கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நித்தியகல்யாணிப்பூ குறிப்புகள்

Wednesday, October 15, 2014

 1.
நேற்று மழைநாளோடு வாசித்து முடித்த நாவல், ஜீ.முருகனின் 'மரம்'. எனக்குப் பிடித்த (விரும்பிய அளவு நாட்களைக் கழிக்கவேண்டுமென பிரியப்படும்) திருவண்ணமலையைச் சுற்றி நடக்கின்ற கதையென்பதால் அங்கேயே போய்விட்டதென்ற உணர்வுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கவிஞர்/ஓவியர்களின் வாழ்வைத் தொட்டு செல்வதோடு, நீட்ஷேயும், டால்ஸ்டாயும் பயமுறுத்தாமல்/நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதால் இன்னுமின்னும் நாவல் ஈர்த்துக்கொண்டிருந்தது.

தனது துணைவியும் கவிஞருமான சந்திராவின் எல்லாத் 'துரோகங்களை'யும் மறந்துவிட்டு, டால்ஸ்டாயின் ஒரு பாத்திரம்போல மண்டியிட்டு அழவேண்டுமென கண்ணன் விரும்புவார்... "அது அவளுடைய துரோகங்களுக்கு உரிய பதிலீடாக,, பகை உணர்வையெல்லாம் அன்பாக மாற்றக்கூடிய உலைகளமாக அது இருக்கும்' எனவும் நம்புவார். டாஸ்டாய் எழுத நினைத்தும், மனிதன் கடவுளாக மாறும் தருணங்கள் இதுவேயெனவும் மேலும் யோசிப்பார். ஆனால் அவர் தன் துணையை நேரில் சந்திக்கும்போதெல்லாம், சராசரிக்கும் கீழான மனிதராகவே மாறிவிடுகின்றார். 'கிரஸ்லர் சோனட்டாவில் வரும் கணவனைப் போல கத்தியை எடுத்து அவளது வயிற்றில் சொருகும்' ஆசை'யே அவருக்குப் பெருகுகிறது. எமது அன்பானவர்களாக மாறும் விருப்பையும், பிறரை மன்னிக்க விரும்பும் மனோபாவத்தையும் எவை குலைத்துக்கொண்டேயிருக்கின்றன? ஏன் நம்மால் அவ்வளவு எளிதாக அப்படியாக மாறமுடியாதிருக்கின்றது எனத் தொடர்ந்து யோசிக்கவைக்கும் இவ்வாறான பாத்திரங்களே நாவல் முழுதும் நம்மைத் தொந்தரவுபடுத்தியபடியே இருக்கின்றன.

மாலையில் வாசிக்கத்தொடங்கியது அயோத்திதாச பண்டிதரைப் பற்றி டி.தருமராஜன் எழுதிய 'நான் பூர்வ பெளத்தன்'. அந்த முன்னுரையை கவனித்தாகவேண்டும். முக்கியமாய் ஒவ்வொருவரும் எழுதுவதற்குப் பல்வேறுகாரணங்கள் இருக்கக்கூடுமெனப் பட்டியலிட்டு, ஒரு தலித் எழுதத் தொடங்கும்போது, அவருக்கு முன்னாலுள்ள சவால், 'இதுவரை எழுதப்பட்டிருக்கும் அத்தனை அவதூறுகளுக்கும் எதிராக எழுதுவதே' என சொல்லப்பட்டிருப்பது எத்தகைய உண்மையான வார்த்தைகள். முக்கியமாய் பல்வேறுவிதமான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு 1880களில், தமது கோரிக்கைகளை பிரிட்ஷாருக்கு அனுப்பும் மாநாட்டில், அயோத்திதாச பண்டிதர் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்.

சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருக்கும் பறையர்களை கோயில்களுக்குச் செல்ல வழிபட அனுமதிக்கவேண்டும். அந்தக் கோரிக்கை பிரிட்டிஷ்காரருக்குப் போகாமாலே, உயர்சாதியினரால், சிவனும் விஷ்ணுவும் எங்களுக்குரிய கடவுள்கள், உங்களுக்கென்றுதானே சுடலைமாடன்களும், காட்டாண்டிகளும்' இருக்கின்றதெனக் கூறி நிராகரிக்கின்றனர். ஆனால் அதேகாலகட்டத்திலேயே, இந்தியாவில் முதன்முதலாக குடிசன மதிப்பீடு செய்யப்படும்போது, சிவனையோ, விஷ்ணுவையோ இன்னபிற பெருந்தெய்வங்களை வழிபடாது தனக்குரிய குல/நாட்டார் தெய்வங்களை வழிபட்ட மக்களை ஆங்கிலேயோரோடு நின்ற உயர்சாதியினர் 'இந்துக்கள்' என்ற வகைக்குள் அடக்கச் சொல்கின்றனர்.

அயோத்திதாச பண்டிதரே இவ்வாறே பெருந்தெய்வங்களுக்கு வெளியே நின்ற ஒதுக்கப்பட்ட சாதிகளையும், பழங்குடிகளையும், 'ஆதித்தமிழர்' என்ற வகைக்குள் சேர்க்கச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். எனினும் அவரின் குரல் செவிமடுக்கப்படாது, எல்லோரும் இந்துக்களாகவே சேர்க்கப்படுகின்றனர். இன்றும் சமஸ்கிருதமயமாக்கலில் நாட்டார் தெயவங்கள் பெருந்தெய்வங்களாக கலக்கப்படும் சூழலில் தலித்துக்கள் சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டா இவையெல்லாம் நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் எல்லாச் சூட்சுமமும் நமக்கு விளங்கும்.

 2.
நீங்கள் ................ அனுப்பியபொழுதில் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வு பற்றிய நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி உங்களால் காமத்தைக் கடந்து போக முடியவில்லை என்பதுபோல தஸ்தயேஸ்கியை வாசித்தபோது அவரால் ஏன் எந்தக் காலத்திலும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியவில்லை, எப்போதும் தளும்பிக்கொண்டிருந்தார் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இத்தனைக்கும் மரணத்தை மிக அருகில் கண்டபின், இது மீளுயிர்ப்பு என விளங்கி வைத்திருக்கின்ற தஸதயேவ்ஸ்கியால் பிறகான காலங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியவே இல்லை.

அவர் தன்னை யாரென்று கண்டடையக்கூடுமென்றா அல்லது காமத்தின் மூலம் எதையாவது அடையக்கூடுமென்றா பெண்களைத் தேடிப் போயிருக்கின்றார் எனவும் தெரியவில்லை. ஆனால் அவரின் வாழ்வில் நிறையப் பெண்கள் வந்திருக்கின்றனர். எனக்கு மிக ஆச்சரியமென்னவென்றால் அவர் அன்னாவோடாவது மகிழ்ச்சியாக இருந்திருப்பாரென்றால், அன்னா பிற்காலத்தில் எழுதிய நினைவுகளின் தொகுப்பில் கூட தஸ்தயேவ்ஸ்கி துயரம் நிறைந்த ஒருவராக இருந்திருக்கின்றார் என்பதைத்தான் அடையாளங்காண முடிகின்றது. 'நான் தனியே இருக்கின்றேன், தனித்திருக்கின்றேன்' என்றே அடிக்கடி அன்னாவிடம் குறிப்பிடுகின்றார். அன்னாவின் முதற்குழந்தை சொற்ப மாதங்களில் இறந்துபோகின்றபோது 'மகிழ்ச்சியற்ற இந்த மனிதர் ஒரு பெண்ணைப் போல விசும்பி விசும்பி அழுதததைப் பார்த்தபோது என்னால் கூட சகிக்கமுடியாதிருந்தது' என்றே அன்னா எழுதியிருக்கின்றார்.

ஆனால் இவ்வளவிற்கும் அப்பால், மிகுந்த வலதுசாரித்தன்மையுடைய, ஜரோப்பாக் கலாசாரத்தையே (அன்றையகாலத்தில் மொஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க் என்ற இரண்டு வேறுபட்ட கலாசார வாழ்வு இருந்தன) வெறுக்கின்ற தஸ்தயேவ்ஸ்கியா இவ்வளவு அருமையான புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பதுதான் வியப்பளிக்கின்றது. இவ்வளவு துயரங்களுக்கும் பதற்றங்களுக்குமிடையில் இருந்து கொண்டு இப்படி எழுதமுடிகின்றதென்றால் அவருடைய மகிழ்ச்சியோ/நிறைவோ எழுதுவதில் மட்டுமே இருந்திருக்கின்றதெனப் புரிந்துகொள்கின்றேன்.

நீங்கள் காமத்தைக் கடக்கமுடியாதிருக்கின்றதென எழுதியதை வாசிக்கும்போது, ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியது ஞாபகம் வருகின்றது. 'காமம் ஒரு நீலியைப் போல உங்களை தன் கண்களைப் பார் பாரென்று கேட்டுக்கொண்டேயிருப்பாள். நீங்கள் விழிகளை நிமிர்ந்து பார்த்தீர்களோ அப்படியே காமத்தோடு என்றுமே போராடிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் நீலியை நிமிர்ந்து பார்க்காது கடந்து போய்க்கொண்டிருக்கின்றேன்' என்றெழுதியிருந்ததாய் ஞாபகம். அதை வாசித்தபோது, இல்லை நான் காமத்தை அப்படிக் கடக்கப் போவதில்லை. நீலியின் கண்களை நிமிர்ந்து பார்ப்பேன். அதனோடு போராடியே தாண்டிச் செல்வேன் என நினைத்துக்கொண்டதுண்டு....

(நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து...)

3.
னந்தவிகடன் கையில் கிடைக்கும்போதெல்லாம், தவறாது வாசிப்பது அ.முத்துலிங்கத்தின் 'கடவுள் தோன்றிய இடம்' தொடர்கதையும், ப்ரியா தம்பியின் 'பேசாத பேச்செல்லாம்' தொடரும் . ப்ர்யா தம்பியின் தொடரோடு, விகடனில் அதே வாரங்களில் வரும் பிறவற்றை ஒப்பிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பெண்களுக்குப் பொதுவாய் வெளிப்படையாய்/இயல்பாய்க் காதலைச் சொல்லும் ஆண்களைப் பிடிக்கும் என்று ஒரு தொடரில் எழுத, அதே இதழில் வா.மு.கோமு காதலை இறுதிவரை சொல்லாத ஆணை, ஒரு பெண்ணுக்கு அதிகம் பிடிப்பதாய்க் கதை எழுதியிருப்பார். இப்படி இரண்டு வேறுவிதமான உலகங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பது கூட சுவாரசியமானது.

இந்தமுறை ப்ரியா தம்பி, சினிமாவில் சித்தரிக்கும் 'க்ளிஷே' பெண்களுக்கும், யதார்த்ததில் இருக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசங்களையும், ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் எப்படி தன் நடைமுறைவாழ்வில், சினிமாவில் இருந்து பெண் கதாபாத்திரங்களை, தமக்குத் தெரிந்த பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருப்பார். அதில் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் சிறிதேவி செய்யும் பாத்திரத்தை வியந்து எழுதியிருப்பார். அந்தப் படத்தைப் பார்த்த தருணத்தில் நானும் இப்படியான ஒரு நிலையில், பெண் பாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது எனவே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தோழி 'இறுதியில் பார்த்தால் எவ்வளவுதான், தன்முயற்சியில் முன்னேறிய சிறிதேவியும், குடும்பத்திற்கு கட்டுபட்டு தன் திறமைகளை மறைக்கும் ஒரு பெண்ணைப் போலவே காட்டப்பட்டிருப்பார். இப்படிக் காட்டுவதே ஆண்களுக்குப் பிடித்தமானது' என்று ஒரு புள்ளியைத் தொட்டுக்காட்டியிருந்தார்.

ப்ரியா தம்பியியும் இதற்கு முன் வாரங்களில், எப்படி பிஎஜ்டி படித்த பெண்கள் எல்லாம், திருமணம் என்று வந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு குடும்பப் பெண்களாகிவிடும் அபத்தத்தைக் குறிப்பிட்டதாய் நினைவு. எனவே இங்கிலீஷ் விங்கிலீஷ் எப்படி முடிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். இதையெல்லாவற்றையும் விட, இந்த வாரத் தொடருக்கு ஓவியர் வரைந்த படம் பற்றியது. ப்ரியா தம்பியின் தொடர் எப்படி ஆண்களின் புரிதல்கள் தவறென்று சொல்ல முயற்சிக்கிறதோ, அதை மறுதலிப்பதாய் இந்த ஓவியம் இருக்கின்றது. என் விளங்கிக்கொள்ளலில் இந்த ஓவியம், பெண்கள் இடப்பக்கத்தில் இருப்பது போல இருக்கின்றார்கள், ஆனால் திரைப்படங்கள் படச்சுருளில் இருப்பது போலச் சித்தரிக்கின்றதாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் இப்படி உள்ளே அணிவதைக்கூட அப்பட்டமாய்த் தெரிவது போல ஓவியம் வரைவதே, தொடரில் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய் விடுகின்றது. இதை அந்தத் தொடரை எழுதுகின்ற ப்ரியா தம்பியோ, விகடன் ஆசிரியர்களோ கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. இப்படித்தான் முன்பும் ப்ரியா தம்பியின் சிறுகதையிற்கும் ஏதோ அபத்தமான ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது நினைவில் வருகின்றது.

குங்குமத்தில் அசோகமித்திரன் எழுதும் தொடரையும் விடாமல் வாசிப்பதுண்டு. இம்முறை யு.அனந்தமூர்த்தி பற்றி எழுதியிருக்கின்றார். எல்லாவற்றையும் உடைத்துப் பார்க்க விரும்பிய ஆனந்தமூர்த்தி தன் வாழ்வில் பராம்பரியத்தைக் கைவிடாமல் இருந்தவர் எனக்குறிப்பிட்டு, அவரின் மகனொருவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் செய்தபோது, அனந்தமூர்த்தி மகனிற்கு அன்றைய காலை உபநயனம் செய்தார் என அசோகமித்திரன் குறிப்பிடுகின்றார். எழுத்தைத் தாண்டிய அனந்தமூர்த்தி ஒரு மரபுவாதியாக இருந்திருக்கக்கூடும். பெரும் இடதுசாரித் தலைவர்களாய் இருந்தவர்களே இறுதியில் பூநூல் சடங்குகளுக்குள் பாய்ந்தவர்கள் என்பதைத்தானே கடந்தகாலம் நமக்குக் கற்றுத்தந்திருக்கின்றது.

ஆனால் அசோகமித்திரனின் இந்தத் தொடரை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம். அவருக்கு மார்க்சியவாதிகளோடு இருந்த நட்பைப் பற்றி. சோவியத்து இதழ் வந்தபோது தி.க.சியை அடிக்கடி சந்தித்தபடி இருந்ததைக் குறிப்பிடுகின்றார். தான் அயோவா சென்று எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொண்டதற்கு கைலாசபதியே முக்கிய காரணம் என்கின்றார். அனந்தமூர்த்தியோடு நட்பாய் இருந்தையும் விரிவாக எழுதுகின்றார். அசோகமித்திரனைப் பற்றியெழுதும் எவரும் இவற்றைக் குறிப்பிடுவதில்லை. மார்க்சியர்கள் அவர்களவில்/அவர்களின் கொள்கையில்பால் விமர்சிக்கப்படவேண்டியவர்களே. ஆனால் அவர்கள் தமது சட்டகங்களை மீறி பிறரை வரவேற்றிருக்கின்றார்கள் என்பதையும் கவனித்தாகவேண்டும். இன்றும் புதிதாக வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டும் இருக்கின்றார்கள். பிறகு அதற்குள் இருக்கின்றார்களா, மீறிப்போகின்றார்களா, விமர்சிக்கின்றார்களா என்பது அடுத்த நிலையில் வருவது. முதலடியிற்கு எப்போது மார்க்சியம் கைகொடுத்திருக்கின்றது, தன் சட்டகத்திற்குள் இல்லாதவர்களையும் அரவணைத்திருக்கின்றது என்பதை நாம் தவறவிட்டுவிட முடியாது.

அசோகமித்திரன் அயோவா போயிருக்காவிட்டால், எனக்குப் பிடித்த 'ஒற்றன்' உருவாகியே இருக்க முடியாது. ஒருவகையில் அசோகமித்திரனுக்கு மட்டுமில்லை கைலாசபதியிற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்.

0 comments: