கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

Tuesday, January 10, 2017

1.
இந்தத் தொகுப்பின் முன்னட்டையில் கூறப்பட்டதுபோல சுதா குப்தா துப்பறிகின்ற கதைகளே இந்நூலினுள் இருக்கின்றன. மூன்று வெவ்வேறு வழக்குகளை தமிழ் பேசுகின்ற சுதா எடுத்துக்கொள்கின்றார். அதன் முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்க்கின்றார் என்பது பற்றியும் இந்த விடயங்களோடு நிகழும் வேறு விடயங்கள் பற்றியும் சுவாரசியமாக அம்பை எழுதிப் போகின்றார்.
முதல் கதையான 'மைமல் பொழுதில்' சிக்கலைத் தீர்த்து முடிக்கும்போது, பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சிலவேளைகளில் நேரத்தில் கிடைக்காத நீதி பின்னர் காலம் பிந்தி கிடைக்கும்போது அது பலனற்றுப்போய்விடுகின்றதோ, அப்படி கடந்தகாலத்தில் நடந்த சம்பவம் ஒன்று மூடிமறைக்கப்படுவதால், அது மீளவும் நிகந்து, நிகழ்காலத்தில் பலரைப் பலிகொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது. சுதா தன் துப்பறியும் செய்யும் வேலை செய்பவர் என்றாலும், பொலிசும் தன் உதவியை அவ்வப்போது நாடுகின்றது. சுதாவின் பாத்திரத்தினூடு அம்பை காவல்துறையில் நடக்கும் நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு விமர்சனம் செய்கின்றார்.
ஒரு வியாபாரியின் பிள்ளைகள் கடத்தப்பட்டு போலிஸ் தேடத்தொடங்குகின்றது....
'பரவாயில்லை கோவிந்த். வேகமாகத்தான் செயல்பட்டிருக்கீங்க." (சுதா)
"நாங்கள் அவ்வளவு மோசமில்லை தீதி." (இன்ஸ்பெக்டர் கோவிந்த்)
"யாராவது பெண் பலாத்காரம் செய்யப்பட்டா மட்டும் அவள் நடத்தை சரியில்லைன்னு சொல்லி பலாத்காரம் செய்தவனை விருந்து வைச்சு அனுப்பிடுவீங்க" (சுதா)
(ப 25-26)
இன்னோரிடத்தில்,பிள்ளைகள் காணாமற்போனதன் பிற்பாடு, அவர்களின் தாயார் தனியே இருந்தால் ஏதாவது அசம்பாவிதமாய்ச் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சுதா, கோவிந்திடம் அவருக்குத் துணையாக பொலிஸொருவரை அனுப்பக் கேட்கின்றார். கோவிந்த அப்படியொருவரை ஏற்கனவே அனுப்பியாயிற்று எனச் சொல்லும்போது,
"இந்த பொலீசுக்கு இல்லாத நல்ல குணமெல்லாம் உங்க மனைவிகிட்ட இருந்துதான் வந்திருக்கு கோவிந்த்." (ப 39)
என பொலீஸ் மீதான விமர்சனங்கள் ஆங்காங்கே தெளித்தபடி அம்பை எழுதிச் செல்கின்றார்.

2.
'காகிதக் கப்பல் செய்பவன்' கதையில், ஒரு திருமணம் செய்யப்போகும் ஆணின் நடத்தை எப்படியென துப்பறியப்போகும்போது பல சுவாரசியமான விடயங்கள் நடக்கின்றன. அந்த ஆண் ஒரு தமிழனாகவும், எழுதுவதில் பித்துப்பிடித்தலைகின்றவனாகவும் இருக்கின்றான். அதேசமயம் சுதாவிடம் வரும் இன்னொரு வழக்கோடு இந்த ஆணின் தாயார் சம்பந்தப்பட்டிருப்பதால் கதை இன்னும் சுவாரசியமாகின்றது. எந்தப் பெண்ணுக்கு மணம் செய்ய சிங்காரவேலு என்ற ஆணைத் துப்பறிய சுதாவும் அவரின் உதவியாளருமான ஸ்டெல்லாவும் போகின்றரோ, அதே சிங்காரவேலு பிறகு ஸ்டெல்லாவிற்குப் பிடித்த ஒரு துணையாகிப் போவது கதையின் இன்னொரு முக்கிய திருப்பமாகின்றது.
அதுபோலவே சிங்காரவேலுவின் அம்மாவிற்கு நிகழ்கின்ற இன்னொரு உறவைக் கூட, மிக எளிமையாகக் காட்டிவிட்டு அம்பை கடந்துசெல்லும் விடயத்தை, ஆண் எழுத்தாளர்களால் தேவைக்கதிகமாக எழுதாது இப்படி விபரிக்கமுடியுமா என்பதை யோசித்தும் பார்க்கவேண்டும். எவரும் எவரையும் குற்றஞ்சாட்டாது, அந்த நேரத்தில் அவ்வாறு நிகழ்ந்ததென, மிக இயல்பாய் எடுத்துக்கொண்டு போயிருந்தால் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வன்மத்தையும், கோபத்தையும் காவிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை அழகாக இந்தக்கதையில் அம்பை கொண்டுவந்திருப்பார்.

மூன்றாவது கதையான 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' வீட்டை விட்டு வெளியேறிய 60களில் இருக்கும் பெண்ணின் ஒரு சிக்கலான விடயத்தைப் பற்றிப் பேசுகின்றது. தன் சகோதரியோடு கிராமத்தில் அழகான வாழ்க்கை வாழ்ந்த இந்தப்பெண் திருமணம் செய்து நகரத்திற்கு வருகின்றார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் செய்துவிடுகின்றனர். சட்டென்று ஒருநாள் இவை எல்லாவற்றையும் விடுத்து தனது சொந்தக் கிராமத்திற்கு செல்ல அந்தப் பெண்மணிக்கு ஆசை பெருகுகின்றது. ஆனால் கணவரும் பிள்ளைகளும் இது நடக்காத கனவு என்று சொல்வதோடு, ஒருகட்டத்தில் அவருக்கு மனோநிலை பிறழ்ந்துவிட்டதெனவும் கூறத்தொடங்குகின்றனர். சுதாவின் உதவியுடன் இந்தப்பெண்மணி தனக்கு விரும்பியதை சாதிக்கின்றாரா இல்லையா என்பதே இந்தக் கதை.
இறுதியில் எவரையும் குற்றஞ்சாட்டாது
அந்தப் பெண்மணி எழுதுகின்ற கடிதம் அருமையானது. அதில் ஓரிடத்தில் ' இந்த அன்னம் பறக்க ஆரம்பித்தாகிவிட்டது. உடன் இருப்பது எல்லையில்லாத விசும்பு மட்டுமே' என்கின்ற வார்த்தைகள் நம் எல்லோருக்கும் பொருந்துகின்றதும் அல்லவா? நாம் நமக்குப் பிடித்தவர்களை/பிடித்த இடங்களை எங்கள் வாழ்க்கையின் இன்னொரு மாற்றத்திற்காய் இழக்கவேண்டியிருக்கின்றது. நமக்கு விரும்பியதைச் செய்வதற்காய் சிலவேளைகளில் நமக்கு நெருக்கமானவர்களை எல்லாம் விட்டு விலகவும் தேவையாயிருக்கிறது. ஆனால் அதன் அர்த்தம் அவர்களை வெறுத்தோ/கோபித்தோ வெளியேறுகின்றோம் என்பதல்ல.
இந்தப் பெண்மணி கூறுவதுபோல அன்னம் பறக்க ஆரம்பிக்கும்போது அதற்கான உலகமும் விரிந்துபோய்விடுகின்றது. விசும்பைத் துணையாகக் கொண்டு பறக்கவேண்டியதுதான். பறத்தலில் பல தடுமாற்றங்கள்/தடங்கல்கள் வரலாம். ஆனால் பறத்தல் என்பது என்பது நம் எல்லோரினதும் மிகப்பெரும் விருப்பல்லவா?

3.
இந்தத் தொகுதியில் அம்பை, மராத்தியைச் சில உரையாடல்களில் பாவிக்கும்போதோ அல்லது இந்திப்பாடல்களை(?) பயன்படுத்தும்போதோ, அர்த்தம் விளங்காது அவ்வப்போது சற்றுத்திகைத்து நிற்கவேண்டியிருக்கின்றது. அதைப் பாவிப்பது தவறென்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அவையின்னும் விளங்கியிருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றியது. அம்பையின் இந்தத் தொகுதியில் என்றில்லை, அம்பையின் மற்றச் சிறுகதைத் தொகுப்புக்களிலும் இப்படிப் பல இடங்களில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இவை அம்பையின் தனித்துவம் எனக்கூடச் சொல்லலாம் போலும்.
அம்பையின் இந்தத் தொகுப்பு என்றில்லை ஏனைய தொகுப்புக்களிலும் பிடித்த மிக முக்கிய ஒருவிடயம் என்னவென்றால், தமிழ் பேசாத நிலப்பரப்புக்களில் இருந்துகொண்டு அம்பையின் கதைசொல்லிகள் கதையைத் தமிழ்ச்சாயலில் சொல்வதுதான். என்னைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுடைய நிலையும் அம்பையின் கதைசொல்லிகளைப் போன்ற ஒருவகை நிலைதான். தமிழால் சிந்தித்தபடி, தமிழ் சூழ்ந்த நிலப்பரப்புக்களை கற்பனை செய்தபடி, இவற்றுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பிறர் சொல்லும் கதைகளைப் போலவல்லாது தமிழ்மனதோடு இயைந்தும் அவ்வப்போது விலகியும் செல்லும் அம்பையின் கதைகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின்றன.
சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்களை தொடர்ந்து அம்பை எழுதவேண்டும். ஆர்ப்பாட்டமாய் இல்லாது, ' கெட்டிலைப் போட்டு லவங்கப்பட்டை தேநீர்ப்பைகளை கோப்யையில் நிரப்பி அதன் நறுமணம் மேலெழும்பி வருவதை' நம்மையும் உணரவைத்து, துப்பறியும் கதைகளைச் சொல்லும்போது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

0 comments: