கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எக்ஸோராக் குறிப்புகள்

Friday, January 28, 2011

 1.0 வாசிப்பு/திரை

ஜே.எம்.கூட்ஸியின் 'The Master of Petersburg'  நாவ‌ல் Dostoyevsky யை முக்கிய‌ பாத்திர‌மாக‌க் கொண்ட‌ க‌தை.  அவ‌ரின் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவ‌ல், ஒரு கிள‌ர்ச்சி இய‌க்க‌த்தில் இருந்து கொல்ல‌ப்ப‌ட‌,  இற‌ந்த‌ த‌ன‌ய‌னின் நினைவுத்த‌ட‌ங்க‌ளைப் பின் தொட‌ரும் த‌ந்தையொருவ‌ரின் க‌தை.  இந்த‌க் க‌தை ம‌காஸ்வேதா தேவியின் '1084ன் அம்மா' (Mother of 1084) ஐ சில‌வேளைக‌ளில் எம‌க்கு நினைவுப‌டுத்த‌லாம். ம‌காஸ்வேதா தேவியின்  க‌தையில் ந‌க்ச‌லைட்டில் இருந்த‌ ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ அவ‌னைத் தேடும் தாயிற்குப் ப‌திலாக‌ இங்கே ஓர் த‌ந்தை. ‌ம‌கா ஸ்வேதாதேவியின் க‌தையில் வ‌ரும் அன்னை, த‌ன‌து ம‌க‌ன் இற‌க்க‌முன்ன‌ர் இன்னும் ந‌ன்கு அறிந்துகொண்டிருக்க‌லாமே என்று த‌விப்ப‌தைப் போல இங்கே பியோடோரும் த‌ன‌து வ‌ள‌ர்ப்பு ம‌க‌னிற்கு ந‌ல்ல‌தொரு த‌ந்தையாக‌ இருந்திருக்கலாமே என்று ஆத‌ங்க‌ப்படுகின்றார். உண்மையில் இந்த‌க்க‌தையில் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவெலின் பாத்திர‌த்தினூடாக‌ Dostoyevsky யின் இள‌மைப் ப‌ருவ‌த்தையே கூட்ஸி மீள்வுருவாக்க‌ம் செய்கின்றார்.

த‌ம் வாழ்க்கைக்கால‌த்தில் த‌ம்மை விட‌ இள‌மையான‌வ‌ர்கள் இற‌ந்துபோவ‌தைப் பார்ப்ப‌து என்ப‌து மிகுந்த‌ கவ‌லைக்குரிய‌து; அதுவே பிள்ளைக‌ளாக‌ அமைந்துவிட்டால் இன்னும் கொடுமையான‌து.  நிகிலிஸ்டுக்க‌ளோடு இணைந்து போராடிய‌ Dostoyevsky  பின்னாளில் எப்ப‌டியொரு 'கொன்ச‌ர்வேடிவ்' ஆகின்றார் என்ப‌து சுவார‌சிய‌ம். அது போராட்ட‌ங்க‌ளின் வீழ்ச்சியா அல்ல‌து த‌னிம‌னித‌ர்க‌ளின் மாற்றமா என‌ உள்ளோடிப் பார்ப்ப‌து சில‌ புதிய‌ வெளிச்ச‌ங்க‌ளை ந‌ம‌க்குத் த‌ர‌க்கூடும்.  'The Master of Petersburg' மற்றும் Mother of 1084 கதைகளோடு நீட்சித்துப் பார்க்க 'வார்சோவில் ஒரு கடவுளிலும்' ஒரு பகுதி வருகிறது. அங்கே இப்படி ஒரு தலைமறைவு இயக்கத்தில் இருந்து கொல்லப்படுகின்ற ஓர் இளம்பெண் வருகின்றார் என நினைவு.

இந்த‌ நூலை சா.தேவ‌தாஸ் 'பீட்ட‌ர்ஸ்பர்க் நாய‌க‌ன்'  என‌த் த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார். அதையே நானும் வாசித்தேன்.  சா.தேவ‌தாஸ் நிறைய‌ நூல்க‌ளை த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார், அந்தவகையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் இந்நூலைத் தமிழில் வாசித்தபோது நெருடிய ஒரு சிறுவிடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.  உதார‌ண‌த்திற்கு He came and left என்ப‌தை 'அவ‌ன் வ‌ந்து(விட்டு) போனான்' என‌ச் சொல்ல‌லாம். 'அவ‌ன் வ‌ந்தான் ம‌ற்றும் போனான்' என‌ எழுதினால் கூட‌ த‌வ‌றில்லை என்றால்கூட‌ எளிதான‌தை நாம் தேர்ந்தெடுக்க‌லாம். இவ்வாறு ப‌ல‌ இட‌ங்க‌ளில் 'ம‌ற்றும்' பாவிக்க‌ப்ப‌டுவ‌து ச‌ற்று உறுத்துகின்ற‌து.  'AND' என்ப‌த‌ற்கு 'ம‌ற்றும்' என்ப‌தை எல்லா இட‌ங்க‌ளிலும் பாவிக்க‌ வேண்டுமா என்ப‌தை தேவ‌தாஸ் ம‌றுப‌ரிசீலிக்க‌ வேண்டுமென்ப‌து என் விருப்பு.
 .....................
Australia' திரைப்ப‌ட‌த்தின் க‌தை ராணி கொமிக்ஸ் மாதிரியான‌ க‌தைப்புத்த‌க‌த்தில் அட‌க்கிவிட‌க்கூடிய‌து. மந்தைக‌ளை நெடுந்தூர‌ம் ஓட்டிச்சென்று குறிக்க‌ப்ப‌ட்ட‌ கால அவ‌காச‌த்திற்குள் இறைச்சிக்காய் விற்ப‌தே க‌தைக்க‌ரு. வ‌ழ‌மை போல‌ வில்ல‌ன்/ காத‌ல்/ நாய‌க‌ன்/நாய‌கி இங்கும் இருக்கின்றார்க‌ள். ஆனால் இப்ப‌ட‌த்தை க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு இன்னொரு கிளைக்க‌தையாக‌ வ‌ரும் ஆஸ்ரேலியாவின் பூர்வீக‌க்குடிக‌ள்.  ஒருவித‌ மாந்தீரிக‌த்த‌ன்மையுட‌ன் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌ன் ஒருவ‌ன் திரைப்ப‌ட‌ம் முழுதும் தொட‌ர்ந்து வ‌ருகின்றான். ப‌ட‌த்தின் எந்த‌ இட‌த்திலும் அந்த‌ப் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌னின் பாத்திர‌ம் சிதைக்க‌ப்ப‌டாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இய‌ல்பின்படி விட‌ப்ப‌டுத‌ல் மிக‌ முக்கிய‌ம் என்ப‌தை மென்மையாக‌ வ‌லியுறுத்தி இத்திரைப்ப‌ட‌ம் முடிகின்ற‌ காட்சி அருமையான‌து.
 .....................
Tin Drum (த‌க‌ர‌ மேள‌ம்) என்கின்ற‌ குந்த‌ர் கிராஸின் நாவ‌லை அதேபெயரிலேயே ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌த்தோடு திரியும் வ‌ள‌ராத‌ ஒஸ்கார் உண்மையில் ஒரு ப‌டிம‌மே. போரின் நினைவுக‌ளுக்கான‌ ப‌டிம‌ம் என‌க் குறிப்பிட்டுச் சொல்ல‌லாம். ஒருவ‌ர் எவ்வ‌ள‌வுதான் வ‌ள‌ர்ந்தாலும் போரின் நினைவுக‌ளிலிருந்து என்றுமே த‌ப்பியோட‌முடியாது; அதைக் க‌ட‌ந்துபோவ‌து என்ப‌தும் மிக‌க் க‌டின‌மான‌து.  அத்துய‌ர‌மே என்றுமே வ‌ள‌ராத‌ ஒஸ்காராக‌ இங்கே ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து. 2ம் உல‌க‌ப்போருக்கு முன், இந்நாவ‌லின் பின்புல‌மாக‌க் காட்ட‌ப்ப‌டும் ந‌க‌ரான‌ டான்ஸிக் ஒரு சுத‌ந்திர‌ம் உள்ள‌ பிர‌தேச‌மாக‌வே  இருந்திருக்கிற‌து. போரின் பின்ன‌ர் போல‌ந்தின் ஒரு ப‌குதியாக‌ப் போய்விட்ட‌து (இந்ந‌க‌ரிலேயே குந்த‌ர்கிராஸ் பிற‌ந்தார் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து) டென்ஸிக்கில் இருப்பவ‌ர்க்கு போர் ந‌ட‌க்கும்போது எந்த‌ப் ப‌க்க‌ம் சேர்வ‌து என்ற‌ சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌து. ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌(?) த‌க‌ப்ப‌ன் (அல்பிர‌ட்) நாஸிக‌ளின் ப‌க்க‌ம் சேர்கிறார். ஒஸ்காரின் அம்மா உற‌வு வைத்துக்கொள்ளும் ‍-ஒஸ்காருக்கு நெருக்க‌மான‌- ஜான் போலிஷ்கார‌ர்க‌ள் ப‌க்க‌ம் இணைந்துகொள்கிறார். ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ த‌ந்தை யார் என்ப‌தே ஒருவித‌ப் புதிருட‌ன் தான் இத்திரைப்ப‌ட‌த்தில் இருக்கும். அல்பிர‌ட்டும், ஜானும் வெவ்வேறுகால‌க‌ட்ட‌த்தில் போரால் இற‌ந்தும் விடுகின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌ம் ஒரு நெடும்க‌தை. ஒஸ்காரின் பாட்டியில் இருந்து ஆர‌ம்பித்து ஒஸ்காரின் பிள்ளை(?)வரை நீளும் பெரும் குடும்ப‌த்தின் க‌தை.  போரின் அழியா வ‌டுக்க‌ளையும், போருக்குள் ந‌க‌ரும் வாழ்வையும், அத‌ன் பிற‌ழ்வுக‌ளையும் மிக‌த் த‌த்ரூப‌மாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌து.
 .....................
தேவ‌தாசிக‌ள் ப‌ற்றி அருமையான‌ க‌ட்டுரை ஒன்றை 'வெளி' ர‌ங்க‌ராஜ‌ன் எழுதியிருக்கின்றார். 'பாஸிச‌ம்' போல‌,'ஆணாதிக்க‌ம்' என்ற‌ சொற்பிர‌யோக‌ம் பாவித்து பாவித்து அத‌ன் அர்த்த‌ம் நொய்மைய‌டைந்துவிட்ட‌து என்ற‌ எண்ண‌ம் என‌க்குண்டு. ஆண்ம‌ன‌ம் இய‌ங்கும் வித‌மே மிக‌ அலாதியான‌து. கோரைப்புற்க‌ளைப் போல‌ எங்கு வேண்டுமானாலும் ப‌ட‌ர்ந்து த‌ன‌க்கு வேண்டிய‌தை உறிஞ்சிவிட்டு, தான் பாவிக்கும் வ‌ள‌ங்க‌ளை ச‌க்கைக‌ளாக‌ தூர‌ எறிந்துவிட்டு ந‌க‌ர‌க்கூடிய‌து. இதை இன்னும் கொஞ்ச‌ம் நீட்சித்தால் 'ப‌ய‌முறுத்தும்' அள‌வில் ஏகாதிப‌த்திய‌த்திற்கும் ஏற்றிச் செல்ல‌லாம்.  ஆண் ம‌ன‌தை இழை இழையாக‌ பிரித்துப் பார்த்தால‌ன்றி ஒரு சிறுமாற்ற‌த்தையும் ஆண்க‌ளிடையே ஏற்படுத்திவிட‌முடியாது.  ஆக‌வேதான் 'ஆணாதிக்க‌ம்' என்ற‌ எந்த‌ அதிர்ச்சியையும் த‌ராத‌ நொய்ந்த‌ சொல்லை வைத்து பொதுத்த‌ள‌த்தில்  நாம் எதுவும் செய்துவிட‌முடியாது என‌க்கூறுகின்றேன். இனி உள்நுழைந்து இழைக‌ளை அறுத்து அறுத்துப் பார்த்தாலே ந‌ம்மை நாமே விம‌ர்சிக்கும் சிறுவெளியையாவ‌து அடைய‌முடியும்.

2.0 சுய பிரகடனம்

இந்த‌ப் புதுவ‌ருட‌த்தில் நிறைய‌ {வாசிக்க‌வேண்டும், திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்க‌வேண்டும்} என‌ உறுதிசெய்துகொண்டிருக்கின்றேன். ஏற்க‌ன‌வே ருவீற்ற‌ரைத் தூர‌ வில‌த்தி வைத்த‌துபோல‌ ஃபேஸ்புக்கையும் அவ்வ‌ப்போதும‌ட்டும் அவ‌சிய‌ம் இருந்தால் ம‌ட்டும் எட்டிப்பார்ப்ப‌தாய் முடிவு செய்திருக்கின்றேன். இவை எல்லாம் எளிது. ஆனால் இனிக் கூற‌ப்போகின்ற‌ விட‌ய‌த்தை எவ்வாறு காப்பற்ற‌ப் போகின்றேன் என‌த்தெரிய‌வில்லை.

ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே...! ஜெய‌மோக‌னுட‌னான‌ என‌து ப‌த்தாண்டுப் 'ப‌கை'யை முடித்து வைக்க‌லாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்ல‌து 20002ல் 'டிசே த‌மிழ‌னுக்கு' என‌ ஜெய‌மோக‌ன் ப‌திவுக‌ள் விவாத‌க்க‌ள‌த்தில் எழுதிய‌தை ந‌ன்றியுட‌ன் நினைவுகூர்ந்து ஒரு ப‌கைம‌ற‌ப்புக் க‌டித‌ம் கூட‌ அவ‌ருக்கு எழுத‌லாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன். 'ப‌கைம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' என‌ எல்லாத் திசைக‌ளிலிருந்தும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு நான் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்துப் பார்த்த‌தில் நான் யாரோடு க‌ட‌ந்த‌ கால‌த்தில் அதிக‌ 'ப‌கை' கொண்டேனோ அவ‌ரோடு ப‌கை ம‌ற‌ப்புக் கொள்வ‌து ந‌ல‌மென்று நினைத்தே இதை முடிவுசெய்திருக்கின்றேன். ப‌த்தாண்டு கால‌ப் ப‌கையை ச‌ட்டென்று முறிக்க‌ ம‌ன‌சுக்கு க‌ஷ்ட‌மாக‌த்தான் இருக்கின்ற‌து, என்ன‌ செய்ய‌ வ‌ய‌தும் போகின்ற‌து அல்ல‌வா? 

ஈழ‌த்து அர‌சிய‌ல் போல‌ இர‌ண்டு த‌ர‌ப்புக்குமான‌ 'ப‌கை ம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' போன்ற‌வ‌ற்றை ஒருத‌ர‌ப்பே முடிவு செய்வ‌துபோல‌ என்னால் ஜெய‌மோக‌ன் விட‌ய‌த்தில் செய்வ‌த‌ற்கான் அதிகார‌ம் இருக்கா என்று தெரிய‌வில்லை. ஆக‌வே நான் ஜெமோவோடு 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ட்டும் செய்கின்றேன். 'மீள்ந‌ல்லிண‌க்க‌ம்' சாத்திய‌மா என்ப‌தை ஜெமோவோடு இணைந்துதான் முடிவு எடுக்க‌வேண்டும். ஆனால் இத‌ற்கான‌ ந‌ல்லெண்ண‌ச் சமிக்ஞையாக‌ க‌ன‌டாவில் 'ஜெயமோகன் வாசக‌ர் வ‌ட்ட‌ம்'  ஒன்றைத் தொட‌ங்க‌லாம் என‌வும் இருக்கின்றேன். இத‌ற்கு 'கால‌ம்' செல்வ‌மோ, அ.முத்துலிங்க‌மோ நான் த‌ம‌து இலக்கிய உரிமையைப் ப‌றிப்ப‌தாய் ஆட்சேபிக்க‌மாட்டார்க‌ள் என‌வும் ந‌ம்புகிறேன். 

ஜெமோவோடு பகை மறப்புச் செய்வதற்கு அடிப்படையான 3 காரணங்கள்
(1) எனது வாசிப்புக்களின் அடிப்படையில் நான் நம்பியவர்கள்/ வழிகாட்டுவார்கள் என நினைத்தவர்கள் எதிர்வேகூறமுடியாச் சறுக்கல்களை சந்தித்தமை; தாம் கூறியவைக்கு மாறாக தம் போலியான முகங்களைக் காட்டியமை
(2) ஜெமோவை எப்படி 2000 வாசிப்பு/விவாதங்களினூடாக அறிந்தேனோ ...அதேபோல அவர் இன்றும் இருக்கின்றார். அன்று அவரை எதிர்க்க என்ன என்ன காரணங்கள் இருந்தனவோ அதே  இன்றும் அதே விடயங்கள் மாறாது இருக்கின்றன...ஆகவே அவர் அந்தவகையில் தான் சொன்னவற்றுக்கு எதிராக எந்த வேசமும் போடாமல் இருக்கின்றார் என்பது நிரூபணமாகிறது. இந்த பத்து வருடத்தில் அவரும் மாறவில்லை, அவரோடு சமரசமாகின்ற அளவுக்கு எந்தப் புள்ளியும் எனக்கும் தெரியவில்லை. பிறகும் ஏன் வீணாகப் பகையை வளர்ப்பான் என்றே 'பகை மறப்பு' எனும் முடிவுக்கு வந்திருக்கின்றேன்.
(3) நமக்கு ஏற்புடையதோ இல்லையோ தமிழ்ச்சூழலில் அருகிப்போய்விட்ட ஒரு விவாதச் சூழலை அவர் உருவாக்கிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லா விவாதத்தின் முடிவிலும் தனது 'நான்' ஐ முன்னிறுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அவற்றுக்கிடையில் இருந்து ஏதோ ஒன்றிரண்டு நல்ல விடயங்களையாவது பொறுக்கவோ புதிதாக அறிந்துகொள்ளவோ முடிகிறது என்பதும் உண்மை.
 
இறுதியாய்...
ந‌ண்ப‌ரிட‌ம் கேட்டேன்.... நான் என் 'ப‌கை ம‌ற‌ப்பு' விட‌ய‌த்தில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஒருவிட‌ய‌த்தைச் செய்திருக்கின்றேன். உங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்தால் என்ன‌ செய்வீர்க‌ள் என‌க் கேட்டேன். அவ‌ர் தன‌து க‌ட‌ந்த‌கால‌த்தில் த‌ன்னை நேசித்த‌, ஆனால் த‌ன்னால் நேசிக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்க்காத‌ ஆண்க‌ளுக்கு நேச‌த்துட‌ன் க‌டித‌ம் எழுதுவேன் என்றார்.

என் ந‌ண்ப‌ரைப் போல‌ உல‌க‌த்திலிருக்கும் பெண்க‌ள் அனைவ‌ரும் இவ்வாறாக‌ 'ப‌கை ம‌ற‌ப்பு'ச் செய்ய‌த் துணிவார்க‌ளாயின் என் வாழ்க்கைக்கால‌ம் முழுதும் தின‌ம் ஒரு காத‌ற் க‌டித‌மாவ‌து என‌க்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என நினைக்கிறேன். 


(புதுவருடத்து உறுதிமொழிகள் தக்கவைக்கப்படின் இவ்வாறான குறிப்புகள் அவ்வப்போது உங்களை வதைக்கக்கூடும்...)

9 comments:

வினவு said...

நண்பரே,

//(1) எனது வாசிப்புக்களின் அடிப்படையில் நான் நம்பியவர்கள்/ வழிகாட்டுவார்கள் என நினைத்தவர்கள் எதிர்வேகூறமுடியாச் சறுக்கல்களை சந்தித்தமை; தாம் கூறியவைக்கு மாறாக தம் போலியான முகங்களைக் காட்டியமை//

இது என்ன என்று சற்று விளக்கமாக கூற இயலுமா? அதனால் யார் அந்த நபர்கள் என்று தெரிந்து கொள்ளம் ஆவலில் கேட்கவில்லை. மாறாக தன்மை அடிப்படையில் அப்படி சறுக்கி விழுந்தவர்களின் ஆளுமை என்ன என்று விளக்க இயலுமா?

இதை தெரிந்து கொண்டால்தான் நீங்கள் ஜெமோவுடனான பகை மறப்பு விசயத்தை புரிந்து கொள்ள இயலும்.

ஏனெனில் நீங்கள் நேர்மறையின் எதிர்மறை வீழ்ச்சிகாரணமாக எதிர்மறையை நேர்மறையாக எடுக்கிறீர்களோ என்று ஒரு ஐயம் உண்டு. அப்படி எடுக்கக் கூடாது என்று விதி ஏதுமில்லை.

ஆனாலும் பரந்து விரிந்த உலகத்தில் நாமறியாதவையை தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாத நேரத்தில் கிடைத்ததில் இது பழுதில்லை என்று சமரசங்களோடுதான் பலரும் ஓடுகின்றனர்.

அறிவுத் தேடல் எனும் மாயமானை வானத்திலிருந்து தரைக்கு கொண்டு வந்து வாழ்வோடு உரசிப்பார்த்து உண்மையை உடைத்துக் காட்டினால் பல உள்ளொளிகள் சிரித்துக் கொண்டே விடைபெறும்.

ஆனாலும் மாயாமானை உண்மை என்று நம்புவோரை, வாழ்வோரை என்ன செய்வது?

1/29/2011 02:03:00 AM
Unknown said...

///என் ந‌ண்ப‌ரைப் போல‌ உல‌க‌த்திலிருக்கும் பெண்க‌ள் அனைவ‌ரும் இவ்வாறாக‌ 'ப‌கை ம‌ற‌ப்பு'ச் செய்ய‌த் துணிவார்க‌ளாயின் என் வாழ்க்கைக்கால‌ம் முழுதும் தின‌ம் ஒரு காத‌ற் க‌டித‌மாவ‌து என‌க்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என நினைக்கிறேன்///
பிறகு????

1/29/2011 07:33:00 AM
Anonymous said...

ஜெ.மோவுடனான பகைமறப்பு மகிழ்ச்சி தருகிறது. இந்தியத்தேசியம், இந்துத்துவம் போன்ற கருத்திநிலைகள்தான் அவருடைய சாய்வென அறிவித்தே இயங்கும் அவருடைய நேர்மை எனக்கும் பிடித்த ஒன்றே.
அவரிடமிருந்து வேறுபடுபடுவது, விமர்சனங்களை முன்வைப்பது, அவரது அரசியலை நிராகரிப்பது இவையெல்லாம் தேவையான செயற்பாடுகள். ஆனால், அவரது ஆளுமைக்குரிய மரியாதையோ சிவில் நாகரீகங்களோ இன்றி இலக்கிய அடிப்படைகளிலே கூட நம்பிக்கை இழந்து மரத்துப் போகும்படி செய்கிற நச்சுச் சூழல் வருத்தமளிக்கிறது.

`பகை` என்பதை வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிட முடியாது. அது ஜெ.மோ, சாரு, எஸ்.ரா தொடங்கி சேரன், ஷோபா சக்தி எல்லாருக்கும் பொருந்தும்.

1/29/2011 09:07:00 AM
பிச்சைப்பாத்திரம் said...

நன்று. தொடரவும்.

1/29/2011 09:18:00 AM
மீராபாரதி meerabharathy said...

நட்புடன் இளங்கோவிற்கு………
தங்களது இக் குறிப்பு கண்டு மகிழ்ந்தேன்….
இதன் விளைவாக சில குறிப்புகள்….

முதலில் nஐயமோகனை நீண்ட காலமாக அறிந்தபோதும்…ஒருபோதும் வாசிப்பதற்கு ஊந்தப்படவில்லை…
இதற்குப் பல காரணங்கள் உண்டு….அல்லது காரணங்கள் உண்மையிலையே இருந்தனவா இருக்கின்றனவா என தெரியவில்லை எனக்கு….
ஆனால் இந்த வருடம் nஐயமோகனின் “காந்தியும் காமமும்- 4”
கட்டுரை ஒன்றை வாசித்து கவரப்பட்டேன்…இக் கட்டுரையை ஜமாலனின் கட்டுரை ஊடாக சென்றேனா அல்லது இக் கட்டுரை ஊடாக ஜமாலனின் கட்டுரைக்கு சென்றேனா என்பதை மறந்துவிட்டேன்…
ஆனால் இருவரின் கட்டுரைகளையும் வாசித்தமை மகிழ்ச்சியை தந்தது…
ஆகக் குறைந்தது அவரது கட்டுரைகளையாவது இனி தொடர்ந்து வாசிப்பேன் என உணர்கின்றேன்….
காரணம் அவரது எழுத்தில் இருந்த பரந்த விரிந்த பார்வை…குறுக்கலின்றி விவாதத்திற்காக திறந்துவிடப்பட்டமை….
இரண்டாவது பகைமறப்பு….
தங்களுக்குள் என்ன பகை முரண்பாடு என்பதை நானறியேன்…ஆனால் பகைமறப்பு என்ற நிலைப்பாட்டிற்கு வந்தமை மகிழ்ச்சியான விடயமே…ஏனனில் எனது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல புற சூழலும் பல எதிர்மறை உணர்வுகளாலும் கருத்துக்களாலும் ஆதிக்கம் செய்யப்படும் நிலையில் நாமமும் அகப்பட்டு அவ்வாறான ஒரு எதிர்மறை உணர்வுக்கும் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் சென்றுவிடுவமோ என்கின்ற மனப் பயம் எனக்குள் இருக்கின்றது…எழுத்துக்கள் மூலமான விவாதத்தை ஆரோக்கியமான எழுத்துக்கள் மூலமாக மேற்கொள்வதே சரியான பாதை… ஆனால் இன்று அவ்வாறன ஒரு சுழலை உணரவோ காணவோ முடியவில்லை….ஆகவே தங்களது முடிவை வரவேற்கின்றேன்…மேலும் இவ்வாறான ஒரு பகை முரண்பாடு உருவாவதற்;கு காரணமாக இருந்த விவாத தொடர்கள் இருந்தால் வாசிப்பதற்கு விரும்புகின்றேன்….

மூன்றாவது தங்களைப் போலவே….எனது கடந்த கால நண்பர்கள் உறவுகளுடனான முரண்பாடுகளை எழுத்துக்கள் மூலம் மீளவும் எழுதி ஆரோக்கியமாக தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றேன்…ஆனால் அதேவேளை புதிய முரண்பாடுகளை தீர்க்க முடியாது தோல்வியடைகின்றமை அதிகமான மன அழுத்தத்தை தருகின்றதுடன் எதிர்மறை உணர்விற்கும் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் தள்ளுகின்றது….இது எனக்குள் மனப் பயத்தை உருவாக்கியபோதும் இதிலிருந்து மீள்வேன் என நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்கின்றேன்….

நான்காவது …நீங்கள் கூறியது போல் பாசிசம் ஆணாதிக்கம் மட்டுமல்ல மார்க்ஸியம் தோழர் புரட்சி என பல சொற்கள் அதிகமாக அதன் அர்த்தம் இழந்து பயன்படுத்தப்படுகின்றதாகவே உணர்கின்றேன்…எனது கட்டுரைகளில் ஆணாதிக்கம் என்ற சொற்களை அதிகம் கண்டிருப்பீர்கள்….கட்டுரையின் அளவும் நீண்டதாக இருப்பதாக சில நண்பர்கள் விமர்சித்தார்கள்….இவற்றை இனிவரும் கட்டுரைகளில் கவனம் கொள்வதாகவும் இருக்கின்றேன்….

இறுதியாக….ஆம் நீங்கள் கூறியதுபோல் டுவிட்டர் முகநுல் என்பனவும் மற்றும் புதிய தொழிற்நூட்பங்களும் நமது வாழ்வை தேவைக்கு அதிகமாகவே ஆதிக்கம் செய்கின்றன…அவை நமது வாழ்வை தீர்மானிப்பவையாக கட்டுப்படுத்துவவையாக இருக்கின்றன…உண்மையிலையே நாம்தான் அதை நமது கட்டுப்பாடுக்குள் வைத்து தேவையான போது பயன்படுத்தும் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால் நமது மனம் ம்;;;ம்;ம்;……….
புhர்ப்போம் என்ன நடக்கின்றது என…பிரக்ஞையுடன்…
குறிப்புகளுக்கு நன்றிகள்
மீராபாரதி

1/29/2011 06:47:00 PM
DJ said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களுக்கு.
விரைவில் சிலவற்றை விரிவாக எழுத விழைகிறேன்.

1/29/2011 11:24:00 PM
தமிழ்நதி said...

இளங்கோ,

ஒருவர் மீதான வெறுப்பு இன்னொருவர் மீதான விருப்பாக அன்றேல் பகைமறப்பாக மாறச் சாத்தியங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறீர்களா என்பதை அறிய விரும்புகிறேன். நன்றி.

1/30/2011 12:36:00 AM
அருண்மொழிவர்மன் said...

2004/2005 காலப்பகுதி. நீங்கள் வாரத்திற்கு ஒன்றேனும் பதிவிடுவீர்கள். 5 நாளும் 18 மணித்தியாலம் வேலை. அப்படி இருந்தும அதில் நீங்கள் சொன்ன விடயங்களைத் தேடி வாசிப்பேன். அந்த ஞாயிறு அப்படிக் கழிய மீண்டும் அடுத்த் ஞாயிறு வரும்........

மீண்டும் அப்படி ஒரு நிறைய விடயங்களைத் தேடித் தெரியவைக்கின்ற ஆவலை ஊட்டுகின்ற பதிவு...


பகைமறப்புப் பற்றி..... அ. மார்க்ஸ் அருள்பாலித்த ஈழத்தமிழர்கள் செய்யவேண்டிய பகைமறப்பை ஞாபகப்படுத்துகின்றது. அதே நேரம் நம்பிக்கை வைத்திருந்த ஆளுமைகள் வேடம் கலைந்து சரிகையில் தொடர்ந்து நாம் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது பகைமறப்புச் செய்கின்ற மனநிலையை நானும் நன்கறிவேன்....

1/30/2011 01:40:00 AM
DJ said...

அன்பின் வினவு,
/நீங்கள் நேர்மறையின் எதிர்மறை வீழ்ச்சிகாரணமாக எதிர்மறையை நேர்மறையாக எடுக்கிறீர்களோ என்று ஒரு ஐயம் உண்டு./
நிச்சயம் அவ்வாறாக இல்லை. ஜெயமோகன் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை தந்தவராகவோ, அல்லது அவரைப் பின் தொடர்ந்து செல்லக்கூடியதான சமிக்ஞைகளையோ தந்தவரோ அல்ல. நான் எவர்களை எல்லாம் அதிகம் வாசித்து நம்பினோ, அவர்களின் வழி மாறியதே எனக்கான வீழ்ச்சிகளாய் நினைக்கின்றேன். ஆக ஜெயமோகனை விட இவ்வாறு தடம் மாறியவர்களையே நான் நிறைய விமர்சிக்கவும், அவர்கள் முன்வைத்தவற்றை வைத்து உரையாடவும் செய்வதே நியாயமாகும். அவ்வாறு செய்யாது நான் எதையும் பெறாத ஜெயமோகனிடம் பகை காட்டிக்கொண்டிருப்பது - என்னளவில் - தேவையற்றதெனவே நினைக்கின்றேன். இவ்வாறு சொல்வதால் ஜெமோவில் நம்பிக்கை வைக்கின்றேனோ அல்லது அவரை ஏற்றுக்கொள்கின்றேனோ என்ற அர்த்தத்தில் அல்ல என்பதை நீங்கள் விளங்கிக்கொள்வீர்களெனவே நினைக்கின்றேன்.
.....
கிருத்திகன்,
/பிறகு/ என்ன, Letters to Juliet மாதிரி Letters from DJ's EXs என ஒரு படம் எடுத்தாற் போயிற்று :-).
....
அநாமதேய நண்பர்,
நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இந்த 'பகை மறப்பு' விடயத்தை நான் சற்று எள்ளலாகவும் பாவித்திருப்பேன் என்பதையும் கவனித்திருப்பீர்களெனவே நம்புகின்றேன்.
.............
மீராபாரதி, உங்களின் பின்னூட்டத்திற்கு நான் நிறைய எழுதவேண்டும். ஏற்கனவே நீங்கள் அனுப்பியவற்றுக்குப் பதில் எழுதத் தொடங்கி தொடங்கி இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. இதையும் சேர்த்து நான் உங்களுக்குப் பதில் எழுதுவேன். தாமதமாவதற்கு மன்னிக்கவும்.

மற்றது ஜெயமோகனுடன் சொல்லக்கூடியதாக எந்தப் பகை உரையாடலும் செய்ததில்லை. அவர் என்னை ஒரு வாசகராக மதிப்பாரோ என்பது கூடத்தெரியாது. ஒருபக்கக் காதல் மாதிரி, தொடர்ச்சியாக அவரை நிறைய இடங்களில் விமர்சித்து எழுதியிருக்கின்றேன் என்பதைத் தவிர :-)

'ஆணாதிக்கம்' என்ற சொல்லையே நானும் பாவித்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால் உள்நுழைந்து பார்ப்பதே இனியான காலங்களில் சரிவரும். அதை உங்களைப் போலவே நானும் இனி எழுதுபவற்றில் கவனங்கொள்கின்றேன்.
.......
தமிழ்நதி,
/ஒருவர் மீதான வெறுப்பு இன்னொருவர் மீதான விருப்பாக அன்றேல் பகைமறப்பாக மாறச் சாத்தியங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறீர்களா என்பதை அறிய விரும்புகிறேன்/
நிச்சயமாக இல்லை. வினவுக்குக் கூறியது மாதிரி. எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் என்பதுமாதிரியான வகையில் இது அல்ல என மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றேன். 'அந்தக்கெட்டவரை விட இந்தக் கெட்டவர் கொஞ்சம் பரவாயில்லை' என்கின்ற அரசியல் கட்சி நிலைப்பாடு இதில் அறவே இல்லை :-).
....
சுரேஷ் கண்ணன், தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன். நன்றி.
....
அருண்மொழிவர்மன்,
நன்றி. உங்களின் எழுத்துக்களிலிருந்தும் நானும் நிறைய அறிந்துகொண்டிருக்கின்றேன். ஆகவே நானும் உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் :-).

1/31/2011 11:33:00 PM