கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' மற்றும் மலைமகளின் 'புதிய கதைகள்'

Tuesday, October 13, 2015

கிளிநொச்சியிலிருந்த 'அறிவமுது' புத்தகசாலையில்தான் தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவலையும், மலைமகளின் 'புதிய கதைகள்' தொகுப்பையும் வாங்கி வாசித்திருக்கிறேன். 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராய் யுத்தகளத்திற்குப் போவதையும் அங்கு மாள்வதையும் மிகுந்த துயரத்துடன் ஒரு தாயின் பார்வையிலிருந்து விபரிக்கிறதென்றால், மலைமகளின் 'புதிய கதைகள்' போராட்டக் களத்தில் நிற்கும் பெண்ணின் பார்வையிலிருந்து தன் அனுபவங்களைப் பேசுவதாய் இருக்கின்றது.

முக்கியமாய் நம் ஈழப்போராட்டத்தில் பெரும் வகிபாகத்தைப் பகிர்ந்த பெண்களின் பங்களிப்புக்கள் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்ட சூழலில் இத்தகைய பதிவுகள் எத்தகை முக்கியத்துவம் என்பதை உணர்ந்தாக வேண்டும். மலைமகளின் புதிய கதைகளில் மட்டுமின்றி, மலைமகள் தொகுப்பாளர்களில் ஒருவராய் இருந்த 'வேருமாகி விழுதுமாகி' யில் கூட களத்தில் நிற்கும் பெண்களின் வெளிக்களம் சார்ந்து மட்டுமின்றி, உடல் சார்ந்த அவதிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மழைக்காலத்தில் பங்கருக்குள் இடுப்பளவோ/கழுத்தளவோ வெள்ளத்தோடு, பெண்களுக்கு வரும் மாதாந்திர உதிரப்பெருக்கோடு போரிடும் பெண்ணின் நிலையை அவ்வளவு எளிதாய் எவரால் கடந்துபோய்விட முடியும். போரென்பதை வெளியில் மட்டுமின்றி தம் உடலோடும் செய்யவேண்டிய பெண்களின் அனுபவப்பகிர்தல்களும் இந்நூற்களில் தொடர்ந்து வந்தபடியேயிருக்கும். 'வேருமாகி விழுதுமாகி' ஜெயசுக்குறு சண்டையில் பெண்கள் தனித்தியங்கிய களங்களையும் அங்கே அவர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் மிக விபரமாகப் பதிவு செய்கிறது.

யாழில் நிகழ்ந்த பெரும் இடம்பெயர்வுக்கு முன், சுன்னாகம் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாலிருந்த புத்தகசாலையில்தான் முதன்முதலாக மலரவனின் 'போருலா'வும் புதுவையின் 'நினைவழியா நாட்களும்' வாங்கியது நினைவிருக்கிறது. மலரவனின் 'போருலா' ஒரு கெரில்லா யுத்தம் எப்படி இருக்கும் என்பதைவிட அதற்கான தயார்ப்படுத்தல்கள் எப்படியிருக்குமென்பதை பதிவு செய்த முக்கிய நூல். அவ்வாறே 'வேருமாகி விழுதுமாகி' வாசித்தபோது நாம் கற்பனையில் நினைக்கும் போர்க்களங்கள் அல்ல அவையென்கின்ற யதார்த்தத்தை நம் முகத்தில் ஓங்கி அறையச் செய்திருந்தது.

எப்போதும் ஒருபக்கத்தைப் பார்க்கத் தெரிந்த அல்லது அதை மட்டும் பேசத்துடிக்கும் நாம், கஸ்தூரி,பாரதி, வானதி போன்றவர்களைப் பற்றிப் பேசுவது மிகவும் அரிது. அதிலும் எப்போதும் சொல்வதைப் போல, கஸ்தூரி இன்றிருந்தால் மிகப்பெரும் ஆளுமையாக இருந்திருப்பார் என்பதை அவரது இருபதுகளில் எழுதிய கவிதைகளும்/கதைகளும் சேர்ந்த தொகுப்பான 'கஸ்தூரியின் ஆக்கங்களை' வாசித்தவர்கள் அறிந்துகொள்ள முடியும் (அவர் இறந்தபின்னரே இத்தொகுப்பு வந்ததென நினைக்கிறேன்). ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் என்றெல்லாம் நாம் உரையாடத்தேவையில்லை, ஆகக்குறைந்தது அடையாளங்களை மீறி அவரவர்க்கான இடங்களை நாம் அவரவர்க்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொள்கிறேன்.

வரும் ஆண்டில், தமிழ்க்கவியின் -இறுதி யுத்தக்களத்தை பின்னணியாகக் கொண்ட - புதினமான 'ஊழிக்காலமும்' (தமிழினி பதிப்பகம்), மலைமகளின் புதியகதைகள் (வடலி பதிப்பகம்) மீள்பதிப்பும் வெளிவருகின்றன (மலைமகளும் இப்போது இல்லை). ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது என்பது எவ்வளவு கடினமானது. மேலும் அதை ஒரு பெண்ணாக இருந்து எதிர்கொள்வது இன்னும் எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவதற்கேனும் இவ்விரு நூற்களையும் ஏற்கனவே வாசித்தவனென்ற வகையில் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஆகக்குறைந்தது யுத்தத்திற்குள் வாழாது அது குறித்து ஆவேசமாய்ப் பேசுபவர்களை ஒருகணமாவது நிதானமாய் நின்று யோசிக்க இவை ஏதோ ஒருவகையில் உதவக்கூடும்.

(2013)

1 comments:

தனிமரம் said...

இன்னும் நீங்கள் பகிர்ந்த நூல்கள் வாசிக்கவில்லை.பகிர்வுக்கு நன்றி.

10/13/2015 02:25:00 PM