கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01

Monday, December 20, 2010

"இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தன்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்."

(மு.த‌ளைய‌சிங்க‌ம், 'முற்போக்கு இல‌க்கிய‌ம்')

1.
மு.த‌ளைய‌சிங்க‌ம், ஈழ‌த்தில் முகிழ்ந்த‌ முக்கிய‌ ப‌டைப்பாளி ம‌ட்டுமில்லாது க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு சிந்த‌னையாரும் கூட‌.  அவ‌ருக்கு எழுத்தில் இருந்த‌ ந‌ம்பிக்கையைப் போல‌ க‌ள‌ப்ப‌ணியாற்றுவ‌திலும் அக்க‌றையிருந்த‌து. எழுத்து என்ப‌து உன்ன‌த‌மான‌து என்றும் அத‌ற்கு த‌னிம‌னித‌ர் ஒவ்வொருவ‌ரின் நேர்மையும், த‌னித்த‌ன்மையும் முக்கிய‌மான‌து என்றும் தொட‌ர்ந்து வ‌லியுறுத்திய‌வ‌ர். அவ்வாறு ப‌டைப்பில் நேர்மை அற்ற‌வ‌ர்க‌ளையும், க‌ட்சி/கொள்கை என்ற‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளுக்கு அட‌ங்கிப்போன‌வ‌ர்க‌ளையும், அதிகார‌ மைய‌ங்க‌ளாக‌ மாறுப‌வ‌ர்க‌ளையும் தொட‌ர்ச்சியாக‌ விம‌ர்சித்து வ‌ந்திருக்கின்றார். தானொரு ஆக்க‌ இல‌க்கிய‌வாதியே அன்றி ஒரு விம‌ர்ச‌க‌ன் அல்ல‌ என்று த‌ளைய‌சிங்க‌ம்  கூறிவ‌ந்தாலும், அவ‌ரை அறியாம‌லேயே ஈழ‌த்துச் சூழ‌லில் ஒரு த‌னித்துவ‌மான‌ திற‌னாய்வுச்செல்நெறியை உருவாக்கியிருக்கின்றார் என்ப‌தைக் க‌வ‌னித்தாக‌ வேண்டும்.

ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ளைப் போல‌ எழுத்தில் ஒரு க‌ற்ப‌னாவாத‌ புர‌ட்சியை உருவாக்கி த‌மக்குப் பின் ஒளிவ‌ட்ட‌ங்க‌ளையும், ப‌க்த‌ கோடிக‌ளையும் உருவாக்காது, தான் விரும்பிய‌/ந‌ம்பிய‌ மாற்ற‌ங்க‌ளுக்காய் க‌ள‌த்திலும் தளையசிங்கம் இற‌ங்கிய‌வ‌ர். அன்றைய காலத்து தமிழ் அரசியல் கட்சிகளோடு முரண்பட்டு 'சர்வோதய' இயக்கத்தைத் தோற்றுவித்தவர். மாற்றங்கள் பிறரால்/பிறதால் உருவாகும்வரை காத்திருக்காது தாம் விரும்பும் மாற்றங்கள் தம்மிலிருந்து முகிழவேண்டும் என நினைத்து சர்வோதயத்தை ஒரு அரசியல் முன்னணியாக்கி, தேர்தலில் தம் இயக்கம் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதற்கு -சாதி வெறிய‌ர்க‌ளுக்கு எதிராக- உண்ணாவிரதப் போராட்டத்தை தளையசிங்கம் தொடங்குகின்றார். இதனால் இவரும், அன்றைய காலத்தில் மாணவராய் இருந்த கவிஞர் சு.வில்வரத்தினமும் பொலிசால் மிக‌க்க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்படுகின்றனர், இதன் நீட்சியில் தளையசிங்கம் நோயில் வீழ்ந்து, இரண்டு வருடத்திற்குள் த‌ன‌து இள‌வ‌ய‌திலேயே (38) ம‌ர‌ண‌ம‌டைகின்றார். தளையசிங்கம் அவ‌ர‌து கால‌த்தில் இல‌க்கிய‌ அதிகார‌ம் ஒரு குறிப்பிட்ட‌ க‌ட்சியிட‌ம்/முகாமிலும் குவிவ‌தை மிகக் கடுமையாக எதிர்த்த‌தைப் போல‌, நிஜ வாழ்விலும் அதிகார‌த்திற்கு/சாதிவெறியர்களுக்கு எதிராக‌ நின்ற‌ ஒரு சமூகப்பணியாளர் என்ப‌தையும் நாம் நினைவுகூர்ந்து கொள்ள‌லாம்.

காலத்துக் காலம் நிறைய‌ப் பேர் எழுதிக்கொண்டும், எழுத‌ ஆசைப்ப‌ட்டுக் கொண்டும், த‌ங்க‌ளைத் தாமே திருவுருவாக்கும் தீராத‌ ஆசையோடும் இருக்கின்றார்க‌ள், ஆனால் ஒரு த‌னித்துவ‌மான‌ க‌லை இல‌க்கிய‌வாதி என்பவர் த‌ன‌க்குப் பின்பான‌ தலைமுறைக்கும் சில‌வ‌ற்றை த‌ன் சுவ‌டுக‌ளாய் விட்டுச் செல்கின்றார். மு.த‌ளைய‌சிங்க‌ம் அந்த‌வ‌கையில் ஒரு த‌னித்துவ‌மான‌, ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் மிக‌ அரிதாக‌த் தோன்றி ஒளிர்ந்துவிட்டு எரிந்துபோன‌ ஒரு விண்மீனென‌ச் சொல்ல‌லாம். த‌னித்துவ‌மான‌ எல்லாப் ப‌டைப்பாளிக்கும் நிக‌ழ்வ‌தைப் போல‌ த‌ளையசிங்க‌ம் அவ‌ர‌து கால‌த்தில் எழுச்சிக‌ளையும், ச‌ரிவுக‌ளையும் க‌ண்டிருக்கின்றார்.  அவ‌ரின் பாதிப்பில் பின்பு 'உள்வ‌ட்ட‌ம்/வெளிவ‌ட்ட‌ங்க‌ளை' உருவாக்கிய‌வ‌ர்க‌ள் மு.த‌வை ஏற‌க்குறைய‌ இன்றைய‌ கால‌த்தில் ம‌றந்தே விட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்குத் த‌ம‌க்குத்தாமே ஆல‌வ‌ட்ட‌மும் ஒளிவ‌ட்ட‌மும் பிடிக்க‌வே நேர‌ம் போதாமையால் ந‌ல்ல‌வேளையாக‌ மு.த‌ அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து விடுத‌லை பெற்றுவிட்டார். மேலும் உள்வ‌ட்ட‌த்தில் வைத்து பொத்தி பொத்திக் க‌லையை வ‌ள‌ர்த்து, இறுதியில் வெளிவ‌ட்ட‌த்திற்கு (ம‌க்க‌ளிட‌ம்) கொண்டுவ‌ருவ‌தையே 'உள்வ‌ட்ட‌ம்' கூறுகின்ற‌தென‌ பழைய தும்புக்கட்டைக்குப் புதுக்குஞ்சம் க‌ட்டுகின்ற‌வ‌ர்க‌ள், ஏன் உள்வ‌ட்ட‌த்தில் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌த‌நாட்டிய‌மும், க‌ர்நாட‌க‌ ச‌ங்கீத‌மும் 'உன்ன‌த‌ க‌லைக‌ளாக்க‌ப்ப‌டுவ‌தும்', யாருமே எடுத்துக்கொள்ளலாமென‌ எவ்வித‌க் க‌ட்டுப்பாடுக‌ளும‌ற்றிருந்த‌ நாட்டாரிய‌ல் க‌லைக‌ள் இன்ன‌மும் 'உன்ன‌த‌க‌லைக‌ளாக‌' எல்லோராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லையென்ப‌தைப் ப‌ற்றியெல்லாம் மூச்சுக்கூட‌ விட‌மாட்டார்க‌ள். உள்வ‌ட்ட‌ ம‌ண்குதிரையை ந‌ம்பி இல‌க்கிய‌ ஆற்றில் இற‌ங்கிய‌வ‌ர்க‌ள், இவ்வாறான‌ கேள்விக‌ளை நேர்மையாக‌வும் நேர‌டியாக‌வும் எதிர்கொள்வார்க‌ள் என‌ நாம் எதிர்ப்பார்ப்ப‌திலும் நியாய‌மில்லைத்தான்.

'க‌லை க‌லைக்காக‌ அல்ல‌, க‌லை ம‌க்க‌ளுக்காக‌த்தான். ஆனால் க‌லை க‌ட்சிக்காக‌ மாறுவ‌தை ம‌ட்டும் எதிர்ப்பேன்' என‌ தெளிவாக‌ச் சொல்கின்ற‌ மு.த‌வை கவனமாய் ம‌றைத்து 'க‌லை க‌லைக்காக‌த்தான்' என‌ அவ‌ரை முன்னிறுத்திய‌வ‌ர்க‌ள் எங்க‌ளுக்கு இதுவரை காலமும் கூறியிருக்கின்றார்க‌ள் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌வும் கூடாது. த‌ன‌து குறுகிய‌ வாழ்க்கைக் கால‌த்தில் ‍அச்சிலேயே 1000 ப‌க்க‌ங்க‌ளுக்கு மேலாய் வ‌ர‌க்கூடிய‌வ‌ள‌வுக்கு- நிறைய எழுதிய‌வ‌ரை ஒரு த‌னித்த‌ அடையாள‌த்திற்குள் அடைக்க‌வும் முடியாது. மு.த‌ளைய‌சிங்க‌ம் எழுதிய‌ சிறுக‌தைக‌ள், நாவ‌ல், விம‌ர்ச‌ன‌ங்க‌ள், கோட்பாட்டு முய‌ற்சிக‌ள் என‌ ஒவ்வொன்றையும் விரிவாக‌ப் பார்ப்ப‌தே இக்க‌ட்டுரைத் தொட‌ரின் நோக்க‌ம். இத்தொட‌ரின் முத‌ல் ப‌குதியிற்கு தளைய‌சிங்க‌த்தின் 'முற்போக்கு இல‌க்கிய‌ம்', மூன்றாம் பக்கம்', 'ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி', ம‌ற்றும் 'விம‌ர்ச‌ன‌ விக்கிர‌க‌ங்க‌ளை' முத‌ன்மை எழுத்துப் பொருளாக‌ எடுத்துக்கொள்கின்றேன். 'முற்போக்கு இல‌க்கிய‌ம்' ம‌ற்றும் 'ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி' ஆகிய‌வை த‌னித்த‌னி நூற்க‌ளாக‌ ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

இனி இக்க‌ட்டுரைக‌ளில் மு.த‌ முன்வைப்ப‌தை விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்கு முன், இவை எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌ப் பின்ன‌ணியை நாம் அவ‌தான‌த்தில் கொள்ள‌வேண்டும். 1948ல் இல‌ங்கைக்கு பிரித்தானியரிட‌மிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. எப்போதும்போல‌ ஆங்கிலேய‌ரிட‌மிருந்தும் இந்திய‌ர்க‌ளிட‌மிருந்தும் கிடைப்ப‌தைப் பெற்றுக்கொண்டு சுக‌ம் பெறும் ஈழத்த‌மிழ‌ர்க‌ளிடையே சுத‌ந்திர‌ம் என்ப‌து பெரிதாக‌ எதையும் புதிதாக விதைத்துவிட‌வில்லை என மு.த‌ளைய‌சிங்க‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார் . இப்ப‌டி மேலே ஆட்சி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு குனிந்து நின்று சேவ‌க‌ம் செய்து, தமது தனித்துவங்களை இழந்து நிம்ம‌தி காணும் த‌மிழ‌ர்க‌ளை 'சோம்பேறிக‌ள்' என‌ மு.த‌ காட்ட‌மாக‌வே விம‌ர்சிக்கின்றார் ம‌ட்டுமின்றி இப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ளால் எப்ப‌டி க‌லை இல‌க்கிய‌ங்க‌ளில் புதிதாய் சாதித்துவிட‌முடியுமென‌வும் கேள்வி எழுப்புகின்றார். த‌மிழ‌க‌த்தில் ஒரு பார‌தியும் புதுமைப்பித்த‌னும் தோன்றிய‌தைப் போல‌ த‌னித்துவ‌மான‌ எந்த‌ப் ப‌டைப்பாளியும் எம்மிடையே தோன்ற‌வில்லை என்ற‌ ஆத‌ங்க‌த்தை மு.த‌ முன்வைக்கின்றார்.

2.
1956ல் ஒரு புதிய‌ நம்பிக்கை கீற்று தோன்றத்தொட‌ங்குகின்ற‌து என‌ மு.த‌ ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சியில் குறிப்பிடுகின்றார். அந்த‌ ஆண்டிலேயே ப‌ண்டார‌நாய‌க்காவினால் த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் கொண்டுவ‌ர‌ப்ப‌டுகின்ற‌து. இல‌ங்கையில் அதுவ‌ரை அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌ இருந்த‌ ஆங்கில‌த்திற்குப் ப‌திலாக‌ சிங்க‌ள‌ மொழி அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌க் கொண்டுவ‌ர‌ப்ப‌ட‌,. த‌மிழ் மொழி த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ நெருக்க‌டி நிலை தோற்றுவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. 56 த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் அர‌சிய‌லில் உற‌ங்கியிருந்த‌ த‌மிழ‌ரை எப்ப‌டி விழித்தெழ‌ச் செய்த‌தோ அப்ப‌டியே க‌லை இல‌க்கிய‌த்திலும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து என்கின்றார் த‌ளைய‌சிங்க‌ம். இவ்வாறான‌ ஒரு உயிர்ப்புக்கு கைலாச‌ப‌தி தின‌கரன் ப‌த்திரிகைக்கு ஆசிரிய‌ராக‌ வ‌ந்த‌தையும் முத‌ன்மைக் கார‌ண‌மாக‌ அவ‌ர் கவனப்படுத்துகின்றார்.

'மூன்றாவது பக்கம்' கட்டுரையை பண்டிதர்களுக்கும், சிவத்தம்பி உள்ளிட்ட முற்போக்கு இலக்கியக்காரர்களுக்கு இடையில் தினகரனில் நடைபெறும் விவாதத்தின் எதிர்வினையாக மு.த எழுதுகின்றார். இந்த இரண்டு பக்கங்களின‌தும் போதாமையை விளக்கப்படுத்தினாலே மூன்றாவது பக்கம் தேவை என்றொரு நிலைமை உருவாகிவிடும், அந்த 'மூன்றாவது பக்கமே' தனக்கு உரியதெனத் த‌ளைய‌சிங்க‌ம் கூறுகிறார். 'பண்டிதர்களையும் குறை சொல்ல முடியாதுதான். அவர்கள் நிற்கவேண்டிய இடத்தில்தான் நிற்கின்றார்கள்.ஜம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னால்! நம் தமிழ் இலக்கியப் பிரயாணத்தில் மூட்டை தூக்குபவர்கள் அவர்கள்தான். பழுவின் காரணத்தால் பின்னுக்கு நின்று இழுபட்டுக்கொண்டு கத்துகிறார்கள்' என கால‌த்தோடு மாற‌முடியாத‌ பண்டிதர்களை சரியாக அடையாளங்காட்டுகின்றார் மு.த. அதேபோல் எப்படி பண்டிதர்களுக்கு தொல்காப்பியமும் நன்னூலும் தெய்வ நூல்களாகிவிட்டனவோ அப்படியே புதிய வகை விமர்சகர்களுக்கு 'புதிய ஸ்ராலின் - சடனோவ் யந்திர விளக்கங்கள் தெய்வ வாக்குகளாகி விட்டன' என்கின்றார். மேலும் 'மார்க்ஸுக்கும் சரி, ஏங்கல்ஸுக்கும் சரி, லெனினுக்கும் சரி கலை இலக்கியத்தைப் பற்றிய நல்ல ரசனை எவ்வளவோ இருந்தது. ஆனால் சிருஷ்டி தெரியாத பின்பு வந்த யந்திரங்கள்தான் எல்லாவற்றையும் திருகிவிட்டன' என்பதையும் மு.த குறிப்பிடத் தவறவில்லை. பண்டிதர்கள் பாலுணர்ச்சி பற்றி எழுதுவதை, அரசியல் கொள்கைகள் புகுத்தி எழுதுவதை, பழைய இலக்கியத்துக்கு மாறாக எழுதுவதை எல்லாம் 'கூடாது' என்று கூறுவதைப் போல, புதிய விமர்சகர்கள் 'பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயம் ஒன்றைப் பற்றித்தான் எழுதவேண்டும்' என்று கூறுகின்றனர் எனச் சுட்டிக்காடுகின்றார் தளையசிங்கம்.

கலைச்செல்வி இதழில் தொடராக எழுதிய 'முற்போக்கு இலக்கியம்' கட்டுரையில் 'மனிதனின் பிரச்சினைகளை அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான்' எனக் குறிப்பிடும் மு.த, ஆனால் ஈழத்தில் மட்டுந்தான் கட்சி சார்ந்து தமக்கு மட்டும் முற்போக்கு இலக்கியம்' என்ற பெயரை patent right வாங்கி விட்டவர்கள் போல வைத்திருக்கின்றார்கள் என்று கேலி செய்கின்றார். அதேபோல் முற்போக்கு முகாமில் ஒரளவு நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களும் இறுதியில் தம் தனித்துவத்தை இழந்து கட்சிக்கொள்கைகளுக்கு ஏற்ப எழுதுகின்றவர்களாய் மாறிவிடுகின்|றார்கள் என்பதை மு.த கூறுகின்றார். மேலும் 'கட்சிரீதியில் விற்பனை செய்யப்படும் கொள்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவக்கூடினாலும், இலக்கிய வளர்ச்சியைக் கைப்பற்ற உதவா....அத்தனை பேர்கள் கூடி எழுதியும் அத்தனி பேர்கள் கூடிச் சங்கம் நடத்தியும் இலங்கையில் அவர்கள் ஒரு தனிமனிதன் சாதித்ததை விட அதிகமாகவோ புதிதாகவோ சாதித்துவிடவில்லை' என்பதையும் சுட்டிக்காடுகின்றார்.

'முற்போக்கு இலக்கியக் கட்டுரையில்' பாலுணர்ச்சி எழுத்தில் மறைக்கக்கூடிய விடயமேயல்ல என‌க்கூறி, அவ்வாறு பாலுண‌ர்வு வெளிப்ப‌டையாக‌ எழுதப்பட்ட 'தீ'யை மிகவும் பாராட்டுகின்றார். பாலுணர்ச்சி, பசியுணர்ச்சி ஆன்மீக உணர்ச்சியைப் போன்ற ஒருவகை உணர்ச்சி, ஆகவே ஏன் பாலுணர்ச்சியை நாம் தவிர்க்கவேண்டும் என வினாவுகிறார்.  'ஆன்மீக உணர்ச்சி, மனிதன் கடவுளாக மாற முயலும் ஞானியின் உணர்ச்சி! அதைத் தெரிவதற்கு முதலில் அதன் ஆரம்ப உணர்ச்சியான பாலுணர்ச்சியில் திளைப்பதற்கு, திளைத்துத் திருப்தியடைவதற்கு வசதி இருக்கவேண்டும். ஆனால், மனிதனை யந்திரமாக்கி விடுவதில் முனைத்து கொண்டிருக்கும் இன்றைய உலகம் அந்த வசதியைக் கொடுக்க மறுக்கிறது. ஒளித்து மறைத்து மூடி வைத்து, சாகும் வரைக்கும் அந்த அடிப்படை உணர்ச்சியைக்கூட ஒரளவுக்காவது புரிந்துகொள்ள முடியாத நிலையைத்தான் உருவாக்குகிறது. இந்த நிலையில் ஒன்றில் மனிதன் யந்திரமாக வாழவேண்டும் அல்லது சுத்தப் பைத்தியமாகவோ அல்லது ஓர் psychopathy ஆகவோதான் வாழவேண்டும். பின்னதில் கொஞ்சமாவது தனித்தன்மை கலந்த உயிரோட்டம் இருக்கிறது. எந்திரத்தை விட மிருகம் மேலானதுதானே?' என மிகத் தெளிவாக அடக்கப்படுகின்ற பாலுணர்ச்சி பற்றி மு.த இந்தக் கட்டுரையில் உரையாடுகின்றார்.

அதேபோன்று அன்றையகால இடதுசாரிகளால் பிரபல்யப்படுத்தப்பட்ட பிரதேசவாதக் கதைகளை (வட்டாரக் கதைகள்) ,அவற்றுக்கு முன்பாக தப்பும் (Escapism) மனப்பான்மையோடு ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட கனவுக்கதைகளோடு ஒப்பிடும்போது எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். ஆனால் 'சர்வாதிகாரச் சங்கந்தான் சட்டம் ஒன்று வைத்துவிட்டது போல இன்று ஈழத்து எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரே ரீதியில் எழுதுகின்றார்கள்' என்பதையும் கவனப்படுத்துகின்றார். இன்னும் 'பாலுணர்ச்சியைக் கலந்து மனிதத்தன்மையைக் கலையோடு தருவதால் மாறுபடும் எஸ்.பொன்னுத்துரையின் தனித்தன்மைக் கதைகளையும், மிக இலகுவில் இலக்கியத் தரத்தைத் தொட்டுவிடுமோர் இலாவகமான நடையால் தனித்தன்மை பெறும் வ.அ.இராசரத்தினத்தின் கதைகளையும் தவிர மற்றவர்களின் கதைகள் பெரும்பாலும் பிரதேசமணம் என்றரீதியில் ஒரே type ஆகவே இருக்கின்றன! அதே யந்திரச் சாயல்! அதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' எனக் கூறி எஸ்.பொவையும், வ.அ.இராசரத்தினத்தையும் த‌னித்துக் கவனப்படுத்துகின்றார்.

பிரதேச வாதமாக இருக்கும் நம் எழுத்தாளர்களின் பார்வை சர்வதேசமாகவும் விரியவேண்டும். அவ்வாறு அகலிக்கும்போதேதான் நம்முடைய போதாமைகள் தெரியும் ஆனால் 'ஈழத்து எழுத்தாளர்களுக்கு அந்தப் பிரதேசவாதம் ஒரு fetish ஆக மாறி'விட்டதென மு.த கவலைப்படுகின்றார் . அதேபோன்று தனி மனிதனின் கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடங்கொடுக்காத எந்தச் சமூகமும் என்றும் முன்னேறிவிடாது என்கின்றார். பிரஞ்சுப் புரட்சிக்கு பின் வந்த நெப்போலியன் காலமும்,, ரஷ்சியப் புரட்சிக்கு பின் வந்த ஸ்ராலின் காலமும் எதையெதையோ எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே கொண்டுவந்திருக்கின்றது எனக்கூறும் முத,  'பழைய நிலைக்கு ஒரு புதிய பெயர் கிடைத்திருக்கிறதே ஒழிய புதிய மாற்றம் கிடைக்கவில்லை' என்கின்றார். தனிமனிதனைச் சாதாரண எண்ணாக நினைத்து மறந்தோ மறுத்துவிடவோ முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் பற்றிச் சிந்திக்கவேண்டியவனாக அவர்களை வழிநடத்தும் தலைவன் இருக்கவேண்டும் என்கின்றார். 'இன்றைய யந்திர அமைப்போடு சேர்ந்து தானும் யந்திரமாக வாழ விரும்பாதவன் ஒன்று சாகவேண்டும் அல்லது தானாகப் புரட்சி செய்து ஒரு புது வழி கண்டுபிடிக்க வேண்டும்' என்கிறார். அதற்காய் கோதேயின் (Gothe) Faust மற்றும் Werther ஐ உதாரணமாக எடுத்து விரிவாக மு.தளையசிங்கம் விளங்கப்படுத்துகின்றார். 'Werther போல தற்கொலை செய்யவோ அல்லது Faust போல டொக்டராகத் தொடங்கி எஞ்சினியராக முடிக்கத் தேவையில்லை'. நம் எல்லோருக்கும் வேண்டியது தனித்தன்மை. அதுவே முக்கியம் என வலியுறுத்தும் மு.த, 'டி.எச்.லோறன்ஸ் தொட்டு பெர்னாட்ஷா வரை ஹக்ஸ்லி வரை ரகம் வேறுபடலாம்; அல்லது அமெரிக்க Hipsters Beatniks ஆகவும் ஜரோப்பிய  Existentialists ஆகவும் மாறுபடலாம். ஆனால் அத்தனை வேறுபாடுகளும் ஒன்றை உணர்த்துகின்றன. அதுதான் தனித்தன்மை' என முற்போக்கு இலக்கியம் கட்டுரையில் அழுத்தமாக மு.த குறிப்பிடுகின்றார். இவ்வாறான தனித்தன்மையிலே ஈழத்து கலை இலக்கியப் படைப்புக்களும் முகிழவேண்டுமே அன்றி குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடக்கிப் போய் நிகழக்கூடாது என 'முற்போக்கு இலக்கியம்' கட்டுரையை மு.த முடிக்கின்றார்.


2 comments:

அருண்மொழிவர்மன் said...

படைப்பாளிகளின் ஒட்டு மொத்த எழுத்துக்களை எடுத்து இப்படி விரிவாக எழுதுவது ஆழமான வாசிப்பை விரும்புபவர்களுக்கு ஆக்கபூர்வமானதாக இருக்கும். தவிர ஈழத்துப் படைப்பாளிகள் பற்றி விரிவான அலசல்களும் விமர்சனங்களும் செய்யவேண்டியது அவசியமானது என்றே நினைக்கிறேன்.

//இந்த இரண்டு பக்கங்களின‌தும் போதாமையை விளக்கப்படுத்தினாலே மூன்றாவது பக்கம் தேவை என்றொரு நிலைமை உருவாகிவிடும், அந்த 'மூன்றாவது பக்கமே' தனக்கு உரியதெனத் த‌ளைய‌சிங்க‌ம் கூறுகிறார்.//
மு. தவின் இந்தக் கருத்தும், "மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது" என்கிற கருத்துக்களும் என்னளவில் நானும் நினைத்ததும் உணர்ந்ததும் தான். மு தவின் முழுமையாக எழுத்துக்களை வாசிக்கத் தூண்டி இருக்கின்றது உங்கள் கட்டுரை.

// 'மார்க்ஸுக்கும் சரி, ஏங்கல்ஸுக்கும் சரி, லெனினுக்கும் சரி கலை இலக்கியத்தைப் பற்றிய நல்ல ரசனை எவ்வளவோ இருந்தது. ஆனால் சிருஷ்டி தெரியாத பின்பு வந்த யந்திரங்கள்தான் எல்லாவற்றையும் திருகிவிட்டன' //
உண்மைதான். இதை வாசிக்கும் போது சென்ற ஆண்டு கனடாவில் தோழர் சிவம் நிஅனிவு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவசேகரம் சம்பந்தமேயில்லாமல் ஆசிரியன் இறந்துவிட்டான் என்பதை விக்கலுக்காக தண்ணீர் கேபவனுக்கு தண்ணீர் கொடாமல் வேறென்னவும் கொடுப்பதுடன் ஒப்பிட்டதுதான் ஞாபகம் வருகின்றது.


//ஜரோப்பிய Extenstialists ஆகவும் மாறுபடலாம்.// Existentialists ஐக் குறிப்பிடுகீறீர்கள் என்று நினக்கிறேன்..

12/24/2010 01:29:00 AM
DJ said...

---- //ஜரோப்பிய Extenstialists ஆகவும் மாறுபடலாம்.// Existentialists ---
ந‌ன்றி. மேலே மாற்றிவிட்டேன்.

12/24/2010 09:33:00 AM