க்கையை நாம் சீரழித்துக் கொள்ளவும் செய்கின்றோம் என்பதை நபகோவ் பரிசீலிக்கின்றார்' என ஜூலியா கூறுகின்றார்.

அதேவேளை இன்று நபகோவ்வின் 'லோலிடா', 'எப்ஸ்டீனின் கோர்ப்புகள்' பொதுவெளிக்கு வந்தபின், பாலியல் குற்றவாளி இந்த நாவலையே தனது படுக்கையறையில் வைத்திருந்தவர் என்கின்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் இருப்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால், தனது நாயகியான ஹம்பேர்ட்டின் செயல்களுக்கு, யாரேனும் லோலிடாவை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டுவந்தால் அதைப் போல ஓர் அபத்தம் இல்லையெனவும் 'விளாடீமீரின்' நாவலாசிரியான ஜூலியா எச்சரிக்கின்றார்.

***


கார்காலக் குறிப்புகள் - 140

Thursday, March 19, 2026

 

'I'm still here'  (பிரேசிலிய திரைப்படம்)
*

நீங்கள் உங்கள் பெற்றோருடனும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகின்றீர்கள். ஒருநாள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உங்கள் நாட்டு இராணுவம் உங்கள் தந்தையை விசாரணைக்கு என்று அழைத்துச் செல்கின்றார்கள். பிறகு ஒருபோதும் உங்கள் தந்தை வீடு திரும்பாமல் காணாமற் போய்விடுகின்றார். நீங்களும், உங்கள் தாயாரும், சகோதரர்களும் உங்கள் வாழ்நாள் முழுதும் அந்தத் துயரத்தோடு வாழப் பழகிக் கொள்கின்றீர்கள்.

இப்படியான சம்பவங்கள் தென்னமெரிக்கா நாடுகளில் மட்டுமில்லை, நமது நாடுகளிலும் அரசு,இராணுவம், விடுதலை இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நாம் நமக்குரிய அரசியல் சார்புகளில் நின்று உரையாடமுன்னர், ஒருகணம், ஒரேயோருகணம் அப்படிக் காணாமற்போனவர்களின் குடும்பங்களில் நிலையை எவ்விதச் சார்பும் எடுக்காது யோசித்துப் பார்த்திருக்கின்றோமா?
 
 
இந்தக் கதை பிரேசிலில் நடந்தாலும், நமது தாய்நாட்டுக்கும் பொருந்தக் கூடியது. பிரேசிலில் 1960களில் இடதுசாரிகள் தேர்தலில் வென்றபோது, அங்கிருந்த இராணுவம் அமெரிக்காவின் உதவியுடன் அதைக் கவிழ்த்தது. பிறகு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் (1965-1985) வரை சர்வாதிகார இராணுவ ஆட்சியே நடந்திருக்கின்றது. அந்தக் காலத்தில் நிறையப் பேர் கொல்லப்பட்டும், காணாமற் போயிருக்கின்றனர்.பிரேசிலில் அன்று நடந்த இராணுவச் சதி கவிழ்ப்பே முன்னுதாரணமாக பல தென்னமெரிக்கா நாடுகளில் நடந்த சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு பிறகு காரணமாயிற்று என வரலாறு சொல்கின்றது.

'I'm still here'  என்கின்ற இத்திரைப்படம் உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. இராணுவக் கவிழ்ப்புக்கு முன் ஒரு பொறியிலாளராகவும், காங்கிரஸ்மானாகவும் இருந்த ரூபன்ஸ் (Rubens Paiva) ஒருநாள் சிவில் உடையில் வந்த இராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த பதிவுகளும் பிரேசிலில் இல்லாது மறைக்கப்படுகின்றது.

அவர் மட்டுமில்லாது அவருக்கு வேறு யாரோடு தொடர்பு இருக்கின்றதென ரூபன்ஸின் மனைவியும் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார். தாயார் விடுதலை செய்யப்பட்டபின், அவர்களின் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்ட வீட்டிலிருந்து தனது கணவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

காணாமற்போனவரைத் தாங்கள் கடத்தவே இல்லை என்கின்ற சொல்கின்ற இராணுவத்தைப் பற்றி எப்படி நீதிமன்றத்தில் முறையிடுவது? இறுதியில் ரூபன்ஸ் சித்திரவதைக்குள்ளான இடத்தில் தானும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்கின்ற பெண் ஆசிரியர் ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து ரூபன்ஸின் குடும்பம் வக்கீல்களை அணுக முயல்கின்றது.

ஓர் சர்வாதிகார ஆட்சியில் இதற்கெல்லாம் எங்கே இடமிருக்கப் போகின்றது. ஐந்து பிள்ளைகள் இருக்கும் ரூபன்ஸுக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பு தாயாருக்கு வந்துவிடுகின்றது. எவ்வளவு காலந்தான் கணவரைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருப்பது. அவர்கள் இருந்த ரியோ வாடகை வீட்டைத் துறந்து, வீடு கட்டுவதற்கென வாங்கிய காணியை விற்று, தொலைவிலிருக்கும் இன்னோரு ஊருக்கு அந்தக் குடும்பம் இடம் பெயர்கிறது.
 


எந்த ஆட்சியாயினும் நிலையாக நிலைப்பதில்லை என்பது வரலாறு. 1985 இல் சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயக நடைமுறைக்கு பிரேசில் திரும்புகின்றது. ரூபன்ஸ் காணாமற்போனார், அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியது பிரேசிலிய அரசு என்று ரூபன்ஸின் தாயார் தொடர்ந்து போராடியதால், அவர் காணாமலாக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகு ரூபன்ஸிற்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் காணாமல் போய் 25 வருடங்களுக்குப் பின்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னால் அந்தக் குடும்பம் எத்தனை வருடங்கள் அந்தத் துயரத்தோடு வாழ வேண்டியிருந்திருக்கும்?

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, அப்போது தந்தைக்கு என்ன நடந்தது என்று சிறிதும் அறியாத அந்தக் குழந்தைகள், வளர்ந்தவர்களாகியபின் (மரணச்சான்றிதழ் கிடைக்கும் நாளில்) உனக்கு அப்பா இனி ஒருபோதும் வரமாட்டார் என்று எப்போது தெரிந்தது என்று தங்களுக்குள் மாறி மாறிக் கேட்பார்கள்.

அப்போது மகன், 'எனது அம்மா அப்பாவின் ஆடைகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்தபோது அப்பா ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று உணர்ந்தேன். அப்போது கிட்டத்தட்ட அவர் காணாமல் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன' என்பான். அதுபோல சின்ன வயசில் இருந்த மகள், 'நாங்கள் எங்கள் வாடகை வீட்டை விட்டு வெளியேறியபோது, அந்த வெறிச்சோடிய அறைகளைப் பார்த்தபோது அப்பா எங்களிடம் இனி வரப்போவதில்லை' என்று உணர்ந்தேன் என்று மகள் சொல்வாள்.

இதைத் திரைப்படத்தில் காட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதுபோலவே ரூபன்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அதன் பிறகு இப்பிள்ளைகளின் தாயார் நாட்கணக்கில் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் பார்த்தபோது என்னையறியாமலே என் உடல் ஒருவகை பதற்றத்துக்குள் போயிருந்தது.

*

இது உண்மையாக நடந்த கதை. இக்கதையை ரூபன்ஸின் மகனொருவர் இதே பெயரில் எழுதி 2015 வெளிவந்திருக்கின்றது. இதில் வரும் தாய் மிகவும் உறுதிவாய்ந்தவராக இருந்திருக்கின்றார். தனது காணாமல்போன கணவரைத் தேடிக் கொண்டிருந்த அவர், தனது 5 பிள்ளைகளின் நிமித்தம் ஒருவகையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற யதார்த்ததை உணர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெற்றிருக்கின்றார்.

அதுவரை வேலை எதுவும் இல்லாதிருந்த இந்த தாயார், தனது 48 வயதில் சட்டம் படித்து, அதன் பிறகு மனிதவுரிமைகளுக்காகவும், அமேஸான் காட்டுப் பூர்வீகக் குடிகளின் வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடியிருக்கின்றார். பிற்காலத்தில் அவர் மறதிநோயுக்குள் போய்க்கொண்டிருந்தபோதே, தாயின் நினைவுகளைச் சேகரம் செய்து அவரின் மகன் இந்த நூலை எழுதியிருக்கின்றார்.

எழுபதுகளில் சர்வாதிகார ஆட்சியில் காணாமல் போன ஒருவரின் கதை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்தாக்கப்பட்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை நினைவுகூர்வதோ, இத்தகை விடயங்களுக்காக போராடுவது என்பதோ இவை இனி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் என ரூபன்ஸின் மனைவி அவரின் மரணச்சான்றிதழைப் பெறும்போது பத்திரிகைகளுக்குச் சொல்வார்.

ஒருவர் இப்படி அரசியல் நிலைமைகளை வைத்து காணாமலோ/கொல்லப்படுவதோ கூட அவர்களுக்கான முடிவு உடனே நிகழ்ந்துவிட்டன என கொஞ்சமாவது ஆறுதலடையலாம். ஆனால் அவர்கள் சார்ந்த குடும்பங்கள்/பிள்ளைகள் எத்தகைய துயரார்ந்த வாழ்வுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதை மிகுந்த நெகிழ்வுடன், உண்மைக்கு மிக நெருக்கமாக மட்டுமின்றி, இவ்வாறான அடக்குமுறைக்குள் வாழாதவர்களைக் கூட இப்படியான விடயங்களை கரிசனையுடன் அணுகுங்கள் எனச் சொல்கின்ற் திரைப்படமாக இது இருக்கின்றது. அத்துடன் எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்றான 'மோட்டார் சைக்கிள் டயரிகளை' நெறியாள்கை செய்த  Walter Salles யே இதையும் இயக்கியிருக்கின்றார்.

***

குறிப்பு:
இப்போது கடந்தகாலத்தை, இராணுவம் சதி செய்து கைப்பற்றிய ஆட்சியைப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதேபோன்று பிரேசிலில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. 2022 இல் பிரேசில் தேர்தலில் இடதுசாரிகள் வென்றபோது, வென்ற ஜனாதிபதி லூலாவையும், உப ஜனாதிபதியையும், உயர்நீதிபதியையும் கொல்ல, தேர்தலில் தோற்ற ஜனாதிபதியும்  இராணுவமும் சேர்ந்து சதி செய்ததும் அது தோற்றதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். தோற்ற ஜனாதிபதி  Bolsonaro, 70களில் இராணுவத்தில் இருந்தவர். இப்போது இந்த சதிக்காக Bolsonaro இற்கு பிரேசில் நீதிமன்றத்தால் 27 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.