கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காகிதப்பூ குறிப்புகள்

Tuesday, September 29, 2015

 தீபன் (Dheepan)

தீபன் படம் பல சிக்கலான விடயங்களைப் பேச முயல்கின்றது. ஷோபா, காளீஸ்வரி மற்றும் சிறுமியாக நடித்தவரின் நேர்த்தியான நடிப்புடன், திரைப்படமாக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பேசுபொருளாகவும், கதாபாத்திரங்களாகவும் கொண்ட இப்படம் யாருடைய குரலாக ஒலிக்கின்றதென்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. எந்தப் படமாயினும் அது நிறைவுறும்போது நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அது எடுத்துக்கொள்ளும் விடயத்திற்கு genuineவாக இருப்பதை உணரும்போது அப்படத்தை நமக்கு நெருக்கமானதாய்க் கொள்ளமுடியும்.
உதாரணமாய் பிரசன்ன விதானகேயின் With You Without You, 'தீபன்' திரைப்படம் போலவே மிகச்சிக்கலான விடயத்தை இன்னும் சிக்கலான பாத்திரங்களினூடாகப் பேசுகின்றது. ஒரு முன்னாள் இராணுவத்தினன், தனது சக இராணுவத்தினர் ஒரு தமிழ்ப்பெண்ணை கூட்டாய்ப்பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு வரும்போது, பொய்ச்சாட்சியம் கூறுகின்றவன் என்கின்ற பெரும்பான்மை இனப்பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்படுகின்றது . அதே நபர் பின்னர் ஒருகட்டத்தில் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது எழும் கேள்விகளும், அறச்சிக்கல்களுமே அப்படத்தின் அடிநாதம். ஆனால் இத்தகைய குழப்பமான சூழலுக்குள் With You Without You முடியும்போது கூட, அதற்குள் ஒடுக்கப்பட்டவருக்காய் ஒலிக்கும் ஒரு குரலை ஒருவர் எளிதாக அடையாளங்கண்டு கொள்ளமுடியும்.

ஆனால் தீபன் படம் அகதிகள்/குடிவரவாளர் என்கின்ற விளிம்புநிலை மக்களின் கதையைக் கூறமுயன்றாலும் அதன் genuineவான குரலை விளிம்புநிலை மக்களுக்குச் சார்பாகக் கண்டுகொள்ள என்னால் முடியாதிருந்தது என்பது ஒரு கவலையான விடயமெனத்தான் கூறவேண்டும். இன்று உலகமெங்கும் -முக்கியமாய் ஐரோப்பாவில்- அகதிகள் பிரச்சினை பற்றியெறியும்போது, அகதிகள் சார்பானதும் அக்கறையுமானதுமான ஒரு திரைப்படமாய் அவ்வளவு எளிதாய் தீபனை முன்வைக்கமாட்டேன்.

பருக்கை

வீரபாண்டியன் எழுதிய 'பருக்கை' நாவலை கடந்த சில வாரங்களாக வாசிக்கத் தொடங்கி நேற்றிரவுதான் முடித்திருந்தேன். இவ்வளவு நாட்கள் நீண்டதற்கு இந்நாவலின் பேசுபொருள் முக்கியம் என்பதாலும், அதேசமயம் நாவலாக அது உருப்பெறவில்லை என்பதாலும் இழுபட்டுக்கொண்டிருந்தது. மேலும் 'பருக்கை' சாகித்ய அகடமியின் 'யுவ புரஸ்கர்' விருதையும் பெற்றது என்பதால் - வேறு சில நாவல்களை இடையில் கைவிட்டதுபோல - கைவிடாது தொடர்ந்து ஆறுதலாக வாசித்துக்கொண்டிருந்தேன்.

நாவலின் முக்கியம் என்பது, கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு படிப்பிற்காய் வரும் மாணவர்களின் தங்குமிட, உணவுப் பிரச்சினைகள் பற்றியது. மேலும் நாவல் தமிழில் முதுகலை படிக்கும் மாணவர்களைச் சுற்றிச் சுழல்வதால் (சென்னைப் பல்கலைக்கழகம்?) தமிழ்ச்சூழல் பற்றிய சூழலை கொஞ்சமேனும் அறிவது சற்றுச் சுவாரசியமாக இருந்தது.

நாவலில் பசி பற்றியே அநேக பக்கங்களில் பேசப்படுகின்றது. ஏழ்மையின் காரணமாக படித்துக்கொண்டே பல மாணவர்கள் திருமண/பிறந்தநாள் விழாக்களில் உணவைப் பரிமாறுபவர்களாக இருக்கின்றார்கள். படிக்கும் செலவிற்கான கொஞ்சப் பணமும், சாப்பிடுவதற்கான உணவும் கிடைக்குமென்றே மாணவர்கள் இந்த வேலைக்குப் போகின்றார்கள். ஆனால் அதிகவேளைகளில் இறுதியில் உணவு முடிந்து சாப்பிடமுடியாது போகின்றது அல்லது உணவிருந்தும் வயிறு விரைவில் நிரம்பி விரும்பியதைச் சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

பசி என்பது எத்தகைய அவலமானது என்பதை இந்த நாவல் கொண்டு வந்திருந்தாலும், ஒரே மாதிரியான சம்பவங்கள் ஒரே மாதிரியான உரையாடல்கள் வருவதால் மிகுந்த அலுப்பாக இருந்தது. தமிழில் முதுகலை படித்து இப்போது மேற்படிப்பில் ஆய்வாளராக இருக்கும் வீரபாண்டியனுக்கு தமிழில் 'கூறியது மீளக்கூறல் குற்றம்' என்பது தெரியுமெனவே நம்புகின்றேன். திரும்பித் திரும்பி ஒரே சூழலில் ஒரேமாதிரியான விடயங்களை கூறினால் கூட, அதை வேறுவகையான வடிவங்களில் சொல்ல முயற்சிக்காது நாவல் ஒரேமாதிரியே நீண்டு முடியும்போது நாவலில் பாத்திரங்கள் எப்போது பந்தி முடிந்து தாம் பசியாறலாம் என்று காத்திருப்பதுபோல வாசிக்கும் நமக்கும் எப்போது நாவல் முடியும் என்ற அலுப்பே வருகின்றது.

இந்த நாவலை பாண்டிச்சேரி எம்.கண்ணன் திருத்திக் கொடுத்திருந்ததாகவும், பதிப்பாளர் 60-70 பக்கங்கள் எழுதிக்கொண்டிருந்தபோதே பதிப்பாக்கலாம் என உற்சாகம் கொடுத்ததாகவும் வீரபாண்டியனின் நேர்காணல் ஒன்றில் வாசித்தேன். முதன்முதலில் நாவல் எழுதும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத விடயங்கள் இவை. ஆனால் இதை 250 பக்கங்கள் நீளும் நாவலாக எழுதாது இன்னும் சுருக்கி நூறுபக்கங்களுக்குள் திருத்தமான குறுநாவலாக பிரசுரித்திருக்கலாம் என்ற எண்ணமே வந்திருந்தது.

என்கின்றபோதும் திருவண்ணாமலையில் செங்கம் என்ற ஊரிலிருந்து வறுமையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் நாவலுக்கு, தமிழ்ச்சூழலில் சிலரால் நிறுவப்பட்ட 'அழகியல்' வடிவங்களை மட்டும் பொருத்திப் பார்ப்பதிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. உரையாடல்களில் தகுந்தமாதிரி பழமொழிகளையும் சொலவடைகளையும் பாவிக்கும் வீரபாண்டியன், இன்று நாவல்கள் மட்டுமில்லை, சிறுகதைகள் கூட உரையாடல்களில் பெரும்பகுதி தங்கியிருப்பதிலிருந்து நகர்ந்துவிட்டதென்று புரிந்துகொள்வாராயின் 'பருக்கை'யை விட இன்னும் செறிவான நாவல்கள் அவரிடமிருந்து முகிழக்கூடும்.

Irrational Man

ம்முறையும் வூடி அலன் ஏமாற்றவில்லை. பின் நவீனத்துவத்தை பயில்வதன் ஆர்வமுள்ள மாணவனாகிய என்னை எப்போதும் இருத்தலியம் அதேயளவிற்கு ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது. இருத்தலியத்தை பல பின் அமைப்பியலாளர்/ பின் நவீனத்துவர்கள் நிராகரித்தபோதும் இரண்டுமிடையில் ஏதோ ஒருவகையான ஊடாடல் இருப்பதை அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்வது எனக்குப் பிடித்தமானது. அதேபோன்று பின் நவீனத்துவம் புத்தரிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டிருக்கின்றது என்றே என் வாசிப்புக்களின் அடிப்படையில் நம்புகின்றேன், அவை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றதா/ விவாதிக்கப்பட்டிருக்கின்றதா என்பதும் என் இன்றைய தேடலாக இருக்கின்றது.

இப்படத்திலும் காண்ட், ஹெடெக்கர், சார்த்தர், சிமோ தீ பூவாவிலிருந்து தஸ்தயேவ்ஸ்கி(குறிப்பாய் 'குற்றமும் தண்டனையும் ') வரை நிறையப் பேர் சாதாரண உரையாடலில் வந்துகொண்டிருக்கின்றனர். தத்துவம் என்பது பெரும்பாலும் verbal masturbation போன்றது, அதற்கும் யதார்த்தத்திற்கும் ஒருபோதும் தொடர்பில்லையென தத்துவம் கற்பிக்கும் பேராசிரியர் சொல்லிக்கொண்டிருப்பார். நமது இருத்தல் குறித்தும், நமக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் குறித்தும், நாம் எதனை அறங்களாகக் கொள்ளமுடியுமென தொடர்ச்சியாக கேள்விகளை எழும்பிக்கொண்டிருக்கும் ஒரு சுவாரசியமான திரைப்படம்.

0 comments: